Apr 30, 2006

தேர்தல் - ஒரு மெகா பொழுதுபோக்கு? (30 apr 06)


யாருக்கு ஓட்டுப் போட?
 
தமிழக அரசியல் ஒரு எல்லா-நேரக்-கீழ்-ஐ அடைந்திருக்கிறது (All time Low சாமி!)
 
நல்லவர்களிடையே எவரைத் தேர்ந்தெடுக்க என்று குழம்பிய நாம்,
 
நல்ல கட்சியில் உள்ள கெட்டவனுக்கு வாக்கா, கெட்ட கட்சியில் உள்ள நல்லவனுக்கு வாக்கா என்று மாறி,
 
எவன் குறைவாகத் திருடுவான் என்று தேடி வாக்களித்து,
 
எவனால் நம் இருத்தலுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் என்று பார்த்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளோம்.
 
பிக்பாக்கெட்டா, முகமூடித்திருடனா.. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி போன்ற பழமொழிகளைக் கேட்டாலே எரிச்சல் வரும் அளவுக்கு தேர்தல் சமயங்களில் உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது.
 
மடிபுகுந்த கறந்தபாலும் காலத்தின் கட்டாயங்களும் கொள்கை விளக்கங்களாயின.
 
இப்படிப்பட்ட இழிநிலைக்கு காரணமாய் ஒரு நபரைச் சொல்ல முடியாது - அது நம் அனைவரின் கூட்டு முயற்சி. தமிழ்மக்களின் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் வேறு பல இந்திய மாநிலங்களில் நான் கண்டதில்லை - அதை நம் மக்களின் பொது அறிவுக்கு ஒரு அடையாளமாகவே நினைத்திருந்தேன். ஆனால், இப்போது தோன்றுகிறது - அது நம் மக்களின் பொழுதுபோக்கும் ஆர்வத்தை மட்டுமே காட்டுகிறது என.
 
வட இந்தியாவில் சில பொதுக்கூட்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன் - பல பொதுக்கூட்டங்களை தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கொள்கைகளை விளக்கவும், எதிர்க்கட்சியைச் சாடவுமே பொதுக்கூட்டங்கள் பயன்படுத்தப்படுவதை ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், தமிழகத்தின் பொதுக்கூட்டங்கள், பேச்சாளரின் தமிழறிவைப் பறைசாற்றி, மக்களுக்கு பொழுதுபோக்களிப்பதையே முக்கிய நோக்கமாய்க் கொண்டிருக்க, அலங்கார வார்த்தைகளின்றி, நேரடியாக விஷயத்தை மட்டுமே பேசிய பொதுக்கூட்டங்கள் வியப்பை அளித்தன.
 
நம் பொழுதுபோக்கு ஆர்வம், பரிமாண வளர்ச்சி பெற்று, திரையில் தோன்றிய நடிகர்களை நேரில் பார்த்தே பரவசம் பெறும் நிலையை எட்டியது - இன்றும் தொடர்கிறது. சிம்ரனுக்கும் செந்திலுக்கும் குமரிமுத்துக்கும் கூட்டம் கூடுவது கொள்கை விளக்கம் அறியவா? அலங்கார மொழியை ஆதரித்தவர்கள் அடுத்ததாய் வெறும் அலங்காரத்தை மட்டுமே ஆதரித்தது புதிய வெட்கக்கேடல்ல, பழையதின் தொடர்ச்சியே!
 
அடுத்த வளர்ச்சி, தொலைக்காட்சி. சக்தி வாய்ந்த ஊடகம் என்பது ஒரு தேர்தலில் நிரூபிக்கப்பட்டதால், பார்வையாளர்களைப்பெற சகல விதமான சட்டத்துக்குட்பட்ட, உட்படாத வேலைகளிலும் இறங்கி, அளவுக்கதிகமாய்ப்போனதால், இந்த மாயை மிக விரைவிலேயே மங்கி விட்டது என்றாலும், இதிலும் பொழுதுபோக்கு அம்சம்தான் முக்கியமானதாய் இருந்தது, இருக்கிறது. கலர் டிவி கொடுப்பேன் என்பதும் சல்லிசாய் கேபிள் இணைப்பு கொடுப்பேன் என்பதும் இன்றைய முக்கியமான வாக்குறுதிகளாக, எரியும் பிரச்சினைகளாக இருப்பது தமிழ் மக்களின் அதீத பொழுதுபோக்கு ஆர்வத்தை முன்கொண்டே.
 
இவ்வளவு ஏன், இவ்வளவு நீட்டி முழக்கும் பினாத்தல், தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து குட்டிக்கதை என்ன, கருத்துக்கணிப்பென்ன, திரைப்பட ரீமிக்ஸ் என்ன, கொள்கை டிராக்கர் என்ன, ப ம க - வ வா ச சண்டை என்ன - என்று பொழுதுபோக்குக்குத்தானே தூபம் போட்டது?
 
பொழுதுபோக்கை ஒரு பெரிய தவறாக நான் கருதவில்லை. ஆனால், தேர்தல் என்பதும் ஆட்சி மாற்றம் என்பதும் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே கருதப்பட்டுவிடும் அபாயத்தைத் தவிர்க்க வேண்டும்.
 
எனவே, இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்கு அளிக்கலாம் என்ற என் குழப்பத்தை, உரத்த சிந்தனையாக மாற்றி, கலப்பை கொண்டு உழுது, நாளை படைக்கிறேன்.

Apr 29, 2006

தேன்கூட்டில் ரோசாவசந்த்தும் சில பின்னூட்டங்களும். (29 Apr 06)

இந்தப்பதிவின் தலைப்பு உங்களைத் திசை திருப்புவதற்காக அல்ல.

இது நிறைய நாட்களாகவே நான் எழுத எண்ணியிருந்த விஷயம், இன்றைய தேன்கூட்டில் ரோசாவசந்தைப்பற்றி எழுதப்பட்டிருந்ததைப் படித்ததும் அதிகமாகத் தூண்டப்பட்டேன்.

ஒரு வலைப்பதிவரை எந்தப்பெயர் கொண்டு அழைப்பது? இது ஒரு முக்கியமான விஷயமா என சிலருக்குத் தோன்றலாம். நான் என்னையே முன்னிறுத்தி இதை அலசுகிறேன்.

என் முழுப்பெயர் சுரேஷ் பாபு என்று இருந்தாலும், பாபு என்று அழைப்பது என் குடும்பத்தினர் மட்டுமே. அவ்வாறு அழைப்பது என் குடும்பத்தினருக்கு மட்டுமே ஆன உரிமை என்று நான் நினைப்பதால், வேறு யாரும் என்னை அவ்வாறு அழைத்தால் நான் துணுக்குறுவேன் (அப்படின்னா என்ன சார்?), அதிக உரிமை எடுக்கப் பார்க்கிறார்கள் என்று நினைப்பேன்.

பினாத்தல் என்பது விளையாட்டாக ஆரம்பித்து, இப்போது சற்றுப் பிரபலம் அடைந்துவிட்ட நிலையில், வலையில் அறிமுகமான நண்பர்களோ, புதியவர்களோ கூட, பினாத்தல் என்று அழைத்தால் வித்தியாசமாக உணர்வதில்லை - அதே நேரத்தில் என்னை அலுவலகத்திலோ வீட்டிலோ யாராவது "பினாத்தல்" என்றால் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்.

என்ன சொல்ல வருகிறேன் என்பதை மிகவும் குழப்பவில்லை என்றே நினைக்கிறேன். யாரையும் அவர்கள் அறிவித்த, வெளிப்படையாக்கிய பெயரில் அழைப்பதே நியாயம். நமக்கு அவர் பற்றி அதிகம் தகவல்கள் தெரிந்திருக்கலாம், சிறு வயது பட்டப்பெயர்கள் தெரிந்திருக்கலாம், அவர் கணவன் / மனைவி அழைக்கும் செல்லப்பெயர்களும் தெரிந்திருக்கலாம் - ஆனால் பொதுவில் விவரிக்கும்போது அவர் பொதுவாக வைத்துள்ள, வெளிப்படுத்தியுள்ள பெயர் மூலமே அழைக்கவேண்டும் என்பது என் கருத்து.

ரோஸா வசந்த்தை தலைப்பில் இழுத்ததற்குக் காரணம் - தேன்கூட்டில் இன்று அவர் பெயரை அறிவித்து இருப்பது. அவர் பெயர் இதுதான் என்று அவருடைய ப்ரொபைலிலோ, எந்தப்பதிவிலுமோ அறிவித்திராத (அறிவிக்கவில்லை என்பது நான் பார்த்த வரையில்) நிலையில், இங்கேதான் அவர் பெயரை நான் பார்க்கிறேன். எனக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை எனினும், இந்தப்பெயர் ரோசாவின் பதிவுகளைப் படிக்கும் சில புதியவர்களின் மனதில் சில முன்முடிவுகளை ஏற்படுத்தக்கூடும், அது அவர் பதிவின் தாக்கத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யும் என்று நான் நினைக்கிறேன். தேன்கூடு அவர் அனுமதியுடன் இப்படி வெளிப்படுத்தியிருந்தால், இந்தப்பதிவுக்காக மன்னிப்புக் கோருகிறேன், உடனடியாக நீக்கியும் விடுவேன்.

தேன்கூடு இந்தப்பதிவைப்பார்த்து உடனடியாக நீக்கியும் விட்டார்கள் - அவர்களின் புரிதலுக்கு என் நன்றி.

ரோசா வசந்த்தின் அனைத்துப்பதிவுகளையும் படித்தவன் என்ற முறையில், அவர் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்த விதம். அவர் உபயோகிக்கும் சில அதீதமான சொற்றொடர்கள் கூட கருத்தை வன்மையாக வெளிபடுத்துவதற்காகவே பயன்படுத்துகிறார் என்பதால் அவற்றீன் நேரடிப்பொருளை இழந்து அதன் குறியீட்டுப்பொருளை மட்டுமே காட்டும். (ஆண்குறியை அறுக்கச் சொன்னது உள்பட); ஆனால் அவர் பெயர் வெளியாவது (அவர் அனுமதியுடனோ, இல்லாமலோ) நிச்சயமாக் சில முன்முடிவுகளை சிலருக்கு எடுக்கத் தோன்றவைக்கும் எனவே நினைக்கிறேன்.

இன்னொரு உதாரணமாக, முகமூடி என்பவர் யார் என்பதிலோ, அவர் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவரா என்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால், ஆர்வமுடையவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள், தாங்கள் கற்பனை செய்துள்ள பிம்பத்தை அவர் மேல் ஏற்றத்துடிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். டோண்டு அவர்கள் முகமூடியைப்பார்த்திருக்கலாம், ஆனால், இப்படி ஒரு டெஸ்கிரிப்ஷன் கொடுப்பதற்கு முகமூடியிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பது என் கருத்து. அவர் அப்படிச் செய்திருந்தால் அதற்கும் மன்னிப்புக் கோருவேன், பதிவை நீக்குவேன். (டோண்டுவும் இதற்கு விளக்கம் அளித்துவிட்டார்)

சினிமா நடிகன் திரைக்குப் பின்னால் என்ன செய்கிறான், எந்த நடிகையுடன் ஓடுகிறான் என்பதை அறியத் துடிக்கும் கிசுகிசு மனோபாவம் உள்ளவர்கள் இங்கே நிறையப்பேர். இப்படி இருக்கையில், நாம் அறிந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர் நேரடியாக வெளியிடும் வரையில் மற்றவர் வெளிப்படுத்தக்கூடாது என்பது என் எண்ணம்.

உங்கள் கருத்து? கருத்துக்களை இங்கேயே இடுகிறேன், சில எடிட்டிங் தேவைப்பட்டதால். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

#அதற்காகத்தான் பெயரிலி பின்னூட்டங்களையும் ஏற்றுக் க... அதற்காகத்தான் பெயரிலி பின்னூட்டங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் :-)
மா சிவகுமார்

இதற்கும் பெயரிலிப்பின்னூட்டங்களுக்கும் என்ன சம்மந்தம் சிவகுமார்? நான் பெயரிலிப் பின்னூடங்களை ஏற்றுக்கொள்கிறேனே?

#தன் பெயரை ரோசா வசந்த் பொது தளங்களில் பயன்படுத்தி இருக்கிறார்.அவர் தனது அடையாளத்தை மறைத்ததில்லை.
(செல்வன்)

நன்றி செல்வன், உங்கள் பின்னூட்டத்தில் இருந்து பெயரை மட்டும் நீக்கி இருக்கிறேன்.

#இப்பொழுது மாற்றப்பட்டுவிட்டது போல இருக்கு. ஆர்.வெங... இப்பொழுது மாற்றப்பட்டுவிட்டது போல இருக்கு. ஆர்.வெங்கடேஷ், சிஃபி. காம்மில் இருப்பதாய்முதலில் வந்து பின் மாற்றப்பட்டது. நாலைந்து நாட்களுக்கு முன்பு, என் பதிவு அறிமுகம் இருந்தது. ஆனால் பெயர் உஷா ராமசந்திரன் என்று இருந்தது. மெயில் அடிக்கலாம் என்றிருந்தேன், நேரமில்லாமல்விட்டுப் போனது.

(ramachandranusha)

நன்றி உஷா. ராமச்சந்திரன் உஷாதான் சரியா? எனக்கும் தெரியவில்லை:-(

#ரொம்ம்ப பினாத்துறீங்க போங்க...
துணுக்கு உறுதல் : அப்படின்னு பே...அப்படின்னு பாக்குறது...ஒரு மாதிரி நொந்த லுக்கு குடுக்கறது..

(ரவி)

ஆஹா ரவி, உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து துணுக்குற்றேன்.

#அவசியமே இல்லாத விசயம். ரோசா வசந்த் என எழுதுகிறார் என்றால் அப்படித்தான் போடணும். முதன்முதலாய் இன்னாரது ஜாதி இன்னது என்று ஒருவர் எழுதிப் படித்தபோது கூட அரியண்டமாய்/அருவருப்பாயே இருந்தது. நிச்சயமாய் அது எந்த நோக்கத்தில் எழுதப்பட்டாலும் கிசுகிசு மனோபாவம்தான்.

(ஒரு பொடிச்சி)

அதேதான் நானும் சொல்றேன் பொடிச்சி.

#babu...(chumma naachukkum!!!)
suresh.....nalla padhivu...
enakkum kooda sila per ner la eppadi iruppanga...,ivanga namalluku close frienda irundha evlo nalla irukkum.....evlo comedy pannaraare.nijamaave sense of humor oda life a deal pannuvaangalaa....eppadi pala maadhiri thonum.....(is it wrong to feel this way??.i dont know>>>>)

நாம் அறிந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர் நேரடியாக வெளியிடும் வரையில் மற்றவர் வெளிப்படுத்தக்கூடாது என்பது என் எண்ணம்
neenga sollardhu sari dhaan...
Radha
(Radha Sriram)

நன்றி ராதா!

#_____எங்கே போட்டுருக... பினாத்தலாரே,
(துளசி கோபால்)

துளசி அக்கா - இப்போ எங்கேயுமே போடலே:-))

#தேன்கூட்டில் சரி செய்துவிட்டார்கள். இப்போது உங்கள் பதிவு மூலம்தான் அவர் பெயர் தெரிகிறது :)

மற்றபடி அறியப்பட்ட பெயரிலேயே அறிமுகம் தருவது நாகரீகம். மற்ற விவரங்களால் பதிவுகள் புரிதலில் தாக்கம் இருக்கக் கூடாது; இருந்தால் அது படிப்பவர்களின் வளர்ச்சியின்மையை காட்டுகிறது.
மணியன்

மணியன், இப்போது நானும் எடுத்துவிட்டேன்.

#______ & __________பர்ப்பனர்கள் என்பது உபரித்தகவல். (Anonymous)

நன்றி அனானிமஸ், இந்தத் தகவல் தெரிந்ததால், நான் யு பி எஸ் சி பாஸ் செய்வது நிச்சயமாகிவிட்டது!

#தேன்கூட்டில் அந்தப் பெயரை நீக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால், இந்தப் பரிந்துரை வாசகர்கள் செய்வது. அவர்களுக்கு தெரிந்த வலைப்பதிவரை பற்றிச் சொல்லும்போது அவரது பெயரையும் சொல்லி இருக்கலாம். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் ரோஸாவசந்தும் தனது பெயரை மறைத்து எழுதியது இல்லை. அவர் ராயர் காப்பி கிளப் குழுமத்தில் எழுதும் மடல்களில் அவரது பெயர் இருப்பதை கண்டிருக்கிறேன்.

முன்முடிபுகளை எடுப்பவர்கள் ஒரிஜினல் பெயரை வெளியில் சொல்லாவிட்டாலும் அவரது ஜாதகத்தைத் தேடிக் கண்டுபிடித்தாவது எடுப்பார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது :-).
(KVR)

நன்றி கே வி ஆர், நானும் சரி செய்து விட்டேன். முன் முடிவுகளை எடுப்பதற்கு நாம் உதவி செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

#"டோண்டு அவர்கள் முகமூடியைப்பார்த்திருக்கலாம், ஆனால், இப்படி ஒரு டெஸ்கிரிப்ஷன் கொடுப்பதற்கு முகமூடியிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பது என் கருத்து. அவர் அப்படிச் செய்திருந்தால் அதற்கும் மன்னிப்புக் கோருவேன், பதிவை நீக்குவேன்."

சந்திப்பிலேயே நான் அது பற்றி பதிவைப் போடப் போவதாகக் கூறிவிட்டேன். முகமூடி அவர்கள் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை. அவர் உண்மை பெயரை கூறவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பி.கே.எஸ்.தான் முகமூடி என்று போலி டோண்டு என்ற இழிபிறவி கூறியிருந்தது. அப்படியெல்லாம் இல்லை என்று அவனுக்குக் கூறவே நான் எழுதிய வரிகளைச் சேர்த்தேன். வேறு ஒன்றும் இல்லை.

நீங்கள் எழுதியதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆகவே மன்னிப்பு எல்லாம் கேட்கத் தேவையில்லை, பதிவையும் நீக்கத் தேவையில்லை.

உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றி நான் எழுதியுள்ள இந்தப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_26.html
அன்புடன்,டோண்டு ராகவன்
(dondu(#4800161)) 12:01 PM

புரிதலுக்கு நன்றி டோண்டு

#சுரேஷ், உங்கள் அக்கறைக்கு நன்றி. உங்கள் பதிவின் மூலமாகவே தேன்கூட்டில் என்னை பற்றி இன்று எழுதியிருந்ததை படித்தேன்.

நான் படிக்கும்போது என் பெயர் நீக்கப் பட்டுவிட்டது.எனது இயற்பெயரை நான் பொதுவில் சொல்ல விரும்பியதில்லை என்பது உண்மைதான். ஆனால் அது வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் பிம்பம் பற்றியதால் அல்ல. என் அடையாளம் பொதுவில் தெரிந்தால், என் கருத்துக்களால் எனக்கு ஏற்பட வாய்புள்ள சில பிரச்சனைகளால்தான்.

ஆனல் அது குறித்து பெரிய ஜாக்கிரதை உணர்வை நான் மேற்கொண்டதில்லை. திண்ணை ஒரு முறை (என் மின்னஞ்சலில் இருந்து) பதிப்பித்தது. அதிலிருந்து நானே பதிப்பிக்க வேண்டாம் என்று நானே சொல்ல வேண்டி வந்தது. பிறக் ராயர் காப்பி கிளப்பில் நான் அனுப்பிய மடலில் என் பெயர் இருந்தது. அதனால் இது யாருக்கும் தெரியாத தகவல் அல்ல. மேலும் மிக எளிதாக இணையத்தேடலில் என்னை பற்றிய முழுவிவரங்களை (ஜாதி பற்றி அல்ல) அடைய முடியும். அவ்வாறு அடைந்து அதை வேறு வேறு இடங்களில் அனானிகள் எழுதியும் உள்ளனர். அதனால் தேன்கூடு என் பெயரை எழுதியதில் எந்த பாதகமும் இல்லை. ஆனால் முனைந்தால் தெரியக் கூடியது வேறு, அதை ஒரு தகவலாய் தேன் கூடு சொல்வது வேறு என்ற அடிப்படையில், என் பெயரை வெளியிட்டது எனக்கு ஒப்புதல் இல்லை. (இது குறித்தும் என்னை கேட்கவில்லை.)

அந்த பத்தியையும் உங்கள் பதிவினை பார்த்த பிறகே படிக்க நேர்ந்தது.

உங்கள் பதிவிற்கும் தேன்கூட்டின் பத்திக்கும் மிகவும் நன்றி.

ரோஸாவசந்த்

Apr 27, 2006

கொள்கை Tracker 2.0 - Updated Options

இந்த நிரலின் முக்கியமான அம்சமே உடனுக்குடன் மாற்றக்கூடிய தன்மை என்பதை நிரூபிப்பதற்காக:

நேற்றிலிருந்து பெரிய முக்கியத்துவம் பெற்றுவரும் இரு விஷய்ங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

1. "மிருக ஜாதிக்குள் கலவரம் வந்தால் நான் என்ன செய்வது" என்ற கலைஞர் கருத்து(?) தொடர்பான கொள்கை முழக்கங்கள்.

2. "டாடாவை மிரட்டிய தயாநிதி" தொடர்பான கொள்கை முழக்கங்கள்.

கோபி அவர்கள் இட்டிருந்த பின்னூட்டத்த்தில் மிகச்சரியாக நிரலில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி உள்ளார், அந்தப்பிழையும் நிவர்த்திக்கப்பட்டுவிட்டது.

கொள்கை Tracker 1.0வைப்பற்றி அறியவும், அதில் உள்ள தெரிவுகளை முயற்சிக்கவும் இங்கே சுட்டுங்கள்.



Apr 26, 2006

கொள்கை tracker 1.0

வேகமாக ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் காலம் இது.

கொள்கை விளக்கங்கள் கடைமட்டத் தொண்டன் வரை விரைவாகப் போய்ச் செர வேண்டிய கட்டாயத்தில் தலைமை இருக்கிறது. ஏற்கனவே தகவல் பரிமாற்றம் சரியாக இல்லாததால், வைகோ தன் பேச்சின் நடுவில் துண்டுச்சீட்டைப் பார்த்து நிலைப்பாட்டை மாற்றுகிறார், டிவி வரிப்பணத்திலா இல்லையா என்று கம்யூனிஸ்ட்டுகளும் திமுகவினரும் குழம்பி இருக்கிறார்கள் (பின் வேறெங்கிருந்து வரும் என்று கூடவா தோழர்களுக்குத் தெரியவில்லை?), மத்திய அரசின் பலத்தை சோனியா சொன்ன பிறகு காங்கிரஸார் உணர்ந்து கொள்கின்றனர், தெருவின் நடுவில் ஜெயலலிதாவின் தாயுள்ளம் விழித்துக் கொள்கிறது.. இப்படிப்பட்ட திடீர் மாற்றங்கள் கடைமட்டத் தொண்டன் வரை போய்ச் செர வேண்டாமா?

கிரிக்கெட் ஸ்கோர் கூட உடனடியாகத் தெரிந்துகொள்ள xml, rss feed போன்ற பல தொழில்நுட்ப உதவிகள் இருக்கும்போது, அரசியல் மட்டும் என்ன பாவம் செய்தது?

எனவே, பினாத்தலார் இந்த சீரிய முயற்சியில் இறங்கினார்.

கொள்கை tracker1.0 வின் தன்மைகள்:

இந்த மென்பொருள் வலையில் உள்ளதால் ஆன்லைனில் கட்சியினர் அனைவரும் தொடர்புகொள்ள முடியும்.

கட்சி உறுப்பினர் தகுதிக்குத் தகுந்தவாறு, பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்யமுடியும் (இந்த பீடா வெர்ஷனில் செயல்படுத்தப்படவில்லை.

தலைமையகம், தொடர்ச்சியாக புதுப்புதுக் கொள்கைகளை சுலபமாக வலையேற்றுவதன் மூலம், கடைநிலைத்தொண்டனுக்கும் உடனடியாக அறிவிக்க முடியும்.

பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் முறை:

படி 1: எந்த விவகாரம் தொடர்பான கொள்கை தேவை என்பதைத் தெரிவு செய்து, செல்-ஐ அழுத்த வேண்டும். தற்போது உள்ள தெரிவுகள்:

1. இலவச அரிசி
2. கலர் டிவி
3. வெள்ள நிவாரணம்
4. மத்திய அமைச்சர்கள் செயல்பாடு
5. மக்கள் நலம் மேம்பாட்டுக்கான திட்டங்கள்

படி 2: எப்படிப்பட்ட பேச்சுவகை வேண்டும் என்பதைத் தெரிவு செய்து, செல்-ஐ அழுத்த வேண்டும் - தற்போது உள்ள தெரிவுகள்:

1. தலைவர்
2. உப தலைவர் - இரண்டாம் கட்டத் தலைவர்கள் அல்லது கூட்டணித்தலைவர்கள்
3. மேடைப்பேச்சாளன் - ஜனரஞ்சகமான பேச்சாளர்கள்

படி 3: கட்சி / அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது உள்ள தெரிவுகள்:

1. தி மு க அணி
2. அ தி மு க அணி

அவ்வளவுதான் - உங்களுக்குத் தேவையான கொள்கை முழக்கம் உங்கள் கணித் திரையில்! 1 - 2 -3 போலச் சுலபமான முறை!

தற்போது உள்ள தெரிவுகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ கூட முடியும்!

பார்த்து, கருத்து சொல்லுங்கள் - வினியோகஸ்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

TSCu Paranar எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்.

Apr 25, 2006

வருகிறது - அரசியலுக்கு ஒரு சிறப்பு மென்பொருள் (25 apr 06)


Technology has developed soooooooo much - இருந்தாலும், தொழில் நுட்பம் சில இருண்ட பக்கங்களை இன்னும் எட்டிப்பார்க்காமலே இருக்கிறது.
 
அரசியல் அப்படிப்பட்ட பாவப்பட்ட துறைகளில் ஒன்றாக இருப்பது பினாத்தலாரின் நீண்ட நாள் குறை.
 
குட்டிக்கதைகளுக்கான தகவல் சுரங்கம் உருவாக்கிக் கொடுத்தார், ஆனாலும் அவர் மனம் முழு நிறைவை அடையவில்லை.
 
தேர்தல் விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களுக்குள் வருகிறது. அரசியல் காட்சி மாற்றங்கள் அவசர அவசரமாக அரங்கேறுகின்றன.
 
இரண்டு ரூபாய் அரிசி சாத்தியமில்லை என்று சொன்ன அதே மேடையில் 10 கிலோ இலவசம் சாத்தியம் என்று சொல்லவேண்டிய அளவுக்கு கொள்கை மாற்றங்கள் துரிதம் அடைந்துகொண்டிருக்கின்றன.
 
எல்லாருக்கும் கலர் டிவியா, இல்லாதவர்க்கு மட்டுமா, கேபிள் இலவசமா என்றெல்லாம் நொடிக்கு நொடி மாறும் கொள்கைகளை அறிய ஒரு சாதாரணப்பேச்சாளன் மறுநாள் வரும் செய்தித்தாளை மட்டுமே நம்பி உள்ள அவலம் கண்கூடு.
 
இதற்கு ஒரு நிரந்தரத்தீர்வு காணும் தொலைநோக்குடன் பினாத்தலார் ஒரு மென்பொருளை வடிவமைத்து வருகிறார்.  பிரச்சினையைத் தேர்ந்தெடுத்தால், கழகத்தின் கொள்கையும், பேச வேண்டிய விதத்தையும் மென்பொருள் கூறிவிடும், ஆன்லைனில், கொள்கை முழக்கத்தை டவுன்லோடு செய்து, மக்களின் மனத்தில் கழகத்தின் பார்வையை அப்லோடும் செய்ய ஒரு அரிய மென்பொருள்.
 
இன்று இரவோ, நாளை காலையோ இதன் பீட்டா வெர்ஷன் வெளியாகும் என்று பினாத்தலார் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Apr 21, 2006

பினாத்தல் கவலை - காரணம் நீங்கள்! (28 Apr 06)

தோழர்களே..

கொள்கை ட்ரேக்கர் மென்பொருள் தோல்வியா அடைந்துவிட்டது?

எனக்குப் புரியவில்லை. இது மிகவும் நன்றாக வந்துள்ளது என்றுதான் நான் நினைத்தேன், நினைக்கிறேன்.

அதிகமான பார்வையாளர்களைப்பெற்ற போதும், நட்சத்திரக்குத்தும் இல்லை, பின்னூட்டங்களும் இல்லை.

உடனே பின்னூட்டத்துக்கு அலைகிறான் பினாத்தல் என்று நினைக்காதீர்கள் - எனக்கு விமர்சனம், Feedback தேவை - நல்லதாகவோ, கெட்டதாகவோ.

நல்லதோ, கெட்டதோ, வலைப்பதிவுக்காக மட்டுமே ஏறத்தாழ 10 மணிநேரங்கள் செலவு செய்து தயாரித்த பதிவு, ஏன் அங்கீகாரம் பெறவில்லை என்று தெரியாமல் கூட போவது மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருப்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

இது வெர்ஷன்1:




இது வெர்ஷன்2:




உடனடியாக பதில் போடவும்! பினாத்தல் நிச்சயமாகக் கவலையில் இருக்கிறான்.

அலை பாயுதே! (21 Apr06)

இன்றைய திரைப்படம் - அலை பாயுதே

நடிகர்கள் - ஜெயலலிதா, சோ!

அந்நியன் அநியாயத்துக்கு நேரம் எடுக்கிறது - ப்ளாஷ் வேலை அதிகம் என்பதால் அல்ல, அலுவல் அதிகம் என்பதால்.. அடுத்த வாரம் நிச்சயம்!

Apr 19, 2006

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராமநாதா?

கலங்கிவிட்டார் கைப்புள்ள.
 
கச்சேரி மூலமே   அது தெரிய வந்தாலும், கச்சேரி ஊடக வன்முறைக்குப் பெயர் போனது என்றாலும்,  சொல்லப்பட்டிருக்கும் விஷயம் நம்பத் தகுந்ததாகத்தான் இருக்கிறது.
 
இருந்தாலும், என் உடன்பிறப்பே, கொள்ளையில் பங்கு கேட்காமல் கொள்கையில் பங்கு கேட்கும் கோமானே,
 
உன் அலுவலகத்தில் சில கடிதங்கள் என்னைக் குத்திக் கிழித்துப்போட்டன என்றால் அது மிகை ஆகாது.
 
பொன்ஸ் என்னும் சிறுமி, ப ம க என்ன வ வா சவைவிடப்பெரியதா என்று கேட்டிருக்கிறார் ஒரு கேள்வி.
 
இமயமலை ஸ்பீட் பிரேக்கரைவிடப்பெரியதா?
 
வாளி தண்ணீர் அதிகமா, கடல் தண்ணீர் அதிகமா?
 
ஒத்தை வெடி பெரியதா, வாணவேடிக்கை பெரியதா?
 
குறட்டைச் சத்தம் பெரியதா, அணுகுண்டுச் சத்தம் பெரியதா?
 
என்றெல்லாம் கேட்டிருக்கலாம். 
 
இதற்கு இன்னும் நீ தக்க பதில் தரவில்லையே என் கண்மணியே!
 
இன்னும் பலர் இதுதான் நேரம் என்று நம் கட்சியைத் துண்டாட வலைவிரித்திருக்கிறார்கள்.. எந்தக்கட்சியை? அண்ணல் ஆபிரஹாம் லிங்கனும், ஹோசிமின்னும், கரிபால்டியும், ஜிக்மே சிங்யே வாங் சுக்கும் கட்டிக்காத்த நம் உயிரான கட்சியை..
 
இவர்களுக்கும் இன்னும் நீ தக்க பதில் தரவில்லை.
 
ஜொள்ளுப்பாண்டி என்னும் எதிர்க்கட்சி ஒலிபெருக்கி நம் வரலாற்றைத் திரிக்கும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை நீ அறியாயோ?
 
புறப்படு தோழா, நம் குதிரைக்குளம்பொலி கேட்டு, எதிரிகள் சூரியனைக்கண்ட பனி போல் விலகட்டும்.
 
நம் சாதனைகளை நாட்டுக்கு எடுத்துக்கூறு!
 
பத்துகிலோ இலவசம், கலர்டிவி இலவசம் என்றெல்லாம் மற்ற கட்சிகள் இலவசத்தை தேர்தல் நேரத்தில் மட்டுமே யோசிக்க, நாம் மட்டும்தான் இலவசத்தை கட்சியின் முழுநேரப்பணிகளில் ஈடுபடுத்தும் ஒரே கட்சி என்றி முரசெடுத்து ஒலி!
 
ஆரம்பித்த வாக்கியத்தை முடிக்காமலே மூணுபக்கம் சொல்லக்கூடிய நாவன்மை படைத்த ராகவனார் போன்றோர்,
 
"இன்றைக்கு திங்கக்கிழமை" என்று மட்டுமே பதிவிட்டும், நூற்றுக்கு மேல் பின்னூட்டம் பெறும் திறம் கொண்ட இலவசனார்,
 
கட்சிக்காக படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டும் தொடர்ந்து பதிவிடும் வீரப்பினாத்தலார்,
 
நம் கொள்கைக்காக கட்சியைத் துவங்கி பின் மறந்த முகமூடியார்..
 
சமீபத்தில் இந்தியாவில் வாக்குச் சேகரித்துத் திரும்பியிருக்கும் பின்னூட்ட நாயகி,
 
பதிவே மருந்து, மருந்தே பதிவென்று மருத்துவம் பயிலும் நீ!
 
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

ப ம க விவகாரம், பினாத்தலார் அறிக்கை (19 Apr 06)

என் ரத்தத்தின் ஹீமோக்ளொபினான என் அன்புப்பங்காளிகளே,
 
இற்றைத் தினம், நமது ப ம கவின் உள்கட்சிக்குள் குழப்பம் நடப்பதாக ஏடுகள் விஷம் கக்கி இருக்கின்றன. நமது 500 ஆண்டு கொள்கைப்பணியில் நாம் பொருத போர்கள் எத்தனை, நம் மீது வீசப்பட்ட அவதூறுகள்தான் எத்தனை? அத்தனையையும் மீறி நெருப்பாற்றில் நீந்திவந்த தங்கங்கள், சங்கம் வளர்த்த சிங்கங்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தி இருக்கின்றனவா?
 
ஜனநாயகம் என்பதை வார்த்தையாக இல்லாமல் வாழ்க்கையாக ஆக்கிக்காட்டியவர் எங்கள் தங்கத் தலைவர் சின்ன மாஸ்க்கார். (பெரிய மாஸ்க்கார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், சின்ன மாஸ்க்காரே கட்சிப்பணிகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்.) வெளிப்படையாகக் கருத்து கூறி பழக்கம் இல்லாத எதிர்கட்சித் தலைவர்கள் இதைக் கோஷ்டிப்பூசல் என்கின்றனர்.  சிறுத்தைப்புலிக்கும் சின்னப்பூனைக்கும் தன்னால்தான் வேறுபாடு காண இயலாது, சொன்னாலுமா இயலாது?
 
சிறுசிறு தள்ளுமுள்ளுகள் எல்லா சமுதாய அமைப்புகளிலும் சாத்தியமே, அவற்றை பேசியே தீர்த்துக்கொள்வது எங்கள் பாணி. பேசாமல் தீர்த்துக் கொல்வதையே பாணியாகக் கொண்டோரின் சிறுமதியில் இவை ஏறினால்தான் வியப்பு, ஏறாவிட்டால் என்ன வியப்பு?
 
கழகத்தின் போர்வாள், ரஷ்யச் சிறப்பு பொதுச்செயலாளர், என் ஆருயிர்த் தம்பி இரேசுநாதர் என் மேல் ஒரு களங்கத்தைச் சுமத்தினார் என்று கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறது ஊடகம். இதில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம் கட்சியின் கொள்கைகளோடு முழு ஒப்புமையும்,  "என்று ஒருவன் காலை பதினொரு மணிக்கு அலுவலகத்தில் வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறானோ அன்றே நாம் விரும்பும் கரிகால்சோழ ராஜ்யம் நடக்கிறது என்று பொருள்" என்ற நமது கழகத்தின் லட்சியத்தில் நாட்டமும் கொண்ட ஒரு கட்சி என்பதால், ஒரு இயல்பான மக்கள் கூட்டணி ஏற்படலாம் என்று முதல்கட்டப்பேச்சு வார்த்தைகளை பொதுச்செயலாளர் அனுமதிபெற்று உங்கள் அபிமானம் பெற்ற பினாத்தலார் நடாத்தி வந்தார்.
 
அவ்வமயம், வ வா சவின் தலைவர் மாண்புமிகு கைப்பு அவர்கள், வலையக வன்முறையின் உச்சத்தை, பார்த்திபன், கட்டதுரை மற்றும் சரளாக்கா வாயிலாக சந்தித்து உடல் நலம் சரியில்லாமல் போனதோடு, அலுவலக வேலை செய்ய வேண்டிய அவலநிலைக்கும் ஆளானார். எனவே அவர் தனது கட்சிப்பொறுப்பை விட்டால் போதும் என்று சென்னையில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கும் சிலர்வசம் ஒப்படைத்தார். அவர் பாவம் அறியவில்லை - இந்த கச்சேரி நடத்துபவர்கள் நீண்ட நெடிய ப ம க வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்று. நமக்கு கைப்புவிடம் எந்தக் குறையும் இல்லை. தவறான கட்சியில் சரியான நபர் என்பதே அவர் பற்றிய நமது கருத்தாகும்.
 
புதிதாகப் பொறுப்பில் அமர்ந்த வேகத்தில், பல அறிக்கைகளையும், திரிக்கப்பட்ட பல செய்திகளையும் தாங்கி ஊடக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார் கச்சேரியார். அதில் ஒரு கனவிலும் நினையாத செய்தி - ப ம க வ வா ச கூட்டணி என்பது! பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே அப்படி ஒரு தகவல் வெளியிட்டவரை, கூட்டணிக்கொள்கை நெறிப்படி, கண்டிக்காமல் விட்டதே பினாத்தலாரின் பிழை என்பது, ரஷ்ய மட்டும் நியூ ஜெர்சி வட்டார ப ம க வின் குற்றச்சாட்டு.
 
பினாத்தலார் தன் தவறை ஒப்புக்கொண்டதோடு, கச்சேரியார் செய்த பிழைக்காக அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பத்தைக் குறைத்து, தற்போது ஒரே ஒரு தொகுதி மட்டுமே வ வா சவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அதிலும், "ஸ்விங் இன் த ரெயின்" புகழ் ஸ்டீவ் மட்டுமே நிற்க அனுமதிக்கப்படுவார். இதில் வருத்தம் இருந்தால், கூட்டணிக்கான கதவுகள் (வெளிப்பக்கம்) திறந்தே இருக்கிறது என்றும் அறிவிக்கிறார்.
 
படம்:
 
பி /\ ரா /\ மு/\ இ

மேற்கண்ட படத்தில், கைகளை இணைத்து புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பவர்கள்:
 
இடமிருந்து வலம்: புரட்சிப்பினாத்தலார், ரஷ்ய மருத்துவர் மால்விரும்பி, (ராமநாதன் என்பது பூர்வாசிரமப்பெயர்), இணையில்லா (இப்போது இணையத்தில் இல்லா) தலைவர் முகமூடி, நியூ ஜெர்சி வட்டார கொ ப செ இலவச அண்ணல்.
 

Apr 18, 2006

கஜினி - தோல்வி அடைந்தது ஏன்?

சொதப்பல் - சொதப்பல் எல்லாம் சொதப்பல்.
 
ஒரு வசனத்துக்கான ஐடியா கிடைத்ததும் தயாரிப்பு வேலைகளில் இறங்கினால் இப்படித்தான் ஆகும்! பொறுமையோடு, முழு திரக்கதையுடன் பணியில் இறங்கினால் வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. இத்தனைக்கும், கஜினி (என் கஜினி) யின் வசனங்களும் கஜினியின் உடம்பில் குத்திய பச்சைகளும் எனக்கே மிகவும் பிடித்திருந்த நகைச்சுவை.
 
கஜினியின் தீம் இசையை பின்னணியாகச் சேர்க்கலாம் என்று நினைத்து கூகிளில் தேடினால் கிடைத்தது எல்லாம் சரியில்லை. ரியல் பிளேயர் கேக்குது, 2 மணிநேரம் ஆகும் ஆகும் என்கிறது, கூல்கூஸ் தளம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று ஆயிரம் பிரச்சினை.
 
ஒரு தலையை செப்பனிட்டு எரேஸ் செய்வதற்குக்கூட 25 நிமிடம் ஆனது -- கணினி அடிக்கடி ஹேங் ஆவதால்!
 
எல்லாவற்றையும் விடப் பெரிய பிரச்சினை - உள்ளே இட்ட பிறகும் என் டயல்-அப்பில் இரண்டாவது காட்சி வராமல் போக, என்ன பிரச்சினையோ என்று செய்த திருத்தங்களில் Frame Rate குறைவாக இருந்துவிட,  காட்சிக்கும் நான் நினைத்த வசனங்களுக்கும் சம்மந்தம் இல்லாமல் போய்விட்டது.
 
இருப்பதில் கொஞ்சம் பார்க்கும்படியாக இருந்தது முதல் வெர்ஷன்தான்.
 
எனவே இதையே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இரண்டுக்கும் கருத்து கூறிய அனானிமஸ், குமரேசன், இன்னும் பதிப்பிக்கப்படாத கருத்துகளைக் கூறிய எஸ் கே, துளசி அக்காவுக்கும் நன்றி.
 
ரிப்பேர் செய்ய நேரமும் பொறுமையும் இல்லை. மன்னிக்கவும்.


Apr 17, 2006

வைகோ கலக்கும் கஜினி! (17 apr 06) - 2

என் அன்பு மக்களே,

காத்திருந்ததற்கு நன்றி.

அன்னியன், பிரமாண்டத் தயாரிப்பு என்பதால் நேரம் எடுக்கிறது (எனக்கும் எப்போவாவது ஆபீஸ் வேலை செய்யலாமுன்னும் மூடு வரும்:-)

எனவே, இன்று பாருங்கள்:

வைகோ கலக்கும் கஜினி!

முன்கூட்டிய மன்னிப்புக்கோரல்:

1.குரல் தெளிவின்மைக்காக - மைக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது.. சரிசெய்யவேண்டும்..

2. ஹாரிஸ் ஜெயராஜ் பிசியாக இருப்பதால், பின்னணி இசை தர முடியவில்லை. மனசுக்குள்ளேயே போட்டுக்கொள்ளுங்கள்.





பின்கூட்டிய மன்னிப்புக்கோறல்: முன்பு ஒருமுறை தவறாக வலையேற்றிவிட்டேன் போலிருக்கிறது! க கைநாட்டாக இருப்பதால் எவ்வளவுதான் தொந்தரவு?

வைகோ கலக்கும் கஜினி! (17 apr 06)

என் அன்பு மக்களே,

காத்திருந்ததற்கு நன்றி.

அன்னியன், பிரமாண்டத் தயாரிப்பு என்பதால் நேரம் எடுக்கிறது (எனக்கும் எப்போவாவது ஆபீஸ் வேலை செய்யலாமுன்னும் மூடு வரும்:-)

எனவே, இன்று பாருங்கள்:

வைகோ கலக்கும் கஜினி!

முன்கூட்டிய மன்னிப்புக்கோரல்:

1.குரல் தெளிவின்மைக்காக - மைக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது.. சரிசெய்யவேண்டும்..

2. ஹாரிஸ் ஜெயராஜ் பிசியாக இருப்பதால், பின்னணி இசை தர முடியவில்லை. மனசுக்குள்ளேயே போட்டுக்கொள்ளுங்கள்.



Apr 16, 2006

Bhasha India தேர்தலில் பினாத்தல்கள்

படம் எடுக்கத் துவங்கியாகிவிட்டபின் அடுத்த கட்டம் என்ன?
 
அரசியல்தானே? நேரடியாக பொதுத் தேர்தலில் பங்கு கொள்ளும் முன் ஒரு முன்னோட்டமாக (விஜயகாந்தின் நடிகர் சங்கத் தேர்தல் மாதிரி) பினாத்தல்  Bhasha India வின் தேர்தலில் - தமிழ் வலைப்பதிவுகள் - பொழுதுபோக்கு (Entertainment) என்ற பிரிவில் போட்டியிடுகிறார்.
 
என் ரசிகக்கண்மணிகளுக்கு மேற்படி சமாச்சாரம் தெரிந்தாலே போதும், அமோக வெற்றியை அள்ளிக்கொடுத்திடுவார் என்ற போதிலும், தேர்தல் என்றாலே ஒரு தேர்தல் அறிக்கை இருக்கவேண்டும் என்ற மரபின் காரணமாக, இந்தப்பதிவு வெளியிடப்படுகிறது.
 
தேர்தல் அறிக்கை
 
தமிழ் கூறும் நல்லுலகத்தில் வலைப்பூக்களின் பேராதரவோடு உங்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் நான், என்னுடைய மூத்த ரசிகர்களின் (நானே என்று அறிக) நிர்ப்பந்தத்தால் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறேன். உங்கள் அமோக ஆதரவை எனக்கு அளிப்பதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகளை பட்டியல் இடுவதில் உள்ளபடியே பேருவகை கொள்கிறேன்.
 
ஜாதி, மதச் சண்டைப்பதிவுகள், தனி நபர் அவதூறுப்பதிவுகள், ஏழுபக்கப்பதிவில் புரியும்படி இரண்டே வார்த்தைகள் கொண்ட பின் நவீனத்துவ இருத்தலியல் பதிவுகள், ஒன்றின் கீழொன்றாய் வார்த்தைகள் ஜாலம் செய்யும் கவிதைப்பதிவுகள் ஆகியவற்றுக்கிடையே, உங்களின் மனமகிழ்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டு, படிப்பவர் சிரிக்க வேண்டும், ஏன் சிரித்தோம் என்று சிந்தித்துவிடவே கூடாது என்ற உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பினாத்தல்கள், உங்கள் மத்தியிலே ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக தமிழ்ச்சேவை(?) புரிந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் நாம் கடந்துவந்தபாதையில் வைரஸ்கள்தான் எத்தனை, பார்க்கப்படாத பதிவுகள்தான் எத்தனை? பின்னூட்டங்களே இல்லாவிட்டாலும் உங்களுக்காக கீபோர்டு தேயும் வரை உழைக்க முடிவெடுத்தவன்தான் இந்தப்பினாத்தல். பிளாக்கர் வேலை செய்யாவிட்டால் மெயிலால் பதிவிடுவேன், மெயிலும் தொலைந்தால் செல்பேசியால் பதிவிடுவேன் என்று உங்களை விடாமல் உருகும் (உருக்கும்) உங்கள் அன்புத் தம்பி, இன்று ஓட்டுக்கேட்க வந்திருக்கிறேன்.
என் சாதனைகளைப் பட்டியலிட்டு மாளாது (அப்படி சொல்றதுதாங்க மரபு) என்பதால், அதை விடுத்து, நாம் செய்ய இருப்பதை மட்டுமே பட்டியலிடுகிறேன்.
 
1.வீட்டுக்கொரு ப்ராட்பேண்டு தொடர்பு:
 
நாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், பசியால் வாடும் அனைவருக்கும் உடனடியாக இண்டர்நெட் தொடர்பு வழங்கப்ப்டும். இதன் மூலம், பொழுதுபோக்கு பெற்று, அனைவரும் பசியை மறந்து வாழ்ந்து, பசியில்லாச் சமுதாயம் அமைய வழி செய்வோம்.
 
உப வாக்குறுதி:
 
இண்டர்நெட் வழங்கும் நாங்கள் கணினி வழங்காமலா போய்விடுவோம், தேவைப்பட்டால் அதையும் செய்வோம்.
 
ஏற்கனவே பிராட்பேண்டு உள்ள வீடுகளில், இரண்டாவது பிராட்பேண்டு வழங்குவோம்.
 
இந்த வாக்குறுதிக்கும், பிராட்பேண்டு வழங்கும் உரிமையை அண்மையில் பெற்ற என் சித்தப்பா பையனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை உறுதிபடக்கூறுகிறோம்.
 
2. அனைவருக்கும் ரீசைக்கிள் பின்:
 
சைக்கிள் கொடுத்ததை சாதனையாகப் பறைசாற்றுபவர்கள், ரீசைக்கிள் பின் கொடுக்காமல் நாட்டைக் குப்பையாகவே வைத்திருக்கிறார்கள். எனவே நாம் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையொப்பமே அனைவருக்கும் ரீசைக்கிள் பின் வழங்குவோம்.
 
3. காதுகுளிர MP3:
 
இணையத்தில் கிடைக்கும் பல குறைதரப் பாடல்களால் போதை ஏறிக்கிடக்கும் மக்களுக்கு, காதுகுளிர உயர்தர MP3 பாடல்களை அரசு சார்பில் இலவசமாக வழங்குவோம். இதனால், பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கமுடிவதோடு, பல லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள், சுத்தமான போதையோடு பொழுதுபோக்க முடியும்,
 
4. நேரடியாக திரைப்படம்:
 
ஃப்ளாஷ் தொழில்நுட்பத்தில் இயங்கும் திரைப்படங்களை உங்கள் கணினிக்கே நேராகக்கொண்டுவந்து டவுன்லோடு செய்வோம். எந்த வலைத்தளத்திலும் உறுப்பினராய்ச்சேராமல், டவுன்லோடு செய்ய வரிசையில் நிற்காமல் னேரடியாக உங்கள் கணினிக்கே வந்துசேர ஆவன செய்வோம்.
 
5. இலவச மென்பொருள் திட்டம்:
 
நாட்டில் பெரிய அளவில் பைரஸி எனப்படும் மென்பொருள் திருட்ட நடந்தவண்ணம் உள்ளது. அதைத் தடுக்க, பைரஸி சட்டபூர்வமாக்கப்படும். இதன்மூலம் மென்பொருள் அனைவருக்கும் இலவசமாகவும், துரிதமாகவும் கிடைக்க வழிசெய்வோம்.
 
எனவே, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம்:
 
இந்தத் தளத்துக்குச் சென்று உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யுங்கள்.
 
தொடர்ந்து வரும் வாக்குச்சீட்டில், தமிழ் - பொழுதுபோக்கு என்பதைத் தேர்வுசெய்து, பினாத்தல்களுக்கு ஆதரவு அளியுங்கள்.
 
கள்ள ஓட்டுகள், நல்ல ஓட்டுகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.


Apr 15, 2006

பொட்டி வந்தாச்சு! (15Apr06)

பொட்டி வந்தாச்சு! இப்போ பாருங்க!

தேர்தல் வந்ததால் யாருக்கு பயனோ யாருக்கு நஷ்டமோ தெரியவில்லை, பினாத்தலின் பாடு யோகமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

நமது தலைவர்களின் பேச்சுக்களும் அறிக்கைகளும் "மாத்த வேணாம், அப்படியே சிரிச்சுக்கலாம்" வகை நகைச்சுவைதான் என்றாலும், நக்கல் நையாண்டிக்கு தேர்தல்காலக் காட்சிகள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, தூக்கத்தைத் துரத்துகின்றன.

அடுத்த கட்டமாக, பினாத்தலார் முழுநீளத் திரைப்படங்கள் தயாரிப்பதில் இறங்கப்போகிறார்! முதல் கட்டமாக, கதையின் ஒன் லைன் (அப்படின்னா என்னாங்கோ?), சில வசனங்கள், முக்கியமாக, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போகும் மூத்த தலைவர்களையும் தேர்ந்தெடுத்து விட்டார்.

தயாரிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் - வெற்றிக்கு நானும், என் சக வலைப்பதிவாளர்களும் உத்திரவாதம். (தோழர்களே, உங்களை நம்பிக் கொடுத்த வாக்கு - தவற விட்டுவிடாதீர்கள்)

நான்கைந்து படங்களுக்கான யோசனை தயாராக இருந்தாலும், கோப்பின் அளவு அதிகமாகப் போவதால், ஒவ்வோர் படமும் ஒவ்வோர் பதிவாக இடப்போகிறேன். இன்று:

DPA Talkies பெருமையுடன் வழங்கும் ஆய்த எழுத்து..

(ஸ்பீக்கர் ஆன் செய்து கொள்ளவேண்டும்.)

பார்த்து ரசியுங்கள்.

அடுத்த ரிலீஸ் - வைகோ, தயாநிதி மாறன் கலக்கும் "அன்னியன்"

பொட்டி வரவில்லை (15 Apr06)

என் இனிய வாசகப்பெருமக்களே,
 
பினாத்தல் தயாரித்த முழு நீளப்படங்கள் சேவை வழங்கும் இயந்திரத்தால் தடை செய்யப்பட்டிருப்பது ஏகாதிபத்தியவாதிகளின் சதி.
 
கலையைத் தடுப்பதன் மூலம் உணர்வைத் தடுத்துவிடமுடியுமா?
 
விட்டில் பூச்சிகள் விளக்கைக்கொல்ல முடியுமா? அல்லது நண்டுதான் நாடாள இயலுமா?
 
சும்மா பில்ட் அப்பு! என்னவோ தப்பான இடத்துலே அப்லோட் பண்ணித் தொலைச்சிட்டேன், இப்போது சரி செய்ய இயலாது,இன்று இரவு எப்படியும் இதை வலைஏற்றிவிடுவேன். தாமதத்துக்கும், ஏமாற்றத்துக்கும் மன்னியுங்கள்.
 
ஆனால் நிச்ச்யம் ஒன்று மட்டும் சொல்வேன், நன்றாகவே வந்திருக்கிறது திரைப்படம்!
 
அதுவரை, எனக்கு இன்று வந்த சிதம்பர ரகசியம் தொடர்பான "மாயா"வின் பின்னூட்டம்:
 
எனக்கும் சிதம்பர ரகசியம் தொடரின் தற்போதைய இழுவை அளவுக்கு மீறி இருப்பதால் வெறுப்பேறுவது உண்மை, மாயா மிக அழகாக அதை கிண்டல் அடித்திருக்கிறார். அது ஒரு பின்னூட்டமாக இருப்பதைவிட பதிவாக இருந்தால் அதிகக் கவனம் பெறும் என்பதால் இங்கெ இடுகிறேன், அவருக்கு ஆட்சேபம் இருந்தால் தூக்கிவிடுகிறேன். 

சுரேஷ்,
நானும் சிதம்பர ரகசியத்தின் ரசிகன் தான்.அதைப் பற்றி ஒரு பின்னுட்டமும் இட்டிருக்கிறேன்.ஆனால் கடந்த மாதமாக அரைத்த மாவையே அரைக்கிறார்கள்.இந்த சீரியலைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு Forum வந்து கொண்டிருக்கிறது.அதற்காக நான் எழுதியதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இனி..

அடுத்த வாரம் வரவிருக்கும்(எப்போதும்) 'சிதம்பர ரகசியத்தின்' உரையாடல்கள்.(காட்சி அமைப்புகள் கூட).

ஆகாஷ் பாட்டி:வாடாப்பா..சித்த இரு..நான் போய் காப்பி எடுதுண்ட்டு வரேன்..நீ எத்தனை தடவை கேட்டாலும் நான் 'அதை'ப் பற்றி சொல்ல மாட்டேன்..(ஏன்னா என்க்கே 'அது' தெரியாது)..

பிச்சைக்காரன் 1: கிரீம் பிஸ்கட்டில் கிரீம் இருக்கும்.நாய் பிஸ்கட்டில் நாய் இருக்காது! யோசி..பிரிட்ஜில லைட் எரியுதுன்னு அங்கே போய் இருந்து படிக்க முடியுமா? யோசி.

குடோனில்(அதாவது போலீஸ் ஸடேசன்).ஒரு 40 வாட்ஸ் பல்பு கீழ்..எடிட்டர் உட்கார்ந்திருக்கிறார்.

ஆரியபாதம்:சொல்லுங்க குமரகுரு ஏன் இப்படி பண்ணீங்க??

இந்த கேள்வியைக் கேட்ட உடன் ஒரு 'அஜீரண' எபக்ட்டில் ,முடி எல்லாம் சிலிர்த்து ஒரு லுக் விடுகிறார் எடிட்டர்.

குமரகுரு: நான் ஏன் அப்படி பண்ணணும் ??

ஆரியபாதம்: So .நீங்க இதை பண்ணலை...

(இந்த நேரத்தில் நம்ம ரேகன் ஒரு 'சங்கு' எபக்ட்டில் ஒரு சவுண்டு விடறார்..அதே நேரத்தில் நம்ம கேமரா ஒரு 360+180+360 ஆங்கிளில் திரும்பி ஒரு வாட்டர் பாட்டில் பக்கம் வந்து நிற்கும்).

அபிராமி(கதாநாயகி!!):ஏன்னா..(ஆகாஷைப் பார்த்து) உங்களுக்கு தோஷம் இருகுன்னு என்னோட தோப்பனாருடைய குருவோட கொள்ளுத்தாவோட சின்ன மாமனார் அடிக்கடி சொல்லுவார்..அது இப்போ உண்மையாடுத்துதே..இருங்கோ போய் விக்ஸ் எடுத்துண்டு வரேன்...(ஜல தோஷத்திற்கு)..

ஆகாஷ்(மனதிற்குள் சந்திரமுகி பிரபு ஸ்டைலில்):என்ன கொடுமையா இது..எங்கயாவது ஒரு America ரிடனுக்கு இப்படி ஒரு ஜோடியா??

தீட்ச்சதர் (தில்லைராஜனைப் பார்த்து) :அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்... பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்.. ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது. டீ கப்ல டீ இருக்கும்.. ஆனா வேர்ல்டு கப்ல வேர்ல்டு இருக்காது. இவ்ளோதான் உலகம்..புரிஞ்சுக்கோங்கோ(என்னா நாகா சார் டயலாக்கை கரெக்டா சொல்லிட்டேனா ? )

அந்த சமயம் தீட்சதரின் சகோதரி...:அண்ணா விஷம் கொடுங்கண்ணா...

தீட்சதர்: இவ பண்ணிண பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன் ஆயிடும்... ஆனா பாய்சன் பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆக முடியாது.

இதைக் கேட்டதும் தில்லை ராஜன் ஏதோ புரிந்தது போல விரல்களை வைத்து 'கணக்கு' போடுகிறார்.

தில்லைராஜன்:நீங்க சொல்லறத்து கரெக்ட்டுதான்..அது..வந்து ..இப்போ எஞ்சினியர் காலேஜ்ல படிச்சிட்டு எஞ்சினியர் ஆகலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடெண்ட் ஆகமுடியுமா?

பத்மராஜன்(அழுது கொண்டே): உன்க்கு நான் இருக்கேன்மா..நீ எதுக்கும் கவலைப்படாதே..இந்த அண்ணன் காலம் முழுக்க வச்சு காப்பாத்துவேன்..

நாகா:கட்.. கட்..டேய்..வேற சீரியலில் பேசற டயலாக்கை இங்க பேசாதே..(மனதிற்குள்) இதான்பா பல சீரியல்கள நடிகறவன் போட்டா வர தொல்லை...

Forum Members(After this serial)
Member 1
பாயசம்,பாய்சன்..ஏதோ மேட்டர் இருக்க்கு..நீங்க நல்லா பார்த்தீங்கனா ஒன்னு புரியும்..தில்லை விரல்களை ஆட்டி ஒரு சைகை பண்ணுவார்..அதுல ஒரு க்ளு இருக்கு...

நாகா(வடிவேலு டைலில்):ஆகா..கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா

Member 2தேள் கொட்டும் அப்படினு தீட்சதர் சொன்னார்..நான் என்ன நினக்கிறேனா..எல்லா கொலையையும் பண்ணினது தேள் தான் அதைத்தான் தீட்சதர் சொல்லாமல் சொல்லறார்.

Member 3கண்டிப்பாக தேள் இருக்க முடியாது ஏன்னா நாயைப் பத்தியும் சொல்லியிருகிறாரே..

நாகா(வடிவேலு ஸ்டைலில்):இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்கிட்டாங்கய்யா...
 
மீண்டும் சுரேஷ்: எனக்கு மிகவும் பிடித்திருந்த கிண்டல்!
 

Apr 14, 2006

பினாத்தல் வழங்கும் திரைப்படங்கள் (14 apr 06)

புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்.

தேர்தல் வந்ததால் யாருக்கு பயனோ யாருக்கு நஷ்டமோ தெரியவில்லை, பினாத்தலின் பாடு யோகமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

நமது தலைவர்களின் பேச்சுக்களும் அறிக்கைகளும் "மாத்த வேணாம், அப்படியே சிரிச்சுக்கலாம்" வகை நகைச்சுவைதான் என்றாலும், நக்கல் நையாண்டிக்கு தேர்தல்காலக் காட்சிகள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, தூக்கத்தைத் துரத்துகின்றன.

அடுத்த கட்டமாக, பினாத்தலார் முழுநீளத் திரைப்படங்கள் தயாரிப்பதில் இறங்கப்போகிறார்! முதல் கட்டமாக, கதையின் ஒன் லைன் (அப்படின்னா என்னாங்கோ?), சில வசனங்கள், முக்கியமாக, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போகும் மூத்த தலைவர்களையும் தேர்ந்தெடுத்து விட்டார்.

தயாரிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் - வெற்றிக்கு நானும், என் சக வலைப்பதிவாளர்களும் உத்திரவாதம். (தோழர்களே, உங்களை நம்பிக் கொடுத்த வாக்கு - தவற விட்டுவிடாதீர்கள்)

நான்கைந்து படங்களுக்கான யோசனை தயாராக இருந்தாலும், கோப்பின் அளவு அதிகமாகப் போவதால், ஒவ்வோர் படமும் ஒவ்வோர் பதிவாக இடப்போகிறேன். இன்று:

DPA Talkies பெருமையுடன் வழங்கும் ஆய்த எழுத்து..

பார்த்து ரசியுங்கள்.


Apr 13, 2006

மேதா பட்கரும் ராஜ்குமார் ரசிகர்களும் (13 Apr 06)

பாபா ஆம்தே, மேதா பட்கர் மற்றும் நர்மதா பச்சாவ் அந்தோலனின் அஹிம்சைப்போராட்டம் 19 நாட்கள் கடந்தும் எந்த முடிவுக்கும் வருவது போலத் தெரியவில்லை. ரோசா வசந்த்தின் பதிவைத் தொடர்ந்து பெடிஷனில் கையெழுத்துபோட்டு, தொடர்ந்த மின்னஞ்சல் ஊக்க, தனிப்பட்ட உண்ணாவிரதத்துக்கு நாளும் குறித்து, இரண்டு தொலைபேசி, பல மின்னஞ்சல்கள் என்று நானும் என் கடமை(?)யை ஆற்றிவிட்டேன் என்று சுயசமாதானப்படுத்தல் மட்டுமே செய்ய முடிகிறது.
 
லட்சக்கணக்கான கிராமவாசிகளின் நேரடி உயிர்ப்பிரச்சினை குறித்தான போராட்டம் கத்தியின்றி, ரத்தமின்றி நடைபெற்று வருகையில் அதற்கான ஊடக கவனம் சில தனிப்பட்ட வலைப்பதிவுகளாலும், மின்னஞ்சல்களாலும் மட்டுமே பெறப்படுவது மனதை வருத்துகிறது. செய்தித்தாள் பக்கங்களில் அதற்கு ஒரு மூலையில் மட்டுமே இடம் கொடுக்க முடிகிறது, தொலைக்காட்சி நேரத்தை "ஒண்டிக்கு ஒண்டி வறயா" சவால்கள் சாப்பிடுகிறது.
 
இதற்கு நேர் எதிராக மற்றொரு சம்பவம் ஊடக கவனத்தை மிக சுலபமாக ஈர்க்க முடிகிறது. ராஜ்குமார் மரணம் என்பது ஒரு வருந்தத்தக்க நிகழ்வுதான், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கும் அவர் ரசிகர்களுக்கும் "ஈடு செய்ய முடியாத" இழப்புதான் என்றாலும் அவருடைய ரசிகர்களால் தூண்டப்பட்ட வன்முறைக்கு யார் பொறுப்பு?
 
78 வயதான ஒருவர் இயற்கையான காரணங்களால் மரணமடைந்தால் அதற்கு தெருவில் செல்லும் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்படவேண்டும்? பெங்களூரில் பிழைக்க வந்த வேற்று மாநிலத்தார் ஏன் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளவேண்டும்? கடைகளை ஏன் அடைக்கவேண்டும்? சாலையோரம் ஏன் பதுங்கவேண்டும்?
 
இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாகவே எல்லாராலும் எண்ணப்படுகிறது, பல முன்னுதாரணங்களும் சுலபமாக எடுத்துவைக்கப்படுகின்றன. கட்சித்தலைவரை சிறையில் அடைத்தால் தான் தீக்குளிப்பு எனிருந்த கலாசாரம், பயணிகள் இருக்கும்/இல்லாத பேருந்துகளுக்குத் தீவைத்தல் என்ற பரிணாம வளர்ச்சி பெறுகிறது. என் தலைவன் இறந்தான் - எனவே எதிர்க்கட்சித் தலைவனின் சிலையை உடைப்பேன் எனஒரு கூட்டம் கூறியது. கிடைத்தது வாய்ப்பு என ஒரு கும்பல் தெருவெல்லாம் கொள்ளை அடிக்கிறது. தலைவி செத்ததற்கு ஒரு இனமே காரணம் என வாக்காளர் பட்டியல் எடுத்து குலக்கழுவல் செய்யப்படுகிறது. தலைவன் மரணத்துக்குக் காரணம் ஒரு மொழி என்று அந்த மொழி பேசுபவர்களை தேடி அடிக்கிறது ஒரு கூட்டம். எந்தக்கட்சியோ, எந்தத் தலைவனுமோ எந்த உச்ச நட்சத்திரமுமோ விதிவிலக்கில்லாமல் இவற்றை ஆதரிப்பது மட்டுமில்லாமல், அதிகக் கலவரங்களே தன் பலத்தை நிரூபிக்கும் என்று ஊக்குவிக்கவும் செய்கின்றன.
 
நான் ராஜ்குமார் நடித்த எந்தப்படத்தையும் பார்த்ததில்லை. அவர் மிகச்சிறந்த நடிகராக இருக்கலாம், திரைஉலகில் பல மைல்கற்களை எட்டியவராக இருக்கலாம். ஆனால் அவர் பலம் திரையில் மட்டும்தான் என்பது வீரப்பன் கடத்தலின் போது தெளிவாகி விட்டதுதானே? அவர் கடத்தப்பட்ட போதும் கலவரங்கள் வெடிக்க இருந்து, உயிருக்குப் பிரச்சினை வரலாம் என்ற எண்ணத்தில் அவர் உறவினர்களால் கலவரம் நிகழாமல் தடுக்கப்பட்டது எனக்கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
எனவே, கலவரம் நிகழாமல் தடுக்கும் சக்தி அவர் உறவினர்களுக்கு இருந்திருக்கிறது! இப்போதும் தடுத்திருக்கலாம், செய்யவில்லை.
 
தன் ஊர்த்தெருவில் கலவரம் நடக்கலாமா வேண்டாமா என்ற முடிவை சில செல்வாக்குள்ள மனிதர்கள் நிர்ணயிக்கிறார்கள், அவர்கள் போட்ட பிச்சையில் சாதாரண மக்கள் தெருவில் நடக்கிறார்கள்!
 
வாழ்க ஜனநாயகம்.

Apr 12, 2006

மீள்பதிவு - Retrieved Flash

பொழுது போகாமல் பழைய பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்ததில் பெரிய அதிர்ச்சி!

என்னுடைய ஃப்ளாஷ் பதிவுகள் பல இப்போது வேலை செய்யவில்லை என்பதைக்கண்டு நொந்தேன். காரணம், நான் பயன்படுத்தும் வழங்கிசேவை கொஞ்ச நாள் கழித்து எல்லாவற்றையும் விழுங்கிவிடுவதால் வந்த வினை!

ஃப்ளாஷ் பதிவுகள் என் செல்லக்குழந்தைகள் போல - அவற்றுக்கு நான் செலவழிக்கும் மூளை நேரமும் (இப்படித்தான் பொய் சொல்வேன், கண்டுக்காதீங்க) அதிகம், கணினி நேரமும் அதிகம். அவை இப்படி காணாமல் போவது பெரிய வருத்தத்தை அளித்தது.

எனவே, பழைய பதிவுகளின் மூல SWF கோப்புக்களை தேடிக்கண்டுபிடித்து மீள்பதிகிறேன்.

இது, என் முதல் ஃப்ளாஷ் பதிவு.


பாட்டுப்பாடவா, மெட்டுப்போடவா..

அருமையான பாட்டு.. என் ஐயப்பாட்டை தீர்த்து வைத்து, அற்புதமான கருத்துக்களையும், எழுதிய கவிஞரின் ஆழ்ந்த மொழி அறிவையும் வெளிப்படுத்திய பாடல்.

ஒவ்வொரு வரியிலும் பல அடுக்குகளாக அர்த்தங்கள் விரிந்து கிடக்கிறது.

ரொம்ப வளர்த்துவானேன் - இதுதான் அந்தப் பாடல் -
கண்ணும் கண்ணும் நோக்கியா -
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்புசினோ காப்பியா -
ஸோஃபியா..

கண்ணில் உள்ள அதே தொழில்நுட்பத்தில் தயாரானதுதான் கேமரா மொபைலில் உள்ள கேமரா என்பதிலிருந்து, மாஃபியாவுக்கும் காப்புசினோவுக்கும் உள்ள தொடர்பையும், வித்தியாசங்களையும் பல காலம் படிமக்கவிதை படித்து இருண்மை நீங்கிய வாசகர்களால் மட்டுமே உணர முடியும்!

இந்தப் பாடலில் எனக்கு ஒரே ஒரு குறைதான் - பாடல் அமைந்த மெட்டு.

மன்னரும், ஞானியும், தென்றலும் புயலும் வளர்த்த தமிழ் திரை இசையில் ஒரு பாட்டுக்கு ஒரே மெட்டுத்தானா உண்டு?

புறப்பட்டேன், சந்தித்தேன் அனைத்து இசைஞர்களையும், மெட்டு வாங்கினேன் இந்த காலத்தால் அழியாக் கவிதைக்கு.

கீழே உள்ள ஃபிளாஷில், எந்த இசை அமைப்பாளர் வேன்டுமோ அவர் மேல் எலிக்குட்டியை அழுத்தி (அட - க்ளிக்குப்பா) இசை வெள்ளத்தில் அமிழ்க!

இதிலும் ஒரு சிறு பிரச்சினை - தம்பி பாலு மற்றும் ஹரியும் அவசர காரியமாக வெளி ஊர் சென்றுவிட்டதால், அவர்கள் குருவாகிய நானே பாடிவிட்டேன்!




Apr 5, 2006

அவசரச் செய்தி

நேற்று மதியம் தொடங்கியது இந்தப்பிரச்சினை.
 
நேற்று இரவில் சற்றுச் சரியாகிவிட்டது போலத் தெரிந்தாலும், முழுதும் குணமாகவில்லை என்றே தோன்றியது.
 
இரவிலும் சற்றுக்கலக்கம் இருந்துகொண்டே இருந்தது.
 
காலையில் எழுந்தால் நிச்சயமாகப் பூரண குணம் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
 
என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா?
 
அதை எப்படி என் வாயால் சொல்வேன்?
 
அதனால்தான் கலப்பையால் அடிக்கிறேன்.
 
ஒண்ணரைப்பக்க துக்ளக்கை பலர் படித்தாலும், பின்னூட்டம் குறைவாகவே இருக்கும்போதே தமிழ்மணத்தில் சுரங்கத்தின் அடியில் போய்விட்டதே என்ற வழக்கமான பிரச்சினைதான்.
 
 
 
 
தவறாமல் ஒரு வார்த்தை பின்னூட்டியும் விடுங்கள். அதுதானே சீக்ரெட் ஆஃப் மை (அவர்) எனர்ஜி?
 

Apr 4, 2006

ஒண்ணரைப்பக்க துக்ளக் - 3

முந்தைய பாகங்களைப்படிக்க இங்கே சொடுக்குங்கள்:
 
முதல் பாகம் - தி மு க ஆட்சி
 
இரண்டாம் பாகம் - அ தி மு க ஆட்சி

எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், துக்ளக்கின் பக்கங்கள் எப்படிக் காட்சிஅளிக்கும்? ஒரு வேளை தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு அமைந்தால் (ஒரு கணக்குத்தான் - கணிப்பெல்லாம் கிடையாது)

அ தி மு க - 86
தி மு க  -  85
பா ம க - 15
காங்கிரஸ் - 8
கம்யூனிஸ்ட் கட்சிகள் - 4
ம தி மு க -14
விடுதலைச் சிறுத்தைகள் - 6
தே தி மு க - 10
இதர கட்சிகள், சுயேச்சைகள் - 6

 

அட்டைப்படம்:

கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கிறது:
ஸ்டாலின் 18
அழகிரி 10
தயாநிதி 10
பாமக 20
காங்கிரஸ் 20
தி மு க பிரபலங்கள்  10
மொத்தம் 88

அன்பழகன் கலைஞரைப்பார்த்துக் கேட்கிறார் -

இது என்ன கணக்கு தலைவரே, நாம ஜெயிச்ச தொகுதிகளா?

சரியாப்போச்சு போங்க, இதெல்லாம் இவங்க கேட்கிற அமைச்சர் பதவி எண்ணிக்கை. எப்படி இது ஜெயிச்சவங்க எண்ணிக்கைய விட அதிகமா இருக்குன்னு நானே குழப்பமா இருக்கேன்.

எச்சரிக்கை 1

திருமாவளவன் நடித்துள்ள அன்புச்சகோதரி படம் தொடர்பாக அவர் பா ம க நிறுவனர் ராமதாஸிடம் பேசியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் எந்த அன்புச்சகோதரியைப்பற்றிப் பேசினாரோ.. அவருக்கே வெளிச்சம்.

எச்சரிக்கை 2

எம் மாரப்பன், இடையன்சாத்து

கே: விஜயகாந்தின் ஆதரவு பெற்றவர்தான் முதல்வராக முடியும் என்ற நிலை நிலவுகிறதே, இது குறித்து?

ப: விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பது நமக்குத் தெரியாது. அவருடைய நிலையில் ஒரு சாதாரண வாக்காளன் இருந்தால் என்ன சிந்திப்பான்? ஒரு குடும்ப ஆட்சிக்காக தான் ஆதரவு அளிக்க முடியுமா, கஷ்டப்பட்டுக் கட்டிய கல்யாண மண்டபத்தை இடித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவர்களுக்கா தன் ஆதரவு என்று சிந்தித்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

மற்ற கேள்வி பதில்கள் பக்கம் 4-ல்


தலையங்கம்
 
ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?

தேர்தல் முடிவின்படி, எந்தக்கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.

எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது மட்டுமின்றி, எந்தக்கூட்டணிக்கும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் அள்ளிக்கொடுத்துவிடவில்லை.

குழப்பமான தேர்தல் முடிவுகளை அடுத்து, ஆளுநர் அதிகாரத்தின் மீது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. அரசியல் சட்டப்படி அவர் முதலில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஜெயலலிதாவைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

இப்படித்தான் செய்ய வேண்டும் என அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால், ஆளுநர் அப்படியா முடிவெடுப்பார்? அவருடைய பதவிக்காலம் மத்திய அரசின் கையில். மத்திய அரசோ, சோனியா கையில்.

இருந்தாலும், காங்கிரஸ் மேலிடச் சொல்படி முடிவெடுத்த முன்னாள் பீஹார்
ஆளுநர் பூட்டாசிங்கின் கதியை அவர் நினைத்துப்பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களை அவர் எதிர்கொண்ட போது, காங்கிரஸ் தலைமையா அவருக்கு உதவியாக இருந்தது? அவரைச் சிக்கலில் மாட்டிவிட்டு தன் தலை பிழைத்தால் போதும் என்று அல்லவா ஓடியது?

இதையும் யோசித்துப் பார்த்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.

பத்திரிக்கைகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து ஆளுநர் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. தி மு க சார்பான தொலைக்காட்சிகள், அ தி மு கவுக்கு எதிரான நிலை எடுத்தால்தான் "ஊழல்வாதம்" என்ற தீட்டை ஒழிக்க முடியும் என்று கருதும் "கட்சிச் சார்பற்ற" பத்திரிக்கைகள் ஆகியவை கொடுக்கும் ஏகோபித்த தீர்ப்பு - தி மு க ஆட்சி மலர வேண்டும் என்பதே!

மக்களின் முடிவை எப்படியெல்லாம் திரிக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். அ தி மு க ஆட்சி போக வேண்டும் என்று உறுதியான கருத்துச் சொன்ன மக்கள், தி மு க ஆட்சி வரவேண்டும் என்பதில் உறுதியாக இல்லையே? அப்படி இருந்திருந்தால், தி மு க கூட்டணிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டுமே?

கட்சி சார்பாகப் பெறப்படும் கையெழுத்துக்கள், எம் எல் ஏக்களின் அணிவகுப்புகள் எல்லாம் சட்டசபையின் நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதை அடுத்தே செல்லுபடியாகும் என்பதால், கொஞ்சம் கால அவகாசம் கொடுத்துப் பார்க்க வேண்டும். சுயேச்சைகள், விஜயகாந்த் கட்சி ஆகியோருக்கு ஒரு தெளிவான முடிவெடுக்க கால அவகாசம் தேவை. ஏன் பாமக போன்ற கட்சிகள் கூட அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவே?

ஆளுநர் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

கேள்வி பதில்

எம் சுப்பாராவ், வேட்டை நாயக்கன் புதூர்

கே: தி மு க கூட்டணிக்கு அதிக வாக்கு சதவீதம் இருந்தும் பெரும்பான்மை பெற முடியவில்லையே?

ப: "முதலில் வந்த குதிரைதான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்" என்ற வெஸ்ட்மின்ஸ்டர் மாடலில் அமைந்தது நமது ஜனநாயகம். அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டு, பிறகு புள்ளிவிவரங்களைக் காட்டிப் புலம்புவதால் எந்தப்பயனும் இல்லை.  கலைஞர் எப்போதுமே "வென்றால் சீட்டுக்கணக்கு, தோற்றால் புள்ளிவிவரம்" என்றுதானே செயல்பட்டு வந்திருக்கிறார்.

வி முருகன், வள்ளிப்புத்தூர்

கே: துக்ளக் கருத்துக்கணிப்பு உள்பட எல்லாக்கருத்துக் கணிப்புகளும் பொய்த்துவிட்டனவே?

ப: இதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏற்கனவே, ஏப்ரல் 31ஆம் தேதியிட்ட துக்ளக்கில் "நினைத்தேன் எழுதுகிறேன்" பகுதியில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்:

"லட்சக்கணக்கான வாக்காளர்கள் இருக்கும் ஒரு தொகுதியில், சில நூறு வாக்காளர்களை மட்டுமே பேட்டி கண்டு அவர்களுடைய அப்போதைய மன்நிலையை மட்டுமே எடுக்கும் கருத்துக்கணிப்புகளில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. இருந்தாலும், துக்ளக்கில் வரும் கணிப்புகள் பெரிதும் உண்மையாகவே இருந்து வருகிறது, இந்த முறை எப்படியோ, பார்ப்போம்"

எனக்கு இந்த சந்தேகம் எப்போதுமே இருந்திருக்கிறது.

_____________________________________________________________________

ஐடியாவுக்கு நன்றி : தருமி

Apr 1, 2006

ஒண்ணரைப்பக்க துக்ளக் -2

இப்போது அ தி மு க அணி பெரும் வெற்றி பெற்றால், துக்ளக்கில் காணக்கூடியவை பற்றிய கற்பனை:
 
அட்டைப்படம்
 
கலைஞர் ஸ்டாலினைப்பார்த்துப் பாடுகிறார்.
 
ஏன் தோற்கடித்தாய் மகனே ஏன் தோற்கடித்தாயோ..
இல்லை ஒரு சீட்டு என ஏங்குவோர் பலரிருக்க
எல்லாசீட்டும் உன் அணிக்கா செல்ல மகனே..
 
நான் முதல்வர் ஆவதற்கு
காலம் கனியும் முன்னே
நீயும் வந்து காத்திருந்தாய் - செல்ல மகனே..(ஏன்.)
 
கஷ்டப்பட்டு கணக்குப்போட்டு
கட்சிகள் பலவற்றையும்
கூட்டணிக்குள் அடக்கி வைத்தான் தந்தையடா..
 
கணக்கிலும் குற்றமில்லை
கஷ்டத்திலும் குறைவுமில்லை
கடைசியில் தோற்றுப்போன கட்சியடா.. (ஏன்)
 
எச்சரிக்கை 1: கலைஞரை அட்டைப்படத்தில் பார்த்ததில் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த தேர்தல் தோல்விக்குப்பிறகு எந்தப்பத்திரிக்கையிலும் அவரை அட்டையில் போடமாடமாட்டார்கள் என்பதால் துக்ளக் அவரை கௌரவப்படுத்துகிறது.
 
எச்சரிக்கை 2: தேர்தலில் நடைபெற்ற விதிமுறை மீறல்கள், ஒழுங்கீனங்கள் பற்றி தி மு க உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர உள்ளது. கமிஷன் சாதகமாக அமையவில்லை என்றால், யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட கதை ஆகிவிடும் என்பதால், தி மு க அமைச்சர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் தகல் காற்றுவாக்கில் கசிகிறது.
 
தலையங்கம்
 
இது பிரமிக்கத் தக்க வெற்றி
 
அ தி மு க அணி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. துக்ளக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்ட முடிவுகளே பெரும்பாலும் சரியாக இருந்தாலும், இவ்வளவு பெரிய வெற்றி வரும் என் நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
அ தி மு க வின் வெற்றி என்று சொல்வதைவிட, தி மு க வின் தோல்வி என்றே இதைப்பார்க்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.
 
அ தி மு க வின் ஆட்சியில் கசப்புகள் இல்லாமல் இல்லை.  நாடாளுமன்றத் தோல்விக்குப் பிறகு நல்லது கெட்டது என்று பாராமல் எல்லா உத்தரவுகளையும் வாபஸ் வாங்கியது, ஹிந்துக்களின் மனம் புண்படும்படியான கட்டாய மதமாற்றத் தடை உத்தரவு வாபஸ், ஜெயேந்திரர் கைது, அதைத்தொடர்ந்த போலீஸ் அவதூறு, கஜானாவைக் காலி செய்யும் சலுகைகள் எனப் பல மோசமான நடவடிக்கைகள் இருந்தாலும் அவற்றையும் மீறி, அ தி மு க வுக்கு பெருவாரியான மக்கள் ஆதரவு அளித்திருப்பது, தி மு க அணியின் மேல் அவர்கள் கொண்ட கோபத்தையே காட்டுகிறது.
 
12 மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதா அரசுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முட்டுக்கட்டை போட்டனர். சுனாமி நிவாரணத்துக்கும் வெள்ள நிவாரணத்துக்கும் நிதி ஒதுக்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம், சேது சமுத்திரத் திட்டத்தில் காட்டிய முனைப்பில் சிறு பங்கு கூட குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் காட்டாதது,  மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது.
 
தேர்தல் பிரசாரத்துக்கென்றே தன் குடும்பத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தியது மட்டுமின்றி,  கேபிள் மசோதா கையெழுத்தாகிவிடக்கூடாது என்பதில் கருணாநிதி காட்டிய அளவற்ற ஆர்வம் மக்களின் கோபத்தில் எண்ணெய் ஊற்றியது.
 
அடுத்த முதல்வர் யார் என்பதற்கான தெளிவான பதிலை தி மு க அணி முன்னிறுத்தவில்லை எனினும் ஸ்டாலின்தான் அடுத்த முதல்வருக்கான வேட்பாளர் என்பது வேட்பாளர் தேர்விலேயே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. மக்கள் மனதில் "ஜெயலலிதாவா, ஸ்டாலினா" என்ற கேள்விக்கு தெளிவான விடை இருந்தது.
 
ஜெயலலிதாவுக்கு ஒரு வார்த்தை. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் கூறுகிறார் " நதியின் சுழலில் மாட்டிக்கொண்டவன் பிடித்துக்கரையேற எதையும் பிடித்துக்கொள்ளலாம்..அது மரக்கட்டையாக இருந்தாலும் சரி, உடைந்த படகாக இருந்தாலும் சரி. ஆனால் கரை ஏறியவுடன் அதைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அவ்வாறு செய்யாத மன்னன் ஜெயித்தாலும், கொள்கையில் உறுதியானவனாகக் கருதப்பட மாட்டான்";
 
எனவே, ஜெயலலிதா இந்த வெற்றியினால் பூரித்துப்போய்விடக்கூடாது. ஆனால் அவர் நம் பேச்சையா கேட்கப்போகிறார்?
 
கேள்வி பதில்
 
எம் ராஜா, ஊத்துக்கோட்டை
 
கே: தேர்தல் முடிவு நீங்கள் எதிர்பார்த்ததுதானா?
 
ப:  மக்களுக்கு மத்திய அரசின் மேல் வெறுப்பு இருக்கிறது என்பது தெரிந்தது. ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
 
கே: பா ஜ க அனைத்துத் தொகுதிகளிலும் டெபாஸிட்டை இழந்து விட்டதே?
 
ப: போகிற போக்கைப் பார்த்தால் "நேற்று சாயங்காலம் சூரியன் மறைந்து விட்டதே" என்று கூட கேள்வி அனுப்புவீர்கள் போலிருக்கிறதே.
 
பரமசிவன், ஒண்டிக்காரன்புதூர்
 
கே: ம தி மு க 28 தொகுதிகளில் வென்றிருக்கிறதே, இது பற்றி?
 
ப: பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதையே இந்த முடிவு காட்டுகிறது.  ஆனால் நாரை அதிக நேரம் சுமந்துகொண்டிருந்தால்  பூவும் நாறிப்போய் விடும் என்பதையும் மறக்கக்கூடாது. 
 
அகமது கனி, மேலவாயல்பட்டிணம்
 
கே: தமிழக அமைச்சரவையில் தகுதி வாய்ந்த அமைச்சர் யார்?
 
ப: உங்களுக்கு ஏன் இந்த வீண்வம்பு? நான் யாராவது ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு வைக்க, அவர் பதவி பறிபோவதைப்பார்ப்பதில் உங்களுக்கு என்னதான் ஆனந்தமோ!
 
_______________________________________________________________________
 
விரைவில் அடுத்த எடிஷன்: விஜயகாந்த் முதல்வர்!

 

blogger templates | Make Money Online