May 31, 2006

தேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2006)

தேன்கூடு - தமிழோவியம் நடத்திய ஏப்ரல்-மே மாதத்திய போட்டி - தேர்தல் 2060 -இல் நான் பரிசு பெற்றதைப் பற்றி ஏற்கனவே தேவையான அளவுக்கும் மேலேயே பெருமை அடித்துக்கொண்டு விட்டேன்.
 
மழை விட்டாலும் தூவானம் விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தப் போட்டியின் பரிசுகள் தரும் உரிமைகள். என் "அடங்குடா மவனே"வுக்குக் கொடுத்த விடுமுறையை அதிகப்படுத்திவிடுமோ என அஞ்சும் அளவுக்கு:-))
 
மே-ஜூன் மாதத்திய போட்டிக்கான தலைப்பை அறிவிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள், அதற்கு முதற்கண் நன்றி.
 
என்ன தலைப்பு வைக்கலாம் எனச் சிந்திக்கும்போது, தேன்கூடு - தமிழோவியத்தின் முந்தைய போட்டியின் தலைப்பு எப்படி இருந்ததோ, அவர்கள் விதிமுறைகள் என்ன சொல்லியனவோ அவற்றை ஒரு வரைமுறையாகக் கொண்டேன்.
 
1. தலைப்பு கவரும் விதமாய் இருக்க வேண்டும்;
2. புதுமையாக இருக்க வேண்டும்
3. பல விதமான படைப்புத் திறமைகளையும் - கதை என்றோ, கவிதை என்றோ சுருக்காமல், கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் என்று படைப்பிலக்கியத்தின் அத்தனை கூறுகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாய் இருக்க வேண்டும்.
 
மேலும், அதிகப் படைப்புகள் வர வழி செய்யும் விதமாயும் இருக்க வேண்டும். குறைந்த படைப்புகளே வரும் பட்சத்தில், பினாத்தல் போன்ற படைப்புகள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுகின்றன:-))
 
வெவ்வேறு சூழல்களில், நாடுகளில், பணிகளில் இருந்தாலும் நாம் அனைவரும் தினமும் சந்திக்கும், பாதிப்புக்குள்ளாகும், நம் பார்வைகளையும் குணநலன்களையும் புரட்டிப்போடும் ஒரே பொது நிகழ்வு - மாறுதல்.
 
அதிலும் எல்லாரும் சந்தித்திருக்கக்கூடிய முக்கியமான மாறுதல், விடலைப்பருவம் விடைபெறும் தருணங்கள்.
 
இத்தருணங்கள் நம் சிந்தனாமுறைகளை, அணுகுமுறைகளை, கொள்கைகளைப் புரட்டிப்போட்டு விடுகின்றன. எதற்கும் கவலைப்பட்டிராமல் இருந்த இளைஞன் / இளைஞி, பொறுப்பேற்று, குடும்பத்தின் கொள்கைகளை வகுக்கத் தயாராகும் மாற்றம், வெளிப்பார்வைக்குச் சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தனிப்பட்ட நபரின் சரித்திரத்தில் மிக முக்கியமான தருணம்.
 
இத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal  நிகழ்வு.
 
எனவே, நான் தேர்வு செய்திருக்கும் தலைப்பு:
 
வளர் சிதை மாற்றம்
                                       bye-bye adolocense
 
இந்தத் தருணத்தை, படைப்பாக்கி (கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள்  - எப்படி வேண்டுமானாலும்), பதிவாக்கி, தேன்கூட்டில் சமர்ப்பியுங்கள். - இங்கே சுட்டி
 
படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூன் 20
 
ஜூன் 21 - 25 வரை வாக்கெடுப்பௌ நடைபெற்று, முடிவுகள் ஜூன் 26 அறிவிக்கப்படும்.
 
 
நன்றி. 
 

May 30, 2006

Reservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)


நிறைய நாட்களாய் யோசித்து, விடை தெரியாமல் இன்னும் தவிக்கும் மூன்று கேள்விகளை தெரிந்தவர் முன் வைத்தால் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதால் இந்தப்பதிவை இடுகிறேன்.
 
பல வலைத்தளங்களுக்குச் சென்றும் பார்த்துவிட்டேன்,
 
வலைப்பதிவுகளிலும் இந்தக்கேள்விகளுக்கு விடை எங்கும் அளிக்கப்படவில்லை.
 
Reservation-இன் வசதியை சில வேளை நான் அனுபவித்திருந்தாலும், பல வேளைகளில் மறுக்கப்பட்டிருக்கிறேன். இல்லாததால் பல பிரச்சினைகளையும் அனுபவித்திருக்கிறேன்.
 
இதைப்படிப்பவர்கள் திறந்த மனதோடு அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 
எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாவிட்டாலும், தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து பதியும் சில பதிவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.
 
இதோ என் கேள்விகள்:
 
1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை?
 
2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது?
 
3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்?
 
பி கு: அடிக்க வராதீர்கள் - கொஞ்ச நாட்களாய் வெறும் சீரியஸ் பதிவே போட்டு அலுத்துவிட்டது:-))

Reservation குறித்து மூன்று கேள்விகள்

நிறைய நாட்களாய் யோசித்து, விடை தெரியாமல் இன்னும் தவிக்கும் மூன்று கேள்விகளை தெரிந்தவர் முன் வைத்தால் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதால் இந்தப்பதிவை இடுகிறேன்.
 
பல வலைத்தளங்களுக்குச் சென்றும் பார்த்துவிட்டேன்,
 
வலைப்பதிவுகளிலும் இந்தக்கேள்விகளுக்கு விடை எங்கும் அளிக்கப்படவில்லை.
 
Reservation-இன் வசதியை சில வேளை நான் அனுபவித்திருந்தாலும், பல வேளைகளில் மறுக்கப்பட்டிருக்கிறேன். இல்லாததால் பல பிரச்சினைகளையும் அனுபவித்திருக்கிறேன்.
 
இதைப்படிப்பவர்கள் திறந்த மனதோடு அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 
எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாவிட்டாலும், தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து பதியும் சில பதிவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.
 
இதோ என் கேள்விகள்:
 
1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை?
 
2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது?
 
3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்?
 
பி கு: அடிக்க வராதீர்கள் - கொஞ்ச நாட்களாய் வெறும் சீரியஸ் பதிவே போட்டு அலுத்துவிட்டது:-))

 

May 26, 2006

நன்றி! (26 May 2006)

பொதுவாக என் மனசு தங்கம்..
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

இணையத்தில், வலைப்பதிவுகளில் நான் கலந்து கொண்டதே மூன்று போட்டிகள்தான்.. அவை மூன்றிலும் (வெங்கட் நாராயணனின் 'நம்பிக்கை" கவிதைப்போட்டி, முகமூடியின் சிறுகதைப்போட்டி மற்றும் தேன்கூடு-தமிழோவியத்தின் தேர்தல்-2060 போட்டி) நானே முதல் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால்..

மன்னியுங்க.. அடங்குடா மவனேக்கு இன்னிக்கு லீவு:-))

May 25, 2006

மே 21, 1991 - இறுதிப்பாகம்

பாகம் 1, பாகம் 2, பாகம் 3
______________________________

இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன. காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை ஏதெனும் சாப்பிடக்கொண்டு வந்துகொடுத்தான் சுபர்ணோ.

ஜன்னல் உடைந்த சம்பவத்திற்குப்பிறகு வேறு யாரும் வரவில்லை என்பதால் சற்று ஆசுவாசம் அடைந்து பத்திரிக்கைகளைப்படித்து கொலை பற்றிய முழு விவரங்களும் அறிந்தோம்.

(இங்கே ஒரு ஆச்சரியமான Coincidence: Negoitiator கதையில் பெல்ட்டில் குண்டு வைத்து அமெரிக்க அதிபர் மகன் இறந்த கட்டத்தைப் படித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் பெல்ட் குண்டினால் கொல்லப்பட்டார் ராஜீவ் என்ற தகவலை அறிந்தேன்!)

செய்தித்தாள்களில் கலவரம் பற்றிய பெரிய செய்திகள் எதுவும் இல்லை.

இரண்டு நாள் கழித்து, சுபர்ணோ சொன்னான்: "இனி தைரியமா வெளிய வரலாம், பிரச்சினை ஒன்றும் இனிமே வராது"

"ஏன், எப்படி ஆச்சு?"

"ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளுங்க, தமிழர்களுக்கு ஆதரவா களம் இறங்கிட்டாங்க"

ஆறுதலாக இருந்தாலும் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஜா மு மோ பற்றி ஒரு சிறு குறிப்பு:

அன்றிருந்த பீஹாரின் கனிம வளங்களும், தொழிற்சாலைகளும் பெரும்பாலும் தெற்கு பீஹாரிலேயே இருந்தாலும், அதிகாரமையங்கள்(பாட்னா, சட்டசபை) , ஓட்டு வங்கிகள் ஆகியவை வடக்கில் மையம் கொண்டிருந்த காரணத்தால், வளர்ச்சிப்பணிகள், உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் வடக்கு பீஹாரில் பெரும்பான்மையாக நடந்தன. சோட்டாநாக்பூர் என்றும், ஜார்க்கண்ட் என்றும் அழைக்கப்பட்ட தெற்கு பீஹாரில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை விழவில்லை.

தனி மாநிலமாக தெற்கை ஆக்கினால் இந்நிலைக்கு விடிவு வரும் என்ற எண்ணத்தில், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு தனி மாநிலம் கேட்டுப் பல போராட்டங்கள் நடத்தின சோட்டாநாக்பூர் பிராந்தியக்கட்சிகள். அதில் முக்கியமானது ஜா மு மோ.

பெரும்பாலும் மலைவாழ்மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களைக்கொண்ட ஜா மு மோவில் படித்தவர்கள், அரசியல் அனுபவம் பெற்றவர்கள் மிகக்குறைவே. அவர்களின் போராட்ட முறைகள் வன்முறையின் அடித்தளத்திலேயே விளைந்தவை. மரங்களை வெட்டி சாலை மறியல், போலீஸ் நிலையத்தைக் கொளுத்துதல், அரசாங்க பஸ்களைக் கொளுத்துதல் போன்று அவர்களின் போராட்டங்கள் அனைத்துமே பொதுமக்களுக்குத் தொந்தரவாகவே முடிந்தன. அரசாங்கம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை - ஜா மு மோ - பிற்காலத்தில் தேசியக்கட்சிகளுடன் கூட்டணி கொள்ளும் வரை. பிறகே சமீபத்தில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.

இந்தப்பின்னணியில், வன்முறைக்கு எதிராக, கலவரத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால், காங்கிரஸ் தொண்டர்களின் வெறியாட்டம் அடங்கிவிடும் என்பது நிச்சயம். இந்தப்பகுதியில் ஜார்க்கண்டை எதிர்க்கத் துணிய மாட்டார்கள்.

மூன்று நாட்களுக்குப்பின் சுதந்திர மூச்சு விட்டோம்.

அதற்குப்பிறகும் பல நாட்கள் நிம்மதியாகத் தூங்க விடாத பயங்கள், இரவு நேர திடுக்கிட்ட விழிப்புகள் - ஏன் இன்னும் கூட சில நேரங்களில் இந்த நினைவுகள் படுத்துகின்றன.

முத்தாய்ப்பாக, சில மாதங்கள் கழித்து கிருஷ்ணாவைச் சந்திக்க நேர்ந்தபோது அவன் சொன்னான்..

"தலைவர் இறந்த அன்று உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்"

நான் பயந்தது நியாயம்தான் போலிருக்கிறது..

"உன்னை எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு ஓடச்சொல்லி எச்சரிக்கை செய்துவிடலாம் என்றுதான் தேடினேன்"

"அந்த ஜீப் விவகரத்திறகாக நீ என்னைக்கொல்லத் தான் தேடினாய் என்று பயந்திருந்தேன்" சொல்லியே விட்டேன்.

"என்ன பேச்சு பேசுகிறாய்? உனக்கும் எனக்கும் தகராறு இருந்திருக்கலாம் - ஆனால் தெரிந்தவனைப் போய் கொல்வேனா? உனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்றுதான் நினைத்தேன்"

மனித மனங்களைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என நினைத்தாலும் அவன் சொன்னதை நம்பினேன்.

தமிழர்களையெல்லாம் ஒழிக்க வேண்டும் என பத்து நிமிடம் முன் சொன்ன சுபர்ணோ என்னைக் காப்பாற்ற பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தான். கலவரம் ஏற்படுத்திப் பெயர் வாங்க நினைத்த அரசியல்வாதியும் தெரிந்தவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைத்திருக்கிறான்.

"இது என்ன மேட்டர்? ஒரு மூணு நாள் வீட்டுக்குள்ளே கிடந்தே, ஒரு அடியும் படாமதானே பொழைச்சே, இதைப்போய் நாலு பாகமா எழுதறியே" என்றும் இதைப்படிக்கும் சிலர் நினைக்கலாம். ஆனால் என் பயம் சத்தியம். பிழைத்ததால் மட்டும் நானும் பலியாவதற்கு இருந்த சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விட்டன என்று சொல்ல முடியாது.

அன்று எனக்கு 21 வயது. அதற்கு முன்பான 21 வருடங்கள் தராத அனுபவங்களையும், புரிதல்களையும் அந்தச்சம்பவம் தந்தது.

குஜராத்தில் துரத்தப்பட்ட முஸ்லீம்களையும், கல்கத்தாவில் கொல்லப்பட்ட இந்துக்களையும், ஹோசூருக்கு விரட்டப்பட்ட தமிழர்களையும், அதிரடிப்படையால் அச்சுறுத்தப்பட்ட மலைவாசிகளையும் - அவர்களின் துன்பங்களையும், வலியையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை என் முதல் 21 வருடங்கள் தந்திருக்கவில்லை.

எந்தப்பிரச்சினைக்கும் காரணம் ஒரு இனம், அவர்கள் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற சிந்தனை என் மனத்தில் ஏறாததற்கு இந்த அனுபவங்கள் ஒரு முக்கியக்காரணம்.

என் பாட்டி தைரியமாக பாம்பும் பல்லியும் பேய்க்கதைகளும் உலாவும் இடத்துக்கு வெளிச்சம் இல்லாமல் போவதைப்பற்றிக் கேட்டபோது அவள் சொன்ன "பேய் பத்தி பயம் ஒன்னும் இல்ல, மனுசப்பேய்ங்களைப்பத்திதான் பயப்படணும்" என்று சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கியதும் இதனால்தான்.

என் விடலைத்தனம் விடைபெற்றதும் இந்தத் தருணத்தில்தான்.

படித்த அனைவருக்கும் நன்றி. கருத்துக்களைக் கூறுங்கள்.

May 24, 2006

மே 21, 1991 - 3

முதல் பாகம் இங்கே:

இரண்டாம் பாகம் இங்கே:

படித்துவிட்டு வாருங்கள், மூன்றாம் பாகத்தை இங்கே படிக்க.
_____________________________________
எரிகின்ற குடிசையைப்பார்த்ததும் பயம் இன்னும் அதிகமானது இருவருக்கும். ஐந்து நிமிடம் அங்கேயே நின்றதில் வேறு யாரும் ஆட்கள் நடமாட்டம் கண்ணில் படவில்லை என்பது சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது.

"போய்ப்பாத்துடலாம?" என்றேன்.

"நீ இங்கேயே இரு. நான் போய்ப்பாக்கறேன், எவனாவது இருந்தாலும் என்னை ஒண்ணும் பண்ண மாட்டாங்க."

நான் அதை நம்பவில்லை. இவன் என்னுடன் சுற்றுவதை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். நான் எங்கே என்ற கேள்வியை கிருஷ்ணா இவனைக் கொஞ்சிக்கேட்கப்போவதில்லை.தமிழனாகப் பிறந்ததற்காக நான் பயப்படுவது நியாயம்.. இந்தப் பெங்காலிக்கு என்ன வந்தது? எந்தச் சமூகத்திலும் எல்லாரும் குற்றவாளிகள் இல்லை. நிச்சயமாக எனக்காக இவன் எடுக்கும் ரிஸ்க் அதிகம்.

இருந்தாலும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை.

அவன் மெதுவாக குடிசை வரை போனான். இரண்டே நிமிடத்தில் திரும்பினான். "சீக்கிரம் இங்கே ஓடிவா"

ஓடினேன்.

"கிருஷ்ணா கும்பல் வரவில்லையாம்.. வேற யாரோ லோக்கல் கும்பல்தான் வந்திருக்காங்க. சும்மா பொழுது போகாம இந்தக்குடிசைய கொளுத்திப்போட்டிருக்கானுங்க"

அவர்க்ள் இன்னும் வரவில்லை என்றால் எப்போதும் வரலாம். காட்டுக்குள் சென்று விடலாமா? எவ்வளவு நேரம் காட்டில் இருக்க முடியும்?

"அதே ஐடியாதான் சொல்றேன். நீயும் ரூமுக்குள்ளே போய் இரு. நான் வெளியே பூட்டிடறேன். ரெண்டு பேரும் ஒண்ணா இருங்க (அருண் ஏற்கனவே உள்ளே இருக்கிறான்). கொஞ்சம் நிலைமை சரியான உடனே வெளியே வரலாம். நானும் எங்கேயாவது போயிடறேன்."

வேறு எதுவும் தோன்றவில்லை.

ரூம் கதவை பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துத் திறந்தான்.

உள்ளே கோழிக்குஞ்சு மாதிரி கட்டிலுக்கு அருகில் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தான் அருண். சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு சிரிப்பு வந்தது.

"சத்தம் வராம உள்ளேயே இருங்க - நான் அப்புறமா வரேன்." என்று கிளம்பினான் சுபர்ணோ. "சாவிய நீங்களே வெச்சுக்கோங்க, நான் கதவித் தட்டினா அடி வழியா சாவியத் தள்ளிவிடுங்க, நான் திறக்கிறேன்" கிளம்பும் முன், கையிலிருந்த சார்ம்ஸ் சிகரெட் பாக்கெட்டை என்சட்டையில் சொருகிவிட்டுத்தான் சென்றான். (என் பிராண்ட் இல்லைதான்). சுபர்ணோ மேல் பெரிய மரியாதை வந்தது.

"என்ன ஆச்சு எதாவது விவரம் தெரியுமா சுரேஷ்" அருண் நான் வந்தபிறகு இப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறான்.

எனக்கே ஒன்றும் விவரம் தெரியாதே. "ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம். ஸ்ரீபெரும்புதூர்ல மீட்டிங் பேசும்போது குண்டு எதோ வெடிச்சுதாம்."

"சரி அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?"

"டெல்லியில இருந்த எல்லா சர்தாருமா இந்திரா காந்தியக்கொன்னாங்க? இதெல்லாம் நம்ம நாட்டு சாபக்கேடு"

"நம்ம ஊர்லே இது மாதிரியெல்லாம் எதுவுமே நடக்காதே"

"அது தவிர, இங்கே லோக்கல் காங்கிரஸ் ஆளுங்களுக்கெல்லாம், தலைவன் மேல உள்ள விசுவாசத்தக் காமிக்க இது ஒரு சுலபமான வழி. பீஹார்லே அரசியல்லே பெரிய ஆளுங்க எல்லாம், என்ன என்ன கலவரம் செஞ்சிருக்காங்கன்றதுதான் குவாலிபிகேஷன்! அவனுக்கு சொந்தப்பகை உள்ளவனுங்களை எல்லாம் போட்டுத்தள்ளவும் ஒரு சான்ஸு."

"போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி உள்ள இருந்துடலாமா? அது ஸேபா இருக்குமா?"

"போலீஸ் ஸ்டேஷன்லதான் கலவரம் எதா இருந்தாலும் ஆரம்பிக்கும். எல்லா போலீஸ்காரனும் வீட்டுக்குள்ளே இருப்பான்."

"எப்பதாங்க அடங்கும்?"

எனக்குப் புரியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றால்தான் சோறு. வெளியே சென்றால் ராஜீவ் காந்தியுடன் பேசத்தான் வாய்ப்பு கிடைக்கும்.

"சரி அமைதியா இரு. ஏதாவது புஸ்தகத்தைப்படி. சத்தம் வந்தா சந்தேகம் வரும்."

எந்தப்பொழுதுபோக்குச் சாதனமும் இல்லாமல், செய்ய வேலை எதுவும் இல்லாமல், காதை அடைக்கும் பசியுடன், சத்தம் போட முடியாமல் இரண்டு மணி நேரம் கடந்தது. எதை எதிர்பார்க்கிறேன் என்றே தெரியாமல், எதாவது நடந்து முடிந்தால்தான் இந்த நிலைமையிலிருந்து மாற்றம் வரும் என்பதால் கலவரக் கும்பல் வந்து போனாலே தேவலாம் என்றெல்லாம் ஓடுகிறது நினைப்பு.

ஐந்து மணிநேரம் அப்படியே கழிந்தது. தூக்கமா, பயம், பசியெல்லாம் கலந்த மயக்கமா என்று தெரியாமல் கழிந்த நேரம்.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. புலன்கள் விழித்தன.

"நான் தான் சுபர்ணோ.. சாவி கொடு"

ஒரு பிரெட் பாக்கெட்டை அவ்வளவு காதலுடன் அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை.

"என்ன நடக்குது வெளியில?" என்றேன், வயிற்றின் குமுறல் தணிந்தபின்.

"இவங்க ஜரண்டியிலே ரெண்டு மூணு குடிசைய எரிச்சானுங்களாம். இந்தப்பக்கம்வர மறந்துட்டாங்க போலிருக்கு. ராஞ்சியில மெட்ராஸ் ரெஸ்டாரண்ட்ட எரிச்சிட்டாங்களாம், எப்படியும் ஒரு ஏழெட்டு உயிர் போயிருக்கும்"

ஒரு விசித்திரமான ஆறுதல் ஏற்பட்டது. 400 - 500 என்றெல்லாமல் போகாததில் கலவரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்று.

"சரி நான் கிளம்பறேன். முடிஞ்சா ராத்திரி வரேன். வராட்டி கோபிச்சுக்காதே"

கோபமா? இவன் மேலா?

வெளியே சென்று கதவைப்பூட்டி சாவியை உள்ளே தள்ளினான்.
அவன் வெளியே சென்று ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். நான் எதிர்பார்த்திருந்த - பயந்திருந்த சப்தம் கேட்டது.

"எவனாச்சும் தமிழாளுங்க இங்கே இருக்காங்களாடா"

கண்ணாடிகள் உடையும் சப்தம். எதோ மேஜையை உருட்டி இருக்கிறார்கள்.

செக்யூரிட்டியின் குரல் கேட்டது. "எஜமானுங்களா.. இங்கே யாருமே இல்லீங்களே.. காலையிலே எல்லாரும் ஊருக்கு ஓடிட்டானுங்க"

எல்லா ரூம்களின் கதவையும் பளீர் பளிரென்று உதைக்கும் சப்தமும் கேட்டது.

அருணிடம் மிக மெல்லிய குரலில், "கட்டிலுக்குக் கீழே போ
- அந்தக்கம்பளியை மேலே இருந்து போட்டு மறை"

ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. என் கையருகில் கல் வந்து விழுந்தது.

மூச்சு விடக்கூட மறந்திருந்தோம்.

பத்து நிமிடமா, பத்து யுகமா எனத்தெரியாத நேரம்..
சப்தங்கள் கொஞ்சம் குறைந்தன.

தொடர்ச்சியான அமைதி நிலவியும் வெளியே வரத் தோன்றவில்லை. வியர்வை மூக்கை நனைத்தது.

செக்யூரிட்டி கதவைத் தட்டினான் "சாப் ஓ லோக் சலே கயே (அவர்கள் போய் விட்டார்கள்)"

கொஞ்சம் நிம்மதியுடன் வெளியே வந்தோம்.

அருண் எதுவும் பேசாமல் துடைப்பத்தை எடுத்து கண்ணாடிச்சில்லுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

கண்ணாடி இல்லாத ஜன்னல் ஆபத்து. வெளியிலிருந்து எல்லாம் தெரியும். எதாவது பழைய பேப்பர் எடுத்து ஒட்டலாம்..

எடுத்த பேப்பரில் அழகாக்ச் சிரித்துக்கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.
_______________________________
--நாளை கடைசிப்பாகம்--

ஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24 May06)

வலைப்பதிவர் பெயர்: பினாத்தல் சுரேஷ்

வலைப்பூ பெயர் : பினாத்தல்கள்

உர்ல் : http://penathal.blogspot.com

ஊர்: ஷார்ஜா


நாடு: ஐக்கிய அரபு அமீரகம்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்பு. வலையில் தடுமாறி, தடம் மாறி இடம் தேடி இன்னும் அலைகிறேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 15, 2004


இது எத்தனையாவது பதிவு:150ஐத் தாண்டிக்கொண்டிருக்கிறது

இப்பதிவின் உர்ல்: http://penathal.blogspot.com/2006/05/24-may06.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை வெளியிட, என் திறமை(?1)யைப் பறைசாற்ற.


சந்தித்த அனுபவங்கள்: நிறைய!

பெற்ற நண்பர்கள்: நிறைய!

கற்றவை: பல இருந்தாலும், முக்கியமான ஒன்று மட்டும்: நான் அப்ப்டி ஒன்றும் பெரிய முட்டாளில்லை, புத்திசாலியாய் நினைத்தவர்கள் எந்நேரமும் புத்திசாலியும் இல்லை.


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வானளவு இருந்தாலும், அடுத்த ஆளுக்கும் அந்த வானத்தில் இட உரிமை இருப்பதை மதிக்கிறேன்.

இனி செய்ய நினைப்பவை: தொடர்வேன் என் பினாத்தலை.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: தமிழ்மணம் நட்சத்திரத்துக்காக எழுதியது இங்கே:

பெயர் இரா.சுரேஷ் பாபு

வயது பத்திலிருந்து ஐம்பது வரை - இடத்துக்கு ஏற்றவாறு மாறும்.

தொழில் கனரக வாகனங்கள் சார்ந்த பொறியியல் - உபயோகிப்போருக்கும் பராமரிப்போருக்கும் அவற்றின் தொழில்நுட்பம் பற்றி விளக்கும் ஆசிரியர்.

வலைப்பதிவு பினாத்தல்கள

அனுபவச் சிதறல்கள் என எழுத ஆசைதான் - ஆனால் அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!

ஏன் வலைப்பதிகிறேன்? எனக்குப் பெரியதாக எந்தக் கொள்கையும் கிடையாது - அப்படியே இருந்தாலும் அவற்றோடு காதலும் கிடையாது.

அனுபவஸ்தர்கள் லாஜிக்கோடு கூறினால் எதையும் ஏற்றுக்கொள்வேன் - இதனாலேயே கேட்டுக்கொள்வதில் என் தகுதி அதிகமாகி, நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. என் கருத்துக்களை நான் எங்கேதான் கொண்டு கொட்டுவது?

இலக்கற்று வலை மேய்ந்த காலத்தில் ஏதொ ஒரு கீவேர்ட் (தெய்வ சித்தம்?) என்னை காசியின்"என் கோடு உன்கோடு யூனி கோடு" தொடருக்குள் கொண்டு சேர்த்தது.. தமிழில் எழுதுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என அத்தொடர் உணர வைக்க..மற்றவை வரலாறு..(இப்படி பெரிய எழுத்தாளர்கள் மட்டும்தான் பீலா விடலாமா என்ன?)


May 23, 2006

மே 21 1991 - 2

மு கு: இங்கே பகுதி 1 இருக்கிறது, இது அதன் தொடர்ச்சி.
___________________________________________________________
 
ஆட்டோவில் ஏறும் முன்னரே தெருவில் சில வித்தியாசங்கள் தென்படத் தொடங்கிவிட்டன. எப்போதுமே பெரிய அளவில் வாகன நடமாட்டம் இருக்காது என்றாலும், இன்று மிகவும் குறைவாகவே இருந்தது. என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த அலுவலகக் கவலைகளில் இதை பெரிதாக கவனிக்கத் தோன்றவில்லை.
 
ஆட்டோக்காரனிடம் ரயில் நிலையத்துக்குச் செல்லச்சொன்னேன். ஆட்கள் ஏறினால் ஐந்து ரூபாய், தனியாகச் சென்றால் முப்பது ரூபாய் கொடுப்பது வழக்கம் (ஆமாம் அய்யா - ஆறு பேர் ஒரு ஆட்டோவில் ஏறுவார்கள்). வேறு ஆள் தென்படாததாலும், ரயிலுக்கு நேரமாகிவிட்டதாலும் முப்பது கொடுக்கச் சம்மதித்தேன்.
 
வழியில் கடக்க வேண்டிய ஒரு ஒற்றைப்பாலத்தில், எதிர்வரும் வண்டிகளுக்காக ஆட்டோ நிற்க வேண்டி வந்தபோதுதான் எதிரே இருபது முப்பது ஜீப்புகள் தொடர்ச்சியாகச் செல்வதைக் கவனித்தேன். ஏதோ சாலை மறியல் பண்ண கும்பலாகப் போகிறார்கள் போலிருக்கிறது.
 
"ஏம்பா ஆட்டோ, அந்தப்பக்கமா திருப்பி தரைப்பாலம் வழியா போயிடலாமே?" ஆனால் அந்த வழி 3 கி மீ அதிகம்.
 
"இன்னொரு பத்து ரூபாய் தர்றயா?" பத்து ரூபாய் என்பதை நூறாய்க்கொடுத்தால், இமயமலைக்கே கூட கொண்டு விடுவான்.
 
ரயில் நிலையத்தை நெருங்குகையில் ரயில் நிலையமும் அமைதியாக இருந்தது. ரொம்ப லேட்டாகும் என்று யாரும் வரவில்லையா, அல்லது ரயில் சென்றுவிட்டதா என்று ஊகிக்க முடியவில்லை.
 
டிக்கட் வாங்க கவுண்டர் பக்கம் சென்றேன். "சுரேஷ்" என்ற கத்தல் கேட்டது. சுபர்ணோவின் குரல்.
 
இவன் எங்கே இங்கே வந்தான்.. டீக்கடையில் பார்த்தபோதுகூட ராஞ்சி போவதாகச் சொல்லவில்லையே..
 
அவன் முகத்தில் பீதி இருந்தது. "சுரேஷ் - எப்படி வந்தே ரயில்வே ஸ்டேஷனுக்கு?"
 
"தரைப்பாலம் வழியாதான், மெயின் பாலம் ப்ளாக் ஆகி இருந்துது"
 
"சரி என் பைக்கிலே ஏறு - உனக்கு விஷயமே தெரியாதா?"
 
"என்ன ஆச்சு? நான் ராஞ்சி போகணுமே"
 
"ராஞ்சியெல்லாம் போக முடியாது. ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்"
 
"என்ன?"  அப்போது நான் ராஜீவ் காந்தி ரசிகன் என்பதால் செய்தி ஆழமாகவே என்னைத் தாக்கியது. நேற்றும் கூட, காங்கிரஸ் தோற்கும் என்றவருடன் தீவிரமாக வாதித்தேனே..
 
இரண்டொரு நிமிடங்களில் அதிர்ச்சி குறைந்து ராஞ்சி போக வேண்டியதில்லை என்ற சுயநல மகிழ்ச்சி வந்தது.
 
அப்போ சைட்டுக்கும் போகவேண்டாம், ரூம்லே நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம். "The Negotiator"-ஐ முடித்துவிடலாம்.
 
"சீக்கிரம் வண்டியில ஏறு. முதல்லே புஸ்ரூ போயிடலாம்" என்றான் சுபர்ணோ. புஸ்ரூ 10 கிமீ தொலைவில் இருந்த இன்னொரு நகரம்.
 
"எதுக்கு, நேரா ரூமுக்கே போயிடலாமே" என்றேன்.
 
"பைத்தியக்காரத்தனமா பேசாதே. 40 ஜீப்புல ஆளுங்க போனானுங்களே பாத்தியா? எல்லாரும் கிருஷ்ணா ஆளுங்க. (கிருஷ்ணா லோக்கல் காங்கிரஸ் வட்டம்.) ராஜீவ் காந்தி செத்தது தமிழ்நாட்டுலே.. தமிழனுங்க யாரையும் விடமாட்டேன்னு கருவிகிட்டு போறாங்க. நல்ல வேளை, நீ தரைப்பாலம் வழியா வந்தே. நீ மட்டும் மெயின் பாலத்துல வந்துருந்தே, முதல் போணியே நீதான்"
 
இப்போதுதான் நிலவரத்தின் தீவிரம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. சீக்கியர்களைத் தேடிக்கொன்ற இந்திரா காந்தி மரணச் செய்திகள் நினைவுக்கு வந்தன. கோர்வையாக யோசிக்கக்கூட முடியாமல் அடிவயிற்றில் பயப்பந்து.
 
"புஸ்ரூ ஏன் போகணும்?"
 
"கவனிக்கலையா? அவங்க எல்லாம் புஸ்ரூவிலிருந்துதான் வந்தாங்க.. அதே சைட் கொஞ்ச நேரமாவது திரும்ப மாட்டாங்க"
 
வண்டி சென்ற இடங்களில் கலவரத்தின் சுவடுகள் பாதி எரிந்த தீயாக. சாலையில் ஓரிடத்தில் இட்லியும் சாம்பாரும் கவிழ்ந்திருந்தன. எனக்கு காலை இட்லி கொடுக்கும் சண்முகத்தின் சைக்கிள் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருந்தது. சண்முகம் தப்பித்திருப்பானா? சுபர்ணோவிடம் கேட்டேன்.
 
"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டானாம். நாலஞ்சு பேரு தொரத்திகிட்டு போயிருக்கானுங்க" சண்முகம் இங்கே வந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. ஊரில் மனைவி, பிள்ளை.
 
"பாவம்" என்று வாய்விட்டே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது.
 
"மொதல்லே உன் நிலைமையப்பாரு. அப்புறம் அடுத்தவனுக்குப் பரிதாபப்படலாம்."
 
ஆம். என் நிலைமை? எவ்வளவு நேரம் இவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்கப்போகிறேன்? நடுச்சாலையில் இருக்கிறேன்.. பலருக்குத் தெரியும் நான் தமிழனென்று. முக்கியமாக, கிருஷ்ணாவுக்குத் தெரியும். கிருஷ்ணா ஒருமுறை என் அலுவலக ஜீப்பை தன் உபயோகத்துக்குக் கேட்டபோது மறுத்திருக்கிறேன். தேவையில்லாத உரசல். அவன் விடாமல் என் மேனேஜரிடம் பேசி வாங்கிவிட்டான் என்றாலும் என் மேல் ஒரு கடுப்போடேயே இருந்தான்.
 
"அருண் எங்கே இருக்கான்?"
 
"அவனை ரூம்லேயே வைச்சுப் பூட்டிட்டேன். வெளிப்பக்கமா. உள்ளே சத்தம் போடாம இருன்னு சொல்லி வச்சுருக்கேன். நீயாவது பரவாயில்ல, புதுசா எவனாவது கேட்டா இந்தி பேசிடுவே. அவன் சுத்தமா மாட்டிக்குவான்."
 
"ஸேஃப்தானே?" என்றேன்.
 
"ஸேஃபா? எப்படியும் அவங்க ஹாஸ்டல் ரூமுங்களைப்பாக்காமல் மேலே போக மாட்டாங்க. கதவை உடைச்சாங்கன்னா பிரச்சினைதான்"
 
அருணுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே இப்படி ஒரு அனுபவம்.. "சுபர்ணோ.. வண்டியத் திருப்பு. புஸ்ரூ வேண்டாம். ரூமுக்கே போலாம்.. காட்டு வழியா"
 
"பைத்தியமா பிடிச்சுருக்கு? எவனாவது இப்போ அங்கே போவானா?"
 
"முதல்ல ஹாஸ்டல் வாசலுக்குப்போலாம். நிலைமையப்பாத்துகிட்டு உள்ளே போலாம். அருண் நிச்சயம் பயந்திருப்பான். அவனைத் தனியா விட்டுட்டு போக முடியாது. என்னையும் அங்கேயே உள்ள வச்சுப் பூட்டிடு."
 
சுபர்ணோவுக்கும் என்ன செய்வது என்று சரியாகப் புலப்படவில்லை. புஸ்ரூ போவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா, அதனால் பிரச்சினை தீருமா என்ற சந்தேகங்கள் அவன் மனத்திலும் எழுந்திருக்க வேண்டும்.
 
"சரி உன் இஷ்டம். காட்டு வழியா நீ வா, நான் வண்டிய ஓட்டிகிட்டு போறேன்."
 
"கிருஷ்ணா உன்னைப்பார்த்தா நிச்சயம் என்னைப்பத்திக்கேப்பான். நீயும் காட்டு வழியாவே வா"
 
அடர்ந்த காடு என்றில்லாவிட்டாலும், கல்லும் முள்ளும் சிலநேரங்களில் சிறுத்தைகளும் காணப்படும் காட்டு வழியில் 2 கிமீ நடந்து ஹாஸ்டல் கண்ணில் பட்டபோது செக்யூரிட்டியின் குடிசை எரிவது கண்ணில் பட்டது.
__________________________________________________
நாளை அடுத்த பாகம்
 
 
 
 
 
 
 
 


 

May 22, 2006

மே 21, 1991 - 1

மு கு 1: இது கதைபோல இருந்தாலும் முழுக்க முழுக்க நிஜம். என் சொந்த அனுபவம்.
 
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் ஆனாலும், அன்றைய தினமும், தொடர்ந்த நிகழ்வுகளும் என் மனதை விட்டு என்றும் அகலாமல் செய்துவிட்டன சில சம்பவங்கள்.
 
நேற்று ராஜீவ் நினைவுநாள் என்பதால் இந்த நினைவுகள் மீண்டும் வந்தன.
 
மூன்று பாகங்களாக எழுத உத்தேசித்துள்ளேன்.
____________________________________________________________________
 
அலாரம் அடித்தபோதே எழுந்திருந்திருக்க வேண்டும். தூக்கத்தின் சுகத்துக்காக அதை அலட்சியப்படுத்தியதால் இப்போது அவசரப்பட்டிருக்க வேண்டாம்.
 
குழந்தைகள் போல தூக்கத்தில் இரண்டே நிலை இருந்தால் நன்றாக இருக்கும். ஆழ்ந்த தூக்கம் அல்லது முழு விழிப்பு. நேற்றைய கிரிக்கெட்டும் ராத்திரி ஒரு மணிவரை சகாக்களுடன் தொடர்ந்த அரசியல் பேச்சுக்களும் ஆறரை மணிக்கும் முழு விழிப்பு வர விடவில்லை.
 
இன்று ராஞ்சி செல்ல வேண்டும். எல்லா ரிப்போர்டுகளும் தயார் என்றாலும் அங்கே ஏஸி அறையில் இருக்கும் மேனேஜருக்கு எப்போதும் எழுதாத ஒரு ரிப்போர்ட்டே தேவைப்படுவது வழக்கம். எவ்வளவு தயாராகச் சென்றாலும் அவரைத் திருப்தி செய்ய முடியாது.
 
ராஞ்சிக்குச் செல்வது என்பதே ஒரு நீண்ட யாத்திரை.. இங்கிருந்து ஆட்டோவில் ஐந்து கிலோமீட்டர், பிறகு ரயிலில் 50 கிலோமீட்டர், பிறகு ட்ரெக்கர் வண்டியில் 45 கிலோமீட்டர் என்று எல்லா வகை வாகனங்களையும் உபயோகப்படுத்தி,  தடங்கல்களுக்கான ஆயிரம் சாத்தியங்களுக்கிடையே (ஆட்டோக்கள் ஸ்ட்ரைக், ரயில் காலதாமதம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சாலை மறியல்கள், ராஞ்சியில் ஊரடங்கு - எது வேண்டுமானாலும், என்று வேண்டுமானாலும் நடக்கலாம்) சென்று மேனேஜரைப்பார்த்தால் அவர் அலட்சியமாக புதிய ரிப்போர்ட் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நேற்றே நான் எழுதியிருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்.
 
என் அவசர சத்தங்களில் அருண் விழித்துக்கொண்டுவிட்டான்.
 
"சார், குட் மார்னிங், டீ வாங்கி வரட்டுமா?"
 
"எத்தனை முறை சொல்ல, சாரெல்லாம் வேண்டாம், சுரேஷ் போதும்னு.., சரி வாங்கி வா"
 
"தோ சாயா டாலியேன்னு சொல்லலாமா?" இவன் இன்னமும் புதிது, இந்தி கைவரவில்லை.
 
"டாலியேன்னு கொட்டறதுக்கும் ஊத்தறதுக்கும்தான் சொல்லணும். இங்கே தோ சாய் தீஜியேன்னு சொல்லு இல்லாட்டி தோ சாய் தோன்னு சொல்லு.. "
 
"தோ சாய் தோவா? ரெண்டு முறை தோ வருதே"
 
"எப்பா.. காலங்காலைலே என்னைப்படுத்தாதே.. நான் இந்தி மொழியைக் கண்டுபிடிக்கலை.. அந்த ஆள் மாட்டுனான்னா கேக்குறேன்."
 
"சரி நானும் கிளம்பிட்டேன், ரெண்டு பேருமே போய் டீ குடிச்சுட்டு வரலாம்"
 
டீக்கடையில் சுபர்ணோ இருந்தான். அவன் எங்கள் எதிரி இயந்திர நிறுவனத்தின் பிரதிநிதி.
 
 "என்ன சுரேஷ் ராஞ்சியா?"
 
"என்ன பண்ண? இது வாராவார தண்டனையாச்சே!"
 
"எங்க கம்பெனில பரவாயில்லைப்பா, மாசம் ஒரு முறைதான் ரிப்போர்டிங்"
 
"மாசம் ஒரு முறை கூடை ரிப்போர்ட் எடுத்துகிட்டு போவே.."
 
"ஹல்லோ அருண், ஹவ்டிட் யூ டூ?"
 
"இங்க்லீஷ் வரலேன்னா விட்டுடேன்.. பாவம், உங்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுது"
 
"ஹிந்தி அருண்கிட்டே மாட்டிகிட்டு கஷ்டப்படறத விடவா?"
 
"அருண் இன்னும் ரெண்டு மாசத்துல ஹிந்தி நல்லா பேசக்கத்துக்குவான், நீ, வாழ்க்கை புல்லா இந்தி.. இங்க்லீஷ் ரெண்டையும் கொலைதான் பண்ணுவ. நெஜமாவே கேக்குறேன், பெங்காலிங்களுக்கு வேறெந்த பாஷையும் சுட்டுப்போட்டாலும் வராதா?"
 
"நாங்க பரவாயில்லப்பா, ஹிந்திய ஸ்கூல்ல கத்துக்குறோம்.. உங்க தமிழ்நாட்டுல எல்லாரும் வளர்ந்து கடாவான பிறகுதான் இங்க வந்து ஹிந்தி கத்துக்கறாங்க"
 
"நீ ஸ்கூல்ல கத்துகிட்ட எதையும் ஞாபகம் வெச்சுக்கப்போறதில்ல.. பித்த்கோரஸ் தியரெம் தெரியுமா சொல்லு? எங்களுக்கு எல்லாம் வாழ்க்கைப்பாடம்பா!"
 
"முட்டாள் மாதிரி பேசாதே.. தமிழ்நாட்டுக்கு நான் போனா, ஹிந்தி பேசி பொழைக்க முடியுமா?"
 
"ஆமாண்டா, சுபர்ணோ வருவான்னு, எல்லாத் தமிழனும் ஹிந்தி கத்துக்கணுமா?"
 
"நாங்க பெங்காலிங்க இந்தி கத்துக்கல? மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹிந்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா? இந்தியால தானே இருக்கீங்க?"
 
"எங்களுக்குத் தேவைப்பட்டா, உன்னைவிட சீக்கிரமாவே கத்துப்போம்"
 
"உங்களையெல்லாம் ஒழிக்கணும்டா" அவன் குரலில் இப்போது கோபமே இருந்தது. எத்தனியோ முறை இதே தகராறு எங்களுக்குள் நடந்திருக்கிறது. இன்றைக்கு கொஞ்சம் அதிகமாக அவனைக் கிண்டிவிட்டேன் போலிருக்கிறது. சரி, அப்புறம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.
 
"சரி நான் நாளைக்கு சாயங்காலம் வரேன்" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைப்பிடித்தேன்.
 
நாளை அடுத்த பாகம்.
 

May 9, 2006

தேர்தல் 2060 - சிறுகதை


வேலை முடிகிற வழியாய்த் தெரியவில்லை.வண்டி டெலிவரி எடுக்க எந்நேரமும் வந்துவிடுவான் - இன்னும் மூன்றாம் கியர் விழுவதில் பிரச்சினை. இரண்டு நாளாய் பிரச்சினையின் மூலாதாரத்தைப் பிடிக்க  முடியவில்லை.  
 
கைப்பேசி சிணுங்கியது. இது வேறயா? கிரீஸும் எண்ணையும் வழிந்த கையுறையைக் கழட்டி போனை எடுத்தேன்.
 
குறுஞ்செய்திதான்.
 
"இன்று வாக்குப்பதிவு, இன்னும் 12 மணிநேரத்துக்குள்ளாக உங்கள் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி வாக்களியுங்கள்.
 
வாக்களிக்க வேண்டிய சாவடியின் வழியைப்பெற, இங்கே அழுத்துங்கள்" இங்கேவில் ஹைப்பர்லின்க் ஒளிர்ந்தது.
 
பார்த்துக்கொண்டிருக்கும்போதே 12 மணி என்பது 11:59:59 என்று கீழிறங்க ஆரம்பித்தது. இனி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு சிணுங்கல் நிச்சயம்.
 
அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஏன் மூன்றாம் கியர் விழவில்லை?
 
மறுபடி கைப்பேசி அதட்டியது.
 
"டேய் போனை எடுறா, நான் வசந்த்"
 
"டேய் போனை எடுறா, நான் வசந்த்"
 
வசந்த் கோபமாகத் தெரிந்தான்.
 
"என்னடா கோபம்" என்றேன்.
 
"ஏமாத்திட்டாங்கடா.. இலவச போனுன்னு சொன்னாங்களேன்னு பழைசை சரண்டர் பண்ணிட்டு புதுசா இதை வாங்கினேன்"
 
"என்ன பிரச்சினை?" கேட்பதற்குள் அவன் உருவம் திரையிலிருந்து அகன்று
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்" என்றது அ உ க மு க தலைவர் உருவம்.
 
"இதைத்தாண்டா சொல்ல வந்தேன். ஏமாத்திட்டானுங்க. காசு கொடுத்தாலும் இந்த மாதிரி நடுவுலே வந்தெல்லாம் கொல்லாத போன் தான் வேணும்"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"அட் நீ வேற.. நண்பர்கள் பேசும்போது குறுக்கே பேசாதேடா" என்றேன்.
 
"அய்யோ அப்படியெல்லாம் எதுவும் பேசாதே. வாய்ஸ் ரெகார்ட் பண்ணி வீட்டுக்கு தொண்டர்களை அனுப்பிடுவாங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"அப்படிக்கூடவா செய்வாங்க?"
 
"அதையும் செய்வாங்க, அதுக்கு மேலேயும் செய்வாங்க! சரி ஓட்டு போட்டுட்டயா?"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"இது வேற நடுவுலே தொண தொணன்னுகிட்டு - இன்னும் 12 ஹவர் இருக்கே"
 
"சரிதான் - நீ லேட் பண்ணா யாராவது ஹேக்கர் வந்து போட்டுட்டு போயிடுவான்"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"மொதல்ல போனை மாத்து. ஹேக்கருங்க கூட நுழைய முடியுமா என்ன? பாஸ்வேர்டு இல்லாம முடியுமா?"
 
"அதெல்லாம் செர்வர்லேயே டிரிக் பண்ணிடுவாங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"நீ யாருக்குப் போட்டே"
 
" வேற யாருக்கு? என் ஜாதிக்காரன் வக்கீல் முன்னேற்றக்கழகத்துக்கு கூட கூட்டணி வச்சிருக்க அ உ க மு கவுக்குதான்"
 
"ஏண்டா இப்பவும் ஜாதி பாத்துப் போடறீங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"பின்ன வேற யாருப்பா எங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருவாங்க? எல்லா வேலையும்  இந்த சாப்ட்வேர் பசங்களுக்கே போகுது. கேட்டா மெரிட்டுன்றாங்க! - உனக்கும்தான் சொல்றேன் - க மு க காரனுங்க எஞ்சினியர்களையும் நிம்மதியா இருக்க உட மாட்டானுங்க. ."
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
எனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. "அதுக்காக இப்பவும் நீ ஜாதி பாக்கறதெல்லாம் சரியில்லை"
 
"அத்தை உடுறா. புதுசா நடிகன் காமேஷ் ஆரம்பிச்சிருக்கானே கட்சி - அதுக்கு என்ன சான்ஸு?"
 
"அவனுக்குப் பொழைக்கவே"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"தெரியலடா. அவன் அவன் பெரிய பெரிய மேட்டர்லாம் இலவசமாத் தரேன்றபோது இவன் லாப்டாப் தரேன்றான். யார் அதுக்குப்போயி ஓட்டுப்போடப்போறாங்க"
 
"சரி, க மு க தலைவருக்கு எக்ஸ்பயரி டேட் வந்தாச்சுல்லே, யாரை அவர் பதவிலே உக்கார வைக்கப்போறாராம்?"
 
"க மு க, அ உ க மு க பத்தி இந்தப்போன்லே பேச வேணாம்.. ரிஸ்க்கு"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"நான் கால் பண்ணட்டுமா?"
 
"இன்னும் ரெண்டு நிமிஷத்துக்குள்ள பண்ணு"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர் - இந்த உரையாடலில் ஆட்சேபகரமான எந்தச்சொல்லாடலும் இல்லாததால் எங்கள் தகவல் தொகுப்பிலிருந்து நீக்கப்படுகிறது. மறவாதீர் அ உ க மு க." 
 
இவன் சொல்வதும் சரிதான். தாமதம் செய்யாமல் உடனே ஓட்டுப்போட்டுவிட வேண்டும்.
 
என் வாகனத்தின் எஞ்சினுக்கு உயிர் கொடுத்தேன். ஓட்டுப்போட்டுவிட்டு வந்து வேலையைத் தொடரலாம். கஸ்டமர் திட்டினால் சகித்துக் கொள்ளலாம் - அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்வது முடியாது.
 
எஞ்சினின் குரல் கேட்டது - "எங்கே செல்ல?"
 
கைப்பேசியிலிருந்து வாக்குச்சாவடியின் GPS மேப்பின் லின்க்கைக் கொடுத்தேன்.
 
யாருக்கு ஓட்டுப்போட? குழப்பம் தலைதூக்கியது.
 
பொ மு க (பொறியாளர் முன்னேற்றக்கழகம்) க மு க (கணிமை முன்னேற்றக்கழகம்) வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. க மு க தலைவர் ஏராளமாக இலவசம் அறிவித்திருந்தாலும் எதாலும் எனக்குப் பிரயோஜனம் இல்லை. அதே நிலைதான் அ உ க மு க விலும். (அகில உலக க மு க) எந்த இலவசமும் எனக்கு உதவாது.
 
எஞ்சின் கிளம்பி சீராக ஓடுகிறது. "தமிழ்க்கணிமை அமைக்கப் பாடுபடும் க மு கவுக்கே உங்கள் ஓட்டு என்றார் வாகனத்திரையில் க மு க தலைவர்.
 
தமிழ்க்கணிமையை வைத்தே இன்னும் எத்தனை நாள் ஓட்டு வாங்குவார் இவர்? 40 ஆண்டுகளாக நாட்டை ஏமாற்றியது போதாதா? இதே முழக்கத்தை வார்த்தைகள் மட்டுமே மாற்றி அ உ க மு க தலைவர் சொல்கிறார். இந்த இருவரைத் தவிர வேறு வழி இல்லையா?
 
வசந்துக்கு போன் போட்டேன்.
 
"ஆமாம், 'இருவருக்குமே எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை'ன்னு ஓட்டு போட முடியுமா?"
 
"அது இந்த எலெக்ஷன்லே முடியாது. அடுத்த எலக்ஷன்லே செய்றதா சொல்லி இருக்காங்க"
 
"எதாவது DMD உபயோகப்படுத்தலாமா?" DMD என்பது Decision Making Device.
 
"பூத்துக்குள்ளே உபயோகப்படுத்த முடியாது. வெளியவே யூஸ் பண்ணிடு"
 
என் கைப்பேசியிலிருந்து DMD நிரலைத் துவங்கினேன்.
 
அது கேள்விகள் கேட்க ஆரம்பித்தது.
 
"உங்கள் வயது என்ன?"
 
"உங்கள் ஜாதி என்ன?"
 
"உங்கள் வருமானம் என்ன"
 
இப்படி 20 கேள்விகள் கேட்ட பின்,
 
"பொதுவாக உங்கள் ஜாதியைச் சேர்ந்த, உங்கள் வயது வருமானத்துடன் ஒத்துப்போகும் பெரும்பான்மையோனாரின் வாக்கு விவரம் இன்னும் சற்று நேரத்தில் இத்திரையில் காட்டப்படும்"
 
0% ல் ஆரம்பித்து பொறுமையாக பச்சை நிறமாகிக்கொண்டிருந்தது.
 
40% ஐத் தாண்டும்முன் வாக்குச்சாவடி வந்துவிட்டது.
 
மெடல் டிடக்டரைத் தாண்டி உள்ளே சென்றபோது காவலர் -"யோவ் - அந்த செல்போனை இங்கே வச்சுட்டுப் போ" என்றான். இவர்களுக்கு மரியாதையே தெரியாதா?
 
DMD முடிவு தெரியாமலே உள்ளே சென்றேன், வாக்களித்தேன்.
 
திரும்பி வருகையில் மீண்டும் வசந்தை அழைத்து விவரம் சொன்னேன்.
 
"அப்போ, DMD சொன்ன மாதிரி ஓட்டுப் போடலையா?"
 
"எங்கே - அதுக்குள்ளேதான் உள்ளே போயிட்டேனே."
 
"அப்புறம் எப்படிதான் முடிவு பண்ணே"
 
"ஒரு பழைய காலத்து DMD யை யூஸ் செஞ்சுதான்.."
 
"அது என்னடா பழைய காலத்து DMD?"
 
"கையிலே ஒரு காயின் இருந்துது.. பூவா தலையா போட்டுப் பாத்தேன்"
 
__________________________

May 8, 2006

என்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்? (08 May 06)

தேர்தல் முடிவுகளைத் தீர்ப்புகள் (verdict) என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போல எடுத்துக்கொண்டால், தமிழக சட்டசபைத் தேர்தல்களின் முடிவை வைத்து எதற்கான தீர்ப்பு என்று முடிவுக்கு வர இயலுமா?
 
சமீப காலத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால் 1996ல் ஊழலுக்கு எதிரான தீர்ப்பு என்றும் 2001ல் மாற்றத்துக்கு ஆதரவான தீர்ப்பு என்றும் சுலபமாகவே சொல்ல முடிந்தது.
 
இன்றைய தேர்தல் முடிவை வைத்து என்ன சொல்ல முடியும்?
 
ஒன்றும் சொல்ல முடியாது என்பதுதான் நிஜம்.
 
1.வெற்றி வாய்ப்புள்ள இரு அணிகளுமே ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவை. - எது குறைவு என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதையே முடிவுகள் உணர்த்துமே அன்றி, ஜெயித்தவருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது.
 
2.எல்லாப்பக்கங்களிலும் நிறைவேற்றமுடியாது என மக்களாலேயே உணரப்பட்ட வாக்குறுதிகள், ஒன்றை ஒன்று மிஞ்சும் இலவசங்கள் இருப்பதால் ஒரு அணியின் வெற்றி இலவசத்திட்டங்களின் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பில்லை.
 
3. மாற்றத்துக்கு மக்கள் ஆதரவளித்ததாகக் கூறிவிட முடியாது. பாராளுமன்றத்தேர்தல்களில் மாற்றத்தை விரும்பியவர்கள், வாக்குறுதிகளை நம்பியவர்கள் இரண்டு ஆண்டுகளில் செய்தது / செய்யத்தவறியதைப் பார்க்கையில், மாற்றத்தை விரும்பும் வாக்குகள் இரண்டு பக்கமும் விழலாம் - விஜயகாந்துக்கும் விழலாம்.
 
4. ஜாதி ரீதியிலான பிரசாரத்துக்கு ஆதரவு / எதிர்ப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. இரு பக்கங்களிலும் ஜாதிக்கட்சிகளின் ஆதரவு இருப்பதால், எதிர்ப்பவர்கள் எந்தப்பக்கம் போக முடியும்?
 
5. அணிமாறிய கட்சிகள் - இரண்டு அணியிலும் ஏராளம். வைகோ அணி மாறியது கோடிக்காக, டி ஆர் அணி மாறியது கொள்கைக்காக என்று யாரும் நம்பத்தயாரில்லை. இதற்கான தீர்ப்பும் இந்தத் தேர்தலில் கிடைக்கப்போவதில்லை.
 
6, சினிமாக்கவர்ச்சிக்கு ஆதரவு / எதிர்ப்பு - எல்லா அணிகளிலுமே இருக்கும் சினிமாக்கவர்ச்சி, இந்தத் தேர்தல் முடிவின் மூலம், எதையும் அறியவிடாமல் செய்து விடுகிறது,
 
ஆனால், சில விஷயங்களை இத்தேர்தல் மூலம் அறிய முடியும்:
 
குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு / எதிர்ப்பின்மை - வாரிசு அரசியலில் குற்றம் சாட்டப்படும் அனைத்துக்கட்சிகளும் தி மு க அணியில் குவிந்திருப்பதால், இந்த அம்சத்தைப்பற்றிய மக்கள் கருத்து தெரியப்படலாம். தயாநிதி மாறனை அமைச்சராக்கிய போதே ஒலித்திருக்க வேண்டிய குரல்கள், கலைஞரின் திசை திருப்பும் சாமர்த்தியத்தால் அடக்கப்பட்டு விட்டிருந்தாலும், பெரும்பாலும் எதிர்க்கட்சியினர் எதிர்க்கும் முக்கிய நபராக அவரை ஆக்கியிருக்கிறார்கள். மு க ஸ்டாலின் பல் வருஷம் கஷ்டப்பட்டும் அடைய முடிந்திராத ஒளிவட்டத்தை மாறன் குடும்பம் சுலபமாக அடைந்திருப்பது, மக்கள் மனத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை தெரிவிக்கலாம்.
 
தொலைக்காட்சி தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து பலகாலம் ஆனாலும், தொலைக்காட்சியை முன்வைத்து ஆதரவு எதிர்ப்பு வாதங்கள் இந்தத் தேர்தலில் அதிகம். இலவசத் தொலைக்காட்சியில் தொடங்கி, கேபிள் கட்டணங்கள், டி டி எச் முறைகேடுகள் என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதால் கலைஞரா - ஜெயலலிதாவா என்றிருந்த கேள்வி, சன் டிவியா ஜெயாடிவியா என்று மாறி இருக்கிறது.  இன்னும் சொல்லப்போனால், சன் டிவியை மக்கள் நம்புகிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம். சன் டிவி கூட்டணிக்கு பலமா பலவீனமா என்று ஒரு பதிவு முன்பு எழுதியிருந்தேன்.
 
விஜயகாந்த் - இந்தத் தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் - எவ்வளவாக இருந்தாலும் கவனிக்கத் தக்கது. அவருக்குக் கிடைக்கும் வாக்குகளில் ஒரு பகுதி சினிமாக்கவர்ச்சியாக இருந்தாலும், பெரும்பகுதி மாற்றத்தை விரும்புவர்களாக இருக்க சாத்தியம் உண்டு. ஜெயிக்கும் கட்சிக்குப் போடாத ஓட்டு வீண் என்ற எண்ணம் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு, ஜெயிக்கும் சாத்தியம் உள்ள மாற்றமாக விஜயகாந்த் தென்பட வாய்ப்பிருப்பதால், அவருக்கு விழும் வாக்குகள் கழக ஆட்சிகளில் இருந்து  மாற்றம் தேடுபவரின் வாக்குகளாக இருக்கக்கூடும்.  (அவரால் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கேள்விக்குறி)
 
49ஓ வுக்கு விழும் வாக்குகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஞாநியின் ஓ போடு இயக்கத்தின் பிரசாரத்தின் வாயிலாக, இந்தத் தேர்தலில் 49ஓவிற்கு சில அதிக வாக்குகள் விழக்கூடும். ஆனால் அவை அரசியல் கட்சிகளின் சிந்தனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற அவருடைய வாதத்தில் எனக்கு ஏற்பு இல்லை. ஒருவேளை யாரெல்லாம் 49ஓ போடுகிறார்களோ அவர்கள் ஓட்டை அடுத்த தேர்தலில் காலையிலேயே போட்டுவிடவேண்டும் என்று எல்லாக்கட்சிகளும் சிந்திக்கலாம்:-) 49ஓ ஒரு பட்டனாக இருந்திருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
 
கட்சி சாராத எல்லா மக்களும், குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்; அவர்கள்தான் கூட்டணி பலங்களையும் மீறி பெரும்பான்மையாகவும் இருப்பதால், அந்தக்குழப்பம் தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும். ஆனால், தொங்கு சட்டசபையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி பலத்தைப்போலவே, குழப்பமும் சமமாக எல்லாத் தொகுதிகளிலும் விரவிக்கிடப்பதால், குழப்பத்தின் பலனை ஒரு அணியே கூட அறுவடை செய்ய முடியக்கூடும்.
 
எது எப்படி இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்ப்பாக எதையும் தந்துவிடப்போவதில்லை என்றே நான் நினைக்கிறேன். 

May 7, 2006

தேர் நிலைக்கு வரட்டும் (07May06)

இன்னும் மிஞ்சிப்போனால் ஐந்து நாள், தேர்தல் சமாசாரங்கள் மூட்டை கட்டப்படும்.
 
ஆனால், பிறகும் நாம் ஆட்டத்தில்தான் இருப்போம், தேர்தல் அல்லாத அரசியல் அல்லாத பதிவுகளை இட்டுக்கொண்டு. (அப்பாடா எனச் சிலர் பெருமூச்சு விடுவது தெரிகிறது)
 
அந்த மாற்றத்துக்கு என்னைத் தயார் படுத்திக்கொள்ள வெள்ளோட்டமாய் இந்தப்பதிவு.
 
முத்துவின் கனவு காணும வாழ்க்கை எல்லாம்... பதிவில் பின்னூட்டமாக இந்தக்கவிதையைப் போட்டிருந்தேன்.
 
சில பின்னணித் தகவல்களையும் கூறி, தனிப்பதிவாக உயர்த்தினால் இன்னும் சற்றுக் கவனம் பெறும் என்பதால் இந்தப்பதிவு.
 
இப்போது, கீதாவும் ஜெர்மன் முத்துவும், நாமக்கல் சிபியும், தருமியும் என் படிமக்(?)கவிதையைப் படித்து, என் மனநிலையைப்பற்றித் தீவிர சந்தேகம் கொண்டிருப்பதால், நான் பொறவி படிமக்கவிஞன் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் இதை தற்போது வெளியிடுகிறேன்,
 
நானும் ஒன்றும் பிறவி கவிப்பகைவன் அல்ல - கவிதை என்ற பெயரில் வெளிவரும் வார்த்தை ஜாலங்கள், மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள், பார்வையாளனுக்குப் புரிவதைப்பற்றிக் கவலையே படாத சொல்லாடல்கள் - இவற்றையே கண்டு சுணங்குகிறேன் - கவிப்பகைவனும் அப்படித்தான் என்பது அவர் பதிவு வாயிலாகத் தெரிகிறது.
 
இந்தக்கவிதை (உங்கள் தீர்ப்புக்குப் பிறகு தேவைப்பட்டால் கவிதை என்பதைத் திருத்திவிடுகிறேன்:-)) எழுதியது 16 வருடங்களுக்கு முன்பு. எழுதும்போது வைத்த தலைப்பு - நானும் என் இரண்டு உலகங்களும் (பாத்தீங்களா அப்பவே இந்த உம் போடறதை ஆரம்பிச்சிட்டேன்.)
 
பீஹாரில் வேலைக்குச் சேர்ந்து, Project Siteக்கு தினமும் போக ஆறு கிமீ, வர ஆறு கிமீ என்று திணிக்கப்பட்ட உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது. சத்தியமாக அப்போது நவீன கவிதை, படிமக்கவிதை லொட்டு லொசுக்கு எல்லாம் எனக்குத் தெரியாது. (இப்போதும் தெரியாது என்பது வேறு கதை).
 
வளர்த்துவானேன், படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
 
நானும் என் இரண்டு உலகங்களும்
நாட்டைத் திருத்த
சட்டங்கள் செய்ததும்
விடியும் பொழுது.

கிளம்பும் பரபரப்பில்
சற்று ஓய்வு.

வெற்றியை எட்டியவனுடன்
எதிர்ப்பவனின் தோல்வியைப்
பேசி நடப்போம் வேலைக்கு.

யதார்த்தத்தின் பரிச்சயம் சற்று
வேலை நேரத்தில்.
நோபல் எழுத்தாளனும்
நோபாலில் சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேனும்
உடன்வரத் திரும்புவோம்.

அறைக்கதவடியில்
செய்தித்தாள்
என் சாதனைகளை
சாதித்தவனைப்பாராட்டும்.

நனவை மறக்க
மீண்டும் இரண்டாம் உலகில்
நான்.

May 6, 2006

மு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)

இந்தத் தலைப்பைப்பார்த்த உடன் உங்களுக்கு என்ன தோன்றியது?
 
அரை செகண்டு ஆச்சரியம், கால் செகண்டு அவநம்பிக்கை, அரைக்கால் செகண்டு புன்னகை..
 
ஒரு செகண்டுக்குப் பிறகு அடுத்த வேலை! இல்லையா?
 
சிவகாமியின் சபதம் நாகநந்தி போல, கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் ஏற்றப்பட்டு, எப்படிப்பட்ட விஷத்தையும் தாங்கும் மனோபாவத்துக்கு அனைவரும் வந்துவிட்ட அவலம், ஒரு செகண்டு முடிந்ததும் எப்படிப்பட்ட அதிர்ச்சியையும் நம்மால் மறக்கவும் ஏற்கவும் வைக்கிறது.
 
அதே நேரத்தில், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு, நாட்கள் யோசித்தும் எந்த உறுதியான பதிலுக்கும் வர முடியாமல் போகவும் வைக்கிறது.
 
நான் நடுநிலைவியாதியாக இல்லாததன் இழப்பும் பெரியதாகத் தெரிகிறது:-)
 
நாலு கிராம் தங்கத்திலும், இலவச கம்ப்யூட்டர்களிலும், குறைந்த விலைக் கேபிளிலும் தெரியாத ஊழல் சாத்தியங்கள், ஏமாற்று சாத்தியங்கள், கலர் டிவியிலும், காஸ் அடுப்பிலும் மட்டுமே சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.
 
நேற்றுவரை இகழ்பாடி, இன்று புகழ்பாடும் இன்பத்தமிழன், டி ராஜேந்தர் ஆகியோர் வந்ததற்குக் காரணம் கேட்காமல், போனவர்கள் அனைவரும் கோடிகளுக்காகத் தான் போனார்கள் என்று இன்னும் சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.
 
வளர்ப்புக் குடும்பம் சில நடுநிலைவியாதிகளுக்குக் குடும்ப அரசியலாகத் தெரிவதில்லை.
 
ஆட்சி அடைந்தால் யாருக்கு மட்டுமே நன்மை என்று சில கண்மணிகளுக்குத் தெரிவதில்லை.
 
வெள்ளம் வந்ததற்கு நிவாரணம் கொடுத்தது சிலரின் சாதனை. வேறு ஆட்சியாக இருந்திருந்தால் தண்ணீரில் ஊறவிட்டு வேடிக்கை பார்த்திருப்பார்களா என்ன?
 
மக்கள் எந்தக்காரணத்தால் இறந்தாலும் ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது சிலரின் கோரிக்கை. இல்லாவிட்டால் "ஞாபகம் வருதே.."
 
நம்முடைய பிரச்சினை இந்த இரண்டு வகை வியாதியாகவும் இல்லாமல் இருந்து தொலைப்பது. எல்லா எழவும் நமக்கு ஞாபகம் வருதே..
 
எட்டாம் தேதியைக் குறிவைக்கும் எந்த அரசியல்வாதியும் 12ஆம் தேதியைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 
நாற்காலியில் உட்கார்வதற்காகத்தான் வாக்குறுதி என்று ஒருவர் வெளியே சொல்லிவிட்டார் - சரி, மற்றொருவர் மட்டும் ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்?  படுக்கையில் படுக்கவா? 
 
ஏலத்தில் விலை ஏற்றுவதைப்போல வாக்குறுதிகள் பறக்கின்றன இந்தத் தேர்தலில். மக்கள் உள்பட யாரும் அவற்றை நிறைவேற்றும் சாத்தியத்தைப்பற்றிக் கனவும் காணவில்லை. அப்படியேன் ஏமாற்று வேலை?
 
கலைஞர் தன்னிடம் உள்ள அனைத்து அஸ்திரங்களையும்  - தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி ஆட்சிக்குத் தயார் நிலை, வாய்ஜால வாக்குறுதிகள், ஊடகத் திரிப்புவேலைகள் - முதலில் பயன்படுத்தி, இந்த அசிங்கத்துக்கு கோடு போட்டார், பார் புகழும் நல்லாட்சி படைத்தவர்கள் ஏன் அதைத் தொடரவேண்டும்? தேமுதிக ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே செய்த கூத்துக்களை அறியாச் சிறுவர்கள் - என்ற வகையில் மன்னித்து விடலாம்!
 
திமுக சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய இந்தத் தேர்தலை, கஷ்டமோ என்ற எண்ணத்தைக் கொண்டு வருவதற்குத்தான் இந்த பயப்பட்ட அணுகுமுறை பயன்பட்டிருக்கிறது.  கூட்டணி பலம், ஆட்சிக்கெதிரான அதிருப்திகள், மத்திய மாநில நல்லிணக்கம் ஆகியவற்றை மட்டும் நம்பாமல் எப்பாடு பட்டேனும் ஆட்சிக்கு வந்துவிடவேண்டும் என்று அவர்கள் காட்டிய துடிப்பு, "வாழ்வா சாவா" பிரச்சினையில் திமுக இருப்பதையே காட்டுகிறது. "இதுதான் என் கடைசித் தேர்தல்" என்ற வெளிப்படையான அறிவிப்பு போன தேர்தல் போல இல்லாவிட்டாலும், கலைஞர் அவ்வாறே எண்ணுகிறார் என்பதும், இதை விட்டால் அடுத்த முறை என்பது கலைஞர் இல்லாத திமுகவால் சாத்தியப்படாது (என்று கலைஞர் எண்ணுகிறார்) என்பதாலும்தான் இப்படி முதல் ஓவரிலேயே கடைசி ஓவர் போல அடித்து ஆடுகிறார் என்றும் எண்ணத் தூண்டுகிறது.
 
இப்படிப்பட்ட நிலை அதிமுகவில் இல்லாவிட்டாலும், அவருடைய ஆசைகளைப் பலிக்க விட்டுவிடக்கூடாது என்று அவர்களும் முக்கியமான பவுலர்களை முதல் ஓவர் வீச விடுகின்றனர். கலைஞரின் பயந்த அணுகுமுறை அவர்களுக்குப் பெரிய ஆதரவாகத் தோற்றமளிக்கிறது.
 
எனவே, யார் ஜெயித்தாலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படப்போவதில்லை, அதை எதிர்க்கட்சிகள் விடப்போவதும் இல்லை. எல்லாக்கட்சிக்கும் சின்னதோ பெரியதோ ஒரு ஊடகம் இருக்கிறது, ஏமாற்றினார் முதல்வர் என்று 24 மணிநேரமும் ஒலிக்க ஒலிபெருக்கிகளும் இருக்கின்றன.
 
எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும், நிம்மதியாக இருக்கப்போவதில்லை, மற்றவர் அவரை நிம்மதியாக இருக்க விடவும் போவதில்லை. இது இந்தத் தேர்தலில் ஒரு கவனிக்கத் தகுந்த விஷயம்.
 
யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க இந்த நிலையையும் மனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.
 
இருக்கும் தெரிவுகளில், விஜயகாந்த் கட்சியை போட்டியிலிருந்து விலக்கி விடலாம். நடிகன் நாடாளக்கூடாது, பால்காரன் பாராளுமன்றம் போகக்கூடாது என்ற காரணங்களெல்லாம் இல்லை.
 
விஜயகாந்த், தன்னை கழகங்களின் நீட்சியாகவும் இன்னொரு கழகமாகவும்தான் முன்னிறுத்துகிறாரே ஒழிய, எந்த மாற்றுச்சிந்தனையும் அவரிடத்தில் காணப்படவில்லை, குடும்ப அரசியல் என்பது தேமுதிகவிலும் வெளிப்படையாகவே இருக்கிறது, கட்சியின் உள் கட்டமைப்பைப் பற்றி சரியான விவரங்கள் தெரியாததாலேயே அவர் கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை, இலவசங்களை பசு மாடு வரை விரிக்கத் தயாராக உள்ளவர் போன்ற விஷயங்கள் அவர் மீது எந்த நம்பிக்கையையும் தரவில்லை.
 
49 ஓ - ஒரு சரியான மாற்று அல்ல; யார் 49ஓ போட்டார்கள் என்பது கழகப் பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடும் சாத்தியம், ஒருவேளை 49ஓ அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கழகங்களே ஆட்சியை அமைக்கும், அவர்கள் 49ஓ வினால் திருந்துவார்கள், பாடம் பெறுவார்கள் என்ற எந்த நம்பிக்கையும் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை, முத்து (தமிழினி) சொல்வது போல இருப்பவற்றுள் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் பெரிய தவறு இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.
 
எனவே, இருப்பது திமுக அணியா, அதிமுக அணியா என்ற கேள்வி மட்டும்தான்.
 
இரண்டிற்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற வாதங்களை விட, ஏன் வாக்களிக்கக் கூடாது என்ற வாதங்களே அதிகமாய் இருப்பது தெளிவு. ஆனால், இவற்றுக்குள்தான் நமது தேர்வு இருந்தாகவேண்டியது, to get the nearest cliche,  காலத்தின் கட்டாயம்.
 
அதிமுக, கட்சியாக 182 தொகுதிகளில் போட்டியிடுவதால், சுமாரான அலைகூட அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட வழி செய்யும். ஆனால், திமுகவுக்கு ஆதரவாக பேரலை அடித்தால் மட்டுமே அறுதிப்பெரும்பான்மை பெற இயலும்.
 
யாராய் இருந்தாலும் தனித்து ஆட்சி அமைத்தால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கோ, ஊடகத்தின் ஒப்பாரிக்கோ, ஐந்து ஆண்டுகள் கவலைப்படவேண்டியதில்லை. எதையும் செய்யலாம் என்ற தைரியம் இருக்கும், அது பல தவறுகளுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.
 
எனவே, நான் இன்று வாக்களித்தால் (யாராவது விமானக் கட்டணத்தைக் கொடுத்தால்) தி மு க அணிக்கே வாக்களித்திருப்பேன், அவர்கள் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினம் என்பதால் மட்டுமே! அந்த ஆட்சி  இன்னும் இரு ஆண்டுகளில் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களினால் (நிலைமை மாறினால் அதற்கும் முன்பே கூட) சட்டசபையின் வலு மாறக்கூடும்,  காங்கிரஸும், பா ம க வும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்காது என்பதால், இப்போது போடப்படும் வாக்குக்கு நீண்ட ஆயுள் இருக்காது என்பதால் மட்டுமே.
 
மற்றபடி, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் இப்போதும் சந்தேகம் இல்லை.

May 3, 2006

நானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்

வேலை கொடுத்தவர் மேலதிகாரியாக இருந்தால் அவரிடம் விதிமுறைகளைக்காட்டித் தப்பித்திருக்கலாம்.
 
எதிரியாக இருந்திருந்தால் பொருதிருக்கலாம். இரண்டில் ஒன்று பார்த்திருக்கலாம்.
 
சமநிலைத் தோழனாக இருந்திருந்தால் புரியவைத்திருக்கலாம்.
 
ஆனால், அந்தகோ! என்ன செய்வேன்.. என்னைப்பணித்தது என் ஆசான் அல்லவா!
 
சாத்தான்குளத்து வித்தகன், அமீரகத்து ஆசான், எங்கள் கவிமடத் தலைவன் முத்துவின் கவிதையைப் பார்த்து, மக்களுக்குக் கவிபயில்விக்கும் காலம் கனிந்ததெனக் கண்டான்.  கவியின் வகையும் தொகையும் அவன் சிகைக்குள் அடக்கம்! அவன் பகைக்கு நடுங்கும்!
 
அவன் என்னைப்பணித்தான் - முத்துவின் நாய் துயரத்தில் இருக்கிறது அத்துயரை நீ ஒரு நீள்கவிதையாய் பதிவு செய் என்று.
 
ஆசானே, ஏற்கனவே உலகம் நம்மைக் கவி வெறுக்கும் பாசிச கும்பலென்று தூற்றுகிறதே, அதையும் தாங்கலாம் - அறிவுஜீவியென்று ஏளனம் செய்கிறதே - என்றேன். நான் எந்த வசையையும் ஏற்பேன் -அறிவுஜீவியென்ற வசையைத் தவிர!
 
எனினும், என் இதயத்தைக் கல்லாக்கி, குருவின் பாதாரவிந்தங்கள் பணிந்து, இக்கவியை சமர்ப்பிக்கிறேன்.
 
யாராரோ கேட்டிருக்கும் என்குரல்
 
பிரபஞ்சத்தின் மூலையின் தெருவோரத்தில்
பிறிதொரு நாள் கழித்திட்ட
குப்பைகள்
என் தினத் தூக்கத்தின்
கட்டியம் சொல்லும்.
 
என் எல்லை நானறிவேன் -
அறியாத பதர்களுக்கு
உரத்து உரைப்பேன்.
 
வெறும் சத்தத்தாலே
எங்கள் சமர்கள் முடிக்கப்படும்.
வலுக்க உரைத்தவனே வல்லான்,
குறைவாய்க் குரைத்தவன் குறுகிப்போவான்.
 
குரலே என் ஆயுதம்.
என் உணவைத் தட்டிப்பறிக்க
மெக்ஸிகோ வரைபடமாய் வாய்பிளந்து நிற்கும்
பன்றிகள் இவ்வாயுதத்தின்
வீரியத்தின் வழிதவறி ஓடும்
காட்சி உண்ட களைப்பையே கூட
தந்ததுண்டு.
 
உணரப்பட்ட கோடுகளைத் தாண்டும்
துரோகிகளுக்கும்,
புணர வேறிடம் தேடும்
ஜோடிகளுக்கும்
என் குரல் நடுக்கம் தரும்.
 
துரத்தப்பட்ட நேரங்களில்
தூரம் சென்று
எதிரி இல்லாத இடம் தரும்
இதத்தில்
திரும்பிக் குரைக்கும்
குணம் என்னிடத்தில்
இருந்ததில்லை -
 
மனிதர்கள் என்னும் மரபணுக்குழப்பம்
நடந்திடாத வரையில்.
 
வளைகுடா வேங்கை கவிதைக்கோன்ஐஸ் பினாத்தல் (இளவஞ்சிக்கு நன்றியுடன்)
 

May 1, 2006

குழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)

என் தலைமுறை மேலேயே எனக்குக் கோபம் வருகிறது.
 
மூன்று சட்டசபைத் தேர்தல்களில் ஓட்டுப்போடும் வாய்ப்பிருந்தும், ஒன்றில் மட்டுமே ஓட்டுப்போட்டிருக்கிறேன். அப்போது, எந்தக்கட்சியும் பிடிக்காமல், கைக்குக் கிடைத்த சுயேச்சைச் சின்னத்தில் குத்தினேன் (அந்த சுயேச்சை வேட்பாளர் வீட்டில் "உண்மையச் சொல்லுங்க - யாருங்க அந்த மூணாவது ஓட்டு?" என்று குழப்பம் உண்டாகி இருக்கும்:-) "ஓ" போடுவது பற்றித்தெரிந்திருந்தால் ஒருவேளை அதைப்பயன்படுத்தி இருந்திருக்கலாம் - ஆனால் அந்தக்குடும்பக் குழப்பம் தவிர்க்கப்பட்டது தவிர வேறு எதுவும் பலன் இருந்திருக்கும் என நம்ப முடியவில்லை
 
ஒருமுறை வெளியூரில் இருந்தேன் என்ற நியாயமான காரணம்.
 
ஒரு முறை கள்ள வோட்டினால் வோடுப்போட இயலாமல் திரும்பினேன். நான் போட நினைத்திருந்த கட்சிக்குதான் என் "கள்ள வோட்டும்" போடப்பட்டிருப்பதாக, வாக்குச்சாவடியில் இருந்த என் உறவினன் சொன்னதால் மனதைத் தேற்றிக்கொண்டேன்.
 
ஆனால் என் கோபம் ஓட்டுப்போடாததால் அல்ல. இந்த மூன்று சட்டசபைத் தேர்தல்களில் மாறிவரும் காட்சிகள் எதுவுமே ந்ம்பிக்கையைத் தூண்டும் விதமாக இல்லாமை.
 
படித்துக்கொண்டிருந்த காலத்தில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது சற்றுத் தொலைவில் இருந்தது. அதைப்பற்றி பல கனவுகளும் ஆசைகளும் இருந்தன.
 
கம்ப்யூட்டர்கள் நிர்வாகம் செய்யும், மக்கள் பிரச்சினைகள் தீரும், பிரிவினைகள் மறையும் என்பது போன்ற பிம்பங்களை அன்று படித்த அறிவியல் புனைகதைகள் உருவாக்கிக்கொண்டிருந்தன.
 
ஆனல், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு நிஜமான போது பழைய சிறு பிரச்சினைகள் புது வடிவம் எடுத்து பூதாகாரமாகத் தாக்க, கனவுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
 
தனிமனிதனின் பொருளாதாரமும், அறிவும் உயர்ந்திருந்தாலும், பின்னிழுக்கும் பிரச்சினைகளின் வீரியம் இன்னும் அதிகமாகவே ஆகியிருக்கிறது.
 
ஜாதி - சண்டை, பிரிவினை, பெருமிதம் அல்லது கீழ்நோக்குப்பார்வை - நிச்சயமாக நான் கனவுகண்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டு இது அல்ல. ஏன், நிலைமை இருபதாம் நூற்றாண்டைவிட மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.
 
எனக்குத்தெரிந்த அளவில் இதற்குக் காரணத்தை ஊகிக்க முயல்கிறேன்.
 
தரம் குறைந்த திரைப்படங்களே வெற்றி பெறுவதைப்பற்றி ஆதங்கப்பட்டிருந்தார் தருமி. அரசியல் சமூகப்பிரச்சினைகளுக்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
 
ஒரு வெற்றிப்படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
 
எதையும் வெல்லும் நாயகன், காதல் செய்ய நாயகி, கடைசியில் தோற்க வில்லன், இடையே பொழுதுபோக்க நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், காதல் / காம ரசம் சொட்டும் நடன் பாடல் காட்சிகள் - இவைதானே?
 
இந்த கூட்டாஞ்சோறு எப்படி உருவானது? இப்படி எல்லாம் கலந்து ஒரு படம் எடுக்கப்பட்டு வெற்றி பெற, இந்த அம்சங்களில் எதனால் வெற்றி பெற்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல், எதை விட்டாலும் தோல்வி அடைவோமோ என்ற பயத்தில் இதே காம்பினேஷனில் அடுத்த படமும் எடுக்கப்பட, அதுவும் வெற்றி பெற (எதனால் என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை) எல்லாம் கலந்ததுதான் வெற்றிக்கு வழி என முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.
 
அதேபோல, தேர்தலில் ஒரு கட்சி வெற்றிபெற என்ன தேவை?
 
போன தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு, அவர் கட்சியின் ஆட்சிமுறை, செயல்படுத்திய நலத்திட்டங்கள், எதிர்க்கட்சியின் அராஜகங்கள், மக்கள் தேவைகளை அவர் கட்சியோ எதிர்க்கட்சியோ சந்தித்த விதங்கள், அவர் சார்ந்த மதம் / ஜாதி என்று எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம் - ஆனால், சரியான ஒரு காரணம் தெரிய வார்ப்பில்லாததால், இதே கூட்டாஞ்சோறு மனோபாவம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
ஒரு தேர்தலில் கொள்கைகளைக் காட்டி வாக்கு கேட்டவர் தூக்கி எறியப்பட்டார் - எனவே, கொள்கைகள் அவுட் ஆஃப் ஃபேஷன்!
 
நாட்டு முன்னேற்றம், Feel Good Factorகள் தோல்விக்கே வழிவகுக்கும் - அதையும் தொட முடியாது.
 
Gen Next பற்றிப்பேசினால், எதிர்க்கட்சிக்காரன் சுலபமாக ஒரு இலவச XYZ திட்டத்தை அறிவித்து அனைத்து வாக்குகளையும் அள்ளி விடுவான். எனவே, அடுத்த தலைமுறை பற்றிப்பேசாமல் இருப்பதே நல்லது.
 
இப்படி எந்தப்பக்கம் போனாலும் ஒரு சரியான, காலத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிரசார உத்தியே இல்லாமல் இருப்பதால், சினிமா போலவே எல்லாம் கலந்துகட்டி அடிக்கப்படுகிறது.
 
நிச்சயமான உத்தி என நினைக்கப்படுவது - மக்கள் ஆட்டு மந்தைகள் என்ற நினைப்புத்தான் - அது உண்மையா பொய்யா என்பது எனக்கும் தெரியாது.
 
அதனால்தான் ஜாதிக்கட்சிகள், சிறுபான்மைக்குழுக்கள்,  ஒரு பிரிவு மக்களின் வாக்குக்களை  கையில்  வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிறு கட்சிகள், கூட்டணி அரித்மெட்டிக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
 
ஜாதிகள் ஒழியாமைக்கு இத அரசியல் முறையே முக்கியக்காரணம் என்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி என்பதால் வெற்றிவாய்ப்பு நிச்சயிக்கப்படுகிறது என்பதை எல்லா ஊடகங்களும் அரசியல் வாதிகளும் ஏற்கத் தொடங்கிவிட்டனர். இந்தச்சிந்தனையின் வெளிப்பாடுதான் - ஜாதிகளை ஒழிக்க வேறு என்னவற்றையெல்லாம் ஒழிக்கலாம் என்று யோசிப்பவரும் கூட, தேர்தல் வந்தவுடன் வட மாவட்டங்களில் பா ம க பலமாக உள்ளது, விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம் என்று நினைக்கிறார். (தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை). இந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் வைகோவும் விஜயகாந்த்தும் ஒரே ஜாதி என்பதல் இவர் ஓட்டை அவர் பிரிப்பார் அவர் ஓட்டை இவர் பிரிப்பார் என்று கழுகுகள் ஆரூடம் சொல்வதும்.
 
இந்தச் சிந்தனையின் தோல்வியையே நம் முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
 
மக்கள் ஆட்டு மந்தைகள் அல்ல - ஜாதி/மதம் காரணமாக மட்டும் ஓட்டு விழுவதில்லை என்பது தெளிவாகாத வரையில் இந்தச் சிந்தனைக்கும் அணுகுமுறைக்கும் விடிவு வரப்போவதில்லை.
 
ஒவ்வொரு தேர்தலிலும் போன முறையை விட அதிக ஜாதி சார்ந்த வாதங்களும் வேட்பாளர்களும் (ஜாதிக்கட்சிகள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமில்லை - மீதிக்கட்சிகளும் ஜாதி அடிப்படையில்தான் வேட்பாளரை நிர்ணயிக்கின்றன, ஜாதிக்கட்சிகளை அணைத்து ஆதரவளிக்கின்றன)  காணப்படுகின்ற அவலம் ஒழியவேண்டும் - முன்னேற்றத்தின் முதல் படி அதுவாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். 
 
குழப்பமும் உரத்த சிந்தனையும் தொடரும்...


 

blogger templates | Make Money Online