Oct 7, 2006

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா..

தமிழ்நாட்டில் கொசு ஒழிந்துவிட்டது, வியாதிகள் தீர்ந்துவிட்டது.. அட கற்பனைதாங்க.. அதைத் தொடர்ந்து

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா

சிக்குன் குனியாவைச் சிதறடித்த செம்மல் டாக்டர் கலைஞருக்கு கலையுலகம் பாராட்டு விழா..

வரும் வெள்ளி சனி ஞாயிறு, உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு நாளும் மாலை 6:30 லிருந்து 11:30 வரை.

நிகழ்ச்சியை உடன் வழங்குவோர் - எம் ஆர் கே வி வழங்கும் பாரம்பரியக் கிழிசல் பட்டு, டெக்ஸ்டான் வழங்கும் ரிவர்ஸிபிள் பனியன் ஜட்டிகள், பெரியாத்தா மசாலாவின் மட்டன் மோர்க்குழம்பு மசாலா, "மக்களாட்சிதான் வேண்டும்" மற்றும் ராங் ராஜா!

நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

கலைஞர் அவர்களே,

வட்டி கட்டி வதைபட்டு கொண்டிருந்த எங்களுக்கு வரிவிலக்கு அளித்த செம்மலே.

கொசு கடித்து கஷ்டப்பட்ட எங்களுக்கு கொசு மருந்து அளித்த கோமகனே.

சிக்கன் சாப்பிடவே கஷ்டப்பட்ட எங்களுக்கு சிக்குன் குனியாவிலிருந்து விலக்கு அளித்த வெண்ணிலவே..

நீங்கள் இன்னும் 2000 ஆண்டு வாழ வேண்டும், நீங்களே தமிழகத்தைத் தொடர்ந்து ஆளவேண்டும்.. என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால், ஆட்சி மாறும்போதெல்லாம் இரண்டு மூன்று கலைநிகழ்ச்சிகள் நடத்துவது கட்டுபடியாகவில்லை.

நடிகர் விவேக்

டெம்பரேச்சர் ஏறினாலே ஸ்ட்ரெச்சர்னு சொல்லிகிட்டு இருக்காங்க சில பேர்! மாட்டினவனெல்லாம் மலேரியா பார்ட்டி, சிக்குனவனெல்லாம் சிக்குன் குனியா பார்ட்டின்னு விளையாடிகிட்டிருந்தாங்க!

இப்போ எங்க வீட்டுக் கொசு கூட எங்க பேச்சு கேக்குது. பசு மாதிரி அடங்கிக்கிடக்குது. இந்தக்காலத்திலயும் வியாதி.. மலேரியா..சிக்குன் குனியான்னு சொல்றவனையெல்லாம் ஆயிரம் கலைஞர் வந்தாலும் திருத்த முடியாதுடா!

கவிப்பேரரசு வைரமுத்து

கடிப்பது கொசுக்களில்
பெண்ணினம் மட்டும்தான்
கொசுக்கள் அழிந்ததைப்
பார்த்து இன்று
துடிப்பதும்
பெண்ணொருவர் மட்டும்தான்.

உபாதைகள்
தோன்றலும் மறைதலும்
விஞ்ஞானம் கண்டவை.
ஒரு மாதத்தில்
வியாதியை அழித்தது
உன் நிர்வாக ஞானம் மட்டுமே
கண்டது..

கவியரசர் வாலி

சிக்கனமாய் இருக்கச்
சொன்னது ஈரோட்டுக் கிழவன்
சிக்குன் குனியாவை அழித்தது
இந்த திருவாரூர் உழவன்.

அழிந்தது கொசு
ஆனந்தப்படுவது இந்தச் சிசு.

இனி உள்ளாட்சியும் உன்
ஃபுல்-ஆட்சிதான்.

நடிகர் கமலஹாசன்

கொசுவை ஒழித்தது நல்ல விஷயம்தான். ஆனால் அதைவிடவும் பெரிய பிரச்சினைகள் திரை உலகை ஆக்கிரமணம் செய்து கொண்டிருக்கிறது என்கிற விஷயம் - செய்தின்னும் சொல்லலாம்..கலைஞருக்குத் தெரியாததல்ல - அவரை தமிழ்நாடே முதல்வராய்க் கொண்டாடிக்கொண்டிருந்தாலும் அவர் முதலில் கலஞர் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை..

அகாடமி அவார்டுகள் அமெரிக்கப் படங்களுக்குத் தந்தாலும் அதில் தமிழனின் பங்களிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும். உலகத்தரத்துக்கு ஏற்கனவே தமிழ்ப்படங்களுக்கு அரசு விருது வழங்கினாலும் அதில் வேற்று நாட்டுப்படங்களுக்கு விருது வழங்கப்படுவதில்லை. எனவே, இனிமேல், தமிழில் சிறந்த படமாக "தாலி காத்த காளி அம்மன்" -ஐத் தேர்ந்தெடுக்கையில், கூடவே அயல்நாட்டுப்பட வரிசையில் "ஷிண்ட்லர்ஸ் லிஸ்டை"யோ "பைசைக்கிள் தீவ்ஸை"யோ தேர்ந்தெடுத்து நம் விருதுகளை உலகத்தரமாக்கவேண்டும் என ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோரிக்கை வைப்பது ஒரு சக நடிகனாக, சக மனிதனாக, சக கடவுளாக எனக்கிருக்கும் உரிமை யாருக்கும் குறைந்ததல்ல என்று ஓங்கி உரத்தே சொல்லுவேன்.

நடிகர் இயக்குநர் பாக்யராஜ்

இப்படித்தான் பாருங்க, போடி பக்கத்துலே ஒரு கிராமத்துலே, ஒரு வயசாளிகிட்டே பேசிகிட்டிருந்தேன். எதார்த்தமாத்தான் பேசிக்கிட்டிருந்தவர், பொண்டாட்டிகிட்டே திரும்பி "கொசுமருந்து வாங்கியாரட்டுமா"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர் சம்சாரம் "ஏழு கழுதை வயசு ஆவுது, இப்போ கொசு மருந்து ஒண்ணுதான் குறைச்சலா"ன்னு கேட்டாங்க! அவருகிட்டே "என்ன, உங்க சம்சாரம் கொசு மருந்துன்னா கோவப்படுறாங்க?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு, "கொசு மருந்து மட்டும் இல்லாட்டி, இந்தியாவோட ஜனத்தொகை எப்போவோ 200 கோடியைத் தாண்டியில்ல போயிருக்கும்?"னாரு.

இப்போ தமிழ்நாட்டுலே கொசுவே இல்லே. ஆனா சுகாதார நிலையத்துலே வேற ஒரு சமாச்சாரம் ஒரு ரூபாய்க்கு மூணுன்னு தராங்க! ஜனத்தொகைய கூட்டிபுடாதீங்க சாமிங்களா!

நடிகர் இயக்குநர் பார்த்திபன்

கலைஞர் அவர்கள் ஒரு பொறுக்கி (பறந்து வரும் கல்லிலிருந்து தப்பித்த் வண்ணம்) - பல இலக்கியங்களிலுருந்தும் முத்துக்களைப் பொறுக்கி நமக்குத் தருபவர்னு சொல்ல வந்தேங்க!

ஒரு கொசுவே கலைஞர் பற்றிப் பாடிய கவிதைக்கிறுக்கலை அதுக்கே தெரியாம ரெகார்டு பண்ணிகிட்டு வந்தேன். கேளுங்க!

எங்கள்
ரி
திரி
எதிரி
நீ.

மக்களுக்கோ
பன் -
நண்பன்!

ஜனங்களுக்கு
வியாதியைக் கொடுக்கும்
கொசுக்களுக்கு
வியாதி கொடுத்து
வீட்டில்
முடங்கவைத்த
கலைஞருக்கு

மக்கள் சார்பில் ஒரு ஜே -- சாரி.. ஓ!

நடிகர் ரஜினிகாந்த்

ஒரு பெரிய மகானைச் சந்திச்சு பேசிகிட்டிருந்தேன் - "அஸ்வம் வதம் ஜகத் புண்யம்" னு ஒரு அற்புதமான மந்திரத்தை சொன்னாரு.

ஒரு கிராமத்துலே, தாத்தா, அப்பா, பேரன் எல்லாரும் இருந்தாங்க. நல்ல பெரிய குடும்பம். எல்லா வசதிகளோடும் பகவான் அருளோடவும் இருந்த குடும்பம். ஒரு முறை அந்தக் குடும்பத்தை எதிரிகள் திட்ட ஆரம்பிச்சாங்க.

திட்டறவன் எதிரியா இருந்தா பரவாயில்லை. நண்பனா இருந்தாலும் பொறுத்துக்கலாம். கொசுவெல்லாம் கடிச்சா.. இது நாட்டுக்கு நல்லதா சொல்லுங்க!

ஆனா, கண்ணா, இந்தக்கதைய இனிமே தமிழ்நாட்டுலே சொல்ல முடியாது. ஏன்னா, கொசுவே இல்லாத ஊர்லே எப்படிச் சொல்றது?

கலைஞர் ஏற்புரை

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அவர்களே, உங்கள் கஷ்டம் எனக்குத் தெரியாததல்ல, நானே முதலில் ஒரு தயாரிப்பாளர்தான்.

உங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக தமிழில் படம் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு என அறிவிக்கிறேன். நேரு உள்விளையாட்டரங்கை முன்பதிவு செய்வதற்கு கலைத்துறையினருக்கு முன்னுரிமை அளிக்கச் சொல்கிறேன்.

தம்பி விவேக் அவர்களே, ஆயிரம் கலைஞர் வேண்டாம், நான் ஒருவனே போதும், இந்நாட்டை திருத்தாமல் எனக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, பெண்ணினம் கடித்தது என்றுதானே தமிழினம் என்னைத் தேர்ந்தெடுத்தது.. கடித்த கொசுவை ஒருமுறை அடித்தால் போதாது. இன்னொரு முறை அடிக்கும் வாய்ப்பும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கவியரசர் வாலி அவர்களே, இது ஃபுல்லாக ஐந்தாண்டும் மேலும் ஆளும் ஆட்சி.. மக்கள் ஃபுல்லாக அடிக்கும் ஆட்சி அல்ல!

கலைஞானி கமலஹாசன் அவர்களே, நல்ல ஆலோசனை, உடனடியாகவே ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல், தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகளோடு "சேரப்பெருலாதன் முதுகுடுமிப் பெருவழுதி" விருது ஒன்று உருவாக்கப்பட்டு உலகப்படங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்.

பாக்யராஜ் அவர்கள் என்னைத் திட்டுகிறாரா வாழ்த்துகிறாரா என்றே தெரியவில்லை. மக்கள் வாழ கொசுவை ஒழித்தால் மக்கள்தொகை வளரும் எனப் பயமுறுத்துகிறாரே..

தம்பி பார்த்திபனுக்கு கவிதையாகவே பதிலளிக்கிறேன்.

கொசுவும் ஒழியும்,
பசுவும் தணியும்..
மக்கள் ஒழிக்கவேண்டியதை
ஒழித்தால்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு மட்டுமே புரியும் வகையில் சொன்னது எனக்குப் புரிந்துவிட்டது. தமிழ் மக்கள் அறிவார்கள், அந்தப்பெரிய குடும்பத்தைத் திட்டுவது பலரின் பொழுதுபோக்காய் இருந்தது ஒரு காலம், காக்கைக் கூட்டமும் திசை திரும்பியது இந்தக்காலம்.

ஆடலால் என்னை மகிழ்வித்த நமீதா, ரகசியா, திரிஷா ஆகியோருக்கும் என் நன்றி.

_____________________________________________________________________

பி கு: சன் டிவியில் தொடர்ந்து தாக்கும் கலையுலகப்பாராட்டு விழாக்களால் நொந்து போயிருந்த எனக்கு இட்லிவடையில் இந்தப்பதிவில் சிறில் அலெக்ஸின் இந்தப்பின்னூட்டம் நிஜமாவே வரவைத்த சிரிப்பை விரித்தேன். இந்தப்பதிவு தன்னைத் தானே எழுதிக்கொண்டது:-))

39 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ரசித்தேன்.

சிறில் அலெக்ஸ் said...

வாவ்.. சுரேஷ். இவ்வளவுதூரம் யோசிக்கல. ரெம்ப ரெம்ப அருமையா எழுதியிருக்கீங்க. அதெப்படி அப்படியே அந்த ஆள் பேசுறது மாதிரியே எழுதுறீங்க?

Really great stuff.

சிறில் அலெக்ஸ் said...

சின்ன சந்தேகம் எப்படி அந்த பின்னூட்டத்துக்கு நேரடி சுட்டி கொடுக்குறீங்க?

இலவசக்கொத்தனார் said...

அதுதான் உங்க அட்லாஸ் மாதம் முடிஞ்சு போச்சே, இன்னும் என்ன அடிவாங்கற பதிவா போட்டுக்கிட்டு? பேசாம வந்து வெண்பா வடிக்கிற வழியை பாரும்.

பெத்தராயுடு said...

//பி கு: சன் டிவியில் தொடர்ந்து தாக்கும் கலையுலகப்பாராட்டு விழாக்களால் நொந்து போயிருந்த எனக்கு இட்லிவடையில் இந்தப்பதிவில் சிறில் அலெக்ஸின் இந்தப்பின்னூட்டம் நிஜமாவே வரவைத்த சிரிப்பை விரித்தேன். இந்தப்பதிவு தன்னைத் தானே எழுதிக்கொண்டது :-))

//

சூப்பர் லொள்ளு :))))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பரணீ

நன்றி சிறில்.. இந்தப்பதிவுக்கு நீங்களும் ஷேர் ஹோல்டர். (இலவசம் சொல்ற மாதிரி யாராவது அடிக்க வந்தா மட்டும்).

பின்னூட்டத்துக்கு பக்கத்திலேயே கமெண்ட் லிங் னு ஒன்னு இருக்கும். அதைத்தான் கொடுக்கறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

நன்றி இல்லை! பின்னே..வந்ததும் வந்தீங்க, பதிவைப்பத்தி ஒண்ணும் சொல்லாம வெண்பாவே குறியா இருக்கீங்க! அதான் நாளைக்கு எழுதறேன்னு சொல்றேனே..

பெத்தராயுடு, நன்றி.

இலவசக்கொத்தனார் said...

//அதுதான் உங்க அட்லாஸ் மாதம் முடிஞ்சு போச்சே, இன்னும் என்ன அடிவாங்கற பதிவா போட்டுக்கிட்டு?//

இது என்ன உம்ம பதிவைப் பத்தி பேசாம என் பதிவைப் பத்தியா பேசினேன்?

அதான் எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லறாங்களே. நான் மட்டும் என்ன நல்லா இல்லைன்னா சொல்லப் போறேன். :)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸ்,

இப்போ பிடிங்க நன்றியை! வாய்க்குள்ள விரலை விட்டு பிடுங்க வேண்டியிருக்கு:-(

bala said...

பிரமாதம்..

லொள்ளு சபா பிச்சை வாங்கணும்.


பாலா

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாலா.

இலவசக்கொத்தனார் said...

//இப்போ பிடிங்க நன்றியை! வாய்க்குள்ள விரலை விட்டு பிடுங்க வேண்டியிருக்கு:-(//

பார்த்துங்க ஏற்கனவே தமிழ்மணத்தில் எழுதறதையே வாந்தின்னு சொல்லறாங்க நிறையா பேரு, நீங்க வேற இந்த மாதிரி விரலை எல்லாம் விட்டீங்கன்னா நான் பொறுப்பில்லை. ஆமா!

enRenRum-anbudan.BALA said...

Suresh,

I will read this post leisurely and then get back, wait :)

enRenRum-anbudan.BALA said...

FYI, http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html#comments

தகடூர் கோபி(Gopi) said...

:-)))))) அருமை.

//இந்தப்பதிவு தன்னைத் தானே எழுதிக்கொண்டது:-))//
இது அனுபவச் சிதறல்களா? அடங்குடா மவனேயா?

:-)

கதிர் said...

thirumbavum form ku vanthuttingka :))

kalakal post

பினாத்தல் சுரேஷ் said...

பாலா,

பொறுமையாவே படிங்க:-)

உங்கப்பதிவு மேட்டர் நம்ம ஏரியா கிடையாதே சார்:-))

கோபி,

தன்னைத்தானே எழுதிக்கொண்டது - அனுபவத்தால்தான்:-)) இதைச் சொல்லும்போதுதான் அடங்குடா மவனே எந்திரிச்சுவான்!

நன்றி தம்பி.. கொஞ்ச நாளா பார்ம்லே இல்லேன்னு சொல்றீங்க:-)) நிஜம்தான்.

பினாத்தல் சுரேஷ் said...

this post has been created by a blog administrator to impose pinnuuttak kayamai

பினாத்தல் சுரேஷ் said...

this post has been created by a blog administrator to impose pinnuuttak kayamai

rv said...

:))

விழாவ பார்க்கிறீரீங்களா பெனாத்தலார்? அதப்பத்தி விரிவாவே ஒரு பதிவு போடுங்களேன்.

கூழைக்கும்பிடு எல்லாரும் குனிஞ்சு போடுவாங்க. இந்தாளுங்க பொக்லைன் வச்சு தோண்டிப் போடுறாங்க. தாங்க முடியல.

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸ்..

பொக்லைன் வச்சா தோண்டறாங்க? நான் என்னவோ இவங்க இயற்கைப்பள்ளத்தாக்குலே இருக்காங்கன்னு இல்ல நெனச்சேன்:-))

நிகழ்ச்சியின் வர்ணனை தான் சாமி இது. என்ன, எரிச்சல் வர்ணனை!

ஜோ/Joe said...

வழக்கம் போல கலக்கல் நகைச்சுவை!

rv said...

பெனாத்தலார்,
இன்னிக்கு மத்தியானம் (8 அக்டோபர்) 2 மணிக்கு ஜெயா டிவியில் "கலைத்தாய்க்கு கலையுலகத்தினரின் பாராட்டு விழா" மறுஒளிபரப்பு. அது ஒரு தனி காமெடியா இருக்கப்போகுது.:))

Boston Bala said...

வெகு அருமை!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜோ.

ராமநாதன் - காக்கைக்கூட்டம் திசை மாறியதை சுட்டிக்காட்டியிருக்கிறேனே:-) அசிங்கமா இருக்கு!

நன்றி பா பா!

Anonymous said...

சுரேஷ்,

:)

உங்களை பாரட்டுறதுக்கு தனி பாரட்டு விழாவே நடத்தலாமுனு தோணுது ;)

Anonymous said...

சுரேஷ்,

:)

உங்களை பாராட்டுறதுக்கு தனி பாராட்டு விழாவே நடத்தலாமுனு தோணுது

enRenRum-anbudan.BALA said...

அய்யா சுரேசு,
நல்ல காமெடி :)
உலக நாயகனை இப்டி கலாய்ச்சுட்டீங்களே !
பார்த்திபன் புதுமை பண்றதா நினைச்சுட்டு அடிக்கிற கூத்து சகிக்கல போங்க !
//"அஸ்வம் வதம் ஜகத் புண்யம்"
//
என்னங்க அர்த்தம், தெரிஞ்சு தான் போட்டீங்களா ? ;-)
//ஆடலால் என்னை மகிழ்வித்த நமீதா, ரகசியா, திரிஷா ஆகியோருக்கும் என் நன்றி.
//
இதெல்லாம் ரொம்பவே ஓவர் :)
எ.அ.பாலா

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி விக்கி..

அந்தப்பாராட்டு விழாவை நீங்களே முன்னிருந்து நடத்துங்களேன்:-))

பாலா:

கலாய்க்கறதுன்னு ஆரம்பிச்சுட்டா யாரையும் விடமுடியாதுல்ல!

அஸ்வம் வதம் ஜகத் புண்யம் - அர்த்தம் தெரிஞ்சா நீங்களே சொல்லுங்களேன். என்கிட்டே கேக்கறீங்களே, ரஜினிகாந்த்கிட்டே கேப்பீங்களா?

உண்மையாவே சொல்றேன், இந்த டேன்ஸ் எல்லாம் பாக்கறச்சே கிளைமாக்ஸ்லே வில்லன் கூடாரத்துலே நடக்குற டேன்ஸ் ஞாபகம்தான் வருது:-(

ramachandranusha(உஷா) said...

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_07.html

பினாத்தல் சின்ன விளம்பரம் போட்டுகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நல்லா விளம்ப்ரம் போட்டீங்க உஷா..

சனி ஞாயிறுலே எல்லாப் பதிவும் ஈ அடிக்குது..

மனதின் ஓசை said...

சுரேஷூ.. எப்படிங்க இப்பை.. கலக்கரீங்க போங்க..

அதுவும் கலைஞர் பேச்சு சூப்பர்..

Unknown said...

தலைவா சூப்பர்... விகடன் இல்லை குமுதத்துல்ல இந்த மேட்டரைப் போட்டாலும் போடுவாங்க வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மனதின் ஓசை, தேவ்.

தேவ், உங்க வாய் முகூர்த்தத்தை நோட் பண்ணிகிட்டோம்.

Anonymous said...

Hi

Sorry for the spam, but I think you will be interested in www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.

You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.

I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.

C Ramesh

Prabu Raja said...

good comedy
:)

Prabu Raja said...

"viduthalai" eluthalaya?

பினாத்தல் சுரேஷ் said...

ரமேஷ், உங்கள் வருகைக்கு நன்றி.

பிரபு ராஜா , நன்றி..

விடுதலை பத்தி அடிமைக்கு ஒண்ணூம் தோணலையே:-(( ஒரு ஃப்ளாஷ் ஐடியா இருக்கு, ஆனா நேரம் எடுக்கும் ன்றதால on hold.

பினாத்தல் சுரேஷ் said...

மீள்பதிவெல்லாம் வேண்டாம்.. பின்னூட்டக்கயமையே போதும்;-))

 

blogger templates | Make Money Online