Dec 4, 2006

துபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 06)

மாநாட்டுக்கான பில்ட்-அப் எல்லாம் மாநாடு கண்ட சாத்தான் குளத்தான் பதிவில் பார்த்துக்கொள்ளவும். இப்பதிவு, மாநாட்டின் நிகழ்ச்சித் துளிகள்.

5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்டும் என்ற கெட்ட பழக்கத்தோடு காத்திருந்த முத்துக்குமரன், இசாக் , கவிமதி மற்றும் தமிழன்பு ஆகியோர் தொலைபேசியில் விரட்ட, அடுத்த குழுவாக வந்தது பினாத்தல் மற்றும் லியோ சுரேஷ்கள். வாக்குக் கொடுத்த வாப்பாக்கள் கூட வரமுடியாத நிலைமையை மழை மற்றும் போக்குவரத்து உருவாக்கியிருக்க, வெளிநாட்டு போட்டுக்கொடுத்தலுக்கு ஆளாகிவிட்ட தோழர்கள் வர முடியாதுதான் போலிருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பதிவின் தலைப்பிலே உள்ள உள்குத்தை இப்போது அடையாளம் காண முடிகிறதா? (மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை:-)). ஆசீப் பேரணியால் தாமதமாகவும், தம்பி நடந்தே வந்தும் ஏனோ தாமதமாகவும், நண்பன் அலுவலகம் முடித்துவிட்டும் வந்து சேர்ந்தார்கள். சுந்தரராமன்,செண்பகராஜ் போன்ற பதிவில்லா வாசகர்களும் கூட்டத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

எதிர்பார்க்கப்பட்டவர்களில் லொடுக்கு மழையில் மாட்டிக்கொண்டதாலும், மகேந்திரன் அவர் பதிவில் உள்ள காரணங்களாலும், துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும், பொதக்குடியான் காரணம் (எனக்கு) தெரியாததாலும், சுல்தான் நேற்று காலை ஆசீப்பிடம் "எப்போது சந்திப்பு?" என்று கேட்டதாலும் வரவில்லை!

குறைந்த ஆட்கள் என்பதாலும், வேறு ஒரு காரணத்தாலும் (காரணம் பின்னர்)மாநாட்டுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட மேடைக்கு செல்வதைத் தவிர்த்து உணவகத்திலேயே மேஜைகளை இணைத்து மாநாடு தொடங்கினோம். மற்ற காரணம் - உள்ளே நுழைந்தவுடன் உணவகப்பணியாளர் ஒருவர், மாநாட்டுக்காக இருவர் வந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல, ஏதேனும் உளவுப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, வேகமாக இடத்தை மாற்றி உளவுப்படையைக் குழப்பிவிட்டோம்.

லியோ சுரேஷ் சந்திப்பைத் தொடங்கிவைத்தார். அடுத்த சந்திப்பிலாவது, நேரம் காக்க வேண்டிய அவசியம், சந்திப்பின் இடமும் நேரமும் எல்லாருக்கும் வசதிப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்தது, முத்துக்குமரனின் "பதிவுகள் அவசியமா" என்ற கட்டுரை வாசிப்பும் தொடர்ந்த விவாதங்களும். வாசிப்பு எனச் சொல்ல முடியாமல் நினைவிலிருந்தே நேரடியாகப் பேசினார்.

தொடர்ச்சியாக வந்த விவாதங்களில், பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. "படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்" என்று உதாரணம் கூற, நான் "அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார். ஆசீப் விக்கிப்பசங்க போன்ற உபயோகமான பதிவுகளிலும் தெரியும் நையாண்டி பின்னூட்டங்களைக் குறித்து கவலை தெரிவித்தார்.

செண்பகராஜ், உள்ளூர்ச் செய்திகள் பெரிதும் எழுதப்படுவதில்லையே என்ற ஆதங்கத்தை தெரிவித்தார். அமீரகத்துக்கே உரிய சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. செண்பகராஜின் இன்னொரு ஆதங்கம் - துறை சார்ந்த பதிவுகள் பெரிதும் வராதது குறித்து. விக்கி பசங்களுக்கு ஒரு விளம்பரம் அளித்தேன். துறை சார்ந்த பதிவுகளுக்கான தேவைகள் தெரிய வரும்போது (கேள்விகள் மூலமாக) அப்படிப் பதிவுகளும் வரும் என்றேன்.

ரொம்ப சாதுவாக விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்ததால், சொ செ சூ வைக்க ஆரம்பித்தேன். அடுத்த கேள்வியாக நான் முன்வைத்தது:

கவிஞர்களே.. ஏன் கவிதை எழுதுகிறீர்கள்?
கவிப்பகைவர்களே.. ஏன் கவிதையை வெறுக்கிறீர்கள்?

அது அடுத்த பதிவில்..

அடுத்த பதிவுக்கு முன்னோட்டம்:

தம்பி ஏன் பேசவேயில்லை?
லியோ சுரேஷ் ஏன் பதிவு ஆரம்பிக்க பயப்படுகிறார்?
பினாத்தல் ஏன் வாயை மூடுவதேயில்லை?
இன்னும் பல.. காணத்தவறாதீர்!

12 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

//மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை//
ஓ!!! :))))

கதிர் said...

நன்றாக பதிவு செய்துள்ளீர். தலைப்பை பார்க்கும்போது நினைச்சேன். நல்லவேளை உள்குத்து விவரங்கள நீங்களே சொல்லிட்டிங்க!

இலவசக்கொத்தனார் said...

//பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார்.//

அதுல என்னங்க அபாயம்?:)

சரி சரி என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே.

//பினாத்தல் ஏன் வாயை மூடுவதேயில்லை? //

எப்ப மூடுவார் அப்படின்னு பதிவு போடுங்க. நூத்துக்கணக்குல பின்னூட்டம் வரும். :-D

ramachandranusha(உஷா) said...

இந்த மாநாட்டிற்கு கருப்பு கொடி (குடை) காட்டி நின்ற ஏராளமான எதிர்ப்பாளர்களைப் பற்றிக் குறிப்பிடாததை வன்மையாய்
கண்டிக்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

//பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. "படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்" என்று உதாரணம் கூற, நான் "அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார்.//

உண்மையில் விவாதிது ஒரு முடிவிற்கு வரவேண்டிய விஷயம்.
நன்று நண்பர்க்ளே இதைப் பதிவில் சொன்னமைக்கு!

SP.VR. SUBBIAH said...

//பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. "படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்" என்று உதாரணம் கூற, நான் "அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார்.//

உண்மையில் விவாதிது ஒரு முடிவிற்கு வரவேண்டிய விஷயம்.
நன்று நண்பர்க்ளே இதைப் பதிவில் சொன்னமைக்கு!

podakkudian said...

எனது வாழ்த்துக்கள் பதிவர் அனைவருக்கும். மிக அழகாய் தாங்கள் பாணியில் விபரம் தந்தமைக்கும் நன்றி.

எனக்கு எந்த தகவலும் இல்லை இடம் மற்றும் நேரம் குறித்து.

இனி ஒரு சந்தர்ப்பம் வராமலா போகும்?

Leo Suresh said...

//5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்டும் என்ற கெட்ட பழக்கத்தோடு காத்திருந்த //
//லியோ சுரேஷ் ....அடுத்த சந்திப்பிலாவது, நேரம் காக்க வேண்டிய அவசியம்,//
இது, உள்குத்தா? வெளிகுத்தா?

லியோ சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ், என்ன ஓ? உங்க லிங்க் கொடுத்திருக்கேன் கவனிச்சீங்க இல்ல?

தம்பி, அடுத்த பதிவை நீங்க போடறது!

இலவசம், உங்களை வச்சு காமெடி எப்படி பண்ரது? எந்த அடகுக்கடையிலே வாங்குவான்? சாட் பெட்டி அபாயம் இல்லைதான், விவாதம் திசை திரும்பறது? ஏரோப்ளேன்லே இருந்து எலிமருந்து வரை எதைப்பத்தி பேச ஆரம்பிச்சாலும் ஒரு திசையிலே கொண்டு போய் விடற திறமையுள்ள பின்னூட்டங்களை நீங்க சந்திச்சதே இல்லையா:-))

மழைக்கு ஒதுங்கனவங்களையெல்லாம் தங்கள் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளவேண்டிய அவசியமா ஏற்பட்டுவிட்டது பெண்ணியவாதிகளுக்கு?

நன்றி சுப்பையா. விவாதம் தொடங்கலாமா?

பொதக்குடியான், உங்கள் கைப்பேசி எண்ணை ஒரு பின்னூட்டமாகப் போடுங்களேன், பதிப்பிக்க மாட்டேன், பேசலாம்.

லியோ சுரேஷ்.. அது நிகழ்வின் நேரடி வர்ணனை.. எல்லாத்துலேயும் உள்குத்தை எதிர்பார்த்தா எப்படி:-))

Unknown said...

வீடு மாற்றம், மழை அல்லது மழையில் வீடு மாற்றலில் அறிவிப்பையே கவனிக்க முடியாது போய் விட்டதால் துபாய் பதிவர்களை சந்திக்கும் நல்லதொரு வாய்ப்பு பறிபோனது. மனதுக்கு வருத்தம்தான்.

Unknown said...

// துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும் //

துபாய்வாசி அல் அய்ன் போவதற்காக தற்காலிக ஷார்ஜா வாசியாக இருந்ததை சரியாக சொல்லியும், என்னை அல் அய்ன் தூரத்திற்கு தள்ளி வைக்க நினைக்கும் பினாத்தலே, இது உமக்கே நியாயமாக படுகிறதா?

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கு நன்றி சுல்தான். இன்னொரு வாய்ப்பு வரும்.

துபாய்வாசி, நீங்க அல் எய்ன் போக நினைச்ச ஷார்ஜாவாசியா, அல் எய்ன்லேருந்து திரும்பி வந்த ஷார்ஜாவாசியான்னு குழம்பிட்டேன்:-))

 

blogger templates | Make Money Online