Dec 25, 2006

2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 Dec 06)

2006 முடியப்போவுது. சம்பிரதாயப்படி 2006 திரும்பிப் பார்க்கிறேன், முதுகைக்காண்கிறேன்னு ஒரு பதிவு போடலாம்னா அப்படி ஒண்ணும் கிழிச்சுடல! சரி மத்தவங்களையாவது கலாய்க்கலாமேன்னு "என் பார்வையில் 2006 வலைப்பதிவுகள்"னு போட்டா அதையும் கிண்டலடிக்க சில பேர் கிளம்பிட்டாங்க!

யோசிச்சேன். என் பார்வையிலே போட்டாதானே பிரச்சினை? சில பிரபலங்களின் பார்வையிலே கேட்டு வாங்கிப்போட்டா? புதுமைக்கு புதுமையாவும் இருக்கும், யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு பேசவும் முடியாது!

எதை எந்தப்பிரபலம் சொன்னாங்கன்னு சொன்னா உங்களைக் குறைவா மதிப்புப்போடற மாதிரி ஆயிடாது?

---------------------------------

2006இலே வலைப்பதிவுகள் என்ன கிழித்துக்கொண்டு இருந்தது என்று என்னைக்கேட்கிறீர்களே, வயதானவர் ஒருவர் குடுமபத் தொலைக்காட்சியிலே அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிறாரே அவரைக்கேட்க மாட்டீர்களா? சிக்குன் குனியாவினால் தமிழ்நாடே அலறிக்கொண்டிருந்தபோது இந்த வலைப்பதிவு பிருஹஸ்பதிகள்் என்ன தூங்கிக்கொண்யா இருந்தார்கள்? திட்டியோ வாழ்த்தியோ கலர் டிவிக்கு கொடுத்த விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் தாயுள்ளத்துடன் நான் அளிக்கத் திட்டமிட்டிருந்த கம்ப்யூட்டருக்குக் கொடுக்காத இவர்களா கம்ப்யூட்டரில் தமிழ் காக்கப்போகிறார்கள்?
மக்கள் - இல்லை இல்லை!

கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் ஒரு சிங்கம் இருந்ததாம். அதன் மேல் ஒரு கொசு உட்கார்ந்து இருந்ததாம். கொஞ்சநேரம் கழித்து அந்த கொசு சொல்லியதாம், "நான் உன்மேலின்ருந்து இறங்குகிறேன்" என்று! சிங்கம் கேட்டதாம், நீ என்மேலா இருந்தாய்? என்று.. அப்படி இருக்கிறது இந்தபதிவர்கள் கதை. மக்கள் என் பக்கம் இருக்கும்வரை வலைப்பதிவாளர்கள் என் பக்கம் இருந்தாலென்ன? இல்லாவிட்டால்தான் என்ன?
-----------------------

இதப்பாருங்க, தமிழ்நாட்டுலே மொத்தம் 7 கோடி ஜனங்க இருக்காங்க, அதில ஆம்பல மூணரை கோடி, தாய்க்குலம் மூணரைக்கோடி.. இதிலே கைநாட்டுக்காரங்க 4 கோடி, கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க.. வெறும் ரெண்டு லட்சம்!

இந்த ரெண்டு லச்சத்திலே பதிவு போடறவங்க வெறும் 2000 பேரு! இவங்க போன வருசத்திலே போட்ட மொத்தப் பதிவுங்க - 4000! இதிலே தேமுதிகவுக்கு ஆதரவா எழுதறவன் - ஒண்ணோ ரெண்டோ கூட இல்ல! ஏன் இல்ல? யோசிச்சுப் பாருங்க! தேமுதிக ஆட்சிக்கு வந்தா தமிலன் அத்தனை பேருக்கும் வலைப்பதிவு நானே திறந்து தருவேன்!

ஏமிரா, எனக்கா வலைப்பதிவப்பத்தித் தெரியாது? நான் என் சொந்தச் செலவிலே கட்சி நடத்துறவன்.. சொந்தச் செலவிலே சூன்யத்த ஆரம்பிச்சவனே நாந்தாண்டா!

உழைக்கிற மக்களுக்காக நாங்க களத்தில இறங்கிப் பாடுபடறோம்.. உதவின்னு சொன்னா வரமாட்டீங்க, உதைக்குதான் பயப்படுவீங்கன்னா அதுக்கும் தயாராத்தான் வந்திருக்கேன்.

ப்ளாக் - எனக்கு இங்கிலிஷ்லே பிடிக்காத ஒரே வார்த்தை!

-----------------------

தண்ணிப்பிரச்சினைன்னா முல்லைப்பெரியாறு..
தமிழனுக்கு ஒரே தந்தை பெரியாரு..
வேர எதுவும் எழுதறதுக்கு இல்ல மேட்டர்!
எனக்கு இலக்கியா ஒரே ஒரு டாட்டர்!
இல்லாட்டிப் பண்ரான் நையாண்டி..
கிடைக்கறதோ ஊருக்கு இளைச்ச இந்த ஒரே ஆண்டி!
அதுவும் இல்லாட்டி மாட்றான் வல்லவன் சிம்பு..
டேய்.. அவன்கிட்ட வச்சுக்காதேடா வம்பு..
அவன் இல்லடா சாதா ஆசாமி..
அவங்கப்பன் இந்த வீராச்சாமி..

அம்மாக்கு இன்னொரு பேர் தாயாரு..
அடுக்குமொழித்தமிழுக்கு என்னிக்கும் இந்த டியாரு!
என்னப்பண்ணாதீங்்கடா கிண்டல்...
ஆகிப்போயிடுவீங்கடா பண்டல்!

ஏ டண்டணக்கா..டணக்கடி டண்டணக்கா!

---------------------------------

என் அன்பு வலைப்பதிவு உடன்பிறப்புகளே!

தம்பி தயாநிதி மாறனின் தொலைநோக்குச் சிந்தனையில் அகலப்பாட்டை கண்ட தமிழ் ஆர்வலர்களே! கணினித் தமிழில் வலைப்பதிவுகளைக்கண்டதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது என்பதை உளமாறச்சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவுப்பகலவனின் ஆவி என்னிடம் மட்டுமன்றி பல பதிவர்களிடமும் பேசிவருகிறது என்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன். ஆனால், வள்ளுவப் பெருந்தகயார் சொன்னதுபோல் "நகுதற் பொருட்டன்று நட்பு" அல்லவா? ஓரிரு உள்ளக்குமுறல்களையும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

எதைப்பற்றிப் பேசினாலும் முதலில் என்னை எள்ளி நகையாடுவதில்தான் ஆரம்பிக்கிறார்கள் சில பதிவாளர்கள். போகட்டும்.. பொதுவாழ்விலே இதைப்போன்ற பல முட்பாதைகளைக் கடந்து வந்தவன் தான் இந்தக்கருணாநிதி. ஆனால், ஏகடியம் பேசும் எத்தர்களுக்கு உரிய பதில் அளிப்பதில் நாம் ஏன் குறை வைத்திருக்கிறோம்? "பொறுத்தது போதும், பொங்கியெழு" என்று அன்று நான் மனோகராவிற்கு எழுதிய உரையாடல் இன்றும் பொருந்திவரும் நிலையே இன்று பதிவுகளில் நிலவுகிறது என்றால் அது மிகையாகாது.

பைனரிக்காட்டுக்குள்ளே ஓடும் சிறுநரிகளை அடையாளம் காணத் தாமதியாதே உடன்பிறப்பே.

-----------------------------

தமிழ்ப்பதிவுகளில் கவிதை..

"வா
னில் நட்
சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்றன"

என
உடைந்து கிடக்கிறது கவிதை..
ஊசி கொண்டு அதைத் தை!

ஏனெனில்
அறிவியல் தமிழுக்கு
அதுவே விதை!

ஆறாம் விரலாய்ப் பேனா
கொண்ட எனக்கும்
இருப்பது இருகை...
உனக்கோபலகை..
தட்டச்சுப் பலகை!

இன்னும் எழுந்து..
மேலும் எழுது..
உனக்குத் தமிழ்ப்பால் கொடுத்த
அன்னைக்குக் கொடு நீ
கவிப்பால்.

---------------------------------

வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.


வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.

எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.

இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.


வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.

இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.



எ பி ஹை:


குருடன்
பாடுகிறான்
கொட்டாங்கச்சியோடு.

-------------------------------------

போதுமா பிரபலங்களின் கருத்து? இன்னும் வேணுமா?

Dec 20, 2006

வெயில் (20 Dec 06)

Cliffhanger படம், சென்னையில் தூக்கப்படுவதற்கு ஓரிரு நாள் முன்னதாக தேவியில் பார்த்தேன். கூட்டம் குறைவாக இருந்தாலும், ஏஸி முழு அளவில் போடப்பட்டிருந்ததாலோ, படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க பனிமலையில் இருந்ததாலோ தெரியவில்லை - மே மாத சென்னை வெக்கையையும் மீறி படம் பார்க்கையில் ஒரு குளிர் பரவி, பனிமலைக்குள் இருப்பது போல் உணர்ந்தேன்.

அதற்கு முழுக்க முழுக்க எதிர்மறையாக, குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட துபாயில், ஏழே பேர் திரையரங்கில் இருந்தும், வெயிலின் வெக்கையில் வேர்க்கும் அளவிற்கு காட்சிகளுக்குள் இழுத்துவிட்டார் வசந்தபாலன்.

வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை மிக இயல்பாக எடுத்துச் செல்கிறார் இயக்குநர். (கதையை விரிவாக சென்னைக்கச்சேரியார் சொல்லிவிட்டார்)

குறிப்பாக அந்த முதல் பாடலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. திருட்டுச் சோளத்தைச் சுட்டுத் தின்பது, குட்டையில் ஒலிம்பிக் ஜம்ப் செய்து குளிப்பது, சூடுகொட்டையைத் தேய்த்து தூங்குபவனை எழுப்புவது, பம்பர விளையாட்டின் Ultimate insult -பிஸ்கட் எடுப்பது -- நான் அனுபவித்த எதையெல்லாம் இன்றைய குழந்தைகள் இழந்துவிட்டார்கள்? மிகமிக இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் - இயல்பான பாத்திரப்படைப்புகள் - நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிக்க முடியாமல் எல்லாப்பக்கமும் அவரவர் நியாயம் இருப்பதை உணர்த்தியிருக்கும் பாத்திரங்கள். திருட்டு சினிமா, திருட்டு பீடிக்கு கோபமடைந்த அப்பா வெயிலில் வாட்டியதால் வீட்டை விட்டு வெளியேறும் முருகேசனின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் தீப்பெட்டி கம்பெனிக்கு அனுப்பாமல் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்த அப்பனின் ஆறாத கோபமும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

தங்கைகள் தன்னை மதிப்பதில்லை என்று குமுறும் முருகேசனுக்கு வீட்டில் இருந்து கஷ்டப்பட்டுப் படிக்கவைத்த அண்ணனை விட, வீட்டைவிட்டு ஓடியவன்மேல் எப்படி பாசம் வரும் என்று நியாயமான கேள்வி வைக்கப்படுகிறது.

முக்கியமான சிறப்பம்சம் - நடிப்பு.. பசுபதியின் திறமையை வேறு வகைகளில் விருமாண்டியிலும், மும்பை எக்ஸ்பிரஸிலும் பார்த்திருந்தாலும், இந்தப்படம் அவருக்கு ஒரு கிரீடச் சிறகு! தோல்வியடைந்தவன் என்பதை பாடி லேங்குவேஜிலேயே சொல்வதாகட்டும், அப்பா தங்கைகள் மதிக்காததற்கு குமுறுவதாகட்டும், தம்பியிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்று திணறுவதாகட்டும் - அசத்தியிருக்கிறார். ஒன்றிரண்டு விருதுகள் நிச்சயம்.

பசுபதி மட்டுமல்ல, பரத்தின் நடிப்பும் குறிப்பிடப்படவேண்டியதுதான். காட்சிகள் குறைவாக இருந்தாலும் ஒரு கிராமத்து -கோபக்கார-பாசக்கார-துடிப்பான இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார்.

அப்புறம் அந்த அப்பா - பேர் தெரியவில்லை - நடிக்கவில்லை.. வாழ்ந்திருக்கிறார்.

அம்மா டி கே கலாவின் ஒன்றிரண்டு மிகையை விட்டுப்பார்த்தால் எல்லாரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

குறைகளே இல்லையா? நிறையவே இருக்கின்றன!

1. அளவுக்கதிகமான வன்முறை - வெயிலுக்குப் பதிலாக ரத்தம் என்றே வைத்திருக்கலாம் என்னும் அளவிற்கு! குடும்பப்படத்துக்கு இவ்வளவு ரத்தம் தேவையா? சண்டைக்காட்சிகள், வில்லன்கள் பட்டாளம் இல்லாமல் இந்தக்கதையைச் சொல்லியிருக்க முடியாதா?

2. பாவ்னாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று ஜொள்ளன் கூறினாலும், அந்தப்பாத்திரமோ, அதன் காட்சிகளோ திரைக்கதை நகர்வுக்கு உதவாமல் ஒட்டாமல் இருக்கின்றன - குறிப்பாக அந்த பெப்ஸி உமாவைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை(?) காட்சி- இன்னும் எத்தனை நாள்தாண்டா அதையே செஞ்சுகிட்டிருக்கப்போறீங்க? அதேபோல ஒவ்வொரு ப்ரேமிலும் யதார்த்தத்தைக்காட்டிய படத்தில் இவர்களின் டூயட் கேண்டீன் விற்பனையை அதிகரிக்கவா?

3. இசை! முதல் பாடல்கூட மனதில் ஒட்டவில்லை - காட்சி அமைப்புகள் மட்டுமே. பின்னணி இசை -இன்னும் எவ்வளவு நாள்தான் இளையராஜாவை எண்ணி ஏங்க மட்டுமே முடியுமோ?

4. திணிக்கப்பட்ட மெலோட்ராமாக்கள் - அதை இழுத்திருக்கும் இயக்குநர். வெயிலில் அம்மணமாக படுக்கப்போடும் தண்டனையையும், காதல் தோல்வியின் வேதனையையும், அப்பா அம்மா சந்தேகப்படுவதையும் இன்னும் சுருக்கமாகவே சொல்லியிருக்க முடியும் - ரசிகர்கள் மேல் நம்பிக்கைக் குறைவா?

5. விளம்பரக்கம்பெனி சம்மந்தமான வேலையில் ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு படம் முழுக்க இன் லைன் அட்வர்டைஸ்மெண்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார்! இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்துக்கு ஆகும் செலவில் 1/10 இல் முடித்திருக்கிறார்.. அதேபோல, பசுபதியின் காதலில் வரும் காட்சிகளுக்கு பின்னணி இசையாக இளையராஜாவும் தேவாவும் - பழைய திரைப்படக்காட்சிகளாக!

இருந்துட்டுப் போவுது! எந்தப்படம்தான் குறையே இல்லாம இருக்கு?

மொத்தத்தில் - நல்ல படம் - பார்க்கலாம், ரசிக்கலாம்.

Dec 16, 2006

சனிக்கிழமை - Promise fulfilled;-)

குறும்புன்னு ஒரு பிளாஷ் தயார் பண்ணா, பிளாக்கரும், பிளாஷும் போட்டோபக்கெட்டும் சேர்ந்து என்கிட்டே அடிச்ச குறும்பு தாங்க முடியல!

பட்டன் வொர்க் ஆகாததையே குறும்புன்னு நெனச்சு சிரிச்ச ஆவிங்க,
வேலைக்கு ஆவலை, சனிக்கிழமை கச்சேரி வச்சுப்போம்னு சொன்ன லக்கிலுக்,
போன் பண்ண ரெடியா இருந்த முத்துகுமரன்
இடைக்கால நிவாரணம் கொடுத்த கோபி, கஷ்டப்பட்டு பார்த்து பாராட்டிய சிறில், பொன்ஸ், நாமக்கல் சிபி,I H மற்றும் பலர்,
வெள்ளெழுத்து வந்துடிச்சான்னு அக்கறைப்பட்ட இ கொ,
எறும்பு ஊருது, ஒண்ணும் தெரியலேன்னு கஷ்டப்பட்ட உஷா,
மார்க்கை சுழிச்சுறவான்னு பயமுறுத்தின தருமி..

எல்லாரும் இப்ப பாருங்க!

முக்கியமான பிரச்சினை என்னன்னா, பிளாஷிலே கறுப்பு பின்புலம் கொடுத்துட்டு, பிளாக்கர்லே ஆரஞ்சு பின்புலம்னு தப்பா கொடுத்துட்டேன். அதனால, ஆரஞ்சு மேலே வெள்ளை என் உள்ளத்தைக் காட்டினாலும், உள்ளதைக்காட்டவில்லை;-))

மின்னஞ்சல் வேணும்னா கேளுங்க!


Dec 14, 2006

ஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006? (குறும்பு - தேன்கூடு)(Repair version 2:-))

வலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.

ஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்!

இதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006!

விளையாடுங்கள்.

பி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.

பி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.

பி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))

பி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.

பி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.

பி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:
கோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..

மக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து "தொடர இங்கே அழுத்தவும்" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.



Dec 11, 2006

டிசம்பர் 11

1982ல் பாரதியாருக்கு நூற்றாண்டு வந்தபோது கல்கியில் ஒரு பரிசுப்போட்டி வைத்திருந்தார்கள் (கோகுலமா கல்கியா எனச்சரியாக நினைவில் இல்லை). பாரதியார் பாடல்களில் சில எண்களைக்கண்டுபிடிக்கச் சொல்லி. சில எண்கள் சுலபமாக இருந்தாலும் (முப்பது கோடி - முப்பது கோடி முகமுடையாள், அறுபது கோடி - அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் கூட்டுவள் தாய்) சில எண்களுக்காக பலமுறை படிக்க வேண்டி வந்தது (நாற்பதாயிரம் - நலமோர் எத்துணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் - சுயசரிதை).

போட்டியில் பரிசு கிடைக்கவில்லை - ஆனால் பாரதியார் பாடல்களின் மீதும் தமிழின் மீதும் தீராத ஆர்வத்தை எனக்குள் உருவாக்கிவிட்டதற்காக அந்தப்போட்டிக்கு என்றும் என் நன்றிகள்.

ஆதர்சத்தை வீட்டில் உருவாக்குவது என்றும் மகிழ்ச்சியைத் தருவது.


பாரதியார்

பாரதியாருக்கு ஓட்டைப்பல் என்பதை சரித்திர ஆசிரியர்கள் மறைத்தது ஏனோ?

ஓட்டைப்பல் பாரதியார்

அவர் பாட்டை அவரே பின்பாட்டாய்ப் பாடுகிறார்.

Dec 9, 2006

இன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)

படத்தைப் பார்க்காமலே விமர்சனம் எழுதிவிட்டேன். புதுப்படத்துக்கென பிலிம் காட்டி பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிவிட்டேன். அந்த வகையில் இன்னும் ஒரு விமர்சனம்.
இன்னும் வெளியாகாத புத்தகத்துக்கு ஒரு விமர்சனம். "கரையைத் தேடும் ஓடங்கள்" புத்தகம் எழுதியவர் உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். விடை கடைசியில்.
பணத்தைத் தேடி ஓடும் ஓட்டம் ரிஸ்க் இல்லாததாக இருப்பதில்லை. ஆண்களுக்கு ஒருவகை பிரச்சினை என்றால் பெண்களுக்கு வேறு வகையான பிரச்சினைகள். அந்தப்பிரச்சினைகளையும் விடுபட வழியே இல்லாத நிலைமையையும் கதைக்களனாகக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.
குடும்பக் கடன்களுக்காக கிழவனை மணக்கச் சம்மதித்து, அவன் இறக்க, கொலை என்ற சந்தேகத்தில் சிறைக்கு சென்று மீளும் அமீரா,
ஓடிப்போன புருஷன், கைக்குழந்தைகள், சமாளிக்க வழி இல்லாமல் ஷேக் வீட்டு வேலைக்காரியாகும் ஆயிஷா,
காதலித்து மணம்புரிந்த கணவனின் துபாய் ஆசையில் அவசரப்பட்டு வேறு ஒரு ராக்கெட்டில் சிக்கி மயிரிழையில் தப்பிக்கும் இந்துமதி
ஆகிய கதாபாத்திரங்கள் சென்னைக்குத் திரும்புகையில் அறிமுகமாகின்றனர். பெரும் பிரச்சினையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற எண்ணங்கள் சென்னையில் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பில் தூள் தூளாகின்றன. நாளொரு பிரச்சினை, பொழுதொரு பொல்லாப்புடன் வாழ்க்கையைத் தொடர்வதில் சிக்கல்களை அதிகப்படுத்த, தற்கொலை முடிவெடுக்கும்வரை சென்று கடைசியில் உலகை எதிர்த்துப் போராட முடிவெடுக்கின்றனர்.
நாவலின் அமைப்பும் நடையும் அருமை. பெண்ணிய எழுத்தாக இருக்குமோ என்ற சிந்தனை ஆரம்பத்தில் வந்தாலும் கெட்டவர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம் ஒதுக்கீடு கொடுத்து அந்த வசையிலிருந்து தப்பிக்கிறார் ஆசிரியர். உரையாடல்கள் - குறிப்பாக வட்டார வழக்குகள் இயல்பாக அமைந்து படிப்பதை சுவாரஸ்யப்படுத்துகின்றன.
இருந்தாலும், சில கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.
1. முன் சரித்திரம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெவ்வேறு இடங்களில் வருவதால் கொஞ்சம் பெயர்க்குழப்பம் வருகிறது. மேலும் இரு முக்கிய பாத்திரங்களின் பெயர்கள் கிட்டே இருப்பதால் (ஆயிஷா, அமீரா) குழப்பம் வருகிறது.
2. ஆரம்பத்தில் நாவல் படிக்கிறோமா, சீரியல் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு ஒரே அழுகை நெடி. (பார்ப்பது போல் காட்சியை அமைத்திருக்கிறார் ஆசிரியர் என்று பெருமையும் பட்டுக்கொள்ளலாம்)
3. இந்திய கான்ஸலேட்டால் தப்புவிக்கப்பட்ட பெண்கள் சி எம்மைச் சந்தித்து வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது, அவர்கள் தற்கொலை முடிவு வரை செல்லும்போது மறக்கப்பட்டிருக்கிறது ஒரு குறையே.
4. சுக முடிவுக்கான கிளைமாக்ஸ் திருப்பங்கள் செருகப்பட்டது போன்ற ஒரு தோற்றம்.
ஆனால், சொல்லப்பட்ட இந்தக்குறைகளைப் பார்த்து தவறாக முடிவெடுத்துவிடாதீர்கள். நல்ல நாவல், படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
கலைமகளில் எப்போ வருமோ என்று தெரியாது. பிறகு ஆசிரியர் தன் வலைப்பூவில் எழுதுவார் என்றே நினைக்கிறேன்.
ஆம்.. நுனிப்புல் உஷாவின் கலைமகள் பரிசு பெற்ற நாவலின் விமர்சனம்தான்.

Dec 6, 2006

மறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)

ஒன்று

காலை எட்டரை:

"என்ன சார், வண்டி ஸ்டார்ட் ஆகலியா?"

"என்ன பண்றது? ரெண்டு தூறல் போட்டா இதுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுது"

"வித்துட்டு புது வண்டி வாங்கிக்க வேண்டியதுதானே?"

"காசு?"

"சார் கால்லே அடி பட்டிருக்கு பாருங்க, ரத்தம் வருதே! கொஞ்சம் இருங்க, டிங்சர் கொண்டு வரேன்"

"ஸ்டேண்ட் இடிச்சுடுச்சு போல! பரவாயில்லை, நான் பாத்துக்கறேன்"

காலை பத்தரை:

"என்ன ஞானசகாயம், இன்னும் போர்ஷனை முடிக்கலன்றீங்க?"

"என்ன பண்றது சார், இந்த வகுப்புலே பசங்க கொஞ்சம் மந்தம். படிப்பிலே ஆர்வமே இல்ல"

"இதை நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றவங்க கிட்டே சொல்ல முடியுமா?.. எதோ கடமைக்கு வேகமா நடத்தி முடிங்க கே என்"

"அப்படி நடத்தறது என் தொழிலுக்கு மரியாதை இல்லை சார்"

"ஆமா! தொழிலுக்கு எல்லாம் மரியாதை கொடுங்க! ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க! இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை!"

காலை பதினொன்று:

"எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். யாரு இந்தப்படத்தை வரைஞ்சது?"

"...."

"பாடம் நடத்த முடியலே, சொன்னாப் புரிஞ்சுக்கறதுக்கு துப்பில்லே, வீட்டுப்பாடம் ஒருத்தனும் எழுதலே.. என்னைக் கிண்டல் செய்யறதுக்கும் படம் போடறதுக்கும் மட்டும் தெரியுதா? இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும்!"

"..."

"ராமு.. இங்கே வா.. எனக்கு உம்மேலேதான் சந்தேகம்..என்னடா வாய்லே! இப்படி நாருது? பீடியா?"

"இல்லே சார், கஞ்சா!"

"எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே கூசாம சொல்லுவே! நீட்டுறா கைய"

பிற்பகல் மூன்று:

******குறும்பு*******

பிற்பகல் ஐந்தரை:

"இன்னும் எவ்வளவு நேரம்பா ஆகும்?"

"கார்புரேட்டரை கழட்டி சுத்தம் செய்யணும் சார். டயர் வேற கிழிஞ்சிருக்கு.. சைலெண்சர்லேயும் அடைப்பு இருக்கு.. நீங்க நாளைக்குக் காலையிலே எடுத்துக்கங்க சார்."

____________________________________________

இரண்டு

காலை நாலரை:

"இன்னுமா எழுந்திருக்கலே. எத்தனை முறைதான் எழுப்பறது?"

"இன்னும் ரெண்டு நிமிஷம்மா!"

"ரெண்டு ரெண்டு நிமிஷமாவே அரை மணிநேரம் ஓட்டிட்டே. நாளைக்கு புருஷன் வீட்டிலே போயி இப்படியா தூங்குவே?"

"அதுக்கு இருக்கும்மா இன்னும் பத்து வருஷம்"

"பத்தா! இப்பவே வயித்துலே நெருப்பைக் கட்டிக்கற மாதிரி இருக்கு. சும்மாவா சொன்னாங்க.. பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு"

"அவங்களேதான் சொன்னாங்கம்மா - தாய்க் கண்ணோ பேய்க்கண்ணோன்னும்"

"இதெல்லாம் பேசத் தெரியுது, காலையிலே எழுது வாசல் தெளிச்சு கோலம் போடத் தெரியலே"

காலை ஏழு:

"அம்மா இன்னிக்கு மத்தியானத்துக்கு என்ன?"

"பாம்பே மீல்ஸ் போதுமா? என்னடி இது கேள்வி, தயிர்சாதமும் ஊறுகாயும்தான்"

"அம்மா டிபன் பாக்ஸ் சரியாவே மூட மாட்டேங்குதும்மா. என் காலேஜ் புக்ஸ்லே எல்லாம் உன்னோட ஆவக்காய் வாசம் வீசுது. பசங்க கிண்டல் பண்றாங்கம்மா"

"சரி போயி சாமி விளக்கேத்து"

"இல்லேம்மா, நான் இன்னிக்கு கூடாது"

"சரியாப்போச்சு.. செய்றதே ரெண்டு மூணு வேலை.. அதுக்கும் லீவா? சரி எதையும் தொடாம ஓரமா நட!"

காலை எட்டரை:

"பாப்பா, வரயா, வண்டியிலே காலேஜ் போகலாம்"

"உன் வேலையப் பாத்துகிட்டுப் போடா"

"என்ன ப்ரியா, லேட்டாயிடுச்சி?"

"என்ன பண்ரது சொல்லு. காலையிலே எழுந்து தலைக்குக் குளிச்சு காயப்போடக்கூட நேரம் இல்லே. மண்டை இடிக்குது. வர வழியிலே தயிர் சாதம் மூடி வேற திறந்துகிச்சு. இதுலே டேட்ஸ் வேற! இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை! இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா?"

******குறும்பு*******

காலை பத்து:

"ப்ரியா! எத்தனை முறை கூப்பிடறது? ஒரு சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியலே.. நீங்கள்லாம் காலேஜ் வரைக்கும் எப்படித்தான் வந்துடறீங்களோ!"

"..."

"அழுகை மட்டும் உடனே வந்துடுது!"

_____________________________

மூன்று

மாலை ஐந்து:

"எத்தனை முறைதான் வாசல்லே இருந்தே வேடிக்கை பார்ப்பீங்க? வாங்க உள்ளே போகலாம்"

"விலை அதிகமா இருக்கும்போல இருக்கே"

"தேவைன்னா விலையப் பாத்தா ஆகுமா?"

"சரி 200 ரூபாய்க்கும்தான் குளிர்கண்ணாடி கிடைக்குது"

"அதுவும் இதுவும் ஒண்ணாகுமா? இதுக்கு உள்ள நம்பகம் அதுக்கு வருமா? காசைப் பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதீங்க"

"சரி இப்ப இருக்கற நெலைமையிலே 3000 ரூபா அதிகமாப் படுதே"

"என்ன நெலைமை? நான் தரேன், வாங்கிக்குங்க"

"உனக்கு ஏது பணம்?" "நான் வாய்க்கட்டி வயித்தக்கட்டி பருப்பு டப்பாவிலே பாதுகாத்து வச்சிருந்தேன்"

"பருப்பு டப்பாவிலே மொளைச்சுதா? அதிக செலவுன்னு என்னை ஏமாத்தித் தானே வச்சிருக்கே?"

"என்னமோ.. நீங்க என்கிட்டே கொடுத்தப்புறம் அது என் பணம்தான். இந்த ப்ரேம் உங்களுக்கு அழகா இருக்கும், எடுத்துக்கங்க"

மாலை ஏழு:

"இந்த வீடுதானா?" "ஆமாம். வாசலே KB100 நிக்குதே, அவருதுதான்"

""சீனிவாசன்.. சீனிவாசன்"

"இது அவர் பிள்ளைதானே?"

"அப்பா! அப்பா யாரோ வந்திருக்காங்க"

"வாங்க சார், உக்காருங்க.. டேய், இது மதுவந்தி அப்பாடா, ஞாபகம் இல்லே? அன்னிக்கு பார்ட்டிக்குப் போயிருந்தோமே! அங்கிளுக்கு ஹாய் சொல்லு"

" ஹாய் அங்கிள்! அப்பாவோட ஆபீஸ்லேதான் வேலை செய்றீங்களா?"

"ஆமாண்டா கண்ணா.. உன் பேர் என்ன?"

"குரு, 3 A. அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர்தான் உங்களுக்கும் மேனேஜரா?"

"பையன் ரொம்பச் சூட்டிகை!"

"ஆமாம் சார்.. அறுந்த வாலு!"

"இதென்ன கண்ணாடி? ரஜினி மாதிரி பண்ணுவீங்களா? நான் பண்ணுவேனே!"

******குறும்பு*******

இரவு பத்து:

"வாரண்டி, கேரண்டி எல்லாம் நீங்க உடைச்சுட்டு வந்தா தர முடியாது சார். வொர்க்மேன்ஷிப்லே டிபக்ட் இருந்தா மட்டும்தான் அப்ளை ஆகும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். இன்னொரு கண்ணாடி எடுத்துக்கங்க, 10% தள்ளுபடி தரேன்.

நீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை!

Dec 4, 2006

துபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 06)

மாநாட்டுக்கான பில்ட்-அப் எல்லாம் மாநாடு கண்ட சாத்தான் குளத்தான் பதிவில் பார்த்துக்கொள்ளவும். இப்பதிவு, மாநாட்டின் நிகழ்ச்சித் துளிகள்.

5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்டும் என்ற கெட்ட பழக்கத்தோடு காத்திருந்த முத்துக்குமரன், இசாக் , கவிமதி மற்றும் தமிழன்பு ஆகியோர் தொலைபேசியில் விரட்ட, அடுத்த குழுவாக வந்தது பினாத்தல் மற்றும் லியோ சுரேஷ்கள். வாக்குக் கொடுத்த வாப்பாக்கள் கூட வரமுடியாத நிலைமையை மழை மற்றும் போக்குவரத்து உருவாக்கியிருக்க, வெளிநாட்டு போட்டுக்கொடுத்தலுக்கு ஆளாகிவிட்ட தோழர்கள் வர முடியாதுதான் போலிருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பதிவின் தலைப்பிலே உள்ள உள்குத்தை இப்போது அடையாளம் காண முடிகிறதா? (மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை:-)). ஆசீப் பேரணியால் தாமதமாகவும், தம்பி நடந்தே வந்தும் ஏனோ தாமதமாகவும், நண்பன் அலுவலகம் முடித்துவிட்டும் வந்து சேர்ந்தார்கள். சுந்தரராமன்,செண்பகராஜ் போன்ற பதிவில்லா வாசகர்களும் கூட்டத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

எதிர்பார்க்கப்பட்டவர்களில் லொடுக்கு மழையில் மாட்டிக்கொண்டதாலும், மகேந்திரன் அவர் பதிவில் உள்ள காரணங்களாலும், துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும், பொதக்குடியான் காரணம் (எனக்கு) தெரியாததாலும், சுல்தான் நேற்று காலை ஆசீப்பிடம் "எப்போது சந்திப்பு?" என்று கேட்டதாலும் வரவில்லை!

குறைந்த ஆட்கள் என்பதாலும், வேறு ஒரு காரணத்தாலும் (காரணம் பின்னர்)மாநாட்டுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட மேடைக்கு செல்வதைத் தவிர்த்து உணவகத்திலேயே மேஜைகளை இணைத்து மாநாடு தொடங்கினோம். மற்ற காரணம் - உள்ளே நுழைந்தவுடன் உணவகப்பணியாளர் ஒருவர், மாநாட்டுக்காக இருவர் வந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல, ஏதேனும் உளவுப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, வேகமாக இடத்தை மாற்றி உளவுப்படையைக் குழப்பிவிட்டோம்.

லியோ சுரேஷ் சந்திப்பைத் தொடங்கிவைத்தார். அடுத்த சந்திப்பிலாவது, நேரம் காக்க வேண்டிய அவசியம், சந்திப்பின் இடமும் நேரமும் எல்லாருக்கும் வசதிப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்தது, முத்துக்குமரனின் "பதிவுகள் அவசியமா" என்ற கட்டுரை வாசிப்பும் தொடர்ந்த விவாதங்களும். வாசிப்பு எனச் சொல்ல முடியாமல் நினைவிலிருந்தே நேரடியாகப் பேசினார்.

தொடர்ச்சியாக வந்த விவாதங்களில், பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. "படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்" என்று உதாரணம் கூற, நான் "அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார். ஆசீப் விக்கிப்பசங்க போன்ற உபயோகமான பதிவுகளிலும் தெரியும் நையாண்டி பின்னூட்டங்களைக் குறித்து கவலை தெரிவித்தார்.

செண்பகராஜ், உள்ளூர்ச் செய்திகள் பெரிதும் எழுதப்படுவதில்லையே என்ற ஆதங்கத்தை தெரிவித்தார். அமீரகத்துக்கே உரிய சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. செண்பகராஜின் இன்னொரு ஆதங்கம் - துறை சார்ந்த பதிவுகள் பெரிதும் வராதது குறித்து. விக்கி பசங்களுக்கு ஒரு விளம்பரம் அளித்தேன். துறை சார்ந்த பதிவுகளுக்கான தேவைகள் தெரிய வரும்போது (கேள்விகள் மூலமாக) அப்படிப் பதிவுகளும் வரும் என்றேன்.

ரொம்ப சாதுவாக விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்ததால், சொ செ சூ வைக்க ஆரம்பித்தேன். அடுத்த கேள்வியாக நான் முன்வைத்தது:

கவிஞர்களே.. ஏன் கவிதை எழுதுகிறீர்கள்?
கவிப்பகைவர்களே.. ஏன் கவிதையை வெறுக்கிறீர்கள்?

அது அடுத்த பதிவில்..

அடுத்த பதிவுக்கு முன்னோட்டம்:

தம்பி ஏன் பேசவேயில்லை?
லியோ சுரேஷ் ஏன் பதிவு ஆரம்பிக்க பயப்படுகிறார்?
பினாத்தல் ஏன் வாயை மூடுவதேயில்லை?
இன்னும் பல.. காணத்தவறாதீர்!

Dec 3, 2006

வரலாறு பட விமர்சனம் (03 Dec 06)

என் கருத்துப்படி இப்படம்மிக அற்புதமான படம் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படத்தின் திரைக்கதை என்னைப்பொறுத்தவரை நன்றாகவே இருந்தது - இப்படிப்பட்ட படங்கள் தயாரிப்பவர்கள், எப்படி எடுக்கவேண்டும் என்பதில் பல விதமான கருத்துகளும், சேர்க்கப்பட்ட சம்பவங்கள், நீக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பலவிதமான கருத்துகளும் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும்!

கதை நாயகனின் தந்தையைக் காண்பித்து படம் ஆரம்பிக்கிறது. இரு மகன்கள், ஒருவனுடன் ஆரம்பத்திலேயே போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் தந்தைக்கு. அதில் அவர் பெருமைப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.

ஏழை விவசாயி மாடசாமியை ஏய்த்து, அவன் சொத்தைப் பிடுங்க ஆசைப்படும் வெள்ளைக்காரனின் புரோக்கர் சார்பாக தந்தையும், மாடசாமி சார்பாக மகனும் ஆஜராகி, மகன் வெல்வதைப் பார்த்து புளகாங்கிதமடைகிறார் தந்தை. பெரும் பணக்காரராக இருந்தாலும், சம்பாதிப்பதில் ஆசை வைக்கச் சொல்லும் தந்தையின் பேச்சை நிராகரித்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து தேசிய விடுதலைப்போரில் ஈடுபடும் மகன் வ உ சிதம்பரமாக சிவாஜி கணேசனும், மாடசாமியாக ஜெமினி கணேசனும், நண்பர்கள் பாரதியாக எஸ் வி சுப்பையாவும் சுப்பிரமணிய சிவாவாக _______உம் வாழ்ந்திருக்கிறார்கள். (சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்).

வாழ்க்கை வரலாற்றைப் படம் பிடிப்பதில் உள்ள எல்லாச்சிக்கல்களையும் பந்துலுவும் சந்தித்திருப்பார். எந்தச் சம்பவங்களைச் சேர்ப்பது, எதை விடுப்பது, எவை சுவாரஸ்யத்தைக் கூட்டும், எவை கருத்தை வலியுறுத்தும் என்பது போன்ற சிக்கல்கள். மங்கள் பாண்டேவின் வாழ்க்கையில் பதிந்த விவரங்கள் மிகச்சிலவே என்பதால் சம்பவங்களால் அமீர்கான் குழுவால் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியவில்லை. உயர்வு நவிற்சியாக சொல்லப்போனதால் நிகழ்வுகள் பெரிதுபடுத்தப்பட்டுவிட்டன என்பது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்குக் கிடைத்த விமர்சனம்.

இந்தச் சிக்கல்களோடு பார்க்கையில், கப்பலோட்டிய தமிழன், இவ்விரண்டு எல்லைகளையுமே தொட்டுவிடாமல், பதியப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசி இருக்கிறது. தன் சொத்தையெல்லாம் விற்று கப்பல் வாங்குதல், தொழிலாளர் போராட்டத்துக்காக குழந்தைகள் அணிகலன் வரை இழத்தல், சிறையில் பட்ட இன்னல்கள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் என்ற சிதம்பரனாரின் வாழ்க்கை நிகழ்வுகள் மட்டுமின்றி, அரிசிக்குக் காசில்லாதபோதும் குருவிகளுக்கு இறைத்து வேடிக்கை பார்க்கும் பாரதியார், வீராவேசமாகப்பேசி, சிறையில் தொழுநோய் பெற்று ஒடிந்துபோகும் சிவா, ஆங்கிலேயக் கப்பலுக்கு வெடிவைக்கத் துணியும் மாடசாமி, மணியாச்சியில் ஆஷைச் சுட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் வாஞ்சிநாதன் போன்ற சமகால கதாபாத்திரங்களையும் தொட்டுச் சென்று, சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது திரைக்கதை.

பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். எல்லாம் பாரதியார் பாடல்களே என்றாலும், காட்சிகளுக்குத் தக்கவாறு சரியாகத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள் உரித்தாகின்றன. காதல் வேளையில் "காற்று வெளியிடை", கப்பல் வெள்ளோட்டத்தின்போது "வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்", செக்கிழுத்து கஷ்டப்படும் வேளையில் "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்", சுதந்திரம் பெறாமலே இறக்கும் வேளையில் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" - அருமையான தேர்வுகள். மெட்டுகளும் காட்சிகளின் உணர்ச்சியோடு இழைந்திருக்கின்றன. குறிப்பாக கடைசிப்பாடலில் "பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?" என்று சோகக்குரலில் வரும் வரிகள் உள்ளத்தைத் தொடுகின்றன.

நடிப்பைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். முதல் பாதியில் அதிக ஸ்கோப் இல்லையென்றாலும், சேரிச்சிறுவனை வீட்டுக்கழைத்து வருகையில் அவர் பேசும் வசனங்கள், ஒரே கோர்ட் காட்சியில் வாதாடும் பாங்கு, ஒரு செல்வந்தர் + தேசப் போராட்ட வீரர் இரண்டும் கலந்த மிடுக்குடன் கூடிய பாடி லேங்குவேஜ் - அசத்துகிறார். இரண்டாம் பாதியில், சிறை சென்று மீண்ட வேதனையுடன், தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிவாவைச் சந்திக்கும் காட்சி, கப்பலுக்காக விற்ற உப்பளமும், கப்பலும் ஆங்கிலேயனால் விழுங்கப்பட்டதைப் சோகத்தோடு பார்க்கும் காட்சி - தொழில்நுட்பங்கள் காட்சிக்கு அதிக அழகு வேண்டுமானால் சேர்க்கலாம், ஆனால் ஆதாரமாக நல்ல நடிகன் தேவை என உணர்த்தும்.

தலைப்பில் ஒரு பிழை - வரலாறு பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வரலாற்றுப்பட விமர்சனம் எனப்படிக்கவும்.

அஜித் நடித்த வரலாறுக்கும் இதற்கும் ஒரே தொடர்புதான் - அந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்து மூன்றாம் சீனில் வெறுத்து, மீண்டும் ஒருமுறை கப்பலோட்டிய தமிழன் பார்க்க ஆரம்பித்ததுதான்:-)

Nov 30, 2006

பிரம்மாண்ட பினாத்தல் கருத்து கணிப்பு

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறேன் என நினைத்தாலும் சரி, ரொம்பநாளா நினைப்பில் இருந்த ஒரு கருத்துக் கணிப்பை இப்போது நடத்திவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். இப்போது போடுவதால் அதிகப் பேரால் கவனிக்கப்படலாம் என ஒரு நப்பாசைதான்!

பொதுவாக கருத்துக் கணிப்புகள் எப்படிப்பட்ட முடிவைத்தரவேண்டும் என நடத்துபவர் எதிர்பார்க்கிறார் என்பதை தெரிவுகளின் மூலமே கண்டுகொள்ளலாம். நான் அடிக்கடி நடத்தும் ஸ்டண்ட்தான் இது:-)

உதாரணம் - என் வகுப்பு எப்படி இருந்தது?

அ - நன்றாக ஆ - மிக நன்றாக இ - அற்புதம்!

இப்போது, கணிப்புக்கு போகலாமா?














பினாத்தல் கருத்துக் கணிப்பு



பினாத்தலார் கருத்துக் கணிப்பு நடத்தலாமா?






காசா பணமா - நடத்தேன்!
உனக்கு என்ன தகுதி?
இதெல்லாம் ஒரு கேள்வி!
யாருடா இதை ஆரம்பிச்சது?

Current Results







எப்படி பதிவுகளின் போதே வேறு அவ்சர வேலைகளால் உள்ளே நுழைய முடியவில்லை! இப்ப மாட்டினீங்களா?

Nov 28, 2006

விழித்தெழுந்தது தூங்கிய சிங்கம் (28 Nov 06)

போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு பாட்டுப் பாடின சிங்கம், கொஞ்ச நாளா தூங்கப் போயிடிச்சு. அதுக்காக போட்டியில கலந்துக்கலையான்னு கேக்காதீங்க! ஒரு முறை தவிர, எல்லா தேன்கூடு போட்டியிலையும் கலந்துகிட்டது என்னமோ உண்மைதான். அது தவிரவும் தடாலடி அது இதுன்னு எங்கே போட்டி நடந்தாலும் தன் மூக்கை நுழைச்சதும் உண்மைதான், அந்த மூக்கு (கொஞ்சம் நீளம் அதிகமான மூக்கு) பலமுறை உடைபட்டதும் உண்மைதான். சிங்கம் கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிச்சுப் பாத்துது.

"உனக்கு ஒரு மூணு போட்டியில முதல் பரிசு கிடைச்சுதுன்னா அதுக்கு என்ன காரணம்?

போட்டியெல்லாம் புதுசா இருந்த காலம், நெறையபேர் கலந்துக்கலைன்றது முக்கிய காரணம்.
யதேச்சையா உனக்குத் தோணின விஷயங்கள் போட்டி கருத்துக்கு ஒத்துப்போன அதிர்ஷ்டம் ஒரு காரணம்.
போட்டிகளோட ரீச் பெரிசா வராத நேரம், பெரிய பெரிய பார்ட்டிங்க எல்லாம் அப்பால பாத்துக்கலாம்னு வழிவிட்டுட்டது ஒரு காரணம்.

இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ, தெளிஞ்சுக்கோ (விக்கிப் பசங்க டேக்லைன் - இதைத்தான் இன்லைன் அட்வர்டைஸ்மெண்டுன்னு சொல்வாங்களோ?). அடங்கி வாழு!"

இப்படி அந்த சிங்கம் அடங்கி வாழ முயற்சி பண்ணாலும், போட்டியில கலந்துக்கறதை மட்டும் கைவிடல! மறுபடி அந்தப் பொற்காலம் (ரசிகர்களுக்கு போதாத காலம்) வாராதான்னு எல்லா முடிவுகளையும் பார்த்துப் பெருமூச்சு விடறதோட சரின்னு இருந்துது.

விடாமுயற்சியைப் பாராட்டி ஒரு பரிசு கொடுக்கவே கொடுத்துட்டாங்க.

தேர்ந்தெடுத்த வலைப்பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சிறப்பு நடுவர்களுக்கு என் நன்றி.


--
With Best Regards,

R Suresh Babu

Nov 25, 2006

ஷார்ஜாவில் வலைப்பதிவர் சந்திப்பு (24 Nov 06)

பெரிய ஏற்பாடுகள் ஏதுமின்றி, சிற்சில செல்பேசி அழைப்புகள் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சிறு வலைப்பதிவர் சந்திப்பு ஷார்ஜாவில் நேற்று (21 நவம்பர்) அரங்கேறியது.

நாகை சிவா துபாய்க்கு வந்திருப்பதால் அவரைச் சந்திக்க என்று தொடங்கி, கீழ்க்காணும் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி அரட்டை அடித்தோம்.

1. லியோ சுரேஷ்
2. நண்பன்
3. நாகை சிவா
4. தம்பி
5. முத்துக்குமரன்
6. இசாக்
7.கவிமதி
8.பினாத்தல் சுரேஷ்

பெரிய ஏற்பாடுகள் ஏதும் இல்லாததால், அருகே உள்ள ஒரு ஈரப்புல்தரையிலேயே கூட்டம் துவங்கியது. எட்டே பேர் இருந்தாலும், பலவகையான குழுக்களிலும் அடுக்குகளிலும் இயங்குபவர்கள் என்பதால் முதலில் ஒரு சிறு சுய அறிமுகத்துடன் பேச்சுகளைத் துவங்கினோம். சிறிது நேரத்திலேயே எங்கெங்கோ சென்று, இன்னதுதான் பேசினோம் என்பதைப் பதிவதை இயலாததாக்கி விட்டது. ஒரு சிறு சாம்பிள்:

1. இணையத்தில் ஜாதி, மதவாதம்
2. கருத்துக்களை கருத்துகளால் எதிர்கொள்வது
3. ஓரிரு பதிவுகளை வைத்து ஒரு பதிவருக்கு குத்தப்படும் முத்திரைகள்
4. உன் வழி உனக்கு, என் வழி எனக்கு
5. இளையராஜா - குஷ்பூ சர்ச்சைகளில் காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகள்
6. வல்லவன், தர்மபுரி படம் பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
7. அடுத்த சந்திப்பின் இடம், பொருள்

7 மணிக்குத் தொடங்கி, 10.30 மணி வரை இன்னதுதான் என்றில்லாமல் கலந்துகட்டிய அரட்டை, மறுநாள் காலை பற்றிய சிந்தனை வந்ததும் வேண்டாவெறுப்பாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இட்லிவடைக்கு கூட்டம் பற்றிய முன்னறிவிப்பு ஏதும் தரப்படாததால் நாங்களே புகைப்படம் எடுக்க வேண்டியதாகிவிட்டது;-) முத்துக்குமரன் / நாகை சிவாவிடம் இருந்து அவற்றைப்பெற்று வலையேற்றுகிறேன்.

ஒரு இனிய மாலைப்பொழுதாக இருந்ததும், புது நண்பர்களைப் பெற்றதும், பழைய நண்பர்களின் சில புதிய பரிமாணங்களை அறிந்ததும் எல்லாருக்கும் ஏற்பட்ட அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

Nov 21, 2006

போற்றிப் பாடடி பெண்ணே? (21 Nov 06)

இது இளையராஜா பற்றிய இன்னொரு பதிவல்ல. தேவர் மகன் படத்தின் தாக்கம், தூண்டிய கலவரங்கள் குறித்த எண்ணங்களே.

தேவர் மகன் படம் வெளியான முதல் நாளே பார்த்துவிட்டு ராஞ்சிக்கு ரயிலேறிவிட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழகச் செய்திகளை அறிய வாய்ப்பு கிடைத்தபோது, இந்தப்படத்தின் வெற்றியும் படத்தால் ஏற்பட்ட கலவரங்களும் ஆறிய கஞ்சியாகிவிட்டிருந்தது. ஆனால், பின்னர் வந்த சண்டியர் சர்ச்சையின்போது இந்தப்படம் தேவர் ஜாதியினருக்கு கொடி பிடிப்பதாய்க் கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக போற்றிப்பாடடி பெண்ணே பாடல் அவர்கள் வீட்டு ரோட்டு விசேஷங்களில் முக்கிய அம்சம் கொண்டதாகவும் அறிந்தேன், ஆச்சரியப்பட்டேன். ஆச்சரியம் ஏனென்றால், நான் பார்த்த அளவில் (பிறகு பலமுறை பார்த்துவிட்டேன்) இந்தப்படத்தின் மூலம் அவர்கள் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை.

"நீ ஒரு விதை போடு, அது உன் பேரனுக்கு மரமாகும்" என்று பரந்த மனத்தைக் கொண்ட கிராமத்துப் பெரிய மனிதர் தேவர் என்று பெருமைப்பட்டாலும், தன் சொந்தப்பகைக்காக கிராமத்தையே வெள்ளக்காடாக்கத் துணிந்தவனும் அதே ஜாதி எனக் காட்டியிருந்த படம். வெளிநாட்டில் படித்துத் திரும்பிவரும் இளைஞன் இவர்களைத் திருத்த எவ்வளவு முயற்சித்தும், தனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருக்கும் அதே மிருகம் எழும்பி, வன்முறைக்கே வடிகாலாகிறான், எவ்வளவு படித்திருந்தாலும் அந்த மிருகம்தான் வெல்கிறது என்று செல்லும் திரைக்கதையால் அவர்கள் பெருமைப்பட என்ன இருக்கும் எனப் புரியவே இல்லை. கதையில் வரும் எல்லா மாந்தரும் ஒரே ஜாதியினர் என்பதால், ஊரைக் கெடுப்பவன், சாலை அமைப்பவன், குடித்துச் சீரழிபவன், தேருக்கு வெடிகுண்டு வைப்பவன், நல்வழிப்படுத்த நினைப்பவன் எல்லாரும் அந்த ஜாதிக்குள் உண்டு என்றுதான் படம் சொல்கிறது என நான் நினைத்தேன். கெட்ட கும்பலின் வழக்குகளைப் பார்த்துக்கொள்ளும் பிராமண வழக்கறிஞர், "திங்கிற கையாலே கழுவணும்" என்பதற்கு மேல் தன் கை போனதைப்பற்றிக்கூட கவலைப்படாத வேலைக்காரன் - போன்ற மிகச்சில பாத்திரங்களை விடுத்து வேற்று ஜாதி பாத்திரங்களே இல்லை எனலாம்.

ஆனால், திரைக்கதை எந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும் நடந்த விஷயங்கள் ரசிகர்கள் திரைக்கதையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே நிறுவுகின்றன. நம் பெரும்பாலான மக்கள் பாடல்கள் சண்டைகளைத் தாண்டி திரைப்படங்களைப்பற்றி யோசிப்பதில்லை என்பதுதான் தெளிவாகிறது. "தேவர் காலடி மண்ணைப் போற்றிப்" பாடும் பாடலும், "ஒரு ஆத்திரம் பொறந்தா அப்ப இவன் யாருன்னு தெரியும்" எனச் சூளுறைத்துச் சண்டை போடும் "தமிழச்சி பால் குடிச்சவன்" கொடுத்த தாக்கத்தை கிளைமாக்ஸோ, கதையின் ஆதார ஸ்ருதியோ கொடுக்காததுதான் உண்மை.

படத்திலோ, தொலைத் தொடர்களிலோ, முக்காலே மூணுவீசம் கெட்டவர்களின் வளர்ச்சியைக் காட்டி, அவற்றைப் புகழ்ந்து ப்ளோ-அப் செய்துவிட்டு, கடைசி நிமிடங்களில் நீதிபோதனை செய்தால், எது அதிகத் தாக்கம் கொடுக்கும்?

இது எனக்கே புரிந்திருக்கும்போது, கமலஹாசனுக்குப் புரியாமல் இருக்கும் என நினைக்க நான் தயாரில்லை.

இருப்பினும், இதே தவறை அவர் "ஹே ராம்"இலும் செய்திருக்கிறார். காதல் மனைவி கண்ணுக்கெதிரே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, கோபத்தில் கண்மண் தெரியாமல் சுட்டுக்கொண்டு கிளம்பும் சாகேத் ராமனை தீவிரவாத இந்து இயக்கங்கள் மூளைச் சலவை செய்வதையும், காந்தியைக் கொல்லவேண்டியதன் நியாயங்களை அவன் தீவிரமாக நம்புவதையும் விஸ்தாரமாகக் காண்பித்த திரைக்கதை, தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் ஷா ருக் கானின் மழலைத் தமிழில் ஓடிக்கொண்டே பேசுவதாக அமைத்திருந்ததால் சுத்தமாக கவனிக்கப்படாமல் போனது.

இது கமல்ஹாசன் வேண்டுமென்றே செய்யும் தவறா? விவாதிக்கலாமா?

Nov 18, 2006

வல்லவன் -- விமர்சனம் (18 Nov 06)

இந்த விமர்சனம் பார்க்கச் சாதாரணமான விமர்சனம் போலத் தோன்றினாலும், வலைப்பதிவுலக வரலாற்றில் ஒரு மைல்கல்.


அம்பானி பொண்ணைக் கல்யாணம் செய்வது பெரியதா, அம்பானியாக ஆவது பெரியதா என்ற கேள்விக்கு விடை ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. L-I-T-T-L-E- S-U-P-E-R-S-T-A-R என்று எழுத்துக்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. டி ராஜேந்தர் படத்தில் டி ராஜேந்தர் கொடுத்த பட்டம்! பட்டங்களுக்குத் தமிழ்நாடு கொடுக்கும் மரியாதை இவ்வளவு குறைவா?

பழைய படங்களைக் கொஞ்சம் கூட கூசாமல் காப்பி அடித்திருக்கிறார் சிம்பு. கல்யாணராமன் கமல் மேக்கப் மட்டுமன்றி பாடலும், இவருடைய மானசீகக் குரு எஸ் ஜே சூர்யாவின் படத்திலிருந்து காட்சிகள் (தெரியாமல் போய்விடக்கூடாது எனப் பெயர் சொல்லியே), பார்த்தேன் ரசித்தேன் சிம்ரன் போல ரீமா சென், படையப்பா போல கிளைமாக்ஸ்! அடுத்த கமல் நான் தான், அடுத்த ஷங்கர் நான் தான் என்பதைவிட அடுத்த லொள்ளு சபா ஹீரோ நான் தான் என்றால் அது நடக்கக்கூடிய நம்பக்கூடிய விஷயம்.பஞ்ச் டயலாக்குகளுக்குக் குறைவே இல்லை. ஆக்ஷன் ஹீரோக்களைவிட, பஞ்ச் டயலாக்களை காமடியன்கள்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதுவும் இன்னொரு சான்று.

அஜித் போல பேட்டிகள் மூலமும், ஹீரோ ஹீரோயின் காதல் வதந்திகள் மூலம், தயாரிப்பாளருடன் சண்டை என்று பரபரப்பு கிளப்பி படத்தைப் பேசவைக்கத் தெரிந்த அளவிற்கு படத்தை நன்றாக எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. விகடன் கொடுத்த 37 மார்க்கே அதிகம்.

யுவன் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

இந்த விமர்சனம் பார்க்கச் சாதாரணமான விமர்சனம் போலத் தோன்றினாலும், வலைப்பதிவுலக வரலாற்றில் ஒரு மைல்கல்.

காரணம்..

ஊகிப்பவர் பின்னூட்டுங்கள் பார்க்கலாம்?

Nov 16, 2006

96, 8, 2, 0.2857 அவியல்.

1.இளையராஜாவின் மறுப்பு பெரியார் பட இசையமைப்பு சர்ச்சைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கூட்டியிருக்கிறது. இந்தியா க்ளிட்ஸில் வந்த செய்திக்கும் இப்போது அவர் கூறுவதற்கும் சம்மந்தத்தையே காணோம். எது தவறு, எது சரி? ஜூவி பேட்டியில் ஞான ராஜசேகரனின் மறுப்பு இன்னும் குட்டையைக் குழப்புகிறது.

தவறான செய்தியின் அடிப்படையில் எழுதியதால் ரோஸா பின் வாங்கவேண்டும் எனக்கூறும் அன்பர்கள், எந்தச் செய்தியை நம்பவேண்டும், உறுதியாக நம்பிக் கருத்து சொல்ல முடியும் என்பதையும் விளக்க வேண்டும். மேலும் ரோஸாவின் பதிவு இளையராஜாவின் "பெரியார் பட இசையமைக்க மறுப்பு" என்பதை ஒரு தூண்டுகோளாய்க் கொண்டு இளையராஜா பற்றிய அவருடைய கருத்துக்களைச் சொல்கிறது. (அது இளையராஜா மீதான விமர்சனம் என எனக்குத் தோன்றவில்லை) அக்கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், இப்போது வந்த ஜூவி செய்தியால் அவர் எதையும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

அதேபோல, என் பதிவின் ஆதார தொனியான - "முழு ஈடுபாடில்லாததால் இசையமைக்க மறுப்பது" தவறென எனக்குத் தோன்றவில்லை. அவ்வப்போது வரும் செய்திகளின் அடிப்படையில் எழுதுகிறோம். அவை பின்னால் மறுக்கப்படக்கூடும் என்று ஒரு மாற்று நிலையும் கையில் வைத்திருப்பதுதான் போலித்தனம்.

2. "தொலைக்காட்சித் தொடர்களில் பிரபல திரைப்படங்களின் தாக்கம்" என்ற தீஸிஸ் தலைப்பை முனைவர்-ஆக-துடிக்கிறவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். கோலங்கள் என்னும் டப்பா தொடரில் மகாநதியின் காட்சிகள் கேவலமாக உல்டா செய்யப்பட்டதைப் பார்த்திருந்தால் கமலஹாசனுக்கு ரத்தக்கண்ணீர் வந்திருக்கும்! கோபுரங்கள் சாய்வதில்லையை விஸ்தாரமாக ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்கள் இன்னொரு தொடரில்.

3. சன் டிவியில் வெளிவரும் ஏராளமான தாராளமான அரசு விளம்பரங்களின் தரம் யாரையாவது உடனே அடிக்கவேண்டும் எனுமளவிற்கு கோபத்தைத் தூண்டுகின்றன. இந்தியிலேயே கேவலமாக எடுக்கப்பட்டு, அதை இன்னும் கேவலமாக (Completely lost in translation) மொழிபெயர்க்கப்பட்டு, கேப் கிடைக்கும்போதெல்லாம் ஒரு முறைக்கு இரண்டு முறையாக ஒளிபரப்பப்பட்டு "இதற்கு எவ்வளவு செலவு செய்தார்களோ, எவ்வளவு செலவு செய்ததாய் கணக்கு காட்டினார்களோ, சன் டிவிக்கு இதனால் எவ்வளவு வருமானமோ" என்ற கேள்விகளையெல்லாம் தூண்டிவிடும் நெகட்டிவ் விளம்பரங்கள்.

4. ஜெயாவையும் சன்னையும் விட்டால் வேறு போக்கிடம் இல்லாத கேபிள் நெட்வொர்க் எங்களூரில். விஜயின் லொள்ளு சபாவும், கலக்கப் போவது யாருவும் நல்ல நகைச்சுவை என்று கேள்விப்பட்டிருந்ததோடு சரி. ஆனால், இதற்கு ஒரு விடிவு வந்திருக்கிறது. லொள்ளு சபாவின் எபிசோடுகளை கணினியில் பார்க்க ஒரு பிளாக்ஸ்பாட் திறந்திருக்கிறார்கள் சில புண்ணியவான்கள். அவசியம் போயிப்பாருங்க, சிரிங்க!

5. இன்னொரு சுனாமி எச்சரிக்கை வந்தது, வாபஸ் வாங்கப்பட்டது (ஜப்பானுக்கு). இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் எத்தனை முறை வந்தாலும் புலி வருது போல நினைக்காமல் எல்லா முறையும் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை அந்த ஊர் கடலோர மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆமாம், நம்ம ஊருக்கு சுனாமி எச்சரிக்கைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்களே, என்ன ஆச்சு?

6. இந்த வாரப்பதிவுகளில் யோசிக்க வைத்த பதிவுகள்:

கடல்கணேசனின் நேர்மையே கஷ்டப்பட்டு வெல்லும் - கவரக்காரணம் அதில் இருந்த பாஸிட்டிவ் அப்ரோச், தாமதமானாலும் கிடைத்த நீதி மனதுக்குத் தரும் அமைதி.

இரண்டாவது - அசுரனுடைய "உங்கள் இரக்கம் உண்மையானதா?" நியாயமான கேள்வி. பதிவைப் படித்தபின் எனக்குள்ளும் எழுந்த கேள்வி. 50 அடி குழாய்க்கிணற்றில் விழுந்த சிறுவனுக்குக் கிடைத்த ஊடகக்கவனம் இது போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் விழாதது ஏன்?

அண்டர்கிரவுண்டு சுரங்கங்களுக்குள் பலமுறை போயிருக்கிறேன். மீத்தேனை சுவாசித்து ஒருமுறை அபாயமணி ஒலிக்க வெளியே ஓடி வந்திருக்கிறேன். இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்.. இன்னொரு நாள்!

இப்பதிவுகளில் பின்னூட்ட முடியாமை இணையத் தொடர்பு காரணங்களால் என் கைகள் கட்டப்பட்டு இருப்பதாலே மட்டும்தான். பதிவர்கள் மன்னிக்க.

பினாத்தல்கள், உங்கள் அபிமானத்தாலும் தொடர்ந்த ஆதரவாலும் இன்று 200ஆவது பதிவைச் சமர்ப்பிக்கிறது. 25 மாதங்கள் என்பதை வருடத்துக்கு, மாதத்துக்கு, வாரத்துக்கு, நாளுக்கு என வெட்டியாகப் போட்ட கணக்குதான் தலைப்பு!(அக்டோபர் 15, 2004 அன்று தமிழுக்குக் கிடைத்த சாபம் இன்னும் தொடர்கிறது:-))

பின்னூட்டத்துக்கான கேள்வி: பினாத்தலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது? (ஒன்றை மட்டும் குறிப்பிடுங்கள் - ஜனநாயக முறைப்படி கிடைக்கும் பதிலை இடதுபுறம் வைக்க உத்தேசம்)

Nov 13, 2006

வலைப்பதிவுகளில் Multiple Personality Disorder - என் இரண்டணா

So what! இதுதான் எனக்கு பெரும்பாலான "இவர்தான் அவர்" வகைப்பதிவுகளைப் படித்தவுடன் என் மனதில் எழும் எண்ணம்.

எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் சீஸனல் பதிவுகள் மட்டும் வந்தாலும், இப்படிப்பட்ட பதிவுகளுக்கு மட்டும் என்றுமே குறைச்சலே இருந்ததில்லை. சாம்பு ஆப்பு பார்டெண்டரில் தொடங்கி, சர்வ சமாதான வலைப்பதிவர்கள் (முத்து (தமிழினி)க்கு இப்பதத்துக்காக நன்றி) வரை இப்படிப்பட்ட பதிவுகளைப் போடுவதும், பின்னூட்டங்களில் ஆதாரங்கள் கேட்கப்படுவது, ஆதாரங்கள் அள்ளி வீசப்படுவது, மறுத்தல் பதிவுகள் என்று சம்மந்தப்பட்டவர்கள் பதிவிடுவது என்று ஜகஜோதியாக நடக்கும் இண்டஸ்ட்ரி இது!

முதலில் ஆதாரங்கள் - எனக்குத் தெரிந்த வரையில் ஐபி என்பது கம்ப்யூட்டரின் தனிப்பட்ட முகவரி என்கிறார்கள், பதிவுகளைப் பார்வையிடும் ஐபிகளைக் காட்டும் தளங்களும் நிரல்துண்டுகளும் ஏராளமாக உள்ளன, பின்னூட்டமிடுகையில் ஐபி காண்பிக்கும் வகையில் அடைப்பலகையை மாற்றவும் முடியும், சில வகை மின்னஞ்சல்களில் எங்கிருந்து வந்தது என்பதைக் காண்பித்து விடும் என்றெல்லாம் கூறப்பட்டாலும், இதை ஒரு முழுமையான ஆதாரமாகக் கொள்ள இயலாது என்பதும், இவை சம்மந்தமான பதிவுகளைப்படித்தே எனக்கு ஏற்பட்ட புரிதல்.

1. நண்பர்கள் மூலமாக வேறு ஐபியைக் காட்டவைக்க முடியும்.
2. பிராக்ஸி சர்வர்கள் மூலமாக ஐபியை மறைக்க முடியும்,
3. பயண நேரங்களில், வை-ஃபி ஹாட்ஸ்பாட்டுகளில் ஐபி மாறிக்கொண்டே இருக்கும்.
4. சில நிறுவனங்களில், தொழில் சார்ந்த காரணங்களுக்காக, வேறு நாட்டின் ஐபி கொண்ட இணையத் தொடர்பு இருக்கும். (நான் ஒருமுறை நடுக்கடல் எண்ணெய்க்கிணற்றுக்குச் சென்றபோது, நியூஸிலாந்து நாட்டு ஐபியில் இருந்தேன் - கிணறு கத்தாருக்கு அருகில் இருந்தது)
5. அமீரகம் போன்ற தேசங்களில் ஐபி நிரந்தரமாக மாறிக்கொண்டே இருக்கும்..

இப்படிப்பல காரணங்களால் ஐபி என்பதை சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவை எனக்கே (கம்ப்யூட்டர் கைநாட்டு (ட்ரேட்மார்க் துளசி அக்கா)) தெரிந்திருக்கையில், ஆதாரங்களை நோண்டித் தேடி எடுப்போருக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், ஐபியை வைத்து "இவர்தான் அவர்" என்று சொல்ல அவர்களுடைய உறுதியான நம்பிக்கைகளும், "இந்தக் கருத்தை இவர்தான் கூறுவார்" என்ற முன்முடிவுகளும், பாதிக்கப்பட்டதற்கு பழிவாங்குதலும் காரணங்களாக இருக்கலாம்.

இதைத் தவறு என்று சொல்லவரவில்லை நான். இதன் மூலம் சாதிப்பது ஏதுமில்லை என்பதே நான் சொல்லவருவது. "இவர்தான் அவர்" என்ற சந்தேகம் உள்ளவர்கள் ஒத்துப்பாடலாம். சந்தேகம் இல்லாதவர் கூறியவர் மேல் கோபம் கொள்ளலாம். இரண்டுக்கும் இடையில் உள்ளோர் முதல்பக்கமோ இரண்டாம் பக்கமோ சாயலாம். ஆனால் மொத்தத்தில் வம்பு பேசியதைத் தவிர வேறெதுவும் சாதிக்கப்படவில்லை.

கீழ்த்தரமான தனிநபர் தாக்கு விமர்சனங்கள், ஆபாசப் புகைப்படங்கள்-விவரணங்கள் இருந்தாலே ஒழிய சைபர்கிரைம் இதில் தலையிடப்போவதில்லை. சட்டங்கள் இணையம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் பல நாடுகளில் இன்னும் உருவாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன,முழுமை அடையவில்லை. அடையாளத்திருட்டும் ஆபாசமும் சம்மந்தப்பட்ட இடங்களிலேயே பலநாடுகள் சம்மந்தப்பட்டதாய் இருப்பதால் சட்டம் பெரிதாக எதையும் செய்யமுடியவில்லை என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மற்றபடி "இவர்தான் அவர்" என்று சொன்னவரும் சரி "இப்படிச்சொன்னதால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று சொன்னவரும் சரி, அந்தச் சவடால்களைத் தாண்டிப்பயணித்ததாக எனக்குத் தெரியவில்லை. (இன்றைய நிகழ்ச்சியைப்பற்றி மட்டும் கூறவில்லை, பழையவற்றையும் சேர்த்தே சொல்கிறேன்)

இரு பெயர்களில் பதியவேண்டிய அவசியம்?

பல காரணங்கள் இருக்கலாம். முதல் பெயரின் புனித பிம்பத்துவத்தைக் காப்பாற்ற இருக்கலாம். தன் கருத்து தாக்கப்படுவதைப் பொறுக்காமல் அதே நேரத்தில் பெயரையும் கெடுத்துக்கொள்ள விரும்பாததால் இருக்கலாம், உள்மன விகாரங்களை வெளிப்படுத்த இருக்கலாம், பழிவாங்க இருக்கலாம் - எதுவாக இருந்தாலும், அது அந்தத் தனிநபரின் பொறுப்பு. இரண்டு புனைபெயர்களை வைத்துக்கொண்டு இரு வேறு தொனிகளிலும் மொழிநடைகளிலும் பேசிக்கொண்டிருப்பவர்கள் புதிய விஷயமல்ல - கல்கி-கர்நாடகம்-எமன், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்-சுஜாதா, புஷ்பா தங்கதுரை-ஸ்ரீவேணுகோபாலன் என்று தமிழ் வெகுஜன எழுத்திலேயே உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. என்னைப்பொறுத்தவரை, தனிநபர் தாக்குதல், ஆபாசம் போன்ற எல்லைகள் மீறப்படாதவரையில் இதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு பெயர்களை வெளிப்படுத்துவதும் வெளிப்படுத்தாததும் அவரவர் சொந்த முடிவுக்கு விட்டுவிடப்படுதலே நன்று.

ஆனால், ஆதாரங்களுடன் இவற்றை வெளிப்படுத்துவோர் பலர் முன்முடிவுகளோடே இருப்பதைப் பார்க்க முடிகிறது.

(ஒரு உதாரணத்துக்குச் சில பெயர்களைப் பயன்படுத்துகிறேன் - அவர்கள் கோபிக்கவேண்டாம்)

எங்கே பிராம்மணீய ஆதரவுக்கருத்து இருந்தாலும் திருமலை,(இவரை சில பின்னூட்டங்கள் தவிர வேறெங்கேயும் நான் படித்ததில்லை!) மாயவரத்தான் உள்ளிட்ட சில பெயர்களே முன்வைக்கப்படுகின்றன. அதேபோல எங்கே பார்ப்பன எதிர்ப்புக் கருத்து இருந்தாலும் போலி டோண்டு உள்ளிட்ட சில பெயர்களே.

இவர்களைத் தவிர அந்தந்தக் கருத்து கொண்டவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது என்பது எவ்வளவு அபத்தம்? அதுவும் முழுக்க நம்ப முடியாத ஐபி, வார்த்தைக்கோர்வைகள் போன்ற ஆதாரங்களை முன்வைத்து எனும்போது?

மற்றபடி இவற்றை விவாதிப்பதால் நமது வம்பு பேசும் மனப்பான்மைக்கு பொழுதுபோகிறதே ஒழிய வேறு பிரயோஜனம் இல்லை.

வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா?

Nov 12, 2006

கலைஞருக்கு ஓய்வு தேவையா? (12 Nov 06)

இளம் வயதில் அரசியலில் அவர் எடுத்த பல முடிவுகள் அவரைப் புடம் போட்டு பல சாதனைகள் செய்யவைத்தன - பெரிய பதவிகளைப் பார்த்தாகிவிட்டது, சிறை சென்று மீண்டாகிவிட்டது. இலக்கியத்தில், அதுவும் அவர் தேர்ந்தெடுத்த இலக்கியப்பிரிவில் அவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற அளவிற்கு பல சாதனைகள் செய்துவிட்டார்.

இருந்தாலும் ஓய்வு தேவையே என்பது என் கருத்து. இனியும் அவர் அரசியல் - இலக்கியம் என்ற இரட்டைக்குதிரைச் சவாரி செய்வது இரண்டு குதிரைகளுக்குமே கஷ்டமாகத்தான் அமையும் என்பதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

முக்கியமாக, அவர் இலக்கியத்திலிருந்து ஓய்வு பெறுதல் அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

எந்தக்கலைஞரைப்பற்றிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? பிரிட்டன் பாராளுமன்றத்தில் மிக இளையவராக உள்ளே நுழைந்து, கன்ஸர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அரை சென்று, பாலியல் வழக்கில் சிறை சென்று மீண்டு வந்திருக்கும், பல பெஸ்ட்ஸெல்லர்களை எழுதி இலக்கியத்திலும் வலுவான இடத்தைப் பிடித்திருக்கும் ஜெஃப்ரி ஆர்ச்சர் என்னும் கலைஞரைப்ப்பற்றிதான் பேசுகிறேன் என்பதில் சந்தேகம் இல்லையே?

ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகம் - False Impression - ஐப் படிக்கும் துர்ப்பாக்கியத்துக்கு சமீபத்தில் தள்ளப்பட்டேன்.

அமெரிக்க கந்துவட்டி வங்கியில் பணிபுரியும் நாயகி, செப்டம்பர் 11 விபத்தில் மயிரிழையில் தப்பிப்பிழைக்கிறாள் - ஆனால் அவள் பிழைத்தது யாருக்கும் தெரியாது. இந்த நிலையை கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு, விலைமதிப்பற்ற கலைப்பொருளை இழக்கவிருக்கும் ஒரு வாடிக்கையாளரைத் தப்புவிக்க முயற்சிக்கிறாள். இவளுக்கு மட்டும் எல்லா விமானங்களும் காத்திருக்கின்றன. மன்னிக்கவும் - இவளுக்கு மட்டுமல்ல, இவளைத் துரத்தும் ஒரு FBI அதிகாரி, கொலை செய்யத் துரத்தும் (பல் நாட்டு போலீசால் தேடப்படும்) ஒரு தொழில்முறைக் கொலைகாரிக்கும், எல்லா விமானங்களும், பாஸ்போர்ட் விசா எந்தத் தொந்தரவும் இன்றி திறந்து காத்திருக்கின்றன. 300 கொடுமையான பக்கங்களுக்குப் பிறகு சுபம்!

ஆக்ஷன் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதென்னவோ சரிதான். அதற்காக இப்படியா? கதை வேகமாகப்போகிறது என்பதற்கு ஆரம்ப கால எழுத்தாளர்கள் பயன்படுத்தும் பயணம்.. பயணம் மேலும் பயணம் உத்தி, எந்தக் கதாபாத்திரமும் எப்போதும் எங்கேயும் இருக்கலாம் என்னும் ஆம்னிப்ரஸன்ஸ் லாஜிக் மீறல்... Matter of Honor, Shall we tell the President போன்ற நிஜமான ஆக்ஷன் கதைகளைக் கொடுத்த ஆர்ச்சரா இப்படி?

ஓய்வு தேவைதானே? நீங்களே சொல்லுங்கள்!

Nov 11, 2006

இளைய ராஜா? (11Nov 06)

சர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:


ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:

"இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" அல்லது "வாடி என் கப்பக்கிழங்கே".

(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)

1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -"என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா" (இதுவும் நினைவிலிருந்துதான்).

திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, "சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது" என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். "ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா" என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.

இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.


இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை - இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.

பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் - அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் - இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.

தற்போதைய சர்ச்சை - பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -

"I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job' என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.

இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் - "நான் பொல்லாதவன்" எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், "நாடு பார்த்ததுண்டா" என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து - அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.

அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.

நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

Nov 5, 2006

இலவசம்? (தேன்கூடு போட்டிக்காக- 05 Nov 06)

வெண்ணெய் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடியது கார். ஆறு சாரிகள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை நேரான சாலை, கண்ணுக்கழகாய் இரண்டு பக்கமும் மஞ்சள் பூப்பூத்த மரங்கள். இந்தியாவைவிட்டு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஒப்பிடுதலை இன்னும்கூட தவிர்க்க முடிவதில்லை.

எக்ஸிட் 164தானே சொன்னான்? 164 கண்ணில் பட்டதும் படிப்படியாக வல்து எல்லைக்கு வந்து குறுஞ்சாலைக்குள் புகுந்ததில் "Geoffrey Smith" பலகை கண்ணில் பட, வீட்டுச்சாலைக்குள் திருப்பினேன்.

ஜெஃப்பின் வீட்டுக்கு முதல் முறையாகப் போகிறேன். வாழ்கிறான் மனுஷன்! நகரத்தில் இருந்து இருபதே நிமிட ட்ரைவில் விஸ்தாரமான பெண்ட் ஹவுஸ். ஆள் படை அம்பு! காரை பார்க் செய்து உள்ளே நுழைந்தவுடன் பட்லர் வந்து வரவேற்பரைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான். "நீங்கள் எதிர்பார்க்கப் படுகிறீர்கள். இன்னும் சில நிமிடங்களில் திரு ஜெப்ரி ஸ்மித் உங்களுடன் பேசுவார்". அதெப்படி ரெகார்டட் செய்தி போலவே நேரில் உள்ளவரிடமும் இவனால் பேச முடிகிறது?

விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. ஜோக்குகளில் வருவது போல நல்ல செய்தி கெட்ட செய்தி எது வேண்டும் என ஆரம்பிக்கலாமா? எனக்கு விஷயத்தைச் சொன்ன ஃப்ரான்ஸிஸ் அப்படித்தானே ஆரம்பித்தான்..

"பாஸ் ஒரு செய்தி.. நல்லதா கெட்டதா எது முதலில் வேண்டும்?"

"கெட்டதையே சொல்லு" அப்போதுதான் நல்லது வரும்போது மனசுக்கு ஆறுதலாய் இருக்கும்.

"போர்ட்டிலிருந்து மேக் போன் செய்தான். எப்படியும் நம்ம கன்ஸைன்மெண்ட் கிளியர் ஆக ஒரு வாரம் ஆகிவிடுமாம்."

"என்ன விளையாடுகிறார்களா? ஒரு வாரம்! போர்ட் அதிகாரிகளுக்குத் தெரியாதா நம்ம கன்ஸைன்மெண்ட் பெரிஷபிள் கூட்ஸ் என்று. ஒரு வாரத்துக்குள் எல்லாம் நாசமாப் போயிடுமே.. என்ன பண்றான் மேக்? இதைக் கூட கன்வின்ஸ் பண்ண முடியாதாமா அவனால்?"

"மேக் எவ்வளவோ ட்ரை பண்ணான். போர்ட் ஸ்ட்ரைக்லே மாட்டியிருக்கு. கஸ்டம்ஸ் ஆளுங்க ஹெல்ப் பண்ணலாம். ஆனா அவங்க நாம போன முறை பண்ண அண்டர் வேல்யூ தில்லுமுல்லுலே ரொம்பக் கடுப்பா இருக்கானுங்களாம்."

20 மில்லியன் டாலர் சரக்கு! எக்ஸ்பயரி தேதி தாண்டிவிட்டால் ஒன்றுமே செய்ய இயலாது. கடலில் கரைக்கலாம்.

"ப்ராடக்ட் டீடெயில்ஸ் இருக்கா?" எதையாவது விற்க முடியுமா பார்க்கலாம்.

"எல்லாமே சீஸ் மட்டும்தான்."

"சரியாப்போச்சு! ஒண்ணுமே பண்ண முடியாது! இன்ஷ்யூரன்ஸ்?"

"வழக்கம்போல அண்டர் வேல்யூதான். 20% கூட கிடைக்காது"

"பெண்டிங் ஆர்டர் எதாவது இருக்கா?"

"அங்கேதான் நான் சொன்ன குட் நியூஸ் வருது. வால்மார்ட்டிலே இருந்து மார்மலேடுக்கு ஒரு பெரிய ஆர்டர் இருக்கு. டெலிவரி இன்னும் ஒரு வாரம் கழிச்சு. ஒரு அவசர் பேக்கேஜிங் பண்ணி, மார்மலேடோட இந்த சீஸையும் இலவச இணைப்பா பண்ணிட்டா என்ன? FDA ரூல்ஸ்படி மெயின் ஐட்டத்துக்கு மட்டும்தான் எக்ஸ்பயரி பாப்பாங்க. இதைப் பிரமோஷனா ஆக்கிட்டோமுன்னா டேக்ஸ் ரிபேட்லே ஒரு 50%கிட்டே சால்வேஜ் பண்ணிடலாம் இல்லையா?"

"நாட் அ பேட் ஐடியா! பிகர்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் பண்ணிட்டயா?"

"இதோ இங்கே இருக்கு. ஆனா ஒரு சிக்கல்!"

"என்ன?"

"அக்கவுண்ட்ஸ்லே சொல்றாங்க, பெரியவர் அப்ரூவல் இல்லாம இதைச் செய்ய முடியாதாம். வேல்யூ 5M க்கு மேலே போகுதே."

"பெரியவர் எங்கே இருக்கார்? இப்பல்லாம் ஆபீஸுக்கு வர்றதே இல்லையே"

"அவர் பெண்ட் ஹவுஸிலேதான் இருப்பார். நீங்க நேரிலே போனா கன்வின்ஸ் பண்ணிடலாம்."

எனவே, நான் இங்கே இருக்கிறேன்.

ஸ்மித் வந்துகொண்டிருந்தார்.

"ஹாய் ப்ரேஸத்! ஹவ் டூ யூ டூ?" மரபை மீறாத பிரிட்டிஷ் வரவேற்பு.

"உங்களுடன் 20 வருடமாக இருக்கிறேன். என் பெயர் பிரஸாத் என்று உங்களால் இன்னும் சொல்ல முடியவில்லை" என்றேன் சிரித்துக்கொண்டே.

"உன் பெயரை உச்சரிக்கத் தெரிந்துவிட்டால் உன்னை வேலையிலிருந்து நீக்கி விடுவேன்"

"உடம்பு எப்படி இருக்கிறது? என்ன ஆயிற்று?"

"என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. அம்மாவுக்குத் தான் ரொம்ப மோசமாகிவிட்டது. கடைசி நாட்கள் நெருங்கிவிட்டது. இப்போது கூட இருந்தால்தான் உண்டு."

"என்ன அம்மாவுக்கு?"

"வா, நீயே பாரேன்"

படுக்கையறை ஒரு ஆஸ்பத்திரியின் சுத்தத்தோடும் நாற்றத்தோடும் இருந்தது. மலர்க்கொத்துகள், ராஜாராணி படுக்கை, பளிச்சிடும் வெள்ளைச் சுவர்கள் - இந்த அலங்காரங்களுக்குச் சம்மந்தமில்லாமல் வீல்சேரில் குப்பைபோல அமர்ந்திருந்த ஸ்மித்தின் அம்மா.

"ஹலோ" என்றேன் தயக்கத்தோடு.

குரல் வந்த திசையை நோக்கி கண்கள் மட்டும் திரும்பின. ஸ்மித் சொன்னது சரிதான். உயிர் வெளியேறிவிட்ட வெளிறிய கண்கள். திரும்பியதோடு சரி. ஒரு புது ஜீவன் வந்திருப்பதை வேறெந்த விதத்திலும் அங்கீகரிக்கவில்லை.

"கேட்கிறதா?" ஸ்மித்தைப் பார்த்துக் கேட்டேன்.

"கேட்கிறது என்றுதான் டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால்தான் உன்னைத் தைரியமாக உள்ளே அழைத்துவந்தேன்."

குழப்பமாகப் பார்த்தேன்.

"இரண்டு வாரங்களுக்கு முன்புகூட உணர்வு இருந்தது. அப்போது நீ உள்ளே வந்திருந்தாயானால், கையில் கிடைப்பதை உன்மேல் தூக்கி வீசி எறிந்திருப்பாள். ரொம்ப வயலெண்டாக நடந்துகொண்டிருப்பாள். காயங்களுடன் தான் நீ திரும்பியிருப்பாய்"

"ஏன்? ...." கேள்வியை வடிவமைக்க முடியாமல் திணறினேன்.

"ஆம். அவளுக்கு ஷிசோப்ரினியா... என்னுடைய காயங்களுக்கு இப்போது அர்த்தம் புரிந்ததா?"

அலுவலகத்தில் ஸ்மித்தின் காயங்கள் ஒரு தொடர் வதந்தி. குடித்துவிட்டு ரோடில் கவிழ்ந்திருப்பார், எந்தப் பெண்ணையாவது வம்பிழுத்திருப்பார் எனப் பல ஹேஷ்யங்கள் உலாவின.

"எவ்வளவு நாளாக இப்படி?"

"1960இலிருந்து"

"அப்படியென்றால்!"

"எனக்கு ஐந்து வயதிலிருந்து. இவளைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் நான் பேச்சிலராகவே தொடர்கிறேன்." தொண்டை கரகரக்கிறது. மனிதர் உள்ளே உடைந்து போயிருக்கிறார். துக்கத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாள் ரகசியங்கள் வெளியேறுவதைப்பற்றிய கவலைகளைத் துரத்தி விட்டிருக்கிறது.

"எப்படி ஆயிற்று?"

"என் தந்தை! காதல் மனைவி மார்னிங் சிக்னஸில் தவிப்பதைப் பொறுக்க முடியாத தந்தை!" வார்த்தைகள் உடைந்து உடைந்துதான் வெளியேறுகிறது.

"அவர் ஒரு மெடிகல் சேல்ஸ்மேன். புது மருந்துக்குக் கிடைத்த இலவச சாம்பிள்களை மனைவி மீதே பிரயோகித்தார். "முழுக்கப் பரிசோதனை செய்யப்பட்டது" என்ற கம்பெனியின் வார்த்தைகளை நம்பினார்."

"அம்மாவுக்கு பெண் குழந்தை ஆசை. பிறந்தது! ஒரு வெஜிடபிளாக."

"தாலிடோமைட்?*"

"ஆம்! அம்மா அப்பாவை மன்னிக்கவேயில்லை. அந்தக் குழந்தையையும் காப்பாற்றப் போராடினாள். ஒரு வருடம் உயிரோடு .. வெறும் உயிரோடு மட்டும் இருந்து இறந்தாள் என் தங்கை. அப்பா தற்கொலை செய்து கொண்டார். அம்மா இப்படி ஆகிவிட்டாள்" இப்போது குரலில் அழுகை தெளிவாகவே தெரிந்தது.

டாக்டர் உள்ளே நுழைவதைக் கவனித்தவுடன் சுதாரித்துக் கொண்டார்.

குறிப்பறிந்து "நான் வரவேற்பரையில் இருக்கிறேன்" என்றேன்.

ஐந்து நிமிடங்களில் டாக்டரும் அவரும் ஒன்றாக வெளியே வந்தபோது இயல்பு நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.

"ப்ரேஸத்.. நீ வந்த விஷயம் என்ன?"

"அது வந்து... நம்முடைய சீஸ் கன்ஸைன்மெண்ட் ஒன்று போர்ட்டிலிருந்து கிளியர் ஆகவில்லை. ஸ்ட்ரைக்கில் மாட்டிக்கொண்டுவிட்டது. எக்ஸ்பயரி டேட் தாண்டிவிடும்போல் தோன்றுகிறது."

"என்ன செய்வதாக உத்தேசம்?"

ஒரு முடிவுக்கு வந்தேன். தொடர்ந்தேன்.

"அண்டர் வேல்யூக்குதான் இன்ஷ்யூர் பண்ணியிருக்கோம். அதனால, நஷ்டத்தை ஏற்க வேண்டியதுதான்"

_______________________
குறிப்பு * :மசக்கைத் தொல்லை (Morning Sickness) ஐ குறைக்க என்று விளம்பரப்படுத்தப்பட்ட Thalidomide 1950 - 60 களில் ஏராளமான அமெரிக்கப்பெண்களால் உபயோகப்படுத்தப்பட்ட மருந்து.
FDA - (Foods & Drugs Agency) வாலும் மருந்துக்கம்பெனியாலும் முழுமையாகச் சோதிக்கப்படாமலேயே அறிமுகமான இம்மருந்து கொடிய பல பக்கவிளைவுகளை - குறிப்பாக கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படுத்தி மருந்து வரலாற்றில் ஒரு கரும்பக்கமாகவே விளங்குகிறது.
கருச்சிதைவு, உணர்வற்ற குழந்தைகள், இந்தக்கதையில் வருவது போல் பைத்தியம் பிடித்த தாய்மார்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என ஒரு கோரத்தாண்டவம் ஆடிய மருந்து இது. கர்ப்பிணிப்பெண்களுக்கு எந்த மருந்துமே தரக்கூடாது என்ற கொள்கைக்கும் சில டாக்டர்கள் வந்ததற்கான காரணம் இது.

Oct 26, 2006

அப்ஸல், தூக்குதண்டனை, கருணை மனு (26 Oct 06)

ஏமாற்றும் பதிவு அல்ல

பொதுப்புத்தி, தேசபக்தி, திம்மித்துவம், தீவிரவாத ஆதரவு, மத நல்லிணக்க ஆதரவு/ எதிர்ப்பு, மனிதாபிமானம், உடோப்பியவாதம் - அப்சலின் தூக்கு பற்றி எழுதப்பட்ட ஆயிரமாயிரம் பதிவுகளில் எழுதியவருக்கும் பின்னூட்டியவருக்கும் மேற்கூறியவற்றில் ஏதோ ஒரு பட்டம் கிடைத்தது.

யார் என்ன எழுதியிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை யாருமே வீணடிக்காமல், அவரவர் ஸ்டைலில் கொஞ்சம் தகவல், கொஞ்சம் கருத்து என விளையாடியிருந்தார்கள். அன்னப்பட்சி போல கருத்துக்களின் தாக்கத்தை விலக்கி, தகவல்களின் தாக்கத்தை மட்டுமே கொண்டு எழுந்த யோசனைகளை எழுதுகிறேன்.

1. தூக்கு தண்டனை தேவையா?

இந்தக்கேள்விக்கு என்னால் ஆம் இல்லை யென பதில் சொல்ல முடியவில்லை. திருத்தப்பட முடியாத தீர்ப்பு என்பது பயமுறுத்தினாலும், சட்டத்திற்கு அந்தப்பக்கம் உள்ள சுதந்திரத்தில் குற்றம் செய்பவர்களுக்கு, "இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்" என்று திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுபவர்களுக்கு, பலவீனர்களை கொடுமைப்படுத்தும் வன்முறையாளர்களுக்கு - தற்போது உள்ள சட்டப்படி - இருப்பதில் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்றே தோன்றுகிறது.

இதில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு கருணையே காட்டப்படக்கூடாது என்பது என் கட்சி. எந்தப்பாவமும் தெரியாத, எந்தக்கட்சியிலும் சேராத அப்பாவிகள் கலவரத்தில் சாவதையும் பழிவாங்குதலில் தூண்டப்பட்டு கொல்லப் புறப்படுவதையும் நேரில் சில கலவரங்களில் கண்டிருக்கிறேன். இன்னொருமுறை பார்க்க தைரியம் இல்லை. திருவல்லிக்கேணியில் செருப்பு வீசியவர்கள், மனித குண்டாய் வெடித்தவர்கள், மசூதியை இடித்தால் நாடு ரத்தக்காடாகும் என்று தெரிந்தே செய்தவர்கள், ரயிலை எரிப்பதன் பின்விளைவுகளை அறிந்தவர்கள், அதிகாலை மூன்று மணிக்கு வெள்ளநிவாரணம் தருவதாக அறிவித்தவர்கள் - எல்லாரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். இது பொதுப்புத்தியாக இருக்கலாம் - இருந்துவிட்டுப் போகட்டும்.

அப்பாவிகள், மௌனப்பெரும்பான்மையினர் தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான் என் வாதத்தின் அடிநாதம். நிரபராதிகள் அரசாங்கத்தால் தண்டிக்கப்படக்கூடாது என்பதைத் தனியாக சொல்லத்தேவையில்லை. எனவே, Rarest of the Rare Cases என்பது ஒப்புக்கொள்ளப்படக்கூடியதாகவே தோன்றுகிறது.

2. சுதந்திரப்போரா? தீவிரவாதமா?

காஷ்மீர் பிரச்சினை பெரிதானதில் இந்தியாவின் பாகிஸ்தானின் பங்குகள், செய்யப்பட்ட தவறுகள், கொல்லப்பட்ட அப்பாவிகள் பற்றியும் பல விரிவான பதிவுகள் வந்தன. சினிமாக்களில் வரும் தீவிரவாதிகள் தவிர உண்மையில் யாரும் பொழுதுபோக்கிற்காக குண்டுவைக்கப் போவதில்லை, உயிர்களுடன் விளையாடப்போவதில்லை - அவர்களின் பக்கம் நியாயம் இருப்பதாக அவர்கள் கருதாத வரை.

எல்லா தீவிரவாதிகளுமே, அவர்கள் சார்ந்த கூட்டத்துக்கு நல்லவர்கள்தான், ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிமினல்கள்தான். பகத்சிங் இங்கிலாந்து ஆட்சியின் கண்களில் தீவிரவாதியாகத் தானே தெரிந்தான்? இங்கே குண்டு வைப்பவர்கள் இந்தியாவின் கண்களில் குற்றவாளியாகத்தான் தெரிவார்கள், அதில் எந்தத் தவறுமில்லை. உ பியிலும் கேரளாவிலும் அந்தமானிலும் ஆயிரம் உயிர்களைச் சாகடிப்பதுதான் காஷ்மீர் பிரச்சினையின் தீவிரத்தை இந்திய அரசாங்கத்துக்கு உணர்த்தும் வழிமுறை என்பதை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் குற்றமிழைத்ததாக அவர்கள் கருதிய ஆங்கில அதிகாரிகளைத் தான் குறிவைத்தார்களே அன்றி சம்மந்தப்படாத பொதுஜனங்களை அல்ல. இந்தப் பெரிய வித்தியாசம் கண்ணில் படாவிட்டால் மட்டுமே பகத்சிங்கையும் காஷ்மீர் போராளிகளையும் ஒப்பிடத் தோன்றும்.

3.அப்ஸல் குற்றவாளியா?

இல்லை என்று யாருமே சொன்னதாகத் தெரியவில்லை. உடந்தையாக மட்டுமே இருந்தது, குற்றத்தின் அளவு, மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது, சரியான வழக்கறிஞர் இல்லாதது போன்ற விஷயங்கள்தான் பேசப்பட்டது. எனக்கு முக்கியமாகத் தோன்றுவது ஒரு கேள்விதான் - "அப்ஸலுக்குத் தான் செய்த உதவியின் தீவிரம் தெரிந்து இருந்ததா இல்லையா?" தெரியாது என்னும் பட்சத்தில் அவன் தூக்கிலிடப்படுவது அநீதி, தெரிந்திருந்தது என்னும்பட்சத்தில் குற்றத்தின் அளவு எத்தகையதாக இருந்தாலும் கடும் தண்டனை சரியே .

இதைச் சரிபார்க்கும் வாய்ப்பு, ஊடகங்கள் வாயிலாக மட்டுமே தகவல் அறியும் நம்மைவிட, குற்றவாளியிடமும் சாட்சிகளிடமும் நேரடியாக உரையாடிய நீதிமன்றங்களுக்கு அதிக வாய்ப்பிருந்திருக்கும். நீதிமன்றங்கள் மேலேயே நம்பிக்கையில்லை எனச் சொல்பவர்கள் அதற்கு மாற்று என எதையும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.

குற்றத்தின் அளவைக் கணக்கிடாமல் "26 பேருக்கும் தூக்கு தண்டனை" எனச்சொன்ன ராஜீவ் காந்தி கொலைவழக்கு மேற்கோளிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் என்ற வாய்ப்பு அவர்களுக்கு இருந்ததையும், அங்கே தீர்ப்பு திருத்தப்பட்டதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

வழக்கறிஞர் பற்றிய குறைகளும் கூறப்பட்டன. காஷ்மீர் தழுவிய போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்துபவர்கள் வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் இருக்கையில் ஒரு வழக்கறிஞர் வைக்க முடியாமல், தூக்குதண்டனை வழங்கப்பட்டபின் போராட்டமும், அனுதாப அலை உருவாக்கலும் செய்வது திசைதிருப்பல் மட்டுமே.

4. கருணை மனு?

பாராளுமன்றம் முடிவெடுக்குமாம். எப்படிப்பார்த்தாலும், நம்மைவிட அதிகத் தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். உச்சநீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பைவிட மனித உரிமையும் State Organized Murder-உக்கு எதிரான மனப்பான்மையும் பெரிதாகத் தோன்றுமளவுக்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்குமானால் மன்னிக்கப்படுவது சரியாக இருக்கும். ஆனால் - காஷ்மீரில் போராட்டங்கள் நடக்கின்றன, பாகிஸ்தானுடன் பேச்சு பாதிக்கப்படும், அப்ஸலின் மனைவி விதவையாகிவிடுவாள், அவன் மகன் தற்கொலைக்கு முயற்சிப்பான், வாக்கு வங்கி பாதிக்கப்படும் போன்ற காரணங்களுக்காக மன்னிக்கப்பட்டால்..

என்ன செய்வது நாம் - விதியை நொந்துகொள்வதைத் தவிர?

Oct 18, 2006

விடுதலை - போட்டிக்காக Thenkoodu

விடுதலை

"இந்த முறை என்ன பண்ணப்போறே?"

"யோசிச்சுதான் செய்யணும்"

"அவசரப்பட்டு முடிவெடுக்காதே. கொஞ்ச நாளா உன் போக்கே சரியில்லை."

"அப்படி சொல்லாதே. என்னுடைய திட்டத்துக்கு கொஞ்ச நாள் முன்னாலே கூட எத்தனையோ பேர் பலியானாங்க தெரியுமா?"

"தெரியாம என்ன? ஆனா அதுக்கு அப்புறம்?"

"அப்புறம் என்ன? என்னைவிட பெரிய ஆளுங்க சிலர் வந்துட்டாங்க! அதுனாலே என்ன தப்பு?"

"தப்பெல்லாம் ஒண்ணும் இல்லை. அமாவாசை சோறு தினம் தினம் கிடைக்குமா?"

"அதுனாலே?"

"இந்த மாதம் போட்டிக்கு நீ செய்ய வேண்டியது என்னன்னு நான் சொல்றேன் கேட்டுக்க"

"நீ சொல்றதுக்கு முன்னாலேயே நான் முடிவெடுத்துட்டேன்."

"என்ன முடிவு"

"இந்த மாதம் தேன்கூடு போட்டிக்கு பினாத்தல் சுரேஷிடமிருந்து....





விடுதலை!
பி கு: அனுபவச்சிதறல்களும் அடங்குடா மவனேயும் பேசிக்கொண்டிருந்ததன் Eavesdropping!

Oct 11, 2006

கெமிக்கல் லூச்சா!

எனக்குப்பிடித்த ஒரே இந்தி நகைச்சுவைப்படம் "அந்தாஸ் அப்னா அப்னா" இரண்டு தமிழ்ப்படங்களைத் தழுவியிருந்தாலும் (பொம்மலாட்டம், நான்) ஆமிர்கானின் அசத்தல் நடிப்பு குறைகளை மறக்கச் செய்தது. மற்றபடி முழுநீளக்காமெடியை பெரும்பாலும் இந்திக்காரர்கள் முயற்சிப்பதில்லை. ஏனென்று தெரியவில்லை. "பண்டி அவுர் பப்ளி" காமெடிப்படம் என்று என்னிடம் சொன்னவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

முன்னாபாய் பார்க்காமல் வசூல்ராஜா பார்த்ததால், முன்னாபாயில் காமெடி எவ்வளவு எனத் தெரியவில்லை, இருந்தாலும், கமல்-கிரேஸி கூட்டணியிலேயே காமெடி அவ்வளவாக இல்லையென்பதால், முன்னாபாய் மேல் அவ்வளவு நம்பிக்கையில்லை. அதன் இரண்டாம் பாகம் மட்டும் என்ன பெரிசாக இருந்துவிடப்போகிறது என்று அசட்டையாக இருந்தாலும், மோகன் தாஸ் தொடங்கி தம்பி வரையிலான வலைப்பதிவு விமர்சனங்கள், ஓ பக்கத்தில் ஞாநி என்று ஊக்கிக்கொண்டே இருக்கவே கிளம்பியே விட்டேன் - இப்படம் இன்றே கடைசி என்று போர்டு ஒட்டிய நாளில்!

கதையைப் பலர் சொல்லிவிட்டார்கள். காந்தியின் புத்தகங்களைப் படித்த தாதா முன்னாபாயின் கண்ணுக்குள் "கெமிக்கல் லூச்சா" (ஹலூஸினேஷன் -ஆம்) வாக காந்தி தெரிய ஆரம்பித்து, சின்னி ஜெயந்த் போல லவ் சக்ஸஸ் ஆவதற்கு ஐடியா கொடுத்து, லஞ்சம், ஊழல், குப்பை போடல், ந்யூமரலாஜி, செவ்வாய் தோஷம் உள்ளிட்ட எல்லாப்பிரச்சினைகளுக்கும் அஹிம்சைத் தீர்வும் கொடுக்கிறார். அஹிம்சையை போதிப்பது தெரியாமல் உள்ளே நுழைத்த விதமும், பொழுது போவதே தெரியாமல் அழகாகப் பின்னப்பட்ட திரைக்கதையும் படத்துக்குப் பெரிய வலு.

முக்கியமாக குறிப்பிட வேண்டியவை:

1.ஹர்ஷத் வார்சி - கலக்கியிருக்கான் மனுஷன்! ஒவ்வொரு முகபாவமும் சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு சேம்பிள் டயலாக்:

சர்க்யூட் (ஹர்ஷத்) - 116 வீட்டை காலி பண்ணியிருக்கோம், 200 பேர் எலும்பை முறிச்சிருக்கோம் - இதுவரைக்கும் ஒருமுறை கூட ஜெயிலுக்கு வந்தது கிடையாது. அஹிம்சைன்னு ஒரு சாரி சொல்ல ஆரம்பிச்சொம், ஸ்ட்ரெயிட்டா ஜெயிலுக்கு உள்ளே!

முன்னா (சஞ்சய்) - நாம காந்தி மாதிரி ஜெயிலுக்குள்ளே வந்ததால நமக்கு எவ்வளோ ரெப்யுடேஷன் வளரும் தெரியுமா? நாளைக்கு நம்ம பேர்லே ரோட் வைப்பாங்க, முன்னா நகர், சர்க்யூடாபாத்!

ச: நோட்டுலே நம்ப போட்டோ வரும்

மு: ஸ்கூல்லே நம்ம வரலாறு பாடமா வரும்.

ச: நம்ம பொறந்த நாளு ட்ரை டே ஆகும்..

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு..

இருவரும்: வேண்டாம் - ட்ரை டே மட்டும் வேண்டாம்!

2. திவ்யா வித்யா பாலன் - சொல்வதற்கு ஒன்றுமில்லை. திரையில் வந்து நின்றாலே போதும். குட் மாஆஆஆர்னிங் மும்பை!

3. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - குறிப்பாக லகே ரஹோ முன்னா பாய்.. எவ்வளவு ரிச்சாக எடுக்கிறார்கள்!

குறை என்று என் கண்ணில் எதுவும் படவில்லை.

கொஞ்சம் செண்டி காட்சிகள் இருந்தாலும், இழுவை இல்லாததால், இதை முழுநீளக்காமெடியாகவே அங்கீகரித்து, "அந்தாஸ் அப்னா அப்னா" வுடன் லகே ரஹோ முன்னாபாயும் சேர்க்கிறேன்.

இந்தப்படத்தைப் பார்த்து நாட்டில் அஹிம்சை அதிகரித்ததா? இந்தியன் ரமணா வந்த போதும் இதையேதானடா சொன்னீங்க:-)) 100 கோடி பேர் ஒவ்வொருத்தருக்கும் கெமிக்கல் லூச்சா வந்தா ஒரு சான்ஸ் இருக்கு!

குடும்பத்தோடு பார்த்து, ரசிக்க வேண்டிய படம்/

Oct 7, 2006

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா..

தமிழ்நாட்டில் கொசு ஒழிந்துவிட்டது, வியாதிகள் தீர்ந்துவிட்டது.. அட கற்பனைதாங்க.. அதைத் தொடர்ந்து

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா

சிக்குன் குனியாவைச் சிதறடித்த செம்மல் டாக்டர் கலைஞருக்கு கலையுலகம் பாராட்டு விழா..

வரும் வெள்ளி சனி ஞாயிறு, உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு நாளும் மாலை 6:30 லிருந்து 11:30 வரை.

நிகழ்ச்சியை உடன் வழங்குவோர் - எம் ஆர் கே வி வழங்கும் பாரம்பரியக் கிழிசல் பட்டு, டெக்ஸ்டான் வழங்கும் ரிவர்ஸிபிள் பனியன் ஜட்டிகள், பெரியாத்தா மசாலாவின் மட்டன் மோர்க்குழம்பு மசாலா, "மக்களாட்சிதான் வேண்டும்" மற்றும் ராங் ராஜா!

நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

கலைஞர் அவர்களே,

வட்டி கட்டி வதைபட்டு கொண்டிருந்த எங்களுக்கு வரிவிலக்கு அளித்த செம்மலே.

கொசு கடித்து கஷ்டப்பட்ட எங்களுக்கு கொசு மருந்து அளித்த கோமகனே.

சிக்கன் சாப்பிடவே கஷ்டப்பட்ட எங்களுக்கு சிக்குன் குனியாவிலிருந்து விலக்கு அளித்த வெண்ணிலவே..

நீங்கள் இன்னும் 2000 ஆண்டு வாழ வேண்டும், நீங்களே தமிழகத்தைத் தொடர்ந்து ஆளவேண்டும்.. என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால், ஆட்சி மாறும்போதெல்லாம் இரண்டு மூன்று கலைநிகழ்ச்சிகள் நடத்துவது கட்டுபடியாகவில்லை.

நடிகர் விவேக்

டெம்பரேச்சர் ஏறினாலே ஸ்ட்ரெச்சர்னு சொல்லிகிட்டு இருக்காங்க சில பேர்! மாட்டினவனெல்லாம் மலேரியா பார்ட்டி, சிக்குனவனெல்லாம் சிக்குன் குனியா பார்ட்டின்னு விளையாடிகிட்டிருந்தாங்க!

இப்போ எங்க வீட்டுக் கொசு கூட எங்க பேச்சு கேக்குது. பசு மாதிரி அடங்கிக்கிடக்குது. இந்தக்காலத்திலயும் வியாதி.. மலேரியா..சிக்குன் குனியான்னு சொல்றவனையெல்லாம் ஆயிரம் கலைஞர் வந்தாலும் திருத்த முடியாதுடா!

கவிப்பேரரசு வைரமுத்து

கடிப்பது கொசுக்களில்
பெண்ணினம் மட்டும்தான்
கொசுக்கள் அழிந்ததைப்
பார்த்து இன்று
துடிப்பதும்
பெண்ணொருவர் மட்டும்தான்.

உபாதைகள்
தோன்றலும் மறைதலும்
விஞ்ஞானம் கண்டவை.
ஒரு மாதத்தில்
வியாதியை அழித்தது
உன் நிர்வாக ஞானம் மட்டுமே
கண்டது..

கவியரசர் வாலி

சிக்கனமாய் இருக்கச்
சொன்னது ஈரோட்டுக் கிழவன்
சிக்குன் குனியாவை அழித்தது
இந்த திருவாரூர் உழவன்.

அழிந்தது கொசு
ஆனந்தப்படுவது இந்தச் சிசு.

இனி உள்ளாட்சியும் உன்
ஃபுல்-ஆட்சிதான்.

நடிகர் கமலஹாசன்

கொசுவை ஒழித்தது நல்ல விஷயம்தான். ஆனால் அதைவிடவும் பெரிய பிரச்சினைகள் திரை உலகை ஆக்கிரமணம் செய்து கொண்டிருக்கிறது என்கிற விஷயம் - செய்தின்னும் சொல்லலாம்..கலைஞருக்குத் தெரியாததல்ல - அவரை தமிழ்நாடே முதல்வராய்க் கொண்டாடிக்கொண்டிருந்தாலும் அவர் முதலில் கலஞர் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை..

அகாடமி அவார்டுகள் அமெரிக்கப் படங்களுக்குத் தந்தாலும் அதில் தமிழனின் பங்களிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும். உலகத்தரத்துக்கு ஏற்கனவே தமிழ்ப்படங்களுக்கு அரசு விருது வழங்கினாலும் அதில் வேற்று நாட்டுப்படங்களுக்கு விருது வழங்கப்படுவதில்லை. எனவே, இனிமேல், தமிழில் சிறந்த படமாக "தாலி காத்த காளி அம்மன்" -ஐத் தேர்ந்தெடுக்கையில், கூடவே அயல்நாட்டுப்பட வரிசையில் "ஷிண்ட்லர்ஸ் லிஸ்டை"யோ "பைசைக்கிள் தீவ்ஸை"யோ தேர்ந்தெடுத்து நம் விருதுகளை உலகத்தரமாக்கவேண்டும் என ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோரிக்கை வைப்பது ஒரு சக நடிகனாக, சக மனிதனாக, சக கடவுளாக எனக்கிருக்கும் உரிமை யாருக்கும் குறைந்ததல்ல என்று ஓங்கி உரத்தே சொல்லுவேன்.

நடிகர் இயக்குநர் பாக்யராஜ்

இப்படித்தான் பாருங்க, போடி பக்கத்துலே ஒரு கிராமத்துலே, ஒரு வயசாளிகிட்டே பேசிகிட்டிருந்தேன். எதார்த்தமாத்தான் பேசிக்கிட்டிருந்தவர், பொண்டாட்டிகிட்டே திரும்பி "கொசுமருந்து வாங்கியாரட்டுமா"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர் சம்சாரம் "ஏழு கழுதை வயசு ஆவுது, இப்போ கொசு மருந்து ஒண்ணுதான் குறைச்சலா"ன்னு கேட்டாங்க! அவருகிட்டே "என்ன, உங்க சம்சாரம் கொசு மருந்துன்னா கோவப்படுறாங்க?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு, "கொசு மருந்து மட்டும் இல்லாட்டி, இந்தியாவோட ஜனத்தொகை எப்போவோ 200 கோடியைத் தாண்டியில்ல போயிருக்கும்?"னாரு.

இப்போ தமிழ்நாட்டுலே கொசுவே இல்லே. ஆனா சுகாதார நிலையத்துலே வேற ஒரு சமாச்சாரம் ஒரு ரூபாய்க்கு மூணுன்னு தராங்க! ஜனத்தொகைய கூட்டிபுடாதீங்க சாமிங்களா!

நடிகர் இயக்குநர் பார்த்திபன்

கலைஞர் அவர்கள் ஒரு பொறுக்கி (பறந்து வரும் கல்லிலிருந்து தப்பித்த் வண்ணம்) - பல இலக்கியங்களிலுருந்தும் முத்துக்களைப் பொறுக்கி நமக்குத் தருபவர்னு சொல்ல வந்தேங்க!

ஒரு கொசுவே கலைஞர் பற்றிப் பாடிய கவிதைக்கிறுக்கலை அதுக்கே தெரியாம ரெகார்டு பண்ணிகிட்டு வந்தேன். கேளுங்க!

எங்கள்
ரி
திரி
எதிரி
நீ.

மக்களுக்கோ
பன் -
நண்பன்!

ஜனங்களுக்கு
வியாதியைக் கொடுக்கும்
கொசுக்களுக்கு
வியாதி கொடுத்து
வீட்டில்
முடங்கவைத்த
கலைஞருக்கு

மக்கள் சார்பில் ஒரு ஜே -- சாரி.. ஓ!

நடிகர் ரஜினிகாந்த்

ஒரு பெரிய மகானைச் சந்திச்சு பேசிகிட்டிருந்தேன் - "அஸ்வம் வதம் ஜகத் புண்யம்" னு ஒரு அற்புதமான மந்திரத்தை சொன்னாரு.

ஒரு கிராமத்துலே, தாத்தா, அப்பா, பேரன் எல்லாரும் இருந்தாங்க. நல்ல பெரிய குடும்பம். எல்லா வசதிகளோடும் பகவான் அருளோடவும் இருந்த குடும்பம். ஒரு முறை அந்தக் குடும்பத்தை எதிரிகள் திட்ட ஆரம்பிச்சாங்க.

திட்டறவன் எதிரியா இருந்தா பரவாயில்லை. நண்பனா இருந்தாலும் பொறுத்துக்கலாம். கொசுவெல்லாம் கடிச்சா.. இது நாட்டுக்கு நல்லதா சொல்லுங்க!

ஆனா, கண்ணா, இந்தக்கதைய இனிமே தமிழ்நாட்டுலே சொல்ல முடியாது. ஏன்னா, கொசுவே இல்லாத ஊர்லே எப்படிச் சொல்றது?

கலைஞர் ஏற்புரை

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அவர்களே, உங்கள் கஷ்டம் எனக்குத் தெரியாததல்ல, நானே முதலில் ஒரு தயாரிப்பாளர்தான்.

உங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக தமிழில் படம் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு என அறிவிக்கிறேன். நேரு உள்விளையாட்டரங்கை முன்பதிவு செய்வதற்கு கலைத்துறையினருக்கு முன்னுரிமை அளிக்கச் சொல்கிறேன்.

தம்பி விவேக் அவர்களே, ஆயிரம் கலைஞர் வேண்டாம், நான் ஒருவனே போதும், இந்நாட்டை திருத்தாமல் எனக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, பெண்ணினம் கடித்தது என்றுதானே தமிழினம் என்னைத் தேர்ந்தெடுத்தது.. கடித்த கொசுவை ஒருமுறை அடித்தால் போதாது. இன்னொரு முறை அடிக்கும் வாய்ப்பும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கவியரசர் வாலி அவர்களே, இது ஃபுல்லாக ஐந்தாண்டும் மேலும் ஆளும் ஆட்சி.. மக்கள் ஃபுல்லாக அடிக்கும் ஆட்சி அல்ல!

கலைஞானி கமலஹாசன் அவர்களே, நல்ல ஆலோசனை, உடனடியாகவே ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல், தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகளோடு "சேரப்பெருலாதன் முதுகுடுமிப் பெருவழுதி" விருது ஒன்று உருவாக்கப்பட்டு உலகப்படங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்.

பாக்யராஜ் அவர்கள் என்னைத் திட்டுகிறாரா வாழ்த்துகிறாரா என்றே தெரியவில்லை. மக்கள் வாழ கொசுவை ஒழித்தால் மக்கள்தொகை வளரும் எனப் பயமுறுத்துகிறாரே..

தம்பி பார்த்திபனுக்கு கவிதையாகவே பதிலளிக்கிறேன்.

கொசுவும் ஒழியும்,
பசுவும் தணியும்..
மக்கள் ஒழிக்கவேண்டியதை
ஒழித்தால்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு மட்டுமே புரியும் வகையில் சொன்னது எனக்குப் புரிந்துவிட்டது. தமிழ் மக்கள் அறிவார்கள், அந்தப்பெரிய குடும்பத்தைத் திட்டுவது பலரின் பொழுதுபோக்காய் இருந்தது ஒரு காலம், காக்கைக் கூட்டமும் திசை திரும்பியது இந்தக்காலம்.

ஆடலால் என்னை மகிழ்வித்த நமீதா, ரகசியா, திரிஷா ஆகியோருக்கும் என் நன்றி.

_____________________________________________________________________

பி கு: சன் டிவியில் தொடர்ந்து தாக்கும் கலையுலகப்பாராட்டு விழாக்களால் நொந்து போயிருந்த எனக்கு இட்லிவடையில் இந்தப்பதிவில் சிறில் அலெக்ஸின் இந்தப்பின்னூட்டம் நிஜமாவே வரவைத்த சிரிப்பை விரித்தேன். இந்தப்பதிவு தன்னைத் தானே எழுதிக்கொண்டது:-))

Oct 2, 2006

ஐ க்யூ தேர்வு

இணையம் முழுக்க ஐ க்யூ தேர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாக்கேள்விகளும் ஆங்கிலத்தில், ஆங்கில அறிவையும், கணித அறிவையும் உலக அறிவையும் சோதித்து இந்தா பிடி என்று மார்க்கை அள்ளித் தெளிக்கின்றன.

எந்தத் தேர்வாவது, நமக்கு மட்டுமே தெரிந்த கேள்விகளைக் கேட்கின்றனவா? ரஜினிகாந்தின் 100 ஆவது படம் எது? ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான படம் எது? வைகோ 1996 தேர்தலில் எந்தக்கட்சியில் இருந்தார்? அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம்?.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன? யாராவது இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்களா?

எனவே, சோதனை முயற்சியாக, நான் ஒரு தேர்வைத் தயாரித்திருக்கிறேன். 30 கேள்விகள், 6 பிரிவுகளாக. இப்போதைக்கு எல்லாக்கேள்விகளும் பொருத்துக வகை மட்டுமே.

இடப்புறம் உள்ள கேள்விக்கு வலப்புறம் உள்ள தெரிவை பொருத்துங்கள். அந்த நேரத்தில் மறைக்கப்படாமல் தெரியும் தெரிவுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். சொடுக்கியவுடன் அடுத்த இடப்புறத் தெரிவுக்குப் போய்விடும். தவறெனில் முந்தைய கேள்வியை அழுத்தி சரி செய்யலாம்.

ஆறு பிரிவிற்கும் விடைஅளித்தபிறகு உங்கள் மதிப்பெண்ணுக்குத் தகுந்தமாதிரி பட்டம் வழங்கப்படும். (அந்தப்பட்டத்தை மட்டும் பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.)

கருத்துக்களை தயங்காமல் கூறுங்கள்.

சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா வலைப்பதிவுகளை? (02 Oct 06)

தவறி வந்திருந்தால் மன்னிக்க, வலைப்பதிவில் நடக்கும் சண்டைகள், திட்டுகள், கருத்து சுதந்திரம் / வன்முறை பற்றியெல்லாம் இந்தப்பதிவு பேசப்போவதில்லை. இப்படி எழுதுங்கள், இவற்றை எழுதுங்கள் என்னும் அட்வைஸும் கிடையாது.

வேறு என்ன?

வலைப்பதிவுகள் என்பது என்ன?

தனிப்பட்ட நாட்குறிப்பா? ஆமெனில் ஏன் தமிழ்மணம் தேன்கூடு போன்ற திரட்டிகள் தேவைப்படுகின்றன? நாலு பேர் படிக்கத்தானே எழுதுகிறோம்..

நண்பர்களைச் சந்திக்க ஒரு தளமா? எத்தனையோ பாரம்கள், சாட் ரூம்கள் அதற்காக இருக்கின்றனவே..

அச்சு ஊடகங்களின் அடுத்த அவதாரமா? என் கருத்துப்படி ஆமாம்.

ஆனால் அடுத்த அவதாரம் என்று சொல்ல முடியுமா?

ஊடக மாற்றங்கள் ஒவ்வொன்றிலும், புது ஊடகத்தின் தனித்தன்மை வெளிப்படும்போதுதான் புது ஊடகம் நிலைபெறுகிறது.

தெருக்கூத்து போலவே இருந்தவரை நாடகங்களோ, நாடகங்கள் போலவே இருந்தவரை திரைப்படங்களோ, திரைப்படங்களே இருந்தவரை சின்னத்திரையோ பெரும் வளர்ச்சி பெறவில்லை. அரங்க அமைப்புகள் என்ற தனித்தன்மையால் நாடகங்கள் நின்றன, வெளிப்புறப்படப்பிடிப்பு என்ற தனித்தன்மையால் திரைப்படங்கள் நின்றன, உடனடி ஒளிபரப்பு என்பதால் சின்னத்திரை நின்றது.

எனவே, வலைப்பதிவுகள் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமானால், அச்சு ஊடகங்களால் முடியாத தனித்தன்மைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.

உடனடியான பின்னூட்டங்கள், ஹைப்பர்லிங் சுட்டிகள் ஆகிய வலைப்பதிவின் தனித்தன்மைகளை ஏறத்தாழ எல்லாரும் பயன்படுத்துகிறோம்.

Podcasting போன்ற விஷயங்களை வைத்து ஒலி வலைப்பதிவுகள் வந்து, வானொலி, அச்சு ஊடகம் இரண்டுக்கும் மாற்றாக, அவற்றைவிட உயர்வாக வரும் பதிவுகள் மிகச்சிலவே உள்ளது வருத்தமே.

குறும்படங்கள், படத்துணுக்குகள் ஆகியவற்றை இணைத்து வரும் பதிவுகளில் பெரும்பாலானவை நமது தயாரிப்பாக இல்லாமல், Forwarded Mail வகையைச் சார்ந்தே இருப்பதால், தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியில் அவற்றைச் சேர்க்க இயலாது.

என்னுடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை ஃப்ளாஷ் மென்பொருள் உதவியோடு நான் செய்யும் முயற்சிகளே.
அதற்கு முக்கிய காரணம், அவற்றின் இடையூடாடும் தன்மை (Interavtivity). அச்சு ஊடகங்களால் முடியாத, கணினிக்கே உரிய தனித் தன்மை.


கொஞ்சம் ஐடியா, கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் யார் வேண்டுமென்றாலும் ஃப்ளாஷ் தயாரித்துவிடலாம். - நான் ஃப்ளாஷ் எந்தப்பள்ளியிலும் படிக்கவில்லை, மென்பொருளை வைத்தே Help Files வழியாகக் கற்றுக்கொண்டது மட்டும்தான். - இத்தனைக்கும் நானே சொல்லியிருக்கும் தேவைகள் இரண்டிலுமே நான் சராசரிக்குக் கீழ்தான்.

இதன் சாத்தியங்கள் வியப்பூட்டுகின்றன. சிவாஜி போல மிமிக்கிரி செய்த நகைச்சுவையும் உள்ளிட முடிகிறது, உங்கள் கருத்துக் கணிப்பு போல கணக்கிட முடிகிறது, பரமபதம் போல நடிகன் அரசியல்கட்சி துவங்குவதைப்பற்றி கிண்டல் செய்ய முடிகிறது, குட்டிக்கதைகளுக்கு Database அமைக்க முடிகிறது.. ஐடியா உருவான 2 - 3 நாட்களிலேயே இவற்றை வடிவமைத்துவிட முடிகிறது.

எனக்குத் தெரிந்ததால் ஃப்ளாஷ் பற்றி விளம்பரம் அளவிற்கு எழுதியுள்ளேன். வேறு ஏதாவது இன்னும் உத்தமமான மென்பொருள் இருந்தால் பின்னூட்டுங்களேன்.

தமிழில் ஒரு ஐக்யூ தேர்வை வடிவமைத்துள்ளேன், நாளை வலையேற்றுகிறேன்.

Sep 9, 2006

கருவி (சிறுகதை) 09 sep 06

பூங்கா வலையிதழின் முதல் இதழிலேயே என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சிறுகதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்தக்கதையும் நிஜ நிகழ்வின் கற்பனையாக்கமே.

கருவி
விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்கி உள்ளே நடந்தேன்.

"வாணியம்பாடி, திருப்பத்தூர்" என்று கூவிக்கொண்டிருந்த கண்டக்டர் என்னைப்பார்த்ததும் முகம் மாறினான்.

"நீ சரவணன் இல்லே?"

பத்து வருடம் கழிந்தாலும் என்னை நினைவு வைத்திருக்கிறான். நான் செய்த காரியத்துக்கு அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன..

"கலாட்டா பண்ணாம இருக்கறதுன்னா வண்டிக்குள்ளே ஏறு. ஏறுமாறா நடந்தேன்னா இறக்கி வுட்டுறுவேன்"

முன்னெல்லாம் என்னைப் பார்த்தாலே பயந்துவிடுவான். பதிலேதும் பேசாமல் ஒரு ஓர சீட்டைப் பார்த்து அமர்ந்தேன்.

பஸ் வேகமெடுக்க அதிகாலைக் குளிர் காற்று முகத்தில் அறைந்தது. கொஞ்ச நேர ஓட்டத்திலேயே பஸ் நிறைந்துவிட்டிருந்தது. அதே காலை நேரம், பஸ் முழுவதும் எஞ்சினியரிங் மாணவர்கள் மினிட்ராப்ட் துருத்திய பைகளுடன் கதை அடிக்கும் சத்தம், முன்சீட்டுப் பெரிசுடன் அந்தக்கால கதை பேசிக்கொண்டு டிரைவர்.. எதுவுமே பெரிதாக மாறிவிடவில்லை.

இரண்டு பயணிகளை ஏற்ற விண்ணமங்கலம் புளியமரத்தில் வண்டி நிற்க, மரத்தில் கிறுக்கல் - கீதா ஐ லவ் யூ - மறக்கத் துடித்திருக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டது...

_____________________________________________________________

"சரவணன், சுவற்றில் ஆபாசமாக எழுதியது நீங்கள்தானே?" பிரின்ஸிபாலின் கோபம் அவருடைய செயற்கையான மரியாதையில் தெரிந்தது.

அவர் அலுவலகத்தின் ஒரு மூலையில் நான் நிற்க, அவரின் எதிர் சீட்டுகளில் மெக்கானிகல் கணேஷ், பிஸிக்ஸ் தேவசகாயம், சரளா (வேண்டுமென்றே கணேஷை விட்டு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்திருந்தாள்) தவிர கம்ப்யூட்டர் ராஜாவும் இருந்தான்.

"எனக்கு நல்லாத் தெரியும் - அது உன் கையெழுத்துதான்" கணேஷ்

"ஏண்டா என்னைப்பத்தி இவ்வளவு கேவலமா எழுதினே" சரளா கண்ணில் கண்ணீர்.

நான் ராஜாவைப்பார்த்தேன். மிக நுணுக்கமாக தலையை ஆட்டியதைப் புரிந்து கொண்டேன்.

"நான் எழுதலே சார். என்னைப்போலவே வேற எவனோ எழுதியிருக்கான்"

"உங்களைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்"

"ஒரு அப்பாவியை அநியாயமாக சஸ்பெண்ட் செய்தீர்களானால் ஸ்டிரைக் வெடிக்கும் சார்"

"பயமுறுத்துகிறாயா?"

"இல்லை சார், நம்ம கிட்டே சாலிட் ப்ரூப் இல்லை..இப்போ இந்த மாதிரி ஆக்-ஷன் எடுத்தா பிரச்சினை ஆயிடும்" ராஜா சாதாரண ஆசிரியர்தான். ஆனாலும் கரெஸ்பாண்டெண்ட்டின் தம்பி மகன்.

வெளியே ஆவலுடன் காத்திருந்தார்கள் நண்பர்கள்.

"என்ன ஆச்சு தலைவா?"

"முதல்லே சிகரெட்டைக்கொடு"

கொஞ்சம் தூள் கசக்கிப் புகைத்தபின்தான் சற்றுப்பதட்டம் குறைந்தது.

"சொட்டைத்தலையன் சஸ்பெண்டுன்னு ஒத்தைக்கால்லே நின்னான்.. ராஜா சார் நம்ம பக்கம் பேசின உடனே சொட்டைக்கு முகமே தொங்கிப்போச்சு."

செல்வின் ஓடிவந்தான்.

"ராஜா சார் சாயங்காலம் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாரு."

"சரி போயிடறேன்..ராத்திரி கச்சேரி எங்கே?"

"உமாஷங்கர் வீட்டுலே எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. சரக்கு என்னுது, சால்னா பழனி"

_____________________________________________________________

மாலை வீட்டில் ராஜா கோபமாக இருந்தான்.

'என்னடா.. வேற ஆளை விட்டு எழுத மாட்டியா? உன் கையெழுத்து அது-இதுன்றான் கணேஷ்"

"அவசரத்துக்கு வேற யாரும் கிடைக்கலே சார்"

"நேத்து பெரியப்பா வந்திருந்தார். நெல்லு மண்டியாருக்கு கரெஸ்பாண்டெண்ட் ஆவணுமாம். மில்லுக்காரர் அவருக்கு சப்போர்ட்டாம்"

"பத்திரிக்கையிலிருந்து வராங்கன்னு சொன்னீங்களே"

"நாளைக்கோ நாளை மறுநாளோதான் வருவாங்க. சீக்கிரமா இந்த பிரின்ஸிக்கும் கணேஷுக்கும் ஒரு வழி பண்ணியாவணும்"

"பத்திரிக்கைல வர்றத வச்சு என்ன சார் பண்ண முடியும்?"

"முட்டாள் மாதிரி பேசாதே - நம்ம வார்த்தைய வச்சு மட்டும் அவனுங்களை தூக்க முடியாது. நெல்லு மண்டியார் கேக்க மாட்டார். பத்திரிக்கையிலே ஸ்ட்ராங்கா வந்துச்சுன்னா அத்தனை பார்ட்னருங்களுக்கும் வேற வழி இருக்காது. இப்போ மட்டும் சும்மா விட்டா, பிரின்ஸியும் கணேஷும் சேர்ந்து நம்ம எல்லாரையும் காலி பண்ணிடுவானுங்க"

_____________________________________________________________

பஸ் நிறுத்தம் வரை சென்று திரும்புவதைவிட கொஞ்ச முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம். ராஜா வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தச் சொல்லலாம்.

"உனக்காக நிறுத்த எல்லாம் முடியாது. வேணுமுன்னா ஸ்லோவா ஓட்டச்சொல்லறேன்.. நீதான் ரன்னிங்லேயே இறங்குவியே.. பத்து வருஷத்துலே மறந்து போச்சா"

பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்ததில், இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது.

ராஜா வீட்டின் முன்புறம் மாறிவிட்டிருந்தது. தாழ்வாகப் போடப்பட்ட ஓலைக்கூரை உள்ளே இருந்த பகட்டை மறைத்து எளிமையாகக் காட்டிக்கொண்டிருந்தது. வாசலில் நாலைந்து கரை வேட்டிகள்.

"யாரு வேணும்"

"அவரோட பழைய ஸ்டூடண்ட், சரவணன்னு"

"நீதானா அது? கரஸ்பாண்டெண்ட் அய்யாகிட்டே சொல்லறேன்"

சரிதான், மறுபடியும் அதிகாரம் கைமாறிவிட்டதா.

ராஜா பெருத்துப் போயிருந்தான். முழு அரசியல்வாதியாக ஆகிவிட்டான் என்பது வெள்ளை சட்டையிலும், பகட்டுச் சங்கிலியிலும் தெரிந்தது. தூக்கக்குறைவும், நேற்றைய போதையின் மிச்சமும் கண்களில் சிவப்பாகத் தெரிந்தது,

"வாடா வா.. இவன் யாரு தெரியுதா அறிவழகன், சரவணன்! இவன் துணை மட்டும் இல்லாட்டா நான் வாத்தியாராவே ரிட்டயர் ஆயிருப்பேன்."

"பெரிய ஆளாயிட்டே ராஜா.. என்னை ஞாபகம் கூட வச்சிருக்கியே"

"அறிவழகன் கொஞ்சம் வெளியே இருங்க" என்றான் ராஜா நான் ஒருமைக்கு மாறிவிட்டதைக்கண்டு.

"கதவு திறந்தே இருக்கட்டும்" என்றேன் அறிவழகனிடம்.

"உன் கோபம் எனக்குப் புரியுது.. நான் ஒன்னும் பண்ண முடியாத நிலைமையிலே இருந்தேன் சரவணா.. நீ பண்ண வேலை அப்படி"

"யாருக்காக செஞ்சேன்?"

"எனக்காகதான் செஞ்சே, நான் இல்லேங்கலியே, ஆனா அன்னிக்கு நான் உனக்கு உதவி செய்ய வந்திருந்தேன்னா அன்னிக்கே என்னை கட்டம் கட்டியிருப்பாங்க. எழுந்திருச்சிருக்கவே முடியாது. எல்லார்கிட்டேயும் உனக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாதுன்னு சொல்லிகிட்டே வக்கீல் வைக்க முடியுமா நீயே சொல்லு!"

"அதுவும் இல்லாம என் உபயோகமும் முடிஞ்சு போச்சு - இல்லையா?"

"என்ன பேச்சு பேசறே நீ? நீ மட்டும் நான் சொன்னதையா செஞ்சே? யோசிச்சுப் பாரு?"

யோசித்துப் பார்த்தேன்..

_____________________________________________________________

"நீதி கேட்டுப் போராட்டம்" "உண்ணாவிரதம்" "மாணவரை மதியாத முதல்வர் ஒழிக" பலவிதமான தட்டிகள் நடுவே உட்கார்ந்திருந்தேன்.

"தலைவா.. போர்வாள் பத்திரிக்கையிலே உன் போட்டோ வந்திருக்கு பாத்தியா?"

"முதல்வர் ஊழல், தட்டிக்கேட்ட மாணவன் டிஸ்மிஸ்" என்று அட்டையிலேயே என் புகைப்படம் போட்டிருந்தார்கள்.

"செமெஸ்டர் எக்ஸாம் வேற வருது தலைவா..ஸ்டுடெண்டுங்கள ரொம்ப அடக்கி வைக்க முடியாது"

"இன்னும் ரெண்டு மூணு நாளில எல்லாம் மாறிடும், நிறுத்திடலாம், தலைவன்றீங்க.. நான் சொல்ற பேச்சை மீறி நடப்பீங்களா?" புகழ் போதை என் தலைக்கு ஏறிவிட்டிருந்தது.

எதிர்பார்த்ததற்கு நேர் எதிராக எல்லாம் நடந்து கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ராஜாவைச் சந்திக்கும்வரை.

"நூறு ஸீட்டுடா.. எல்லாம் போச்சு! அவனுங்க செய்யறதைத்தான் செய்துகிட்டிருக்காங்க. உன்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. ஆடறாங்கடா.. ஸ்டிரைக்கும் பிசுபிசுத்துப் போச்சு.. பத்திரிக்கையிலே வந்ததுக்கும் ஒரு எபெக்டும் இல்லே.." கோபமாகப் புலம்பினான் ராஜா.

"இப்போ என்னதான் சார் செய்ய?"

"போராட்டத்தை நிறுத்திடு. அடுத்த வாரம் எக்ஸாம் ஆரம்பிக்குது, நீ எழுதறதுக்குப்போ"

"என்னைத்தான் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே..எக்ஸாம் ஹாலுக்கு உள்ள விட மாட்டாங்களே"

"அதுதானேடா திட்டமே" விளக்கினான் ராஜா.

பரீட்சை அன்று காலையிலிருந்தே பதட்டம் அதிகமாக இருந்தது. ஏற்றிய சரக்கு உதவவில்லை. நாலைந்து பாக்கெட் தூளைக் கசக்கிப் புகைத்தும் பயனில்லை.

பரீட்சை அறைக்குள் கணேஷ் வினாத்தாள்களை வினியோகித்துக்கொண்டிருந்தான்.

"டேய் கணேஷ் பாடு, என் சீட்டு எங்கேடா"

"சரவணன் - கெட் அவுட் ஆப் ஹியர்.. பரீட்சை நடக்கிறது..கலாட்டா பண்ணாதே"

"எனக்குக் கொடுடா கொஸ்டின் பேப்பர்" என்று அவன் கையிலிருந்து பேப்பர்களைப் பிடுங்கினேன். அவன் கையை உதறிய வேகத்திலும் ஏறியிருந்த போதையிலும் சடாலென கீழே விழுந்தேன்.

பாக்கெட்டிலிருந்த புட்டியும் விழுந்ததில் உடைந்து நாற்றமெடுக்க, அமைதியாக இருந்த மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, தேர்வுக் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

வெறியும் கோபமும் தலைக்கேற, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன்..

_____________________________________________________________

"கணேஷ் வாத்தியாரின் வீடு இந்தச் சந்துதானே" வேகமாக வந்ததில் மூச்சு இறைக்கக் கேட்டேன்.

"அவர் போயி பத்து வருசமாச்சேப்பா - அவங்க சம்சாரமும் குழந்தையும் அந்த மூணாவது வீட்டுலே இருக்காங்க"

மூன்றாவது வீட்டு வாசலில் கில்லி ஆடிக்கொண்டிருந்தான் அவர் மகன்..பெரியவனாகிவிட்டிருந்தான். எத்தனை முறை இவனை கணேஷின் டிவிஎஸ் 50ன் முன்னால் நிற்கப் பார்த்திருப்பேன். சட்டை இல்லை, கிழிந்த டிரௌசர்..என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கதவைத் தட்ட வெளியே வந்த கணேஷின் மனைவி ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.. நான் இங்கேயே வருவேன் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சி.. "இன்னும் யாரைக்கொல்ல இங்கே வந்திருக்கே? உனக்கு வெறி இன்னுமா அடங்கலே" ஆத்திரமும் அழுகையும் சேர்ந்திருந்தது ..

"நான் செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்புத்தான்.. பத்து வருஷம் இல்லே.. நூறு வருஷம் ஜெயில்லே இருந்தாலும் அது பத்தாத தண்டனைதான்."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தெருவில் சுமோவின் பிரேக் கிறீச்சிட்டது. தபதபவென்று ஆட்கள் இறங்கி ஓடிவரும் சப்தம்..

"பிடிடா அவனை..எவ்வளவு கொழுப்பிருந்தா வீடு புகுந்து ராஜா சாரைக் கொன்னுட்டு தப்பிச்சு ஓடப் பார்ப்பே?" அவர்கள்தான்.. என்னைத் துரத்தி வந்தவர்கள்தான்..

சரமாரியான அடிகள் என்மேல் விழ..

வலிக்கவில்லை

_____________________________________________________________

 

blogger templates | Make Money Online