Sep 9, 2006

கருவி (சிறுகதை) 09 sep 06

பூங்கா வலையிதழின் முதல் இதழிலேயே என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சிறுகதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்தக்கதையும் நிஜ நிகழ்வின் கற்பனையாக்கமே.

கருவி
விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்கி உள்ளே நடந்தேன்.

"வாணியம்பாடி, திருப்பத்தூர்" என்று கூவிக்கொண்டிருந்த கண்டக்டர் என்னைப்பார்த்ததும் முகம் மாறினான்.

"நீ சரவணன் இல்லே?"

பத்து வருடம் கழிந்தாலும் என்னை நினைவு வைத்திருக்கிறான். நான் செய்த காரியத்துக்கு அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன..

"கலாட்டா பண்ணாம இருக்கறதுன்னா வண்டிக்குள்ளே ஏறு. ஏறுமாறா நடந்தேன்னா இறக்கி வுட்டுறுவேன்"

முன்னெல்லாம் என்னைப் பார்த்தாலே பயந்துவிடுவான். பதிலேதும் பேசாமல் ஒரு ஓர சீட்டைப் பார்த்து அமர்ந்தேன்.

பஸ் வேகமெடுக்க அதிகாலைக் குளிர் காற்று முகத்தில் அறைந்தது. கொஞ்ச நேர ஓட்டத்திலேயே பஸ் நிறைந்துவிட்டிருந்தது. அதே காலை நேரம், பஸ் முழுவதும் எஞ்சினியரிங் மாணவர்கள் மினிட்ராப்ட் துருத்திய பைகளுடன் கதை அடிக்கும் சத்தம், முன்சீட்டுப் பெரிசுடன் அந்தக்கால கதை பேசிக்கொண்டு டிரைவர்.. எதுவுமே பெரிதாக மாறிவிடவில்லை.

இரண்டு பயணிகளை ஏற்ற விண்ணமங்கலம் புளியமரத்தில் வண்டி நிற்க, மரத்தில் கிறுக்கல் - கீதா ஐ லவ் யூ - மறக்கத் துடித்திருக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டது...

_____________________________________________________________

"சரவணன், சுவற்றில் ஆபாசமாக எழுதியது நீங்கள்தானே?" பிரின்ஸிபாலின் கோபம் அவருடைய செயற்கையான மரியாதையில் தெரிந்தது.

அவர் அலுவலகத்தின் ஒரு மூலையில் நான் நிற்க, அவரின் எதிர் சீட்டுகளில் மெக்கானிகல் கணேஷ், பிஸிக்ஸ் தேவசகாயம், சரளா (வேண்டுமென்றே கணேஷை விட்டு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்திருந்தாள்) தவிர கம்ப்யூட்டர் ராஜாவும் இருந்தான்.

"எனக்கு நல்லாத் தெரியும் - அது உன் கையெழுத்துதான்" கணேஷ்

"ஏண்டா என்னைப்பத்தி இவ்வளவு கேவலமா எழுதினே" சரளா கண்ணில் கண்ணீர்.

நான் ராஜாவைப்பார்த்தேன். மிக நுணுக்கமாக தலையை ஆட்டியதைப் புரிந்து கொண்டேன்.

"நான் எழுதலே சார். என்னைப்போலவே வேற எவனோ எழுதியிருக்கான்"

"உங்களைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்"

"ஒரு அப்பாவியை அநியாயமாக சஸ்பெண்ட் செய்தீர்களானால் ஸ்டிரைக் வெடிக்கும் சார்"

"பயமுறுத்துகிறாயா?"

"இல்லை சார், நம்ம கிட்டே சாலிட் ப்ரூப் இல்லை..இப்போ இந்த மாதிரி ஆக்-ஷன் எடுத்தா பிரச்சினை ஆயிடும்" ராஜா சாதாரண ஆசிரியர்தான். ஆனாலும் கரெஸ்பாண்டெண்ட்டின் தம்பி மகன்.

வெளியே ஆவலுடன் காத்திருந்தார்கள் நண்பர்கள்.

"என்ன ஆச்சு தலைவா?"

"முதல்லே சிகரெட்டைக்கொடு"

கொஞ்சம் தூள் கசக்கிப் புகைத்தபின்தான் சற்றுப்பதட்டம் குறைந்தது.

"சொட்டைத்தலையன் சஸ்பெண்டுன்னு ஒத்தைக்கால்லே நின்னான்.. ராஜா சார் நம்ம பக்கம் பேசின உடனே சொட்டைக்கு முகமே தொங்கிப்போச்சு."

செல்வின் ஓடிவந்தான்.

"ராஜா சார் சாயங்காலம் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாரு."

"சரி போயிடறேன்..ராத்திரி கச்சேரி எங்கே?"

"உமாஷங்கர் வீட்டுலே எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. சரக்கு என்னுது, சால்னா பழனி"

_____________________________________________________________

மாலை வீட்டில் ராஜா கோபமாக இருந்தான்.

'என்னடா.. வேற ஆளை விட்டு எழுத மாட்டியா? உன் கையெழுத்து அது-இதுன்றான் கணேஷ்"

"அவசரத்துக்கு வேற யாரும் கிடைக்கலே சார்"

"நேத்து பெரியப்பா வந்திருந்தார். நெல்லு மண்டியாருக்கு கரெஸ்பாண்டெண்ட் ஆவணுமாம். மில்லுக்காரர் அவருக்கு சப்போர்ட்டாம்"

"பத்திரிக்கையிலிருந்து வராங்கன்னு சொன்னீங்களே"

"நாளைக்கோ நாளை மறுநாளோதான் வருவாங்க. சீக்கிரமா இந்த பிரின்ஸிக்கும் கணேஷுக்கும் ஒரு வழி பண்ணியாவணும்"

"பத்திரிக்கைல வர்றத வச்சு என்ன சார் பண்ண முடியும்?"

"முட்டாள் மாதிரி பேசாதே - நம்ம வார்த்தைய வச்சு மட்டும் அவனுங்களை தூக்க முடியாது. நெல்லு மண்டியார் கேக்க மாட்டார். பத்திரிக்கையிலே ஸ்ட்ராங்கா வந்துச்சுன்னா அத்தனை பார்ட்னருங்களுக்கும் வேற வழி இருக்காது. இப்போ மட்டும் சும்மா விட்டா, பிரின்ஸியும் கணேஷும் சேர்ந்து நம்ம எல்லாரையும் காலி பண்ணிடுவானுங்க"

_____________________________________________________________

பஸ் நிறுத்தம் வரை சென்று திரும்புவதைவிட கொஞ்ச முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம். ராஜா வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தச் சொல்லலாம்.

"உனக்காக நிறுத்த எல்லாம் முடியாது. வேணுமுன்னா ஸ்லோவா ஓட்டச்சொல்லறேன்.. நீதான் ரன்னிங்லேயே இறங்குவியே.. பத்து வருஷத்துலே மறந்து போச்சா"

பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்ததில், இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது.

ராஜா வீட்டின் முன்புறம் மாறிவிட்டிருந்தது. தாழ்வாகப் போடப்பட்ட ஓலைக்கூரை உள்ளே இருந்த பகட்டை மறைத்து எளிமையாகக் காட்டிக்கொண்டிருந்தது. வாசலில் நாலைந்து கரை வேட்டிகள்.

"யாரு வேணும்"

"அவரோட பழைய ஸ்டூடண்ட், சரவணன்னு"

"நீதானா அது? கரஸ்பாண்டெண்ட் அய்யாகிட்டே சொல்லறேன்"

சரிதான், மறுபடியும் அதிகாரம் கைமாறிவிட்டதா.

ராஜா பெருத்துப் போயிருந்தான். முழு அரசியல்வாதியாக ஆகிவிட்டான் என்பது வெள்ளை சட்டையிலும், பகட்டுச் சங்கிலியிலும் தெரிந்தது. தூக்கக்குறைவும், நேற்றைய போதையின் மிச்சமும் கண்களில் சிவப்பாகத் தெரிந்தது,

"வாடா வா.. இவன் யாரு தெரியுதா அறிவழகன், சரவணன்! இவன் துணை மட்டும் இல்லாட்டா நான் வாத்தியாராவே ரிட்டயர் ஆயிருப்பேன்."

"பெரிய ஆளாயிட்டே ராஜா.. என்னை ஞாபகம் கூட வச்சிருக்கியே"

"அறிவழகன் கொஞ்சம் வெளியே இருங்க" என்றான் ராஜா நான் ஒருமைக்கு மாறிவிட்டதைக்கண்டு.

"கதவு திறந்தே இருக்கட்டும்" என்றேன் அறிவழகனிடம்.

"உன் கோபம் எனக்குப் புரியுது.. நான் ஒன்னும் பண்ண முடியாத நிலைமையிலே இருந்தேன் சரவணா.. நீ பண்ண வேலை அப்படி"

"யாருக்காக செஞ்சேன்?"

"எனக்காகதான் செஞ்சே, நான் இல்லேங்கலியே, ஆனா அன்னிக்கு நான் உனக்கு உதவி செய்ய வந்திருந்தேன்னா அன்னிக்கே என்னை கட்டம் கட்டியிருப்பாங்க. எழுந்திருச்சிருக்கவே முடியாது. எல்லார்கிட்டேயும் உனக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாதுன்னு சொல்லிகிட்டே வக்கீல் வைக்க முடியுமா நீயே சொல்லு!"

"அதுவும் இல்லாம என் உபயோகமும் முடிஞ்சு போச்சு - இல்லையா?"

"என்ன பேச்சு பேசறே நீ? நீ மட்டும் நான் சொன்னதையா செஞ்சே? யோசிச்சுப் பாரு?"

யோசித்துப் பார்த்தேன்..

_____________________________________________________________

"நீதி கேட்டுப் போராட்டம்" "உண்ணாவிரதம்" "மாணவரை மதியாத முதல்வர் ஒழிக" பலவிதமான தட்டிகள் நடுவே உட்கார்ந்திருந்தேன்.

"தலைவா.. போர்வாள் பத்திரிக்கையிலே உன் போட்டோ வந்திருக்கு பாத்தியா?"

"முதல்வர் ஊழல், தட்டிக்கேட்ட மாணவன் டிஸ்மிஸ்" என்று அட்டையிலேயே என் புகைப்படம் போட்டிருந்தார்கள்.

"செமெஸ்டர் எக்ஸாம் வேற வருது தலைவா..ஸ்டுடெண்டுங்கள ரொம்ப அடக்கி வைக்க முடியாது"

"இன்னும் ரெண்டு மூணு நாளில எல்லாம் மாறிடும், நிறுத்திடலாம், தலைவன்றீங்க.. நான் சொல்ற பேச்சை மீறி நடப்பீங்களா?" புகழ் போதை என் தலைக்கு ஏறிவிட்டிருந்தது.

எதிர்பார்த்ததற்கு நேர் எதிராக எல்லாம் நடந்து கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ராஜாவைச் சந்திக்கும்வரை.

"நூறு ஸீட்டுடா.. எல்லாம் போச்சு! அவனுங்க செய்யறதைத்தான் செய்துகிட்டிருக்காங்க. உன்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. ஆடறாங்கடா.. ஸ்டிரைக்கும் பிசுபிசுத்துப் போச்சு.. பத்திரிக்கையிலே வந்ததுக்கும் ஒரு எபெக்டும் இல்லே.." கோபமாகப் புலம்பினான் ராஜா.

"இப்போ என்னதான் சார் செய்ய?"

"போராட்டத்தை நிறுத்திடு. அடுத்த வாரம் எக்ஸாம் ஆரம்பிக்குது, நீ எழுதறதுக்குப்போ"

"என்னைத்தான் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே..எக்ஸாம் ஹாலுக்கு உள்ள விட மாட்டாங்களே"

"அதுதானேடா திட்டமே" விளக்கினான் ராஜா.

பரீட்சை அன்று காலையிலிருந்தே பதட்டம் அதிகமாக இருந்தது. ஏற்றிய சரக்கு உதவவில்லை. நாலைந்து பாக்கெட் தூளைக் கசக்கிப் புகைத்தும் பயனில்லை.

பரீட்சை அறைக்குள் கணேஷ் வினாத்தாள்களை வினியோகித்துக்கொண்டிருந்தான்.

"டேய் கணேஷ் பாடு, என் சீட்டு எங்கேடா"

"சரவணன் - கெட் அவுட் ஆப் ஹியர்.. பரீட்சை நடக்கிறது..கலாட்டா பண்ணாதே"

"எனக்குக் கொடுடா கொஸ்டின் பேப்பர்" என்று அவன் கையிலிருந்து பேப்பர்களைப் பிடுங்கினேன். அவன் கையை உதறிய வேகத்திலும் ஏறியிருந்த போதையிலும் சடாலென கீழே விழுந்தேன்.

பாக்கெட்டிலிருந்த புட்டியும் விழுந்ததில் உடைந்து நாற்றமெடுக்க, அமைதியாக இருந்த மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, தேர்வுக் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

வெறியும் கோபமும் தலைக்கேற, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன்..

_____________________________________________________________

"கணேஷ் வாத்தியாரின் வீடு இந்தச் சந்துதானே" வேகமாக வந்ததில் மூச்சு இறைக்கக் கேட்டேன்.

"அவர் போயி பத்து வருசமாச்சேப்பா - அவங்க சம்சாரமும் குழந்தையும் அந்த மூணாவது வீட்டுலே இருக்காங்க"

மூன்றாவது வீட்டு வாசலில் கில்லி ஆடிக்கொண்டிருந்தான் அவர் மகன்..பெரியவனாகிவிட்டிருந்தான். எத்தனை முறை இவனை கணேஷின் டிவிஎஸ் 50ன் முன்னால் நிற்கப் பார்த்திருப்பேன். சட்டை இல்லை, கிழிந்த டிரௌசர்..என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கதவைத் தட்ட வெளியே வந்த கணேஷின் மனைவி ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.. நான் இங்கேயே வருவேன் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சி.. "இன்னும் யாரைக்கொல்ல இங்கே வந்திருக்கே? உனக்கு வெறி இன்னுமா அடங்கலே" ஆத்திரமும் அழுகையும் சேர்ந்திருந்தது ..

"நான் செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்புத்தான்.. பத்து வருஷம் இல்லே.. நூறு வருஷம் ஜெயில்லே இருந்தாலும் அது பத்தாத தண்டனைதான்."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தெருவில் சுமோவின் பிரேக் கிறீச்சிட்டது. தபதபவென்று ஆட்கள் இறங்கி ஓடிவரும் சப்தம்..

"பிடிடா அவனை..எவ்வளவு கொழுப்பிருந்தா வீடு புகுந்து ராஜா சாரைக் கொன்னுட்டு தப்பிச்சு ஓடப் பார்ப்பே?" அவர்கள்தான்.. என்னைத் துரத்தி வந்தவர்கள்தான்..

சரமாரியான அடிகள் என்மேல் விழ..

வலிக்கவில்லை

_____________________________________________________________

Sep 5, 2006

லிப்ட் புதிர், சில குறிப்புகளோடு (05 Sep 06)

இந்தப்புதிருக்கு இதுவரை 14 பதில்கள் மட்டுமே வந்திருக்கின்றன. மிகக்குறைவு என்று நான் கருதுவதால் இந்த மீள்பதிவு, விடையைக் கண்டுபிடிக்க சில குறிப்புகளுடன்.


1. அழகுக்கு அவள் சுரங்கம்
பேயும் அவளிடம் இறங்கும்.
பதினெட்டு வயது பியூட்டி
ஓட்டி வந்தாள் ஸ்கூட்டி
இதயம் ஆனது தெஃப்ட்
கொஞ்சம் கிடைக்குமோ லிஃப்ட்?

குறிப்பு: ஆங்கிலம் தமிழ் ரைமிங், அதிலே இவரோ பெரும் கிங்!

______________________________________

2. பைக் ஆண். அதன் ஹாண்டில்பார் பெண். சகலருக்கும் இது புரிவதில்லை. புரிந்தவர்கள் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள், புரியாதவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

பைக்கும் ஹாண்டில்பாரும் போல ஆண் துணை பெண்ணுக்கும், பென் துணை ஆணுக்கும் இங்கே கல்பகோடி ஆண்டுகளாக ஜனித்துவந்திருக்கும் சாஸ்வதமான உண்மை. தியானத்துக்கு குரு தேவை. மோகத்துக்குத் தேவையில்லை.

மோகனும் அதை மறுக்கும் மனநிலையில் இல்லை. மன்மதன் அம்புகள் விட்டான், மோகனுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. அவள் காதோரம் குசுகுசுப்பாய் நேற்றுப்பாடிய பாடல் நினைவாடியது..

"ஓடும் தண்ணியிலே பாசியில்லையே..
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயுமில்லையே.."

ப்ரியா எதிரே வண்டியில் வந்தாள். நிறுத்தினான். அவள் புருவம் உயர்த்தி "என்ன" என்பதாய்க்கேட்டாள்.

"கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?"

குறிப்பு: தடித்த எழுத்துகள், தியானம், மோகம், பாடல்!
______________________________________

3. "நிறுத்து"

"ஏன்"

"போகணும்"

"எங்கே"

"நீ போற இடத்துக்குத் தான்"

"என்னை ஏன்"

"நீ அழகா இல்ல! படிக்கல! உன்னை எனக்குப் புடிக்கல.. உன்னை லவ் பண்ணிடுவேன்னோன்னு நினைக்கல..ஆனா, நான் போற இடத்துக்கு நீதான போறே.."

குறிப்பு: தேவையில்லை
______________________________________


4. "மச்சி அவ வர்றாடா.. இன்னிக்காவது உன் மனசுலே இருக்கறத அவகிட்டே மறைக்காம சொல்லிடு"

"அவ கிட்டே கேக்கறதுக்கு எனக்கு தயக்கமில்லைடா.. ஆனா, நான் கேட்டு அவ மறுக்க வேண்டிய நிலைமை இருந்தா அவ மனசு வேதனைப்படுமே.. அவ வேதனையத் தாங்கற சக்தி எனக்கு இல்லைடா"

"மச்சி லிப்டுங்கறது பீச்சுல போடற மிளகா பஜ்ஜி மாதிரிடா.. சூடா இருக்கும்போது சாப்டா மட்டும்தாண்டா டேஸ்ட்டு..லேட்டு பண்ணே, வேற எவனாவது கொத்திகிட்டு போயிடுவான்.. இன்னிக்கும் எப்படியும் அவகிட்டே கேட்டுடுடா"

குறிப்பு: மச்சி!, லிப்டுங்கறது..
______________________________________

5. வாகனம்..
சக்கரத்தைக் கண்டுபிடித்தவனே
நித்தியம் கொண்டாடும் அதிசயம்..
அதன் பாகம் மறைத்திருக்கும் ரகசியம்.
காலதேவனின் காலில்விழாமல் நேரம் சேமிக்க அவசியம்.

புதன் கிரகம் ஆக்ஸிஜன் இல்லாதது..
புதுவண்டியும் எரிபொருள் இன்றிச் செல்லாதது.

சில வண்டிகளும் ஆண்கள் போலத்தான்..
தாவணி சேலையை உறுவும்.
இருந்தாலும்,
லிஃப்டில் கணியும் உறவும்.

குறிப்பு: சாதா சந்தப்பாடலினூடே அறிவியல்!

______________________________________

6. "நீங்கதானே மிஸ்டர் வாதூலன்?"
வாதூலன் வியர்த்தார். கையினின்றும் குளிர்கண்ணாடியை முகத்துக்கு அனுப்பினார்.
"நீங்க...... யாரு...... உங்களுக்கு........... என்ன............வேணும்?"
"அதைப்பத்தி அப்புறம் சொல்றேன். நீங்க வெச்சிருக்க காரு ஜெர்மன் மேக்தானே?"
"ஆமா.. BMW.. 150 குதிரைச் சக்தி.... புரியும்படியா சொல்லணுமுன்னா ஒரு 50 யானைய இழுத்துகிட்டுப் போற சக்தி இதுக்கு இருக்கு"
"இதுக்கு எண்ட்ரி டாக்ஸ், ரோட் டாக்ஸ் எல்லாம் கட்டிட்டீங்களா?"
"போன வாரம்தான்.... ரெஜிஸ்டர் பண்ணேன்... ஆமா.. நீங்க யாரு?"
இறுக்கமான முகத்தைச் சற்றுத் தளர்த்தினான். சிரித்தவாறே கேட்டான்.
"என் பேரு ரகோத்தமன்... W & W கம்பெனியிலே செல்லிங் எக்ஸிகியூட்டிவா இருக்கேன்.. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"

குறிப்பு: புள்ளிகள், தடித்த எழுத்துகள்
______________________________________

7. ஆறுமுகக்கோனாரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

ஏனென்றால் ஆறுமுகக்கோனார் ஒரு சாதாரண மனிதன். வேகமும் புழுதியும் அடிக்கின்ற இந்தப் பட்டணத்திலே ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சி.

அவனை எனக்கு ஆறு மாதங்களாகத் தெரியும். பஞ்சாய் நரைத்த முடி, குழி விழுந்த கன்னங்கள், நொண்டி நொண்டி நடப்பான். வாழ்வின் சுமை அவனை வளைத்துப்போட்டு விட்டது.

அவனை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவன் போக விருப்பப்படும் இடத்துக்கு மட்டுமேதான் போவான். இயந்திர உலகத்தில் இப்படியும் ஒரு பழையகாலத்து ஆளா என்று வியக்காதீர்கள்.

காலையில் எழுந்து வேலை தொடங்கினால் ஐஸ்ஹவுஸ், அங்கிருந்து பிராட்வே உணவுக்கு ராயபுரம் திரும்புவான். இந்த வழியில் செல்லும் சவாரிகளை மட்டுமே ஏற்றுவான்.

அதுசரி.. அவன் வாழ்க்கை அவனுடையது. அவனை யார் தன் வழிக்குத் திருப்ப முடியும்?

யார்தான் யாரைத்தான் தன்வழிக்குத் திருப்ப முடியும்?

அன்று ஒரு அதிசயம். நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டம்போட்ட லுங்கிக்காரன் வந்து "தேனாம்பேட்ட வர்றியா" என்றான்.

மறுத்துவிடுவான் என்றே நினைத்துக்கொண்டு பார்த்தேன்.

"சரி ஏறு" என்றானே பார்க்கலாம்.

இந்த மாற்றத்துக்கு எனக்குக் காரணம் புரியவில்லை.

வண்டி திரும்பியதும்தான் கவனித்தேன். லுங்கிக்காரன் ரஜினி பனியன் போட்டிருந்தான்.

குறிப்பு: ஆட்டோ உழைப்பாளி, பனியன் மீது படத்தால் மனமாற்றம்

______________________________________

8. "நாட்டாமை வந்துட்டாரு.. நாட்டாமை வந்துட்டாரு"

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)

"என்றா பஞ்சாயத்து?"

"படிக்கப் போன குப்புசாமி மவள இதோ இந்தா நிக்காரே வெள்ளைத்துரை.. அவரு வம்பிழுத்தாராம்"

"தோ பார்றா.. நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்.. சொல்லுப் போட்டா சொல்லுதான் மொளைச்சுப்புடும் கேட்டுக்க"

"என்றா கேட்டானாம்?"

"ஒன்ற சைக்கிள்ள என்ன டவுன்ல கொண்டு விட்டுப்போடறயான்னு கேட்டானுங்களாம் அய்யா"

"இவன் கேட்டதுக்கு யாரும் சாட்சி இருக்குதாய்யா?"

"நான் இருக்கேனுங்க"

"நீ சைக்கிள் வெச்சுருக்கியா?"

"வெச்சுருக்கேனுங்கய்யா"

"அப்போ நீ ஏன் அவன டவுனுக்கு கூட்டிப்போவல? இந்தச் சாட்சி செல்லாது செல்லாது.."

"நான் பாத்தேனுய்யா"

"என்றா கண்ணு பாத்த?"

"இந்த அண்ணா, அந்த அக்காகிட்ட கொஞ்சம் லிப்டு கிடைக்குமான்னு கேட்டாருய்யா"

"பரதேசி.. பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸு ஊர்ரு தேடி வருது.. இதிலே பச்சைப்பொண்ணைப்பாத்து லிப்டு கேட்டிருக்கியே..
இவனுக்கு இந்த ஊர்லே யாரும் லிப்டு தரக்கூடாது.. மீறி யாரும் தந்தா அவகளுக்கும் இதே தண்டன தான்.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.."

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)

குறிப்பு: தேவையில்லை
______________________________________

9. பொழுது மலரத் தொடங்கிவிட்டது. ஆதவன் தன் கிரணங்களை அடர்ந்த காட்டுக்கு உள்ளேயும் பாய்ச்சினான்.

இளஞ்செழியன் எழுந்துவிட்டான். பூங்குழலியையும் எழுப்ப யத்தனித்தான்.

"இளவரசி"

"ம்"

கார்மேகமாய் விரிந்திருந்த அவள் கூந்தலினூடே தன் கரங்களை விட்டு மெதுவாகக் கோதினான் இளஞ்செழியன். போர் புரிவதெல்லாம் வீண், இவளோடு இப்படியே காலத்தைக் கழித்துவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கும் என்று எண்ணினான். அதே நேரத்தில் ஒரு போர்வீரன் இவ்விதம் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு கடமையிலிருந்து வழுவிவிடக்கூடாது என்ற எண்ணத்தால், மீண்டும் எழுப்பினான்.
"இளவரசி"

"ம்"

"எழுந்திருங்கள்.. நம் கோட்டை திறந்துவிட்டிருப்பார்கள். யவனர்கள் சாலைவழி செல்லத் தொடங்கிவிட்டார்கள்"

"தளபதி, உங்களை ஒன்று கேட்டால் தவறாய் எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?"

"இளவரசி, நீங்கள் என்னிடம் வேண்டுகோள் விடுப்பதா, கட்டளையிடுங்கள்"

"சரியான தூக்கம் இல்லாமல் கால் வலிக்கிறது. என்னை உங்கள் குதிரையிலே வைத்து கோட்டை வரை கொண்டு செல்கிறீர்களா?"

குறிப்பு: கைகளால் தலை கோதுவாராம், ஆனால் பேசும்போது மட்டும் இளவரசி, தளபதி என்று Formal ஆக இருப்பார்களாம்!
______________________________________

10. இற்றைத் தினத்தில் காட்டாட்சி முடிந்து நல்லாட்சி தொடங்குகின்ற நாளிலே, இதுவரை சொல்லாத ஒன்றை உன்னுடன் பகிர விழைகிறேன். இதய தெய்வமும், பகுத்தறிவுப் பகலவனும் கட்டிக்காத்த இந்த மாபெரும் இயக்கம் சூதிடமும் சூழ்ச்சியிடமும் பின் தங்கிவிட்ட காரணத்தால் நாட்டில் நடந்துவிட்ட அவலங்களை நீ நன்கறிவாய்! இதயத்துக்குப் பதில் களிமண்ணைக்கொண்ட காவல் உடையில் வந்தென்னை வெஞ்சிறை அனுப்பத் துடித்த அம்மையாரின் கைக்கூலிகள் என்னை உருட்டுக்கட்டையாய்த் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றிய கதையையும் நீ மறந்திருக்கமாட்டாய். பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் அம்மையாரை ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தபோது நடந்ததன் எதிரொலியே நீ அன்று பார்த்த காட்சி என்றால் உனக்கு வியப்பாய் இருக்கும். அன்று அம்மையார் தன் வாகனம் பழுதடைந்ததால் என்னிடம் லிஃப்ட் கேட்டார். நான் மறுதலித்துவிட்டேன். லிஃப்ட் தர மாட்டேன் என்று கூறவில்லை.. இதயத்தில் அண்ணாவையும், உள்ளத்திலே உன்போன்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புக்களையும் வைத்திருந்ததால் என் சிறு வாகனம் அம்மையாரைத் தாங்காது என்றுதான் கூறினேன். அம்மையாரை நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. நடந்தால் அவர் உடல் மேலும் பொலிவடையும் என்ற நல்லெண்ணத்தில் தான் கூறினேன்.நான் செய்தது தவறா? இதை நினைவில் கொண்டு அம்மையார் எனக்கு பழிக்குப் பழியாய் நீதிமன்றம் வரை தன் கைக்கூலி காவலாளரை வைத்து லிஃப்ட் தரவைத்தாரே - அது முறையா? சிந்தித்துப்பார் உடன்பிறப்பே!

குறிப்பு: தேவையில்லை

Sep 4, 2006

இந்தியா பயணம் - சந்திப்புகள் (04 Sep 06)

விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்பதை மீண்டும் உணர்ந்தேன். 35 நாட்கள் விடுமுறை, வார இறுதிகளைச் சேர்த்து 36 நாட்கள் இந்தியாவில் இருந்தாலும், திருப்தி இல்லாமலே திரும்பி இருக்கிறேன். Nobody needs a vacation more than who had one just now என்ற மேற்கோளை முழுமையாக அனுபவிக்கிறேன்.

சில வலைப்பதிவர்களைச் சந்திக்க முடிந்தது; செல்பேசி எண் குழப்பங்களில் மறந்த மறைந்த எண்களில் சிலரிடம் மீண்டும் பேச முடியாமல் போனது. TBR ஜோஸப்புடன் அவசரமாக சில நொடிகள் பேசிவிட்டு எண் காணாமல் போனதில் மீண்டும் பேச முடியவில்லை. முத்து (தமிழினி) தன் வருகையை நான் திரும்பும் நாளிலா வைத்திருக்க வேண்டும்? ஒருமுறை தொலை பேச மட்டுமே முடிந்தது. ஒரு முறை பேசியதும் ஏனோ தேவின் எண் காணாமல் போனது. (என் கணினி அறிவு 1/10 என்றால் செல்பேசி அறிவு 0.1/10 மட்டுமே! சென்னையில் மக்கள் SMS அடிக்கும் வேகத்தைப் பார்த்து பொறாமை மட்டுமே பட முடிந்தது:-( )

சென்ற ஒரு வாரத்துக்குள்ளேயே, டோண்டு, என்றென்றும் அன்புடன் பாலா ஆகியோர் முயற்சியில் ஒரு மினி வலைப்பதிவர் சந்திப்பு போண்டா புகழ் உட்லேண்ட்ஸில் நடந்தது. மரபுகளை உடைக்கும் விதமாக நான் போண்டா சாப்பிடவில்லை. ஐகாரஸ் பிரகாஷ், ரோஸா வஸந்த், ரஜினி ராம்கி ஆகியோருடன் சேர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக அரட்டை அடித்தோம். அவசர அழைப்பில் உருப்படாதது நாராயணன் வந்திருந்தார். பேச்சின் அடிநாதம் உள்ளூர் உலக சினிமாக்களை மையப்படுத்தியே இருந்தது. உள்ளூர் சினிமாவைப் பற்றிப் பேசும்போது நான் கலந்துகொண்டேன், உலக சினிமாவைப்பற்றிப் பேச்சு தாவிய போது பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல ஒதுங்கிவிட்டேன். டோண்டு பதிவிட்டுவிட்டார், அதில் பாலாவும் ரோஸாவும் பின்னூட்டமும் இட்டிருக்கிறார்கள்.

ரோஸாவஸந்த்தை ஒரு கோபக்கார இளைஞராகக் கறபனை செய்து வைத்திருந்தேன். அந்த பிம்பம் உடைந்தது. சந்திரமுகி லகலகவைப்பற்றி மட்டும் அவர் பதிவில் இருந்ததுபோலவே உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்:-)
பாலா பதிவுகளில் உள்ளது போலவே இனிமையாகப் பேசுகிறார். நகைச்சுவைக்கு ரசிகர்.
ஐகாரஸ் பிரகாஷுக்கு நான் முன்னே வேலைசெய்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் என்பதால் என் தொழில் பற்றித் தெரிந்திருந்தது. டேட்டா பேஸ்தான் அவரது தொழில் என்பது படங்களைப்பற்றியும் பாடல்களைப்பற்றியும் பேசியதிலேயே தெரிந்தது!
ரஜினி ராம்கி அமைதியின் மறுவடிவமாக இருந்தார். சந்திரமுகி சிவாஜி போன்ற என் பதிவுகளை நினைவு படுத்தி வம்பிழுக்க முயன்றும் அமைதியிலிருந்து வழுவவில்லை!
டோண்டு பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். சமீபத்தில் (1980களில்) வந்த திரைப்படங்களைப்ப் பற்றிப் பேச்சு வந்தபோது விவாதத்துக்குப் பங்களித்தார்.
நாராயணன் சினிமா (உள்ளூர் உலகம் - இரண்டிலேயும்)அத்தாரிட்டி. பொளந்து கட்டினார்.

ஆமாம், நான் ஜிப்பா அணிந்துவந்தது இட்லிவடைக்கு எப்படித் தெரியும்?

தேன்கூடு பரிசை (அது அந்தக்காலமுங்க! இப்போ எல்லாம் 7வது எட்டாவது இடத்தைப் பிடிக்கிறதே பெரும்பாடாப் போச்சு!) புத்தகங்களாகப் பெற கிழக்கு பதிப்பகம் சென்றிருந்தேன். பத்ரியைச் சந்தித்தேன். நீண்ட நாள் ஆதங்கத்தைக் கேட்டுவிட்டேன். "சிறுவர்கள் புத்தகங்கள் தமிழில் வருவதில்லையே ஏன்?" என்று. பத்ரி இந்தக்கேள்வியை பலமுறை சந்தித்திருப்பார் போல. ஆயத்தங்கள் நடைபெறுகின்றன, இன்னும் சில நாட்களில் பெரிய அளவில் கிழக்கு சார்பில் வர இருக்கின்றன என்றார். பா இராகவனை அறிமுகப்படுத்தி வைத்தார். "சுரேஷ்" என்று அறிமுகப்படுத்தியவுடன், "பினாத்தலா?" என்று பா ரா கேட்டது நான் பிரபலமாகிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

தமிழகக்கோவில்களைச் சுற்றி, ஒரு வருடத்துக்குத் தேவையான புண்ணியத்தைப் பார்சல் செய்யும் நோக்கத்தில் சிதம்பரம் (டைலமோ டைலமோ என்ற தமிழ்ப்பாடலை பிரகாரத்தில் பாடினேன், யாரும் கைது செய்யவில்லை:-)), சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவாரூர் எல்லாம் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்த போது இராமநாதனைச் சந்தித்தேன். "சந்தித்தோம்" என்பதற்கு மேல் ஒரு வார்த்தையும் சேர்க்க முடியாத வெட்டி அரட்டை! அதையும் மால் மஸாலா சேர்த்து இரண்டு ஸ்க்ரோல் பதிவாக்கி உள்ள இராமநாதனுக்கா "தெரியல"?

இடையில் தன்னைப் பார்த்திபன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு அழைப்பு வந்தது. அவருடனும், நாமக்கல் சிபியுடனும் கொஞ்சம் அளவளாவிவிட்டு வழக்கம்போல எண்ணைத் தொலைத்துவிட்டேன்.

காசியின் எண்ணைத் துப்பறிந்து கண்டுபிடித்துக் கொஞ்ச நேரம் பேசியதில் ஒரு காலத்தில் நாங்கள் இருவரும் ஒரு மரத்துப்பறவைகளாக இருந்தது தெரிய வந்தது. என்ன அவர் வேறு பிராஞ்ச், நான் வேறு பிராஞ்ச்!

பிறகு ஒரு நாலு நாள் பெங்களூர் வாசம். ஜி ராகவன் தயவில் இளவஞ்சியின் எண் கிடைக்க, ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாலும், கடைசி நேரத்தில் எதிர்பார்க்கப்பட்ட இருவர் (மோகன்தாஸ், சுதர்சன்.கோபால்) வர இயலாததால் மினி சந்திப்பாக மாற்றப்பட்டது. வளர் சிதை மாற்ற வெற்றி நாயகர் இளவஞ்சி, தேன்கூடு லிப்ட் நாயகர் கொங்கு ராசா, கவிதைப்போட்டி நடத்தும் விவசாயி இளா (போன் நம்பர் கிடைத்தவுடன் இவர் என்னுடன் பேசியது ஒரு பழைய ஜோக்கை நினைவுபடுத்தியது. நீங்க எங்கே இருக்கீங்க? அங்கேயா? நானும் அங்கேதான்! என்று ஆரம்பித்து, அடுத்த தெருவிலேயே இருக்கிறார் எனத் தெரிந்தது. ஒரு கடையில் வேட்டையாடு விளையாடு பற்றிப் பேசிக்கொண்டிருந்தவரை என் உறவினர் அறிமுகப்படுத்த, நீங்கதான் இளாவா? என்று எதிர்பார்க்க முடியாத இடத்தில் சந்திப்பு!) மற்றும் நான் - நாலே பேர். அன்றே வேலூர் செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் அரட்டை, சாப்பாட்டுக்குப் பிறகு ஜூட்.

சென்னைக்குத் திரும்பி புத்தகங்கள் வாங்க வந்த கடையில் சந்திப்பதாக பாலராஜன் கீதாவுடன் ஏற்பாடு செய்துகொண்டேன். அவரைச் சந்தித்த கையோடு புத்தகக்கடையில் சுற்றிப்பார்த்தால் கம்ப்யூட்டரில் பிளாக்கர் பக்கம் திறந்திருந்தது! யாரந்த நம்ம ஜாதிக்காரர் என்று திரும்பினால் அறிமுகப்படுத்திக்கொண்டார் பாலபாரதி. தன் நிருப அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்து கொண்டார்.

துபாய்க்குத் திரும்ப இரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதே உட்லேண்ட்ஸில் இன்னும் ஒரு சந்திப்பு. ஒருங்கிணைப்பு செய்த ராம்கி ஆப்ஸண்ட். இந்த முறை பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இன்னொரு துபாய்வாசி (தொட்டடுத்து ஒரு குக்கிராமம்தான், ஆனாலும்) ராமச்சந்திரன் உஷா, ஒலிக்கும் கணங்கள் (இப்போது ஒலித்த கணங்கள் ஆகிவிட்டதே ஏன் அம்மணி?) நிர்மலா, காற்றுவெளி (எப்போதாவது அடிக்கும்!) மதுமிதா ஆகியோருடன், (பாலராஜன்) கீதா தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். ரோஸா வசந்த், ஜி ராகவன், பாலராஜன்(கீதா), மரவண்டு கணேஷ் ஆகியோருடன் நானும் சேர்ந்து பேச்சுக்களில் பெண்ணியம் தூக்கிவிடாமல் சமநிலை செய்தோம். இப்போதும் போண்டாவைப் பகிஷ்காரம் செய்தோம். எதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம் என்று ஒரு அவசர அஜெண்டா தயாரித்த என்னையே அவதூறு பேசினார்கள்! மதுமிதா எல்லோரிடம் தன் நீண்ட நாள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டார். (முக்கியமான சந்தேகம் - அலுவலக நேரத்தில் எப்படி பிளாக் பார்க்கிறீர்கள்?). ஜி ராவும் நிர்மலாவும் பெங்காலிப்படங்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்க "ஷோலே ஒரிஜினல் பெங்காலிதானே? என்று என் அறைகுறை அறிவைப் பறைசாற்றினேன். அதிர்ந்து பேசினால் யாருக்காவது வலித்து விடுமோ என்று அளந்து பேசினார் மரவண்டு கணேஷ். சந்திப்பு ஆரம்பத்தில் இருந்து என்னைக் கலாய்த்தாலும், கடைசியில் அனைவருக்கும் உணவை ஸ்பான்சர் செய்த பெருமையைத் தட்டிச் சென்றார் உஷா. பாலராஜன் பதிவிடுவதைவிட பின்னூட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துவது போலவே மற்றவர் பேசுவதைக் கவனித்து அவ்வப்போது மட்டுமே பதிலளித்தார். ரோசாவும் அமைதியாகவே இருந்தார். சந்திப்பு முடிந்தவுடன் என்னை ஆட்டோக்கள் நியாயமான கட்டணத்தில் வரக்கூடிய இடத்தில் டிராப் செய்த ரோஸாவிடம், குவாண்டம் பற்றி இன்னும் எழுதுங்களேன் என விண்ணப்பித்துக்கொண்டேன்.

பெங்களூரில் இருந்தபோது நடந்த ஒரு சந்திப்பையும், ஆகஸ்ட் 31ல் நடந்த இன்னொரு சந்திப்பையும் தவறவிட்டதில், பார்க்க நினைத்த பலரைச் சந்திக்க முடியவில்லை.

இப்படியாக, என் இந்தியப்பயணம் ஒரு முடிவுக்கு வந்து, இப்போது துபாயில் மீண்டும்.

தேன்கூடு ஜூலை, ஆகஸ்ட் போட்டிகளில் என் படைப்புகளுக்கு வாக்களித்த மக்களுக்கு என் நன்றி. இந்த முறை ஒரு புதிர் போட்டிருக்கிறேன். மறக்காமல் படியுங்கள், விடையிறுங்கள்

Sep 3, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர் (03 Sep 06)

இது போட்டிக்கான படைப்பு மட்டுமல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் புதிரும் கூட.

"கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா" இந்த கருத்தை பிரபலமான பலரிடம் கூறினேன். அவர்கள் அவர்களுக்கேயுரிய பாணியில் அதை விரித்தார்கள். எந்தப்பாணி யாருடையது என்பதை மட்டும் மறந்துவிட்டேன். அதுதான் புதிர்.

1. அழகுக்கு அவள் சுரங்கம்
பேயும் அவளிடம் இறங்கும்.
பதினெட்டு வயது பியூட்டி
ஓட்டி வந்தாள் ஸ்கூட்டி
இதயம் ஆனது தெஃப்ட்
கொஞ்சம் கிடைக்குமோ லிஃப்ட்?
______________________________________

2. பைக் ஆண். அதன் ஹாண்டில்பார் பெண். சகலருக்கும் இது புரிவதில்லை. புரிந்தவர்கள் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள், புரியாதவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

பைக்கும் ஹாண்டில்பாரும் போல ஆண் துணை பெண்ணுக்கும், பென் துணை ஆணுக்கும் இங்கே கல்பகோடி ஆண்டுகளாக ஜனித்துவந்திருக்கும் சாஸ்வதமான உண்மை. தியானத்துக்கு குரு தேவை. மோகத்துக்குத் தேவையில்லை.

மோகனும் அதை மறுக்கும் மனநிலையில் இல்லை. மன்மதன் அம்புகள் விட்டான், மோகனுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. அவள் காதோரம் குசுகுசுப்பாய் நேற்றுப்பாடிய பாடல் நினைவாடியது..

"ஓடும் தண்ணியிலே பாசியில்லையே..
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயுமில்லையே.."

ப்ரியா எதிரே வண்டியில் வந்தாள். நிறுத்தினான். அவள் புருவம் உயர்த்தி "என்ன" என்பதாய்க்கேட்டாள்.

"கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?"
______________________________________

3. "நிறுத்து"

"ஏன்"

"போகணும்"

"எங்கே"

"நீ போற இடத்துக்குத் தான்"

"என்னை ஏன்"

"நீ அழகா இல்ல! படிக்கல! உன்னை எனக்குப் புடிக்கல.. உன்னை லவ் பண்ணிடுவேன்னோன்னு நினைக்கல..ஆனா, நான் போற இடத்துக்கு நீதான போறே.."
______________________________________


4. "மச்சி அவ வர்றாடா.. இன்னிக்காவது உன் மனசுலே இருக்கறத அவகிட்டே மறைக்காம சொல்லிடு"

"அவ கிட்டே கேக்கறதுக்கு எனக்கு தயக்கமில்லைடா.. ஆனா, நான் கேட்டு அவ மறுக்க வேண்டிய நிலைமை இருந்தா அவ மனசு வேதனைப்படுமே.. அவ வேதனையத் தாங்கற சக்தி எனக்கு இல்லைடா"

"மச்சி லிப்டுங்கறது பீச்சுல போடற மிளகா பஜ்ஜி மாதிரிடா.. சூடா இருக்கும்போது சாப்டா மட்டும்தாண்டா டேஸ்ட்டு..லேட்டு பண்ணே, வேற எவனாவது கொத்திகிட்டு போயிடுவான்.. இன்னிக்கும் எப்படியும் அவகிட்டே கேட்டுடுடா"

______________________________________

5. வாகனம்..
சக்கரத்தைக் கண்டுபிடித்தவனே
நித்தியம் கொண்டாடும் அதிசயம்..
அதன் பாகம் மறைத்திருக்கும் ரகசியம்.
காலதேவனின் காலில்விழாமல் நேரம் சேமிக்க அவசியம்.

புதன் கிரகம் ஆக்ஸிஜன் இல்லாதது..
புதுவண்டியும் எரிபொருள் இன்றிச் செல்லாதது.

சில வண்டிகளும் ஆண்கள் போலத்தான்..
தாவணி சேலையை உறுவும்.
இருந்தாலும்,
லிஃப்டில் கணியும் உறவும்.

______________________________________

6. "நீங்கதானே மிஸ்டர் வாதூலன்?"
வாதூலன் வியர்த்தார். கையினின்றும் குளிர்கண்ணாடியை முகத்துக்கு அனுப்பினார்.
"நீங்க...... யாரு...... உங்களுக்கு........... என்ன............வேணும்?"
"அதைப்பத்தி அப்புறம் சொல்றேன். நீங்க வெச்சிருக்க காரு ஜெர்மன் மேக்தானே?"
"ஆமா.. BMW.. 150 குதிரைச் சக்தி.... புரியும்படியா சொல்லணுமுன்னா ஒரு 50 யானைய இழுத்துகிட்டுப் போற சக்தி இதுக்கு இருக்கு"
"இதுக்கு எண்ட்ரி டாக்ஸ், ரோட் டாக்ஸ் எல்லாம் கட்டிட்டீங்களா?"
"போன வாரம்தான்.... ரெஜிஸ்டர் பண்ணேன்... ஆமா.. நீங்க யாரு?"
இறுக்கமான முகத்தைச் சற்றுத் தளர்த்தினான். சிரித்தவாறே கேட்டான்.
"என் பேரு ரகோத்தமன்... W & W கம்பெனியிலே செல்லிங் எக்ஸிகியூட்டிவா இருக்கேன்.. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"

______________________________________

7. ஆறுமுகக்கோனாரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

ஏனென்றால் ஆறுமுகக்கோனார் ஒரு சாதாரண மனிதன். வேகமும் புழுதியும் அடிக்கின்ற இந்தப் பட்டணத்திலே ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சி.

அவனை எனக்கு ஆறு மாதங்களாகத் தெரியும். பஞ்சாய் நரைத்த முடி, குழி விழுந்த கன்னங்கள், நொண்டி நொண்டி நடப்பான். வாழ்வின் சுமை அவனை வளைத்துப்போட்டு விட்டது.

அவனை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவன் போக விருப்பப்படும் இடத்துக்கு மட்டுமேதான் போவான். இயந்திர உலகத்தில் இப்படியும் ஒரு பழையகாலத்து ஆளா என்று வியக்காதீர்கள்.

காலையில் எழுந்து வேலை தொடங்கினால் ஐஸ்ஹவுஸ், அங்கிருந்து பிராட்வே உணவுக்கு ராயபுரம் திரும்புவான். இந்த வழியில் செல்லும் சவாரிகளை மட்டுமே ஏற்றுவான்.

அதுசரி.. அவன் வாழ்க்கை அவனுடையது. அவனை யார் தன் வழிக்குத் திருப்ப முடியும்?

யார்தான் யாரைத்தான் தன்வழிக்குத் திருப்ப முடியும்?

அன்று ஒரு அதிசயம். நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டம்போட்ட லுங்கிக்காரன் வந்து "தேனாம்பேட்ட வர்றியா" என்றான்.

மறுத்துவிடுவான் என்றே நினைத்துக்கொண்டு பார்த்தேன்.

"சரி ஏறு" என்றானே பார்க்கலாம்.

இந்த மாற்றத்துக்கு எனக்குக் காரணம் புரியவில்லை.

வண்டி திரும்பியதும்தான் கவனித்தேன். லுங்கிக்காரன் ரஜினி பனியன் போட்டிருந்தான்.

______________________________________

8. "நாட்டாமை வந்துட்டாரு.. நாட்டாமை வந்துட்டாரு"

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)

"என்றா பஞ்சாயத்து?"

"படிக்கப் போன குப்புசாமி மவள இதோ இந்தா நிக்காரே வெள்ளைத்துரை.. அவரு வம்பிழுத்தாராம்"

"தோ பார்றா.. நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்.. சொல்லுப் போட்டா சொல்லுதான் மொளைச்சுப்புடும் கேட்டுக்க"

"என்றா கேட்டானாம்?"

"ஒன்ற சைக்கிள்ள என்ன டவுன்ல கொண்டு விட்டுப்போடறயான்னு கேட்டானுங்களாம் அய்யா"

"இவன் கேட்டதுக்கு யாரும் சாட்சி இருக்குதாய்யா?"

"நான் இருக்கேனுங்க"

"நீ சைக்கிள் வெச்சுருக்கியா?"

"வெச்சுருக்கேனுங்கய்யா"

"அப்போ நீ ஏன் அவன டவுனுக்கு கூட்டிப்போவல? இந்தச் சாட்சி செல்லாது செல்லாது.."

"நான் பாத்தேனுய்யா"

"என்றா கண்ணு பாத்த?"

"இந்த அண்ணா, அந்த அக்காகிட்ட கொஞ்சம் லிப்டு கிடைக்குமான்னு கேட்டாருய்யா"

"பரதேசி.. பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸு ஊர்ரு தேடி வருது.. இதிலே பச்சைப்பொண்ணைப்பாத்து லிப்டு கேட்டிருக்கியே..
இவனுக்கு இந்த ஊர்லே யாரும் லிப்டு தரக்கூடாது.. மீறி யாரும் தந்தா அவகளுக்கும் இதே தண்டன தான்.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.."

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)

______________________________________

9. பொழுது மலரத் தொடங்கிவிட்டது. ஆதவன் தன் கிரணங்களை அடர்ந்த காட்டுக்கு உள்ளேயும் பாய்ச்சினான்.

இளஞ்செழியன் எழுந்துவிட்டான். பூங்குழலியையும் எழுப்ப யத்தனித்தான்.

"இளவரசி"

"ம்"

கார்மேகமாய் விரிந்திருந்த அவள் கூந்தலினூடே தன் கரங்களை விட்டு மெதுவாகக் கோதினான் இளஞ்செழியன். போர் புரிவதெல்லாம் வீண், இவளோடு இப்படியே காலத்தைக் கழித்துவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கும் என்று எண்ணினான். அதே நேரத்தில் ஒரு போர்வீரன் இவ்விதம் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு கடமையிலிருந்து வழுவிவிடக்கூடாது என்ற எண்ணத்தால், மீண்டும் எழுப்பினான்.
"இளவரசி"

"ம்"

"எழுந்திருங்கள்.. நம் கோட்டை திறந்துவிட்டிருப்பார்கள். யவனர்கள் சாலைவழி செல்லத் தொடங்கிவிட்டார்கள்"

"தளபதி, உங்களை ஒன்று கேட்டால் தவறாய் எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?"

"இளவரசி, நீங்கள் என்னிடம் வேண்டுகோள் விடுப்பதா, கட்டளையிடுங்கள்"

"சரியான தூக்கம் இல்லாமல் கால் வலிக்கிறது. என்னை உங்கள் குதிரையிலே வைத்து கோட்டை வரை கொண்டு செல்கிறீர்களா?"

______________________________________

10. இற்றைத் தினத்தில் காட்டாட்சி முடிந்து நல்லாட்சி தொடங்குகின்ற நாளிலே, இதுவரை சொல்லாத ஒன்றை உன்னுடன் பகிர விழைகிறேன். இதய தெய்வமும், பகுத்தறிவுப் பகலவனும் கட்டிக்காத்த இந்த மாபெரும் இயக்கம் சூதிடமும் சூழ்ச்சியிடமும் பின் தங்கிவிட்ட காரணத்தால் நாட்டில் நடந்துவிட்ட அவலங்களை நீ நன்கறிவாய்! இதயத்துக்குப் பதில் களிமண்ணைக்கொண்ட காவல் உடையில் வந்தென்னை வெஞ்சிறை அனுப்பத் துடித்த அம்மையாரின் கைக்கூலிகள் என்னை உருட்டுக்கட்டையாய்த் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றிய கதையையும் நீ மறந்திருக்கமாட்டாய். பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் அம்மையாரை ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தபோது நடந்ததன் எதிரொலியே நீ அன்று பார்த்த காட்சி என்றால் உனக்கு வியப்பாய் இருக்கும். அன்று அம்மையார் தன் வாகனம் பழுதடைந்ததால் என்னிடம் லிஃப்ட் கேட்டார். நான் மறுதலித்துவிட்டேன். லிஃப்ட் தர மாட்டேன் என்று கூறவில்லை.. இதயத்தில் அண்ணாவையும், உள்ளத்திலே உன்போன்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புக்களையும் வைத்திருந்ததால் என் சிறு வாகனம் அம்மையாரைத் தாங்காது என்றுதான் கூறினேன். அம்மையாரை நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. நடந்தால் அவர் உடல் மேலும் பொலிவடையும் என்ற நல்லெண்ணத்தில் தான் கூறினேன்.நான் செய்தது தவறா? இதை நினைவில் கொண்டு அம்மையார் எனக்கு பழிக்குப் பழியாய் நீதிமன்றம் வரை தன் கைக்கூலி காவலாளரை வைத்து லிஃப்ட் தரவைத்தாரே - அது முறையா? சிந்தித்துப்பார் உடன்பிறப்பே!

______________________________________

போட்டிக்கான பதில்களை பின்னூட்டம் மூலம் மட்டுமே தரவேண்டும். நீதிபதியின் தீர்ப்பே முடிவானது. ஒரு நபர் அதிகபட்சம் ஆயிரம் பின்னூட்டங்கள் மட்டுமே போடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் வந்தால் ... வந்துட்டுப் போகட்டுமே.. நான் என்ன பரிசா தரப்போறேன்!

 

blogger templates | Make Money Online