Jun 6, 2007

BOSS ஆவது எப்படி?

உப்புமா எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்தபின் எழுதியது இப்பதிவு.

BOSS என்றால் பேச்சிலர் ஆப் சோஷியல் சர்வீஸ் ஆம்!

சோஷியல் சர்வீஸ் என்றால் என்ன என்பதைச் சற்று அறிந்து கொள்வோமா?

உச்ச நட்சத்திரத்தைப் பிடித்து, செலவுக்குப் பெயர்போன இயக்குநரைப்பிடித்து, தமிழ்த்திரையுலகம் இதுவரை கண்டும்கேட்டுமிராத பொருட்செலவில் பிரம்மாண்டமாக ஒரு படத்தைத் தயாரிக்கவேண்டும். (அந்தச் செலவின் பெரும்பங்கு நடிகர் & இயக்குநர் இருவருக்கு மட்டுமே போவதையோ, அந்தச் செலவினால் திரைப்படத்தொழிலுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பற்றியோ யாரும் கேள்வி கேட்கக்கூடாது)

மிக ரகசியமாகப் படம் எடுக்கப்படவேண்டும். திருடப்பட்ட ஒலி/ஒளித்துண்டுகள் கிரிமினல் குற்றத்துக்கு நிகராக மதிக்கப்படவேண்டும்.

படம் தயாரானவுடன் தொலைக்காட்சி உரிமைக்குப் பேரம் பேசவேண்டும்.

மத்திய மாநில ஆளும் கட்சிகளின் செல்லப்பிள்ளையான சேனல் அடிமாட்டு விலைக்குக் கேட்க, துணுக்குற்றுவிடக்கூடாது! ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருந்தால்தானே கொக்கு!

படம் கேட்டு, கிடைக்காவிட்டால் சேனல் சும்மா இருக்குமா? தயாரிப்பாளரின் அடிமடியில் கைவைக்கும்! அரசாணை பிறக்கும்! படம் மூன்று வருடம் ஓடினால்தான் காசு பார்க்கமுடியும் என்ற நிலையை உருவாக்கும்!

இப்படிப்பட்ட அரசாணை ஏன் பிறப்பிக்கப்பட்டது? படத்தின் செலவுக்கேற்ப டிக்கட்டை வைப்பதில் என்ன தவறு கண்டார்கள் ஆட்சியாளர்கள்? எப்படியும் டிக்கட் விலை ஒன்றிரு வாரங்களில் இறங்கிவிடப்போகிறது! அதுவரை ஏழைபாழைகள் பார்க்காமல் இருப்பது தெய்வகுற்றமா?அப்படி அவசரப்பட்டு, பார்த்தே தீரவேண்டும் என நினைப்பவன் நிச்சயமாக டிக்கட் விலை பற்றி கவலைப்படப்போவதில்லை!

மனம் கலங்கிவிடாதீர்கள் சோஷியல் சர்வீஸ்காரரே, காலம் ஒருநாள் மாறும்! ஆட்சிக்கும் சேனலுக்குமே சண்டை வரும்.

அந்தத் திருநாள் வந்தால், காத்திருந்ததற்கு கைமேல் பலன் வரும்.

அரசியல் நடத்த சேனல் இல்லாமல் முடியாதே! நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இப்போது நேரமில்லை. ஒரு சேனல் புகழ்பாடியே பழகிவிட்ட.ஆட்சியாளர்கள் சேனல் தொடங்குவார்கள்!

அவர்களுக்கும் பரபரப்பான படங்கள் தேவைப்படும். அப்போது விற்றுக் கொள்ளலாம்.

அப்போது விற்பதால் ஏற்படக்கூடிய கூடுதல் நன்மைகளாவன : மராத்திய ராஜா தமிழனாவான்!

கேனத்தனத்தின் உச்சம்! இந்த வரிவிலக்கு (முழுமையான வரிவிலக்காமே!) சட்டம் அமலுக்கு வந்தபோது நான் எழுதிய வரி - மாமனாரின் இன்பவெறிக்கு வரிவிலக்கு உண்டா -- எழுதும்போது கிண்டலாகத்தான் எழுதினேன். ஆனால் எந்த உச்சபட்ச அசிங்கமும் நடந்தே விடக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது! தமிழில் பெயர் இருந்தால் ஏன் வரிவிலக்கு?

எனக்குத் தெரிந்த அளவில், கல்லூரி மாணவர்களிடையே சிவாஜியைவிட அதிகம் புழங்கக்கூடிய பெயர்ச்சொல் BF! ஞாபகம் இருக்கிறதா? அந்தப்பெயரை வைத்ததற்காகத்தான் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் போராட்டமே அறிவித்தது!

மும்பை எக்ஸ்பிரஸ் என்ன பாடுபட்டது! எம்டன் என்ற புழங்கக்கூடிய பெயர்ச்சொல் ஏன் எம் மகன் ஆனது? சம்திங் புழங்காத தமிழகமா? அத்தனை பெயரையும் மாற்றவைத்து, இன்று அவர்களையும் தமிழக வரிவழங்குவோரையும் ஏமாற்றுகிறது அரசு!

அந்தச் சட்டத்தில் இன்னொரு திருத்தமே செய்துவிடலாம் பேசாமல்! கலைஞர் டிவிக்கு விற்கப்படும் படங்களுக்கு பெயரின் நதிமூலம் ஆராயப்படாது என்று!

மேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் மனம் கோணாமல் சோஷியல் சர்வீஸ் செய்வதால், டிக்கட் விலைகள் கண்டுகொள்ளப்படாது!

அப்போது ஏன் அந்த அரசாணை? வேண்டாதவர்களைப் பழிதீர்க்க மட்டும்தானா? ஹெல்மட் முதல் இந்த அரசாணை வரை காரியம் ஆகும்வரை மட்டும்தான் சட்டமா? இவ்வளவு வெளிப்படையாக திமுக அரசு இதுவரை ஊழல் செய்ததில்லையே!

இப்படி வெளியாகும் படத்தின் மூலம் சோஷியல் சர்வீஸ் செய்யலாம்! நாடு எச்சில் துப்புபவர்களாலும், இட ஒதுக்கீட்டாலும், லஞ்ச லாவண்யத்தாலும் கேடு அடைந்திருக்கிறது என்பதை பிரம்மாண்டமாகச் சொன்ன இயக்குநரும், தேர்தலுக்குத் தேர்தல் வாய்ஸ் கொடுத்து வொர்க் அவுட் ஆகாமல் நல்லவர்களுக்குக்காகத் திரையில் 150 முறை பாடுபட்ட கதாநாயகனும் Why richer is getting richer and poorer is getting poorer என்பதையும் விவாதித்து இனிப்பு மிட்டாய் தடவி அவர்களின் கனவுகளுக்கு வண்ணமேற்றலாம்!

இந்த விதிமீறல்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். எதிர்க்கட்சி ஊடகங்கள் பேசுவதைப்பற்றிய கவலை எப்போதும் நாம் பட்டதில்லை. தற்போது எதிரணியில் உள்ள முன்னணி
சேனல் சமாதான முயற்சிகளுக்காக அடக்கி வாசிக்கிறது. எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அச்சு ஊடகங்களும் அடக்கி வாசிக்கின்றன. கூட்டணிக்கட்சிகளுக்கு தமிழ்ப்பாதுகாப்பைவிடவும் எத்தனையோ பிரச்சினைகள்.


இதுதான் சோஷியல் சர்வீஸ். உங்களுக்கு BOSS பட்டமெல்லாம் கிடைக்காது. அதற்குச் செய்யவேண்டிய மேற்கண்ட குறிப்புகள் எதையும் செய்ய உங்களுக்குத் தகுதி கிடையாது! வேறு படிப்பைத் தேர்ந்தெடுங்கள்!

--------------------------------
திமுகவின் ஆட்சி பற்றிய விரிவான திறந்த கடிதம் "ஒரு சொல்" நாராயணன் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ எல்லா விஷயங்களிலும் அவருடன் ஒத்துப்போகிறேன். தேர்தல் காலத்தில் ஓட்டுப்போட முடிந்திருந்தால் திமுகவுக்குத்தான் போட்டிருப்பேன் என்பதையும் என் நதிமூலம் ஆராயவிரும்பும் அன்பு அனானி ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

என் எதிர்ப்பைக் காட்டும் ஒரே வழி என இந்தப்படத்தை குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு முன் திரையரங்குகளில் பார்க்கமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

பதிவுகளுக்குக் கொஞ்ச நாள் விடுமுறை இப்போதுதான் ஆரம்பிக்கிறேன் :-)

23 பின்னூட்டங்கள்:

Sridhar V said...

//மராத்திய ராஜா தமிழனாவான்! //

தமிழ் தலைப்பு என்றுதான் சொன்னார்களே தவிர, தமிழனப் பத்தி மட்டும்தான் படம் எடுக்கனும், தமிழன் பெயர் மட்டும்தான் வைக்கனும்னு சொல்லலியே.

தேசத்தந்தை காந்தியை பத்தி படம் எடுத்தா 'மகாத்மா காந்தி'ன்னு தலைப்பு வைக்காம 'உத்தமர் காந்தி'ன்னு தலைப்பு வைக்கலாம்.

அது தமிழ் தலைப்புதானே?

'கர்மவீரர் காமராஜ்' தமிழ் தலைப்புதான். இல்லைன்னு சொல்லுவீங்களா?

//உப்புமா எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்தபின் //

உப்புமா நல்லா சுவையான உணவுதாங்க. அதுல சேர்க்க வேண்டியத சேர்த்தா சூப்பரா இருக்குங்க. நம்ம BOSS மாதிரி :-))

ராஜா said...

good one..

Oru masathuku eppadiyum ticket kedaikathu, Athanala ippadi oru pathivu potu ,oru masathuku padam parkam irupaen solluvingala hi ithu nalla irukaee :-) ....

Anonymous said...

June 15 release

June 30 kulla neenga padam parthu vimarsanam ezhuthatti unga perai mathi vechudaraen.

பினாத்தல் சுரேஷ் said...

**ஸ்ரீதர் வெங்கட்,

எம்டன் உம் பெயர்ச்சொல்தானே? அது ஏன் மாற்றப்பட்டது? லவ் யூ என்று டைரக்டரியைத்தேடினால் ஒரு பெயர்ச்சொல் கிடைக்காமலா போய்விடும்?

வரிச்சலுகை என்பது எவ்வளவு பெரிய விஷயம்? எனக்கு நினைவு தெரிந்து மூன்றோ நான்கோ படங்கள்தான் வரிச்சலுகை கிடைத்த படங்கள். இப்படி ஆட்சியாளர் இஷ்டப்படி வரிச்சலுகை கொடுப்பதைக் கேட்கக்கூட நமக்கு உரிமை இல்லையா? கேட்பது தவறா சொல்லுங்கள்!

40 கோடி செலவழித்துப்படம் எடுப்பவர்களுக்கு இது வரிச்சலுகை அல்ல - வரி ஏய்ப்பு!

உப்புமா விவகாரம் அலர்ஜி ஆயிடுச்சி :-(

**ராஜா

இந்தப்பதிவை சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று நினைத்துக்கொண்டீர்கள் என்றால், மன்னிக்கவும்.

அப்படி என்ன அந்தப்படத்துக்கு ஒரு மாதம்வரை டிக்கட் கிடைக்காமல் போகக்கூடிய நிலைமை வரும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் ஆப்டிமிஸம் வெல்லட்டும்.

சிவாஜி படம் வெற்றி பெறுவதில் எனக்கு எந்த வருத்தமோ ஆட்சேபணையோ இருக்க வாய்ப்பில்லை. (இருந்துட்டா மட்டும்னு கேக்காதீங்க)

ஆனால், இந்த நடவடிக்கைகள் எல்லாம் (வரி ஏய்ப்பு, அதிகக்கட்டணச்சலுகை) எல்லாம் உங்களுக்கே சரின்னு படுதா? சட்டங்கள் நியாயமானவையாக இருக்கவேண்டும், அவை ஒழுங்காக நிறை வேற்றப்படவேண்டும் என்பதில் உங்களுக்கு, எல்லாப்பிரச்சினைகளையும் திரையில் துவம்சம் செய்யும் ரஜினிக்கு, அந்நியன் - ஜென் டில்மேன் - முதல்வன் புகழ் ஷங்கருக்கு - ஏவி எம்முக்கு -- அக்கறை இருக்கிறதா இல்லையா?

**அனானி,

ஜூன் 30க்குள்ளேயா? நிச்சயம் மாட்டேன். நான் அப்படி ஒண்ணும் சினிமா வெறியனோ, ரஜினி / ஷங்கர் ரசிகனோ கிடையாது சார். என் பதிவுகளெல்லாம் (சிவாஜி ப்ரீவியூ, சந்திரமுகி அதிர்ச்சிவெற்றி, அந்நியன் விமர்ர்சனம், விமர்சன சாப்ட்வேர்) படிச்சுப் பாருங்க, அப்புறம்கூட அப்படி ஓடிப்போயி பாப்பேனா சொல்லுங்க :-)

ALIF AHAMED said...

எதிர்பாத்த மாதிரி படம் இல்லைனா நாலு நாளுல ஊத்திக்க போவுது
சில(ர்) பதிவுகள் மாதிரி...:)


(டவுன்லோட் லிங்க் குடுக்க நீங்க ஏற்பாடு பண்ணலாம்)

ALIF AHAMED said...

சி.. வா.. ஜி...
இது தமிழ் எழுத்து இல்லையா பினாத்தலாரே...

தலைப்பு தமிழில் எழுதபட்டிருந்தால் வரிவிலக்கு குடுக்கலாம் என அடுத்த சட்டம் வருகிறதாம்

:))

rv said...

வ.ப.செ!

பினாத்தல் சுரேஷ் said...

மின்னல்,

டவுன்லோடு லின்க்கா? அந்தப்பாவம் நமக்கு வேணாம் :-)

சரி,ஃ- ப்- யூ-ஜி-டி-வ் னு தமிழ்லே எழுதினாலும் வரிவிலக்கு கொடுப்பீங்களா?

ராம்ஸு..

நெஜமாவே புரியலை.. வ ப செ ன்னா என்ன?

வெட்டிப்பயல் said...

உங்கள மாதிரியே எல்லாரும் முடிவெடுத்தா ரொம்ப நல்லதா இருக்கும்.

அப்ப தானே பிரச்சனை இல்லாம நாங்க எல்லாம் படம் பார்க்க முடியும் ;)

சதுர் said...

ரஜினியை கிண்டல் செய்யும் இப்பதிவு கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

இலவசக்கொத்தனார் said...

சிவாஜி தமிழ்ப்பெயர் இல்லையா? அப்போ தசாவதாரம் தமிழ்ப் பெயரா? :))

முதலில் இதுக்கெல்லாம் வரி விலக்கு தந்த தரவங்க சொந்த காசுல அரசு கஜனாவுக்கு ஏற்படற இழப்பை சரி கட்டணும் அப்படின்னு ஒரு சட்டம் கொண்டு வரணும். உள்கட்டமைப்புக்கு செலவழிக்க வழி இல்லை, இதெல்லாம்தான் கேடு.

கலிகாலம்டா சாமி.

ராஜா said...

**ராஜா
//
இந்தப்பதிவை சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று நினைத்துக்கொண்டீர்கள் என்றால், மன்னிக்கவும்.//

உங்கள் பதிவுக்கும்,உங்கள் கருத்துக்குமான எனது விமர்சன்ம் என்னுடைய பின்னூட்டத்தின் முதல் வரி.

// அப்படி என்ன அந்தப்படத்துக்கு ஒரு மாதம்வரை டிக்கட் கிடைக்காமல் போகக்கூடிய நிலைமை வரும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் ஆப்டிமிஸம் வெல்லட்டும். //

இரண்டாம் வரி ஒரு நகைச்சுவைக்காக போட்டது, அது உங்களை பாதித்திருந்தால் அதற்காக எனது வருத்ததை தெரிவித்துக்கு கொள்கிறேன்.

//ஆனால், இந்த நடவடிக்கைகள் எல்லாம் (வரி ஏய்ப்பு, அதிகக்கட்டணச்சலுகை) எல்லாம் உங்களுக்கே சரின்னு படுதா? சட்டங்கள் நியாயமானவையாக இருக்கவேண்டும், அவை ஒழுங்காக நிறை வேற்றப்படவேண்டும் என்பதில் உங்களுக்கு, எல்லாப்பிரச்சினைகளையும் திரையில் துவம்சம் செய்யும் ரஜினிக்கு, அந்நியன் - ஜென் டில்மேன் - முதல்வன் புகழ் ஷங்கருக்கு - ஏவி எம்முக்கு -- அக்கறை இருக்கிறதா இல்லையா?
//

இந்த வரி ஏய்ப்பு, அதிகக்கட்டணச்சலுகை சிவாஜிக்கு மட்டும் தான் என்றால் கண்டிக்கதக்கது.

ரஜினி படம் என்று இல்லை,சென்னையில் எல்லாபட்த்திற்க்கும் அதிக விலைதான்.சத்தியம் ம்ற்றும் சிட்டி சென்டர்,ஏன் காசி ஆல்பர்டில் கூட டிக்கட் விலை கேட்டு பாருங்கள் தெரியும்.

பினாத்தல் சுரேஷ் said...

கலக்குங்க வெட்டிப்பயல்.. தனியாவே பார்க்க வாழ்த்துக்கள் :-)

சதுர்வேதி -- உங்களோட தீவிரமான ஸ்டீரியோடைப்பான தமாஷான கருத்துக்களை வைத்து நீங்கள் ஒரு போலி என்று என் மனதுக்குள் பட்சி சொல்வதால், இப்போதைக்கு உங்களுக்கு பதில் சொல்லவில்லை.

கொத்ஸ் அண்ணா -- வாங்க.. அய்யா நீங்க ஒருத்தராவது என் கோபத்தை புரிஞ்சிகிட்டு கூடச் சேர்ந்திருக்கீரே.. நன்றி அய்யா நன்றி!

பினாத்தல் சுரேஷ் said...

ராஜா,

உங்கள் பின்னூட்டம் புண்படுத்த எல்லாம் இல்லை. (ரொம்ப தடித்தோல்:-)) நானும் சும்மா தமாஷ்தான் செய்தேன்.

//இந்த வரி ஏய்ப்பு, அதிகக்கட்டணச்சலுகை சிவாஜிக்கு மட்டும் தான் என்றால் கண்டிக்கதக்கது.

ரஜினி படம் என்று இல்லை,சென்னையில் எல்லாபட்த்திற்க்கும் அதிக விலைதான்.சத்தியம் ம்ற்றும் சிட்டி சென்டர்,ஏன் காசி ஆல்பர்டில் கூட டிக்கட் விலை கேட்டு பாருங்கள் தெரியும். //

இந்த நிலைமை சட்டப்படி சரியாக கொஞ்ச நாள் முன்வரை இருந்தது. அதுவே சரி என்றும் நான் நினைக்கிறேன். டெண்டுக்கொட்டாய் பராமரிப்பு, வேலூர் போன்ற டவுனில் ஏஸி பராமரிப்பு, சென்னையில் சினிப்ளெக்ஸ் பராமரிப்பு எல்லாவற்றுக்கும் ஒரே செலவு என்பது சரியல்ல. அதே போல, லோலோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தையும் ஹைஹைபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தையும் ஒரே செலவில் பார்ப்பது சரியல்ல என்றே நினைக்கிறேன். என் கருத்துப்படி அந்தச் சட்டம் (எல்லாப்படத்துக்கும் ஒரே டிக்கட் விலை) தவறு!

ஆனால், அரசியல் காரணங்களுக்காக இயற்றப்பட்ட சட்டம் இயற்றியவர்களாலேயே அரசியல் காரணங்களுக்காக மதிக்கப்படாமல் போவது அசிங்கமாக இருக்கிறது - அதைத்தான் சொன்னேன்.

மனதின் ஓசை said...

சுரேஷ்,
சிவாஜிக்கு வரி விலக்குன்னு ஒரு பதிவ பர்த்தேன்..கிண்டல் பன்றாங்கன்னுதான் நினைச்சேன். அத படிக்கல.. ஆனா உண்மைன்னு இப்பதான் தெரிஞ்சது.. அப்பட்டமான ஏமாற்று வேலை இது. வரி ஏய்ப்பு தான்.

சமீப காலங்களில் கலைஞரின் செயல்பாடுகள் அவர் மீது இருந்த சிறிய நம்பிக்கையையும் குலைக்கும் விதமாக உள்ளது.. மதுரைய்ல் மாண்ட உயிர்கள், நிருபருக்கு ஒருமையில் பதில், விமான நிலைய விரிவாக்கம் ஹெல்மெட் பிரச்சினை.. இப்படி எதிலும் உறுதிய்யான சரியான நிலைப்பாடு இல்லை. கடைசியாக உச்சமாக கனிமொழிக்கு பதவி.. கொடுமை அது. அண்ணா ஆரம்பித்த கட்சி உங்கள் வீட்டு சொத்தா என்ன என வைகோ கேட்பதும் சரியெனவே இப்போது தோன்றுகிறது.

Sridhar V said...

//எம்டன் உம் பெயர்ச்சொல்தானே?//

நான் சுட்டிக் காட்டியது 'மராத்திய அரசன் தமிழனாவான்' என்ற உங்களுடைய ஸ்டேட்மென்ட்.

மற்றபடி பெயர்ச்சொல்லை மொழி மாற்றம் செய்ய வேண்டுமா என்றால் தேவையில்லைதான். சிவாஜியை விடுங்கள். செ குவெரா, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், நெல்சன் மண்டேலா, மாரடோனா போன்றோரை பற்றியும் தமிழ் படமெடுத்தால் அவர்களுடைய பெயரை வைப்பதில் பிரச்னை இருக்காது. ஆனால் அவர்களைப் பற்றி தமிழில் படம் எடுக்க முடியுமா என்பது வேறு கேள்வி.

'எம்டன்'-க்கு வரிச்சலுகை மறுக்கப்பட்ட மாதிரி செய்தி எதுவும் இல்லையே. அவர்களாக மாற்றிவிட்டார்கள்.

பொதுவாக திரைப்படங்களுக்கு இந்த மாதிரி வரிச்சலுகை தேவையா என்றால், கண்டிப்பாக இல்லைதான்.

ஆனால் சிவாஜிக்கு சலுகை ஏன் என்று கேட்க அடிப்படை காரணம் எதுவும் இல்லை.

இந்த சலுகை அறிவிப்பு இல்லை என்றால் இந்த படத்தின் தலைப்பு வெறும் 'BOSS' என்று கூட வைத்திருப்பார்கள். இல்லையா?

அப்படி சினிமா தலைப்பினால் என்ன பெரிதாக தமிழ் வளர்ந்துவிடப் போகிறது. இந்த சலுகையெல்லாம் தமிழுக்காக இல்லை. 'தமிழ்' பற்றி பேசும் கூட்டத்திற்காக. அவர்களையும் திருப்தி செய்தாகிவிட்டது, திரைத்துறைக்கும் நல்லது செய்தாகிவிட்டது.

அரசாங்கத்தை தவிர வேறு யாருக்கும் இழப்பில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும், என்னுடன் ஒத்துப்போவதற்கும் நன்றி மனதின் ஓசை.

திமுக பற்றி வெளியாட்கள் நாம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அரசு பற்றி? இப்படி மாற்றி மாற்றிப்பேசும் ஆணைகள் பற்றி தாராளமாகப் பேசலாம்.

அதென்னவோ தெரியவில்லை, துக்ளக் சோவைத் தாக்கி எத்தனையோ பதிவுகள் போட்டிருக்கிறேன், அதிமுகவை கிண்டலடித்திருக்கிறேன், பிஜேபியை சீத்தூ என்றொரு பதிவு போட்டிருக்கிறேன்.. அதையெல்லாம் கவனிக்காமல், என் எழுத்துக்குள் ஜாதீயம் தேடுபவர்கள், திமுகவைத் திட்டும்போது மட்டும் வெளிப்படுவது ஆச்சரியம்!

ஸ்ரீதர்,

சிவாஜிக்கு கொடுக்கப்பட்டபிறகு எம்டன் எடுத்திருந்தால் மாற்றியிருக்கமாட்டார்கள்தானே?

இந்த வரிவிலக்கே ஒரு அசிங்கமான சட்டம். தன் கூட்டணி தமிழ்ப்பாதுகாப்புப் பிள்ளையார்களை சாந்தப்படுத்த எடுத்து உடைக்கப்பட்ட கடைத் தேங்காய்!

சிவாஜிக்கு சலுகை ஏன் என்று கேட்கிறேன் என்றால், இந்தப்படத்துக்குதான் முதல்முறையாக பெயர்ச்சொற்கள், புழங்கக்கூடியவை என்ற வகையில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக படம் பிடிக்கத் தெரிந்த நிறுவனத்துக்கு வரி ஏய்க்க ஏன் வாய்ப்பு தரவேண்டும்? இந்தச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறதா? அல்லது இப்படித்தான் ஏற்கனவே சட்டம் இருந்ததா? அப்படி இருந்திருந்தால் தமிழில் ஓரிரு படங்களைத் தவிர எந்தப்படத்தின் மூலமாகவும் அரசுக்கு வரியே வந்திருக்க வாய்ப்பில்லையே!

Sridhar V said...

//வரி ஏய்க்க ஏன் வாய்ப்பு தரவேண்டும்? இந்தச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறதா? அல்லது இப்படித்தான் ஏற்கனவே சட்டம் இருந்ததா?//
Interpretation of law என்று சொல்வார்கள். தமிழ் தலைப்புகள் உள்ள படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு என்பதுதான் சட்டத்தின் நேரடியான அர்த்தம்.

தமிழ் என்றால் என்ன? தமிழ் எழுத்துகள் எவை? ஜ, ஹ, ஷ, ஷ்ரி, இதெல்லாம் இருந்தால் அது தமிழ் சொல்லா? போன்ற கேள்விகள் எல்லாவற்றிற்க்கும் பதிலளிக்க வேண்டியவர்கள் மொழி அறிஞர்கள்.

//அப்படி இருந்திருந்தால் தமிழில் ஓரிரு படங்களைத் தவிர எந்தப்படத்தின் மூலமாகவும் அரசுக்கு வரியே வந்திருக்க வாய்ப்பில்லையே!
//

ஓரிரு படங்களா? இந்த வரிவிலக்கு அறிவிக்கப்பிட்ட பிறகு வெளியிடப்பட்ட எல்லா படங்களுக்கும் வரிவிலக்குதான்.

//தமிழ்ப்பாதுகாப்புப் பிள்ளையார்களை சாந்தப்படுத்த எடுத்து உடைக்கப்பட்ட கடைத் தேங்காய்//
இது சூப்பர் பஞ்ச்.

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர்,

Dumb Charades விளையாட்டு விளையாடும்போது போட்டுக்கொள்ளும் விதிகளைவிட மிகச் சுலபமாக மீறப்படுகின்றன இந்த விதிகள்!! ஆட்சி கையில் இருப்பதால் விதிகளை உருவாக்கலாம், மாற்றலாம், அத்துமீறலாம் என்பது கேவலம் - இல்லையா?

எல்லாவற்றையும்விட என்னை கோபப்படுத்துவதும் இப்படி விதிமீறல்கள், சட்ட அனுசரணைகள், ஆட்சியாளர் தயவோடு வெளிவரும் படம், சோஷியல் சர்வீஸ், பொதுவாழ்வில் நேர்மை பற்றி பேசப்போகும் ஐரனி!

மஞ்சூர் ராசா said...

உண்மையை சொன்னால் நீங்கள் தான் BOSS.

நல்லதொரு கட்டுரை.
இவர்கள் எப்பொழுதுதான் திருந்துவார்களோ?

SurveySan said...

You are invited by சர்வேசன் for the 'எட்டு' play!

Click here for details and respond!

நன்றி!

அன்பு. பாலகுமார் said...

தாங்களின் இந்த கட்டுரை நன்றாக உள்ளது ஒரு சொல் நாரயணனின் கருத்துக்கள் என்னுடைய மனக்கொதிப்பை முழுவதுமாக வெளிப்படுத்தி உள்ளன மிக்க நன்றி

அன்பு. பாலகுமார் said...

தாங்களைப் போலவே நானும் எனது நண்பர்களும் சிவாஜி படத்தை தியேட்டரில் பார்ப்பது இல்லை திருட்டு விசிடி வாங்கிபார்த்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

 

blogger templates | Make Money Online