Oct 10, 2007

அம்முவாகிய வீண்!

விகடன் விமர்சனத்தையும் தருமி விமர்சனத்தையும், கேள்விப்பட்ட கதை முடிச்சையும் வைத்து நல்ல படமாக இருக்குமோ என்ற ஒரு தோற்றம் கிடைத்ததால்தான் இந்த திராபையைப் பார்த்தேன், நொந்தேன்.
 
கதைக்களன் வித்தியாசமானதுதான், முதல் முறை இல்லையென்றாலும் கூட. விளிம்பு மாந்தர்களைக் கதையெழுதும் எழுத்தாளர் ஒரு விலைமாதுவை மணம் முடிக்க அதனால் ஏற்படும் சிக்கல்களைச் சொல்லும் எளிய கதையை, திரைக்கதை, பாத்திரப்படைப்பு என்று எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.
 
முதலில் அம்மு! என்ன கதாபாத்திரம் என்றே முதல் பாகத்தில் புரியவில்லை. அந்தத் தொழில் பிடித்துதான் செய்கிறாள் என்பது வித்தியாசமாக இருந்தாலும், புற உலகம் ஒன்றுமே தெரியாமல் வளர்ந்திருக்கிறாள் என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. வியாதி வந்து காணாமல் போன சக தொழிலாளியைப்பற்றி, அவளுக்கு வந்த வியாதியைப்பற்றி ஒன்றுமே தெரியாமலா இருப்பாள்? புற உலகத்தின் மீது அலட்சியமாக இருப்பவர் (indifferent) எனக்காட்ட நினைத்து அறியாதவர் (ignorant) என்றே காட்டப்பட்டு இருக்கிறது இந்தப்பாத்திரம். என்னைக்கட்டிக்கவே ஆள் இருக்கு என்பதைப் பெருமையாகப் பேசுவாராம், ஆனால் தாயிடம் பேசும்போது திருமணத்தினால் ஆன பயனென்கொல் என்று வாதிடுவாராம். அந்தப்பெண்ணின் திறமையான நடிப்பு இந்த ஓட்டைக் கதாபாத்திரத்தால் காணாமல் போகிறது.
 
அடுத்து அந்த எழுத்தாளர். எந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. விளிம்பு மாந்தர்களின் துயரை இரண்டு முறை எழுதிவிட்டாராம், விருது கிடைக்கவில்லையாம், மூன்றாம் முறையாக விலைமாதுக்கள் பற்றி எழுதப் புறப்பட்டாராம். விருதுக்காக விலைமாதுவின் கதையை விற்பதுதான் அவர் நோக்கமா? நிஜமான எழுத்தாளர்களுக்கு வெட்கக்கேடு! அவ்வப்போது மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு தத்துவம் பேசிவிட்டால் மட்டும் எழுத்தாளர் ஆகிவிட முடியுமா?
 
நிஜமான துயருடன், அத்தொழிலை விட்டு ஓடவேண்டும் என்று ஆயிரம் பெண்கள் காத்திருக்க, இந்தப்பெண்ணை இவர் தேர்ந்தெடுக்கும் காரணம் சுத்தமாகப் புரியவில்லை. அந்தக்காரணங்களை விளக்க திரைக்கதையில் விபூதி வைப்பது தவிர எந்த அழுத்தமான காட்சியும் இல்லை. ("நீங்க சீக்கிரமா விட்டுட்டீங்கன்னா கொஞ்சம் கணக்கு பழகிக்குவேன், நாளைக்கு அரைப்பரீட்சை" என்று சொன்ன வேலு நாயக்கனின் மனைவி ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை - அதுவும் ஒரே காட்சிதான்.. எவ்வளவு அழுத்தமாக இருந்தது!) திருமண வாழ்க்கைக்கு ஆசைப்படாத பெண்ணைத் திருமணம் முடித்து, அவளுக்கு வாழ்க்கையின் சந்தோஷங்களைப் புரியவைப்பதுதான் லட்சியம் என்றும் சித்தரிக்கப்படவில்லை! சரி போகட்டும், அழகும் அவருக்கு தேவைப்படுகிறது என்று விட்டுத் தள்ளலாம் என்றால், அவர் எழுதியதாகக் கூறப்படும் கதை!
 
அம்முவாகிய நான் என்று கதைக்குப் பெயர். சமர்ப்பணம் அம்முவுக்கு. பொதுமேடையிலேயே, இந்தக்கதாபாத்திரம் உண்மை, அம்முதான் என் மனைவி என்ற அறிக்கை. இதில் எங்கேயும், அம்முவின் வாழ்க்கை மேம்படவில்லை.. இப்படிப்பட்ட பெண்ணை மணம் செய்துகொண்டிருக்கிறேன் பார் - நான் எவ்வளவு நல்லவன் என்று தெரிந்துகொள் என்ற கீழ்த்தரமான விளம்பர யுக்திதான் தென்படுகிறது! (மீண்டும் வேலு நாயக்கன் - அவளுடைய முன்வாழ்க்கை பற்றி படத்தில் வேறெங்கும் பிரஸ்தாபிக்காமல் இருந்த தன்மை!)
 
எந்த அளவுக்கு ஹோம்வொர்க் செய்யாமல் படம் எடுத்திருக்கிறார் என்பதை விருதுக்கு கருதப்படும் புத்தகங்களே காட்டுகின்றன. ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் எழுதிய வாழ்க்கைப்பாடம், நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு, அம்முவாகிய நான் புனைகதை இவை மூன்றும் இறுதிகட்டத் தேர்வுக்காக இலக்கிய கழகத் தலைவர் கைக்கு வருகிறதாம்! என்ன ஒரு அஸ்ஸார்ட்மெண்ட்! சரி, கௌரிஷங்கருக்கு ஒரு அழகான மனைவி இருக்கிறாள், பெர்வர்ட் இலக்கிய கழகத் தலைவருக்குத் தீனி போட. ஆனால் ஸ்ரீஸ்ரீரவிஷங்கரும் நெல்சன் மண்டேலாவும் என்ன செய்திருப்பார்கள்? அப்படி என்ன விருது அது? நிஜமாக எழுத்தாளர்கள் அனைவரும் ஏங்கும் அளவுக்குத் தமிழுக்கு / இந்திய மொழிகளுக்கு ஏதேனும் அப்படி ஒரு விருது இருக்கிறதா?
 
இந்த ஓட்டைப் பாத்திரங்கள் தவிரவும் சில பாத்திரங்கள் இருக்கின்றன படத்தில். முக்கிய பாத்திரங்களே இப்படி என்னும்போது சைட் பாத்திரம் மட்டும் என்ன உருப்படியாகவா இருந்துவிடப்போகிறது? உயரியவிருது பெற ஆசைப்படும் எழுத்தாளரின் அக்கா இன்னும் கிமுவில், தன் மகளைத் தம்பிதான் திருமணம் முடிக்கவேண்டும் என்ற லட்சியத்தில் (நம் குடும்பத்துக்கு வாரிசு என் பெண் மூலம்தான் வரவேண்டும்-ஆம்!). மேற்படி எழுத்தாளரின் நண்பன் வெளிப்படையாகப் பேசுகிறவன் என்ற போர்வையில் "பத்தினியையா அனுப்பப்போறே, அவளுக்கு என்ன இது புதுசா? உன் விருதுதாண்டா முக்கியம்" என்று கேனத்தனமாக உளறுகிறான். முன்னாள் கஸ்டமர் "தங்கைன்னு சொன்னா கேவலம்" என்று நலம்விரும்பியாகிறான்!
 
கேனத்தனமான பாத்திரங்கள், சம்பவங்கள் பெரிதாக இல்லாமல் உருளும் திரைக்கதை (யாரோ சொல்லிட்டாங்க போல - ஸ்லோவா படம் இருந்தா விருது கிடைக்கும்னு).
 
இசை, பின்னணி இசை பற்றி சொல்லாமல் விடுவதே நலம்.
 
பாலசந்தர் என்று ஒரு டைரக்டர் இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா? அவருடைய தொண்டரடிப்பொடி போல இந்த டைரக்டர்! முதல் காட்சியில் புதிதாய்ப் பிறந்த அம்முவை விற்க அவள் அப்பா வரும்போது பின்னணியில் பழைய பேப்பர் விற்கும் காட்சியில் இந்த டைரக்டோரியல் டச்செல்லாம் இன்னுமா காலாவதி ஆகவில்லை என்ற கேள்விதான் எழும்புகிறது! ஒரு கொலை, திணிக்கப்பட்ட சோகமுடிவு.. பாலசந்தரின் படம் போலவே இருக்கிறது!
 
மன்னிச்சுக்கங்க தருமி.. உங்களைப்போல அம்முவாகிய நான் படம் நல்லா இருக்குன்னு என்னால சொல்ல முடியலை!
 
இது நல்ல படம் இல்லை. நல்ல படம் மாதிரி!

27 பின்னூட்டங்கள்:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சொல்லி இருக்கீங்க.. எனக்கு தோண்றியதும் இப்படித்தான் வித்தியாசமோ ,, ரொம்ப உயர்ந்த எதையுமோ அந்த படம் சொல்லவே இல்லை. மத்த எல்லா லாஜிக்க்பார்க்கக்கூடாத சாதாரணப்படம் போலவே தான் இதுவும்..

கதிர் said...

ரொம்ப டென்சனாயிட்டிங்க போலருக்கு.

கதிர் said...

உங்கள் கோபம் தீர நகைச்சுவை மாதிரி படமான மலைக்கோட்டையை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

நாகை சிவா said...

//இது நல்ல படம் இல்லை. நல்ல படம் மாதிரி!//

:)))

சூப்பர்...இது உங்க விமர்சனத்துக்கும் உங்களால் என்றும் குறை மட்டும் கூறப்படும் மணிரத்னம் படத்தில் இருந்து நல்ல விசயத்தை கூறியதுக்கும்

Anonymous said...

thank you penthal sir for criticising balachader. all he did was to sit with his face supported by his hand ..intellectual look?

i have not seen ammuvagiya......
i differ with you in two places.

there are people who are very ignorant of many things around them. particulalry about illnesses.you would be shocked to see some of our 'homely pengal' responses when they get hiv from their husbands..completely no reaction.i mean some.

secondly eventhough it lookslike the hero has tried to covertly reform this woman, it calls for courage to say that there are women who may like commercial sex work. it is their choice.

i am going to be 'anony'here or else culture vultures may come in an auto for saying this.......

on all accounts i feel your review is good.

தருமி said...

தலிவா!
நம் அளவுகோல்கள் வித்தியாசமாக இருப்பதால் வந்த விளைவு.

anyway, let us agree to disagree on அம்முவாகிய நான் ...
let us meet some other time at some other point!
CHEERIO!

லக்ஷ்மி said...

//நிஜமாக எழுத்தாளர்கள் அனைவரும் ஏங்கும் அளவுக்குத் தமிழுக்கு / இந்திய மொழிகளுக்கு ஏதேனும் அப்படி ஒரு விருது இருக்கிறதா? // இது தமிழ் சினிமாவின் சாபக்கேடுங்க.. இப்ப நாயகன் ஒரு இசைக் கலைஞனா இருந்த இந்திய அளவில நிச்சயம் ஒரு போட்டி இருக்கும். அதுல ஜெயிக்கறதுதான் க்ளைமாக்சா இருக்கும். அதுக்காக இவருக்கு தன் உயிர் பொருள் ஆவிய தியாகம் பண்ண ஒரு கதாநாயகியோ இல்லை நண்பனோ இல்லை அம்மாவோ அநேகமா சாவாங்க.... எதுன்னாலும் நமக்கு இறுதி வெற்றி ஒரு போட்டி நடத்தி ஜெயிக்கறதோ இல்லை பரிட்சைல பாசாகறதோதான்... அதும் இல்லைன்னா பணக்காரனாகி எதிரி ஜெயிச்ச எதுனா சங்கத்தலைவர் பதவில இவரு உக்காரணும்...

கதை கேட்டதுமே நினைச்சேன் - மனைவியோட கதைய எழுதி விருது வாங்க/விக்கத் துடிக்கறவனுக்கு அவ மேல என்ன மாதிரியான காதல் இருக்கும்னு. அழகா அலசியிருக்கீங்க.

Boston Bala said...

பொழுது போகாத பொம்மு ஆராய்ச்சி:

ஆச்சரியக் குறி: 17
கேள்விக் குறி: 9
.. (தொடர்புள்ளி): 4
அடைப்புக்குறி (): 6
முற்றுப்புள்ளி: 23

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முத்து லட்சுமி.

தம்பி.. இன்னிக்கு ட்யூ மருதமலை. மலைக்கோட்டை இன்னும் கைவசப்படவில்லை :-)

நாகை சிவா, நான் மணிரத்னத்துக்கு கண்மூடிய எதிரி அல்லவே.. அவர் படங்களின் டெம்ப்ளேட்டை மட்டும்தானே கிண்டல் செய்திருந்தேன். அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

இக்னோரண்ட் என்று நான் சொன்னது இந்தப்பாத்திரத்தின் மற்ற அலட்சியங்களுக்கு பொருந்தாத விஷயம் அறியாத்தன்மையையே.. முழுக்க முழுக்க பாத்திரம் சம்மந்தப்பட்டது. எனவே நீங்கள் சொல்லும் வெளியுஅக உதாரணங்கள் இங்கு பொருந்தாது.

இருக்கலாம், இந்த நிலையையும் விரும்பக்கூடிய பெண்கள் இருக்கலாம். ஆனால், நாயகனின் தேர்வு ஏன் அப்படிப்பட்ட ஒரு பெண்ணாய் இருக்கவேண்டும் என்பதுதான் என் கேள்வி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தருமி.

லக்ஷ்மி.. ஆமாம். முன்பு எப்போதோ திண்ணையில் ஒரு கடுரை படித்திருந்தேன் - தமிழ் சினிமாகாட்டும் வாழ்க்கை லட்சியம் என்று. நீங்கள் சொல்வதற்கும் அந்தக்கட்டுரைக்கும் ரொம்ப ஒத்துப்போகிறது.

பாலா, என்ன சொல்ல வரீங்க.. முற்றுப்புள்ளி கொஞ்சம் அதிகம்தான், மத்ததெல்லாம் கட்டுரைக்குத் தேவையான அளவுக்குத்தானே இருக்கு? கணக்கு மட்டும் போதாது. ரிஸல்ட் என்னன்னும் சொல்லுங்க :-)

Anonymous said...

இது பார்த்திபனுடைய மனைவி சீதாவின் கதை.

துளசி கோபால் said...

'பொழுதண்ணிக்கும் கண்ட படத்தை அனுப்பி வைக்கிறீங்க. இனிமேப்பட்ட நல்ல படங்கள் மட்டுமே அனுப்புங்க. இல்லேன்னா நான் நீங்க அனுப்புறதையெல்லாம் திருப்பி அனுப்புவேன்'ன்னு நம்ம டிஸ்ட்ரிப்யூட்டரைக்
கடிஞ்சுக்கிட்டேன். அதனாலெ அவரே இதை அனுப்பலை:-))))

இலவசக்கொத்தனார் said...

பினாத்தல், படத்துக்கு நல்ல விமர்சனம்.

பாபா, சூப்பர் புள்ளி விபரம்!! :))

ஜமாலன் said...

உங்கள் விமர்சனம்தான் எனத கருத்தும். எதை சொல்ல முயல்கிறார்கள் அதில் என்றே புரியவில்லை. இதற்க ஏன் இத்தனை அளப்பற என்றும் புரியவில்லை. கடற்கரையில் அவளை திருமணம் செய்வது விஷயமாக பேசும் வசனங்கள் தவிர.. படம் மிக மோசமான பதிவுறுத்தலை உருவாக்குகிறது. எழுத்தாளன் பற்றியும் பாலியல் தொழில் செய்யும் பாவப்பட்ட பெண்களைப்பற்றியும். இது வீண்தான்..

SurveySan said...

வீண் என்று ஈசியா ஒதுக்கிட முடியாது.

படம் சுமார் ரகம். பல அபத்தங்கள் இருந்தாலும், ஒரு புது முயற்சி.

இப்ப வர அநேக படங்கள் போலில்லாம, ஏதோ நாமளும் புதுசா எடுக்க முயற்சிக்கரோம்னு காட்ட ஒரு படம்.

last 5 yearsல வந்த நல்ல படங்கள் யோசிச்சா, ஒண்ணும் தோண மாட்ரது. அழகியைத் தவிர 'அட' போட வைத்த படங்கள் ஞாபகத்துக்கு வரல.

சேது?
பிதாமகன்?
வேற?

இலவசக்கொத்தனார் said...

சர்வேசன், சமீபத்தில் வந்த படங்களில் நான் ரசித்துப் பார்த்தது மொழி மட்டுமே.

Boston Bala said...

---5 yearsல வந்த நல்ல படங்கள் யோசிச்சா,---

உலகத்தரம் என்றெல்லாம் நோண்டாமல்...
1. எம் மகன்
2. தூள்
3. இயற்கை
4. புதுப்பேட்டை
5. சித்திரம் பேசுதடி
6. டிஷ்யூம்
7. பட்டியல் (முழுக்க முழுக்க தழுவல் என்றாலும், மிக சிறப்பாக செய்யப்பட்ட ரீமேக் :)
8. வெயில்
9. பொன்னியின் செல்வன்
10. குட்டி

சாசனம், அமிர்தம் போன்ற படங்களை இன்னும் பார்க்கவில்லை.

'அன்னியன்' எல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாமா ;)

SurveySan said...

பாலா,

//
1. எம் மகன்
2. தூள்
3. இயற்கை
4. புதுப்பேட்டை
5. சித்திரம் பேசுதடி
6. டிஷ்யூம்
7. பட்டியல் (முழுக்க முழுக்க தழுவல் என்றாலும், மிக சிறப்பாக செய்யப்பட்ட ரீமேக் :)
8. வெயில்
9. பொன்னியின் செல்வன்
10. குட்டி//

பத்து படங்களும் பரவால்ல ரகம். ஏ.க்ளாஸ்னு ஏத்துக்க முடியாத ரகங்கள்.

இவ்ளவுதான் நல்ல படங்களா?

காக்க.காக்க வேண்டாமா? :)
அலைபாயுதே?

பினாத்தல் சுரேஷ் said...

அனானி.. சீதாவோட கதையா? போயிட்டுப்போகுது விடுங்க :-)

துளசி அக்கா, உங்களுக்கு எங்க மேலெல்லாம் என்ன கோபம்? நீங்க சொன்னதினால எத்தனை படம் பாக்காம தப்பிச்சிருக்கோம் தெரியுமா அந்தக்காலத்திலே :-(

நன்றி கொத்தனார்..

நன்றி ஜமாலன். இது போன்ற மிடில் சினிமாக்கள் எந்தப்பக்கத்தையும் விட மோசம் என்பதுதான் என் கருத்து.

பினாத்தல் சுரேஷ் said...

சர்வேசன், சுமார் ரகம் இல்லை, ரொம்பவே சுமார் ரகம் :)

அட போடவச்ச படங்கள் நிறையவே இருக்கு.. காதல், சென்னை28 போன்றவை, பாபா சொல்லாத, என் நினைவுக்கு உடனே வந்த படங்கள்.

மொழி நல்ல படம்தான் கொத்ஸு.. ஆனா, எனக்கு ஓவர் பில்ட் அப்பா பட்டுச்சு. இதுதான் தமிழ்லே வந்த ஒரே நல்லபடம்ன்ற ரேஞ்சில பேச்சு ஓடிகிட்டிருந்துச்சே ஞாபகம் இருக்கா?

பாபா, நான் சொன்னா மாதிரி உடனே ஞாபகத்துக்கு வந்த லிஸ்டுதானே அது? நெறய அந்த லிஸ்ட்டைத் தாண்டியும் நல்ல படங்கள் வந்திருக்கு..

பொன்னியின் செல்வன், நிஜமாவே நெறயப்பேர் பாக்காம விட்டுப்போன நல்லபடம்!

லக்கிலுக் said...

//
1. எம் மகன்
2. தூள்
3. இயற்கை
4. புதுப்பேட்டை
5. சித்திரம் பேசுதடி
6. டிஷ்யூம்
7. பட்டியல் (முழுக்க முழுக்க தழுவல் என்றாலும், மிக சிறப்பாக செய்யப்பட்ட ரீமேக் :)
8. வெயில்
9. பொன்னியின் செல்வன்
10. குட்டி//

இந்த லிஸ்ட்டுலே எம் மகன் எப்படி வருது? செம மொக்கை Presentation ஆச்சே?

Boston Bala said...

---காக்க.காக்க வேண்டாமா?---

அதானே... நிறைய மறந்து போச்சு!

---செம மொக்கை Presentation ஆச்சே?---

நான் மெட்டியொலி ரசிகனுங்க :D

---கணக்கு மட்டும் போதாது. ரிஸல்ட் என்னன்னும் சொல்லுங்க ---

ரொம்ப ஆச்சரியப்பட்டிருக்கீங்கன்னு தோணிச்சு :)

பினாத்தல் சுரேஷ் said...

லக்கி சொல்றதும் நியாயமாத்தான் படுது. படம் ஓக்கே.. ஆனா ரொம்ப சீரியல்தனம்.

ஆச்சரியம் எல்லாம் இல்லை பாபா.. எரிச்சல்தான். (ரெண்டு ஆச்சர்யக்குறி எல்லாம் எப்பவாச்சும்தான் போடுவேன் :-))

ramachandranusha(உஷா) said...

பினாத்தலாரே! காயத்ரி போட்ட அ.வா.நான் படத்து விமர்சனத்துக்கு என்னுடைய கமெண்டு இது. மீண்டும் உங்க பார்வைக்கு

//கும்மு கும்முன்னு கும்முவீங்கன்னு ஆவலுடன் ஓடி வந்த என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்களே காயத்ரி! கொடுத்த காசு படத்தின் முதல் பாதிக்கே போதும் என்று அவன் அவன் கிளுகிளுத்துப் போயிருக்கான். என்னமோ போங்க,இந்த நவீன நளாயினின்னு பட டைரக்டர் கில்லாடின்னு விமர்சனங்களைப் பார்த்தா தோணுது :-)//

நான் நானாக............ said...

படம் பாக்கலாம்னு இருந்தேன்.

இப்ப வேண்டாம்னு முடிவு

பண்ணிட்டேன்....

பினாத்தல் சுரேஷ் said...

உஷாக்கா,

//கொடுத்த காசு படத்தின் முதல் பாதிக்கே போதும் என்று அவன் அவன் கிளுகிளுத்துப் போயிருக்கான்.// அப்படி ஒரு எழவும் இருக்கறதாவும் தெரியலையே :(

நான் நானாக, சரியான முடிவு :)

 

blogger templates | Make Money Online