Dec 6, 2007

காமத்திற்கும் கண் உண்டு - சிறுகதை

என் கற்பை இன்று இழக்கத் தீர்மானித்துவிட்டேன்.

28 வருடங்களாகப் பெயர் தெரியாத ஒருத்திக்காக பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்ததை கைவிட முடிவெடுத்ததில் வருத்தம் இல்லாதது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

வாய்ப்புக் கிடைக்காத வரைதான் நீ யோக்கியன் என்று குரு சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

இந்த நகரம் அப்படிப்பட்டது. இந்த விஷயத்தில் யோக்கியனாக இருப்பது ரொம்பவே கஷ்டம். அமெரிக்காவை டாலர் தேசம் என்றால் பாரீஸை காதல் தேசம் என்று சொல்லலாம்.. இல்லை இல்லை காம தேசம். க்யூவில் நிற்கும் நேரத்தைக்கூட வீணடிக்காமல் முத்தமிட்டுக்கொண்டிருப்பவர்கள் நிறந்த தேசம். தன்னூரில் எப்படியோ தெரியாது, இந்த ஊர்க்காற்றுக்கே உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய சக்தி அதிகமாகவே இருக்கிறது.சிக்னலில் நிற்கும் நேரத்தில் அப்படி என்னதான் அவசரமோ..தடவிக்கொண்டிருக்கிறான்.. இந்தக் கண்றாவியெல்லாவற்றையும் சூடேறிப் பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. காலார நடந்தாலும் தெருவோரக்கடைகளில் தூண்டிவிடும் விதவிதமான பொம்மைகள், உண்மைகள், லேப் டான்ஸுகள், க்ளப்புகள்!.. நடப்பதைக் கூட விட்டுவிடவா முடியும்? இந்த ஊரில் இவ்வளவு நாள் காப்பாற்றி வந்ததே பெரிய விஷயம்.

வாய்ப்பு கிடைக்காமல் இல்லை. பயம். புன்னைநல்லூர் நடராஜனுக்கு மேட்டர் தெரிந்து மறுபடி பெல்டைக் கழற்றுவாரோ என்ற தேவையில்லாத பயம் தொடங்கி எங்கேயாவது போட்டுக்கொடுக்கப்படுவோமே என்ற பயம். எதாவது வியாதி வெக்கை வந்து அசிங்கமாகிவிடுமோ என்ற பயம்.

இருந்தும், இன்று அந்த பயங்களைத் துறந்துவிட்டேன்.

காலையில் போர்டன் சொன்னபோதுகூட ஒன்றும் தோன்றவில்லை. "ராவி, நைட் கொஞ்சம் CDG போய் எலிஸாவைப் பிக் செய்து ஹோட்டலில் ட்ராப் செய்து விடுகிறாயா?"

இதுபோன்ற வேலைகள் எல்லாம் என் தலைமீது விழுவது வழக்கம்தான். நீதானே தனியாக இருக்கிறாய்.. நாங்கள் எல்லாம் குடும்பத்துக்குத் திரும்பவேண்டும். வீட்டில் தனியாக என்னதான் செய்வாய், உனக்கு பொழுதுபோக்குக்கு இன்று நான் பிச்சை போட்டேன்.. என்பது உள்ளே ஒலிக்கும்.

40 கிலோமீட்டர்.. சாயங்கால பாரீஸ் ட்ராபிக்கில் தள்ளாடிக்கொண்டு செல்லவேண்டும். இன்னும் 10 கிலோமீட்டர் ஊர்ந்துவிட்டால் பிறகு கொஞ்சம் ஆக்சிலரேட்டரை அழுத்தலாம். அறைக்குப் போனாலும் போர்தானே அடித்திருக்கும்..ரேடியோவைப் போட்டால் ஆப்பிரிக்க ஜாஸ் காட்டுக்கத்தலாகக் கத்தி காதைப் பதம் பார்த்தது.. எப்படித்தான் கேட்கிறார்களோ இந்த சத்தத்தை.. ஆட்டத்தை பார்க்க வேறு கூட்டிப்போயிருந்தான் ஒரு நண்பன். அருவருப்பு தாங்காமல் பாதியில் திரும்பி வந்துவிட்டேன். சிடியைத் தட்ட "தனிமை கொடுமையோ" என்று ஏ ஆர் ரஹ்மான் MP3யாக ஒலித்துக்கொண்டிருந்தார்.

உண்மை.. தனிமை, செய்ய வேலை ஏதும் இல்லாத, விலை உயர்ந்த பொழுதுபோக்குகள் மட்டுமே உள்ள இந்த நகரத்தில் தனிமை கொடுமைதான்.

பாடல் மாறியது.. "தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்".. என்ன இன்று இந்த மாதிரிப் பாட்டுகளாகவே வந்துகொண்டிருக்கின்றன?  என் மனசு தெரிந்து நடந்துகொள்கிறதா சிடி?

எப்படி இருப்பாள் அந்த எலிஸா? யான் என்ன சொன்னான்? "பிக் அப் பண்ணி ட்ராப் செய்துவிட்டு வந்துவிடாதே.. அமெரிக்க ஆபீஸில் அவளுக்கு ரொம்ப நல்ல பெயர். நிம்ஃப்!"

"யோவ்.. என்னய்யா சொல்றே?"

"அட கேள்விப்பட்டதைத் தான்பா சொல்றேன். ஒருத்தரை விட்டதில்லையாம் அவ!"

ஜேசுதாஸ் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.."விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்"

இதைவிட நல்ல சந்தர்ப்பம் எனக்கு வாய்க்காது என்று அப்போதே புரிந்துவிட்டது. ஒருநாள் ட்ரிப்பாக வரப்போகிறாள், இங்கே யாரையும் அவளுக்குத் தெரியாது. எதாவது ஏடாகூடம் ஆகிவிட்டாலும் போட்டுக்கொடுக்கமுடியாது.. யான் சொன்னது உண்மையாக இருந்தால் ஏடாகூடம் ஆக வாய்ப்பும் கிடையாது..

எனவேதான், என் கற்பை இன்று இழக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

டெர்மினலின் பார்க்கிங்கில் ஜகஜ்ஜோதியாக நின்றுகொண்டிருந்தது கூட்டம். ஏர்போர்ட் பார்க்கிங் ஒரு காட்டெருமை. எப்போது பாயும் எப்போது மேயும் என்று யாருக்கும் தெரியாது. மெஷின் க்யூவில் முன்னாள் ஒரு கறுப்பன்.. விரோதமாகப் பார்க்கிறானா, சிரிக்கிறானா என்று வித்தியாசம் தெரியவில்லை. நான் என் பங்குக்கு காசைப் போடும் முன் ஒருமுறை ஆசைதீர முறைத்தேன்.டெர்மினலை நோக்கி நடக்கையில் வயிற்றுக்குள் எதோ பந்து மாதிரி உருண்டது.

உள்ளே நுழைவதற்குமுன் ஆசுவாசத்திற்கு ஒரு சிகரெட் கொளுத்தினேன். இன்று மூன்று ஆகிவிட்டது. ஒரே நாளில் முழுசாகக் கெட்டுப்போய்விடப்பொகிறேனா?

சிகரெட்டை அணைப்பதற்குள்ளாகவே செல் மணியடித்தது. "ராவி?"

"யா"

"நான் எலிஸா.. போர்டன் சொன்னார், நீ என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக."

"ஆம், டெர்மினல் வாசலில் இருக்கிறேன்"

"ஓ, த கய் வித் ப்ளாக் ஓவர்கோட்? ஸ்பாட்டட்!"

டெலிபோனிலும் நேரிலும் ஒரே நேரத்தில் குரல் கேட்க, ஆரவாரமாகக் கையசைத்துக்கொண்டு நின்றாள் எலிஸா.

திரும்பும்போது நான் அதிகம் பேசவில்லை.. என் நிலைமை பேச அனுமதிக்கவில்லை.. அவள் வளவள என்று பேசிக்கொண்டே வந்தாள்..

"யூ ப்ரம் இண்டியா? த லேண்ட் ஆப் காம்சூத்ரா?"

"யூ லிவ் நியர் தாஜ்மகால்?" தாஸ்மால் என்று உச்சரித்தாள்.

"மெட்ராஸ்! ஓ கேள்விப்பட்டிருக்கிறேன்!"

"உன் மொழிப் பாட்டா? நன்றாக இருக்கிறது! யூ ஹாவ் ஜாஸ், ராக்?" ரேடியோவுக்கு வேண்டாவெறுப்பாக மாற்றினேன்.

ஹோட்டலில் செக் இன்னை முடித்து சாவி வாங்கிக்கொண்டே "உனக்குத் தெரியுமா ராவி? ஜஸ்ட் 50 வருஷம் முன்னால்கூட என்னை ஹோட்டலுக்குள் அனுமதிக்க யோசித்திருப்பார்கள்!"

என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. "இப்போது டிஸ்கிரிமினேஷன் குறைந்துவிட்டிருக்குமே"

"ஆமாம், வெளிப்பக்கம்! உள்ளே எல்லாரும் அப்படியேதான் இருக்கிறார்கள்" புன்னகை என்னவோ வசீகரமாகத்தான் இருந்தது.

"ரூமுக்கு வாயேன், கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம்.. ஹவ் அபவுட் எ ட்ரிங்க்? என் பாடி க்ளாக்குக்கு இப்போதுதான் மதிய நேரம்" கண்ணில் அழைப்பு. யான் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

"இல்லை எலிஸா.. எனக்குக் கொஞ்சம் சில்லறை வேலைகள் இருக்கின்றன. நாளைக்காலை எட்டு மணிக்கு வந்து பிக் செய்துகொள்கிறேன்..குட்நைட்"

திரும்ப வரும்போது மனதில் வெறுமை.. எல்லாமே எதிர்பார்த்ததுபோல்தானே நடந்தது? ஏன் தவறவிட்டேன் இப்படி ஒரு வாய்ப்பை? இதை நிறவெறி என்று சொல்ல முடியுமா? பேசும்போது பழகும்போது எல்லாம் நிறவெறியா காட்டுகிறேன்.. இருந்தாலும் இந்த அளவுக்கு..மனசு இன்னும் பக்குவப்படவில்லை! அட இந்த அசிங்கம் செய்வது பக்குவமா?  பயமோ? தயக்கமோ? என்ன எழவோ!  
 
சே! வேறு வழியில்லை.. நடராஜனே கதி!

************************

பின்குறிப்பு: கதை என்று எழுதி ரொம்பநாள் ஆகிவிட்டது.. தேன்கூடு சாகரனை ரொம்ப மிஸ் செய்கிறேன்! தேன்கூடு போட்டிகள் இருந்தவரை மாதம் ஒன்றாவது எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் போட்டி என்று அறிவித்த சர்வேசனுக்கும், ஊக்கப்படுத்திய பாஸ்டன் பாலாவுக்கும் நன்றி



33 பின்னூட்டங்கள்:

SurveySan said...

//ஆப்பிரிக்க ஜாஸ் காட்டுக்கத்தலாகக் கத்தி காதைப் பதம் பார்த்தது.. எப்படித்தான் கேட்கிறார்களோ இந்த சத்தத்தை//

you mean american rap?
african Jazz is soft and likeable :)

nice story, but twist is not as sharp as expected. enakku pudichirundhadhu ;)

இலவசக்கொத்தனார் said...

ஐயா பெனாத்தலு. அவர் கதை முடிவில் தான் ஒரு ட்விஸ்ட் வைக்கச் சொன்னாரு. நீர் என்னடான்னா ஒரு முடிவோட இறங்கி இருக்கறாப்புல தெரியுது.

அந்த ஈயம் இந்த இசம் அப்படின்னு கும்பல் கும்பலா வந்து கும்மப் போறாங்க. ஸ்டார்ட் மீஜிக் அப்படின்னு சொல்லிக்கிட்டு தெம்பா நில்லும்.

pudugaithendral said...

நன்றாக இருக்கிறது. நடை சரளமாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

//
இருந்தாலும் இந்த அளவுக்கு..மனசு இன்னும் பக்குவப்படவில்லை! அட இந்த அசிங்கம் செய்வது பக்குவமா? பயமோ? தயக்கமோ? என்ன எழவோ!
//
:-)))))))

மங்களூர் சிவா said...

//
இலவசக்கொத்தனார் said...
ஐயா பெனாத்தலு. அவர் கதை முடிவில் தான் ஒரு ட்விஸ்ட் வைக்கச் சொன்னாரு. நீர் என்னடான்னா ஒரு முடிவோட இறங்கி இருக்கறாப்புல தெரியுது.

அந்த ஈயம் இந்த இசம் அப்படின்னு கும்பல் கும்பலா வந்து கும்மப் போறாங்க. ஸ்டார்ட் மீஜிக் அப்படின்னு சொல்லிக்கிட்டு தெம்பா நில்லும்.

//
:-)))))))))
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Boston Bala said...

என் கடன் சுட்டி கொடுப்பதுடன் முடிந்து விடுகிறது ;)

On campuses, students struggle with racism, ethnic tensions - The Boston Globe: "On college campuses, students continue to struggle with ethnic tensions and racist attitudes"

பின்னூட்டத்திற்கு பின்குறிப்பு: 'அழகென்ற சொல்லுக்கு முருகா' என்ற பாடல் போல் அழகு என்று கேட்டாலே என் மனம் கொத்ஸ் பதிவுடன் லயிக்கிறது ;)

மெளலி (மதுரையம்பதி) said...

சாகரனை நினைவில் கொண்டுவந்தமைக்கு நன்றி.

கதை ஒகே....

இப்னு ஹம்துன் said...

இனிய சுரேஷ்,

நண்பர் சாகரனை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி!

கதையைப் பற்றி சொல்லணும்னா,
ஆர்வமாக வந்தும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

நான் ஒரு கதை எழுதியிருந்தேன், படித்தீர்களா?

seethag said...

ரொம்ப நல்லா இருண்தது பெனாத்தலாரே.பின் -முன் பழமை நவீனம் எல்லாம் இல்லாம.
ரொம்ப சரி. நம்ம ஆளுங்க கிட்ட இருக்கிற நிற வெறி..என் நண்பர் ஒரு டெக்கீ சொன்னாரு..அமேரிக்காவுல நம்ம பஸங்க பேசுறதாம்ம்''அதோ போறான் பாரு கருப்பன்ன்'ன்னு..னம்ம ரொம்ப வெள்ள..உங்க டச் இருக்கு பெனாத்தல்ஸ்.

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கதை...சமூகம் + மனோதத்துவம் கலக்கி வழங்கப்பட்ட எதார்த்தம்...

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சர்வேசன்.. ஏதோ ஒரு சத்தம்.. நம் நாயகனுக்கு டிபரண்ஷியேட் பண்ணக்கூட தெரியாது :-)

கதையோட தலைப்பை வச்சே முடிவை ஊகிச்சுடலாம்.. ஆனா ஏன் அந்த முடிவு மாற்றம்ன்றதைத்தான் ட்விஸ்ட்டா நான் நினைச்சேன் :-)


கொத்ஸு..

ஸ்டார்ட் மீஜிக் :-) அவங்களுக்காத் தோணலைன்னாலும் எடுத்துக் கொடுக்க மட்டும் வந்திரும்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி புதுகைத் தென்றல், மங்களூர் சிவா..

மங்களூர் சிவா.. என்ன கதைக்கும் சிரிக்கிறே, கொத்ஸோட பின்னூட்டத்துக்கும் ரிப்பீட்டறே.. புரிஞ்சிக்கவே முடியலையே ராசா!

பினாத்தல் சுரேஷ் said...

பாபா, சுட்டி கொடுத்தவுடன் முடிந்து போய்விடுகிறதா கடன்? அது சரி!

அப்புறம் கொத்ஸை ஏன் இழுக்கறீங்க இங்கே.. அவரே பாவம், என்னத்தையோ எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்காரு!

நன்றி மதுரையம்பதி, இப்னு ஹம்துன்.. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், என் கதை எழுதும் திறமை (அப்படி எதாவது ஒன்று இருந்தால்) மெருகேற்றப்பட்டது தேன்கூடு போட்டிக் காலத்தின்போதுதான். ஹ்ம்ம்.. அது ஒரு பொற்காலம்!

பினாத்தல் சுரேஷ் said...

சீதா, நன்றி.

கதையிலேயே இந்த வரியையும் சேர்க்கலாம் என்று நினைத்து எடிட்டில் காணாமல் போனது.. "உன் கலருக்கு உனக்கேண்டா நிறவெறி" - உங்கள் பின்னூட்டம் அந்த வரியைப் பூர்த்தி செய்தது :-)

பாச மலர், நன்றி..

நாகை சிவா said...

//"ஆமாம், வெளிப்பக்கம்! உள்ளே எல்லாரும் அப்படியேதான் இருக்கிறார்கள்" //

சத்தியமான உண்மை

Anonymous said...

சுரேஷ் தலைப்பை பார்த்தவுடன் செல்வராகவன் style கதைன்னு நினைச்சு வந்தேன்.
இருந்தாலும் கதை நன்றாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நாகை சிவா, கதையின் முக்கியமான வரி என்று நான் நினைத்ததைக் கோட் செய்ததற்கு மிக்க நன்றி :-)

அருண், செல்வராகவன் டைப்தானே, ஏமாற்றவில்லையே :-)

நக்கீரன் said...

காதலுக்கு கலர் உண்டா?
கதை நல்லாயிருக்கு.போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நக்கீரன்.

Anonymous said...

வலைப்பதிவுக்கு நீங்க புதுசா? ஏதோ முயற்சி பண்ணி இருக்கீங்க. பெனாத்தலார்ன்னு ஒருத்தர் நல்லா கதை எழுதிட்டு இருந்தாரு. அவர்கிட்டே டியூசன் போயிட்டுவாங்களேன்.

Sridhar V said...

பினாத்தல் சார்,

தி ஜா வின் 'நள பாகம்' (என்றுதான் நினைக்கிறேன்) அதில் வரும் சமையற்காரரின் (பெயர் மறந்து விட்டது) குரு மனம் மயங்கி ஒரு பிச்சைக்கார பெண்ணின் மீது காம வயப்படுகிறார். பின் சிfபிலிஸ் நோய வந்து கஷ்டப்படுகிறார். அந்த சம்பவங்கள் மற்றும் விவரணைகள் - மறக்க முடியாதது.

மற்றுமொரு கதை - குஷ்வந்த் சிங்-உடையது. கல்லூரி காலத்தில் லண்டனில் கூட படித்த கருப்பின பெண்ணை அனுக முடியாமல் தவிக்கிறார். ஒரு முறை அவள் முத்தமிட இவரால் திரும்பிக் கூட முத்தமிட முடியவில்ல (அ) தெரியவில்லை.

பின் திருமணம், குழந்தைகள் என்று செட்டிலான பிறகு மீண்டும் இந்தியா வரும் பழைய சினேகிதியை சந்திக்கிறார். இளமையை தொலைத்து, பூதாகாரமான உடம்புடன் இருக்கும் அவளை வரவேற்கிறார். கடைசியில் பிரிவுபசார பரிசாக அவளை முத்தமிடுகிறார். இப்பொழுது மிகவும் சௌகர்யமாக உணர்வதாக கதை முடிவடைகிறது.

உங்கள் கதையை படித்தவுடன் அந்த கதைகள்தான் ஞாபகம் வந்தது.

தவறாக எண்ணவில்லையென்றால் - கொஞ்சம் அழுத்தம் குறைவுதான். பாத்திரங்கள் கொஞ்சம் தட்டையாக மேம்போக்காக இருக்கிற மாதிரி பட்டது. மீண்டும் தவறாக எண்ண வேண்டாம்.

சுதந்திரமான பெண், அறைக்கு நன்பனை அழைப்பது, பானம் அருந்த அழைப்பது எல்லாமே 'ஒரே' நோக்கத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லையே. :-(.

தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

இளா,

வேணாம், வலிக்குது, அழுதுடுவேன் :-(((((

ஸ்ரீதர் வெங்கட், நன்றி.. திஜா, குஷ்வந்த் சிங்.. ரொம்ப நன்றி.. உங்களை யாரும் ரவுண்டு கட்டாம இருந்தா சரி.

//சுதந்திரமான பெண், அறைக்கு நன்பனை அழைப்பது, பானம் அருந்த அழைப்பது எல்லாமே 'ஒரே' நோக்கத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லையே. :-(.//

கண்ணில் அழைப்பு என்றும் சொல்லி இருக்கிறேனே..

//கொஞ்சம் அழுத்தம் குறைவுதான். பாத்திரங்கள் கொஞ்சம் தட்டையாக மேம்போக்காக இருக்கிற மாதிரி பட்டது.//

விமர்சனத்துக்கு நன்றி.

இதற்கு ஏன் இரண்டு முறை தவறாக நினைக்க வேண்டாம் என்ற பீடிகை?

Sridhar V said...

//திஜா, குஷ்வந்த் சிங்.. ரொம்ப நன்றி.. உங்களை யாரும் ரவுண்டு கட்டாம இருந்தா சரி.//

ஆஹா... அப்ப நானாத்தான் உளறிட்டேனா? :-))

அப்ப பேசறதுக்கு ரெண்டு கதை கிடைக்காமயா போயிடும்.

துளசி கோபால் said...

பினாத்தலாரே....
எப்படியோ உள் மனசுலே ஒரு '**வெறி' இருக்குன்னு நம்பறீங்கதானே?

:-)))))))

Unknown said...

அவள் கறுப்பின பெண் என்பதை சொல்லாமலேயே புரியவைத்திருக்கிறீர்கள்.

அருமையான எழுத்துநடை. இவ்வளவுநாள் கவனிக்காமல் இருந்துவிட்டேன். இன்றே எனது கூக்ள் ரீடரில் இணைத்துவிட்டேன்.

Anonymous said...

Modified Alfred Hitchcock's story

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர் வெங்கட்//ஆஹா... அப்ப நானாத்தான் உளறிட்டேனா? :-))//

இல்லையா பின்ன?

துளசி அக்கா, எதோ ஒரு "வெறி" மனசுல இருக்கறது உண்மைதான், எந்த் வெறின்னுதான் பாப்பையா சொல்லப்போறாரே! (எந்நேரமும் அதே ஸ்மரணை)

மிக்க நன்றி உமையணன்.

அனானி, ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கா? கேக்கும்போதே புல்லரிக்குதே!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

...
(என்ன கமெண்ட் எழுதுறதுன்னுதான் தெரியலே. அதான் ....)

மங்களூர் சிவா said...

//
பினாத்தல் சுரேஷ் said...
நன்றி புதுகைத் தென்றல், மங்களூர் சிவா..

மங்களூர் சிவா.. என்ன கதைக்கும் சிரிக்கிறே, கொத்ஸோட பின்னூட்டத்துக்கும் ரிப்பீட்டறே.. புரிஞ்சிக்கவே முடியலையே ராசா!
//
கதைக்கு சிரிக்கலைய்யா அந்த quote பன்ன பாராக்ராப் - க்கு சிரித்தேன் என்னை போல் ஒரு ஜீவன் என

கொத்ஸ்ஸோட பின்னூட்டத்துக்கு ரிப்பீட்

Unknown said...

நல்லா பெனாத்தி இருக்கீங்க. இக்கதை உங்களுடைய அனுபவச் சிதறல்களில் ஒன்று இல்லை என்று நம்பும் அதே சமயத்தில், காமவெறியை விட நிற வெறி சக்திவாய்ந்தததாக சில/பல சமயம் ஆகி விடுவதை மறுப்பதற்கில்லை :) நடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

கதை நன்றாக இருக்கிறது - காட்சி அமைப்பு வர்ணணைகள் எல்லாமே அருமை.

திடீர் திருப்பமாக கற்பை இழக்க முடியாதது - ( அதுவும் 28 வயதில் ) - ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது ? - ஒரு நிமிட சபலம் - ஒரு நிமிட வெறுப்பு - ஒரு நிமிட பயம் - என்ன வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். உடலுறவின் போது கூட சடாரென விலகச் செய்யும் செயல்கள் உண்டு. இருப்பினும் நிற வெறி இன்னும் நம்மை ஆட்ட்டி படைக்கிறதே

VSK said...

//என் நிலைமை பேச அனுமதிக்கவில்லை.. //

தலைப்பையும், இந்த வரியையும் படித்ததுமே ஒருவாறு யூகிக்க முடிந்தது!

நல்ல கருத்து!

ஆனா, இந்தப்பாகுபாடு இப்போது அதிகம் இல்லை மேலை நாட்டு நம்மவரிடம் .

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சாமான்யன் சிவா.. கொஞ்சம் யோசிச்சாவது எதாச்சும் சொல்லுங்க :-)

மங்களூர் சிவா, புரிஞ்சதப்பா புரிஞ்சது :-)

நன்றி தஞ்சாவூரான்.

நன்றி சீனா

நன்றி விஎஸ்கே..

தஞ்சாவூரான், சீனா சொல்வதுபோல் நிறவெறி வெளிப்பார்வைக்கு இல்லாமல் இருக்கலாம், உள்ளே இருக்கத்தான் செய்கிறது, அதுவும் குறிப்பாக இந்த மாதிரி விஷயத்துக்கு. விஎஸ்கே, இந்த மாதிரி விஷயத்துக்கு - போல்டு அண்ட் அண்டர்லைண்ட் :-)

 

blogger templates | Make Money Online