Jan 24, 2008

பொங்கல்தான் புத்தாண்டா?

ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் புத்தாண்டு புதிய சமஸ்கிருத ஆண்டையே துவக்கி வைக்கிறது, அதற்கும் தமிழுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது என்பதால் தமிழ்ப் புத்தாண்டாக பொங்கல் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்ற கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

சொல்லப்போனால் எந்த நாளையுமே புத்தாண்டாகக் கொண்டாடலாமே.. எங்கோ படித்தேன், வருடத்தின் 365 நாளையுமே புத்தாண்டாக உலகின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு பிரிவினர் கொண்டாடி வருகின்றனர் - என்று!

புத்தாண்டு என்பதை ஒவ்வொரு மதமும் தனித்தனியாக வகுத்தாலும், புத்தாண்டுக்கொண்டாட்டங்களின் ஆரம்பம் எங்கே துவங்கி இருக்கும்? ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே.

எனவே, ஏப்ரல் 14 ஐத் தமிழ்ப் புத்தாண்டாக பல வருடங்களாகக் கொண்டாடி வரும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மீதும் எனக்குக் கேள்விகள் இல்லை.

ஏன், எனக்கு வேலை கிடைத்த நாளைக்கூட நான் வருடாவருடம் புத்தாண்டாகக் கொண்டாடலாம்!

ஆனால் பிரச்சினை அதுபற்றி அல்ல. கவர்னர் உரையில் பொங்கலைப் புத்தாண்டாக "அரசாங்கம்" அறிவித்திருப்பது பற்றியது.

இதில் கிளம்பும் கிளைக்கேள்விகள் ஆயிரம்.


1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?

2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?

3. தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?

4. மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?

5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?

7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?

8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
 
தமிழ் பேரைச் சொன்னால் மேல்கேள்வி கேட்கக்கூடாது, இந்துமத சடங்குகள் அசிங்கமானவை - அவற்றைக் கொண்டாடுவது தமிழனுக்கு இழுக்கு -- என்றெல்லாம் பலர் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன். உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதைக் கொண்டாடு இதைக் கொண்டாடக்கூடாது என்றெல்லாம் சொல்ல அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். திமுக கட்சி இப்படி ஒரு பிரசாரம் செய்து அதன்மூலம் மக்களே சித்திரை முதல் தேதிக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் விட்டாலோ, பொங்கலன்று புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டாலோ யாருக்கும் எந்த ஆட்சேபமும் இருக்கப்போவதில்லை. ஆனால் அதையே அரசாங்கம் வற்புறுத்தினால் அது சர்வாதிகாரம்தான் என்பதிலும் சந்தேகமில்லை.

117 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

//தமிழ் பேரைச் சொன்னால் மேல்கேள்வி கேட்கக்கூடாது, இந்துமத சடங்குகள் அசிங்கமானவை - அவற்றைக் கொண்டாடுவது தமிழனுக்கு இழுக்கு -- என்றெல்லாம் பலர் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன்.//

பெனாத்தல், நீர் இப்படி ஒரு பதிவு போடுவீருன்னு எதிர் பார்க்கலை!!

மேலே குறிப்பிட்டவர்களுக்கு வசதியாக ஒரு அரை டஜன் ரெம்பிளேற் பின்னூட்டங்கள்.

1) பெனாத்தலாரின் பூணூல் நெளிகிறது.
2) அம்மையாரின் அடக்குமுறை சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்காததற்கு சாதிப்பாசம்தானே காரணம்.
3) உயிர்பலி தடை சட்டத்தை எதிர்க்காததற்குக் காரணம் தெரியாதா?
4) மோடியை வரவேற்று சோமாறித்தனமா ஏன் பதிவு போடவில்லை?
5) நீ காண்டு கஜேந்திரனுக்கு கசின் பிரதரா?
6) தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி உனக்கு என்ன கவலை?

மத்தபடி இங்கு ஆரோக்கியமான விவாதம் எல்லாம் நடக்குமுன்னு தோணலை. ஆல் தி பெஸ்ட்.

Anonymous said...

Well said Mr. Suresh.
and I completely second kothanar's comment also... :-)

- Ramya.

Unknown said...

சித்திரை, வைகாசி என்பதெல்லாம் தமிழ் மாதங்களே அல்ல.

சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்பதுதான் உண்மையான தமிழ் மாதங்கள்.

பசுவின் மூத்திரத்தை குடித்தால் புண்ணியம் என்று கூடதான் வேதம் சொல்லுகிறது அதனால் பசுவின் மூத்திரத்தை குடிப்பீர்களா?

பல ஆண்டுக் காலமாக தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத காதலர் தினத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உண்மையான தமிழ் நாள்காட்டியை ஏற்றுக் கொள்ள கசக்கிறதா?.

மணியன் said...

சித்திரை முதல்நாள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. வேண்டுமானால் சமசுகிருத வருட பெயர்களை அரசு தனது நாட்காட்டிகளில் விலக்கியிருக்கலாம்.

ஏப்ரல் 14 விடுமுறை உண்டு... அண்ணல் அம்பேத்கர் பிறந்ததினம்.

வவ்வால் said...

சுரேஷ்,
//5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?//

உங்களுக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்று உள்ளது தெரிந்திருக்கவில்லைப்போலும், பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கலை திருவள்ளுவர் தினம் என்று அழைப்பார்கள், அன்று தான் உண்மையான தமிழ்ப்புத்தாண்று என்று , திருவள்ளுவர் பெயரால் ஒரு காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பல தமிழறிஞர்கள் முன்வைத்தார்கள், அனேகமாக இது ஏதோ ஒரு உலகத்தமிழ் மாநாட்டின் போது தமிழறிஞர்களின் ஆய்வின் பேரில் கொண்டு வரப்பட்டது என நினைக்கிறேன்.ஆனால் அந்த காலண்டர் முறைக்கு இதுவரை சரியான அரசு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. பல ஆங்கில தினசரி காலண்டர்களிலும் திருவள்ளுவர் ஆண்டின்னையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் அது தை 2 ஆக இருப்பதால் அதை கொஞ்சம் மாற்றி தற்போது அரசு அறிவித்துள்ளது. எனவே தை மாதம் புத்தாண்டு ஆரம்பிப்பது குறித்து திடீர் என அரசின் முடிவாக செய்யவில்லை.

நீங்கள் இப்பதிவை ஏதோ முன் முடிவுடன் தான் எழுதியுள்ளீர்கள் என்பது தெரிகிறது. ஆனாலும் முந்தைய தமிழ் வரலாறும் தெரிந்துக்கொண்டு அம்பு விடலாமே!

அதே போல சித்திரை , வைகாசி என்பதும் தமிழ் மாதங்கள் அல்ல! வட மொழி காலண்டர் எனப்படும் சாலிவாகன சகாப்தத்தின் மாதங்களே!சாகா சகாப்தம் என்றும் உண்டு.

//ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே.//

அப்படி காலண்டர் வகுப்பதில்லை, சூரியன் மகர ரேகை ,கடக ரேகை என மாறும் நிலைகளை வைத்து தான் ஆண்டின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது.இது சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டர்.

பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைப்பதும் சூரியன் அன்று மகர ரேகைக்கு பிரவேசிப்பதால் தான், எனவே அதனை புத்தாண்டாக தீர்மானிப்பதில் தவறில்லை.

வட இந்திய வழி வந்த காலண்டர்களில் எப்படி சித்திரை வந்தது எனலாம் அவர்கள் நிலாவை வைத்து மாதங்கள் கணிப்பவர்கள்.

சூரியக்காலண்டர் அல்ல. சூரியனின் அடிப்படையில் ஆங்கிலப்புத்தாண்டை கூட ஜனவரி 1க்கு பின்னர் தான் மாற்றினார்கள், ஜூலியஸ் சீசர் காலத்தில் நடந்தது.அதற்கு முன்னர் ஏப்ரல் 1 தான் ஆங்கிலப்புத்தாண்டு, அப்படி நாள் மாற்றிய பின்னரும் ஏப்ரல் 1 இல் புத்தாண்டு கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று அழைக்கும் வந்தது, அதுவே பின்னர் முட்டாள்கள் தினமாக ஆயிற்று!

எனவே அரசு எப்படி மாற்றலாம் என்று கேட்கலாம், ஆனால் காரணம் இருக்கும் போதும் கேட்டால்.

இனி வரும் காலத்தில் சித்திரை 1 இல் புத்தாண்டுக்கு பதில் இனிமேல் தமிழ் முட்டாள்கள் தினம் கொண்டாடினால் உங்களுக்கு தான் முன்னுரிமை! :-))

pudugaithendral said...

//மத்தபடி இங்கு ஆரோக்கியமான விவாதம் எல்லாம் நடக்குமுன்னு தோணலை. ஆல் தி பெஸ்ட்.//

உங்க கேள்விகளில் நியாயம் இருந்தாலும் இலவசக்கொத்தனார் சொன்னதை வழிமொழிகிறேன்.

Radha Sriram said...

இங்கே எனக்கு வேலை இருப்பதாகத் தெரியவில்லை...:):)

pudugaithendral said...

சித்திரை, வைகாசி என்பதெல்லாம் தமிழ் மாதங்களே அல்ல.

சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்பதுதான் உண்மையான தமிழ் மாதங்கள்.//

அப்படிப் பார்த்தால் தமிழில் தற்போது வளக்கில் இருக்கும் பல சொற்கள் தமிழ் சொற்களெ இல்லையாம். அந்த சொற்களை எல்லாம் தமிழ்படுத்தி பார்த்தால், பேசினால் யாருக்கும் புரியாது.

கருப்பன் (A) Sundar said...

அரசாங்கம் Madras-ஐ சென்னை மாத்துறதுக்கும், தமிழ் புத்தாண்டை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கும் காட்டுற அக்கறையை கட்டமைப்பு மேம்பாட்டிலும், மக்களோட வேலைவாப்பு விஷயத்திலும் காட்டினா நல்லா இருக்கும்.

முத்துகுமரன் said...

பினாத்தல்,

அரசாங்கம் என்பது வேற்றுகிரக அமைப்பு அல்ல. அது மக்களை உள்ளடக்கிய ஒன்றே. எந்த வித தமிழ் அடையாளங்களும் இல்லாத சித்திரை தொடக்கமாக கொண்ட தமிழ்ப்புத்தாண்டிற்கு பதிலாக தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவது எந்த தவறும் இல்லை. இதில் சர்வாதிகாரம் என்று எதை சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

1.மதம் என்பது தனிப்பட்ட உரிமை. தனிமனித விருப்பம். புத்தாடை உடுத்துவது, கோவில்களுக்கு செல்வது என்பதை தவிர சித்திரைப் புத்தாண்டில் என்னவிதமான சடங்குகள் கொண்டாடப்படுகின்றன என்பதை சொன்னால் அறிந்து கொள்வேன். தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்ததால் அவையெல்லாம் தடைபடும் என்று சொன்னால் அவர்களின் மத நம்பிக்கை என்பதை போலித்தனமானது என்றே சொல்வேன்.

2. சித்திரை முதல் நாளை கொண்டாடுவது என்பது ஒவ்வொருத்தரின் சுயவிருப்பம்
அரசாங்கம் அதை தடைசெய்யவில்லை. சித்திரையை கொண்டாடுபவர்களை துரோகி என்று அழைக்கபட மாட்டார்கள். தமிழுக்கு என்று செய்யப்படும் இந்த சிறப்பிற்காக எழும் இது போன்ற சந்தேகங்கள் '''சோ'த்தனாமானது.

3. தை முதலாகத்தான் தொடங்க வேண்டும். விரிவான அரசு அறிவிப்பிற்கு பின்னே இது குறித்து தெரிந்து கொள்ள முடியும்

4. புதிய தகவலை இணைத்து கொள்வது என்பது பாடத்திட்டங்களின் அடிப்படை. தகவல் வித்தியாசம் ஒன்றும் கிரகித்துக்க் கொள்ள முடியாத அளவிற்கு சிரமமான ஒன்றல்ல.

5. தமிழ்ப்புத்தாண்டு என்பது திமுக வின் சிந்தாந்தம் அல்ல. அது தமிழுணர்வாளர்களின் சிந்தாந்தம். இந்த கேள்விக்கு நான் வைக்கும் எதிர்கேள்வி சித்திரை தொடக்கமானதை தமிழர் சிந்தாந்தம் என்றூ எதைக்கொண்டு முடிவு செய்தார்கள். அதன் பிண்ணனி என்ன என்பதை விளக்க முடியுமா. தமிழ் ஆண்டுகள் என்று சொல்லபடுவதில் எப்படி சமஸ்கிருதங்கள் கலந்தன. இன்னொரு கலப்பை எப்படி என்னுடையது என கொண்டாட இயலும்? அப்படி கொண்டாடப்படுவதுதான் மத உணர்வாளரிகளின் நம்பிக்கையை காயப்படுத்தாத செயல் என்று எப்படி சொல்ல முடியும்

6.மக்களின் விழிப்புணர்வே மேற்கூறிய
பண்டிகைகளின் தேவையை தீர்மானிக்கும். இந்த நிகழ்வை சர்வாதிகாரம் என்பது அபத்தமானது.

7.1972ஆம் ஆண்டே இது குறித்தான எல்லா விவாதங்களும் நடைபெற்றது. அதன் மூலமாக திருவள்ளுவர் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறவற்றின் நகலாக நாமிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குண்டான அடை
யாளங்களோடு வாழ்வதும், அது குறித்தான தேடுதல்கள் இருப்பதும் வளர்ச்சியை குறிக்கும் அம்சமே

8. இதில் இந்து மத சம்பிரதாய்ங்களை கடைபிடிப்பவர்களுக்கு எதிரானது என்று எதைச் சொல்லுகிறிர்கள். சமஸ்கிருத மயமாக்கபட்ட சடங்குகள் சம்பிரதாயங்களை கடைபிடிப்பவன் மட்டும்தான் இந்துவா??

ஒரு தவறு கலையப்படுகிறது. அவ்வளவே. சர்வாதிகாரம் என்பது அதிகப்படியான உணர்ச்சி வயப்படல்.

*கொத்தனார் நோக்கம் சரியாக இருக்கும் இடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். பினாத்தலாரிடம் அத்தகையதொரு விவாதத்தை செய்திட இயலும் என உறுதியாக நம்புகிறேன். அதன் சாட்சியாகத்தான் எனது இந்த பின்னூட்டம்.

Anonymous said...

மடிப்பாக்கமும் பெனாத்தியிருக்கு

Anonymous said...

http://madippakkam.blogspot.com/2008/01/blog-post_24.html
கோயில்களில் ஆடு, மாடு வெட்ட தடை என்று ஜெ. அறிவித்தபோது கைத்தட்டி பாராட்டி ‘தி பொந்து'வில் 'லெட்டர் டூ எடிட்டருக்கு' கடிதம் எழுதியவர்கள் இன்று தமிழனின் குலப்பாரம்பரியத்தை கலைஞர் அரசு மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வயிறெரிவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.

Anonymous said...

முத்துகுமரன் மிகத்தெளிவான விளக்கங்கள். நன்றி.

//1972ஆம் ஆண்டே இது குறித்தான எல்லா விவாதங்களும் நடைபெற்றது. அதன் மூலமாக திருவள்ளுவர் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. //
அவ்விவாதங்கள் மீண்டும் நம்பார்வைக்கு விரைவில் வரவேண்டும்.

Unknown said...

1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?

=>சமஸ்கிருத ஆண்டு ஆரம்பம் என்று சொல்லி சமஸ்கிருத ஆண்டை கொண்டாடுபவர்கள் அதற்காக விடுமுறை கேட்கலாம். நிச்சயம் அதை அரசு பரிசீலிக்கவேண்டும்

***

2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?

=> நீங்களே பதில் சொல்லி உள்ளீர்கள்
// சொல்லப்போனால் எந்த நாளையுமே புத்தாண்டாகக் கொண்டாடலாமே.. எங்கோ படித்தேன், வருடத்தின் 365 நாளையுமே புத்தாண்டாக உலகின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு பிரிவினர் கொண்டாடி வருகின்றனர் - என்று! //

உங்கள் விருப்பம்.
சமஸ்கிருத அன்பர்கள் அவர்களின் உள்ளப்பூர்வமாக கொண்டாடலாம்.

**

3.தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?

=> தை,மாசி என்றே தொடங்கும் , தை புத்தாண்டின் முதல் மாதம் என்பதால்,பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். பட வேண்டும் (புளூட்டோ கிரகம் அல்ல என்று மாறியதைப் போல்)

சுறவம், கும்பம், மீனம், என்றும் மேலும் மாறலாம் ! மாறினால் நல்லது.

***

4.மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?

=> ஆம் இருக்கும். புளூட்டோ கிரகம் என்றே நான் படித்தேன் , இப்போது அப்படி இல்லை.அடுத்த தலைமுறையில் மேலும் மாறலாம்.

***

5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

=>ஆடு , மாடு வெட்ட தடை நீக்கப்பட்டது போல மக்கள் இதை எதிர்த்தால் நீக்கப்படலாம்.

ஜனநாயக நாட்டில் உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

(தமிழ்நாட்டில் சமஸ்கிருத ஆண்டு வழக்கை ஒழிக்க கணக்கெடுப்பு தேவை என்பது கேவலமானது. )

****

6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?

=> மாற்றினால் நல்லது.

***

7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?

=> தீமைகளைப் பட்டியலிட்டால் நல்லது. சமஸ்கிருத மக்கள் தீமைகளை விளக்கி (இருள் நீக்கி உள்ளே போனதால்தான் சுனாமி வந்தது என்பது போன்ற அறிவியல் காரணங்கள் போல) அரசை விழிப்புணர்வு அடையச் செய்யலாம்.

***

8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?

=>தமிழ் நாட்டில், பொங்கல் ஆண்டு முதல் நாளாக அறிவிப்பதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

பொங்கல் இந்துக்களின் திருநாள் என்றால் உலக இந்துக்கள் அனைவரும் "பொங்கல்" கொண்டாடவேண்டும். இது தமிழர் திருநாள், தமிழர் அறுவடைத் திருநாள்,தமிழர் நன்றித் திருநாள்.

பல மதத்தினர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களின் மத ஆண்டாக எதை வேண்டுமானலும் கொள்ளலாம் அதற்காக சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ் ஆண்டாக இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி? நாளை இஸ்லாமும்,கிறித்துவமும் அவர்கள் ஆண்டை தமிழ் ஆண்டாக வைக்க வலியுருத்தினால் ?

நிச்சயம் "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒரு பொதுவான ஒரு தேதியை இந்தியா முழுக்க பயன்படும் வண்ணம் யராவது அறிவிக்கலாம்.

"இந்து" தமிழ் நாட்டில் மட்டும் இல்லை அல்லவா?

அப்படி அகில உலக "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒன்று அனைவராலும் ஏற்கப்படும்போது தமிழ்நாட்டில், அந்த மத மக்களுக்காக அதை விடுமுறையாக அறிவிக்கலாம்.

******

தமிழையும் , இந்து/சனாதன- சமஸ்கிருத மதம் இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம்.

Anonymous said...

//6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?

=> மாற்றினால் நல்லது.//

அண்ணா பிறந்த நாள் அன்று கார்த்திகையும் பெரியார் இறந்த நாள் அன்று தீபாவளியும் கொண்டாடப்படுமா?

அல்லது அவை முறையே ரம்ஜானுக்கும் கிருத்துமஸுக்கும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனவா?

இல்லை ரம்ஜானும் கிருத்துமஸும் பண்டை தமிழர் கொண்டாடிய விழாக்கள்தானா?

Unknown said...

அனானி,
//6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?

=> மாற்றினால் நல்லது.//

அண்ணா பிறந்த நாள் அன்று கார்த்திகையும் பெரியார் இறந்த நாள் அன்று தீபாவளியும் கொண்டாடப்படுமா?
அல்லது அவை முறையே ரம்ஜானுக்கும் கிருத்துமஸுக்கும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனவா?
இல்லை ரம்ஜானும் கிருத்துமஸும் பண்டை தமிழர் கொண்டாடிய விழாக்கள்தானா?


மாற்றினால் நல்லது என்று நான் சொன்னது அதன் அடிப்படைத் தவற்றின் பேரில்.
நரகாசுரன் வதம் என்றெல்லாம் கதைகட்டமால், இந்துமத தீபத்திருநாளாக இந்து அன்பர்கள் மாற்றிக் கொள்ளட்டும். அதற்கு அரசு உதவ வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே.

ரம்ஜானும் கிருத்துமஸும் பண்டை இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் கொண்டாடிய விழா. இன்றைய இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் கொண்டாடட்டும்.

தமிழன் என்றாலே இந்து என்று கட்டமைக்க வேண்டாம்.

மற்றபடி உங்களின் ஆசையும் நிறைவேற வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

முந்தியெல்லாம் புத்தாண்டு (சித்திரை 1)க்குப் பொங்கல் வைக்கலாம். பொங்கலுக்குப் புத்தாண்டை வைக்கமுடியுமான்னு கேப்பாங்க ஜொக் என்ற பெயரில்.

இப்ப அந்த ஜோக்குக்கு ஆப்பு.:-)

Kannan.S said...

மொழி அறிவு வேறு... வாழ்க்கை வேறு... தமிழனுக்கு லீவு வேணும்... இப்போ சோம்பேறி ஆகிட்டு வரான்...
அதுக்காக..இப்படி ஒரு ஸ்டண்ட்

Hariharan # 03985177737685368452 said...

//சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்பதுதான் உண்மையான தமிழ் மாதங்கள்.//

கும்பம், மீனம் எப்படி அக்மார்க் ஐ.எஸ்.ஓ தமிழ்ன்னு ஆகியதுன்னு சொல்ல முடியுமா?

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

உம்ம டெம்ப்ளேட் ஒண்ணும் இங்கே யூஸ் ஆன மாதிரி தெரியலை (இதுவரை)..ஆனா வெளியிடங்கள்லே யூஸ் ஆகறதா காத்துவாக்குல கேள்வி.

நன்றி ரம்யா.

பினாத்தல் சுரேஷ் said...

லெமூரியன்,

//பல ஆண்டுக் காலமாக தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத காதலர் தினத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உண்மையான தமிழ் நாள்காட்டியை ஏற்றுக் கொள்ள கசக்கிறதா?.//

இதையேதான் நானும் சொல்லவருகிறேன்.. ஆச்சரியமாக இருக்கிறதா? காதலர் தினம் சில நிறுவனங்களின், ஊடகங்களின் திறமையான பிரச்சார உத்தியால் மக்கள் ஏற்றார்கள் - அரசாங்கம் ஆணை போட்டு அல்ல!

மத சம்மந்தமான சடங்குகளை ஏற்பதும் மறுப்பதும் என் உள்ளாடை அளவு போல (நன்றி கமலஹாசன் - விருமாண்டி) என் சொந்த விஷயம் என்று நினைக்கிறவன் நான். என் நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளையும் யார் மேலும் திணிக்கமாட்டேன்.

பசுமாட்டு மூத்திரம் குடிப்பது சிலரின் மூடநம்பிக்கையாக இருந்தால், அதனால் வேறெந்தப் பிரச்சினையும் இல்லாத பட்சத்தில் "அரசாங்கம்" அதைத்தடுக்கக்கூடாது என்றுதான் சொல்லவருகிறேன் - அப்ப நீ குடிப்பியா போன்ற கேள்விகள் தேவையற்றவை என்றே கருதுகிறேன்.

திவாண்ணா said...

//அப்படி காலண்டர் வகுப்பதில்லை, சூரியன் மகர ரேகை ,கடக ரேகை என மாறும் நிலைகளை வைத்து தான் ஆண்டின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது.

/இது சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டர்.

பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைப்பதும் சூரியன் அன்று மகர ரேகைக்கு பிரவேசிப்பதால் தான், எனவே அதனை புத்தாண்டாக தீர்மானிப்பதில் தவறில்லை.//

அறிவியல் வேறுமாதிரி சொல்லுகிறதே? நவம்பர் மாதமே வந்தாச்சு.


//வட இந்திய வழி வந்த காலண்டர்களில் எப்படி சித்திரை வந்தது எனலாம் அவர்கள் நிலாவை வைத்து மாதங்கள் கணிப்பவர்கள்.//

இல்லையே? இரண்டு வகைகளும் உள்ளன. சந்திரனை வைத்து கணிப்பது யுகாதி எனப்படும் "தெலுங்கு" புத்தாண்டு. சித்திரை வைகாசி .. கணக்கில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே புது வருடம்.

//சூரியக்காலண்டர் அல்ல.//
அதுவேதான். சந்தேகமில்லை.

திவாண்ணா said...

//ரம்ஜானும் கிருத்துமஸும் பண்டை இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் கொண்டாடிய விழா. இன்றைய இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் கொண்டாடட்டும்.//
பண்டை இந்தியர்கள் கொண்டாடிய, கொண்டாடும் விழாக்களை கொண்டாடுவதில் என்ன பிரச்சினை?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மணியன்.

வவ்வால்,

திருவள்ளுவர் ஆண்டை அறிந்திருக்கிறேன். தமிழக அரசு நாள்காட்டிகளை சிறு வயதில் உபயோகப்படுத்தியதால்.

//நீங்கள் இப்பதிவை ஏதோ முன் முடிவுடன் தான் எழுதியுள்ளீர்கள் என்பது தெரிகிறது.// நான்கூடச் சொல்லலாமே - நீங்கள் ஒரு முன்முடிவோடுதான் இப்பின்னூட்டத்தைப் போட்டிருக்கிறீர்கள் என்று.. இதெல்லாம் விட்டுத்தள்ளி எப்போதான் மேட்டருக்கு நேரா வரப்போறோமோ! இது என்ன என்னைக் குத்தி பங்சர் பண்ணி உங்கள் வாதத்தை ஜெயிக்க வைக்கும் முயற்சியா? தேவையே இல்லை.. உங்கள் வாதத்தில் சத்து இருந்தால் அதை ஏற்கத் தயங்கவே மாட்டேன். எனவே உங்கள் அம்புகளை நேராக இடம் பார்த்தே விடுங்கள், இடுப்புக்குக் கீழே வேண்டாம்.

//ஜூலியஸ் சீசர் காலத்தில் நடந்தது// இப்போது தமிழகத்தின் ஜூலியஸ் சீசர் ஆட்சியா?

மாற்றங்களே கூடாது எனச் சொல்லவில்லை நான். மாறட்டும். முதலில் தமிழ் மாதங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும், லெமூரியன் குறீப்பிட்டுள்ள மாதங்கள் ஒன்றின் பெயர்கூட எனக்கு முன்பே தெரிந்திருக்கவில்லை. இது யார் தவறு? அதைக் கேள்விப்படும் முன்பே இந்த ஆண்டிலிருந்து இதுதான் புத்தாண்டு என்று மாற்ற வேண்டுமா? ஜூலியஸ் சீசர் கூட அப்படிச் செய்ததாகத் தெரியவில்லையே.. ஏற்கனவே இருந்த மாதங்கள் சீரமைக்கப்பட்டன, புத்தாண்டு கிரிகோரியன் முறைப்படி மாற்றப்பட்டது என்றுதானே கேள்வி.

சித்திரை 1 ஐ நான் கொண்டாடுகிறேனா, கொண்டாடுவேனா -- உங்கள் வாதத் திறன்படி முட்டாள் ஆவேனா என்ற கேள்விகளை விட்டுத் தள்ளினாலும், கொண்டாடுபவர்களை தமிழ்த் துரோகி என்று சொல்வார்களா என்ற என் கேள்விக்கு விடை தந்தமைக்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி புதுகைத் தென்றல்.

நன்றி ராதாஸ்ரீராம்.

வாஸ்தவம் புதுகைத் தென்றல் - யூ ஆர் அப்ஸல்யூட்லி கரெக்ட் :-)

Anonymous said...

//அப்படிப் பார்த்தால் தமிழில் தற்போது வளக்கில் இருக்கும் பல சொற்கள் தமிழ் சொற்களெ இல்லையாம். அந்த சொற்களை எல்லாம் தமிழ்படுத்தி பார்த்தால், பேசினால் யாருக்கும் புரியாது.
//
அதற்காக எதையுமே சரி செய்ய முயலக் கூடாதா? வீட்டை சுத்தம் செய்யும், செப்பனிடும் பழக்கம் இருக்கிறதா? அல்லது அதெல்லாம் சரிவராது செய்தால் இடித்து புதிதாக கட்டுமானம் செய்ய வேண்டும் என்று இருப்பீர்களா??

பினாத்தல் சுரேஷ் said...

சரியாச் சொன்னீங்க கருப்பன்.

முத்துகுமரன், முதலில்:
//நோக்கம் சரியாக இருக்கும் இடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். பினாத்தலாரிடம் அத்தகையதொரு விவாதத்தை செய்திட இயலும் என உறுதியாக நம்புகிறேன். அதன் சாட்சியாகத்தான் எனது இந்த பின்னூட்டம்.// இதற்கு ஒரு பெரிய நன்றி.

1.//தமிழ்ப்புத்தாண்டிற்கு பதிலாக தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவது எந்த தவறும் இல்லை// நானும் தவறென்று சொல்லவில்லையே.. ஆனால் கொண்டாட்டம் என்பது இயல்பாக வரவேண்டும் அல்லவா? நாம் மனது இயங்கி கொண்டாடுவது குடும்பப் பண்டிகைகளுக்கும், "காதலர் தினம்" போன்ற இம்போர்டட் திருவிழாக்களுக்கும்தானே. தியாகிகள் தினம், கொடிகாத்த குமரன் தினம் - இதையெல்லாம் கொண்டாடவா செய்கிறோம்? பெரும்பாலான பண்டிகைகளுக்கே காரணம் தெரியாமல் சடங்குகள் செய்கிறோம்..

அப்படி இருக்கையில் பின்புலங்கள் எதைப்பற்றியும் பிரச்சாரம் செய்யாமல் - ஆர்வலர்கள் தவிர வேறு யாருக்குமே தெரியாமல் இருக்கும் விவரங்களின் பின்னணியில் - இந்த ஆண்டு புத்தாண்டு இங்கே தொடங்குகிறது என்று சொல்வது -- உங்களுக்கு உவப்பானதாக இல்லாதபட்சத்தில் சர்வாதிகாரமாகத் தோன்றாதா?

//சமஸ்கிருத மயமாக்கபட்ட சடங்குகள் சம்பிரதாயங்களை கடைபிடிப்பவன் மட்டும்தான் இந்துவா??// இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது, தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை, சமஸ்கிருதத்தை - என்னவென்றே தெரியாத ஒரு மொழியைத் தூக்கிப் பிடிக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை :-) ஆனால், அப்படிக் கடைப்பிடிக்கிறவன் தன் விருப்பத்தின் பேரில் செய்தால் அதில் என்ன தவறு காணமுடியும்?

//சித்திரையை கொண்டாடுபவர்களை துரோகி என்று அழைக்கபட மாட்டார்கள்.// வவ்வாலைப் பாருங்கள் முட்டாள் என்று அழைக்கப்போகிறார்களாம். சாதாரணமாகச் சொன்னால், மவுண்ட் ரோடு என்று இன்னும் அவாள்தான் சொல்றாங்க என்றே எங்கோ வலைப்பதிவுகளில் படித்தேன். அரசுச் சட்டப்படி துரோகியாக இல்லாமல் இருக்கலாம் - ஆனால் கட்டம் கட்டுபவர்கள் எப்படியும் கட்டத்தான் போகிறார்கள்.

//புதிய தகவலை இணைத்து கொள்வது என்பது பாடத்திட்டங்களின் அடிப்படை. // உண்மை. ஆனால் நாளை அரசாங்கம் மாறினால், ஏதேனும் டுபாக்கூர் ஜோசியன் சொன்னால், இவை அத்தனையும் திரும்பாது என்று எந்த நிச்சயமும் இல்லை. ப்ளூட்டோ கிரகத்தைப் பற்றி கல்வெட்டு சொல்லியிருப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ப்ளூட்டோ போன்ற நிகழ்வுகள் நடக்கும் வேகத்திற்கும், தமிழகச் சூழலில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழும் வேகத்துக்கும் நிறையவே வித்தியாசம்.

//மக்களின் விழிப்புணர்வே மேற்கூறிய
பண்டிகைகளின் தேவையை தீர்மானிக்கும்.// அதைப் பெற என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன?

Anonymous said...

//
1) பெனாத்தலாரின் பூணூல் நெளிகிறது.
2) அம்மையாரின் அடக்குமுறை சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்காததற்கு சாதிப்பாசம்தானே காரணம்.
3) உயிர்பலி தடை சட்டத்தை எதிர்க்காததற்குக் காரணம் தெரியாதா?
4) மோடியை வரவேற்று சோமாறித்தனமா ஏன் பதிவு போடவில்லை?
5) நீ காண்டு கஜேந்திரனுக்கு கசின் பிரதரா?
6) தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி உனக்கு என்ன கவலை?
//
ஆமாம் கொத்தனாரே செம காமடியா இருக்கும். அதே போல இந்த புத்தாண்ட மாத்தினதுக்கு ஆதரவா எழுதியிருக்கும் பதிவுகள போய் பாருங்களேன். இந்த கேடகிரியில் இருக்கும் எதிர் கோஷ்டி செய்யுற கூத்து...
இதுக்கு ரோடு போடலாம், இத மாத்தினா எல்லாருக்கும் வேல கிடச்சிருமா? திருவள்ளுவர் சிலை வச்சதுக்கு சோத்த போட்டிருக்கலாம், அல்லது ரோட்ட போட்டிருக்கலாம். இப்படின்னு நிரைய வரும். செம காமடியா இருக்கும். அங்கயும் கொஞ்சம் பேர் கஷ்டப்படுறாங்களாம். அவங்களுக்கும் ஒரு டெம்பிளேட் போட்டு குடுத்திருங்க... புண்ணியமாப் போகும்.

பினாத்தல் சுரேஷ் said...

ரெண்டு அனானியும் ஒண்ணா? லின்க் தப்பா கொடுத்திருக்கீங்க பாருங்க!

நல்லவன், //அவ்விவாதங்கள் மீண்டும் நம்பார்வைக்கு விரைவில் வரவேண்டும்.// அப்படியே பொதுமக்கள் ஏற்கும் வகையில் ஒரு பிரச்சாரமும்.

கல்வெட்டு,

என் பதிவின் முதல் வரியிலேயே இவ்வாறு மாற்றுவதற்கு எனக்கு (தமிழனாக, 5% பக்தி மட்டுமே மிச்சமிருக்கும் இந்துவாக) எந்த ஆட்சேபமும் இல்லை எனச் சொல்லிவிட்டேன்.

சமஸ்கிருத புத்தாண்டாக சித்திரை 1 அறியப்படுவதில்லை.அது உங்கள் வாதமாக இருக்கும் பட்சத்தில் அந்த வாதத்தை புத்தாண்டு கொண்டாடும் மக்களிடம் சென்று சேர்ப்பியுங்கள். திடுதிப்பென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு அரசாணை போட்டால் சர்வாதிகாரம் என்றுதான் கருதப்படும்.

ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தான் உயிர்ப்பலிச் சட்டம் நீக்கப்பட்டது, உண்மைதான் -- ஆனால், வாக்குக்கள் கிடைக்காததற்கு இதுதான் காரணம் என்று ஜெயலலிதா நினைத்தது மட்டும்தானெ வாபஸ்ஸுக்கு காரணம்? (இதனால் மட்டும் ஜெயலலிதா சிறந்த ஜனநாயகவாதி என்று ஏற்றுக்கொண்டா விட்டோம்?)

தீபாவளி போன்ற பண்டிகைகளையும் "மாற்றினால் நல்லது." எனக் கருதுகிறீர்கள் - எல்லாத் தமிழர்களும் இப்படிக் கருதுவார்கள் என நினைக்கிறீர்களா?

தமிழன் என்ற அடையாளத்துடன் கூடவே இந்து என்ற அடையாளத்தையும்தான் பெரும்பாலானோர் ஏர்றுக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட தமிழ்-இந்துக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கொண்டாடிவந்த ஒரு பண்டிகையை, தமிழுக்குக் காவலன் என்ற பெயரில் மாற்றி அமைப்பது இந்துக்களுக்கு எதிரானது - சரிதானே? இதைக் கேள்வி கேட்டால் தமிழுக்கு எதிரி போன்ற கட்டமைப்பும், வேதம், இந்து பண்டிகைகளில் உள்ள அத்தனை முரண்பாடுகளுக்கும் பதில் சொல்லவேண்டியவன் எனக் கட்டமைப்பது - இவைதான் என்னை "தமிழ் பேரைச் சொன்னால் மேல்கேள்வி கேட்கக்கூடாது, இந்துமத சடங்குகள் அசிங்கமானவை - அவற்றைக் கொண்டாடுவது தமிழனுக்கு இழுக்கு -- என்றெல்லாம் பலர் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன்" இப்படி எழுத வைத்தது.

வாக்காளன் said...

புதுகை தென்றல் அவர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும்..

சித்திரை, வைகாசி என்பதெல்லாம் தமிழ் மாதங்களே அல்ல.

தமிழ் மாதங்களே அல்ல என்று தான் சொல்லியிருக்கின்றார், தமிழ் வார்த்தைகள் அல்ல என்று சொல்லவில்லை

பினாத்தல் சுரேஷ் said...

//அண்ணா பிறந்த நாள் அன்று கார்த்திகையும் பெரியார் இறந்த நாள் அன்று தீபாவளியும் கொண்டாடப்படுமா? // நிஜமாவே சிரிச்சுட்டேன் அனானி :-))

கல்வெட்டு,

பண்டை இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் கொண்டாடிய பண்டிகைகள் என்பதால் அதற்கு "ஓக்கே" கொடுக்கும் நீங்கள் பண்டை தமிழ்-இந்து கொண்டாடினான் - என்று விடாமல், "நரகாசுரன் வதம் என்றெல்லாம் கதைகட்டமால்," என்று இக்கு வைப்பது ஏன்?

கவனிக்கவும் - நான் இதை வாதமாக மட்டுமே பார்க்கிறேன். என் சுய நம்பிக்கைகள் ஒன்றும் பெரிய ஆன்மீகவாதி ரேஞ்சு கிடையாது. ஏற்கனவே சொன்னதுபோல 95% நாத்திகனாகவும் 5% விட்டகுறை தொட்டகுறையுடனுமே வாழ்ந்துவருகிறேன், எந்த மத நம்பிக்கையையுமே குறை சொல்வது என் நோக்கமில்லை. நான் நேற்று நம்பினேன், இன்று நம்பவில்லை என்பதால், இன்று நம்புபவன் நாளை தானாக நம்பாமல் போகட்டுமே என்று விடுவேனே ஒழிய நம்பிக்கை உள்ளவனை முட்டாள் என்று நினைப்பதில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா - ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பக்கம் - நல்ல ஜோக்கோட வந்திருக்கீங்க!

ஹரிஹரன் - கும்பம் மீனம் தமிழ் இல்லையா? இது என்ன குண்டு?

திவா - பண்டை இந்தியர்கள் கொண்டாடிய, கொண்டாடும் விழாக்களை கொண்டாடுவதில் என்ன பிரச்சினை? - ரொம்ப நியாயமான கேள்வி.

////சூரியக்காலண்டர் அல்ல.//
அதுவேதான். சந்தேகமில்லை.//

எதோ ஒண்ணு.. எதா இருந்தாலுமே நம்பிக்கையில்தான் ஓடுது. அந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்க கட்சிக்கு, சமூக சீர்திருத்தவாதிகளுக்கு உரிமை இருக்கு - அரசாங்கத்துக்கு இல்லை!

அனானி - (வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி எழுதிய அனானி) - தூய தமிழ் என்பதைக் காரணம் காட்டி மாறுதல் செய்வோர் தூய தமிழாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

கொத்தனாரிடம் டெம்ப்ளேட் கேட்ட அனானி - அவரே வந்து பதில் சொல்வார்.

Unknown said...

சுரேஷ்,

//தீபாவளி போன்ற பண்டிகைகளையும் "மாற்றினால் நல்லது." எனக் கருதுகிறீர்கள் - எல்லாத் தமிழர்களும் இப்படிக் கருதுவார்கள் என நினைக்கிறீர்களா?//

இல்லை.

//அப்படிப்பட்ட தமிழ்-இந்துக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கொண்டாடிவந்த ஒரு பண்டிகையை, தமிழுக்குக் காவலன் என்ற பெயரில் மாற்றி அமைப்பது இந்துக்களுக்கு எதிரானது - சரிதானே? //

தமிழ் கிறித்துவர்களும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். ஜோ-வின் பதிவை படித்து இருப்பீர்கள்.

//கவனிக்கவும் - நான் இதை வாதமாக மட்டுமே பார்க்கிறேன். //

*வாதம்/விவாதம் என்பது, தான் நினைத்ததை (ஆதாரங்களுடன்) பிறரையும் நம்ப வைக்க முயற்சிக்கும் பாதை.

*உரையாடல் என்பது, எந்த கருத்து திணிப்பும் இல்லாமல் அடுத்த பக்கத்தை பார்க்க ( நம்ப அல்ல) உதவும்.

வாதம்/விவாதத்திற்காகவே வைக்கும் கருத்துகளைக் குறித்து நான் ஒன்றும் சொல்வற்கு இல்லை.

// சமஸ்கிருத புத்தாண்டாக சித்திரை 1 அறியப்படுவதில்லை.//

"ஸர்வதாரி" ஒரு ஆண்டு (13-4-2008) தொடங்க இருக்கிறது.அந்த வகை (ஸர்வஜித்,ஸர்வதாரி...) ஆண்டுகளின் பெயர்க்காரணம் நாரத - கண்ணபிரான் 60 குழந்தைகளாக சொல்லப்படுகிறது.
இதை நான் சமஸ்கிருத சார்பாக பார்க்கிறேன் அவ்வளவே. வேறுவகையான வகைப்படுத்தலும் இருக்கலாம். பல கதைகள்/பரிணாமங்கள் இருக்கலாம்.

//அது உங்கள் வாதமாக இருக்கும் பட்சத்தில் அந்த வாதத்தை புத்தாண்டு கொண்டாடும் மக்களிடம் சென்று சேர்ப்பியுங்கள். //


உங்களையோ வேறு யாரையுமோ இதை சமஸ்கிருதத் தனமாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை.

யாரிடமும் சேர்ப்பிக்க வேண்டிய தேவையும் இல்லை.

உங்களின் கேள்விகளுக்கு பதிலாக உங்களிடம் தெரிவித்தேன்.

இது உங்கள் இடம் , நீங்கள் ஏற்காத பட்சத்தில் ஏற்கவில்லை என்று சொல்லலாம் அல்லது அழித்துவிடலாம்.

VSK said...

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் வரக்கூடிய நியாயமான சந்தேகங்கள் என்றே நானும் கருதுகிறேன். இங்கு பதில் சொல்ல வருபவர்கள், இதைச் சற்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து இட்டால் ஒரு தெளிவு பிறக்கலாம். திரு. முத்துகுமரன் அவர்களைத் தவிர வேறு எவரும் இதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.

முத்துகுமரன் said...

//அப்படி இருக்கையில் பின்புலங்கள் எதைப்பற்றியும் பிரச்சாரம் செய்யாமல் - ஆர்வலர்கள் தவிர வேறு யாருக்குமே தெரியாமல் இருக்கும் விவரங்களின் பின்னணியில் - இந்த ஆண்டு புத்தாண்டு இங்கே தொடங்குகிறது என்று சொல்வது -- உங்களுக்கு உவப்பானதாக இல்லாதபட்சத்தில் சர்வாதிகாரமாகத் தோன்றாதா? //

பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. தினமலர், திணமணி, இந்து போன்ற பத்திரிக்கைகளில் அச்செய்தி இடம் பெற்றால் மட்டுமே பிரச்சாரம் செய்ததாக கணக்கிடப்படுமோ! இது குறித்தான பிராச்சரங்களைக்ன்களை கூட கடவுள் நம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் என்று எளிமையாக சிறுமைபடுத்தும் நிகழ்வுகள்தான் அதிகம்.
ஏனென்றால் இங்கு கடவுள் என்னும் அரிதாரத்திருக்குள் பதுங்கிக்கொள்வது பாதுகாப்பனதாக இருக்கிறது, வசதியாகவும் இருக்கிறது.
சித்திரை 1ல் புத்தாண்டு தொடங்குவதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்களுக்கு தை முதலே தொடங்குவது என்பது கேள்விக்குட்படுத்தபடக்கூடியதா! தை முதல் நாளை கேள்விக்கு உட்படுத்த முனைபவர்கள் அதே போல் சித்திரை ஒன்றையும் கேள்விக்கு உட்படுத்தினால் அது ஜனநாயகப்பூர்வமானதாக இருக்கும். இல்லை என்றால் அதுவும் ஒருவகை சர்வாதிகாரமாகத்தான் இருக்கும். 100 விழுக்காடு ஜனநாயகம் என்பது எங்குமே சாத்தியமில்லை, குடும்ப உறவுகள் உட்பட.

நண்பர் கல்வெட்டு இதை அழகாக சொல்லிய்யிருந்ந்தார்.
''தமிழையும் , இந்து/சனாதன- சமஸ்கிருத மதம் இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம்.''


//மாட்டு மூத்திரம் குடிப்பது சிலரின் மூடநம்பிக்கையாக இருந்தால், அதனால் வேறெந்தப் பிரச்சினையும் இல்லாத பட்சத்தில் "அரசாங்கம்" அதைத்தடுக்கக்கூடாது என்றுதான் சொல்லவருகிறேன் - அப்ப நீ குடிப்பியா போன்ற கேள்விகள் தேவையற்றவை என்றே கருதுகிறேன்.//
எந்த ஒரு கருத்தும் சிந்தனைகளின் தாக்கத்தினால் விளையும் தொகுப்பே
.தனியானது என்று இருக்க இயலாது. ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் அதை தீர்மானிப்பதாக இருக்கும். ஒருவன் மூட நம்பிக்கையால்
மாட்டு மூத்திரம் குடிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை, அவ்வாறூ குடிப்பதை கேட்க அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்பது பொறுப்பின்மையின் வெளிப்பாடு. மாட்டு மூத்திரம் குடிப்பது உடல் நலனுக்கு உகந்ததா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அதானால் தீய விளைவுகள் ஏற்படுமாயின் அவனது நம்பிக்கை என்று வாயைப்பொத்திக்கொண்டு அரசாங்கம் இருந்திடல் முடியாது.

//எதோ ஒண்ணு.. எதா இருந்தாலுமே நம்பிக்கையில்தான் ஓடுது. அந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்க கட்சிக்கு, சமூக சீர்திருத்தவாதிகளுக்கு உரிமை இருக்கு -அரசாங்கத்துக்கு இல்லை!//

அரசாங்கத்தின் எல்லைகளாக எதை வரையறுப்பீர்கள் என்று சொன்னால் இதுகுறித்து மேலும் விவாதிக்க இயலும்

பினாத்தல் சுரேஷ் said...

கல்வெட்டு,

//தமிழ் கிறித்துவர்களும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். ஜோ-வின் பதிவை படித்து இருப்பீர்கள்.//

கேள்வி பொங்கலைப்பற்றியதே அல்லவே.. சித்திரை 1 ஐப்பற்றியதல்லவா?

//*உரையாடல் என்பது, எந்த கருத்து திணிப்பும் இல்லாமல் அடுத்த பக்கத்தை பார்க்க ( நம்ப அல்ல) உதவும்.//

அப்படித்தான் உங்கள், முத்துகுமரனின் கருத்துக்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சொல்ல முடியாது -- நம்பினாலும் நம்புவேன். கொள்கை ஒன்று இல்லாததாலுல் வீண்பிடிவாதம் இல்லாததாலும் :-)

புத்தாண்டுகளின் மூலத்தைப் பார்த்து சம்ற்கிருதம் என்று சொல்கிறீர்கள். ஆனால் நான் நடப்பை மட்டுமே வைத்து தமிழாகத்தானே கொண்டாடப்படுகிறது என்கிறேன்.

கண்ணன்.எஸ், உங்கள் கருத்துக்கு நன்றி.

திவாண்ணா said...

//சித்திரை 1ல் புத்தாண்டு தொடங்குவதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்களுக்கு தை முதலே தொடங்குவது என்பது கேள்விக்குட்படுத்தபடக்கூடியதா! தை முதல் நாளை கேள்விக்கு உட்படுத்த முனைபவர்கள் அதே போல் சித்திரை ஒன்றையும் கேள்விக்கு உட்படுத்தினால் அது ஜனநாயகப்பூர்வமானதாக இருக்கும்//

ஒரு சமாசாரம் வழக்கத்தில் நெடுங்காலமாக இருந்து வருஇறது. அதை மாற்றும் போது ஏன் மாற்றுகிறீகள் என்று கேட்பதில் பொருள் இருக்கிறது. சித்திரையை எப்படி ஏற்றுக்கொண்டாய் என்றால் அது வந்த போது ஏற்றுக்கொண்டவர்களைத்தான் கேட்க வேண்டும். எங்கே போய் யாரை கேட்பது?

திவாண்ணா said...

//மாட்டு மூத்திரம் குடிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை, அவ்வாறூ குடிப்பதை கேட்க அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்பது பொறுப்பின்மையின் வெளிப்பாடு. மாட்டு மூத்திரம் குடிப்பது உடல் நலனுக்கு உகந்ததா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அதானால் தீய விளைவுகள் ஏற்படுமாயின் அவனது நம்பிக்கை என்று வாயைப்பொத்திக்கொண்டு அரசாங்கம் இருந்திடல் முடியாது//

பஞ்சகவ்யத்தை வேளாண் துறையே பரிந்துரை செய்கிறது. அரசு தேவையானால் ஆராய்ச்சி செய்து இதனால் பலன் இல்லை என்று சொல்லட்டுமே?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வி எஸ் கே.

முத்துகுமரன்,

//சித்திரை 1ல் புத்தாண்டு தொடங்குவதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்களுக்கு தை முதலே தொடங்குவது என்பது கேள்விக்குட்படுத்தபடக்கூடியதா!//

சித்திரை 1 ல் இருந்து தை 1 க்கு மாற்றுவது என்ற நிகழ்வினால் துவங்கிய விவாதம் வேறு எதைக் கேள்வி கேட்கும்?

//''தமிழையும் , இந்து/சனாதன- சமஸ்கிருத மதம் இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம்//

ஆனால் தனி மனிதன் இரண்டு அடையாளங்களையும் ஒருங்கே அல்லவா ஏற்கிறான்? தமிழனாகவும் இந்துவாகவும் ஒரே ஆள் இருக்கக்கூடாதா? முடியாதா? தமிழனாக இருப்பதற்கும் இந்துவாக இருப்பதற்கும் நியமங்களில் முரணை ஏன் ஏற்படுத்தவேண்டும்?

//மாட்டு மூத்திரம் குடிப்பது சிலரின் மூடநம்பிக்கையாக இருந்தால், அதனால் வேறெந்தப் பிரச்சினையும் இல்லாத பட்சத்தில் "அரசாங்கம்" அதைத்தடுக்கக்கூடாது என்றுதான் சொல்லவருகிறேன் // உடல்நலத்துக்கு தீங்கானது என்றால் வேறு பிரச்சினைகளில் வரும் அல்லவா?

அரசாங்கத்தின் எல்லைகள் என்று பெரிதாக எதையும் வரையறுக்க விரும்பவில்லை - ஒவ்வொரு மனிதனும் தன் கிறுக்குத்தனங்களுடன் வாழ அனுமதித்தால் போதும்@

முத்துகுமரன் said...

ஒரு சிறு தகவல் மட்டும்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நாம் சட்டத்திற்குட்பட்ட அரசாங்கத்தின் கீழ் வாழும் குடிகளாகவே இருக்கிறோம்.சுயமரியாதை திருமணத்திற்கும் சட்டப்பூர்வமான அதிகாரத்தை வழங்கியதும் அரசாங்கம் என்னும் அமைப்புதான்.

Unknown said...

1.தமிழரின் புத்தாண்டு (சித்திரை 1) அனைத்து மத தமிழர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்கிறதா?

2.அப்படி இல்லாத பட்சத்தில் சித்திரை 1 யும் தமிழ் புத்தாண்டையும் வேறு படுத்த வேண்டும். என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

3.சித்திரை 1 எனத் தொடங்கும் புத்தாண்டு இந்து-சனாதன-பார்ப்பன மதக் கதைகளுடன் தொடர்பு உடையதால் அது அந்த மதத்திற்கான புத்தாண்டாக இருக்கலாம் என்பது உங்கள் அளவில் சரியா?

4.தை-யில் தொடங்கும் (தொடங்கப் போகும்) ஆண்டு நிச்சயம் மத ஆண்டு அல்ல தமிழர் ஆண்டு. மத நம்பிக்கைகளை விலக்கும்போது , அனைத்து மதத்தினரும் இணைய ஒரு புது தூண்டல் ஏற்படும் என்று நம்புகிறீர்களா?

5.மதங்கள் சாராத வேறு ஏதாவது ஒரு நாளை (தை-1 விட சிறப்பான நாளை) தமிழர் முதல் மாதமாக பரிந்துரை செய்வீர்களா?

***

==>சித்திரை 1 -ல் தொடங்கும் (ஸர்வஜித்,ஸர்வதாரி) வகையறாக்களை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.

==>ஸர்வஜித்,ஸர்வதாரி-யை மத ரீதியாக நம்புபவர்கள் அப்படி நம்பக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

==>அடுத்த ஆட்சி வந்து சித்திரை 1 -ல் தொடங்கும் (ஸர்வஜித்,ஸர்வதாரி) தமிழ் ஆண்டு என்று சொன்னாலும் சொல்லாம். கண்ணகி சிலைக் கதை போல் ஆகலாம். யார் கண்டார்கள்.

==>தையை முதல் மாதமாகக் கொண்டாட இப்போது வந்துள்ள அறிவிப்பு மகிழ்ச்சியாய் உள்ளது. நாளை அதுவே மாற்றப்படும் போது வருத்தப்பட்டுக் கொள்ளலாம்.

==>மாற இது ஒரு சந்தர்ப்பம்.

==>அப்படியே இருப்பவர்கள் இருக்கலாம். சட்டம் போட்டு எந்த நம்பிக்கையும் மாற்ற முடியாது.

***

சட்டம்,மதம்,சம்பிரதாயம் என்று புறக்காரணிகளால் (பிறரால்) வலிந்து திணிக்கப்படும் அடையாளங்களை அப்படியே ஏற்பது என்பது அவரவர் விருப்பம்.

நாம் நம்மை எதில் இணைத்து அடையாளம் காண்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நான் என்னை தை-சார்ந்த வருடப்பிறப்பில் அடையாளம் காண்கிறேன். அவ்வளவே. நாளை இதைவிட ஒன்று எனக்கு சரியாகத் தோன்றினால் இதை விடுத்து அதில் அடையாளம் காண்பேன். திணிக்கப்படுவிட்டது என்பதற்காக சுமந்து கொண்டே இருக்க விரும்பவில்லை. ஸர்வஜித்,ஸர்வதாரி- வகையறாக்களில் தன்னை அடையாளம் காண்பவர்கள் கண்டு கொள்ளட்டும். அவர்களும் வாழ்க.

Anonymous said...

//மாட்டு மூத்திரம் குடிப்பது உடல் நலனுக்கு உகந்ததா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அதானால் தீய விளைவுகள் ஏற்படுமாயின் அவனது நம்பிக்கை என்று வாயைப்பொத்திக்கொண்டு அரசாங்கம் இருந்திடல் முடியாது.//


ஆஹா.. பின்றீங்கய்யா கலாச்சார காவலர்களே..

அதே அரசாங்கம் சொந்த செலவில் டாஸ்மாக் நடத்தி நல்லது.. எல்லாரும் குடிங்கப்பானு மலிவு விலையில் தருவது இதே அடிப்படையில்தானா?

சிகரெட்டுக்கு வரிமேல்வரி போட்டு கல்லா ரொப்புவதும் இதே தானா?

அப்புறம் என்னவோ சினிமாவில் ஆபாசத்தால் சமூகக்கேடு கோஷம்போட்டுகிட்டிருக்காங்களே.. சினிமாவுக்கும் ஒரு தடையுத்தரவு கொண்டு வந்துரலாமே?

(நமீதா லோ ஹிப் காட்டி பேண்டை பிதுக்காவிட்டால், கலைஞர் டிவியின் டி.ஆர்.பி என்னாகும்னு யோசிச்சு பார்த்துட்டு பதில் சொல்லவும்.)

கடசியில டிவி மட்டும் ஏன் விட்டுவைக்கணும்? குழந்தைகள் கெட்டுப்போறாங்க... ஆத்துப்பொம்மனாட்டில்லாம் மெகா சீரியல் பார்த்து கெட்டுப்போறாங்கன்னு அதுக்கும் ஒரு உத்தரவு போடலாமே?

வீ. எம் said...

1. ஆம், தாராளமாக செய்யலாம்.. எனக்கும் தோன்றிய சிந்தனை இது

2.பிறந்தநாளுக்கும், சினிமா ரீலிஸ்க்கும் , புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் கொண்டாடுவது ஏன் அரசுக்கு எதிராக இருக்கவேண்டும்?

3 & 4. பெனாத்தலாரே, இது விவாதிக்கப்படவேண்டிய விஷயமல்ல..

பல மாற்றங்கள் ஏற்கனவே ஏற்பட்டு, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது, அப்படியொன்றும் மாணவர்களிடத்தில் தகவல் வித்தியாசம் இருந்ததில்லை.. (என் கருத்து)

நான் படிக்கும் போதெல்லாம் தமிழக தலைநகர் மெட்ராஸ் என்று தான் படித்தேன்..

5.சென்னை பெயர் மாற்றம் போலத்தான் இதுவும்..
அதே போல் இது தி மு க வின் திட்டமட்டுமில்லை..
அப்படியென்றால் இந்நேரம் அம்மா, வைகோ, ராமதாஸ் எல்லாம் அறிக்கை விட்டிருக்கலாம் :)

6.விதான்டாவாதம்? சில காரணங்களுக்கு விமான நிலையம் மதுரைக்கு மாற்றப்பட்டால், உடனே சென்னை கடற்கரை கோயம்புத்தூருக்கு மாறுமா? மதுரை மகால் திருச்சிக்கு மாறுமா என கேட்பது போல் உள்ளது.

7. ஏற்புடையது.. ஆனால் நன்மை தீமை என்று இதில் எதுவும் இல்லை.. மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது மட்டுமே இதில் உள்ளது

8. தமிழ் புத்தாண்டுக்கும் , இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.. அப்படியெனில் 80 கோடி இந்துக்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறார்களா? அல்லது ஆங்கில புத்தாண்டை கிறுத்தவர் மட்டும் கொன்டாடுகிறார்களா?
புத்தான்டை மதத்துடன் சேர்த்துப்பார்க்க வேண்டாம் . அப்படி
பார்த்ததால் தான் தங்களுக்கு மேல உள்ள பல கேள்விகள் எழுந்துள்ளது.

எனினும் , இதனை விவாத்திக்குட்படுத்தி, பல நல்ல கருத்துப்பறிமாற்றம் நடக்க வழிகோலியமைக்கு மிக்க நன்றி , வாழ்த்துக்கள் பினாத்தலாரே.

வீ எம்

✪சிந்தாநதி said...

உங்கள் கருத்தும் அது பற்றிய பின்னூட்டங்களும் படித்தேன்...

1. முதலில் //திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா?//

இது திருகவின் கொள்கையோ பிரச்சாரமோ அல்ல...மறைமலையடிகள் என்ற தமிழ்த்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்த அறிஞரை நீங்கள் அறியாமல் இருந்திருக்க மாட்டீர்கள். அவரது தலைமையில் கூடிய புலவர் குழு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் விவாதித்து தீர்மானித்த விஷயம் அது... திமுகவோ வேறு கட்சிகளோ சமீபகாலம் வரை இதை கண்டு கொள்ளவில்லை.

நீங்கள் தமிழ்ச் சிற்றிதழ்களை வாசித்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் புத்தாண்டு ஆக்குவது எத்தனை கட்டுரைகள் அரசாங்கத்தை நோக்கி முன்வைக்கப் பட்டன என்பதை அறிந்திருக்க முடியும்.

சமீபகாலத்தில் இது போன்ற தீவிரமான வேண்டுகோள்கள் முதலமைச்சர் பார்வைக்கு வந்திருக்கலாம். இத்தனை ஆண்டுகள் தாமதமான நிலையை உணர்ந்து இனியும் தாமதிக்க தேவை இல்லை என்று கருதி உடனடியாக அறிவித்திருக்லாம்.

2. சித்திரைப் புத்தாண்டு என்ற ஆண்டுக்கு தொடர் எண் கணக்கு ஒன்று கிடையாது... தமிழ்ப் புத்தாண்டாக சித்திரை முதல் நாள் இருந்தாலும் திருவள்ளுவர் ஆண்டின் துவக்க நாளாக தை 2ம் அல்லது 3ம் நாள்தான் கணக்கிடப் பட்டு வந்த்து.

எனவே இதையும் சீர்செய்யுமுகமாக இனி திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கும் புத்தாண்டும் ஒழுங்காக ஒரேநாளாக அனுசரிக்கப் படும். எனவே இதை தமிழ்ப் புத்தாண்டு என்று கூறுவதில் என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?

தைப் புத்தாண்டுக்கு எதிராக எழுதிய சில பத்திரிகைகளில் கேரளாவிலும் சித்திரை முதல்நாள் தான் புத்தாண்டு என்று குறிப்பிட்டிருந்தார்கள்... ஆனால் சித்திரை முதல்நாளை அவர்கள் விஷுதினம் என்று பண்டிகை தினமாக கொண்டாடுவார்களே தவிர அவர்களின் புத்தாண்டு ஆவணி முதல் தேதியில்தான் துவங்குகிறது.

சித்திரை முதல் நாள் புத்தாண்டாகவோ பண்டிகை தினமாகவோ விரும்புகிறவர்கள் கொண்டாடலாமே ...ஆனால் திருவள்ளுவர் ஆண்டை முன்வைத்து தைப்புத்தாண்டை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்பதில் உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?

முக்கியமாக இந்தப் பதிவின் தொனியில் இது திமுகவின் கொள்கை என்ற எண்ணத்தில் எதிர்க்கிறீர்கள் என்றுதான் எனக்குப் புலப்படுகிறது.

Anonymous said...

//சுயமரியாதை திருமணத்திற்கும் சட்டப்பூர்வமான அதிகாரத்தை வழங்கியதும் அரசாங்கம் என்னும் அமைப்புதான்.//

இதைச் செய்யும் பொழுது இந்து முறைப் படி செய்யும் திருமணங்கள் தடை செய்யப்பட வில்லையே. If it was an addition to something that already exists, it is different. If it is replacing an existing thing why should not we question it?

அப்புறம் இங்க உங்க சைடில் இருந்து உருப்படியா பேசறது நீங்க ஒருத்தர்தான். அதனால சித்திரை 1 எப்படி கேள்வி கேட்காம ஒத்துக்கிட்ட அப்படிங்கிற மாதிரி அபத்தமான வாதங்களை எல்லாம் அவாயிட் பண்ணிடுங்க.

அதையெல்லாம் பிடிச்சு தலைகீழ தொங்கத்தான் ஆளுங்க இருக்காங்களே!

✪சிந்தாநதி said...

மேலும் புத்தாண்டுக்கு சித்திரை மாதம் தான் ஏற்புடையது என்ற கருத்து குறித்து... சித்திரைப் புத்தாண்டை விட கோலாகலமாக தமிழர்கள் ஆங்கிலப் புத்தாண்டைத் தான் கொண்டாடுகிறார்கள். அதே காலகட்டம் ஏன் ஏற்புடையது இல்லை என்று கூற வேண்டும்?

குறைந்த பட்சம் மகர சங்கராந்தியும் கூட இருப்பதால் தைப்புத்தாண்டு என்றால் பொங்கல் புத்தாண்டு இணைந்து சிறப்பாகவே இருக்கும். இந்த வகையில் மதரீதியாகவும் கூட அந்த நாள் முக்கியத்துவம் உள்ள நாளாகவே இருக்கும்.

Anonymous said...

கலாச்சாரக் காவலன் #345க்கு, கலாச்சாரக் காவலன் #1 எழுதிக் கொள்வது.

எனது குடும்பம் மகன்கள் மகள்கள் பேரன்கள் பேத்திகள் கொள்ளுப் பேரன்கள் கொள்ளுப் பேத்திகள் எனப் பெரிதாகிக் கொண்டே போவதை நீ அறிவாய். ஆகையால் பாரம்பரியமாகச் செய்து வரும் தொழில்களான, தமிழக அரசாங்க, மத்திய அரசாங்கம், கட்டைப் பஞ்சாயத்து, தொலைக்காட்சி, சினிமா போன்ற தொழில்கள் போதாமல் புதிய தொழில்களை அவர்களுக்கு அமைத்துத் தரும் கடமை எனக்கு இருக்கிறது. நீ குறிப்பிட்டிருக்கும் கோமியத்திற்கு டிமாண்ட் இருந்தால் அதன் மொத்த வியாபாரத்தையும் நாங்கள் எடுத்து நடத்த வேண்டியது வரும் என்பதால் அதனை அதிகம் தாக்காது பேசக் கற்று கொள். அதன் பின் அந்த சூழ்நிலை வரும் பொழுது குண்டலகேசி, கோப்பெரும்தேவி என சில பலரை வைத்து அதனை தமிழரின் அருமருந்தாக மார்க்கெட்டிங் செய்ய நான் ஆலோசனை தருகிறேன். உனக்கும் ஒரு ஏஜென்சி எடுத்துத் தருகிறேன்.

இப்படிக்கு பெரிய குடும்பத்தைக் கரையேற்றுவது எப்படி என்ற கவலையுடன்

கலாச்சாரக் காவலன் #1

Anonymous said...

Numerous followers of The Hindu Religion are not 'avall'; 100% of 'avall' speak Tamil (in fact, an uncorrupted form of Tamil), though some use Sanskrit as a family tradition in religious activities. I am sure when in fear 'avaal' also say 'kakka kakka kanagavel kakka' and seek the support of Murugan - a tamil deity.

If the same blog is authored by a Kumaran, John or a Habeeb, no one would heaped 'inner purpose' = ada adanga ULNOKKAM - I can make out Suresh is a non-practising 'avaal' and many commentors seem to know it (I didn't know).


There are non-'avaal' voices which say PONGAL (or Makara Sankaranthi or any other name in which the day is celeberated most parts of India) is an AGRICULTURAL FESTIVAL - not an exclusive festival of Tamilians. This is not a big problem because while they have rights to express opinions we can just IGNORE them in true democratic spirit. But the voices. If it comes from a known 'avaal' source, bloggers have shown their over enthusiasm to react to that.

Come on guys - Look at the substance of the subject and if you dont agree with the opinion of the blogger, disagree - why bring in the 'avaal' factor in this.

Aside of the above, there is a good case for having a true CROP OVER festival like the West Indians do - they call it Calypso or Carnival. It could truly be the start of a month long FESTIVE SEASON extending till Feb 14 or LOVERS DAY. Be assured all AVAALs will also heartily participate.

From a very practical viewpoint, after Pongal (Jan 15) there is no festival till Aug end when Vinayaka Chathurthi starts. The festival on April 14 is a good break from the monotory. Give me a break yaar - mannikanum - nanba !!

(Someone pl tell me how to post in Tamil - my next posting will be in Tamizh );

முத்துகுமரன் said...

//ஆனால் தனி மனிதன் இரண்டு அடையாளங்களையும் ஒருங்கே அல்லவா ஏற்கிறான்? தமிழனாகவும் இந்துவாகவும் ஒரே ஆள் இருக்கக்கூடாதா? முடியாதா? தமிழனாக இருப்பதற்கும் இந்துவாக இருப்பதற்கும் நியமங்களில் முரணை ஏன் ஏற்படுத்தவேண்டும்?//

இந்துவாக இருத்தல் என்பது என்ன?. இந்துவாக இருப்பதற்கான பொதுமைப்படுத்தப்பட்ட வரையறைகள் என்பது தெளிவாக இருக்கிறதா? பிறப்பு மட்டுமே அதை தீர்மானிக்கிறதா? பல கேள்விகளுக்கு நாம் விடைதேட வேண்டும். அதற்கான விடைகளைக் கொண்டே இந்து தமிழன் என்ற நியமங்கள் முரணாக அமைக்கப்படுகிறதா என்று கூற இயலும். இந்து என்பதற்கான தெளிவான விளக்கங்கள் இருந்துவிட்டாலே பலவகையான குழப்பங்கள் ஏற்படாது போயிருக்கும். இந்து என்ற சொல்லிற்கே எதிர்மறையான வகையில்தான் அர்த்தம் கொள்ள முடியுமே தவிர நேரடியாக இல்லை. இந்த குழப்பத்தையே ஏற்றுக்கொண்டு வாழ்ந்திட முடியும் பலருக்கு தை முதல் புத்தாண்ட ஏற்க இயலாது செய்யும் மனத்தடை என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

இதற்கான விடையை காண நாம் அடுத்த தளத்திற்கு பயனிக்க வேண்டும். அது இந்த மதம் தொடர்பான விவாதமாக இருக்கும்.இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும் எல்லாவற்றையும் ஒரே அளவில் வைத்து விவாதம் செய்வது என்பது பொருந்தாது இருக்கும். மதம் பற்றியான விவாதங்கள் அதற்குரிய சூழலில் விவாதிப்பதே சரியாக இருக்கும். மதத்தின் தாக்கம் என்ற அளவில் மட்டுமே இங்கு விவாதிக்க இயலும்.

நான் எனது முதல் பின்னூட்டத்தில் சொன்னதேதான்.. மறுபடியும் இணைத்திருக்கிறேன் //8.இதில் இந்து மத சம்பிரதாய்ங்களை கடைபிடிப்பவர்களுக்கு எதிரானது என்று எதைச் சொல்லுகிறிர்கள். சமஸ்கிருத மயமாக்கபட்ட சடங்குகள் சம்பிரதாயங்களை கடைபிடிப்பவன் //

* வார இறுதி என்பதால் அனேகமாக சனிக்கிழமைதான் மீண்டும் பின்னூட்டமிட இயலும் என்று நினைக்கிறேன்.

நல்லதொரு கருத்துபரிமாற்றத்திற்கு களம் அமைத்து கொடுத்த பினாத்தலாருக்கு நன்றி.

Anonymous said...

//ஏன், எனக்கு வேலை கிடைத்த நாளைக்கூட நான் வருடாவருடம் புத்தாண்டாகக் கொண்டாடலாம்!//

ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா, வேறு வேலை இல்லாதவங்களால் கொண்டு வரப்பட்டிருக்கும் மாறுதல்தான் இது :-)

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த அரசாங்கத்தால் இது கண்டிப்பாக மாற்றப்படும் :-)))

அதுவரைக்கும், சும்மா தமாஸு !

திவாண்ணா said...

அனானி.
வலை இணைப்பில் இருந்தால் தமிழில் உள்ளிட சுலபமானது:
http://www.google.com/transliterate/indic/Tamil
பொனடிக் விசைப்பலகை.

வவ்வால் said...

சுரேஷ்,

//5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?//

//திருவள்ளுவர் ஆண்டை அறிந்திருக்கிறேன். தமிழக அரசு நாள்காட்டிகளை சிறு வயதில் உபயோகப்படுத்தியதால்.//

அறிந்தவர் ஏன் அப்படி பதிவில் கேட்டிங்க? அறிந்திருந்தும் அப்படிக்கேட்பது முன் முடிவுடன் எழுதப்பட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்திகிறதே!

//ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? //

மேலும் காலண்டர்கள் , ஆண்டு பிறப்பு எப்படி வகுக்கிறார்கள் என்பதை பற்றிய புரிதல் இல்லாமல் நீங்களாகவே ஒரு கருத்தை முன் வைத்து ஆணித்தரமாக சொல்ல வருவதும் அப்படி நினைக்க வைத்தது.

டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்துக்கொண்டு பேப்பரைப்படித்ததும் மனம் போன போக்கில் கருத்தை உதிர்ப்பார்கள் அதைப்போல நானும் பதிவு போட்டேன் என்றால் உங்கள் உரிமை அது, எனவே மன்னிக்கவும் நான் தான் இடம் மாறி வந்து விட்டேன்!

////ஜூலியஸ் சீசர் காலத்தில் நடந்தது// இப்போது தமிழகத்தின் ஜூலியஸ் சீசர் ஆட்சியா?//

சத்து இருந்தால் ஏர்றுக்கொள்வதற்கு முதலில் புரியனும்ல உங்களுக்கு புரியாத ஒன்றாக(புரிய விரும்பாத) இருக்கே தமிழ் புத்தாண்டு என்பது :-))

ஜூலியஸ் சீசர் மாற்றினார் என்றால் அவர் ஆட்சியா என்றுக்கேட்பது எதைக்காட்டுகிறது?

போப் கிரிகோரி மாற்றம் செய்தார் என்றால் யார் அதை சட்டம் போட்டு நடைமுறைக்கு கொண்டுவருவது.அரசன் தானே.

அவர் ஒரு அரசன், அதே போல முன்னர் மறைமலை அடிகள் முதாலான தமிழறிஞர்கள் முன் வைத்த , உலக தமிழ் மாநாடுகளில் விவாதிக்கப்பட்ட ஒரு மாற்றத்தை இப்போது அரசும் நடைமுறைக்கு கொண்டு வருகிறது, அரசனுக்கு எப்படி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளதோ அப்படியே அரசுக்கும் உள்ளது, அதுவும் ஜனநாயக அரசு என்பதால் பல காலம் முன்னர் சொல்லப்பட்ட பரிந்துரையை தள்ளிப்போட்டு வந்து மிக தாமதமாக இப்போது செய்துள்ளது.

அரசுக்காரணம் இல்லாமல் மக்கள் விரோதப்போக்கில் செயல்ப்பட்டுள்ளது என்ற ரீதியில் உங்கள் பதிவு செல்வது ஏன்?

இது சும்மா பர பரப்பை கிளப்பும் நோக்கில் என்றே தோன்றுகிறது!
--------------------------------------

திவா,

மகர சங்கராந்தி என்பது தை 1 இல் வருவதாக அக்காலத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அது போல சூரியனின் சஞ்சாரம் எப்போதும் ஒரே போல அமைவதில்லை என்றும் சொல்வார்கள் அதன் காரணமாக அப்படி மாறுகிறது ஆனால் நவம்பரில் அல்லவே அது.

கிரிகோரியன் காலண்டர் அமைக்கும் போது ஜனவரியில் நிகழ்ந்தது. இப்போது டிசம்பர் 21 இல் வரும்.கொஞ்சம் முன்ன பின்ன மாறி வருவது இயற்கையே

அறிவியல் சொல்வதுப்படிப்பார்த்தால் தீபாவளிக்கொண்டாடக்கூடாது, ஏன் எனில் கிருஷ்ணர் என்று ஒருவர் இருந்தார் என்பதற்கு ஆதாரம் அறிவியல்ப்பூர்வமாக இல்லையே!

//சித்திரை வைகாசி .. கணக்கில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே புது வருடம்.

//சூரியக்காலண்டர் அல்ல.//
அதுவேதான். சந்தேகமில்லை.//

ஒவ்வொரு மாதமுமே அந்த ராசிக்கு சூரியன் போவது என்று சொல்வது தான், எனவே மேஷ ராசியில் போவதால் புத்தாண்டு என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது.

மேலும் இந்தியக்காலண்டர்கள் சரியாக சொன்னால் "lunisolar" காலண்டர்கள் என்பார்கள், ஆனால் மாதங்கள் மட்டும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் லுனார் மாதங்களாக இருக்கும்.கொஞ்சம் குழப்பமான வேலை செய்துள்ளார்கள் அக்காலத்தில்.அதனால் தான் சித்திரைக்கு புத்தாண்டு போய்விட்டது.

பினாத்தல் சுரேஷ் said...

பதில் தருவதைச் சற்று ஒத்திப்போடுகிறேன். ஆனால் திரு வவ்வாலுக்கு மட்டும் உடன் பதில் போட்டுவிடுகிறேன், மற்றவர்கள் மன்னிக்கவும்.

//அறிந்திருந்தும் அப்படிக்கேட்பது முன் முடிவுடன் எழுதப்பட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்திகிறதே!
//

முன்முடிவு முன்முடிவு முன்முடிவு... இப்போதாவது ஒரு உங்களுக்கே உரிய அரை லாஜிக் இருக்கிறது உங்கள் முன்முடிவுக்கு.. முதலில் எப்படி வந்தது? படிக்க ஆரம்பிக்கும் முன்னே முன்முடிவை எடுத்தல் கலர் கண்ணாடியைப் போடுவதற்குச் சமம். முத்துகுமரனுக்கு தோன்றும் "நோக்கங்கள் சரியானால் விவாதங்கள் நடைபெறலாம்" என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றாமல் முன்முடிவே தெரிவதற்குக் கண்ணாடியே காரணம் என - ஊகிக்கவில்லை - உறுதியாகவே சொல்கிறேன்.

//மேலும் காலண்டர்கள் , ஆண்டு பிறப்பு எப்படி வகுக்கிறார்கள் என்பதை பற்றிய புரிதல் இல்லாமல் நீங்களாகவே ஒரு கருத்தை முன் வைத்து ஆணித்தரமாக சொல்ல வருவதும் அப்படி நினைக்க வைத்தது.// நான் ஆணித்தரமாக ஏதும் சொல்லியிருக்கிறேன் என்றால் அது முதல் வரி மட்டும்தான் - அதில் இந்த மாற்றத்தை நான் ஏற்கிறேன் என்றுதான் சொல்லி இருந்தேன். காலண்டர் எப்படி உருவாக்கப்பட்டது, எங்கே பிரிண்ட் செய்தார்கள், எத்தனை கிலோ (லிட்டரோ?) இங்க் செலவானது எல்லாவற்றைப்பற்றிய புரிதலுடன் தான் பேசவேண்டும் என்றால் யாரும் எதைப்பற்றியும் பேசமுடியாது.

//புத்தாண்டுக்கொண்டாட்டங்களின் ஆரம்பம் எங்கே துவங்கி இருக்கும்? // இதுதான் நான் கேட்ட ரிட்டொரிக் கேள்வி - இதில் எங்காவது ஆணித்தரம் தென்படுகிறதா?

//சத்து இருந்தால் ஏர்றுக்கொள்வதற்கு முதலில் புரியனும்ல உங்களுக்கு புரியாத ஒன்றாக(புரிய விரும்பாத) இருக்கே தமிழ் புத்தாண்டு என்பது // புரிய விரும்பாத என்பது எந்த வகையான புரிதல் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

//ஜூலியஸ் சீசர் காலத்தில் நடந்தது// இப்போது தமிழகத்தின் ஜூலியஸ் சீசர் ஆட்சியா?//-- இந்தப் பதில் கேள்வியின் பின்புலம் உங்களுக்குப் புரியவில்லையா? எல்லாரின் புரிதல் பற்றியும் சுலபமாக முடிவெடுத்து அழகாக கட்டுமானம் செய்யும் உமக்கு இது புரியவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விளக்குகிறேன்:

கால்ண்டர் உருவாக்கம், மறைமலை அடிகள் ஆகியோரின் ஆராய்ச்சி என்பது பற்றியெல்லாம் என் பதிவு பேசவே இல்லை. நான் சொல்ல வந்ததெல்லாம் மக்கள் நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயத்தை வலுவான பிரச்சாரம் செய்து, மனமாற்றத்தை ஏற்படுத்தி அறிவிக்காமல் தடாலடியாகச் செய்தால் அதன் பயன் ஒன்றும் இராது - ஒரு லீவுநாள் இடம்பெயர்வது தவிர! மக்களின் கருத்தைப்பற்றி கவலைப்படாமல் நேரடி அறிவிப்பாக வெளியிடப்பட்ட "உயிர்ப்பலி தடைச் சட்டம்" ஜனநாயகம் அற்றதாக (எனக்கும்) தோன்றுகிறது, ஆனால் அதே வகையில் செய்யப்பட்ட இந்த அறிவிப்பை ஜனநாயகம் அற்றது என்று சொல்வதும், அது சர்வாதிகாரம் என்பதும், ஜூலியஸ் சீசர் சர்வசக்தி பெற்ற அரசனாக ரோமாபுரியை ஆண்ட சர்வாதிகாரி என்பதும், அதே போன்ற சர்வாதிகாரச் செயல்தான் இதுவும் என்பதும்....................... உங்களுக்குப் புரியவில்லையா?

//இது சும்மா பர பரப்பை கிளப்பும் நோக்கில் என்றே தோன்றுகிறது!// மிக்க நன்றி. கலர்க்கண்ணாடி உண்டாக்கும் கலைடாஸ்கோப் பிம்பங்களுக்கு அளவே கிடையாதே!

வவ்வால் said...

சுரேஷ்,

//முத்துகுமரனுக்கு தோன்றும் "நோக்கங்கள் சரியானால் விவாதங்கள் நடைபெறலாம்" என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றாமல்//

முத்துக்குமரனுக்கு முன்னரே நான் பின்னூட்டம் போட்டு விட்டேன் எனவே அவர் எப்படி செய்தார் என்பதைப்பார்த்து நான் செய்வது எப்படி இயலும், மேலும் அவரும் நான் சொன்னதைப்போன்றே சொல்லியுள்ளார்.

தவறென்றுப்படுவதை தவறு என்று சொல்வது ஒன்றும் தவறல்லவே!

நீங்கள் குறிப்பிட்டு திமுக அரசு மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாத நிலையில் செய்துவிட்டது என்று சொன்னதால் தான் சொன்னேன் (உங்கள்பதிவை மீண்டும் நீங்களே படிக்கவும்)இது 50 ஆண்டுகால கோரிக்கை, ஆய்வு, பலரும் சொன்ன ஒன்று என்று, உலக தமிழ் மாநாடுகளில் பேசப்பட்ட ஒன்று,நீங்களே மறைமலை அடிகள் சொன்னதைப்பற்றி நான் சொல்லவில்லையே என்றால் , நீங்கள் சொன்னீர்களா என்பதை அரசு கவனிக்க வேண்டுமா? அது உங்கள் அறியாமை!

நீங்கள் மறைமலை அடிகளைப்பற்றி அறியவில்லை என்பதாலேயே திமுக அரசு ஒரே இரவில் திடீர் என அறிவித்தது என்ற ரீதியில் சொல்வதை முன் முடிவு என்று சொல்லாமல் பின் முடிவு என்றா சொல்ல முடியும்!

உண்மையில் இது பல ஆண்டுகளாகப்பேசப்பட்டு வந்த ஒரு பிரச்சினை என்று உங்கள் பதிவில் ஒரு இடத்தில் கூட மருந்துக்கும் நீங்கள் குறிப்பிடவில்லையே ஏன், அது அறியாமையா அல்லது திட்டமிட்ட மறைப்பா? அறியாமை எனில் அதை இங்கே பலரும்( முத்துக்குமரன், சிந்தாநதி, நான் என) அறிய தந்தாயிற்றே அப்போது இது ஒன்றும் சர்வாதிகார போக்கல்ல என்று ஏன் புரியவில்லை.

கலர் கண்ணாடி அணிந்திருப்பது யார் என்பது இங்கே எல்லாருக்கும் தெரியும், ஆனால் அதை எனக்கு மாட்டி அழகுப்பார்க்க ஆசைப்படுகிறீர்கள்.

//மத்தபடி இங்கு ஆரோக்கியமான விவாதம் எல்லாம் நடக்குமுன்னு தோணலை. ஆல் தி பெஸ்ட்.//

,இலவசக்கொத்தனார் போட்ட பின்னூட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?(அவர் பல அபத்தங்களை அள்ளி வீசினாலும் இதைமட்டும் கேட்டு வைக்கிறேன்)

அப்போ நீங்கள் போட்ட எந்த பதிவுக்குமே யாருமே ஆக்கப்பூர்வமாக பேசியதில்லை, அல்லது பதிவர்கள் எல்லாம் அப்படித்தான் பேசுவார்கள் என்று தீர்மானம் இருக்குமெனில் இப்படி ஒரு பதிவு யாருக்காக அய்யா போட்டிங்க?

இப்படி ஒரு பதிவு போட வேண்டும் என்று வேண்டுதல் இருக்குமெனில் நான் எதுவும் தவறாக நினைக்க மாட்டேன்! :-))

கோவைப்பழம் said...

//5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?//
திமுக -வின் சித்தாந்தம்: மக்களை தேவை இல்லாத/குறைவான, கட்சியை சங்கடப்படுத்தாத (படுத்தினாலும் மாத்தி மாத்தி பேசி கன்ப்யூஸ் பண்ணிடுவோம்ல) ஆனா controversial -ஆன விஷயங்களை உண்டு பண்ணி பிசியாகவே வெச்சு அஞ்சு வருஷத்த ஓட்டு! அப்பறம் நமக்குத் தான் ஓட்டு! (இப்பவோ இல்ல அதிமுகவோட 5 வருஷத்துக்கு அப்புறமோ!)

பொழுது போகலையா / மக்களோ எதிகட்சியோ கேள்வி கேட்கராங்களா? பிராமண துவேஷம் (அதாங்க, 'பகுத்தறிவு' பிரச்சாரம்) பண்ணு, ஜெ மேல கேஸ் போடு, நாட்டுக்குத் தேவை இல்லாத அரசியல் பண்ணு. சொல்லியா தரனும்!

எது எப்படியோ சுரேஷ், தலைப்பு விவாதத்துக்கு / உரையாடலுக்கு உகந்ததுன்னாலும், ஒரே நாள்ல 50+ பின்னூட்டம் வந்த பதிவுகள்ள டாப் 10 ல இதுவும் இருக்கும்னு நெனைக்கறேன்! மொத்தத்துல எத்தனை பேரோட manhours விரயம். வீண் விரயம் இல்லாட்டியும், யார் என்ன விஷயங்களை முன்னிறுத்தி வாதாடராங்கன்னு பக்க ஸுவாரசியமா இருக்கு! மத்தவங்கள கன்வின்ஸ் பண்றது என்ன, நம்மளோட கருத்த புரிய வைக்கறதுக்குள்ள, அவங்கள காண்டெக்ஸ்ட்-க்கு உள்ள கொண்டு வர்றதே பெரும்பாடு தான்!

அரசு கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கறபோது, திமுக பண்ணியிருக்கிற இந்த காரியம், தேவை இல்லாத ஒன்னு தான்! அது சரி, பக்கத்து மாநில முதலமைச்சரோட உட்கார்ந்து 5 மணி நேரம் சினிமாக்காரர்களின் ஆட்டம்பாட்டத்தை பார்த்து நேரத்தை செலவு பண்ணற முதல்வர் கிட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும்!

கோவி.கண்ணன் said...

இங்கே விவாதம் என்ற பெயரில் நடப்பது தமிழ் துவேசமா ? கலைஞர் கருணாநிதி பற்றிய துவேசமா ?

ஒன்னும் புரியல.

கொத்தனார் பாணியில் சொல்ல வேண்டுமென்றால். அனானிகள் யாராவது என்னை திட்டிச் செல்லலாம்.

:)

எப்படியோ மாற்றம் என்று எது நடந்தாலும் அதை எதிர்ப்பதற்கும் 'நான்கு' பேர் குறைய மாட்டார்கள் இருப்பார்கள்.

//VSK said...
நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் வரக்கூடிய நியாயமான சந்தேகங்கள் என்றே நானும் கருதுகிறேன். இங்கு பதில் சொல்ல வருபவர்கள், இதைச் சற்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து இட்டால் ஒரு தெளிவு பிறக்கலாம். திரு. முத்துகுமரன் அவர்களைத் தவிர வேறு எவரும் இதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.
//

வீஎஸ்கே ஐயா,

ஒவ்வொரு தமிழனும் இதே போன்ற சந்தேகங்கள் இருக்கிறது என்று உங்க காதில் சொல்லிட்டு போனானா ?
அப்பறம் அறிவுபூர்வம் என்று எதோ உளறுகிறீர்கள். அப்படி யென்றால் என்ன ?

பேசுகிறவர்கள் அனைவரும் அறிவில்லாமல் பேசுகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ? அறிவுபூர்வமாக கருத்துக்களை மறுத்து இருந்தால் நன்றாக இருக்கும். தன்னை அறிவாளி என்று சொல்வதைவிட அடுத்தவரை முட்டாள் என்று சொல்வதால் தன்னிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்று சொல்வார்கள். அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

முடிந்தால் கல்வெட்டுக்கும், வவ்வாலுக்கும் பதில் சொல்லுங்கள். உலகத்தில் நீங்கள் மட்டுமே அறிவாளி போன்றும் மற்றவர்கள் 'அறிவு பூர்வமாக' பார்க்கவில்லை என்று சொல்வது உளறலே அன்றி வேறில்லை.

விவாதத்தில் வாதம் என்று எதுவும் செய்யாமல் முட்டாள் தனமானது, அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்வது எளிது.

புத்தாண்டை இடம் மாற்றுவதால் உங்களுக்கு என்ன நட்டம் ? உங்களை யாரும் சித்திரையை தவிர்க்கச் சொல்லவில்லையே. அப்படி சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை, பிறகு ஏன் தேவை இல்லாது கவலைப்படுகிறீர்கள் ?

பினாத்தல் சுரேஷ் said...

http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html#comment-7269402033584217872

முத்துகுமரனின் இந்தப் பின்னூட்டத்திலிருந்து பதில் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

//சுயமரியாதை திருமணத்திற்கும் சட்டப்பூர்வமான அதிகாரத்தை வழங்கியதும் அரசாங்கம் என்னும் அமைப்புதான்.//

அரசாங்கம் என்னும் அமைப்பு செய்யும் காரியங்கள் வெளிப்படையாக இருக்கவேண்டும் - இல்லாவிட்டால் அந்த அமைப்புக்கு மரியாதை இருக்காது இல்லையா?

பினாத்தல் சுரேஷ் said...

சிந்தாநதி, முத்துகுமரன், கல்வெட்டு ஆகியோரின் வாதங்களின் விளைவாக, நான் பதிவில் கேட்டிருந்த கேள்விகள் சிலவற்றுக்கு விடை கிடைத்திருக்கிறது. அவற்றை இங்கே தொகுக்கிறேன்.

*************************
1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?

சித்திரை முதல் நாளுக்கும் விடுமுறை இருக்கும் - இந்து என்போருக்கான சிறப்பு நாளாக அது இருப்பதில் ஆட்சேபணை இல்லை - ஆனால் தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறப்படக்கூடாது.

2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?

தாராளமாகக் கொண்டாடலாம் - உங்கள் மத ரீதியான பண்டிகையாக - ஒரு வேளை காலப்போக்கில் முட்டாள்கள் என அடையாளம் காட்டப்படலாம்.

3. தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?

மாறும். தை மாசி என்றா சுறவம், கும்பம் என்றா என்பது காலப்போக்கில் முடிவெடுக்கப்படும். முடிவெடுத்து அறிவித்தபின் சொல்வதற்கு வசதியாக முன்பே சில சிற்றிதழ்களில் பேசப்படும்.

4. மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?

குழப்பங்கள் சகஜமே.

5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

உலகத் தமிழ் மாநாடுகளில் பேசப்பட்டது, தமிழார்வலர்களால் பேசப்பட்டது, சிற்றிதழ்களில் பேசப்பட்டது..

6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?

மதப்பண்டிகைகளில் தமிழை பிரித்தெடுக்கும் முயற்சி இது என்பதால் தொடர வாய்ப்பில்லை.

7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?

தமிழ் வாழ்கிறது! (எப்படி என்றுதான் தெரியவில்லை)

8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?

அரசாங்கம் யாரையும் தடுக்கவில்லை, பெயரை மட்டும்தான் மாற்றி இருக்கிறது..

பினாத்தல் சுரேஷ் said...

கல்வெட்டு,

1.தமிழரின் புத்தாண்டு (சித்திரை 1) அனைத்து மத தமிழர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்கிறதா?

இல்லைதான்.

2.அப்படி இல்லாத பட்சத்தில் சித்திரை 1 யும் தமிழ் புத்தாண்டையும் வேறு படுத்த வேண்டும். என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

இது அவசியம் என எனக்குப் படவில்லை. இருந்தாலும் கருத்தை ஏற்கிறேன்.

3.சித்திரை 1 எனத் தொடங்கும் புத்தாண்டு இந்து-சனாதன-பார்ப்பன மதக் கதைகளுடன் தொடர்பு உடையதால் அது அந்த மதத்திற்கான புத்தாண்டாக இருக்கலாம் என்பது உங்கள் அளவில் சரியா?

இப்போது அது எனக்கு, உங்களைப்போன்றவருடன் பேசியபின் விளங்குகிறது. ஆனால் ஒரு சாதாரணத் தமிழ்- இந்துவுக்கு விளங்கவைக்க யார் முயற்சிக்கப் போகிறார்கள்?

4.தை-யில் தொடங்கும் (தொடங்கப் போகும்) ஆண்டு நிச்சயம் மத ஆண்டு அல்ல தமிழர் ஆண்டு. மத நம்பிக்கைகளை விலக்கும்போது , அனைத்து மதத்தினரும் இணைய ஒரு புது தூண்டல் ஏற்படும் என்று நம்புகிறீர்களா?

தெரியவில்லை.. நடக்கட்டும் பார்க்கலாம்.. அரசாங்கத் திட்டங்கள் மீது பெரிய நம்பிக்கை இல்லை.. நாளை விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் அவர் பிறந்தநாள் "வறுமை ஒழிப்புத் தினமாக" அறிவிக்கப்படலாம் - மக்கள் ஏற்பது என்று ஒன்று இருக்கிறதல்லவா?

5.மதங்கள் சாராத வேறு ஏதாவது ஒரு நாளை (தை-1 விட சிறப்பான நாளை) தமிழர் முதல் மாதமாக பரிந்துரை செய்வீர்களா?

மாட்டேன். தேவையில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

க கா #345, :-)

வீ எம், நன்றி. மேற்கண்ட பின்னூட்டங்களில் உங்களுக்கும் பதில் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்.

சிந்தாநதி,

//ஆனால் திருவள்ளுவர் ஆண்டை முன்வைத்து தைப்புத்தாண்டை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்பதில் உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு? //

வெறுப்பு இல்லை என்பதைத்தான் முதல் வரியிலேயே சொல்லி இருக்கிறேனே.

//முக்கியமாக இந்தப் பதிவின் தொனியில் இது திமுகவின் கொள்கை என்ற எண்ணத்தில் எதிர்க்கிறீர்கள் என்றுதான் எனக்குப் புலப்படுகிறது.//

திமுகவின் கொள்கைகளை எதிர்க்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. மனதில் பட்டதை எழுதினேன்.. அவ்வளவுதான்.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,
//If it is replacing an existing thing why should not we question it?//

அதானே!

கலாசாரக் காவலன் #1,

#1ன்னு ப்ரூவ் பண்ணிட்டீரய்யா :-))))))))))))))))))))))))

அனானி,

//Come on guys - Look at the substance of the subject and if you dont agree with the opinion of the blogger, disagree - why bring in the 'avaal' factor in this.//

இந்த ரத்த பூமியில அதெல்லாம் சகஜமப்பா!

முத்துகுமரன்,

//இதற்கான விடையை காண நாம் அடுத்த தளத்திற்கு பயனிக்க வேண்டும். அது இந்த மதம் தொடர்பான விவாதமாக இருக்கும்.// அப்படி ஒரு விவாதத்தில் கலந்துகொள்ளத் தேவையான தரவுகளும் ஆர்வமும் எனக்கு இல்லை. ஆனால் வேறெங்கேனும் தொடர்ந்தால் படிக்கிறேன்.

அனானி,

//எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த அரசாங்கத்தால் இது கண்டிப்பாக மாற்றப்படும் :-)))//

அரசாங்கத்தால் மாற்றப்பட்டாலும்கூட மக்கள் மாறாமல் இருக்கவேண்டுமென்றால் கொஞ்சம் மார்க்கெட்டிங் செய்யவேண்டும்.

பினாத்தல் சுரேஷ் said...

வவ்வால்,

//முத்துக்குமரனுக்கு முன்னரே நான் பின்னூட்டம் போட்டு விட்டேன் எனவே அவர் எப்படி செய்தார் என்பதைப்பார்த்து நான் செய்வது எப்படி இயலும், மேலும் அவரும் நான் சொன்னதைப்போன்றே சொல்லியுள்ளார்.//

முன்னே போட்டீர்களா பின்னே போட்டீர்களா என்பதா பிரச்சினை.. ஒரே பதிவைப் பார்த்தவுடன் அவருக்கு விவாதம் செய்வதில் பயனிருக்கும் (பல விஷயங்களை பிடிவாதம் காட்டாமல் ஏற்றுக்கொண்டும் விட்டேன்) எனத்தோன்றுகிறது, உமக்கு முன்முடிவு தெரிகிறது என்பதைத்தான் ஒப்பிட்டேன்..

//இலவசக்கொத்தனார் போட்ட பின்னூட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?(அவர் பல அபத்தங்களை அள்ளி வீசினாலும் இதைமட்டும் கேட்டு வைக்கிறேன்)//

அபத்தம் என்பதன் அளவுகோலில் பொதுவாக நகைச்சுவையும் சட்டையரும் சேராது. நீங்கள் சேர்த்துவிட்டதை எங்களுக்கு எதாவது சிற்றிதழ் மூலம் அறிவித்திருக்கிறீர்களா? எங்கள் அறியாமைதான் இந்த அபத்தத்துக்குக் காரணமா?

//நீங்கள் சொன்னீர்களா என்பதை அரசு கவனிக்க வேண்டுமா? அது உங்கள் அறியாமை!//

உங்களுடனான விவாதம், உங்களுடன் பேசுவதுபோல் அல்லாமல் மற்றவர்களை நோக்கிப் பேசுவதுபோல் மாறிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன்.(யார் பெஸ்ட்?) இவ்வாறு ஆனதற்குக் காரணமும் எனக்குப் புரிகிறது. ஆனால் தேவையற்றது என்பதால் "அர்ஜ்" ஐக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

என் புத்திசாலித்தனத்தை எங்கே நிறுவவேண்டுமோ அங்கே நிறுவிக்கொள்கிறேன். நீங்கள் இப்படி நிறுவிக்கொள்வது சிலாக்கியம் என
நினைத்தால் தொடருங்கள் :-)

பினாத்தல் சுரேஷ் said...

கோவைப்பழம்,

//அரசு கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கறபோது, திமுக பண்ணியிருக்கிற இந்த காரியம், தேவை இல்லாத ஒன்னு தான்! அது சரி, பக்கத்து மாநில முதலமைச்சரோட உட்கார்ந்து 5 மணி நேரம் சினிமாக்காரர்களின் ஆட்டம்பாட்டத்தை பார்த்து நேரத்தை செலவு பண்ணற முதல்வர் கிட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும்!//

தேவை இல்லாததுன்னு நினைக்கறதுதான் டேஞ்சர். அதைத் தேவைன்னு நினைக்கவச்சிருந்தா இவ்ளோ விவாதம் தேவை இல்லையே..

பினாத்தல் சுரேஷ் said...

கோவி கண்ணன்,

//இங்கே விவாதம் என்ற பெயரில் நடப்பது தமிழ் துவேசமா ? கலைஞர் கருணாநிதி பற்றிய துவேசமா ?//

ஏன் எதாவது ஒரு துவேஷமாத்தான் இருக்கணும்னு நினைக்கிறீங்க? அப்படி ஒரு கருத்துக்கு வந்ததுக்கு என்ன காரணம்? புரியல..விளக்குறீங்களா?

//எப்படியோ மாற்றம் என்று எது நடந்தாலும் அதை எதிர்ப்பதற்கும் 'நான்கு' பேர் குறைய மாட்டார்கள் இருப்பார்கள். //

இப்ப கொத்தனார் ஹாப்பி ஆயிடுவார். அவர் டெம்ப்ளேட் யூஸ் ஆவுதே!

//உலகத்தில் நீங்கள் மட்டுமே அறிவாளி போன்றும் மற்றவர்கள் 'அறிவு பூர்வமாக' பார்க்கவில்லை என்று சொல்வது உளறலே அன்றி வேறில்லை.//

இது நீங்கள் வீஎஸ்கேவிடம் கேட்ட கேள்வி என்றாலும், அவர் வந்து பதில் சொல்வார் என்றாலும், அவர் எழுதியது உளறலாக எனக்குப் படவில்லை என்பதைப் பதிவு செய்துவிடுவதோடு, மற்றவர்களை முட்டாள்களாகப் பார்ப்பது யார் யார், விவாதத்தில் வாதம் எதுவும் செய்யாமல் கருத்து உதிர்ப்பதும் வீ எஸ்கே மட்டும்தானா என்பதையும் சற்று யோசியுங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

திவாண்ணா said...

@கோவி கண்ணன்.
//வீஎஸ்கே ஐயா,
ஒவ்வொரு தமிழனும் இதே போன்ற சந்தேகங்கள் இருக்கிறது என்று உங்க காதில் சொல்லிட்டு போனானா ? //

உங்கள் வாதத்தில் பிழை இருக்கிறது.

வி எஸ்கே சொன்னது என்ன? //ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் வரக்கூடிய //
இதில் என்ன தவறு?

@சுரேஷ்
//ஹரிஹரன் - கும்பம் மீனம் தமிழ் இல்லையா? இது என்ன குண்டு?//

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பொதுவாக இருக்கும் சொற்கள் சுமார் 35% இருக்கும். கும்பம் மீனம் இதை சேர்ந்தது. தனித்தமிழ் மக்களுக்கு சம்ஸ்கிருதம் தெரிந்து எதிர்க்கிறார்களா இல்லை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை என்ற அறியாமையை ஒப்புக்கொள்கிறேன்.

திவாண்ணா said...

@கல்வெட்டு

//பொங்கல் இந்துக்களின் திருநாள் என்றால் உலக இந்துக்கள் அனைவரும் "பொங்கல்" கொண்டாடவேண்டும்.//

வேறு வேறு பெயரில் அனைவருமே கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் இந்தியா முழுவதுமே கொண்டாடுகிறது. முறைதான் வேறு.

ஏற்கெனவே இருக்கிற அமைப்பு ஒன்றை மாற்றா வேண்டும் என்றாள் ஒரு வலுவான காரணம் வேண்டும். அது என்ன?

2.//தமிழ் கிறித்துவர்களும் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.//

எனக்கு தெரிந்து ஆடிப்பண்டிகை, தீபாவளி கூட கொண்டாடுகிறார்கள். மதம் மாறினாலும் பழக்கம் போகவில்லை.

//1.தமிழரின் புத்தாண்டு (சித்திரை 1) அனைத்து மத தமிழர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்கிறதா?//

இதில் மதம் எங்கே வந்தது? வானவியல் ரீதியாக சூரியன் மேஷ ராசியில் நுழையும் தினம்.

//2.அப்படி இல்லாத பட்சத்தில் சித்திரை 1 யும் தமிழ் புத்தாண்டையும் வேறு படுத்த வேண்டும். என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?//

ஏற்றுக்கொள்ளலாம் என்பதால் கேள்வி எழவில்லை.


//4.தை-யில் தொடங்கும் (தொடங்கப் போகும்) ஆண்டு நிச்சயம் மத ஆண்டு அல்ல தமிழர் ஆண்டு. மத நம்பிக்கைகளை விலக்கும்போது , அனைத்து மதத்தினரும் இணைய ஒரு புது தூண்டல் ஏற்படும் என்று நம்புகிறீர்களா?//

இல்லை. அப்படி ஏதும் ஏற்படாமல் அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்.

//சட்டம்,மதம்,சம்பிரதாயம் என்று புறக்காரணிகளால் (பிறரால்) வலிந்து திணிக்கப்படும் அடையாளங்களை அப்படியே ஏற்பது என்பது அவரவர் விருப்பம்.//

எப்போது யார் திணித்தார்கள். காலம் காலமாக இருக்கிறதே?

//நாம் நம்மை எதில் இணைத்து அடையாளம் காண்கிறோம் என்பதுதான் முக்கியம்.
ஸர்வஜித்,ஸர்வதாரி- வகையறாக்களில் தன்னை அடையாளம் காண்பவர்கள் கண்டு கொள்ளட்டும். அவர்களும் வாழ்க.//

நன்றி!

திவாண்ணா said...

@வவ்வால்.

//மகர சங்கராந்தி என்பது தை 1 இல் வருவதாக அக்காலத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அது போல சூரியனின் சஞ்சாரம் எப்போதும் ஒரே போல அமைவதில்லை என்றும் சொல்வார்கள் அதன் காரணமாக அப்படி மாறுகிறது ஆனால் நவம்பரில் அல்லவே அது.//

உண்மைதான். சற்று கவனக்குறைவில் திசம்பர் என்று எழுதாமல் தவறாக எழுதிவிட்டேன்.

//அறிவியல் சொல்வதுப்படிப்பார்த்தால் தீபாவளிக்கொண்டாடக்கூடாது, ஏன் எனில் கிருஷ்ணர் என்று ஒருவர் இருந்தார் என்பதற்கு ஆதாரம் அறிவியல்ப்பூர்வமாக இல்லையே!//

வானவியல் ரீதி என்று நீங்கள்தானே அறிவியலை கொண்டு வந்தீர்கள்.? அறிவியல் ரீதியாக சரி செய்வதானால் திசம்பர் 21 முதல் புது வருடம் என்று சொல்லலாமே?

//ஒவ்வொரு மாதமுமே அந்த ராசிக்கு சூரியன் போவது என்று சொல்வது தான், எனவே மேஷ ராசியில் போவதால் புத்தாண்டு என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது.//

ஒரு வானியல் நிகழ்ச்சிக்கும் புத்தாண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினேன்.
The ecliptic is divided into the nakshatras eastwards starting from a reference point which is traditionally a point on the ecliptic directly opposite the star Spica called Chitrā in Sanskrit. (Other slightly-different definitions exist.) It is called Meshādi or the "start of Aries"; this is when the equinox — where the ecliptic meets the equator — was in Aries (today it is in Pisces, 28 degrees before Aries starts).http://en.wikipedia.org/wiki/Hindu_Calender
இதனால்தான் மேஷ ராசி என்று ஆரம்பித்தது.

//மேலும் இந்தியக்காலண்டர்கள் சரியாக சொன்னால் "lunisolar" காலண்டர்கள் என்பார்கள், ஆனால் மாதங்கள் மட்டும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் லுனார் மாதங்களாக இருக்கும்.கொஞ்சம் குழப்பமான வேலை செய்துள்ளார்கள் அக்காலத்தில்.அதனால் தான் சித்திரைக்கு புத்தாண்டு போய்விட்டது.//

இரண்டுமே புழக்கத்தில் இருக்கிறது.
லூனார் காலண்டரில் மாதம் அமாவாசை அன்று பிறக்கிறது. பெயர்களும் வேறானவையே. சைத்ர, பைசாகி, ஜேஷ்ட என்று போகும்.
சோலார் காலண்டரில் ஒரு ராசிக்கு சூரியன் போவது. சித்திரை முதலானவை.
இரண்டு வித பெயர்களுக்கும் சில ஒற்றுமைகள் இல்லாமல் இல்லை.

வவ்வால் said...

சுரேஷ்,

//முன்னே போட்டீர்களா பின்னே போட்டீர்களா என்பதா பிரச்சினை.. ஒரே பதிவைப் பார்த்தவுடன் அவருக்கு விவாதம் செய்வதில் பயனிருக்கும் (பல விஷயங்களை பிடிவாதம் காட்டாமல் ஏற்றுக்கொண்டும் விட்டேன்) எனத்தோன்றுகிறது, உமக்கு முன்முடிவு தெரிகிறது என்பதைத்தான் ஒப்பிட்டேன்..//

இப்படி கேட்கிறீர்கள், ஆனால் ,
இங்கே ஆரோக்கியமான விவாதம் நடக்காது என்று ஒருவர் சொல்வதையும் ஆமோதிக்கிறீர்கள் ,ஒரு பதிவைப்பார்த்ததும் அவருக்கு இப்படி தோன்றுகிறது , எனக்கு, மற்றவர்களுக்கு எல்லாம் அப்படி தோன்றி இருந்தால் பேசி இருப்போமா, நான் என்ன சொல்ல வருகிரேன் என்பது புரிந்தால் சரி!

அவர் அப்படி சொல்வதை நகைச்சுவை என்று சொல்கிறீர்கள்.

மேலும் உங்கள் பதிவில் நீங்கள் திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்று இருந்து, அதன் வழி தான் இப்போது மாற்றினார்கள் என்பதை சுட்டிக்காட்டாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என அரசு மாற்றிவிட்டது என்றே சொல்லி இருந்தீர்கள். நான் கேட்டதும் எனக்கும் தெரியும் அந்த ஆண்டு முறை என்றும் சொன்னீர்கள்.

அப்படி தெரிந்திருந்தும் புத்தாண்டு மாற்றம் என்பது திடீர் முடிவு என்ற முடிவுக்கு உங்களைக்கொண்டு சென்ற சக்தி எது?

//என் புத்திசாலித்தனத்தை எங்கே நிறுவவேண்டுமோ அங்கே நிறுவிக்கொள்கிறேன். நீங்கள் இப்படி நிறுவிக்கொள்வது சிலாக்கியம் என
நினைத்தால் தொடருங்கள் :-)//

நீங்கள் எங்கே வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம், ஆனால் எதையாவது நிறுவிக்கொண்டே இருக்கணும் என்ற உங்களின் கட்டாய மனப்போக்கினைப்புரிந்துக்கொண்டேன். எனக்கு அப்படிலாம் அவசியமே இல்லை. :-))

------------------------------

திவா,
//வானவியல் ரீதி என்று நீங்கள்தானே அறிவியலை கொண்டு வந்தீர்கள்.? அறிவியல் ரீதியாக சரி செய்வதானால் திசம்பர் 21 முதல் புது வருடம் என்று சொல்லலாமே?//

வானவியல் ரீதியாக மிகச்சரியாக அந்த நாளுக்கு கொண்டு போகவில்லை, ஏன் எனில் அக்காலத்தில் கணித்த போது பொங்கல் ஜனவரியில் அமைந்திருந்ததை அப்படியே இன்று வரைக்கும் வைத்து விட்டார்கள் என்று சொன்னால் அறிவியல் ரீதியாக தப்பு என்றீர்கள், முன்னரே சொல்லி இருக்கிறேன் காலப்போக்கில் சூரியனின் சஞ்ஜாரம் மாறிவந்த போதிலும், அதற்கு ஏற்ப நாட்காட்டியில் திருத்தங்கள் செய்யப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஆங்கில முறைப்படியே டிசம்பர் 21 வருட கடைசியாக வர வேண்டும், பின்னர் சிறிது சிறிதாக நாட்களை சரியாகக்காட்ட 31 வரைக்கும் கொண்டு போய்விட்டார்கள்.காலண்டர் என்பதே சில பல திருத்தங்களை செய்து அட்ஜெஸ்ட் செய்து நாட்களைக்காட்டுவது தான்.

//Chitrā in Sanskrit. (Other slightly-different definitions exist.) It is called Meshādi or the "start of Aries"; this is when the equinox — where the ecliptic meets the equator — was in Aries (today it is in Pisces, 28 degrees before Aries starts).http://en.wikipedia.org/wiki/Hindu_Calender
இதனால்தான் மேஷ ராசி என்று ஆரம்பித்தது.//

சரி அந்த வானியல் நிகழ்வை வைத்து சித்திரையில் புத்தாண்டு அதாவது ஏப்ரலில் வரும் என்று சொல்கிறீர்கள், அப்படிப்பார்த்தால் ஆங்கில புத்தாண்டும் ஏப்ரலில் இருக்கலாமே ஏன் ஜனவரியில் இருக்கு.ஏற்கனவே ஏப்ரலில் இருந்த புத்தாண்டை அவர்கள் ஜனவரிக்கு ஏன் மாற்றனும்.

அவர்கள் ஏன் மாற்றினார்கள் என்பதை விட நாம் ஏன் மாற்றலாம் என்பதற்கு காரணம் நீங்கள் சொன்ன அதே போன்ற வானியல் நிகழ்வு தான், நமக்கு மகரசங்கராந்தி எனப்படும் சூரியன் மகர ரேகைக்குள் நுழையும் நாளில் தான் நமக்கு கோடை துவக்கம், ஏப்ரல் மே தானே கோடை எனலாம் அது கோடையின் உச்சம்.அறுவடை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த விளைச்சலுக்கு போக தயாராகும் காலம்.

மேட்டூரில் கூட தண்ணீர் திறந்து விடுவதை மூடிவிட்டு இனிமேல் ஜூனில் தான் திறப்பார்கள். நமது சுழற்சிக்கு ஏற்ப தான் ஆண்டு துவக்கம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் விரிவாக வேறொருப்பதிவில் இதனை சொல்லியுள்ளேன்.

Anonymous said...

Suresh, Theres no point in talking about this and with these people. You could've spent your time with your children. Stop replying to this post, and continue to the next one.

பினாத்தல் சுரேஷ் said...

//திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்று இருந்து, அதன் வழி தான் இப்போது மாற்றினார்கள் என்பதை சுட்டிக்காட்டாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என அரசு மாற்றிவிட்டது என்றே சொல்லி இருந்தீர்கள்//

திருவள்ளுவர் ஆண்டு முறைக்கு தமிழ் மாதங்களை மாற்றி புத்தாண்டை தை 1 (சுறவம்1 ஆ?) அமைப்பது எப்போது துவங்கியது வவ்வால்? திருவள்ளுவர் ஆண்டு என்பது எனக்குத் தெரிந்திருப்பதைக்கூட சிறுவயதில் தமிழக அரசு நாள்காட்டி பயன்படுத்தியதனால்தான் என்று சொல்லியிருந்ததன் காரணம் - அப்படி ஒரு வாய்ப்பில்லாதவர்களுக்கு அது தெரிந்திருக்காது என்பதுதான். அது தெரிந்திருக்கிறதே இது தெரியவில்லையே என்று ஆரம்பித்தால்?

//ஆனால் எதையாவது நிறுவிக்கொண்டே இருக்கணும் என்ற உங்களின் கட்டாய மனப்போக்கினைப்புரிந்துக்கொண்டேன்.//

முன்முடிவுகள் என்று தொடங்கி, எதுவும் தெரியாதா என்ற எள்ளலில் தொடர்ந்து, பாதி தெரிகிறது மீதி தெரியாதா என்று கேட்டு --

திருகுதாளமாக எழுதிக்கொண்டிருந்தால் எழுதிக்கொண்டே போகலாம், ஜெயித்துவிட்டதாகக் குதிக்கலாம், மரப்பொந்துகளை படம்காட்டி மகிழலாம், இல்லாத குணங்களை என்மேல் ஏற்றிப் பரவசப்படலாம்.. ஆனால் சிரிப்புதான் வருகிறது எனக்கு. அடுத்து வரும் அனானி சொல்வதே சரி. மிக்க நன்றி அனானி.

Anonymous said...

எச்சூஸ்மீ....இவ்வளவு நீள நீளமா பின்னூட்டம் போட்டா எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. கோவாலு, இங்க புத்தாண்டை வச்சு(அரசாங்கத்தைத் தவிர வேற) யாரும் காமடி கீமடி பண்ணலியே?

Anonymous said...

////உலகத்தில் நீங்கள் மட்டுமே அறிவாளி போன்றும் மற்றவர்கள் 'அறிவு பூர்வமாக' பார்க்கவில்லை என்று சொல்வது உளறலே அன்றி வேறில்லை.//

இது நீங்கள் வீஎஸ்கேவிடம் கேட்ட கேள்வி என்றாலும், அவர் வந்து பதில் சொல்வார் என்றாலும், அவர் எழுதியது உளறலாக எனக்குப் படவில்லை என்பதைப் பதிவு செய்துவிடுவதோடு, மற்றவர்களை முட்டாள்களாகப் பார்ப்பது யார் யார், விவாதத்தில் வாதம் எதுவும் செய்யாமல் கருத்து உதிர்ப்பதும் வீ எஸ்கே மட்டும்தானா என்பதையும் சற்று யோசியுங்கள்.//

சபாஷ் சுரேஷ், சரியாச் சொன்னீங்க! மரியாதைக்குரிய விஎஸ்கே ஐயாவை இப்படிச் சொல்ல துவேஷத்தைத் தவிர கோவிக்கு வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றிலும் துவேஷத்தைப் பார்க்கும் இது போன்ற பதிவர்கள் தமிழ்மணத்தின் சாபக்கேடுகள் என்றே சொல்ல வேண்டும்.

பதிவின் பொருளை விட்டு வெளியே செல்வதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

Anonymous said...

அண்ணே அண்ணே வவ்வால் அண்ணே,
உங்க ஊரு எந்த ஊரு?
//கிரிகோரியன் காலண்டர் அமைக்கும் போது ஜனவரியில் நிகழ்ந்தது. இப்போது டிசம்பர் 21 இல் வரும்.கொஞ்சம் முன்ன பின்ன மாறி வருவது இயற்கையே//
four centuries until 1582 when Pope Gregory XIII changed the calendar bringing the northern winter solstice to around December 21. Yearly, in the Gregorian calendar the solstice still moves around a bit, but in the longterm, only about one day per 3000 years. ம்ம் சே, சே, இருக்காது, வவ்வாலு தப்பா கணக்கு போடுவாரா?

பொதுவா பாத்தா, பினாத்தல் சார் ஒரு முடிவோடு தான் பேசிநாப்போல் தான் தோனுது.
//அப்படி இருக்கையில் பின்புலங்கள் எதைப்பற்றியும் பிரச்சாரம் செய்யாமல் - ஆர்வலர்கள் தவிர வேறு யாருக்குமே தெரியாமல் இருக்கும் விவரங்களின் பின்னணியில் - இந்த ஆண்டு புத்தாண்டு இங்கே தொடங்குகிறது என்று சொல்வது -- உங்களுக்கு உவப்பானதாக இல்லாதபட்சத்தில் சர்வாதிகாரமாகத் தோன்றாதா? /// என்று படிச்சால், //சித்திரை 1ல் புத்தாண்டு தொடங்குவதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்களுக்கு தை முதலே தொடங்குவது என்பது கேள்விக்குட்படுத்தபடக்கூடியதா!// முத்துக்குமரன் சொல்லுவது சரிதான்.

திவா ஐயா //ஒரு சமாசாரம் வழக்கத்தில் நெடுங்காலமாக இருந்து வருஇறது. // அதை கேள்வி கேக்காமல் இருக்கணும் என்றால், அறிவியலில் ஒரு முன்னேற்றமும் இருக்காது.

இருந்தாலும், என்னப் பொறுத்த வரை, lunisolar முறையில் எப்பவுமே ஏப்ரல் மாதம் வரும் புத்தாண்டு ன்னு பெருமையாக மற்ற மாநிலத்தவருக்கு சொல்லிக் கொள்வேன். மற்ற மாநில காலண்டர்கள் அப்பப்போ "அதிக மாசம்" வச்கிக்கற போது தமிழுக்கு கிடையாது 19 வருட adjustment நம்ம வருஷத்தில் உள்ளதால்... ஜனவரி 14 தான் தமிழ் புத்தாண்டு அப்படின்னு சட்டம் போட்டால் என்னைப் பொறுத்த வரை சரி தான். இன்னொன்னு, ஏன் ஜனவரி 14 இல்லை 15 ன்னு மாறாமல், பொங்கல் தினம் ஒரே ஆங்கில காலண்டர் படி வரணும். (கூகிள் பண்ணி பாக்கணும் மறைமலை அடிகள் காலண்டர் பற்றி இன்னும்....)

//தமிழையும் , இந்து/சனாதன- சமஸ்கிருத மதம் இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம// என்னை இந்து இல்லை ன்னு சொல்றது நிங்க யாருங்க? நான் தமிழ் தான், இந்துவும் தான்!

அப்புறம், இதுவும் ஆரோக்கியமாக இல்லையே: //மாட்டு மூத்திரம் குடிப்பது உடல் நலனுக்கு உகந்ததா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அதானால் தீய விளைவுகள் ஏற்படுமாயின் அவனது நம்பிக்கை என்று வாயைப்பொத்திக்கொண்டு அரசாங்கம் இருந்திடல் முடியாது//
//சுயமரியாதை திருமணத்திற்கும் சட்டப்பூர்வமான அதிகாரத்தை வழங்கியதும் அரசாங்கம் என்னும் அமைப்புதான்// திருமணம் இல்லாமல் "வச்சுக்கறது"? அந்த வகையில் பிறந்தவருக்கு MP ஆக பதவி கேட்பது? (நானும் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான், அதனால் முதல் அமைச்சரைக்கேட்பதற்கு எல்ல்லா உரிமையும் எனக்கு உண்டு. ஆனா, அவங்களை பற்றி பேசி அவமானப்படுத்தறதால், "பிச்சை புகுந்து கற்ற" என் இளமை திரும்பப் போவதில்லை).

என்னைக் கேட்டால்:
1) நாடு விடுதலை அடையும் போது, ஜோதிடர்கள் கலந்து பேசி இந்திய அரசாங்கத்தின் காலண்டரை கொண்டு வந்தார்களோ, அதே மாதிரி, மறைமலை அடிகளின் காலண்டர் பற்றி மக்களிடையே தெளிவைக் கொண்டு வரை வேண்டும். ஜாதி மதம் பாராமல் எல்லாரையும் பிரதிநிதி படுத்தி ஒரு குழு வச்சி மக்களின் "buy-in" வாங்க வேண்டும்.

2) பன்னிரண்டு தமிழ் மாதப் பெயர்கள் சரியாக தோன்றவில்லை. கண்ணபிரான் ரவிசங்கர் பதில் அளித்தார் வேறு ஒரு பதிவில்...

Anonymous said...

பினாத்தல் சார்,
புத்தாண்டு தேதியை மாற்றுவதால் தமிழர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பார்பனர்களுக்கு என்ன என்ன பாதிப்பு என்று பட்டியல் இட்டால் அரசு பரிசீலனை செய்யும் என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

அனானி அண்ணே ,
//four centuries until 1582 when Pope Gregory XIII changed the calendar bringing the northern winter solstice to around December 21. Yearly, in the Gregorian calendar the solstice still moves around a bit, but in the longterm, only about one day per 3000 years. ம்ம் சே, சே, இருக்காது, வவ்வாலு தப்பா கணக்கு போடுவாரா?//

நான் என் நினைவில் இருந்து எழுதியதே அனைத்தும். கொஞ்சம் முன் பின்னாக வார்த்தைகள் வந்து இருக்கலாம். அதுவும் போப் கிரிகோரி அமைக்கும் போது என்று சொன்னது அவர் அமைப்பதற்கு முன்னர் என்று வந்திருக்க வேண்டும் அப்படிப்பட்ட அர்த்தம் வரும் வகையில் எழுதவே நினைத்தேன், அதாவது அவர் 21 என்று தீர்மானித்தார் என்றே சொல்ல வந்தேன். , இப்போது இருப்பதும் அவர் அமைத்த காலண்டர் தானே. ரொம்ப தீவிரமாக ஆராய்கிறீர்கள் இங்கே சொல்ல வந்தது அந்த நாள் அடிக்கடி மாறி வந்தது என்பதை சொல்லவே, நீங்கள் குறிப்பிட்டதிலும் அந்த நாள் தொடர்ந்து மாறி வருகிறது என்று இருக்கிறது, அது தான் இங்கே தேவையான மேட்டரே.

அதை சுட்டிக்காட்டியது டிசம்பர் 21 இல் நடக்கும் சம்பவத்தை வைத்தே ஜனவரி 1 க்கு புத்தாண்டு அந்தஸ்து வருகிறது. என்று சொல்லவே.

தை மாதத்தில் புத்தாண்டு வருவதற்கும் இந்த டிசம்பர் 21 ஐ ஒரு காரணமாக கொள்ளலாம், கூடவே மகர சங்கராந்தி என்று சொல்வது தான் நோக்கம், ஏன் உடனே கொண்டாடாமல் தள்ளிப்போகனும் என்று அவர்கள் கேட்டதால் இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்வளவு ஆராய்பவர் அப்படியே முன்னர் ஏப்ரல் 1 தான் புத்தாண்டாக ஆங்கில காலண்டரில் இருந்தது என்றால் ஏற்காமல் பேசுகிறார்களே அவர்களுக்கும் ஒரு சுட்டிக்காட்டுங்களேன்.

வவ்வால் said...

ஒன்று விட்டுப்போய்விட்டது,
ஒரு காலத்தில் டிசம்பர் 21 உடன் அந்த ஆண்டு முடிந்து விடும் என்று இருந்தது என்றும் படித்த நினைவு. பின்னர் நாட்களை சரி செய்ய சேர்த்து 31 வரைக்கும் கொண்டு வந்ததாக சொல்வார்கள். இதற்கு முன் உதாரணமாக வட மத்திய அமெரிக்க நாகரிகமான மயன் காலண்டரில் டிசம்பர் 21 வரை மட்டுமே இருக்கிறது, அவர்கள் வானவியலில் கில்லாடிகள்.

Anonymous said...

//இது நீங்கள் வீஎஸ்கேவிடம் கேட்ட கேள்வி என்றாலும், அவர் வந்து பதில் சொல்வார் என்றாலும், அவர் எழுதியது உளறலாக எனக்குப் படவில்லை என்பதைப் பதிவு செய்துவிடுவதோடு, மற்றவர்களை முட்டாள்களாகப் பார்ப்பது யார் யார், விவாதத்தில் வாதம் எதுவும் செய்யாமல் கருத்து உதிர்ப்பதும் வீ எஸ்கே மட்டும்தானா என்பதையும் சற்று யோசியுங்கள்.//

அதாவது கோவி, நம்ம பெனாத்தல் என்ன சொல்லறாருன்னு புரியலைன்னா, உங்க நாத்திக நாயகன் கமலகாசன் இருக்காரே, (ஹாசன் என போடாம என்னவோ காச நோய் பிடிச்சவருன்னு சொல்லற மாதிரி காசன் எனப் போட வேண்டி இருக்கே. எல்லாம் தலையெழுத்து!) அவரு சொன்னதுதான். அவரு என்ன சொன்னாரு தெரியுமா?

எதுக்காத்துல எச்சி மொழியாதே தம்பிடத் தம்பி!!

திவாண்ணா said...

அனானி அண்ணே
//திவா ஐயா //ஒரு சமாசாரம் வழக்கத்தில் நெடுங்காலமாக இருந்து வருஇறது. // அதை கேள்வி கேக்காமல் இருக்கணும் என்றால், அறிவியலில் ஒரு முன்னேற்றமும் இருக்காது.//

நான் எழுதியதை முழுமையாக பாருங்க.
/ஒரு சமாசாரம் வழக்கத்தில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. அதை மாற்றும் போது ஏன் மாற்றுகிறீர்கள் என்று கேட்பதில் பொருள் இருக்கிறது.//

கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லவில்லையே?

திவாண்ணா said...

ஹும்..!
காலண்டரைப் பற்றி ஆராயப்போய் குழப்பம்தான் மிஞ்சியது.
தெளிவானது ஒரு சில விஷயங்கள்:
1. மாயன் காலண்டரில் (காலண்டர்களில்) 260 நாட்கள்.

2.போப் கிரிகொரி காலண்டரை அங்கீகரித்தார். அவ்வளவே. அலோசியஸ் லிலியஸ் என்பவர்தான் உருவாக்கினார்.

3.அதற்கு காரணம் ஈஸ்டர் பண்டிகை முன்னே முன்னே வந்து 10 நாட்கள் முன்னேறிவிட்டது. இது குழப்பத்தை உண்டு பண்ணியது. வசந்த வெர்னாக்ஸ் உடன் இது சம்பந்தப்பட்டதால். மார்ச் 23.

4.ஜனவரி 1 முதல் நாள் என்று ஆரம்பித்தவர்கள் ரோமானியர்கள். காரனம் ஏதும் இல்லை. சீசர்கள் வருடம் 365 நாட்களும் 12 மாதங்களும் வரும் படி சீர் செய்தார்கள். ஏப்ரல் புத்தாண்டாக இருந்ததாக தெரியவில்லை.

5.திருவள்ளுவர் ஆண்டு என்று ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் அது புழக்கத்தில் வராது போனது போல இதுவும் போய்விடும். தமிழன் வழக்கம்போல் கிரேக்க கடவுள்களை நினைவில் வைத்து ஜனவரி பிப்ரவரி என்றுதான் கணக்கு வைத்துக்கொண்டிருப்பான்.

6.அதனால் மேற்கொண்டு இந்த பதிவில் ஏதும் காலண்டர் பற்றி எழுதுவது பயனற்றது என்ற ஞானோதயம் வந்துவிட்டது.!
(இப்பவாவது வந்ததே!)

7.ஆகவே இந்த பதிவை பொருத்தவரை விடை பெற்றுக்கொள்கிறேன். நன்றி சுரேஷ், வவ்வால், அனானி.

Anonymous said...

சிம்பிள் மேட்டுருங்க - இந்தியால நிறைய states எப்ரலதான் நியூ இயர் கொண்டாடறாங்க - நாம மத்தவங்க மாதிரி இருந்திட்டா எப்பிடி? நாம என்னிக்கி ஊரோட ஒத்து வாழ்ந்திருக்கோம் ?
மத்தவங்க இந்தி படிப்பாங்க - நாம படிக்க மாட்டோம். (அவங்க இந்தி படிச்சதுல அவங்க மொழி செத்துடுசான்னு கேட்காதீங்க). தேசீய கட்சிக்கு ஒட்டு போட மாட்டோம். மத்தவங்க விவசாய விழாவா கொண்டாடுவாங்க - நாங்க different அப்பிடின்னு எப்பிடி காமிக்கறது? தமிழனுக்கு தனி கொம்பு இருக்குன்னு நமக்கு நாமே சொல்லிக்க எதுனா matter வேணும் சாமி !
முக்கியமா தமிழுக்கும், தமிழனுக்கும் எதுனா அப்ப அப்ப செயினும். இல்லன்னா நம்ம புழப்பை கெடுக்க 1000 பேர் இருக்காங்கப்பா !!

Anonymous said...

அய்யாக்களே, முன்முடிவு செய்யாமல் எழுத/படிக்கத் தெரியாதா? நான் அதே அனானி - "அண்ணி!".

வவ்வால் அண்ணே, மேட்டரு என்னா? நீங்க சொன்னீங்க: //கிரிகோரியன் காலண்டர் அமைக்கும் போது ஜனவரியில் நிகழ்ந்தது. இப்போது டிசம்பர் 21 இல் வரும்.கொஞ்சம் முன்ன பின்ன மாறி வருவது இயற்கையே// ஜனவரியில் இருந்து டிசம்பர் 21 மாறணும் என்றால், அட்லீஸ்டு 3000 X 11 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் கிரிகோரியன் காலண்டர் அமைத்து (moves "only about one day in 3000 years").
//நான் என் நினைவில் இருந்து எழுதியதே அனைத்தும். கொஞ்சம் முன் பின்னாக..;// //எழுதவே நினைத்தேன்// //என்றே சொல்ல வந்தேன்.// கொஞ்சம் எழுந்து மீசை (இருந்தால்) யைத் துடையும் அய்யா. நிறைய பதிவுகளில் இருந்த மண்!

உங்களுக்கு சுட்டி கண்டுபிடிக்க நேரம் இல்லையா?

திவா அண்ணே, //Blogger திவா said... அனானி அண்ணே .... நான் எழுதியதை முழுமையாக பாருங்க. ..... கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லவில்லையே? ....// கரீட்டு தான். நீங்க அப்பிடி சொல்லவில்லை ‍ மன்னிக்க! அந்த பழக்கத்திலிருக்கிற சமாசாரம் எதற்கு என்று கேள்வி. தமிழரின் வழக்கம் தானா? அதா மேட்டருனு தோணுது.

பினாத்தல் சார் கம்னு இருக்கீங்க?

இதுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்களேன்: //மறைமலை அடிகளின் காலண்டர் பற்றி மக்களிடையே தெளிவைக் கொண்டு வரை வேண்டும். ஜாதி மதம் பாராமல் எல்லாரையும் பிரதிநிதி படுத்தி ஒரு குழு வச்சி மக்களின் "buy-in" வாங்க வேண்டும்// தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.

வவ்வால் said...

அனானி,

இப்படி விவரம்லாம் சொல்லுற அனானிக்கு அனானியா வரத்தானே தெரியுது :-))(தப்பா சொல்லிட்டா நான் அந்த அனானி இல்லைனு தப்பிச்சுக்கலாம்ல )

//ஜனவரியில் இருந்து டிசம்பர் 21 மாறணும் என்றால், அட்லீஸ்டு 3000 X 11 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் கிரிகோரியன் காலண்டர் அமைத்து (moves "only about one day in 3000 years").//

ரொம்ப ஆர்வமாக இருக்கிங்க என் மீசைல மண் ஒட்டிச்சானு பார்க்க நான் எங்கேவாது செலஸ்டியல் ஆக்சிஸ் ஒட்டி சுழலும் போது ஏற்படும் மாற்றத்தைனா சொல்லி இருக்கேன், நான் சொன்னது காலண்டர் அமைத்தவர்களின் ஏற்பாட்டால் ஏற்பட்ட மாற்றம்.

உம். பொங்கல் அன்று தான் மகர ரேகையில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறது சூரியன் என்பது இந்தியக்கணக்கு, ஆனால் வானியல் படி டிசம்பர் 21 தானே அப்போ ஏன் ஜனவரி 14 என்று வைத்துள்ளார்கள், ஏன் எனில் காலண்டர் அமைப்பவர்கள் அப்போதைய அவர்கள் கண்டுப்பிடிப்புக்கு ஏற்ப நாட்களை குறித்து விட்டார்கள் எனவே தோராயம் தான் அங்கே வருகிறது.கிருஸ்துமச் எத்தனை முறை இடம் மாற்றப்பட்டு இந்த நாளுக்கு வந்தது தெரியுமா? அதுக்கு எதாவது நட்சத்திர மண்டலம் இருக்கானு பார்த்து வாப்பா!

அதே போல ஆங்கில வருடத்தில் இப்படி தோராயமாக இருந்ததை சொல்லி இருக்கேன். அதையே அவ்வபோது மாறி வருகிறது என்றும் சொன்னேன்.

உடனே அறிவு ஜீவித்தனமாக 3000 வருஷம் என்று சொல்லிக்கொண்டு வந்தால்.

உலகத்தில் மனித குலம் தோன்றி நாகரீகம் அடைந்தே சில ஆயிரங்கள் வருடம் தான் ஆகிறது என்று விஞ்ஞானம் சொல்லும் போது 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ராமர் பிறந்தார், பாலம் கட்டினார்னு சொன்னா ,அப்போலாம் இந்த லாஜிக் வித்தையை காட்டுவதே இல்லையே அனானி :-))

என்ன சொல்றாங்கன்னே புரிந்துக்கொள்ளாமல் ஓடி வராங்களே , விளங்கினாப்போல தான்,

மேலும் இது பற்றி விரிவாக நான் ஒரு பதிவேப்போட்டாச்சு, அதைப்படித்து அதில் தவறு இருக்கானு கண்டுபிடிப்பா!

http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_27.html

அது சரி அனானி , திருவள்ளுவர் ஆண்டு இருப்பது தெரியாதா கேட்டடேன் தெரியும் சொன்னார் ஒருத்தர், அப்புறம் ஏன் பதிவில் தெரியாத போல போட்டிங்கன்னு கேட்டாப் பதிலே வரலை, அதை எல்லாம் போய் நோண்ட மனசு வரலையோ!

குமரன் (Kumaran) said...

சுரேஷ். இந்தப் பதிவிலும் பின்னூட்டங்களிலும் நான் காணும் குறையைச் சொல்ல விரும்புகிறேன். பதிவில் தையில் தொடங்கும் புத்தாண்டைப் பற்றி கேள்வி கேட்க வந்துவிட்டு சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை இந்துகளில் புத்தாண்டு என்பது போல் கட்டமைத்துவிட்டீர்கள். இந்த 35 வருட வாழ்க்கையில் சித்திரையில் துவங்கும் புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று தான் சொல்லியும் கேட்டும் வந்திருக்கிறேன். சித்திரைப் புத்தாண்டை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் அதனை இந்துப் புத்தாண்டு என்று கட்டமைக்கலாம். நீங்களே அப்படி செய்யலாமா?

பின்னர் கொத்ஸின் பின்னூட்டம் இங்கு நடக்கும் உரையாடல் பார்ப்பனர் தமிழ் என்ற விவாதமாக மாற வழி வகுத்துவிட்டது. (விவாதம் என்பதற்கு கல்வெட்டு சொன்ன வரையறையை கொள்கிறேன் இங்கு).

பின் குறிப்பு: இங்கே இருக்கும் பின்னூட்டங்களில் முதல் 30 பின்னூட்டங்களைத் தான் படித்திருக்கிறேன். அதற்கு மேல் படித்துப் பார்த்து விவாதம் உரையாடலாக மாறிவிட்டதா என்று பார்க்க வேண்டும். மாறியிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஓகை said...

சுரேஷ், இப்பதிவில் உங்கள் பெரும்பாலான கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன்.

இந்த தைப் புத்தாண்டு திருவள்ளுவராண்டை அரசு நிகழ்வுகளில் இருந்து நீக்கி விடுமோ என்று அஞ்சுகிறேன். திருவள்ளுவர் பிறந்ததாகக் கருதப்படும் தை இரண்டாம் நாளிருந்து தொடங்கி அவரை சிறப்பிக்கும் வகையில் அரசு நிகழ்வுகளில் பதியபெற்றது இனிமேல் வழக்கொழிந்துவிடும் போலிருக்கிறது. இதைப் பற்றி யாரும் வருந்தியதாகத் தெரியவில்லை. என்வரையில் இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு.

இலவசக்கொத்தனார் said...

//பின்னர் கொத்ஸின் பின்னூட்டம் இங்கு நடக்கும் உரையாடல் பார்ப்பனர் தமிழ் என்ற விவாதமாக மாற வழி வகுத்துவிட்டது.//

குமரன், நான் இங்க முதல் பின்னூட்டமா அதைப் போட்டதுனாலவோ என்னவோ இங்க இந்த சத்தம் ரொம்பக் கேட்கலை. ஆனா இந்த தலைப்பில் மத்த இடங்களில் வந்த பதிவுகளைப் பாருங்க. நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு புரியும். நான் சொன்னது நடப்பவைகளில் இருந்து வெகு தூரத்தில் இல்லை.

Anonymous said...

அய்யா புண்ணியமாய் போகும் யாராவது எனக்கு புரிய வையுங்களேன் - மாற்றத்தை ஆதரிப்பவர்கள் சார்பாக உள்ள காரணங்கள், எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்கள், நடுநிலையானவர்கள் நிலை என்ன என்று. Objective summing of the discussion as bullet points, removing the biases to the extent as possible.
ஒவ்வோவொரு கருத்துக்கும் ஒரு நியாயமான மறுபக்கம் நிச்சயம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இரண்டு பக்கங்களையும் புரிந்து கொள்ள உதவ முடியுமா ?
நன்றி

வவ்வால் said...

சுரேஷ்.

//குமரன், நான் இங்க முதல் பின்னூட்டமா அதைப் போட்டதுனாலவோ என்னவோ இங்க இந்த சத்தம் ரொம்பக் கேட்கலை. ஆனா இந்த தலைப்பில் மத்த இடங்களில் வந்த பதிவுகளைப் பாருங்க. நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு புரியும். நான் சொன்னது நடப்பவைகளில் இருந்து வெகு தூரத்தில் இல்லை.//

மனசாட்சியை ஒட்டுமொத்தமாக விலைப்பேசி விற்றால் மட்டுமே இப்படிலாம் பேச முடியும்! :-))

இது இ.கொ,அல்லது பெனாத்தல் சுரேஷ் இருவருக்குமே யார் விற்றது என்ற அளவில் மட்டுமே எனது கேள்விகள்!

என்னைப்பார்த்து முத்துக்குமரன் போல ஆக்கப்பூர்வமாக பேசுங்களேன் என்று , இ.கொ வின் பின்னூட்டம் பார்தது அதை அங்கீகரித்த பின்னர் பெனாத்தல் கேட்பது ஏன்,(என்னைப்பார்த்து அப்படி ஒரு கேள்விக்கேட்கும் முன் அவர் யோசித்து இருக்க வேண்டும்) அப்போது அதில் முன் முடிவு இருக்கிறது என்று நான் சொல்வதில் தவறில்லை என்பதை அதுவே நிருபிக்கிறது!

தமிழ் அல்லது தமிழர் பண்பாடு என்று தனித்து பேசினால் மட்டுமே இந்த அளவுக்கு காட்டம் காட்டும் இவர்களை தமிழின துரோகிகள் என்று சொல்வதில் தவறே இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது!

தமிழின துரோகிகளை அப்படி சொல்வதால் என் தலையாப்போய்விட போகிறது!(அப்படிலாம் சொல்வதற்கு முன்னரே அப்படி சொல்வார்கள் என்று சொல்லிக்கொள்வதன் மூலம் அதை தவிர்க்கலாம் என்றும் ஒரு திட்டம்)

வேறு எந்த பொதுப்பிரச்சினைக்கும் இத்தனை ஆர்வம் காட்டியதில்லை இவர்கள் :-))

எவன் என்ன சொன்னாலும் சட்டம் போட்டாச்சு , அதை உண்மையான தமிழர்களும் வரவேற்கிறார்கள் , சிலர் இப்படிலாம் சொன்னால் இல்லைனு ஆகிடப்போகுதா, நீங்கள் எல்லாம் , தமிழ் நாட்டை விட்டு ஓடிப்போனாலும் இழப்பொன்றும் இல்லை எமக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

அன்புள்ள பின்னூட்டமிட்ட அனைவருக்கும்,

நன்றி. விவாதம் என்பது அடுத்தவனை மடக்கவே என்று சிலர் நினைத்தாலும், முத்துகுமரன், கல்வெட்டு, சிந்தாநதி போன்றோர் எதிர்க்கருத்தை நியாயமான முறையில் எடுத்து வைத்தார்கள். அவர்களின் வாதம் என் கருத்தை சில இடங்களில் மாற்றி இருப்பதை மேலே ஒரு பின்னூட்ட்டத்தில் எழுதியும் இருக்கிறேன். விவாதத்தில் அடுத்தவன் சொல்வதை ஏற்பது தோல்வி என்றால் அந்தத்தோல்விக்குத் தயாராகவே விவாதத்தை ஆரம்பிக்கிறேன். ஆனால் என் கருத்துக்களை மாற்றி அமைப்பதைத் தோல்வியாக நான் கருதுவதுமில்லை, அப்படி ஒரு ஈகோ சுமையும் எனக்கு இல்லை.

இது தெரிந்த நண்பர்கள், இவனிடம் பேசுவதில் பயன் இருக்கும் என்ற எண்ணத்தோடு விவாதங்களை வைத்தார்கள்.

தமிழ் அறிஞர்கள் சொன்னது, மத அடையாளமற்று எல்லாத்தமிழர்களும் கொண்டாட ஏற்றது போன்ற காரணங்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாகவே தெரிகின்றன.

ஆனால், திடுதிப்பென்று காலண்டர் வடிவமைப்பைப் பற்றியும் ஏப்ரல் முட்டாள்களைப்பற்றியும் விவாதம் திசை திரும்பியது. உலகில் எல்லாப்பகுதியிலும் ஏதோ ஒரு லாஜிக்கோடு தான் காலண்டரை உருவாக்கி இருப்பார்கள், ஆண்டின் எந்த நாளை வேண்டுமானாலும் முதல் நாளாக வைக்கலாம். சூரியன் பூமியைச் சுற்றுவதாக நினைத்த காலத்திலிருந்து 365.242199 நாட்கள் எனத்துல்லியமாகக் கண்டுபிடித்தது ஒரு நாளில் நடந்தது அல்ல, எனவே மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை- இதெல்லாம் புரியாமல் இல்லை. என்னைப்பொறுத்தவரை இதற்கெல்லாம் ஒரு இம்பாக்டும் இல்லை. (கூகிளில் 1 மைக்ரோசெகண்டில் வருடத்தின் நாட்களைக் கண்டுபிடித்தேன்.. நினைவிலிருந்து எழுதவில்லை. கூகிள் எதைப்பற்றி வேண்டுமானாலும் துப்பப்போகிறது - தேவைப்பட்டால் மைக்ரோசெகண்டுகளில் புத்திசாலியாகிவிடலாமே)

ஆனால் நமக்கு என்ன லாஜிக்கோடு சித்திரை 1 புத்தாண்டாக இருந்தது, தை 1 புத்தாண்டாக மாற்றக் காரணங்கள் என்ன - யாரோ ஒரு அனானி சொன்னதுபோல தனித்திருப்பது மட்டுமா? சரி, தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தால் உரூப்படியாகத்தான் இருக்கும், என்னைவிட அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும் என ஒப்புக்கொள்ளலாம்!

என் பதிவு எழுப்பிய கேள்விகள் இதைப்பற்றியெல்லாம் இல்லையே? என் பதிவு முழுக்க முழுக்க எக்ஸிக்யூஷன் சம்மந்தப்பட்டது.. அரசு வெறுமனே ஆணை இட்டுவிடுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுவிடுமா? புத்தாண்டுக்களுக்கு மதரீதியான சடங்குகளை இனியும் சித்திரை 1ல்தானே செய்யப்போகிறார்கள்.. திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்று இருப்பதே சிலருக்கு மட்டுமே தெரிந்தநிலை இருக்கிறதே, கடைசியில் தியாகிகள் தினம், சாலைப் பாதுகாப்பு வாரம் போன்று யாருக்கும் தெரியாமல், ஆனால் "தமிழுக்கு" நான் இதைச் செய்தேன் என்று அரசியல் செய்ய உதவுவதைத்தவிர இந்த அறிவிப்பினால் யாருக்கு என்ன உபயோகம் என்ற கேள்விகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.

கொத்தனார் முதல் பின்னூட்டத்தில் கொடுத்த டெம்பிளேட், அப்படிப்பட்ட டெம்பிளேட் பின்னூட்டங்கள் வர ஒரு தடையாக இருந்தது :-) அதற்காக அவருக்கு நன்றி. கொத்தனாரின் பின்னூட்டத்தை வைத்தே அரசியல் செய்ய நினைக்கும், செய்துகொண்டிருக்கும் கலர்க்கண்ணாடிப்பார்வை அவர்கள் தளத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும், அவர்களுக்கும் பொழுதுபோகவேண்டாமா :-)

எல்லார்க்கும் மீண்டும் ஒரு நன்றி!

பினாத்தல் சுரேஷ் said...

//தமிழ் அல்லது தமிழர் பண்பாடு என்று தனித்து பேசினால் மட்டுமே இந்த அளவுக்கு காட்டம் காட்டும் இவர்களை தமிழின துரோகிகள் என்று சொல்வதில் தவறே இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது//

//நீங்கள் எல்லாம் , தமிழ் நாட்டை விட்டு ஓடிப்போனாலும் இழப்பொன்றும் இல்லை எமக்கு!//

ம்ஹூம்.. முத்திப்போச்சு!

Have a field day and enjoy!

வவ்வால் said...

சுரேஷ் ,

இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லாமல் சுற்றி வளைக்கிறீர்களே ஏன்,

அது என்னக்கேள்வியா?

என்னைப்பார்த்து அவர் போல ஆக்கப்பூர்வமாக பேசவில்லை என்று என்னை சொன்னீர்களே, இங்கே யாரும் ஆக்கப்பூர்வமாக பேசவே மாட்டார்கள் என்று ஒரு "sweeping statement" அளித்த இ.கொ வின் பின்னூட்டத்தைப்பற்றி நானும் பல முறைக்கேட்டு விட்டேன், அவரை ஏன் எதுவும் கேட்கவில்லை, என்னை மட்டும் ஆக்கப்பூர்வமாக பேச சொல்லிக்கேட்டதன் நோக்கம் என்ன?

நான் பேசியது ஆக்கப்பூர்வமாக இல்லை என்று கருத முடிந்த உங்களால் ஆக்கப்பூர்வமாக பேசவே மாட்டார்கள் இங்கே என்று சொன்னவர் கருத்து மட்டும் எப்படி ஆக்கப்பூர்வமாக தெரிந்தது உங்களுக்கு?

இத்தனைக்கும் உண்மையில் நான் சொன்னக்கருத்தை ஒட்டியே நீங்கள் பெரிதும் சிலாகிக்கும் மற்றவர்கள் சொல்லியுள்ளார்கள், நானே முதலில் மாற்றுக்கருத்தை சொன்னேன்!


//பின்னர் கொத்ஸின் பின்னூட்டம் இங்கு நடக்கும் உரையாடல் பார்ப்பனர் தமிழ் என்ற விவாதமாக மாற வழி வகுத்துவிட்டது.//

இப்படி பேசியதை தூண்டியது இ.கொ வின் பின்னூட்டம் என்று இங்கே குமரன் கூட சொல்லியுள்ளார் அதற்கும் உங்களிடம் சரியான பதிலே இல்லை! :-))

எனக்கு பதில் சொல்வதை விட குமரன் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

ஏன் அதை தவிர்க்கிறீர்கள்!

பாரபட்சமான உங்கள் பார்வைக்கு இன்று நல்ல தீனி! :-))

இலவசக்கொத்தனார் said...

வவ்வாலு,

அதான் குமரனுக்கு நான் பதில் சொல்லியாச்சே. இன்னமும் சொல்லறேன் - இந்த அரசாங்கம் செய்யறதைக் கேள்வி கேட்டா உடனே வரும் டிபென்ஸ் அதுதான். இங்கேயும் சிலர் அதைத் தொட்டுட்டுப் போனாங்க. மத்த பதிவில் இன்னும் ஜாஸ்தியாவே இருக்கு. நான் முதல் கமெண்ட் போட்டதுனால இங்க வந்து அந்த டிபென்ஸ் வெச்சா நான் சொன்னது உண்மையாகிடும் இல்லையா? அதான் அடக்கி வாசிக்க வேண்டியதாப் போச்சு போல. அது சரி, அதுக்கும் நீங்க பேசறதுக்கும் என்ன சம்பந்தம்?

rv said...

Your Kind and Most Generous Highness,
If I may humbly suggest so - Forget the asides from these filthy, fickle and mortal souls, much unlike your most righteous self!

Meanwhile, If this may please Your Highness, it shall most certainly offer me a quantum of solace.

I trust, My Lord, that this will meet with your Lordship's approval!

வவ்வால் said...

இ.கொ,
நன்றி!

என்னைப்பார்த்து இன்னாருக்கு தோன்றியது போல அவரைப்போல "ஆக்கப்பூர்வமாக" உங்களுக்கு பேச தோன்றவில்லையே என்று என்னைக்கேட்டார் சுரேஷ், அதான் "ஆக்கப்பூர்வமாக" இங்கே யாருமே பேசமாட்டார்கள் என்ற உங்களின் தேவ வாக்குக்கு அவரின் கருத்தென்ன என்று அறியக்கேட்டேன் , பதிலே இதுவரைக்கும் அவரால் வைக்க முடியவில்லை.

அதையும் நான் கேட்டிருக்க மாட்டேன் அவருக்கு தோன்றியது போல உங்களுக்கு ஏன் ஞானோதயம் தோன்றவில்லை என்றதால் மட்டுமே கேட்டேன் :-))(என்னைக்கேட்பதற்கு முன்னர் கேட்கப்பட வேண்டியவர் நீங்கள் என்பதால்)

அதுவும் நீங்கள் குமரனுக்கு சொன்னது என்ன நீங்கள் அப்படி சொன்னதால் ஏதோ "சத்தம்" வரவில்லை என்று!

அப்போ உங்களுக்கு எதிர்க்காலத்தில் என்ன நடக்கும் என்று அறியும் ஆற்றல் இருக்கு, இப்படிலாம் பேசுவாங்க என்று வந்து முதல் பின்னூட்டமாக சொல்லிட்டு போவிங்க , தாங்கலை உங்க காமெடி :-))

இலவசக்கொத்தனார் said...

//அப்போ உங்களுக்கு எதிர்க்காலத்தில் என்ன நடக்கும் என்று அறியும் ஆற்றல் இருக்கு, இப்படிலாம் பேசுவாங்க என்று வந்து முதல் பின்னூட்டமாக சொல்லிட்டு போவிங்க , தாங்கலை உங்க காமெடி :-))//

முன்ன எல்லாம் இப்படி இல்லை. ஆனா இந்த தமிழ் வலைப்பதிவுகளில் வந்த பின் கிடைத்த ஆற்றல்தான் இது. எதைப் பத்தி பேசினா என்ன மாதிரி பதில் வரும் அப்படின்னு தெரியாதா..

அப்புறம் இம்புட்டு வருஷமா எழுதறேன். அது காமெடின்னு யாருமே ஒத்துக்கலை. ஆனா இப்படி ஒரு பின்னூட்டத்தின் மூலம் என் காமெடித் திறனை அறிந்து கொண்ட உங்கள் ஆற்றல் என்னை பிரமிக்க வைக்கிறது.

உங்களுக்காக நான் வழங்கும் பாடல்
இதோ

வவ்வால் said...

இ.கொ.
//முன்ன எல்லாம் இப்படி இல்லை. ஆனா இந்த தமிழ் வலைப்பதிவுகளில் வந்த பின் கிடைத்த ஆற்றல்தான் இது. எதைப் பத்தி பேசினா என்ன மாதிரி பதில் வரும் அப்படின்னு தெரியாதா..//

நீங்க பெரிய ஞான சித்தர் தான் ,இனிமே நானோ மற்றவர்களோ பதிவு போட்டாலும் வந்து எப்படி பின்னூட்டம் வரும்னு அருள்வாக்கு சொல்லிட்டு போங்க! :-))

ஆனாலும் நீங்க அருள்வாக்கு சொன்னப்பிறகும் சுரேஷ் ஆக்கப்பூர்வமாக பேசவில்லைனு என்னை ஏன் சொன்னார்னு தெரியலை, அவரே வந்து பதில் சொன்னா தான் உண்டு! :-))(ரொம்ப நேரமா இந்தக்கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லாமா எஸ்கேப்பாகிட்டே இருக்கார்)

ஏதோ பாட்டுலாம் போட்டுறிக்குங்க , என்னை விட உங்க அருள்வாக்கை மதிக்கமாக என்னை கேள்விக்கேட்ட சுரேஷ் அதை கேட்கட்டும்! அப்போவது உங்கள் மகிமை தெரியும் அவருக்கு :-))

இலவசக்கொத்தனார் said...

//நீங்க பெரிய ஞான சித்தர் தான் //

என்னதான் வேறு கருத்து இருந்தாலும் இப்படி என் மேல போலீஸ் கேஸ் வர அளவுக்கு காழ்ப்புணர்ச்சி தேவையா? :))

//,இனிமே நானோ மற்றவர்களோ பதிவு போட்டாலும் வந்து எப்படி பின்னூட்டம் வரும்னு அருள்வாக்கு சொல்லிட்டு போங்க! :-))//

அடடா, எங்க பின்னூட்ட நோட்ஸில் இப்படி ஒரு நோட்டீஸ் போட்டு கூட்டம் தேத்தலாம் என்ற பாயிண்ட் விட்டுப் போச்சே.

//ஆனாலும் நீங்க அருள்வாக்கு சொன்னப்பிறகும் சுரேஷ் ஆக்கப்பூர்வமாக பேசவில்லைனு என்னை ஏன் சொன்னார்னு தெரியலை, அவரே வந்து பதில் சொன்னா தான் உண்டு!//

அவருக்கு என்னையெல்லாம் விட உங்களை மாதிரி நண்பர்கள் மேல நம்பிக்கை போல!! அவரோட நம்பிக்கையைக் காப்பாத்தற மாதிரி கொஞ்சம் பேர் வந்து பேசி இருக்காங்களே!!

//அப்போவது உங்கள் மகிமை தெரியும் அவருக்கு//

இந்த முறை மட்டுமில்லை சாமி. பல தடவைகள் என் மகிமை அவருக்குத் தெரியும்படி செஞ்சாச்சு. அந்த பாட்டு உமக்குத்தான் அவருக்கு வேற பாட்டு எப்பவோ அனுப்பியாச்சு.

துளசி கோபால் said...

உடும்பும் வவ்வாலும் ஒண்ணா?
புடிச்சபுடியை விடாம இருக்கேன்னு பாக்கேன்:-))))))))


நோ இல் ஃபீலிங்ஸ் ப்ளீஸ்.

Anonymous said...

suresh and kothanar, dont waste ur time by replying to these creatures.

திவாண்ணா said...

இந்த பதிவில் என் பங்களிப்பு முடிந்துவிட்டது என்று எழுதினாலும் ஒரு கேள்வி மிகக் குறிப்பாக இருப்பதாலும் சுரேஷ் இடம் மன்னிப்பு கோரவும் இந்த பின்னூட்டம்.

@. குமரன்
//இந்த 35 வருட வாழ்க்கையில் சித்திரையில் துவங்கும் புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று தான் சொல்லியும் கேட்டும் வந்திருக்கிறேன். சித்திரைப் புத்தாண்டை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் அதனை இந்துப் புத்தாண்டு என்று கட்டமைக்கலாம். நீங்களே அப்படி செய்யலாமா?//

நம் இந்திய நாட்டில் அசோம், வங்காளம், ஒரிசா, மணிப்பூர், நேபால், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா ஆகிய இடங்களில் சூரிய நாட்கணக்கும், (சித்திரை ஒன்று) ஆந்திரம் உள்ளிட்ட பிற இடங்களில் சந்திரன் அடிப்படை யான நாட்கணக்கும் (யுகாதி) உள்ளன. தமிழகத்தில் தெலுங்கர்களும் ஒரு காலகட்டத்தில் பெருகிவிட்டதால் இருவரும் புத்தாண்டு கொண்டாடும் போது வேறுபாடு காட்ட தமிழ் புத்தாண்டு தெலுகு புத்தாண்டு என்று வழக்கில் வந்து இருக்கலாம்.
இந்திய சித்தாந்த காலகணக்கு தோன்றும்போது கிருத்துவமும் இல்லை, இஸ்லாமும் இல்லை. ஆகவே இந்து என்று சொல்ல வேண்டியும் இல்லை. பின்னால் கிருத்துவ , இஸ்லாம் காலக்கணக்கு தோன்றிய போது வேறுபடுத்திக்காட்ட இந்து என்று சொல்லி இருக்க வேண்டும்.

@சுரேஷ்
//என் பதிவு எழுப்பிய கேள்விகள் இதைப்பற்றியெல்லாம் இல்லையே? என் பதிவு முழுக்க முழுக்க எக்ஸிக்யூஷன் சம்மந்தப்பட்டது.. ....... போன்று யாருக்கும் தெரியாமல், ஆனால் "தமிழுக்கு" நான் இதைச் செய்தேன் என்று அரசியல் செய்ய உதவுவதைத்தவிர இந்த அறிவிப்பினால் யாருக்கு என்ன உபயோகம் என்ற கேள்விகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன//

சுரேஷ் இந்த பதிவில் கேள்விகள் அறிவியல் ரீதியாக திசை திரும்பியதில் என் பங்கும் உண்டு என்பதால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

தங்கள் கேள்விக்கு பதில்:
ஒரு உபயோகமும் இல்லை.

rv said...

புத்தாண்டில் நூறு கண்ட கொ.ப.செவுக்கு வாழ்த்தும் வணக்கங்களும்...

ஆங்கிலத்தோட தமிழ் புத்தாண்டும் சேர்ந்து வந்தது இரட்டிட்பு மகிழ்ச்சி! இன்று போல என்றும் தொடர்க என்று 'தமிழ்கடவுளர்'களை வணங்கி வேண்டுகிறேன்.

Anonymous said...

தமிழ்க் குத்தகைதாரர்களுக்கு, நானும் ஒரு குத்தகைதாரன் என்ற முறையில் ஆணையிடுகிறேன்: "ஆடி அறுபத்திரெண்டாம் தேதிதான் இனிமேல் தமிழ் புத்தாண்டு". ஹேப்பி நியூ இயர் டு எவ்ரிபடி

பினாத்தல் சுரேஷ் said...

//பதிலே இதுவரைக்கும் அவரால் வைக்க முடியவில்லை.//

என்ன பதில் உமக்கு வேண்டும்?

//அபத்தம் என்பதன் அளவுகோலில் பொதுவாக நகைச்சுவையும் சட்டையரும் சேராது.// என January 25, 2008 9:21 AM இல் சொல்லி இருக்கிறேன். அதற்கு நீங்கள் //அவர் அப்படி சொல்வதை நகைச்சுவை என்று சொல்கிறீர்கள்.// என்று January 25, 2008 6:18 PM இல் பதில் சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்குப்பிடித்தமானதோ இல்லையோ, அது பதில்தானே?

பின்னர் யாரும் சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில்,

//கொத்தனார் முதல் பின்னூட்டத்தில் கொடுத்த டெம்பிளேட், அப்படிப்பட்ட டெம்பிளேட் பின்னூட்டங்கள் வர ஒரு தடையாக இருந்தது :-) அதற்காக அவருக்கு நன்றி. கொத்தனாரின் பின்னூட்டத்தை வைத்தே அரசியல் செய்ய நினைக்கும், செய்துகொண்டிருக்கும் கலர்க்கண்ணாடிப்பார்வை அவர்கள் தளத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும், அவர்களுக்கும் பொழுதுபோகவேண்டாமா :-)//
என்று January 27, 2008 10:49 PM இல் சொன்னேன்.

இதையும் மீறி பதில் சொல்லவில்லை என்று எல்லா இடங்களிலும் போய்ப் புலம்புவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. உண்மையைச் சொல்கிறேன், உங்களுக்கு இருக்கும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை, சில்லறை விஷயங்களைத் தொடர்ந்து உடும்புப்பிடி பிடிக்க நிச்சயமாக எனக்குப் பொறுமை இல்லை.

கொத்தனாரின் முதல் பின்னூட்டம் பற்றிய என் கருத்து என் முந்தைய பின்னூட்டத்தில் உள்ளதுதான். இனியும் பதில் சொல்லவில்லை என்று புகார் செய்யும் மூணாங்கிளாஸ் மாணவன் போல எங்கும் போய் சொல்லாதீர்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

குமரன்,

//பதிவில் தையில் தொடங்கும் புத்தாண்டைப் பற்றி கேள்வி கேட்க வந்துவிட்டு சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை இந்துகளில் புத்தாண்டு என்பது போல் கட்டமைத்துவிட்டீர்கள். இந்த 35 வருட வாழ்க்கையில் சித்திரையில் துவங்கும் புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று தான் சொல்லியும் கேட்டும் வந்திருக்கிறேன். சித்திரைப் புத்தாண்டை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் அதனை இந்துப் புத்தாண்டு என்று கட்டமைக்கலாம். நீங்களே அப்படி செய்யலாமா? //

கட்டமைப்பது எல்லாம் பெரிய வார்த்தை குமரன். எனக்குத் தெரிந்த அளவில் புத்தாண்டு என்பது வாழ்த்துப் பரிமாற்றமும், இறைவழிபாடும்தான்.

வாழ்த்துப்பரிமாற்றம் என்பதற்கான ந்நாளை மாற்றும்போது அதனுடன் இணைந்த இறைவழிபாட்டுக்கு குந்தகம் வருகிறதே என்ற கேள்விதான் எழுப்பினேன். அதற்கும், என் இறைவழிபாட்டு லட்சணத்தைப் பற்றி டிஸ்கிஎல்லாம் போட்டுத்தான் எழுதினேன் :-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஓகை. திருவள்ளுவர் பிறந்த தினத்தையும் மாற்றிவிட்டார்கள் போல!

அனானி, என் முந்தைய பின்னூட்டம் ஓரளவு சம் அப் செய்திருக்கும் என நம்புகிறேன்.

வாய்யா ராம்ஸு.. என்ன ஓவர் அடக்கம்? பெடெக்ஸ் தோத்ததாலயா? அதென்ன மொழிப்பாட்டுய்யா? நல்லவேளை! எனக்கு ஓப்பனே ஆவலை. நம்ம ரத்தம் அதைக்கேட்டாலே சூடேறும்போல இருக்கே?

வாங்க துளசி அக்கா! கொண்டது விடா :-)

திவா, மன்னிப்பெல்லாம் சொல்லி கூச்சப்படுத்தாதீங்க :-) அந்த விவாதத்துல நான் ஏன் பங்கேற்கலைன்னுதான் விளக்கம் சொல்லி இருந்தேனே ஒழிய விவாதமே வேணாம்னு சொல்லலியே. அதற்கும் பதிவு சொல்லவரும் விஷயத்துக்கும்நேரடித் தொடர்பு இல்லை என்றுதான் சொன்னேன். நீங்களா என்னை முட்டாள்தினம் கொண்டாடச் சொன்னீர்கள்?

ராம்ஸு - தமிழ்க்கடவுளர் யாருன்னு ஒரு டிஸ்கி உடனடியாகப் போடச்சொல்லி ஆணையிடுகிறேன்.

அனானி, ஆடி அறுபத்திரெண்டா? போச்சுடா! இப்ப யாராச்சும் வந்து ஆடிக்கு அறுபத்திரெண்டு தேதி சேரன் முதுகுடுமிப்பெருவழலாதன் காலத்தில
இருந்துதுன்னு சொல்லப்போறாங்க!

வவ்வால் said...

சுரேஷ்,

ஓஹ் அது தான் பதிலா , பொங்கல்(சாப்பிடும் உணவுதான்) இருக்கானு கேட்டா புளியோதரை இருக்குனு சில உணவகங்களில் சொல்வாங்க அது போல பதில் சொல்லி சமாளிச்சிங்கனு சொல்லுங்க :-))(பினாத்தல்கள் என்றால் அதன் அர்த்தம் இப்போ தான் எனக்கு புரிஞ்சது)

உங்கள் தவறை குமரன் கூட சுட்டிகாட்டியாகிவிட்டது, எனவே அது எனக்கு மட்டும் தோன்ற ஒன்றல்ல. ஆனாலும் வழக்கமான வழுக்கல் பதில் தான்!

நான் 3 ஆம் வகுப்பு கூட படிக்கலையே என்னை ரொம்ப பெரிய படிப்பு படிக்க வச்சிட்டிங்க! :-))

நான் கேட்டது என்ன நீங்கள் சொன்னது என்ன ? சரி உங்கள் திட்டப்படி பரபரப்பு கிளப்பி குளிர் காய்ந்தாகிவிட்டது, மேற்கொண்டு எதுவும் உங்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

பல வலையுலக அருள் வாக்கு சித்தர்களின் ஆசிப்பெற்றவர் நீங்கள்! உங்கள் அளவுக்கு நான் பேச இயலுமா:-))இத்துடன் நான் ஜகா வாங்கிக்கிறேன் ...நீங்களே சிறந்த தமிழ் பக்தர்! :-))

இலவசக்கொத்தனார் said...

இப்போதான் இந்த மேட்டர் சம்பந்தப்பட்ட மத்த பதிவுகளில் ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தேன். கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலும் பதிவிலேயோ அல்லது பின்னூட்டங்களிலேயோ நான் போட்ட ரெம்பிளேற் பின்னூட்டங்கள் இருக்கின்றன!!

ஆனால் அது போன்று வந்த பின்னூட்டங்கள் பலவற்றையும் பெனாத்தல் ரிஜெக்ட் செய்தது எனக்குத் தெரியும். ஏனெறால் அவர் இந்த விவாதத்தினை நல்ல படியாக எடுத்துச் செல்ல விரும்பியதுதான் காரணம். பினாத்தல் மட்டுமல்ல, நானும் ரிஜக்ட் செய்திருக்கிறேன் - இப்பதிவுக்கு மட்டுறுத்த எனக்கும் உரிமை உள்ளதால்.

இது போன்ற பின்னூட்டங்களை தன் பதிவில் வெளியிட்டு அரிப்பைத்தீர்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு இங்கு வந்து பரபரப்பிற்குப் போடப்பட்ட பதிவு, முன்முடிவோடு போடப்பட்ட பதிவு, குளிர் காயும் பதிவு என்றெல்லாம் பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

ஏன், இவ்வளவு நீட்டி முழக்கும் நல்லவர்கள், புத்தாண்டு விஷயத்தை சுரேஷ் பயந்தது போலவும் (தமிழ் பற்றிய கேள்விகளுக்கு மேல் கேள்வி கேட்பது ஆகாது என்று) நான் ரெம்ப்ளேற் போட்டது மாதிரியும்தானே விஷயத்தை எடுத்துச் சென்றார்கள்? தமிழின துரோகிகளாம், நாங்கள் வெளியேறினால் எந்த பாதிப்பும் இல்லையாம்!

நீ சித்தர், நீ பக்தர் என்றெல்லாம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு இந்த மாதிரி கமெண்டுகளை எப்படி மாடரேட் பண்ண வேண்டும் என்று அருள் பாலிக்க எந்த சித்தர் வர வேண்டுமோ அதற்கு எந்த பக்தர் வேண்டுதல் விடுக்க வேண்டுமோ தெரியவில்லை.க்

Anonymous said...

கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலும் பதிவிலேயோ அல்லது பின்னூட்டங்களிலேயோ நான் போட்ட ரெம்பிளேற் பின்னூட்டங்கள் இருக்கின்றன

**

Mr.kothanar, Link pls, so that others can verify.

***
இது போன்ற பின்னூட்டங்களை தன் பதிவில் வெளியிட்டு அரிப்பைத்தீர்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு இங்கு வந்து பரபரப்பிற்குப் போடப்பட்ட பதிவு, முன்முடிவோடு போடப்பட்ட பதிவு, குளிர் காயும் பதிவு என்றெல்லாம் பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.
****

why dont you say..who did what..

**

நீ சித்தர், நீ பக்தர் என்றெல்லாம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு இந்த மாதிரி கமெண்டுகளை எப்படி மாடரேட் பண்ண வேண்டும் என்று அருள் பாலிக்க எந்த சித்தர் வர வேண்டுமோ அதற்கு எந்த பக்தர் வேண்டுதல் விடுக்க வேண்டுமோ தெரியவில்லை.க்
ditto...who, where..

இலவசக்கொத்தனார் said...

//Mr.kothanar, Link pls, so that others can verify.// - இது எல்லாம் எதோ நினைப்பில் இருந்து எழுதினது. ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது. வேணும்னா நீங்களும் கூகிளாண்டவரைக் கேட்டுப் பார்த்துக்குங்க. அது மட்டுமில்லாம அனானிக்கு எல்லாம் ஏன் சுட்டி தரணும்? இதுவே நீங்க தேவாங்கு, கங்காருன்னு பேரு வெச்சுக்கிட்டா அது வேற விஷயம்! அப்போ உங்களுக்கு பதில் தந்தே ஆக வேண்டிய கட்டாயம். அப்படித் தராமப் போனா நீங்களும் பதில் தரலைன்னு குதிக்கலாம், இதுவா பதில்னு வாந்தி எடுக்கலாம். ஆனா அனானியா இருந்துக்கிட்டு இதெல்லாம் செய்யலாமோ?!

//why dont you say..who did what..// - யார் யார் என்ன செஞ்சாங்கன்னு அவங்களுக்கே தெரியும். நீங்க இதுக்கெல்லாம் ரென்சனாகி ஏன் ஏன் ஏன், என்ன என்ன என்ன அப்படின்னு அவ்வையார் பாட்டு எல்லாம் பாடாதீங்க!

//ditto...who, where..// - டிட்டோ மேல சொன்னதுதான்

Anonymous said...

கொத்தனார், ஒரு சந்தேகம். ரெம்பிளேற், ரென்சனாகி - ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? டெம்ப்ளேட், டென்ஷன் என்று எழுதக் கூடாதா?

இலவசக்கொத்தனார் said...

அதுங்க அனானி, நமக்கு இந்த வட்டார வழக்குகள் மேல ஒரு காதல். தமிழை வேறு வேறு இடங்களில் எப்படிப் பேசறாங்க அப்படின்னு கவனிச்சு அதைப் பயன்படுத்தப் பிடிக்கும். (இப்படி எல்லாம் பயன்'படுத்தறது'னாலதான் தமிழ் துரோகின்னு சொல்லறாங்களான்னு கேட்கப்பிடாது!)

நெல்லை சீமையின் என்ன சொல்லுதீக எனக் கேட்கும் அழகா இருக்கட்டும். சென்னையின் சொல்ட்டு வண்ட்டியாவாக இருக்கட்டும். எல்லாமே ஒரு அழகுதான். நம்ம வலைப்பதிவுகளில் கூட நிறையா பேரு 'அவாள்' அப்படின்னு போட்டுட்டு சித்த வரேளா என எழுதும் முறை மேல் பெரும் காதலோடு இருப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

அது மாதிரி இது வந்து ஈழத்தில் பாவிக்கப்படும் ஒரு முறை.
இது பத்தி நிறையாப் பேசி இருக்கோம். ஒரு நடை இங்க போய் பாருங்களேன். (அப்பாடா சந்தடி சாக்கில் ஒரு போஸ்டர் ஒட்டியாச்சு!)

Anonymous said...

இலவசக்கொத்தனார் said...
//Mr.kothanar, Link pls, so that others can verify.// - இது எல்லாம் எதோ நினைப்பில் இருந்து எழுதினது. ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது.

**
No Proof..No case..

ஆனா அனானியா இருந்துக்கிட்டு இதெல்லாம் செய்யலாமோ?!

Enna saakku Nondi Saakku..

**

//why dont you say..who did what..// - யார் யார் என்ன செஞ்சாங்கன்னு அவங்களுக்கே தெரியும். நீங்க இதுக்கெல்லாம் ரென்சனாகி ஏன் ஏன் ஏன், என்ன என்ன என்ன அப்படின்னு அவ்வையார் பாட்டு எல்லாம் பாடாதீங்க!

//ditto...who, where..// - டிட்டோ மேல சொன்னதுதான்
***

If you are crying the comments, questions are bound to be asked. Else, you can chose to keep it private. I dont think the reason you chose not to answer is not because it was asked by anony and firmly believe, you threw mud on others to invite, pity of others on you. Oh what a pity..what a pity.. :-))))))))

***

Conclusion :
In the absence of the evidences, after due diligence, I dismiss your case. you can file a petition if you want to reopen the case.

வவ்வால் said...

இ.கொ,

இங்கே மீண்டும் பின்னூட்டம் போட வேண்டாம் என்று இருந்தேன், வர வைத்திட்டிங்க!(அதற்கு அப்புறம் இந்த பக்கம் வரவில்லை)



அப்புறம் பதில் சொல்லலைனா , கங்காரு, தேவாங்கு, உராங் உடான் எல்லாம் துணைக்கு அழைப்பிங்க :-))
(எல்லாம் உங்க சொந்தக்காரங்க போல)

எனக்கு தற்சமயம் அரிப்பு எதுவும் இல்லை, ஒரு வேளை ஏற்பட்டால் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன், தீர்த்து வையுங்கள்!

உங்களுக்கு தெளிவாக புரிய வைக்க சில வார்த்தைகள்,

1) எனதுப்பதிவில் மறு மொழி மட்டுறுத்தல் என்பதே எப்போதும் இல்லை.

2) ஒரு பதிவராக ஒருவர் பின்னூட்டம் போட்டு இருக்கிறார்( அனானியாக கூட இல்லை, உங்களுக்கு அதில் ஆட்சேபனை இருந்தால் அவர்ப்பதிவில் போய் உங்கள் கருத்தையும் சொல்லலாமே) அது அவரது கருத்தே, நான அதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை, அதனை சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை, அதில் யார் பெயரும் சுட்டப்பட்டு இல்லை. மேலும் யாரும் என்பதிவில் வந்து அதற்கு கண்டனம் சொல்லவும் இல்லை.பலப்பதிவுகளிலும் வந்த ஒன்று அது, நான் மட்டும் சிறப்பாக அதை வெளியிடவில்லை.என்பதிவில் எவ்வித கட்டுப்பாடும் யாருக்கும் இருக்காது என்பதால் அது அப்படியே வெளிவந்து அப்படியே இருக்கிறது.

நீங்கள் வேண்டும் எனில் என்னைக்கூட திட்டிப் பின்னூட்டம் இடலாம், என் மட்டுறுத்தலுக்காக அது காத்திராமல் உடனே தோன்றுவதையும் காணலாம்.



3) கருத்து சுதந்திரம், கட்டற்ற இணையம் என்று சொல்லிக்கொண்டு , எல்லாவற்றையும் தணிக்கை செய்ய விருப்பம் எனக்கு இல்லை. அதே சமயம் ஆட்சேபனை இருப்பதை நீக்குவதிலும் பிரச்சினை இல்லை.

4)வலைப்பதிவுகளில் என் அளவுக்கு சர்ச்சையாக(உண்மையை) பேசிக்கொண்டு , மட்டுறுத்தல் இல்லாமல் பதிவு வைத்திருப்பவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள், ஆனாலும் என்பதிவில் மிக மோசமான பின்னூட்டங்கள் வருவது வெகு அரிதே அல்லது வருவதே இல்லை எனலாம்.காரணம் என்னுடைய நேர்மையான , வெளிப்படையான பேச்சு!(இதை தற்பெருமை என்றும் நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்)

உங்களை என் அளவுக்கு வெளிப்படையாக கருத்து தெரிவிக்க கூட சொல்லவில்லை, ஒரே ஒரு நாள் மட்டுறுத்தல் இல்லாமல் இருந்து பாருங்கள் தெரியும்!

நீங்கள் சரியாகப்பேசுகிறீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு மட்டுறுத்தலே தேவைப்படாது!

5) என்னைப்பாராட்டி யாரும் பதிவுப்போட்டதில்லை என்னை திட்டிப்பதிவுகள் வந்திருக்கு, யாரோ ஒருவர் என்னைதாக்கிப்போட்ட பின்னூட்டத்தை எடுத்து அதையே பதிவாக போட்டு புளகாங்கிதம் அடைந்தவர்களும் இருக்காங்க!இப்படிக்கூட கேவலமாக செய்வார்களா என்றால் செய்கிறார்கள் இங்கே!

6) ஏன் இத்தனைக்கும் இதே பதிவில் பல அனாமதேயங்கள் ஏதேதோ சொல்லிப்பின்னூட்டங்கள் போட்டு இருக்கு(filthy, creatures etc ) இத்தனைக்கும் இங்கேலாம் மட்டுறுத்தல் இருக்கு, அவை எல்லாம் என்னை சொன்னதாக நான் குறைப்பட்டுக்கொண்டிருந்தால் அதற்கு மட்டும் தான் எனக்கு நேரம் இருக்கும்! :-))

7) ஒரு பத்தியில், அடைப்புக்குறிக்குள் சொன்னதை மட்டும் கணக்கில் வைத்து பதில் சொல்லிவிட்டு முக்கியமாக கேட்தற்கு பதில் சொல்லவில்லை எனில் எப்படி எடுத்துக்கொள்வது! நான் எதை சொல்கிறேன் என்பது புரியும்.

8)மட்டுறுத்தும் அதிகாரம் என்னிடமும் இருக்கு என்று ஒருவர் சொல்வார் எனில் , அவர் அப்பதிவுக்கும் பொறுப்பாகிறார், பின்னர் அவரே வந்து இங்கே யாரும் ஆக்கப்பூர்வமாக பேசமாட்டார்கள் என்றால் , அதன் பொருள் என்ன,

அ)பதிவு போடும் போதே முன் கூட்டிய தீர்மானம் இருந்து இருக்க வேண்டும்!

ஆ)பதிவர் சொன்னக்கருத்து மீது பதிவர்க்கே நம்பிக்கை இண்மை

இ)அனைத்து பதிவர்களும் ஒரு தலைப்பட்சமாக பேசுவார்கள்,உங்கள் இருவரை தவிர யாருக்கும் ஆக்கப்பூர்வமாக பேசத்தெரியாது என்று பொதுவாக மட்டப்படுத்துதல்!

ஈ)நான் சொல்வதை எதிர்த்து கூறினால் அது ஆக்கப்பூர்வமற்றது என்ற சர்வாதிகாரம்!

இப்படிலாம் கருத்து இருப்பின் இந்தப்பதிவு எதற்கு யாரும் ஆக்கப்பூர்வமாக பேச மாட்டார்கள் என்று தெரிந்த பின் ஏன் பதிவு போடவேண்டும்,அப்படியே போட்ட பின்னும் அதில் ஏன் அடுத்தவர்கள் பின்னூட்டம் அனுதிக்கனும், தடை செய்ய வழி இருக்கே.

முடிவு தெரிந்த பின் பரிட்சை ஏன் எழுதனும்? எப்படி இருந்தாலும் நீங்க தானே பாஸ்! :-))(கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே அப்புறம் என்ன **** இந்த பதிவு?)

இலவசக்கொத்தனார் said...

இ.கொ,

//இங்கே மீண்டும் பின்னூட்டம் போட வேண்டாம் என்று இருந்தேன், வர வைத்திட்டிங்க!(அதற்கு அப்புறம் இந்த பக்கம் வரவில்லை)//

சேம் ஹியர். நானும் வாயைத் திறக்க வேண்டாமுன்னுதான் இருந்தேன். ஆனா திறக்க வெச்சுட்டீங்களே!

//அப்புறம் பதில் சொல்லலைனா , கங்காரு, தேவாங்கு, உராங் உடான் எல்லாம் துணைக்கு அழைப்பிங்க :-))
(எல்லாம் உங்க சொந்தக்காரங்க போல)//
உங்களுக்கு பதில் - அதுவும் நீங்க விரும்பற பார்மட்லே (பிராக்கட் எல்லாம் இல்லாம) சொல்லாட்டி நீங்க எப்படி ரியாக்ட் செய்வீங்கன்றத செஞ்சே காமிச்சிட்டீங்களே! எல்லாம் நம்ம சொந்தக்காரங்களேதான் - இன்க்ளூடிங் வவ்வால்!

//உங்களுக்கு தெளிவாக புரிய வைக்க சில வார்த்தைகள்,

1) எனதுப்பதிவில் மறு மொழி மட்டுறுத்தல் என்பதே எப்போதும் இல்லை.//

மிக்க மகிழ்ச்சி. நல்ல விஷயம். நானும் அப்படித்தான் இருந்தேன். அப்படி இருந்த என்னை... அப்படின்னு வசனம் பேச வெச்சுட்டங்களேன்னு சொல்லறதைத் தவிர வேற என்னத்த சொல்ல!

//2) ஒரு பதிவராக ஒருவர் பின்னூட்டம் போட்டு இருக்கிறார்( அனானியாக கூட இல்லை, உங்களுக்கு அதில் ஆட்சேபனை இருந்தால் அவர்ப்பதிவில் போய் உங்கள் கருத்தையும் சொல்லலாமே) அது அவரது கருத்தே, நான அதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை, அதனை சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை, அதில் யார் பெயரும் சுட்டப்பட்டு இல்லை. மேலும் யாரும் என்பதிவில் வந்து அதற்கு கண்டனம் சொல்லவும் இல்லை.பலப்பதிவுகளிலும் வந்த ஒன்று அது, நான் மட்டும் சிறப்பாக அதை வெளியிடவில்லை.என்பதிவில் எவ்வித கட்டுப்பாடும் யாருக்கும் இருக்காது என்பதால் அது அப்படியே வெளிவந்து அப்படியே இருக்கிறது.நீங்கள் வேண்டும் எனில் என்னைக்கூட திட்டிப் பின்னூட்டம் இடலாம், என் மட்டுறுத்தலுக்காக அது காத்திராமல் உடனே தோன்றுவதையும் காணலாம்.//

காத்திராமல் உடனே தோன்றுவது - மறுமொழி மட்டுறுத்தாமல் இருப்பதன் இயல்பே அதான். அதை டெஸ்ட் பண்ணிப் பார்க்கும் அளவுக்கு இன்னும் முத்தவில்லை!! நான் சொன்னது எல்லாம் நான் போட்ட டெம்பிளேட் பின்னூட்டங்களால் அவ்வளவு நையாண்டியும் நக்கலும் செய்யப் பட்டாலும் கடைசியில் அந்த லெவல் பின்னூட்டங்கள்தானே மற்ற பதிவுகளில் வருகின்றன. அதைச் சொன்னதில் என்ன தப்பு என்றுதான். வெளியிடுங்கள், வெளியிடாமல் போங்கள் அது எல்லாம் உங்கள் அளவுகோலின்படி செய்து கொள்ளுங்கள். அப்படி பதிவு பதிவாகப் போய் பார்த்து இதை மாற்று அதை அழி எனச் சொல்ல எனக்கு நேரமில்லை. அதைப் பற்றி நான் கவலையும் படவில்லை.

//3) கருத்து சுதந்திரம், கட்டற்ற இணையம் என்று சொல்லிக்கொண்டு , எல்லாவற்றையும் தணிக்கை செய்ய விருப்பம் எனக்கு இல்லை. அதே சமயம் ஆட்சேபனை இருப்பதை நீக்குவதிலும் பிரச்சினை இல்லை.//

அதையேதான் நாங்களும் செய்கிறோம், டெம்ப்ளேட் படி வந்த பின்னூட்டங்களையும், அடுத்த பதிவரை (எனக்கு உகந்தவரோ, எதிரியோ) ஆபாசமாக அர்ச்சிக்கும் பின்னூட்டங்களை ரெண்டு நாள் வைத்து அழகு பார்த்து பின் நீக்காமல், முன் நீக்குகிறோம். அடுத்தவன் பதிவில் கழிவதுதான் கருத்து சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட கருத்து சுதந்திரத்துக்கு மட்டும் தணிக்கை தேவை என நினைக்கிறோம். ஆட்சேபணை உள்ளதை நீக்குவதில் பிரச்சினை இல்லாத நீங்கள் மட்டுறுத்தல் இருப்பதை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிப்பது நல்ல நகைமுரண். பதிவானதற்கு முன் நீக்குவது தணிக்கை, பதிவாகி பல்ர் படித்தபின் நீக்குவது கருத்து சுதந்திரம் - போன்ற லாஜிக்குகள் எனக்குப் புரிவதே இல்லை. தலைகீழாக நின்று கற்றுக் கொடுத்தால் கூட!

//4)வலைப்பதிவுகளில் என் அளவுக்கு சர்ச்சையாக(உண்மையை) பேசிக்கொண்டு , மட்டுறுத்தல் இல்லாமல் பதிவு வைத்திருப்பவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள், ஆனாலும் என்பதிவில் மிக மோசமான பின்னூட்டங்கள் வருவது வெகு அரிதே அல்லது வருவதே இல்லை எனலாம்.காரணம் என்னுடைய நேர்மையான , வெளிப்படையான பேச்சு!(இதை தற்பெருமை என்றும் நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்) உங்களை என் அளவுக்கு வெளிப்படையாக கருத்து தெரிவிக்க கூட சொல்லவில்லை, ஒரே ஒரு நாள் மட்டுறுத்தல் இல்லாமல் இருந்து பாருங்கள் தெரியும்!நீங்கள் சரியாகப்பேசுகிறீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு மட்டுறுத்தலே தேவைப்படாது!//

'வலைப்பதிவுகளில் என் அளவுக்கு சர்ச்சையாக(உண்மையை) பேசிக்கொண்டு ' என்பது போன்ற ஸ்டேட்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்ல எனத் தெரிவதே இல்லை. இண்டர்நெட்டைக் கண்டுபிடித்தது நாந்தான் என அல்கோர் சொல்வது போல் இருக்கிறது, அப்படியா எனக் கேட்டுக் கொண்டு போகவேண்டியதுதான். அப்படி இருப்பதற்கும் மட்டுறுத்தலுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட க்ரூபிற்குப் பிடிக்காத கருத்துக்களைச் சொன்னால் அந்த கருத்துக்களை எதிர்க்க வலுவின்றி, ஆயிரம் கெஸ்வொர்க் செய்து, ஜாதியை ஊகித்து, அதற்குச் சரியான தண்டனை இவன் பதிவில் கழிவதுதான் என்று நினைக்கும் நண்பர்கள் உங்களுக்கு இல்லை போலும். என்னைத் திட்டி நீங்கள் நாகரீகமான மொழியில் பின்னூட்டம் போட்டு, அது பினாத்தல்களிலோ, இலவசத்திலோ மட்டுறுத்தல் செய்யப்பட்டிருக்கிறதா? ஏன் இந்தப்பதிவில் எத்தனையோ பேர் ஆடாத ஆட்டமா? அவை மட்டுறுத்தப்படிருக்கின்றனவா?

உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால், நாங்கள் பேசி இருக்கும் சில கருத்துக்களை, நீங்களும் பேசினால் அந்தப் பதிவில் இருந்து நீங்களும் மட்டுறுத்த வேண்டியதுதான். அதைச் செய்யாததினால்தான் இதுவரை நல்ல படியாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவில் வந்திருக்கும் பின்னூட்டத்தின் கருத்துக்களை விடுங்கள் - அவை வேறு பதிவர்களை ஜாதி சொல்லித் திட்டுவது கூடத் தெரியாமல் அவற்றை அனுமதிக்கும் / அல்லது வெளிவந்தும் நீக்காமல் நீங்கள் இருக்கும்வரையில், உங்களுக்கு ஏன் ஆபாசப் பின்னூட்டம் வரப்போகிறது? அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படப்போகிறீர்கள்? ஒரு குவிஸ் போட்டிக்குக் கூட குவிந்த ஆபாசப்பின்னூட்டங்களை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் - பார்த்திருந்தால் நேர்மைக்கும் ஆபாசப்பின்னூட்டத்துக்கும் சம்மந்தம் இருக்கிறது என்று நீங்கள் நினைத்திருக்கமாட்டீர்கள்.

மறுமொழி மட்டுறுத்தல் இல்லாமல் இருந்து நாங்கள் ஏன் பார்க்கவேண்டும்? அதான் எல்லாப்பின்னூட்டங்களும் எங்கள் பெட்டிக்கு வருகின்றதே! மறுமொழி மட்டுறுத்தல் இல்லையெனில் எல்லாரும் பார்ப்பார்கள், இருந்தால் நாங்கள் மட்டும் பார்ப்போம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றில்லாமல் இருக்கிறோம். அவ்வளவுதான்.


//5) என்னைப்பாராட்டி யாரும் பதிவுப்போட்டதில்லை என்னை திட்டிப்பதிவுகள் வந்திருக்கு, யாரோ ஒருவர் என்னைதாக்கிப்போட்ட பின்னூட்டத்தை எடுத்து அதையே பதிவாக போட்டு புளகாங்கிதம் அடைந்தவர்களும் இருக்காங்க!இப்படிக்கூட கேவலமாக செய்வார்களா என்றால் செய்கிறார்கள் இங்கே!//

இன்று வந்திருக்கும் பதிவுகளைப் பாருங்கள். எனக்கு வந்த சிரிப்பு உங்களுக்கும் வரலாம். ஆனால் இதெல்லாம் ஒரு மேட்டரா சொல்லறது நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு!! நீங்க கொஞ்சம் புதுசா அதான் சொல்லறீங்க. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா நம்மளைத் திட்டி யாருமே பதிவு போடலையே நம்ம மார்கெட் போச்சான்னு நண்பர்களோட சிரிச்சுப் பேசும் லெவலுக்கு வந்திடுவீங்க.

//6) ஏன் இத்தனைக்கும் இதே பதிவில் பல அனாமதேயங்கள் ஏதேதோ சொல்லிப்பின்னூட்டங்கள் போட்டு இருக்கு(filthy, creatures etc ) இத்தனைக்கும் இங்கேலாம் மட்டுறுத்தல் இருக்கு, அவை எல்லாம் என்னை சொன்னதாக நான் குறைப்பட்டுக்கொண்டிருந்தால் அதற்கு மட்டும் தான் எனக்கு நேரம் இருக்கும்! :-))//

ஆமாம். உலகமே தான் ஒருவரைப்பற்றி மட்டும்தான் நினைக்கிறது என்ற நினைப்பு ஒரு வித மனவியாதிதான். அது உங்களுக்கு இல்லை என நீங்கள் சொல்வதில் மகிழ்ச்சி.

//7) ஒரு பத்தியில், அடைப்புக்குறிக்குள் சொன்னதை மட்டும் கணக்கில் வைத்து பதில் சொல்லிவிட்டு முக்கியமாக கேட்தற்கு பதில் சொல்லவில்லை எனில் எப்படி எடுத்துக்கொள்வது! நான் எதை சொல்கிறேன் என்பது புரியும்.//

உங்களுக்குப் பதில் என்பது நீங்கள் நினைப்பது மட்டும்தான், அடைப்புக்குறியில் எல்லாம் சொன்னால் அதைச் சாய்ஸில் விட்டு, சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மாட்டீர்கள்! இதுதான் எனக்குப் புரிந்தது! புரிந்ததுன்னு சொல்லிட்டேன். புரிந்த மாதிரி இருக்குன்னு சொல்லி இருக்கணுமோ.

//8)மட்டுறுத்தும் அதிகாரம் என்னிடமும் இருக்கு என்று ஒருவர் சொல்வார் எனில் , அவர் அப்பதிவுக்கும் பொறுப்பாகிறார், பின்னர் அவரே வந்து இங்கே யாரும் ஆக்கப்பூர்வமாக பேசமாட்டார்கள் என்றால் , அதன் பொருள் என்ன,

அ)பதிவு போடும் போதே முன் கூட்டிய தீர்மானம் இருந்து இருக்க வேண்டும்!//

என்ன முன்கூட்டிய தீர்மானம்? பதிவரே இப்படி எழுதி இருக்கிறார்:

தமிழ் பேரைச் சொன்னால் மேல்கேள்வி கேட்கக்கூடாது, இந்துமத சடங்குகள் அசிங்கமானவை - அவற்றைக் கொண்டாடுவது தமிழனுக்கு இழுக்கு -- என்றெல்லாம் பலர் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன்

இது தீர்மானம் இல்லை - அனுபவம்! ஏன் இதே பதிவில் நாங்கள் நிராகரித்த பின்னூட்டங்கள் வேறு இடங்களில் - இங்கு நிராகரிக்கப்பட்டது என்று சொல்லியே வெளியாகி இருக்கிறது.


//ஆ)பதிவர் சொன்னக்கருத்து மீது பதிவர்க்கே நம்பிக்கை இண்மை//

கருத்தில் நம்பிக்கை இல்லாமல் பிடித்துக்கொண்டு தொங்கியாவது பதிவோ பின்னூட்டமோ போடவேண்டும் என்ற போபியா பினாத்தல் சுரேஷுக்கு இருப்பதாக நான் நம்பவில்லை.

//இ)அனைத்து பதிவர்களும் ஒரு தலைப்பட்சமாக பேசுவார்கள்,உங்கள் இருவரை தவிர யாருக்கும் ஆக்கப்பூர்வமாக பேசத்தெரியாது என்று பொதுவாக மட்டப்படுத்துதல்!//

அனைத்துப்பதிவர்களும் அப்படிப் பேசுவார்கள் என நான் நினைத்திருந்தால் என் பின்னூட்டத்தில் ஆல் த பெஸ்ட் சொல்லி இருக்க மாட்டேன். ஆனால் அப்படிப் பேச ஒரு க்ரூப் இருக்கிறது. அது இங்கேயே சுத்தி சுத்தி வரும் எனத் தெரியும் என்பதால் அப்படிச் சொன்னேன்.

//ஈ)நான் சொல்வதை எதிர்த்து கூறினால் அது ஆக்கப்பூர்வமற்றது என்ற சர்வாதிகாரம்!//

மாற்றுக் கருத்து சொல்ல வேண்டும் என்ற ஒன்றையே பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும் என இருக்கிறீர்கள். நான் என்ன சொன்னேன்? எதிர்த்து கருத்து சொல்லக் கூடாது என்றா சொன்னேன்? இந்த மேட்டருக்கு இப்படித்தான் பதில் வருமே தவிர ஆக்கபூர்வமாக வராது, அதுவும் இந்த பதிவைப் போட்டது பெனாத்தல் என்பதால் என்றுதானே சொன்னேன். ஆனால் முத்துக்குமரன் போன்ற நண்பர்கள் வந்து பல மாற்றுக்கருத்துக்களை சொன்ன பொழுது அவை ஆக்கபூர்வமானது என்று சொல்லி, சுரேஷ் தன் நிலையை மாற்றிக்கொண்டிருக்கும் பொழுது சர்வாதிகாரம் எங்கே இருக்கிறது?

//இப்படிலாம் கருத்து இருப்பின் இந்தப்பதிவு எதற்கு யாரும் ஆக்கப்பூர்வமாக பேச மாட்டார்கள் என்று தெரிந்த பின் ஏன் பதிவு போடவேண்டும்,அப்படியே போட்ட பின்னும் அதில் ஏன் அடுத்தவர்கள் பின்னூட்டம் அனுதிக்கனும், தடை செய்ய வழி இருக்கே. முடிவு தெரிந்த பின் பரிட்சை ஏன் எழுதனும்? எப்படி இருந்தாலும் நீங்க தானே பாஸ்! :-))(கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே அப்புறம் என்ன **** இந்த பதிவு?) //

பதிவு போட்டது சுரேஷ். ஆக்கபூர்வமாக கருத்து வராது எனச் சொன்னது நான். நான் சொன்னது போன்ற ரெம்பிளேற் பின்னூட்டங்கள், அல்லது அக்கருத்தைக் கொண்ட பின்னூட்டங்கள் வந்த பொழுது மட்டுறுத்தியதி நாங்கள். நல்ல விஷயங்கள் அடுத்தவர் சொல்லும் பொழுது அதனை வெளியிட்டதும், அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டதும் சரியாகத்தானே நடந்திருக்கிறது. இதில் என்ன பரிட்சை என்ன முடிவு? அதாவது எதோ சொல்லணும். ஒருத்தன் ஒண்ணு சொன்னா உடனே அதை மறுத்து சொல்லணும் என்ற ஆர்வம் என்ன சொல்கிறோம் எனப் பார்ப்பதில் இல்லையே. இதில் என்னமோ ஃபில் அப் தி பிளாங்க்ஸ் பின்னூட்டம் வேற. சிரிப்புதான் வருது. இனிமே பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணறதா இல்லை. அதனால இந்த அரைகுறை லாஜிக் எல்லாம் வெச்சுக்கிட்டு ரெண்டு பக்கம் பின்னூட்டம் போட்டா நான் வந்து வரிக்கு வரி பதில் சொல்லறதா இல்லை. வேற ஒரு இடத்தில் வேற டாபிக்கில் பேசலாம்.

Anonymous said...

வவ்வால் போன்ற பதிவர்களுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்லும் வாய்ச்சொல் வீரர்களுக்கு பதிலளிப்பதில் எந்த பயனும் விளைவதில்லை. என்ன செய்வது ஆண்டவன் படைப்பில் சிலபேருக்கு "போடா ஜாட்டான்" போன்ற பதில்கள்தான் புரிகின்றன!
:-))))))))

Anonymous said...

//கேட்க அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்பது பொறுப்பின்மையின் வெளிப்பாடு//

அடேங்கப்பா, என்ன ஒரு பொறுப்பு! அப்போ அம்மா போட்ட அல்லா உத்தரவும் க்ரீக்கட்டா

Anonymous said...

இப்போது நடப்பது துக்ளக் ஆட்சி (சோ துக்ளக் இல்லீங்கோ - முகம்மது பின் துக்ளக்!). மக்களுக்கு உபயோகமா எதுவுமே செய்யக்கூடாதுன்னு சபதம் செய்தவர்கள் செய்யும் ஆட்சி. இன்னும் என்னென்ன காமெடியெல்லாம் பார்கணுமோ!
இதெல்லாம் 'லாஜிக் இல்லா மேஜிக்'. தமிழ் வியாபாரம் - இப்போ ராமதாஸு என்ன செய்வாரூ?? கொஞ்ச நாளா அவிங்க தான் தமிழு, தமிழுன்னு கொதிச்சுகினு இருந்தானுங்க. பாத்தார் மஞ்சதுண்டாரு - என்னாங்கடா என் ரூட்லுயே அடிக்கிறீங்களேன்னு - விடுவாரா நம்மாளு - செத்தவங்கோ சொன்னாங்கோ (மறைமலை); கனவுலே சொன்னாங்கோன்னு திடீருன்னு அம்னீசியா குணமாகி புரச்சி செஞ்சாரு. அடிச்சேம்பாரு சிக்ஸரு. தமிழகம் இனி நல்லா முன்னேரும். உங்க புள்ளமாருங்கோ எல்லாம் இனிமே தமிழாண்டா மட்டுமே யூஜ் பண்ணி, விஞ்ஞானத்த பொரட்டி போடுவாங்கோ! இத்த போய் பெரிய விஷயமா பாத்துகினு.

Anonymous said...

கறவம் என ஆரம்பித்து மாதங்களை தமிழில் கூறியுள்ளார்கள். ஆனால், கும்பம், கன்னி, என்பதின் வேர்ச் சொல்கள், சமஸ்கிருத சொற்க்களே. அப்படி எனில், அவற்றின் தமிழ் பெயர்கள் யாவை?

திருவள்ளுவர் ஆண்டு இருக்கிறது என்கிறார்கள்? அப்படியானால் திருவள்ளுவர் மாதங்கள் யாவை? அல்லது மேலே சொன்னாற்போல சித்திரை, வைகாசி....யின் தமிழ் படுத்திய மாதங்கள் தானா?

கல்த்தேன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடியாயிற்றே, நம் தமிழ்குடி. அப்படியானால், திருவள்ளுவருக்குமுன் கடைபிடித்த தமிழ் ஆண்டுகளும், மாதங்களின் கணக்கும் என்ன? யார் கூறுவார்கள். பிற்காலத்தில் அவை ஏன் வழக்கொழிந்தன?

நல்ல பண்பட்ட தமிழ் புலவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவித்து, முன்பிருந்ததை நடைமுறைப் படுத்தவில்லை.

நாம் அறிந்த வரலாற்றிலும், வரலாற்றின் மூலம் தெரிந்த வரலாற்றிலும், எங்குமே இதற்கான அடக்குமுறை இருந்ததாக எந்த புலவரும் எஙுகுமே சுட்ட வில்லையே? ஏன்?

அன்றய புலவர்களுக்குத் தெரியாததது இன்ற்ய புலவர்களுக்கு மட்டும் எவ்வாறு தெரிந்தது.

 

blogger templates | Make Money Online