Nov 14, 2008

கருவி - சிறுகதை (14 நவ08)

சட்டக்கல்லூரி சம்பவங்களை நினைவுபடுத்தும் இந்தச் சிறுகதையின் நிகழ்வுகள் (சில இட்டு நிரப்பல்கள் தவிர்த்து) உண்மையில் நடந்தவை - 1988-89ல்.

கருவி

விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்கி உள்ளே நடந்தேன்.

"வாணியம்பாடி, திருப்பத்தூர்" என்று கூவிக்கொண்டிருந்த கண்டக்டர் என்னைப்பார்த்ததும் முகம் மாறினான்.

"நீ சரவணன் இல்லே?"

பத்து வருடம் கழிந்தாலும் என்னை நினைவு வைத்திருக்கிறான். நான் செய்த காரியத்துக்கு அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன..

"கலாட்டா பண்ணாம இருக்கறதுன்னா வண்டிக்குள்ளே ஏறு. ஏறுமாறா நடந்தேன்னா இறக்கி வுட்டுறுவேன்"

முன்னெல்லாம் என்னைப் பார்த்தாலே பயந்துவிடுவான். பதிலேதும் பேசாமல் ஒரு ஓர சீட்டைப் பார்த்து அமர்ந்தேன்.

பஸ் வேகமெடுக்க அதிகாலைக் குளிர் காற்று முகத்தில் அறைந்தது. கொஞ்ச நேர ஓட்டத்திலேயே பஸ் நிறைந்துவிட்டிருந்தது. அதே காலை நேரம், பஸ் முழுவதும் எஞ்சினியரிங் மாணவர்கள் மினிட்ராப்ட் துருத்திய பைகளுடன் கதை அடிக்கும் சத்தம், முன்சீட்டுப் பெரிசுடன் அந்தக்கால கதை பேசிக்கொண்டு டிரைவர்.. எதுவுமே பெரிதாக மாறிவிடவில்லை.

இரண்டு பயணிகளை ஏற்ற விண்ணமங்கலம் புளியமரத்தில் வண்டி நிற்க, மரத்தில் கிறுக்கல் - கீதா ஐ லவ் யூ - மறக்கத் துடித்திருக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டது...

_____________________________________________________________

"சரவணன், சுவற்றில் ஆபாசமாக எழுதியது நீங்கள்தானே?" பிரின்ஸிபாலின் கோபம் அவருடைய செயற்கையான மரியாதையில் தெரிந்தது.

அவர் அலுவலகத்தின் ஒரு மூலையில் நான் நிற்க, அவரின் எதிர் சீட்டுகளில் மெக்கானிகல் கணேஷ், பிஸிக்ஸ் தேவசகாயம், சரளா (வேண்டுமென்றே கணேஷை விட்டு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்திருந்தாள்) தவிர கம்ப்யூட்டர் ராஜாவும் இருந்தான்.

"எனக்கு நல்லாத் தெரியும் - அது உன் கையெழுத்துதான்" கணேஷ்

"ஏண்டா என்னைப்பத்தி இவ்வளவு கேவலமா எழுதினே" சரளா கண்ணில் கண்ணீர்.

நான் ராஜாவைப்பார்த்தேன். மிக நுணுக்கமாக தலையை ஆட்டியதைப் புரிந்து கொண்டேன்.

"நான் எழுதலே சார். என்னைப்போலவே வேற எவனோ எழுதியிருக்கான்"

"உங்களைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்"

"ஒரு அப்பாவியை அநியாயமாக சஸ்பெண்ட் செய்தீர்களானால் ஸ்டிரைக் வெடிக்கும் சார்"

"பயமுறுத்துகிறாயா?"

"இல்லை சார், நம்ம கிட்டே சாலிட் ப்ரூப் இல்லை..இப்போ இந்த மாதிரி ஆக்-ஷன் எடுத்தா பிரச்சினை ஆயிடும்" ராஜா சாதாரண ஆசிரியர்தான். ஆனாலும் கரெஸ்பாண்டெண்ட்டின் தம்பி மகன்.

வெளியே ஆவலுடன் காத்திருந்தார்கள் நண்பர்கள்.

"என்ன ஆச்சு தலைவா?"

"முதல்லே சிகரெட்டைக்கொடு"

கொஞ்சம் தூள் கசக்கிப் புகைத்தபின்தான் சற்றுப்பதட்டம் குறைந்தது.

"சொட்டைத்தலையன் சஸ்பெண்டுன்னு ஒத்தைக்கால்லே நின்னான்.. ராஜா சார் நம்ம பக்கம் பேசின உடனே சொட்டைக்கு முகமே தொங்கிப்போச்சு."

செல்வின் ஓடிவந்தான்.

"ராஜா சார் சாயங்காலம் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாரு."

"சரி போயிடறேன்..ராத்திரி கச்சேரி எங்கே?"

"உமாஷங்கர் வீட்டுலே எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. சரக்கு என்னுது, சால்னா பழனி"

_____________________________________________________________

மாலை வீட்டில் ராஜா கோபமாக இருந்தான்.

'என்னடா.. வேற ஆளை விட்டு எழுத மாட்டியா? உன் கையெழுத்து அது-இதுன்றான் கணேஷ்"

"அவசரத்துக்கு வேற யாரும் கிடைக்கலே சார்"

"நேத்து பெரியப்பா வந்திருந்தார். நெல்லு மண்டியாருக்கு கரெஸ்பாண்டெண்ட் ஆவணுமாம். மில்லுக்காரர் அவருக்கு சப்போர்ட்டாம்"

"பத்திரிக்கையிலிருந்து வராங்கன்னு சொன்னீங்களே"

"நாளைக்கோ நாளை மறுநாளோதான் வருவாங்க. சீக்கிரமா இந்த பிரின்ஸிக்கும் கணேஷுக்கும் ஒரு வழி பண்ணியாவணும்"

"பத்திரிக்கைல வர்றத வச்சு என்ன சார் பண்ண முடியும்?"

"முட்டாள் மாதிரி பேசாதே - நம்ம வார்த்தைய வச்சு மட்டும் அவனுங்களை தூக்க முடியாது. நெல்லு மண்டியார் கேக்க மாட்டார். பத்திரிக்கையிலே ஸ்ட்ராங்கா வந்துச்சுன்னா அத்தனை பார்ட்னருங்களுக்கும் வேற வழி இருக்காது. இப்போ மட்டும் சும்மா விட்டா, பிரின்ஸியும் கணேஷும் சேர்ந்து நம்ம எல்லாரையும் காலி பண்ணிடுவானுங்க"

_____________________________________________________________

பஸ் நிறுத்தம் வரை சென்று திரும்புவதைவிட கொஞ்ச முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம். ராஜா வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தச் சொல்லலாம்.

"உனக்காக நிறுத்த எல்லாம் முடியாது. வேணுமுன்னா ஸ்லோவா ஓட்டச்சொல்லறேன்.. நீதான் ரன்னிங்லேயே இறங்குவியே.. பத்து வருஷத்துலே மறந்து போச்சா"

பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்ததில், இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது.

ராஜா வீட்டின் முன்புறம் மாறிவிட்டிருந்தது. தாழ்வாகப் போடப்பட்ட ஓலைக்கூரை உள்ளே இருந்த பகட்டை மறைத்து எளிமையாகக் காட்டிக்கொண்டிருந்தது. வாசலில் நாலைந்து கரை வேட்டிகள்.

"யாரு வேணும்"

"அவரோட பழைய ஸ்டூடண்ட், சரவணன்னு"

"நீதானா அது? கரஸ்பாண்டெண்ட் அய்யாகிட்டே சொல்லறேன்"

சரிதான், மறுபடியும் அதிகாரம் கைமாறிவிட்டதா.

ராஜா பெருத்துப் போயிருந்தான். முழு அரசியல்வாதியாக ஆகிவிட்டான் என்பது வெள்ளை சட்டையிலும், பகட்டுச் சங்கிலியிலும் தெரிந்தது. தூக்கக்குறைவும், நேற்றைய போதையின் மிச்சமும் கண்களில் சிவப்பாகத் தெரிந்தது,

"வாடா வா.. இவன் யாரு தெரியுதா அறிவழகன், சரவணன்! இவன் துணை மட்டும் இல்லாட்டா நான் வாத்தியாராவே ரிட்டயர் ஆயிருப்பேன்."

"பெரிய ஆளாயிட்டே ராஜா.. என்னை ஞாபகம் கூட வச்சிருக்கியே"

"அறிவழகன் கொஞ்சம் வெளியே இருங்க" என்றான் ராஜா நான் ஒருமைக்கு மாறிவிட்டதைக்கண்டு.

"கதவு திறந்தே இருக்கட்டும்" என்றேன் அறிவழகனிடம்.

"உன் கோபம் எனக்குப் புரியுது.. நான் ஒன்னும் பண்ண முடியாத நிலைமையிலே இருந்தேன் சரவணா.. நீ பண்ண வேலை அப்படி"

"யாருக்காக செஞ்சேன்?"

"எனக்காகதான் செஞ்சே, நான் இல்லேங்கலியே, ஆனா அன்னிக்கு நான் உனக்கு உதவி செய்ய வந்திருந்தேன்னா அன்னிக்கே என்னை கட்டம் கட்டியிருப்பாங்க. எழுந்திருச்சிருக்கவே முடியாது. எல்லார்கிட்டேயும் உனக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாதுன்னு சொல்லிகிட்டே வக்கீல் வைக்க முடியுமா நீயே சொல்லு!"

"அதுவும் இல்லாம என் உபயோகமும் முடிஞ்சு போச்சு - இல்லையா?"

"என்ன பேச்சு பேசறே நீ? நீ மட்டும் நான் சொன்னதையா செஞ்சே? யோசிச்சுப் பாரு?"

யோசித்துப் பார்த்தேன்..

_____________________________________________________________

"நீதி கேட்டுப் போராட்டம்" "உண்ணாவிரதம்" "மாணவரை மதியாத முதல்வர் ஒழிக" பலவிதமான தட்டிகள் நடுவே உட்கார்ந்திருந்தேன்.

"தலைவா.. போர்வாள் பத்திரிக்கையிலே உன் போட்டோ வந்திருக்கு பாத்தியா?"

"முதல்வர் ஊழல், தட்டிக்கேட்ட மாணவன் டிஸ்மிஸ்" என்று அட்டையிலேயே என் புகைப்படம் போட்டிருந்தார்கள்.

"செமெஸ்டர் எக்ஸாம் வேற வருது தலைவா..ஸ்டுடெண்டுங்கள ரொம்ப அடக்கி வைக்க முடியாது"

"இன்னும் ரெண்டு மூணு நாளில எல்லாம் மாறிடும், நிறுத்திடலாம், தலைவன்றீங்க.. நான் சொல்ற பேச்சை மீறி நடப்பீங்களா?" புகழ் போதை என் தலைக்கு ஏறிவிட்டிருந்தது.

எதிர்பார்த்ததற்கு நேர் எதிராக எல்லாம் நடந்து கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ராஜாவைச் சந்திக்கும்வரை.

"நூறு ஸீட்டுடா.. எல்லாம் போச்சு! அவனுங்க செய்யறதைத்தான் செய்துகிட்டிருக்காங்க. உன்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. ஆடறாங்கடா.. ஸ்டிரைக்கும் பிசுபிசுத்துப் போச்சு.. பத்திரிக்கையிலே வந்ததுக்கும் ஒரு எபெக்டும் இல்லே.." கோபமாகப் புலம்பினான் ராஜா.

"இப்போ என்னதான் சார் செய்ய?"

"போராட்டத்தை நிறுத்திடு. அடுத்த வாரம் எக்ஸாம் ஆரம்பிக்குது, நீ எழுதறதுக்குப்போ"

"என்னைத்தான் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே..எக்ஸாம் ஹாலுக்கு உள்ள விட மாட்டாங்களே"

"அதுதானேடா திட்டமே" விளக்கினான் ராஜா.

பரீட்சை அன்று காலையிலிருந்தே பதட்டம் அதிகமாக இருந்தது. ஏற்றிய சரக்கு உதவவில்லை. நாலைந்து பாக்கெட் தூளைக் கசக்கிப் புகைத்தும் பயனில்லை.

பரீட்சை அறைக்குள் கணேஷ் வினாத்தாள்களை வினியோகித்துக்கொண்டிருந்தான்.

"டேய் கணேஷ் பாடு, என் சீட்டு எங்கேடா"

"சரவணன் - கெட் அவுட் ஆப் ஹியர்.. பரீட்சை நடக்கிறது..கலாட்டா பண்ணாதே"

"எனக்குக் கொடுடா கொஸ்டின் பேப்பர்" என்று அவன் கையிலிருந்து பேப்பர்களைப் பிடுங்கினேன். அவன் கையை உதறிய வேகத்திலும் ஏறியிருந்த போதையிலும் சடாலென கீழே விழுந்தேன்.

பாக்கெட்டிலிருந்த புட்டியும் விழுந்ததில் உடைந்து நாற்றமெடுக்க, அமைதியாக இருந்த மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, தேர்வுக் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

வெறியும் கோபமும் தலைக்கேற, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன்..

_____________________________________________________________

"கணேஷ் வாத்தியாரின் வீடு இந்தச் சந்துதானே" வேகமாக வந்ததில் மூச்சு இறைக்கக் கேட்டேன்.

"அவர் போயி பத்து வருசமாச்சேப்பா - அவங்க சம்சாரமும் குழந்தையும் அந்த மூணாவது வீட்டுலே இருக்காங்க"

மூன்றாவது வீட்டு வாசலில் கில்லி ஆடிக்கொண்டிருந்தான் அவர் மகன்..பெரியவனாகிவிட்டிருந்தான். எத்தனை முறை இவனை கணேஷின் டிவிஎஸ் 50ன் முன்னால் நிற்கப் பார்த்திருப்பேன். சட்டை இல்லை, கிழிந்த டிரௌசர்..என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கதவைத் தட்ட வெளியே வந்த கணேஷின் மனைவி ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.. நான் இங்கேயே வருவேன் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சி.. "இன்னும் யாரைக்கொல்ல இங்கே வந்திருக்கே? உனக்கு வெறி இன்னுமா அடங்கலே" ஆத்திரமும் அழுகையும் சேர்ந்திருந்தது ..

"நான் செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்புத்தான்.. பத்து வருஷம் இல்லே.. நூறு வருஷம் ஜெயில்லே இருந்தாலும் அது பத்தாத தண்டனைதான்."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தெருவில் சுமோவின் பிரேக் கிறீச்சிட்டது. தபதபவென்று ஆட்கள் இறங்கி ஓடிவரும் சப்தம்..

"பிடிடா அவனை..எவ்வளவு கொழுப்பிருந்தா வீடு புகுந்து ராஜா சாரைக் கொன்னுட்டு தப்பிச்சு ஓடப் பார்ப்பே?" அவர்கள்தான்.. என்னைத் துரத்தி வந்தவர்கள்தான்..

சரமாரியான அடிகள் என்மேல் விழ..

வலிக்கவில்லை

_____________________________________________________________

21 பின்னூட்டங்கள்:

Radha Sriram said...

நல்லா வந்திருக்கு கதை.......மேல என்ன சொல்றதுன்னு தெரியல.:)அரசியல்னாலே நாகரீகம் இல்லாததுன்னும் மாணவர்கள தவறான பாதைக்கு எடுத்து செல்லுமொரு கருவி ஆயிடுச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்கு.

Sridhar V said...

பாலகுமாரனின் ஒரு நாவல் என்று நினைக்கிறேன். பெயர் ஞாபகமில்லை. 'சித்திரைப் பாண்டி' என்ற மாணவனின் கதை. அதுவும் கல்லூரி மற்றும் கல்லூரியின் சாதி அரசியல் வைத்து எழுதியிருப்பார் இறுதியில் சித்திரைப் பாண்டி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவார்.

இன்னமும் இது போல் நிறைய உண்மைச் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. என்ன நினைத்து என்ன பயன்? :((

ILA (a) இளா said...

முதல் தடவை படிக்கும் போது கொஞ்சம் புரியாத மாதிரி இருந்தாலும், பின்னாடி புரிஞ்சிருச்சு. சென்னை மேட்டரும் இப்படி இருக்கலாம்.இருக்காமலும் இருக்கலாம்.

கபீஷ் said...

வெறும் கதையா மட்டும் இருக்கக்கூடாதான்னு தோணுது!

நிலாக்காலம் said...

நல்லா இருக்கு. 'சுப்ரமணியபுரம்' ஞாபகம் வருது.. :-)

நசரேயன் said...

அருமையான கதை
ரெம்ப அழகா வந்து இருக்கு

முரளிகண்ணன் said...

நல்லா வந்திருக்கு கதை. சம்பவ விவரிப்பு, காட்சி வர்ணனை அசத்தல்

ச.சங்கர் said...

அப்பாடா ...ஒரு வழியா பதிவு போட்டுட்டாருய்யா:)

கதை நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தப்பை உணர்வது அப்படீங்குறதை நான் கதைல மட்டும்தான் படிக்கிறேன். உண்மைல அவுங்க இன்னும் hard core criminal ஆக மாறிப் போயிர்ராங்கன்னுதான் நான் நினைக்கிறேன். நம்ம தண்டனை மற்றும் ஜெயில் வாழ்க்கை அப்படிப்பட்டது :(

யோசிப்பவர் said...

சுரேஷ்,
மீள் பதிவா? இதே மாதிரி ஒரு கதை உங்க பிளாக்ல படிச்ச ஞாபகம் இருக்கே?! இல்லை இது புதியதுதானா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராதா ஸ்ரீராம். அரசியலாருக்கு பலி ஆடுகள் தேவை.. எங்கிருந்து வந்தாலும்.

வாங்க ஸ்ரீதர் நாராயணன். பல கதைகள் இருக்கின்றன, எல்லாக் கல்லூரியிலும் ஒரு கருவியாவது இருக்கிறது!

நன்றி இளா. இந்த மேட்டருக்கும் சென்னை மேட்டருக்கும் நேரடி சம்மந்தம் இல்லை! ஆனால் சென்னை மேட்டர் இந்த ஞாபகத்தை கிளற .. மீள்பதிவிட்டுவிட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

கபிஷ் நன்றி. கற்பனையாக இருந்திருக்கலாம் - ஆனால் இல்லையே :-(

நிலாக்காலம்.. இந்தக்கதையை 2006லே எழுதினேன், இப்ப மீள்பதிவுதான். சோ, சுப்பிரமண்யபுரம் இந்தக்கதை மாதிரி இருக்கலாம்!

நன்றி நசரேயன்.

நன்றி முரளி கண்ணன்.

பினாத்தல் சுரேஷ் said...

ச சங்கர் வாங்க,

//ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தப்பை உணர்வது அப்படீங்குறதை // இந்தக்கதையில கற்பனைங்கறது இரண்டாம் கொலை மட்டும்தான். “சரவணன்”ஐ தண்டனைக்காலம் முடிந்தபிறகு யதேச்சையாக சந்தித்தேன். ”அவசரப்பட்டுவிட்டேன் சார்..அந்தக்குழந்தை என் கண்ணுலேயே நிக்குது” என்று அவன் விட்ட கண்ணீரில் போலித்தனம் இருந்ததாக உணரவில்லை.

யோசிப்பவர்.. அபார ஞாபகம்ங்க உங்களுக்கு. செப் 2006 ஓட மீள்பதிவுதான் :-)

seethag said...

சுரேஷ் உங்கள் கதையும் ,சட்டகக்லூரியின் நிகழ்வுகளும் என்கல்லூரியினை நினைவுப்படுத்தியது. எங்கள் கல்லூரியில்உம் உருட்டுகட்டை எல்லாம் சாதரணம் தான். ஆனால் திரு அவ்வை நடராஜனின் மனைவி எங்களுக்கு முதல்வராக வந்தார்.அவர் செய்த முதல் வீளை பலகாலம் அரியர்ஸ் வைத்து விடுதியைவிட்டு செல்லாதவர்களைஎல்லாம் வெளிஈர்றினார்.நிறைய பிரச்சினைகள் திஇர்ந்தன.இத்தகைய வெற்றிக்கு அவருக்கு அரசியல் பலம் இருந்தது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது . எது எப்படியூ நிர்வாகத்திலும் அவரால நிறைய மாற்றங்களை கொண்டுவர முடிந்ததத

சென்ஷி said...

கதை அருமைண்ணே..

புதுப்பதிவு போடச்சொன்னா மீள்பதிவா போடறீக :(

சென்ஷி said...

ஸ்ரீதரண்ணா...

நான் சொல்ல நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க.. அந்த பாலகுமாரன் நாவல் பேரு "சிநேகமுள்ள சிங்கம்"
ஹீரோ பேரு சித்திரைப் பாண்டியன். :))

இந்த நாவலப்பத்தி எழுத நினைச்சுட்டு இருந்தேன். அதுல வர்ற ஹீரோவோட ஒரிஜினல் பேரு சித்திரப் பாண்டியன்.
தவறுதலா சித்திரைப்பாண்டியன்ன்னு கூப்பிட ஆரம்பிச்சு அதுவே நிலைச்சுடும். யோசிச்சுப் பார்த்தா அவனுக்கு அந்த பேருல சேர்ந்த துணையெழுத்து அவன் கையில போட்ட விலங்கு மாதிரியே இருந்தது. அவன் விரும்பாத ஆனா அவனுக்கு கிடைச்ச வாழ்க்கை மாதிரியே! கடைசியில மறுபடியும் அவன் ஜெயிலுக்கு போறது உண்மையிலேயே மனசுக்கு கஷ்டமாயிருக்கும்.

சின்னப் பையன் said...

நல்லா வந்திருக்கு கதை...

வல்லிசிம்ஹன் said...

கதையா உண்மையான்னு பிரிக்க முடியாத அளவில இந்த பதிவு இருக்கிறது.

ஆளும் அதிகாரமும் அரசியல் ஆகிவிட்டது.

கோபிநாத் said...

படிச்சிட்டேன்...;))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கதையின் கோர்ப்பு அருமை-ன்னாலும் என்னைக் கவர்ந்தது கதையின் தலைப்பு தான்! முழுக் கதையும் வாசிச்சிட்டு, மீண்டும் ஒரு முறை தலைப்பைப் பார்த்தேன்!

சொல்ல வந்ததைச் சரியாச் சொல்லிட்டீங்கண்ணே! :)

Anonymous said...

chatta kalluri ninavu sirukadai nandraga irunthathu. parattukkal

சுவாசிகா said...

அருமையான அழுத்தமான சம்பவ பதிவு நண்பரே..

நடந்த, இன்னும் நடந்து கொண்டிருக்கிற, இனிமேல் நடக்கும் சம்பவமாகவே எனக்கு தோன்றுகிறது.

அரசியல் இருக்கும் வரை சரவணன் போன்ற மாணவர் சீரழிவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்...

அன்புடன்,
சுவாசிகா
http://swachika.wordpress.com

 

blogger templates | Make Money Online