Mar 30, 2010

அங்காடி தெரு- நான் கடவுள் - ஏழாம் உலகம்

"இதே கலர்ல டீ ஷர்ட் 42 இல்ல 44 சைஸ்லே இருக்குமாம்மா?" என்று கேட்டிருக்கிறேன் ரங்கநாதன் தெருக்கடையில்.

"இருக்காது சார்"

"பாத்துட்டு சொல்லலாமில்ல? ஒரு ஸ்மைலிங்கா சொல்லேம்மா" என்று சொல்லியிருக்கிறேன் கடையை விட்டுக் கிளம்பும் முன். அதோடு அதை மறந்தும் போயிருக்கிறேன்.

ஆனால் இப்போது தெரிகிறது, நான் பேசியது கனியுடன் என்று. செல்வராணியுடன் என்று. சோஃபியாவிடம் என்று.

ஆயிரம் முறையாவது போயிருப்பேன் ரங்கநாதன் தெருவிற்கு. ஆனால் இப்போதுதான் வசந்தபாலன் அந்தத் தெருவுக்கு முறையாக அழைத்துப் போயிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்காதே. எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் பார்.

எல்லாம் தென் தமிழ்நாட்டுத் தமிழ் பேசுகிறார்கள் என்பதை மட்டும் கவனித்தாயே, 13 வயதுப்பையன்கள் கேள்விகேட்டதும் 18 வயது (அப்படின்னா எனக்கு 90 இருக்கும்பா.. உண்மையச் சொல்லு) என்று கூசாமல் சொல்கிறார்கள் என்பதைக் கவனித்தாயே, அவர்கள் எங்கே தங்குகிறார்கள் என்று யோசித்தாயா என்று கேட்கிறார்.

பொதுக்கழிப்பிடத்துக்குக் காசு வாங்கும் அவலத்தை லெட்டர்ஸ் டு த எடிட்டருக்கு எழுதத் துடிக்கிறாயே, அது ஒரு பிச்சை எடுக்காதவனின் உழைப்பு என்பதை உணர்ந்தாயா?

"பத்து ரூபாய் ரிமோட் கவர்" விற்கும் பையன் ப்ளஸ்டூ படித்திருப்பானோ?

உதயம் தியேட்டர் ப்ளாட்பாரத்தில் 22 பேரைக் கொன்ற கொடூர விபத்தை மறுநாள் காலையில் பார்த்தேன். ஒரு மாதம் கழித்து "என்னையும் வந்து ஏற்று" என்று இன்னொரு 22 பேர் அதே இடத்தில் படுத்துக் கிடந்ததையும் பார்த்தேன். வேண்டுதலா அவர்களுக்கு லாரிகளுக்கு எலுமிச்சம்பழமாக?

திருட்டுப் பட்டம் கட்டுவதற்கும் ஸ்கிரீன் மறைவில் கசக்குவதற்கும் ஏற்ற முக்கால் அனாதைப் பிள்ளைகள், மாதம் முதல் செக்லிஸ்டின் பிள்ளையார் சுழியாய் ஏன் R-1? அண்ணாச்சிகளுக்கு ஆர் 1 துணை, ஆர்1களுக்கு அண்ணாச்சிகள் துணை - கைவிடப்பட்டவர்களுக்கு யார் துணை?

கேள்விகள்.. கேள்விகள். இப்படிக் கேள்விகள் இருப்பதையும் நான் அறிந்திராத ஆயிரம் கேள்விகள்.

ஏழாம் உலகம், என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல். நள்ளிரவில் படித்து முடித்துவிட்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்காக இரவெல்லாம் தூங்காமல் என்ன செய்வது, யாரை உதைத்து இவர்களின் இழிநிலைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருவது? உதைக்கப்படவேண்டியவர்கள் வரிசையின் நானும் நிற்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி கலங்கடிக்க நான் அனுபவித்த சுகங்கள் எல்லாம் சுமையாகத் தோன்றி மூன்று நாட்களுக்கு எதிலும் முனைப்பில்லாமல் செய்த நாவல்.

ஏழாம் உலகம் நான் கடவுளாகப் படமானது ஒரு விபத்து. அகோரிகளையும் ஏழாம் உலகமும் கொத்துக்கறியாக. திரைப்படம் என்பதற்கான இலக்கணத்துக்காக ருத்ரன் தாண்டவனைப் புரட்டி எடுத்தான் - அந்த புரட்டி எடுத்தலை மையப்படுத்தியே ஆரம்பத்தில் இருந்து கதை நகர்ந்தது - தாண்டவன் அனியாயத்துக்குக் கெட்டவன், அம்சா பாவம் அவளை குரூபிக்குக் கூட்டிக் கொடுக்கிறான், ருத்ரன் முக்கா கடவுள், இப்போது அவளை ரட்சிப்பான் - இந்தக் கூத்தில் ஒரு பேக்ட்ராப்பாக மட்டுமே வந்தது ஏழாம் உலகம். நாவல் தோற்றுவித்த எந்த உணர்வையுமே படம் தோற்றுவிக்கவில்லை. பஞ்ச் டயலாக் இல்லையே தவிர அது ஒரு மாஸ் ஹீரோ படம்தான்.

ஏழாம் உலகம் கேட்ட கேள்விகளில் முக்கியமானது - தினமும்தான் பார்க்கிறாய் இவர்களை. ஒரு நாளாவது கவனித்திருக்கிறாயா?

அதே கேள்வியை "இவர்களை" மட்டும் மாற்றிக் கேட்கிறது அங்காடி தெரு.

ஆனால் நான் கடவுள் செய்திருக்கவேண்டிய ஆனால் வழுக்கிய பல இடங்களைச் சரி செய்திருக்கிறார் வசந்தபாலன்.

நான் கடவுளில் தரைக்கு மேலே மிதந்த கதாபாத்திரங்களை தரைக்குக் கொண்டு வந்து Closer to life ஆக்கியதன் மூலம் அனாயாசமாகச் செய்திருக்கிறார். பாலாவை பாலன் ஜெயித்திருக்கிறார்.

ருத்ரன் போல யாரையும் உதைக்கும் எதற்கும் கவலைப்படாத டெர்மினேட்டர் பாடி இல்லை லிங்குவுக்கு. இயலாமையின் உச்சியில் காலைப்பிடித்து அழுபவன் தான். ஆனால் இவனும் ஹீரோ ஆகிறான் - திரைமறைவில் கசக்கிய சூப்பர்வைசரை விளைவுகளுக்கு அஞ்சாமல் புரட்டி எடுத்து - விளைவாக புரட்டி எடுக்கப்பட்டு; புத்தி சொல்லும் முடிவை உறுதியான இதயத்தால் மாற்றி.

அம்சவல்லிக்கு குரூபியுடன் திருமணம் ஆவதே முக்கியமான குறை. கனி கசக்கலைப் பற்றி வருந்தினாலும் அதை வாழ்க்கையாக நினைக்கவில்லை.

அண்ணாச்சிகளுக்கும் தாண்டவன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கைவிடப்பட்டவர்களைக் கறப்பவன் பணக்காரன் ஆனதும் புத்திசாலியும் ஆகிறான்.

இந்தப்பதிவு படத்தின் விமர்சனம் இல்லை. விமர்சனம் என்பது குறைநிறைகளைத் தொட்டுக்காட்டுவது. இப்போதைக்கு அதைச் செய்வதாக உத்தேசம் இல்லை. சிறு சிறுகுறைகளையும் மீறி என் தூக்கத்தைக் கெடுத்த கோர்வையற்ற எண்ணங்களை பதிந்தே ஆகவேண்டும் என்ற உந்துதல்தான் இந்தப்பதிவு.

அய்யனார் சொல்லிதான் தெரிந்தது துபாயில் படம் ஓடுகிறது என்று. தியேட்டரில் சொற்பக் கூட்டமே. இன்னும் இரண்டு நாளில் பையா விரட்டப் போகிறதாம்.

என்ன, எனக்குதான் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் - தரைக்கு வந்து, "அந்த ஷர்ட்டை எடுத்துப் போடுப்பா, சோம்பேறித்தனம் பாக்காம" என்று சொல்ல

Mar 2, 2010

வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!

பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி வருவாயா வரை.

பெரும்பாலான முதல்நாள் விமர்சகர்கள் வித்தியாசமான காதல் கதை என்று பாராட்டியதாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அற்புதம் என்று சிலாகித்ததாலும், மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கௌதம் படங்கள் பிடித்தே இருந்ததாலும் - கவிழ்ந்தேன் - படம் பார்த்ததும்தான் தெரிந்தது, நம் மக்கள் எவ்வளவு காய்ந்துபோயிருக்கிறார்கள், வித்தியாசத்தின் அளவுகோல் எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது!

"மச்சி காதல்ன்றது " என்று நண்பர்களிடம் பேசும் காட்சி ஆர்டினரி.. "எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது" என்று பேசுவது வித்தியாசம்

பாடல் காட்சிகளில் 40 ஆண் 40 பெண் ஆடுவது ஆர்டினரி, 10 ஆண்கள் மட்டும் அக்ரோபாடிக்காக ஆடுவது வித்தியாசம்.

பஸ் ஸ்டேண்டில் சைட்டடிப்பது ஆர்டினரி, கேஎஃப்சிக்கு துரத்திச் செல்வது வித்தியாசம்.

அண்ணன்கள் அரிவாளோடு காதலனைத் தேடுவது ஆர்டினரி, பாக்ஸிங் செய்வது வித்தியாசம்

காதலுக்குத் தடையாக மதம் இருப்பது ஆர்டினரி, காதலுக்குத் தடையாக மதம்+வயது இருப்பது வித்தியாசம்.

எல்லா கதாபாத்திரங்களும் தமிழில் பேசுவது ஆர்டினரி, தமிழில் பேச முயற்சித்து திக்குவது வித்தியாசம். (நல்ல தமிழ் பேசக்கூடிய உமா பத்மநாபன், கிட்டி ஆகியோரும்கூடத் திக்குவது ஸ்பெஷல் வித்தியாசம்)

தங்கை காதலுக்கு உதவுவது ஆர்டினரி, "அவளுக்கு ரூட் போடாதே" என்று சொல்லிவிட்டு பிற்கு போய் காதலியின் கல்யாண ஆல்பம் பார்த்துவிட்டு வருவது வித்தியாசம்.

"அவனைக் காதலிச்சா என் பொணத்துமேலதான் கல்யாணம்" என்பது ஆர்டினரி "Over my dead body" என்பது வித்தியாசம்.

சிம்பு விரலை ஆட்டிக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு பேசினால் ஆர்டினரி, விரலை ஆட்டாமல் பல்லைக்கடித்தால் வித்தியாசம்.

நாயகி முதல் சீனில் நாயகனிடம் திட்டுவாங்கி மூன்றாவது சீனில் காதலுக்கு ஓக்கே சொன்னால் ஆர்டினரி, இடைவேளை தாண்டியபின் சொன்னால் வித்தியாசம்.

கதாநாயகியைத் துரத்திக்கொண்டு கேரளா போய் "மனசுக்குள்ளே காதல் வந்துச்சா" - ஆர்டினரி, "மன்னிப்பாயா" வித்தியாசம்.

கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "என்ன சொல்லப்போகிறாய்" என்பது ஆர்டினரி. கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "ஆரோமலே" என்பது வித்தியாசம்.

நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு குடைக்குள் மழையாகக் கனவு கண்டால் ஆர்டினரி, நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு ஜெஸ்ஸி ரீலீஸாகக் கனவு கண்டால் வித்தியாசம்.

அமெரிக்க மாப்பிள்ளை (பாவம் இந்த ப்ரீட்!) உடனான திருமணம் க்ளைமாக்ஸில் நின்றால் ஆர்டினரி, இடைவேளையில் நின்றால் வித்தியாசம்!

இவை மட்டுமல்ல, நிறைய நிறைய வித்தியாசங்கள் கொட்டிக்கிடக்கின்றன படம் முழுவதும்.
ஸ்லோவாப் போனா க்ளாஸிக் மூவி என்ற அடூர் காலத்து எண்ணத்தில் இருந்து எப்பதான் வெளிய வரப்போறோமோ! நுணுக்கமான விவரணைக்காக திரைக்கதை நொண்டியடித்தால் ஓக்கே - இந்த சப்பை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரங்களுக்கா? அநியாயம்.

நல்ல விஷயமே இல்லையா படத்தில்? இருக்கிறது! அவையாவன: 1. ரஹ்மானின் பின்னணி இசை எனக்குபபிடித்த முதல் படம் இதுதான். 2. ஒளிப்பதிவு - தெள்ளத்தெளிவு. 3. காத்திருந்து வந்த இடைவேளை, 4. நொந்து முடிந்தபின் வந்த சுபம்.

இதிலே பெரிய காமெடி என்னவென்றால், இந்தப்படம் பிடிக்காதவர்கள் கிழவர்கள் என்று ட்விட்டரிலும் பஸ்ஸிலும் மக்கள் அடிக்கும் கூத்துதான். இதே அளவுகோலை வேட்டைக்காரனுக்கும் வைக்கப்போகிறேன். "என்னா ஃபைட்டு.. உங்களுக்கெல்லாம் படம் சுறுசுறுப்பா இருந்தா பிடிக்காதா? வயசாயிடுச்சுப்பா உங்களுக்கு!"

இதனால் அறிவிப்பது என்னவென்றால், நம் மக்கள் விமர்சனத்தின் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டேன்! (இது இந்த விமர்சனத்துக்கும் பொருந்தும்:-)

 

blogger templates | Make Money Online