Jul 22, 2012

பதறாதே - படுக்காதே - ”சென்ஷி”

விரைவில் வெளியாகவுள்ள என் அடுத்த நாவல் - பதறாதே-படுக்காதே.. வளைகுடா நகரப் பின்னணியில் நடக்கும் அதிவேக த்ரில்லர்.


இந்த நாவலை எழுதியவுடன் நண்பர் சென்ஷியிடம் அனுப்பிவைத்தேன் - அவர் பார்வை:


நகரங்கள் ஒரு தனித்த உருவம் கொண்டவை. நகரங்கள் உருவாகிய பின் அதன் கரங்கள் மாயவலையை மக்களிடையே வீசி இழுத்துக் கொள்கின்றன. நகரத்தின் கவர்ச்சியில் மீளவியலாது மக்களின் மனம் நகரம் நாடியதாயமைகின்றது.. வெளிச்சம் காட்டும் நகரின் இருளுருவம் குறித்தும் அழுக்குகள் குறித்தும் மனதிலெழுகின்ற பிம்ப வடிகால்கள் தொலைக்கப்படுகின்ற தூரத்தின் அளவீட்டை கணக்கிலெடுத்துக் கொள்ளும்படியான சுவாரசிய அபத்தங்களின் மதிப்பின் மீது வைத்துப்பார்க்...... வெயிட் வெயிட்.. சத்தியமா இது ஒரு புத்தகத்துக்கான விமர்சனம்தான்..  இது ச்சும்மா ஒரு பந்தாவுக்கு எழுதிப் பார்த்தது.


இந்த புத்தகத்துல என்ன இருக்குன்னு சொல்லுறதை விட என்னென்ன இல்லைன்னு எளிமையா சொல்லிட முடியும். மன சஞ்சலங்கள், ஆழ்மன தத்துவங்கள், மனித வாழ்வின் மற்றும் உறவுகளின் சிக்கல்கள், பிரதி பிம்பம் படியெடுப்பு... இப்படி தீவிர இலக்கியத்திற்கு முன்னிறுத்தப்படும் எந்த விஷயமும் இதில் இல்லை. இந்த நாவலில் கிடைப்பது சூழல்  மாத்திரமே. ஒவ்வொருவரின் சூழலும் மற்றையோரை பாதிக்கும் என்பதை மிக எளிமையாக விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராம்சுரேஷ்.

ஒவ்வொருவரின் மனதிலும் ஏதேனுமொரு விஷயம் அழுக்காய் படர்ந்திருக்கும். ஒருவரின் நன்மையென்பது இன்னொருவருக்கான கெடுதலில் முடியுமென்பதைப் பற்றிய கவலையோ அச்சமோ இன்றளவில் காணக்கிடைப்பதில்லை. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியையோ, நன்மை செய்தால் நன்மையுண்டாகும் என்ற நியதியையோ யாரும் மனதில் கொள்ளுவதில்லை. நியாயம் என்பது தனக்கான அளவுகோலின்படி மாத்திரமே கணிக்கப் பழகிக் கொண்டதில் தொலைந்தது சக மனிதன் மீதான அக்கறை மாத்திரமே. இந்தக் கதையிலும் யாரும் யாருக்காகவும் அக்கறைப்படுவதில்லை. தனக்கான நியாயங்களின்படி தார்மீகமாக செயல்படுகிறார்கள். நல்லவன் கெட்டவன் என்ற பேதமறுந்து எல்லோரும் வாய்ப்பு கிடைக்காதவரை நல்லவர்கள் என்ற கட்டவிழ்ந்து நாவலில் வந்து செல்லும் எல்லோரையும் ஏதேனும் ஒரு இடத்தில் சகமனித அன்பெனும் பாசாங்கற்றவர்களாகவே நடந்து கொள்கின்றனர். ஆனால் எல்லாமே விறுவிறு சுறுசுறுவென்று கடந்துவிடுவதால் இந்த பாதிப்பு மனதில் அத்தனை அழுத்தமாக எல்லோருக்கும் படியுமா என்று தெரியவில்லை. ஓட்டம் ஓட்டம் ஓட்டம். மாரத்தான் ஓட்டத்திற்கான பந்தயத்தை நூறுமீட்டர் தொலைவுக்கான விநாடிகளில் கடந்துவிடும் அவசரமாய் தறிகெட்டு ஓடுகிறது கதை.


நாவலில் குறிப்பிடப்படும் நகரம் பற்றிய பெயர் இல்லை. எதுவாக இருக்கலாம் என்ற ஊகத்தை விட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அமைப்பை கதையோட்டம் தந்துவிடுகிறது. அரபி கம்ரான் வருகிற இடத்தில் நம்மூரில் நமக்குப் பிடிக்காத அரசியல்வாதியின் பெயரைப் போட்டுக்கொள்ளலாம். அன்வர், ரஷீத் மற்றும் மார்க்கிற்கு பதில் கோபாலையோ தண்டபாணியையோ அல்லது வேலுவையோ சேர்த்துக் கொள்ளலாம். மாறாமல் இருப்பது நாவலில் வரும் குலசேகரன்கள் மாத்திரமே. சூழலென்னவென்று புரியாமலே ஒரு மாயவலையில் தன்னையுமறியாமல் சபலத்திற்கு உட்பட்டு சிக்கிக் கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் அலைபாயும் மனம் கொண்ட குலசேகரன்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் ஆபத்துகளும் அவர்களைச் சுற்றியே இருந்தும், தனி மனித ஒழுக்கமெல்லாம் இருட்டில் தொலைந்து போகும், தன்னைச் சுற்றியுள்ள இருட்டைத்தவிர வேறு யாருக்கும் தெரியாதென்ற நினைவில் சபலத்திற்கு உட்பட்டு அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து சுவைத்துவிட்டு இருட்டுதான் அவர்களுக்கான எதிரியென்று தெரிந்தபின் தப்பிக்க ஓட முயற்சிப்பவர்கள்.


பல்ப் பிக்சன் எனப்படும் வகையில், கதைத்தன்மை சூழலை மாத்திரம் முக்கியமாய்க் கொண்டு அதில் பின்னலாய் உலவுகின்ற மனிதர்களை அதிலும் அதிகம் வெளிச்சம் பட்டிராத மனிதர்களின் அந்தரங்கங்களின் ஒரு சிறிய பார்வைதான் இந்த கதை. நல்லவன் வாழ்வான் கருதுகோள்களை தாண்டிவிடாமல் அந்த கோட்டிலேயே நடந்து போகிற நாவல். இவற்றை இலக்கியமாகக் கருதி கொண்டாடுதல் தேவையற்றது. காரணம் இவை விற்பனைக்கானவை. பெருவாரியான மக்களின் சாகசத்தன்மைக்கான மனநிலையை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று மாத்திரமே. வாசிப்பவர் எல்லோரும் எல்லா கதாபாத்திரங்களையும் தங்களுக்கான ஒன்றாக நினைக்கவியலாத வகையில் பார்வையாளர்களாக மாத்திரமே இருக்க வைக்குமளவு கவனமாய் கையாளப்பட்ட ஒன்று. இது போன்ற கதைகளை வாசிக்கையில் சுஜாதாவை தவிர்த்து யோசிக்கவியலாத வகைப்படுத்தப்பட்டுள்ளதால் சுஜாதாவின் வார்த்தை-கள் அளவுகோலை தாண்டிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதாபாத்திரங்கள் பேச்சுக்கூட அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்ப் பிக்சன் இலக்கியமாகக் கருதிவிடக்கூடாதென்ற மனநிலை வாய்த்தவர்கள் வெறும் வாசிப்பின்பத்திற்காக மாத்திரமே இதை வாசித்து மகிழலாம். அல்லது படித்துவிட்டு மொக்கையென்றும் தூக்கிப் போடலாம். முக்கியம் வாசித்தலும் கருத்துக்கூறலுமேயென்பதாய் இருப்பதால் என்னைப் போல இலவசமாய் வாங்கியாவது படித்து இன்புற்று மேன்மை பெறுக.


சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு சுரேஷ், வாசித்துக் கருத்து கூறு என்று இணைய இணைப்பில் தந்திருந்த இந்த நாவலை நான்குநாட்கள் வாசிக்க மனமின்றி என்ன இருந்திடப்போகுது என்ற மனநிலையில் தொலைபேசிய இரண்டு முறைகளில் நான்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அசுவாரசியமாய் முதல் பத்தியில் படிக்க ஆரம்பித்து கதையில் சுவாரசியத்தில் ஒரு மணிநேரத்தில் படித்து முடித்து அவசரமாய் சுரேஷிற்கு போன் செய்து இரண்டு நிமிடங்கள் பாராட்டிவிட்டு மீண்டும் இரவில் ஒரு முறை படித்து மெல்ல உள்வாங்கி மறுநாள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்தக் கதையைப் பற்றிய கருத்தை சுரேஷிடம் பதிவு செய்திருந்தேன். என்னையுமறியாமல் கதையைப் படித்த உற்சாகம் குரலில் தென்பட்டதை மறைக்க முடியவில்லை. முதல் வாசகன் என்ற பெருமிதமாயிருந்திருக்கலாம். கூறியவற்றை மின்மடலில் அனுப்பி வைக்கச் சொன்ன, ஒரு வருடம் கழித்து மீண்டும் கதையைப் படிக்க அமர்ந்து மீண்டும் அதே உற்சாகம் மனதில் தொற்றிக்கொள்ள அந்த உத்வேகத்திலேயே இதை தட்டச்சி அனுப்பி வைக்க முடிவு செய்தாயிற்று. புத்தகமாக வெளிவந்த பிறகு (ராம்சுரேஷின் இரண்டாம் புத்தகமாக இருக்குமென்று நினைக்கிறேன்) மறுபடி ஓசி பிரதி வாங்கி படித்துக் கொள்ள முடிவு.

கதையில் குறையெனப்பட்டவை. பதிவர் பெனாத்தலாராக அறிமுகமான ராம்சுரேஷின் கிரியேட்டிவிடி பிரமிக்க வைக்கும் ஒன்று. சாதாரண சினிமாவிற்கும் விதவிதமாக ஃபிளாஷ் டிசைன் செய்து அசத்துபவர் முடிவை சற்று அவசரமாய் முடித்துவிட்டார் அல்லது சாதாரணமாய் முடித்துவிட்டார் என்று எண்ணச் செய்தது. அருமையாய் போய்க் கொண்டிருந்த கதையின் முடிவை இன்னும் யோசித்திருக்கலாமே என்ற ஏமாற்றம் வந்தது. ஆனால் அது சற்று நேரம்தான். அடுத்த பல்ப் பிக்சனில் என்னுடைய இந்தக் குறை தவிர்க்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இன்னொரு பிடிக்காதது இந்தக் கதையின் தலைப்பு -  ’பதறாதே.. படுக்காதே..’ ’ஙே’ புகழ் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவல் தலைப்புகள் சாயலில் மனதிற்கு பட்டது. கதையின் தலைப்பையாவது என்னைப் போன்ற இலக்கிய நேசிப்பாளர்களுக்கு பிடிப்பது போல வைத்திருக்கலாம்.  இன்னமும் இந்த மாதிரி தலைப்புகள் உலவுவதால்தான் விஜய் டிவியில் மக்கள் புத்தகங்கள் வாசிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்னமோ.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

(அடுத்து ராஜேஷ்குமாரின் ”தப்பு தப்பாய் ஒரு தப்பு” நாவலுக்கு விமர்சனம் எழுதினால் என்னவென்ற ஒரு எண்ணம் உண்டாகிறது. (கைவசம் பிடிஎஃப் உள்ளது). கிரைம் நாவல் புத்தகத்தில் வாசகர் கடிதமளவில் மடக்கிய அஞ்சு வரி எழுத்துக்குவியலாக இல்லாது  நீண்ட விமர்சனமெழுதி அனுப்பி வைக்கலாமென்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. அப்படியே படிப்படியாய் சுபா, பிகேபி மற்றும் இந்திரா சௌந்தரராஜனிலிருந்து ரமணிச்சந்திரன் கதைகள் வரை விமர்சனம் எழுதவும் முடியுமென்ற நம்பிக்கைக் கீற்று மனதில் ஒளியுண்டாக்கியுள்ளது.) 
கூடிய விரைவில் இணையத்தில் வாங்கும் லிங்க்கை ஏற்றுகிறேன்.

வேணும் ஆசீர்வாதம்!

5 பின்னூட்டங்கள்:

ஆயில்யன் said...

சென்ஷி aka துபாய் மகாதேவன்? :)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

இந்த ஃபிளாஷை மறக்கமாட்டேன் என்கிறார்கள்!!
இணைய லிங்க் கிடைத்தவுடன் தான் ஆசீர்வாதம் எல்லாம். :-)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆயில்யன், முரளிகண்ணன், வடுவூர் குமார் மற்றும் கோபிநாத்.

துபாய் மகாதேவனா - நான் எழுதி இருந்தால்னு ஒரு வரி எழுதி இருக்காரா சென்ஷி?

நிச்சயம் தருகிறேன் வடுவூர்.

 

blogger templates | Make Money Online