Sep 17, 2008

ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)

என் கணினி க்ராஷ் ஆகிவிட்டது. பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் பார்த்துக்கொண்டிருந்தபோது க்ராஷ் ஆனதால், சில பதிவுகளில் இருந்து ஒரு ஒரு வரி மட்டும் ஒரே ஒரு டெக்ஸ்ட் பைல் ஆகி அதை மட்டும்தான் மீட்க முடிந்தது. இந்த வரிகள் யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடித்துத் தாருங்களேன் - முழுப்பதிவையும் படித்து உய்வேன்!

உங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பதில்களை உடனுக்குடன் மட்டுறுத்த இயலாது.

1. இரட்டை டம்ளர் முறைக்கு நான் இங்கே தீர்வு கொடுத்துள்ளேன்
2. ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் முதலெழுத்துதான் வித்தியாசம்
3. ஜோதியில் சைவப்படம் போட்டால் சீட்டு கிழியும், தாவூ தீரும்
4. இவ 110,131 மேகீ 43 சரி, மத்ததெல்லாம் தப்பு. முயற்சி பண்ணுங்க.. உங்களால முடியும்.

5. இது இந்தப்பதிவுக்கு மட்டுமல்ல, தங்கமணிக்கும் எதிர்பதிவல்ல
6. என் டி ஷர்ட் டை திருடினாலும் பரவாயில்லை, டி ஷர்ட் வாசகத்தைத் திருடிவிட்டார்கள்.
7. வாரம் 30$ வைக்கலாமா 70$ வைக்கலாமா என்றுதான் குழப்பம்
8. இப்போதெல்லாம் 30 விநாடியில் நேரிசை வெண்பா எழுத முடிகிறது
9. கிளி ஜோக் தவிர வேறெதுவும் கம்பன் விழாவில் சொல்லக்கூடாது
10. காற்றை வஞ்சித்துத்தான் பறக்கவேண்டும் என்றால், எனக்கு வேண்டாம் அந்த பட்டம்
11. கும்மிடிப்பூண்டியில் வயதான ஓட்டுநராக இருந்தாலும் காலை அழுத்தினால் வண்டி நிற்கிறது.
12. சென்னை மாநகராட்சி போர்ட் - என் கைவிரல் சென்னை மாநகராட்சியில் இருக்கிறது, கால் வெளியே.

Sep 13, 2008

ஆறிப்போன விஷயங்களும் ஆறாத கழுத்தெலும்பும் (13 Sep 08)

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை. எனவே ஒருவேளை விலக நேர்ந்தாலும் "மனக்கனத்துடன் விடை பெறுகிறேன்" "போகாதே போகாதே என் பதிவா" போன்ற பதிவுகள் தேவைப்படாது என்பது திண்ணம் ஆகிவிட்டது :-)

ஊருக்குப் போனதில் பெரும்பாலும் இணையத்தின் தொடர்பில் இருந்து அறுபட்டேன். அரை மணிநேரம், கால்மணிநேரம் என்று பார்த்ததில் மின்னஞ்சல் தவிர வேறெதுவும் கவனிக்க முடியவில்லை. ஊரில் இருந்து திரும்பி வந்தும் தட்டச்ச முடியாத நிலையில் படிக்க மட்டுமே முடிந்தது.. ஏன் தட்டச்ச முடியாத சூழல்? கடைசியாகச் சொல்கிறேன்.

படித்த / பார்த்த / கேள்விப்பட்ட விஷயங்களில் என் பரிதாபத்துக்கு ஆளானவர்கள் ரஜினிகாந்த், கலைஞர் டிவி, ஞாநி, ஆற்காடு வீராசாமி!

ரஜினிகாந்த் தெளிவாகப் பேசினாலே குழப்புவார்கள், குழப்பமாகப் பேசினால்? குசேலன் அடிவாங்க வேண்டிய படம்தான் என்றாலும் மன்னிப்பு வருத்தம் என்பதைப் போட்டு வறுத்து எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை. என்னவோ ரஜினிகாந்த் மட்டுமே கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் பாலம் போலவும் அவர் தப்பாக ஒருவார்த்தை (அது கூட சொல்லவில்லை, ஊடகங்கள் பிரம்மாண்டப்படுத்திவிட்டன) சொன்னால் அடுத்த செகண்ட் பிரச்சினை வெடிக்கும் போலவும் என்னா பில்ட் அப்! இதில் செய்தி சொன்ன அடுத்த செகண்ட் க்ரூசிபை பண்ணக்காத்திருக்கும் சக நடிகர்கள், ஊடகங்கள், பதிவர்கள்!

கலைஞர் டிவி விநாயகர் சதுர்த்தியை விடுமுறை நாள் என்று சொன்னது தவறு என்று சொன்ன அனைவரும், விநாயகர் சதுர்த்தி என்று சொல்லி இருந்தாலும் எகிறிக் குதித்திருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஞாநியின் பூணூல் மீண்டும் ஆராய்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. கலைஞர் அரசைத் திட்டும்போது மட்டுமே இந்த ஆராய்ச்சி செயல்படுவது ஆச்சரியம். இதில் அங்கங்கே கேட்கும் இன்னொரு குரல்: முற்போக்குப் பாப்பானை நம்பாதே! சரிதான்.

கரெண்ட் கட்டைக் கண்டுபிடித்தது ஆற்காடு வீராசாமி என்று தினமணி கார்ட்டூன் போட்டிருக்கிறதாம். என்னவோ இதுக்கு முன்னே யாரும் கரெண்ட் கட்டே பார்க்காதது போல. அநியாயம்.

இப்போது, கழுத்தெலும்புக்கதை.

சென்னை (மாநகர எல்லைக்குள் மட்டும்) போக்குவரத்து பெரும் அளவில் சீராகிவிட்டது போலத்தான் தோன்றியது. ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட முக்கியத்தடங்களில் 6 வழிப்பாதைகள் நீளத்தை அதிகப்படுத்தினாலும் சீரான ஓட்டத்துக்கு வழி வகுக்கிறது. கத்திப்பாராவின் முடிக்கப்பட்ட பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தினேன். இந்த அளவுக்கு இந்தப்பாலத்தால் நன்மை ஏற்படும் என நினனக்கவில்லை. அருமையான ஓட்டம். நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் 6 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிவிட்டிருந்த தரையடிப்பாலம் இப்போதுதான் உபயோகத்துக்கு வரத் தொடங்கி இருக்கிறது. பல இடங்களில் குறைகள் இருக்கலாம் - ஆனால் போக்குவரத்துத் துறை நிவாரண முயற்சிகளை எடுத்து வருவதே பாராட்டத்தக்க விஷயம்.

ஆனால், மக்கள் இன்னும் போக்குவரத்து விதிகளை மதிக்கத் தயாராக இல்லை என்பதை என் விடுப்பு முடியும் தருவாயில் கண்டேன்.

கோயம்பேடு SAF விளையாட்டு வளாகத்துக்கு எதிரே ஒரு சிக்னல். நான் வரும்போது ஆரஞ்சு அணைந்து சிகப்பாகி விட்டது. சிகப்பு விழுந்தால் நிறுத்தவேண்டும் எனக் கற்ற பாடத்தில் நிறுத்தினேன். பின்னால் ஒரு டெம்போ, அட இவன் நிறுத்தவா போகிறான் என்ற எண்ணத்தில் முழுவேகத்தில் வந்து என் வண்டியின் பின்னால் இடிக்க, வண்டியை விட்டுப் பறந்தேன், கிழே விழுமுன் மூன்று சுற்றுக்கள் சுற்றியதாக சிக்னலில் இருந்த போக்குவரத்துக் காவலர் பின்னால் அறிவித்தார். எங்கே அடிபட்டது என்று தெரியும் முன்னால் நெற்றிப்பொட்டிலிருந்து ரத்தம் கசிவதை உணர்ந்தேன். ஹெல்மெட்டோடு வண்டி ஓட்டுவது பழக்கமின்மையால் திட்டிக்கொண்டே (நல்லவேளையாக) உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த ஹெல்மட்டின் தகரம் உடைந்து, அது கீறியதால்தான் நெற்றிப்பொட்டில் ரத்தம் என்பது புரிந்ததும் திகில்!

கையைக்காலை ஆட்ட முடியவில்லை. இடுப்பெலும்பில் எதோ வலி. உடலெங்கும் பட்சபாதம் பார்க்காமல் சிராய்ப்புகள். என்ன செய்வது என்று புரியாமல் முதலில் நாராயணையும் ஐகாரஸ் பிரகாஷையும் அழைத்தேன் (இவர்களைச் சந்திக்கத்தான் சென்றுகொண்டிருந்தேன்). பிறகு என் உறவினரையும் அழைத்தேன்.

போலீஸ்காரர் தெளிவாக என் மீது தவறில்லை, டெம்போ மீதுதான் தவறு என உணர்ந்து டெம்போக்காரரைப் பிடித்து வைத்துவிட்டார். டெம்போக்காரர் கண்ணில் என்னைவிட அதிகம் வலியும் பயமும். இரவு வரை என்னுடனே சுற்றியதில் அவர் பரிதாபக்கதை தெரிந்தது. கேஸ் எதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

நாராயணும் பிரகாஷும் உடனே வந்து ஆறுதல் அளித்தார்கள். காலில் ஒன்றும் ஆகவில்லை , நடக்க முடிகிறது ஆனால் இடுப்பில் உட்கார்ந்து எழும்போது மட்டும் வலி எனத் தெரிந்தது.இடது உள்ளங்கை வீங்கி விட்டது, வலது கையைச் சுற்ற முடியவில்லை.

மருத்துவமனையில் உடனடியாக எடுக்கப்பட்ட எக்ஸ் ரேக்கள் வலது கழுத்தெலும்பு உடைந்திருப்பதையும், இடது கை விரல் எலும்புகள் சில பிசகி இருப்பதையும் காட்டின. இடுப்பில் எதுவும் இல்லை.

பெரிய அடி என்று சொல்லமுடியாவிடினும், இரண்டு கைகளுமே டிஸ் ஏபிள் ஆகிவிட்டிருக்கிறது. தலைக்கு வந்தது நிச்சயமாக தலைப்பாகையோடு போனது! இனி அந்த ஹெல்மட்டையும் வண்டியையும் உபயோகிக்க முடியாது.

விபத்து நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் கழுத்தெலும்புக்கு இன்னும் 10 நாள் ஆகும் என்று சொல்கிறார்கள், கை கூடிவிட்டது, இடுப்பு சரியாகிவிட்டது.

நீதி: எவ்வளவு கஷ்டமாய் இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் போடுங்கள்.

 

blogger templates | Make Money Online