Jul 9, 2009

சென்னை 2009

பத்து நாட்களாகிவிட்டன - வந்ததிலிருந்து உருப்படியாக ஒரு வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் இருப்பது போலவே இருக்கின்றது. சிலபல பதிவர்களையும் ட்விட்டர்களையும் சந்தித்ததை உருப்படியில் சேர்க்கலாமா என மனதுக்குள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.


நடேசன் பூங்காவில் சந்தித்த பதிவர்களில் பலர் பெயர் எனக்கு ஞாபகம் இல்லாதது நானும் மூத்த பதிவனாகிக்கொண்டிருக்கின்றேன் என உணர்த்தியது (கிழபோல்ட்டு என்று என்னை நானே விமர்சிக்க விரும்பாததன் இடக்கரடக்கலே இஃது என்றறிக!). பெரும்பாலும் இலக்கணம் மீறாத சந்திப்பு. வட்டத்தின் ஒருமூலை மக்கள் அடுத்த மூலைக்கு எஸ்டிடி போட வேண்டிய அளவுக்குப் பெருத்துவிட, காதில் விழுந்த மொக்கையுடன் திருப்தி அடையவேண்டியதாகிவிட்டது. தற்போதைக்கு ஞாபகம் உள்ள மொக்கைஸ்:
  • பைத்தியக்காரனையும் பாலபாரதியையும் எவ்வளவு நோண்டியும் உரையாடல் போட்டிக்கு நடுவர் யார் எனச் சொல்லவில்லை :-(
  • மாசிலாமணி படத்தை விமர்சிப்பவர்கள் அதிமுகக் காரர்கள் என லக்கிலுக், அதிஷா மற்றும் இலைக்காரன் ஏகமனதாகச் சொன்னதை அடுத்து அடங்கிவிட்டேன்.
  • கேபிள் சங்கர், தண்டோரா, நைஜீரியா ராகவன் போன்றோரோடு முதல் சந்திப்பிலேயே மெகா மொக்கை அளவுக்கு நட்பை வளர்த்துக்கொண்டேன் :-)
  • தளபதிக்கும் தல க்கும் பேனர் கட்டினால் மட்டம், இளையராஜாவுக்கு விசிலடிச்சான் குஞ்சாக இருப்பது மேன்மையா என்று டாக்டர் புருனோ ஒரு கேள்வி கேட்டார். (வேதம் புதிது எபக்ட்)
  • கவிமடம் மீண்டும் புத்துணர்வு பெறும் என்று ஆசீப் அண்ணாச்சி 256ஆவது முறையாக உறுதியளிக்க, நர்சிம்மும் கைகோப்பதாகச் சொல்லி இருக்கிறார். பார்ப்போம். நடந்த அன்றைக்குதான் நிச்சயம்.
கிழக்குக்கு சென்றும் ஒரு மணிநேரம் பாரா, பத்ரி, ராம்கி, ஹரன், முகில் ஆகியோருடன் மொக்கை போட்டேன். (தலா 5 நிமிடம்தான்) இட்லிவடையைச் சந்தித்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்!

சிறு ட்விட்டர் சந்திப்பு ஒன்றும். நாராயணன், விக்கி, ராம்கி - த்மிழ்ச்சினிமாவின் வரலாறு அலசி அடித்துத் தோய்த்துக் காயவிடப்பட்டது!

சிங்கங்களின் குகைக்குள் ஒரு சிறு சந்திப்பு. முழுக்க முழுக்க பெண்ணீயச் சந்திப்பு - துளசி அக்கா, வல்லி சிம்ஹன் அருணாஸ்ரீநிவாசன், நிர்மலா போன்ற மித- அதிதீவிரவாதிகள்: Wifeology புகழ் பினாத்தல் அங்கு தனியாகச் சென்றதற்கே பரம்வீர்சக்ராவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கவேண்டும்- நல்லவேளை அடி ஒன்றும் பலம் இல்லை :-)

குறுக்கெழுத்து வாஞ்சி, யோசிப்பவர் உடன் ஒரு மினி சந்திப்பு, ராமநாதனுடன் ஒரு மைக்ரோ சந்திப்பு - குறையொன்றுமில்லாத சந்திப்புகள்..

இன்னும் பலரைச் சந்திக்கவேண்டும். அவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்களா! யாரையும் விடக்கூடாது!

உருப்படியா எதாச்சும் செய்யணும் பாஸ்!
********

போனமுறை பட்ட அடியினால் இந்தமுறை இருசக்கரத்தைத் தொடுவதில்லை என அம்மா சத்தியம் வாங்கிவிட்டதால் பேருந்துகளிலேயே என்னேரமும் சவாரி. ஒரே தூரத்துக்கு ஒரு பஸ்ஸில் 3.50ம், இன்னொரு பஸ்ஸில் 9.00 ம் வாங்குவதன் தாத்பர்யம் இன்னும் புரியவில்லை. புரிந்தவுடன் துபாய் கிளம்பிவிடுவேன்.

ஆட்டோக்காரர்கள் அடாவடி குறைந்திருக்கிறது. முன்பெல்லாம் 100 ரூபாய் தூரத்துக்கு 250ல் ஆரம்பிப்பார்கள், இப்போது 220ல் ஆரம்பிக்கிறார்கள். காசு முக்கியம் அல்ல, ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருவிலை என்ற சமச்சீரின்மைதான் என்னைக் கடுப்பேற்றுகிறது என்பதை ஆட்டோக்காரர்கள் அறிய வாய்ப்பில்லை, அகத்துக்காரி?

சென்னையில் கார்கள் அதிகமாகிவிட்டன, பார்க்கிங்குகள் காணாமல் போய்விட்டன. கார் ஓட்டுவதை ஒரு வலியாக்காமல் ஓயமாட்டேன் என்னும் சக சாலை உபயோகிப்பாளர்கள் நடுவேயும் ஓட்டுபவர்கள் அனைவருக்கும் ஒரு வந்தனம்!

*******

நாடோடிகள் படம் பிடித்ததற்கு ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காரணம் இருக்கலாம். ஆனால் எனக்கு சின்னமணி என்று மூன்று சீனில் மட்டும் வரும் அரசியல்வாதிதான் காரணம். ஊருக்கு வரும்போதெல்லாம் அண்ணனே, ஆசானே என்று லோக்கல் பார்ட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் தரும் எரிச்சலை எப்படியாவது கிண்டல் அடிக்கவேண்டும் என்று யோசிப்பேன். சின்னமணி “அந்த வானத்தைப்போல மனம் படைத்த நல்லவர்” - என்னைத் தடுத்தாட்கொண்டுவிட்டார்!

********

குற்றாலம் காத்திருக்கிறது!

18 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்து விட்டு, இப்ப சிங்கம்,அதி தீவிர வாதின்னு முழக்கறீங்களா,. ஹ்ம்ம்.பார்க்கலாம்:)

சென்ஷி said...

//Wifeology புகழ் பினாத்தல் அங்கு தனியாகச் சென்றதற்கே பரம்வீர்சக்ராவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கவேண்டும்- //


:)))))))))))

வடுவூர் குமார் said...

பெரிரிரிரிரிய சந்திப்பா இருக்கே!!

வால்பையன் said...

//மாசிலாமணி படத்தை விமர்சிப்பவர்கள் அதிமுகக் காரர்கள் என லக்கிலுக், அதிஷா மற்றும் இலைக்காரன் ஏகமனதாகச் சொன்னதை அடுத்து அடங்கிவிட்டேன்.//

ஆமாம், உளியின் ஓசை கூட சூப்பர் டூப்பர் ஹிட் தான், எதிர்கட்சிகளின் சதியே படம் ஊத்தி கொள்ள காரணம்!

கோபிநாத் said...

வருக..வருக தலைவா ;))

Sridhar V said...

//குற்றாலம் காத்திருக்கிறது!//

ரைட்டு. கலக்குங்க.

இவ்வளவு பதிவர்களை சந்தித்ததினால குற்றாலத்திற்கு போக வேண்டிய நிலைமை வந்திருக்குன்னு ‘நுணுக்கமா’ சொல்றதை பாத்து பிரமிக ஒருத்தர் வந்திட்டே இருக்கார் :)

மங்களூர் சிவா said...

குறும் குறும் மிக பெரும் சந்திப்பு நடந்திருக்கு!

:))

//Wifeology புகழ் பினாத்தல் அங்கு தனியாகச் சென்றதற்கே பரம்வீர்சக்ராவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கவேண்டும்- //


:)))))))))))

வெட்டிப்பயல் said...

”இட்லி”, வடையைச் சந்தித்துவிட்டேன் இப்படி வந்திருக்கணுமோ? ;)

ILA (a) இளா said...

இட்லியை "வடை"ச் சந்தித்துவிட்டேன் இப்படி வந்திருக்கணுமோ?

துளசி கோபால் said...

அன்றைக்கு மைனாரிட்டி வகுப்பா இருந்துட்டீங்க. ஒரே நிலையில் இருக்கும் ரெண்டு மைனாரிட்டிக் கேஸ்களுக்கு ஒரே விதமா ட்ரீட்மெண்ட் தரணுமேன்னு பெண் ஈயங்கள் சிந்திச்சதால் தப்பிட்டீங்க ஆசிரியரும், அந்த இன்னொரு ஒய்ஃபாலஜி மாணவரும்:-))))

ஆனாலும் சந்திப்பு ரசிக்கும்படியாத்தான் இருந்துச்சு:-)

ஸ்ரீ.... said...

சந்திப்பில் எனது பெயரைக் குறிப்பிடாதது வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது. மாபெரும் போராட்டத்தைச் சந்திக்கத் தயாராகுங்கள். நல்ல் பதிவு... :)

ஸ்ரீ....

புருனோ Bruno said...

எழுத்தில் சுஜாதா டச் !!

வாழ்த்துக்கள் :) :)

புருனோ Bruno said...

// வெட்டிப்பயல் said...
”இட்லி”, வடையைச் சந்தித்துவிட்டேன் இப்படி வந்திருக்கணுமோ? ;)//

அது சரி

தமிழிஷ் அட்மின்களின் சந்திப்பு பற்றி ஒன்றுமே எழுதவில்லையே

புருனோ Bruno said...

// வெட்டிப்பயல் said...
”இட்லி”, வடையைச் சந்தித்துவிட்டேன் இப்படி வந்திருக்கணுமோ? ;)//

அது சரி

தமிழிஷ் அட்மின்களின் சந்திப்பு பற்றி ஒன்றுமே எழுதவில்லையே

Jawahar said...

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள குவாலிபை ஆகிவிட்டேனா தெரியவில்லை. நீங்கள் எழுதி இருக்கிற விமர்சனக் கட்டுரை அடுத்த பதிவர் சந்திப்பு எப்போது என்கிற ஆவலைத் தூண்டுகிறது.

http://kgjawarlal.wordpress.com

சாய்ராம் கோபாலன் said...

"ஆட்டோக்காரர்கள் அடாவடி குறைந்திருக்கிறது. முன்பெல்லாம் 100 ரூபாய் தூரத்துக்கு 250ல் ஆரம்பிப்பார்கள், இப்போது 220ல் ஆரம்பிக்கிறார்கள்."

நல்ல சொன்னீங்க. அவர்கள் ஆட்டோக்களில் மீட்டர் வைத்திருப்பது எனக்கு விந்தையிலும் விந்தை !! அதை எல்லாம் எடுத்து விற்றால் என் ஏழு தலைமுறை உட்கார்ந்தோ நின்றோ சாப்பிடலாம் !!

இந்த வருடம் மார்ச் மாதம் அலுவல் நிமித்தமாக இந்தியா வந்தபோது என்னுடைய அமெரிக்க விசா முடிந்து விட்டது. அதனால் நான் மறுபடியும் அமெரிக்க consulate சென்று விசா வாங்கி திரும்ப வேண்டும் !

இப்போது எல்லாம் விசா நேர்காணல் முடிந்து வெளியே வந்தால் ஆட்டோக்காரர் டாலர் கேட்கிறார். அதுவும் கொஞ்ச நஞ்சம் இல்லை, நிங்கள் சொன்ன அதே அளவு !!

விசா கிடைத்ததால் இது, எனக்கு விசா கிடைக்காவிட்டால் ??

சிங்கார சென்னை ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட தனி திறமை வேண்டும் !

- சாய்ராம் கோபாலன்

param said...

நான் மலேசியன். இந்தியாவுக்கு வருடம் ஒரு முறை வருவதுண்டு. கடந்த வருடம் தான் முதல் முதல் முறையாக மும்பாய் சென்றேன்.ஆச்சரியம் ஆட்டோவில் காத்திருந்தது.சென்னையில் மீட்டரே போடாத ஆட்டோக்காரர்களையும், மீட்டர் போட்டாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்க வற்புறுத்தும் ஆட்டோக்காரர்களையும் பார்த்து வெறுத்துப்போயிருந்த எனக்கு மும்பாயின் ஆட்டோக்காரர்கள் மீட்டருக்கு மேல் ஒரு காசு கூட எதிர்பார்க்காதவர்களாக இருப்பதைப் பார்க்கும் போது ஆச்சர்யப்படாமல் எப்படியிருப்பது?

இராவணண் said...

Super

 

blogger templates | Make Money Online