Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Dec 26, 2011

Flashஉடன் வரவேற்போம் புதுவருடம்

2012 புத்தாண்டை என் பாணியில் வரவேற்கிறேன்.




Oct 25, 2010

அல்வா!

தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை எழுதி வருகிறேன். திரில்லர் என்பது மட்டும்தான் ஆரம்பிக்கும்போது போட்டுக்கொண்ட விதிமுறை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கேன்வாஸை விரிவுபடுத்தி ஃப்யூயல் செல் ஆராய்ச்சி, தொழில் ஒற்றறிதல் (industrial espionage-ங்க :-)) என்று எகிறி, இந்தியா, மத்தியகிழக்கு, கோஸ்டா டி ஸொல், பென்சில்வேனியா, நடுக்கடலில் ஆயில்ரிக் என்று எல்லா இடங்களுக்கும் பறக்கிறது கதை.



ஓரளவுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியவுடன் போஸ்டர் ஒட்டலாம் என்று காத்திருந்தேன். இப்போது கதை கியர் ஷிஃப்ட் ஆகிவிட்டது, ரன்னிங்கில் ஏறுகிறவர்கள் வசதிக்காக:

1

2

3

4

கருத்துகளைச் சொன்னால் தன்யனாவேன்.

Jun 3, 2010

என்னோட நண்பனுக்கு எட்டு பொண்டாட்டி

எழுதுவதற்கு ஆசை வந்தவுடன் முதலில் புனைபெயரைத்தான் தேட ஆரம்பித்தேன். சுரேஷ், சுரேபா, ராமசுப்பு, சுரேஷ்ராமமூர்த்தி என்று மனதுக்குப் பிடிக்காத பலவிதமான பெயர்கள் முதல் பரிசீலனையைத் தாண்டவில்லை. பதிவு எழுத ஆரம்பித்தபோதுகூட பதிவுக்குதான் பினாத்தல்கள் என்று பெயர் வைத்திருந்தேனே ஒழிய என் பெயர் சுரேஷ் என்றுதான் இருந்தது. பிறகு பல சுரேஷ்கள் குவிய ஆரம்பித்த பிறகுதான் பினாத்தல் சுரேஷ் என்று ப்ளாக்கர் ஹாண்டிலை மாற்றினேன். இந்தப் பெயர் கிண்டல் எழுத்துக்கு ஓக்கே, உருப்படியா எழுதினா? என்ற எண்ணத்தை, முதல்ல உருப்படியா எழுது, அப்புறம் புனைபெயர், பூனைபெயர் எல்லாம் பாத்துக்கலாம் என்று ஒத்திவைத்தேன்.


அந்த உருப்படியா எழுதுவது மட்டும் விலகிக்கொண்டே போனது. அவ்வப்போது ஒன்றிரண்டு தப்பிப்போனாலும்.

யாருடைய மூளைக்குழந்தையோ, இன்னும் எனக்குத் தெரியவில்லை, ஐம்பெருங்காப்பியங்களை எளிய நாவல்களாக்க உத்தேசம், உன்னால் முடியுமா என்று கேட்டபோது “என்னை வச்சு காமடி கீமடி பண்ணலியே” என்றுதான் கேட்கத் தோன்றியது. ஆனால் பயம் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குதானே வரும்? எனக்குதான் அந்தச் சுமையே கிடையாதே.

குருட்டுத் தைரியத்தில் ஒப்புக்கொண்டு சீவகசிந்தாமணியைப் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள்களில் ஆர்வம் என்று சொல்லிக்கொள்ள முடியாது, இருந்தாலும், நாமளும் இதையெல்லாம் படிக்கணும்டா என்பது மாதிரி ஆர்வம் எப்போதாவது வந்து போகும்.

நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான்

என்பதுபோல சந்தத்தோடு, கொஞ்சம் கஷ்டப்பட்டால் புரிந்துவிடக்கூடிய பாடல்கள் சில இருந்தாலும், பல பாடல்களில் இருக்கும் சொற்கள் பிரித்தாலும் புரியாமல், சேர்த்தாலும் புரியாமல் இலக்கியத்தரமாக இருந்தது. (இப்போ புரியுதா இலக்கியத்தரம்னா இன்னான்னு?)

சரி, உரையை எடுத்துப் படிக்கலாம் என்றால் பலநேரங்களில் செய்யுளே புரிந்துவிடுகிறது, உரை புரியவில்லை. வந்தான் என்று சொல்வதற்கு வந்தனன், நின்றனன், சென்றனன் னு உரையாசிரியர் வேற இலக்கியத்தரம் வளர்க்கிறார்.

எனக்கு வேலை சொன்ன பாராவை சாட்டில் பிடித்தேன்.

“படிக்கறதுக்கே கஷ்டமா இருக்கே, எதாவது படிக்கச் சுலபமான மொழியிலே உரை இருக்கா, கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்”

“அதானேய்யா உனக்குக் கொடுத்த வேலை! படிக்க சுலபமா உரை இருந்தா அதை ரெகமண்ட் பண்ணிட்டு போயிரமாட்டோமா?”

இப்போதுதான் புரிந்தது அந்த ஐடியாவின் அருமை. தமிழ் மீடியத்தில் படித்து, யாப்பு இலக்கணத்தில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு வெண்பா வெண்பாம் என்றெல்லாம் மற்றவர்களை இம்சிக்கும் எனக்கே புரிவதில் இவ்வளவு கஷ்டம் இருந்தால், தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்திருக்கும் ஆர்வத்தை மட்டுமே கொண்ட தலைமுறைக்கு எப்படி இருக்கும்?

விளையாட்டாக ஆரம்பித்ததைக் கொஞ்சம் தீவிரமாக்கினேன். சீவகன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்தான். “வா சுரேஷ், சும்மா மொக்கைப்பதிவே போட்டுகிட்டிருக்காம என்கிட்டே வா.. என் கதை என்ன தெரியுமா? நான் ஏன் எட்டு கல்யாணம் செஞ்சேன் தெரியுமா? எத்தனை திருப்பம் தெரியுமா என் வாழ்க்கையில்?”

சீவக சிந்தாமணி - தமிழ் அறிஞர்களுக்காக எழுதப்படவில்லை. நமக்காக. நான் எப்படி ஒரு நாவல் இருந்தால் படிப்பேனோ, அப்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். “நூலையும் உவமைகூற இயலாத மெல்லிய இடை ஒடிய விம்மி அடி பருத்த “ என்றெல்லாம் இருக்கும் அட்ஜெக்டிவ்களை கழட்டிவிட்டு நேரடியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முயற்சி. செய்யுளுக்குச் செய்யுள் அர்த்தம் சொல்லும் உரை அல்ல. “வா சீவகா, உட்கார்” என்று நெருங்க வைக்கும் முயற்சி. தேமா புளிமா கூவிளங்காய் தெரிந்து புணர்ச்சி இலக்கணம் தெரிந்த பண்டிதர்களுக்காக அல்ல - ”தமிழில் எதோ காப்பியம் எல்லாம் இருப்பதாகச் சொல்றாங்க, என்ன மேட்டர்னு புரியலை” என்பவர்களுக்காக.

தீக்குச்சி விழுந்து தெரிக்குதடி -கருந்தேக்குமரக் காடு வெடிக்குதடி” என்று எளிமையாக அக்கினிக்குஞ்சு பாட்டை ரீமேக் செய்திருக்கிறாரே வைரமுத்து, அதைப்போல ஒரு முயற்சி.

எழுதி முடித்தபின் புனைபெயர் இப்போது தேடலாம் என்ற எண்ணம் வந்தது.

ராம்சுரேஷ் என்ற பெயரில் இதோ, என் முதல் புத்தகம். உங்கள் ஆதரவை எதிர்பார்த்து:




இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கு படத்தின் மேல் க்ளிக்கவும். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

Dec 14, 2009

திருத்த வேண்டிய பதிவு

சரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது.

நம்பிக்கை

சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.

எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.

இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.

"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.

"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"

"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"

"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"

"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"

"சொல்லு. வேற என்ன விஷயம்?"

"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு"

"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே?"

"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"

"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"

ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.

"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"

"நான் தான் பேசறேன். கோபிதானே?"

"ஆமாம் சார்"

"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"

"ப்ராப்ளமா சார்?"

"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"

"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"

"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"

ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.

சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.

"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"

"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"

"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"

"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."

காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.

"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"

"என்ன சொல்றாங்களாம்?"

"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"

"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"

"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்!"

சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.

"சரி பாக்கறேன். வேற எதுவும்?"

"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"

"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"

"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"

சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.

ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.

"முத்து, கேண்டீன் வர்றயா?"

ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,

நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்

கேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம்.

”ஓக்கேதானே?” என்றேன்.

”பின்ன?”

பெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல்.

”நெருப்புப் பெட்டி இருக்கா?” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான்.

தீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி..

****

முன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.



Oct 29, 2009

படுக்கை - சிறுகதை

படுக்கையில் கிடந்தான் கிழவன். எவ்வளவு நாள் ஆசைப்பட்டிருப்பேன் இவனை இப்படிப்பார்க்க.

”தேவா”

கவனிக்கவில்லை. அவனை இந்தப்பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை.

“தேவா.. கண்ணைத் திறந்து பாரு”

புரண்டு படுக்க முயற்சித்தான். குத்தல் வலியில் முகம் அஷ்டகோணல் ஆனது. இந்த நிலையில் இருப்பவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறுதான். இருந்தாலும் என்னால் மகிழ்ச்சியை மறைக்கமுடியவில்லை.

“நீயா? இப்ப திருப்தியா இருக்கணுமே”

“திருப்தி? அதை நான் இழந்து பல ஜென்மம் ஆச்சு.”

“இன்னுமா உன் கோபம் அடங்கல?”

“அவ்வளவு சுலபமா? உன் வீரத்தை என்கிட்ட எத்தனை முறை காமிச்சிருக்கே? இப்பதானே நான் ஆட ஆரம்பிச்சிருக்கேன்!”

வலியிலும் கிழவனுக்கு சிரிப்பு வந்தது,

“நீயா? இப்ப ஆடறியா? நீ ஜெயிச்சிட்டதா நினைக்கிறயா?”

”தெரியும் தெரியும். இப்பவும் எதாச்சும் சொல்லுவே. இப்படி நீ படுக்கையா கிடக்கறதுக்கு நான் காரணம் இல்லன்னு சொல்லுவே”

”நீ நம்பமாட்டே. ஆனாலும் சொல்றேன். நீ இல்லை!”

அதே சிரிப்பு. பலவருடங்கள் முன்பு எரிச்சலை ஏற்படுத்திய அதே சிரிப்பு.

தேவா அப்போது மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அப்போதும் என்னைப்பார்க்கையில் கிழவன் தான்.

நான் பயணத்தில் களைத்துப் போயிருந்தேன். ஏமாற்றங்களில் அடிபட்டிருந்தேன்.

”திரும்ப வந்துட்டியா? போன வேலை?” உண்மையான கனிவோடு கேட்பவன் போலவே கேட்டான்.

தலையை ஆட்டினேன். கண்ணீர் அவனுக்கு கதை சொல்லியிருக்கும்.

”என்ன பண்ணப்போறே?”

எச்சிலை விழுங்கிக்கொண்டேன். இவனிடம் எப்படிச் சொல்வது?

“நீங்க..” வார்த்தை திக்கியது.

“நான்?” தேவாவின் முகம் குழப்பமானது.

“நான் உங்களை..”

“என்னை?” வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளி அவனைத் துன்புறுத்தியது போல.

“நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறீங்களா” சொல்லியே விட்டேன். இந்தக் கிழவனைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லும் அளவுக்கு விதி என்னைக் கொண்டு விட்டதை நினைத்து இலக்கில்லாத கோபம் வந்தது. விதியா? இவனா? இல்லை என் கோபத்தின் இலக்கு இவன் தான்.

உடனே பதில் வரவில்லை. என்னை ஏற இறங்கப் பார்த்தான். என் அழகு பருவத்தின் உச்சத்தில் இருந்த நேரம் அது. சம்மதித்து விடுவான். எங்கே போகிறான். கல்யாணம் மட்டும் ஆகட்டும். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம். வட்டியும் முதலுமாக.

இந்த வயதில் இவ்வளவு அழகான பெண் கிடைத்திருக்கிறாள். முதலில் அவன் கண்ணில் தெரிந்தது ஆசைதான். ஆனால் கொஞ்ச நேரம்தான். நடைமுறைச் சிக்கல்களை நினைத்திருப்பான் போல. ஆசை போய் ஏமாற்றம் வந்தது.

“என்ன பேத்தறே? உன் வயசென்ன என் வயசென்ன? இந்தக் கிழவனை ஆசையா படறே?” அவன் குரலில் அது உண்மையாக இருந்துவிடக்கூடாதா என்ற ஆசை இருந்தது.

“நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா எனக்கு வேற வழி இருக்கா?”

உண்மை சுட்டிருக்கவேண்டும். கோபமாக எழுந்தான்.

“உனக்கு வேற வழி இருக்கான்னு தெரியாது. எனக்கு வேற வழி இருக்கு. நீ எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?”

ஒருவேளை பொய் சொல்லியிருந்தால் கிழவன் அன்றே மசிந்திருப்பானோ என்று பலமுறை பிறகு யோசித்திருக்கிறேன். எவ்வளவு சுலபமாக முடிந்திருக்கவேண்டிய பழிவாங்கல். எத்தனை வருடங்கள் இழுத்துவிட்டது. ஆனால்.. இன்றாவது முடிந்ததே. கிழவனை திருப்தியாகப் பார்த்தேன். முனகிக்கொண்டுதான் இருந்தான்.

“நான் அன்னிக்கே உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டிருப்பேன். ஆனா ரொம்ப சீக்கிரமா படுக்கையில விழுந்திருப்பேன். உன்னோட ஆசையும் அதுதான்னு எனக்கும் தெரியும்” தேவா ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் வலி தெரிந்ததில் என் வெறி தணிந்தது.

“உன்னோட ஆசை மட்டும் இல்ல.. என்னோட ஆசையும் அதுதான். சொல்லப்போனா அன்னிக்கு உன்னை ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு என்னை நானே திட்டிக்காத நாளே கிடையாது.”

சாகும் நேரத்தில் பேசுகிறான். ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

“பாழாப்போன கௌரவர்கள், பாண்டவர்கள்.. அவங்க நல்லதை நினச்சு பிரம்மச்சரியம் பேசியே என் வாழ்க்கையை கெடுத்துகிட்டேன். உன் வாழ்க்கைய சர்வநாசம் செஞ்சிட்டேன். சால்வன் உன்னை திருப்பி அனுப்புவான்னு எதிர்பார்க்கவே இல்லை. அம்பா.. என்னை மன்னிச்சுடு..” அம்புகள் புரள ஆசைப்பட்டபோதெல்லாம் குத்தியதில் புதிதாக ரத்தம் பீரிட்டது.

“இப்ப என் பேர் அம்பா இல்லை. சிகண்டி” திரும்பினேன் நான்.
***

Jun 19, 2009

நேற்றைய சிறுகதையின் மறுபக்கம்

நேற்று சவசவ என்று ஒரு கதை மாதிரி எழுதி அதற்குள் ஒரு கதை இருப்பதாக பில்ட் அப் எல்லாம் விட்டிருந்தேன். ஆனால் பலர் போட்டவுடனேயே மேட்டரைக்கண்டுபிடித்துவிட்டார்கள். இப்போது எல்லாருக்குமாக விடைகளை அப்டேட் செய்துவிட்டேன், தயவுசெய்து பார்க்கவும்.


பின்னூட்டம் இந்தப்பதிவுக்கு வேண்டாம். இங்கேயே போடவும் :-)

Jun 17, 2009

நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு

ஆபீஸுக்குள் நுழைகையில் லேட் ஆகிவிட்டிருந்தது. கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

காலை வணக்கத்தை தொடர்ந்து இயல்பாகப் பார்ப்பதுபோல கடிகாரத்தைப் பார்த்தான் வெள்ளைக்காரன். ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறேன் - இந்தச் செயல் எவ்வளவு எரிச்சலூட்டுகிறது என்று. (27a)

“என்னாச்சு? லேட்டா?"

"ஆமாம்.. நாறப்பசங்க. என் கார்க்கு முன்னாலதான் டபுள் பார்க் பண்ணுவானுங்க”

“இன்னிக்குமா? சரி விடு”

“ஆற மாட்டேங்குது சார், மத்தவன் டைமை மதிக்காதவனை கொன்னா கூட குத்தம் இல்லை.” (27b)

“கோபத்தை விடு” அவன்மேலெல்லாம் இல்லைடா.. உன்மேலேதான் கோபம்!

“கோபம்ன்ற சாத்தான் மட்டும் இல்லாட்டி நான் மண்ணு!” (8b,28)

கணினி உள்ளே செல்ல நேரம் எடுத்தது.

”இது டைம் சாப்பிடும் அதுக்குள்ள பேனா சாம்பிள் பிரச்சினையை இன்னிக்கு தீத்துடலாம்” வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய பேனாக்கள். கோயில் ட்யூப்லைட் போல பேனாவைவிட பெரிசாக உபயம் என்று கம்பெனி பெயர் போட்ட விளம்பரம்.

“ரெண்டே மாடல்தானே.. ஒண்ணு ஒல்லி ஒண்ணு குண்டு..என்ன ரீபிள் போடலாம்?”

‘ப்ளாக்தான் சார்.. வேறெந்த கலர்லேயும் பேனா எனக்கு ஒத்துவராது!” (13)

”சரி இதை ட்ரை பண்ணு”

மஞ்சள் போஸ்ட்-இட் டில் வேகமாகக் கிறுக்கினேன்.

“என்னது இது? எதாச்சும் ட்ராயிங்கா?”

“என் பேர் சார்.. என் மொழிலே எழுதினேன்”

“அழகா இருக்கே”

“பேர் எல்லாம் அழகுதான்.. ஆனா இது எங்க மொழியில கோழிக்கிறுக்கல்!” (1,3)

கணினிக்கு உயிர் வந்துவிட்டிருந்தது.

“உன் சின்னப் பெண் தானே?”

“ஆயிரம் முறை பாத்தாலும் உங்களுக்கு ஞாபகம் வராது! இது மூத்த பெண்”

“போன வாரம் சின்னப்பெண் என்று சொன்னியே!”

“அப்புறம் மாத்திட்டேன்.. இதெல்லாமா பிரச்சினை?” (23)

வெள்ளைக்காரன் எல்லா ரிப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு கிளம்ப மணி 9 அடித்துவிட்டது. சக ஊழியன் “இன்னாபா? காபி சாப்பிடப் போலாமா?” என்றான்.

“சரி வரேன்.”

“வெள்ளைக்காரன்கிட்ட பொய்யா? மெய்யா?”

“பொய் சொல்லாம நல்லவனா இருக்க ஆசைதான். விடுதா இந்த சமுதாயம்?” (30) கேண்டீனில் வறட்டு வறட்டு என்று பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். “எப்பா.. நான் போற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?”(24)

”என்ன இன்னிக்கு யூனிபார்ம் போடல? பிறந்தநாளா?” வாடிக்கையாளரிடம் செல்லும் எல்லாநாட்களில் மட்டுமாவது யூனிபார்ம் அணிய வேண்டியது விதி. இன்றைக்கு அவனுக்கு ட்யூட்டி இல்லை என்பது கேட்டுவிட்ட பிறகுதான் நினைவுக்கு வந்தது.

“போரடிச்சுப்போச்சு.. என்ன கலர்லே கொடுத்திருக்காங்க.. சாயம்போனாப்பல க்ரீம் கலர்! பேண்டையாவது ப்ளாக்கா இல்லாம நான் சொன்ன ப்ளூ எடுத்திருக்கலாம்” (11)

“சரி என்ன போச்சு? அடுத்தவருஷம் மாத்திக்கலாமே.. மேட்ச் பாத்தியா?”

“ஏன் தான் பாத்தோமோன்னு இருக்கு.. சொல்லி சொல்லி எல்லார்கிட்டயும் தோக்குறானுங்க! கிரிக்கெட்(17) பாக்கறதையே நிறுத்திரபோறேன்.”

“என்னப்பா.. டைட் மேட்சு.. 3 ரன்லதானே விட்டானுங்க!”

பாலா(16a) போட்டானுங்க.. வெட்டிப்பசங்க(16b).. ஒருபக்கமா(16c) ஆளை நிறுத்திட்டு வேற பக்கம் போட்டுகிட்டு இருக்கானுங்க”

”அத்தை விடு.. பசங்க (20) படம் பாத்துட்டயா? நல்லா இருக்கு”

“தைரியமா பேமிலியோட பாக்கலாமா?”

”நான் தனியாத்தான் பார்த்தேன். குழந்தைக்கு எக்ஸாம்.. முடிஞ்சவுடனே அவங்களும் பாப்பாங்க..எங்க அப்பா கூட பாத்தா நல்லா இருந்திருக்கும்.. (10)ஊருக்குப் போய் அவர்கூட ஒருமுறை பாக்கப்போறேன்”

“தனியா எஞ்சமாய் ஆ?”

”யோவ்.. சினிமா பாக்கறதுல என்ன இருக்கு? இதே கோவா பீச்சுல தனியா போனா சுவாரஸ்யம் இருக்கும்!” (31)

”சரி படம் எப்படி?”

“ஆஹா ஓஹோன்னெல்லாம் சொல்ல முடியாது.. பாக்கற 3 மணிநேரம் சுவாரஸ்யமா போவுது.. வேறென்ன வேணும்?(19) அதுவும் இல்லாம

கேரக்டர்ங்களையும் கஷ்டப்படுத்தி பாக்கற நம்மளையும் அழவிட்டு படுத்தலை.”

”ஆமாம்.. உனக்குதான் சிரிப்புன்னாலும் சோகம்னாலும் கண்ணில தண்ணி கொட்டுமே!” (2)

ரகு காபி கப்களை கொண்டு வந்தான். “பழக்கமாயிடுச்சேன்னு இந்த டுபாக்கூரையெல்லாம் காபின்னு குடிக்க வேண்டியிருக்கு.. ஊர்லே எங்கம்மா போடுவாங்க பார் ஒரு காபி.. காலையிலே எழுந்துக்கும்போது அந்த வாசனை(14) ஆளைத்தூக்கும்”

“சரிதான். ரகு கேட்டுட்டா இதுக்கும் உலைதான். லீவு சாங்க்‌ஷன் ஆயிருச்சா?”

“ஆமாம்.. 26 மத்தியானம் ப்ளைட்டு”

“வெறும் ஊரா.. இல்லை வேறெங்கெயும் பிக்னிக்கா?”

“அம்மணிக்கு அந்தமான் போகணுமாம்.. புது ஊருக்கு போனாதான் பிக்னிக்காம்..நசநசன்னு.. கடைசிலே அங்கேதான் போவோம்னு வையி..(9) இருந்தாலும் எனக்கு என்னவோ பேசாம போன முறையாட்டம் பாணதீர்த்தம் போனா போதும்னு தோணுது (29,6).எங்கே போனாலும் ஒரே வெய்யில்.. குளிர்காலமா இருந்தாலும் பரவாயில்லை.” (21)

”சரி வெட்டி அரட்டை போதும்.. தொழிலை கவனிக்கலாமா?”

“நான் கான்பரன்ஸுக்கு போகணும்.. ஒரு ப்ரசண்டேஷன் - 10 மணிக்கு.. அதுவரைக்கும் ஆதவன் சிறுகதையே துணை!” (22)

கான்பரன்ஸில் பலர் பார்க்காத புது ஆட்கள். சில கண்களில் சினேகம் (7), சில கண்களில் “இவன்-என்ன-எனக்கு-சொல்லி-தருவது”.. வாங்கடா

வாங்க.. பத்து நிமிஷம் போதும்டா எனக்கு. சாயங்காலத்துக்குள்ள நீங்க அத்தனைபேரும் என் விசிறி.(8a) என்ன, நண்பன்னு வெளிய சொல்லிப்பீங்க..(5)

மதிய உணவு இடைவேளைக்குள்ளேயே நான் நினைத்தது நடந்துவிட்டது. “ரொம்ப நாளா இந்த கான்சப்ட் புரியாம இருந்துது.. நீங்க கொடுத்த எக்ஸாம்பிள்ஸ் எல்லாமே சிம்பிள்.. சுலபமா புரிய வச்சுட்டீங்க”(26)

“தொழிலே இதானேங்க.” பிஸிபேளாபாத்தை அப்பளம் சகிதம் நொறுக்கிக் கொண்டே சொன்னேன். “அருமையான சாப்பாடு!” (4)

“அந்த அனிமேட்டட் டயக்ராம் எல்லாம் நான் இதுக்கு முன்னாலே பாத்ததே இல்லை”

“ஸ்பெயின் ஆபீஸ்லே (25) யூஸ் பண்னிகிட்டிருந்தாங்க.. பாத்தவுடனே அமுக்கிட்டேன்!”

அவன் என்கூடவே ஆபீஸுக்கு வந்தான். சேரை பின்பக்கம் அபாயகரமாக சாய்த்துக் கொண்டு ஸ்பீக்கரின் மௌனம் கலைத்தேன்.

“எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்.. பி ற ந் தி ளை த் தே ன்..பி ற ந் தி ளை த் தே ன்” என்றார் ராஜா. (12)

”என்ன சார் இவ்ளோ கம்மி ரெசொல்யுஷன் வச்சிருக்கீங்க? எழுத்து எல்லாம் தெரியுதா?”

“என் கண்ணு ரொம்ப பவர்புல் சார்..அதோ அங்க தூரத்துல 10 பாயிண்ட்லே எழுதி இருக்கே கண்டிஷன்ஸ் அப்ளைன்னு.. அதுகூட தெரியுது.” (18)

ஏமாந்துவிட்டான்.. அதை ப்ரிண்ட் எடுத்ததே நான் தான்.

போன் அடித்தது. எடுத்தேன். “ஹலோ ஹூ இஸ் திஸ்?” என்றது எதிர்க்குரல்

“யோவ்.. கால் பண்ணது நீ.. என்னை கேக்கறியா?”

“இல்லை சார், இந்த நம்பர்லே இருந்து மிஸ்டு கால் வந்தது”

“இது ஆபீஸ் நம்பர்.. போர்டு நம்பர்.. நான் யாரையும் கூப்பிடலை!” (15)

போனை எரிச்சலாக வைத்துவிட்டு.. "Life is one Damn thing after another" என்றேன் எதிரிலிருந்தவனிடம். (32)

பி கு1: இந்தக் கதைக்குள் ஒரு கதை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வது அவசியம். புரிந்தவர்கள் புரியாதவர்கள் இருசாராரும் பின்னூட்டலாம் :-)

பிகு2: உரையாடலாகவே சென்றாலும் உரையாடல் போட்டிக்கு அல்ல.

பிகு3: நாளை இப்பதிவில் சில திருத்தங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகு4: திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. பாலா போடறானுங்க, வெட்டிப்பசங்க, ஒருபக்கமா போட்டானுங்க - இவர்கள்தான் என்னை அழைத்த பதிவர்கள், அவர்கள் பதிவில் பிடித்த பதிவை சுட்டியாகக் கொடுத்துவிட்டேன்.

பிகு5: ஆமாங்க, இது 32ஏதான். அ-புனைவுன்னு ஏன் சொன்னேன்னா, இது புனைவு இல்லை, என்னைப்பற்றின நிஜம்ன்றதால :-)

Mar 19, 2009

நாற்பது மாத்திரைகள் (சங்கமம் போட்டிக்கதை)

தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை. விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாப்பில் இறங்கி இவ்வளவு தூரமா நடக்கவேண்டும் ஹாஸ்டலுக்கு? வீட்டில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹாஸ்டலில் இருந்து அவசரமாக வரச்சொல்லி போன் வர கல்லூரியின் இரவுமுகம் தரிசனம்.

ஹாஸ்டல் வாசலிலேயே இருந்தார் வார்டன். என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.


“ஏண்டா இவ்ளோ நேரம்.. எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல?”

“பஸ் கிடைக்கல சார்”

”கிளம்பு திரும்ப.. ஹாஸ்பிடலுக்கு எடுத்துகிட்டு போயிட்டாங்க சுந்தரமூர்த்தியை”

“என்ன ஆச்சு சார் அவனுக்கு.. போன்லேயே ஒண்ணும் சொல்லல”

“எனக்கென்ன தெரியும். பவுண்டனுக்கு அடியில விழுந்து கிடந்தான். குடியா கஞ்சாவா தெரியல”

“அவன் அப்படிப்பட்ட பையன் இல்ல சார்”

“நானும் அப்படிதான் நினைச்சுகிட்டிருந்தேன். எவ்ளோ தட்டினாலும் சுரணையே இல்லாம சிரிச்சுகிட்டிருக்கான்.. நேரா பாக்கவே மாட்டேங்கறான். வாய்யா வேஸ்ட்வாட்டர்ன்றான் என்னைப்பாத்து”

வார்டன் பெயர் தண்டபாணி. மொழிபெயர்த்து வேஸ்ட்வாட்டராகத் தான் எல்லாராலும் அறியப்பட்டார். சூழல் புரியாமல் சிரிப்பு வந்தது.

”எந்த ஹாஸ்பிடல் சார்?”

“கவர்மெண்டு ஹாஸ்பிடல்தான். சரி இரு நானும் வரேன். சூசை.. பாத்துக்கடா இங்கே”

மாவு மெஷினை ஞாபகப்படுத்தும் சத்தத்தோடு கிளப்பினார் அவர் டிவிஎஸ்ஸை. ஸ்வெட்டர் போடாமல் வந்துவிட்டேன் அவசரத்தில். நள்ளிரவின் குளிர் உடம்புக்குள் ஊடுருவியது. மலைப்பகுதியின் இருள் குளிரை ஏற்றியதாகத் தோன்றியது. ஏன் இந்த ஆள் இவ்வளவு ஸ்லோவாக வண்டி ஓட்டுகிறார்? வண்டி ஓடும்போதே ஷேவிங் செய்துகொள்ளலாம் போல.

மருத்துவமனையின் கிராதிகள் இழுத்து பூட்டப்பட்டிருந்தன. தினத்தந்தி மேல் படுத்திருந்த ஆள் புரண்டு படுக்குமுன் “சத்தம் போடுங்க சார். வாட்ச்மேன் வருவான்”

“என்னா வேணும்? டாக்டரெல்லாம் காலைலேதான் வருவாங்க” தூக்கம் கலைந்த அதிருப்தி வாட்ச்மேன் குரலில் தெரிந்தது.

“சுந்தரமூர்த்தின்னு ஒரு பையன்.. காலேஜ்லே இருந்து கொண்டு வந்தாங்க”

“அந்த தற்கொலை கேஸா? காலைலதான் பாக்கமுடியும்”

தண்டபாணி அவனுக்கு கிட்டத்தில் சென்று குசுகுசுக்க, கதவு திறந்தது.

பொது வார்டில் காலையில் போட்ட டெட்டால் கரைந்துவிட்டிருந்தது. மருத்துவமனை நாற்றத்தைவிட சாக்கடை நாற்றம்தான் அதிகம் வீசியது. கட்டிலை மீறி நோய்க்கூட்டம் தாண்ட கீழே பாய்போட்டு சலைனுக்கு மட்டும் கம்பி வைத்திருந்தார்கள். பாட்டிலையும் லுங்கியையும் ஒரு சேரப்பிடித்து குந்தி இருந்த ஆள் நான் கடக்கையில் “பீடி இருக்கா தம்பி” என்றான்.

சுந்தரமூர்த்திக்கு எப்படியோ கட்டில் கிடைத்துவிட்டிருந்தது. அருகில் கோபியும் சேகரும் உட்கார்ந்திருந்தார்கள். பெரிய வாளியில் தண்ணீர், ஒரு குழாய், இன்னொரு வாளி. “குடிரா சுந்தர்” தண்ணீரை மக்கில் புகட்டிக்கொண்டிருந்தார்கள்.

“என்ன ஆச்சு கோபி?”

“தூக்க மாத்திரை போட்டுகிட்டானாம்டா”

தூக்க மாத்திரை? நேற்று சாயங்காலம் அவனுடன் மார்க்கெட்டில் அலைந்தது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு பார்மஸியாக உள்ளே போய் வெளியே கவருடன் வந்துகொண்டிருந்தான்.

“எதுக்குடா நாலஞ்சு கடைக்கு போறே?”

“என் தாத்தா ஊருக்கு போறாரு.. அவருக்கு நிறைய மாத்திரை தேவைப்படுது. பிரிஸ்கிருப்ஷன்லே 10 மாத்திரைதான் போட்டிருக்கான்”

”தாத்தா” வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.

”டாக்டர் பாத்தாரா?” சுற்றுவட்டாரத்தில் மருத்துவமனை சார்ந்த யாரையுமே காணவில்லை. தூங்கிக்கொண்டிருந்த எல்லாரையும் விழிக்க வைக்கும் அளவுக்கு லொக் லொக்கிக் கொண்டிருந்தார் மூன்றாம் பெட். அவருக்கு வாந்தி சத்தத்தில் சவால் விட்டுக்கொண்டிருந்தான் சுந்தர்.

வார்டின் முடிவில் நர்ஸின் வெள்ளுடையும் போன் பிடித்த கையும் தெரிந்தது.

“நர்ஸ்தான்.. டாக்டர்கிட்ட போன்லே பேசி ட்ரீட்மெண்ட் கொடுக்கறாங்க”

நர்ஸ் சேச்சி “வாந்தியிலே மாத்திரை வந்துச்சா? என்ன மருந்து போட்டான்ன்னு டாக்டர் கேக்குறார்” போனில் டாக்டர் பக்கத்தை கைவைத்து மூடியிருந்தாள்.

சுந்தரின் சட்டைப்பையில் இருந்த காகிதக்குப்பைகளில் மாலை பார்த்த மருந்துச்சீட்டை கண்டுபிடித்து எடுத்து நர்ஸிடம் கொடுத்தேன்.

“எத்தனை போட்டு?”

எனக்குத் தெரிந்து நாலு கடை.. “நாப்பது” என்றேன்.

”ஈ மருந்து ஒண்ணும் செய்யா.. சரியாப்போவாம்.. டாக்டர் பறஞ்சு”

நாப்பது மாத்திரையுமா ஒண்ணும் செய்யாது?

“ரெண்டு நாள் தூங்கும். சலைன் போட்டு. வாந்தி வேணாம்”

கோபி முகத்தில் மகிழ்ச்சி. அப்பாடா ஸ்கேவஞ்சர் வேலை பார்க்கவேண்டாம்.

“வெத்துக்கு டென்ஷன் ஏத்திட்டாண்டா”

“என்ன சொல்ற நீ? செத்தாதான் உனக்கு திருப்தியா?”

“அட.. தெரிஞ்சே பிலிம் காமிச்சானா தெரியாமயா?”

“இல்லடா. ஒரு வாரமாவே சீரியஸா யோசிச்சுகிட்டுதான் இருந்தான். அபூர்வ சகோதரர்கள் ரிலீஸன்னிக்கு கூப்டேன். அதுக்குக்கூட வரலை”

“என்ன மேட்டர்? இப்ப எதுவும் ரிஸல்டு கூட வரலையே?”

“வந்துச்சே போன வாரம் ஒரு ரிஸல்டு”

“யாருகிட்ட ஊத்தற? எனக்கும்தான் நாலு கப்பு இருக்கு. என்ன ரிஸல்டு வந்துச்சு?”

“அட எக்ஸாம் ரிஸல்டு இல்லப்பா.. லதா ரிஸல்டு”

“குள்ளி லதாவா? இந்த சொன்னையா? தேவையா இவனுக்கு இதெல்லாம்?”

“சும்மாவா? கவிதையா இல்ல பொழிஞ்சாரு அண்ணன்!”

“செருப்பால அடிச்சிருப்பாளே?”

“இல்லை.. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. தனியா கேண்டீன் பக்கம் போய் ரெண்டு மணிநேரம் அட்வைஸ். உனக்கு என்ன வயசு.. நாம படிக்க வந்திருக்கோம்.. உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.. ஆர் சுந்தரராஜன் பட ஹீரோயின் மாதிரி அட்வைஸ்! திருந்திடுவான்னு நினைச்சேன். இப்படி மாத்திரை வரைக்கும் போவான்னு நினைக்கலை”

சுந்தரமூர்த்தி சற்று அசைந்தான். கண் திறந்தது. “நான் எங்கே இருக்கேன்? சொர்க்கத்திலயா?”

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சொர்க்கமா தெரியுதாம்டா.. அந்த மாத்திரை இனிமே மார்க்கெட்லே செம பிக்கப் ஆயிடும்” சேகருக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி.

“ஏண்டா லூஸு இப்படி பண்ணே? அந்த மாத்திரை அவ்ளோ டேஞ்சரஸ் இல்லையாம் தெரியுமா?”

“என்ன சொல்ற கோபி? டேஞ்சரஸ் இல்லாத மாத்திரையைப் போட்டதையா லூஸுத்தனம்ன்றே?”

“நான் சாகறதுக்குள்ள .. அவளை.. ஒரு முறையாச்சும் .. பாக்கணும்..” குண்டடி பட்ட கதாநாயகன் போல திக்கித் திக்கிப் பேசினான்.

“என்னடா பண்ணலாம்? அவ வீடு பக்கத்துலதான். வேணா போய் மேட்டர் சொல்லி கூப்டிட்டு வரட்டுமா?”

“நடு ராத்திரியிலயா? அவங்க வீடுல அலவ் பண்ணமாட்டாங்களே.. அதுவும் இல்லாம இது என்ன மரணப்படுக்கையிலயா கிடக்குது?”

“இதாண்டா சான்ஸ். சேத்துவைக்க ஒரு ட்ரை பண்ணுவோமே? அனுதாபம் வொர்க் அவுட் ஆனா ஆவட்டுமே?வேஸ்ட்வாட்டர் வெளியதான் இருக்காரு- அவரைக்கூட்டிட்டு போனா அலவ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்”

“அவனைவிட நீ அதிகமா எக்ஸைட் ஆவறே!” கோபிக்கு ஏனோ என் ஐடியா பிடிக்கவில்லை.

”அட ஒழிஞ்சு போறாண்டா.. ஒரு ட்ரை அடிக்கலாமே” சேகர் ஓட்டும் என் பக்கம் சேர்ந்தது.

வார்டனுடன் கிளம்புகையில் “நான் வரேண்டா.. சேகர் இங்க இருக்கட்டும்” எனச் சேர்ந்துகொண்டான் கோபி.

ஐந்து நிமிடம் ஆனது லதா வீட்டுக் கதவு திறக்க. தெருவின் அத்தனை நாய்களும் எங்களை விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.லதாவின் அப்பா தூக்கம் நிரம்பிய கண்கள் சிவக்க கோபமாகத் தெரிந்தார். விஷயம் சொன்னவுடன் லதாவை எழுப்பினார்.

“அச்சச்சோ.. இப்ப எப்படி இருக்கார்?”

“எதுவும் சொல்றதுக்கில்லை.. உன் பேரையே சொல்லி புலம்பிகிட்டிருக்கான்” பில்ட் அப் தானே முக்கியம்.

”இதோ ஒரு பைவ் மினிட்ஸ்லே ரெடி ஆயிடறேன்.. உங்களுக்கு சில்வர் ப்ளஸ் ஓட்டத் தெரியுமா?” கியர் வண்டி. இரவில் முதல்முறை முயற்சிக்க வேண்டாமே என நான் தயங்க “நான் ஓட்டுவேன்” என்றான் கோபி.

”அப்ப நாங்க கிளம்பறோம். கோபி, நீ கூட்டிகிட்டு பத்திரமா வந்துரு. ரொம்ப தாங்க்ஸ் சார்” தண்டபாணி லதா அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டார்.

சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.

எங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் நேராக சுந்தரமூர்த்தியிடம் சென்று அவனை உலுக்கினாள்.

“எழுந்துருடா.. லூஸுப்பயலே! பொண்ணுங்கன்னா மட்டம்னு நினைச்சயாடா பொறுக்கி. உனக்கு உன் உயிருக்கு மரியாதை இல்லாம இருக்கலாம்.. எனக்கு அப்படி இல்லை”

“லதா.. அது வந்து”

“நிறுத்துடா இடியட். போன வாரம் கூட உன்னை புத்திசாலின்னுதான் நினைச்சேன்.. ஒருவேளை மனசுகூட மாறி இருக்கலாம். இப்ப சான்ஸே இல்லை. சாதாரண விஷயத்துக்கு மாத்திரை வரைக்கும் போற ஒரு அடிமுட்டாளோட எனக்கு எந்த ரிலேஷன்ஷிப்பும் எந்தக் காலத்துலேயும் வராது.”

“..” சுந்தருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வாயடைத்துதான் போய்விட்டது. மூன்றாம் நம்பர் பெட் இருமல்கூட நின்றுவிட்டது. ஆஸ்பத்திரியில் அதுவும் நள்ளிரவில் யாரும் இப்படி ஒரு சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கவில்லை. சுந்தர் கை நடுங்கியது முன்பிருந்தேவா இப்போதுதான் ஆரம்பித்ததா தெரியவில்லை.

“நான் பலமுறை சொல்லிட்டேன்.. உன்ன மாதிரி ஒரு ஃபூலோட என் லைபை கமிட் பண்ணிக்க நான் தயாரா இல்லை.. இதுக்கு மேலே செத்தா சாவு போ!”

“கோபி, என்னை ட்ராப் பண்ணிடறீங்களா?”

நல்லவேளையாக சுந்தரமூர்த்தி அதற்குப்பிறகு எந்த முயற்சியும் செய்யவில்லை.

லதா பத்ரகாளியாக மாறியது எனக்கென்னவோ குழப்பமாகவே இருந்தது. நிஜமாகவே கோபமா அல்லது சுந்தர் திருந்துவதற்காக கொடுத்த அதிர்ச்சி வைத்தியமா.. ரொம்ப நாட்களுக்கு இதற்கு விடை தெரியவே இல்லை.

போன முறை ஊருக்குப் போனபோது பொருட்காட்சியில் லதாவைப் பார்த்தேன். ஹாய் ஹல்லோ எல்லாம் முடிந்தபின்.. “கல்யாணம் ஆயிருச்சா? எத்தனை குழந்தைங்க?”

“சரிதான் போ.. உனக்கு விஷயமே தெரியாதா? காலேஜ் முடிச்ச அடுத்த வருஷமே நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோமே? ரெண்டு குழந்தைங்க.. அதோ வராரு பாரு உன் பிரண்டு.”

ரெண்டு குழந்தைகளுக்கும் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்து கைகொள்ளாமல் டெல்லி அப்பளங்களுடன் எங்கள் பக்கம் வந்துகொண்டிருந்தான் கோபி.
********************************************************************

பி கு: பெயர்கள் மாற்றப்பட்ட நிஜக்கதை. “சுந்தரமூர்த்தி” இன்று ஒரு தொழிற்சாலையில் ப்ரொடக்‌ஷன் ப்ளானிங் மேனேஜர். “கோபி” உள்ளூரிலேயே பொட்டிதட்டும் கடை வைத்திருக்கிறான். “லதா” அவனுக்கு ஆக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறாள்.

சங்கமம் போட்டிக்காக
எழுதியது.

Mar 2, 2009

அவன் அவள் கெமிஸ்ட்ரி

அலைகள் எட்டடி உயரத்துக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்றுக் கிடந்தது வெள்ளை மணல் கடற்கரை. பௌர்ணமி நிலா மஞ்சள் வெளிச்சம் கொட்டி சூழலை அழகாக்கிக் கொண்டிருந்தது. வித்தியாசமான கட்டடம் ஒன்று தன் பழைய பொலிவையெல்லாம் இழந்து பாழடைந்து கிடந்தது.

"ஜே இந்த இடம்தானா?"

"ஆம். என்றுதான் நினைக்கிறேன். சுற்றுவட்டாரத்தில் என்ன பார்க்கிறாய்?"

"கடல்-அலை-வெள்ளைமணல்-பௌர்ணமிநிலவு"

"போதாது. ஏதேனும் கட்டடம் தெரிகிறதா?"

"ஆம். வித்தியாசமாக இருக்கிறது. பிரமிட்டின் குழந்தை வடிவம் போல. கூம்பாக வானை நோக்கி"

"சரிதான். உன் ஜீன்கள் தமிழ்தானா? அது ஒரு கோயில். அலைவாய்க்கோயில் என்று சொல்வார்கள்"

"ஓ.. ஞாபகம் வருகிறது.. மாமல்லபுரம் என்பது பழைய பெயர் - சரியா?"

"சரியே! இன்னும் 24 விநாடிகள் அங்கே காத்திருக்க வேண்டி இருக்கும். அவள் இன்னும் 17இல்தான் இருக்கிறாள்"

24 விநாடிகள். என்ன செய்து பொழுதைப் போக்குவது? இந்த ஜேக்கு நேரத்தின் அருமையே தெரிவதில்லை. ஒரு புத்தகம் படிக்கலாமா? மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். விரல்கள் நடுங்குவது தெரிந்தது.

"கவிதை! கவிதைப் புத்தகம் படி. இப்போதைக்கு உனக்கு அதுதான் தேவை"

"ஜே. எத்தனை முறை சொல்வது? மனத்தையெல்லாம் படிக்காதே.. இது என் நேரம். கடமை நேரம் அல்ல!"

யதேச்சையான திருப்பலில் "விழிகள் விண்ணை வருடினாலும் விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான்" என்ன அர்த்தம் இதற்கு? ஜன்னல் கம்பி என்றால் என்ன?

"அதை விடு.. பக்கம் 48க்கு போ!" என்றான் ஜே காதோரம்.

"எதுவும் பிரச்சினை வராதே?

"நீ எதற்கும் தயாரானவன் சீ! உன்னால் முடியாததா?"

"உனக்கென்ன- பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய். நேரடியாக இறங்குபவன் நான் தானே"

"பயம் வேண்டாம். உனக்கு இது சுலபம்!"

"அவள் தயார்ப் படுத்தப்பட்டுவிட்டாளா?"

"ஆம். 5 சிசி"

"அவர்கள்?"

"காத்துக் கொண்டிருக்கிறார்கள்"

அவள் வண்டி வானில் தென்பட்டது. சிறிய வண்டி. அவள் அமரவும், ஒரு சிறு பெட்டி வைக்கவும் மட்டுமே இடம். மண்ணைச் சிதறடித்து இறங்கினாள்.

"திருவாளர் சீ"

"நானே!" என்றேன். அவள் மீதிருந்து கண்ணை எடுக்க முடியாமல். அளவான வடிவுகள், வளைவுகள்- சீருடையையும் மீறிய வசீகரம்.

"வசீகரம் என்றால் என்ன?" என்றான் ஜே.

சும்மா இருடா - மனத்துக்குள்ளேயே அவனுக்கு பதில் சொல்லிவிட்டு "உங்கள் பெயர்?" என்றேன் அவளிடம்.

"எனக்கு பெயர் கிடையாது. 44 என்பது என் பணி எண் - உங்கள் அடையாளம் காட்டுகிறீர்களா?" பெட்டியிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தாள்.

கிளம்புகிறாளே. எப்படி நிறுத்துவது? "நீங்கள் உணவருந்திவிட்டீர்களா?"

"ஒரு மணிக்குதான். இடை நேரங்களில் எதுவும் சாப்பிடக்கூடாது"

"தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு கேள்வி"

கேள்விக்குறியாய் புருவம் தூக்கினாள்.

"நீங்கள் மனிதப்பிறவிதானே? எந்திரள் அல்லவே?"

சிரிப்பு போலவே அவள் உதடு குவிந்தது. "மனிதள்தான்!"

"அமருங்களேன் உணவருந்தலாம்"

"இல்லை என்னை அடுத்த கடமை அழைக்கிறது"

அடுத்த கடமையா?

"இல்லை. அவற்றை கவ்னித்தாகி விட்டது" ஜே குசுகுசுத்தான்.

"இந்த அழகிய மாலை, ஆர்ப்பரிக்கும் கடலலை, மஞ்சள் நிலா - இதை விடுத்து அடுத்த கடமையா? எனக்காக சிறிது நேரம் அமரமாட்டீர்களா?"

வண்டியிலிருந்த திரையைப் பார்த்தாள்."ஆமாம்.. வேறு கடமைகள் இன்று இல்லை! என்ன ஆச்சரியம்!"

"இந்த உணவு எனக்கு மிக அதிகம். நீங்களும் பங்கு கொள்கிறீர்களா?"

"இல்லை வேண்டாம். நான் கிளம்புகிறேன். அறையில் வேலைகள் இருக்கின்றன; இந்த எதிர்பாராத விடுமுறையை உபயோகிக்க உத்தேசம்" கிளம்பிவிட்டாள்.

ஜே. திட்டத்தின் அடுத்த கட்டம்..

"இதோ"

அவள் வண்டி வேகமெடுத்து மேலேறுவதற்கு முன்னர் எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் நான்கு வண்டிகள் அவளைச் சூழ்ந்து அவளைத் தரையிறக்கின. நானும் அவள் வண்டி இருக்குமிடத்துக்கு ஓடினேன்.

"அழகிய பெண். மனிதள் போல!" என்றான் அவளைச் சூழ்ந்த நால்வரில் ஒருவன்.

"ஆம். மனிதளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது"

"பெண்ணே உன் உடைகளை அவிழ்"

44 ந் முகத்தில் கலக்கம். "எனக்கு அதற்கு ஆணையில்லை"

"ஆணையும் வேண்டாம் ஆனையும் வேண்டாம். நீயாக அவிழ்த்தால் வன்முறை தேவையில்லை"

என்ன ஜே இது பிராசமாகப் பேசுகிறார்கள்! நாடகத்தனமாக இருக்கிறார்களே.. அவள் புரிந்துகொண்டுவிடப்போகிறாள்!

"அவளுக்கு அவ்வளவு மூளை கிடையாது"

44க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. "யாரடா நீங்கள்? என்ன செய்கிறீர்கள் அந்தப் பெண்ணை"

"இதைக் கவனி.. அவளைக் காப்பாற்ற வந்த வீரனை முதலில் முடிக்கலாம்"

நால்வரும் என் மீது பாய, நான் அவர்களை அடிக்க, அவர்கள் என்னை அடிக்க.. மூன்று நிமிடங்களின் முடிவில் அவர்கள் தோற்று ஓடி வண்டியேறிப் பறந்தார்கள்.

"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?" நன்றி என்ற வார்த்தை பழகாவிட்டாலும் அவள் குரலில் நன்றி இருந்தது.

"நீங்கள் என்னுடன் அமர்ந்து உணவருந்தி இருந்தால் இது நிகழ்ந்திருக்காது"

அமைதியாகவே என்னுடன் வந்தாள். "அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்கள் அழகு அப்படி"

"கலக்கறே சீ!" என்றான் ஜே.

"அழகாகவா இருக்கிறேன்?"

"அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் இருக்கிறது என்று ஒரு பழைய பழமொழி. நீங்கள் எல்லார் கண்ணிலும் அதை ஏற்றக்கூடியவர்"

"நீங்கள் பேசுவது பெரும்பாலும் புரியவில்லை"

"ஞாயும் ஞாயும் யாராகியரோ"

"இது சுத்தமாகப் புரியவில்லை"

"இது சங்ககாலத் தமிழ்க் கவிதை. எங்கே பிறந்து எங்கே வளர்ந்தாலும் அன்புடை நெஞ்சம் கலந்துவிடும் என்று அர்த்தம்"

"நெஞ்சம் என்றால் இதயமா? அது எப்படிக் கலக்கும்?"

"செம்புலப் பெயல்நீர் போல"

"எங்கள் உணவகத்தில் அந்த நீர் கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டும்தான்" நகைச்சுவையாகப் பேசுகிறாளா இல்லை நிஜமாகவே அப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டாளா? எதையும் காட்டாத முகபாவம்.

"உங்களை இதற்கு முன்னால் எங்கேயாவது சந்தித்திருக்கிறேனா?"

"இருக்கலாம். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இதே உணவகத்தில் வேலை செய்கிறேன்"

"மூன்று அல்ல.. முன்னூறு ஆண்டுகளாகப் பார்த்த ஞாபகம். ஜன்ம ஜன்மமாய்த் தொடரும் பந்தம்"

"முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நான் பிறக்கவே இல்லை!" இப்போது நிஜமாகவே சிரித்தாள்.

"சிரிக்கிறாளா.. அற்புதம். இன்னும் கொஞ்சம் கஷ்டப்படு! மடிந்துவிடுவாள்"

"பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்ட பந்தமாகத்தான் நான் உணர்கிறேன். நீ?"

"எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஆனால் உங்களை முன்னமேயே பார்த்த உணர்வு எனக்கும் இருக்கிறது"

"முதல் பார்வையில் காதல் வருமா என நேற்று கேட்டிருந்தாலும் இல்லை என்றுதான் சொல்லி இருப்பேன்"

"இன்று?"

"இன்றுதான் உன்னைச் சந்தித்து விட்டேனே.. என் முன் அனுபவங்கள் அனைத்தும் மாறிப்போயின. இன்று - இக்கணம் புதிதாய்ப் பிறந்தவன் போல உணர்கிறேன்!"

"கவித கவித" ஜே சும்மாவே இருக்கமாட்டான்.

"நீங்கள் பேசுவது முழுவதும் புரியாவிட்டாலும் நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது" அவள் கண்ணில்.. இதுதான் காதலா?

"இன்னும் இல்லை. அவளை உன் முடிவுக்குக் கட்டுப்படவை" ஜே புத்தகப்புழு. அவனுக்கு முடிவுகளை நிரூபிக்கவேண்டும்.

"என் இல்லத்துக்குச் செல்லலாமா? 15 நிமிடம்தான் ஆகும். அங்கும் கடற்கரை, இதே நிலவு, மாலை இப்போதுதான் துவங்கி இருக்கும்.. என் கவிதைப் புத்தகத்தைக் காட்டுகிறேன்"

"கவிதையா? நீங்கள் எழுதுவீர்களா?"

"கவிதை மட்டுமா? காற்றிலேறி அந்த விண்ணையும் சாடுவோம் - காதல் பெண்டிர் கடைக்கண் பார்வையில்!"

"இது உன் கவிதையாடா? அவளுக்குத் தெரியாதுன்ன வுடனே பொளந்து கட்றான் பாரு"

"மிக அழகாகப் பேசுகிறீர்கள். உங்களுடனேயே இருந்துவிடலாம் போல் இருக்கிறது"

"கிளம்பிவிடு. உணவகத்தில் இரண்டுநாள் தேடுவார்கள் அப்புறம் கைவிட்டு விடுவார்கள்."

"பிறகு?"

"நமக்காக ஒரு புது உலகம் காத்திருக்கிறது. காதல் செய்வோம்! சம்போகம்! ஆணும் பெண்ணும் கலக்கும் அற்புத வினாடிகள்! இன்றைய நடைப்பிணங்கள் வாழ்நாளில் கண்டிராத இன்பத்தின் உச்சம் காண்போம். தொழிற்சாலை வேண்டாம். நம் இல்லத்தில் உருவாக்குவோம் நம் சந்ததிகளை! காதலினால் மனிதர்க்கு கலவி உண்டாம் - கவலைபோம் - ஆதலினால் காதல் செய்வோம்!"

அவளை லேசாக அணைத்து மேல் நெற்றியில் ஒரு முத்தமிட்டேன். சிலிர்த்தது இருவருக்கும்.

அவள் என் வலது காதை வருடினாள். பின்னர் இடது காதோரம் வந்து,

"ஜே.. உங்களுக்கும் கேட்கும் என நம்புகிறேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட காதல் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததற்காகவும், அரசு அனுமதியின்றி திருடப்பட்ட எஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை உபயோகித்து உணர்ச்சிகளை தூண்டியதற்காகவும், அரசின் ஜனத்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் 1208ன் கீழ் உங்கள் இருவரையும், 244, அமைதி காப்புப் படைக் காவலாளியாகிய நான் கைது செய்கிறேன். உங்கள் உணர்ச்சிநீக்குத் தண்டனை இன்னும் சில விநாடிகளில் நிறைவேறும்."
***********************
குறிப்பு: அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டிக்காக ஆக்கப்பட்டது. ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி. மேட்டர் இல்லாத நேரத்தில் போட்டி ஆக்கத்தை பதிவில் போடலாம் எனத் தூண்டி “நானும் ப்ளாக்கர்தான்” எனச் சொல்ல வைத்ததற்காக!

Jan 8, 2009

சிறுகதை: ஓர் இரவு

ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட அருவருக்க வைக்கவில்லை. அனாதரவாக விட்டுவிட்டு வந்திருக்கும் லாப்டாப் நினைவும் பயமுறுத்தவில்லை.


இவ்வளவு மகிழ்ச்சியாய் எல்லா செல்களிலும் புத்துணர்வோடு எப்போது இருந்தேன் கடைசியாக? ம்ஹூம் – ஞாபகமே இல்லை.


திரும்பி இருக்கையில் அமரும்போதும் எதிர் சீட்டில் இன்னும்"என்னைக்-கற்பழிக்க-வந்த-காமாந்தகாரா" பார்வையுடன் முறைத்துக்கொண்டிருந்தாள் மூதாட்டி. சீட்டுக்கடியில் பெட்டி நுழைத்தபோது லேசாக இடித்த கோபம் இன்னும் குறையாமல் டெக்கான் ஹெரால்டுக்குள் மூழ்கி இருந்தார் அவள் மூக்குக்கண்ணாடிக் கணவர்.


ரயில் சினேகத்தின் பேட்டர்ன் தொடர்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் கோபம் மறையும், "நீங்கள் மேல்பர்த்துக்கு" வேண்டுகோள், புளிசாதப் பகிர்வு, நாட்டைக் கெடுக்கும் சக்திகள் பற்றிய கருத்துரையாடல், இறங்குகையில் தொலைபேசி எண் பரிமாற்றம், பின் அவரவர் வழி என்றும் மாறாத வரிசை.


இன்று அதைப் பற்றியெல்லாம் என் கவலை செல்லவில்லை. யாரிடமாவது என் சாதனையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன். இன்னும் கருணை காட்டவில்லை. ஊருக்குச் சென்றதும் முதல்வேலையாக இதை ரோமிங்காக மாற்றவேண்டும். லாப்டாப்பிலும் சக்தி இல்லை


ஏன் இப்படி ஊர்கிறது இந்த ரயில்? இந்த நேரத்தில் வாரங்கல் வந்திருக்கவேண்டாமா?


"நீங்களும் சென்னைக்கா?" டெக்கான் ஹெரால்ட் முடிந்துவிட்டது போல.


இதென்ன கேனத்தனமான கேள்வி. இந்த ரயில் என்ன ஆம்ஸ்டர்டாமா போகிறது?


நக்கலைத் தவிர்த்து சினேகமாகத் தலையாட்டினேன்.


வாய்யா வா! அடுத்த கேள்வி மேல் பர்த்தானே?


"ஹைதராபாத்தில் வேலையா?"


"இல்லை. சென்னைதான். ஹைதராபாத்தில் ஒரு சின்ன ட்ரபுள்ஷூட்டிங் வேலை"


"ஓ சாப்ட்வேரா?" இவர்களுக்கு என்ன புரியும்? டாடா எண்ட்ரியிலிருந்து ராக்கெட் நுட்பம் வரையில் எல்லாவற்றையும் ஒரே கோணிக்குள் அடக்கிய சாப்ட்வேர் தவிர்த்து.


"இப்ப சாப்ட்வேர் மார்க்கெட் டல் போலிருக்கே" டெக்கான் ஹெரால்டில் பிசினஸ் பக்கங்களும் உண்டு போல.


"கொஞ்சம் டல்தான். ஆனால் எங்கள் கம்பெனியில் பிரச்சினை இல்லை. இப்போதுகூட ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட் நடக்குது, இது மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா இந்தியாவோட எகானமியே மாறிடும்"


"ஓ! முடிஞ்சுடுச்சா?"


"ஏறத்தாழ! அதுல ஒரு சின்ன ப்ராப்ளம். அதைச் சரிசெய்யத்தான் நான் வந்தேன். ரெண்டு நாள் முன்னாடிதான் கிளம்பினேன்"


"சரி ஆயிடுச்சா?"


"ஆச்சு! ரெண்டு நாள்லே முடியும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! என் பாஸ்க்கு கூட இன்னும் தகவல் தெரியாது.. அவனுக்கு நிச்சயம் ஏமாத்தம்தான்" இதையெல்லாம் நான் ஏன் இவரிடம் சொல்கிறேன்? யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்துதல் என்னைப்போட்டு படுத்திக் கொண்டிருந்தது..


"பாஸை அவன் இவன்னு சொல்றீங்க?"


"அவன் என் வயசுதான் சார். ஒரு கிரேட் மேலே அவ்ளோதான்.. என்னைப் பழிவாங்கணும்னே ஹைதராபாத் அனுப்பினான்"


"ஒரு களிமண்ணைப் பிடிச்சு பாஸ்னு பேர்வச்சாலும் அப்படித்தான்.. என் மேலதிகாரி என் கல்யாணத்துக்குக் கூட அரைநாள்தான் லீவ் கொடுத்தான். வருவேனோ மாட்டேனோன்னு இவ கண்ணுல தாரைதாரையாக் கண்ணீர்.. மையெல்லாம் அழிஞ்சு பாக்கவே கோரமா இருந்தா.. ஞாபகம் இருக்காடி?"


'டி' இந்த சம்பாஷணையில் மகிழ்ச்சியுறவில்லை. குமுதத்தில் நிலைத்த பார்வையை மாற்ற் யத்தனிக்கவில்லை.


"எனக்கும் ஏறத்தாழ அதே நிலைமைதான். இன்னும் மூணுநாள்லே கல்யாணம். இந்த வேலை ஒரு வாரம் பிடிக்கும்னு எஸ்டிமேட். அப்பவும் என்னை அனுப்பினான்"


"ஓ.. வாழ்த்துக்கள்! நல்லா இருங்க.. இவ்ளோ டைட்டா ஏன் போகணும்?"


"வேலையில இருந்த ஒரு கவர்ச்சிதான் சார்! யாராலயும் முடியலைன்னு கைதூக்கிட்ட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணா வர சாடிஸ்பேக்‌ஷன் வேற எங்கேயுமே கிடையாது சார். அந்த ரிஸ்க் எனக்குப் பிடிக்கும்.."


"ஆமாம். வொர்க்லே டெடிகேஷன் இருக்கறத் இப்பல்லாம் பாக்கவே முடியறதில்லை!"


"அப்படி பொதுவா சொல்லிட முடியாது சார். எங்க டீம்லே உள்ள எல்லா மெம்பருங்களுமே ரொம்ப டெடிகேட்டட் தான் இன்னும் சொல்லப்போனா இந்தக் காலத்துலதான் டெடிகேஷன் அதிகமா இருக்கு"


"நான் பொதுவா பாக்கறதை சொன்னேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. இந்தக்காலத்துப் பசங்களுக்கு பொதுவாவே தகுதிக்கு மீறிய வருமானம். பொறுப்பில்லாம வர பணத்தையெல்லாம் தண்ணியடிச்சு கூத்தடிச்சு கரைக்கறது. இதையெல்லாம்தானே பாக்கறோம்.. அதை வச்சி சொன்னேன்"


"சில பேர் அப்படியும் இருக்கலாம்.. ஆனா என்னைப்போல ஆளுங்க எல்லாம் சம்பளத்தை புத்திசாலித்தனமா இன்வெஸ்ட் செய்யறோம்.. என் பணமெல்லாம் என் கம்பெனியிலேயே இருக்கு மொத்தம் ஷேரா"


"ஓஹோ.. நல்ல விஷயம்தான்" பெரிசு அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டதை உணர்ந்து அமைதியானார்.


மறுபடியும் போனை எடுத்துப் பார்த்தேன். ம்ஹூம்..


"சார் உங்ககிட்ட போன் இருக்கா? ஒரு மிஸ்டு கால் கொடுத்து விடறேன். அவங்க கால் பண்ணுவாங்க"


"அவங்க ன்னா? அவங்களோ?" பெரியவர் கண்ணடிப்பது போல முயற்சித்தார். நானும் அவர் ஆசைப்படி அசடு வழிந்தேன்.


செல்போனை இவ்வளவு பத்திரப்படுத்திப் பார்த்ததில்லை நான். கட்டைப்பைக்குள் ஒரு கஷ்கப்பை அதற்குள் பாலிதீன் உறையில் பவுச். அதற்குள் இருந்த அரதப் பழைய மாடல்.


இரண்டே நிமிடத்தில் போன் வந்துவிட்டது. காத்திருந்திருப்பாள்.


"தூங்கிட்ருப்பேன் தெரியுமா?"


"நீ தூங்கியிருக்கமாட்டே.. அதுதான் எனக்குத் தெரியும்"


"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது. ஒரு டுபாக்கூர் போனை எடுத்துகிட்டு ஹைதராபாத் போகலைன்னு யாரு அழுதா?"


"போன்லே என்ன பிரச்சினை? சர்வீஸ்தானே?"


"நேரு சொன்ன மாதிரி ஐ ஆம் நாட் இண்ட்ரஸ்டட் இன் எக்ஸ்க்யூஸஸ்"


"துரைசாணி இங்கிலீச் எல்லாம் பேசுது"


"போடா இடியட்.. யாரு உன்னை இந்த வேளையில ஊரைவிட்டு போகச்சொன்னது?"


"கடமைம்மா.. கடமை! சோறு போடற கம்பெனிக்கு விசுவாசம்!"


"ஓவர் சீன் ஒடம்புக்கு ஆவாது கண்ணா! என்ன ஆச்சு? வேலை முடிஞ்சுதா?"


"யாரைப்பாத்து என்ன கேள்வி? ராஜா கைய வச்சா.. அது ராங்கா போயிருக்கா?"


"சரி சரி! அளப்பறை தாங்கல! சிவாக்கு தெரியுமா?"


"எங்கே..கடைசி நேரத்துல ப்ளைட் டிக்கட் கிடைக்காம ட்ரெயின்ல வரேன்..

சிக்னலே கிடைக்கலை.. உனக்கே இவ்ளோ லேட்டா பண்றேன்"


"அவனை இந்த நம்பருக்கு கால் பண்ணச் சொல்லட்டுமா?"


"வேணாம் வேணாம்.. ஒரு பெரிசு கிட்ட வாங்கி போன் பண்றேன்..புதையல் காத்த பூதம் போல கற்பு கழியாம வச்சிருக்காரு போனை!"


"அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர்.. என் தம்பிக்கு 10 லட்சம் பேங்க் பேலன்ஸ் காட்டணுமாம். அப்பா வேறெங்கேயோ ட்ரை பண்ணாரு.. நான் தான் சொன்னேன்.. வேணாம்.. ஒரு இளிச்சவாயன் பணத்தை என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுகிட்டிருக்கான்னு"


"அட.. என் பணமெல்லாம் ஷேர்லே முடங்கி இருக்கே அதை மறந்துட்டியா?"


"முட்டாளே.. நீதான் ஒரு பேங்கர் கிட்டே பேசறோம்ன்றதை மறந்துட்டு பேசறே.. அதை ப்லெட்ஜ் பண்ணி ஷார்ட் டெர்ம் லோனா வாங்கித்தர கூட என்னால முடியாதா?"


"ஓக்கே.. அதை நீயே பாத்துக்க.. அப்புறம்?"


"அப்புறம் என்ன? எனக்காக என்ன வாங்கி வரே?"


"என்னையே வாங்கிவரேன்.."


"அதை வச்சு என்ன பண்றது? கால் காசுக்கு பிரயோஜனமா?"


"லைப் டைம் இன்வெஸ்ட்மெண்டும்மா!"


"இப்படியெல்லாம் பயமுறுத்தாதே.. ரீ கன்ஸிடர் பண்ணவேண்டி இருக்கும்"


"அவசர அவசரமா வந்து ட்ரெயின் ஏறறேன்.. கடைக்கெல்லாம் போகநேரமே இல்லடி கண்ணு!"


"கொஞ்ச ஆரம்பிச்சுடுவியே உங்கிட்ட ப்ராப்ளம் இருந்தா"


"அப்புறம்"


பெரிசு தூரமாக இருந்தாலும் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார்.. சில்மிஷ்மான சிரிப்போடு "ஸ்வீட் நத்திங்ஸா" என்றார்.


"ஆமாம்.. கொஞ்ச நாள் போனாதான் நத்திங் இஸ் ஸ்வீட்னு தெரிய வரும்"


புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பேன் வேகமாக சத்தம் மட்டும் போட்டது. ஒருவழியாக தூக்கம் வந்து கலைந்தபோது ரயில் நின்றுகொண்டிருந்தது.


"சென்னை வரலை?"


"சரியாப்போச்சு.. மூணு மணி நேரம் லேட்.. இப்போதான் நெல்லூர் உள்ளே எண்டர் ஆகுது"


பெரியவர் நெல்லூரிலும் இறங்கி எப்படியோ நியூஸ்பேப்பரை மட்டும் வாங்கி வந்துவிட்டார்.


அவர் மூன்றாம் பக்கம் படிக்கத் திருப்பும்போதுதான் பார்த்தேன் முதல்பக்கத்தில் நான் ஓட்டாண்டியான கதையை.

Nov 14, 2008

கருவி - சிறுகதை (14 நவ08)

சட்டக்கல்லூரி சம்பவங்களை நினைவுபடுத்தும் இந்தச் சிறுகதையின் நிகழ்வுகள் (சில இட்டு நிரப்பல்கள் தவிர்த்து) உண்மையில் நடந்தவை - 1988-89ல்.

கருவி

விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்கி உள்ளே நடந்தேன்.

"வாணியம்பாடி, திருப்பத்தூர்" என்று கூவிக்கொண்டிருந்த கண்டக்டர் என்னைப்பார்த்ததும் முகம் மாறினான்.

"நீ சரவணன் இல்லே?"

பத்து வருடம் கழிந்தாலும் என்னை நினைவு வைத்திருக்கிறான். நான் செய்த காரியத்துக்கு அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன..

"கலாட்டா பண்ணாம இருக்கறதுன்னா வண்டிக்குள்ளே ஏறு. ஏறுமாறா நடந்தேன்னா இறக்கி வுட்டுறுவேன்"

முன்னெல்லாம் என்னைப் பார்த்தாலே பயந்துவிடுவான். பதிலேதும் பேசாமல் ஒரு ஓர சீட்டைப் பார்த்து அமர்ந்தேன்.

பஸ் வேகமெடுக்க அதிகாலைக் குளிர் காற்று முகத்தில் அறைந்தது. கொஞ்ச நேர ஓட்டத்திலேயே பஸ் நிறைந்துவிட்டிருந்தது. அதே காலை நேரம், பஸ் முழுவதும் எஞ்சினியரிங் மாணவர்கள் மினிட்ராப்ட் துருத்திய பைகளுடன் கதை அடிக்கும் சத்தம், முன்சீட்டுப் பெரிசுடன் அந்தக்கால கதை பேசிக்கொண்டு டிரைவர்.. எதுவுமே பெரிதாக மாறிவிடவில்லை.

இரண்டு பயணிகளை ஏற்ற விண்ணமங்கலம் புளியமரத்தில் வண்டி நிற்க, மரத்தில் கிறுக்கல் - கீதா ஐ லவ் யூ - மறக்கத் துடித்திருக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டது...

_____________________________________________________________

"சரவணன், சுவற்றில் ஆபாசமாக எழுதியது நீங்கள்தானே?" பிரின்ஸிபாலின் கோபம் அவருடைய செயற்கையான மரியாதையில் தெரிந்தது.

அவர் அலுவலகத்தின் ஒரு மூலையில் நான் நிற்க, அவரின் எதிர் சீட்டுகளில் மெக்கானிகல் கணேஷ், பிஸிக்ஸ் தேவசகாயம், சரளா (வேண்டுமென்றே கணேஷை விட்டு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்திருந்தாள்) தவிர கம்ப்யூட்டர் ராஜாவும் இருந்தான்.

"எனக்கு நல்லாத் தெரியும் - அது உன் கையெழுத்துதான்" கணேஷ்

"ஏண்டா என்னைப்பத்தி இவ்வளவு கேவலமா எழுதினே" சரளா கண்ணில் கண்ணீர்.

நான் ராஜாவைப்பார்த்தேன். மிக நுணுக்கமாக தலையை ஆட்டியதைப் புரிந்து கொண்டேன்.

"நான் எழுதலே சார். என்னைப்போலவே வேற எவனோ எழுதியிருக்கான்"

"உங்களைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்"

"ஒரு அப்பாவியை அநியாயமாக சஸ்பெண்ட் செய்தீர்களானால் ஸ்டிரைக் வெடிக்கும் சார்"

"பயமுறுத்துகிறாயா?"

"இல்லை சார், நம்ம கிட்டே சாலிட் ப்ரூப் இல்லை..இப்போ இந்த மாதிரி ஆக்-ஷன் எடுத்தா பிரச்சினை ஆயிடும்" ராஜா சாதாரண ஆசிரியர்தான். ஆனாலும் கரெஸ்பாண்டெண்ட்டின் தம்பி மகன்.

வெளியே ஆவலுடன் காத்திருந்தார்கள் நண்பர்கள்.

"என்ன ஆச்சு தலைவா?"

"முதல்லே சிகரெட்டைக்கொடு"

கொஞ்சம் தூள் கசக்கிப் புகைத்தபின்தான் சற்றுப்பதட்டம் குறைந்தது.

"சொட்டைத்தலையன் சஸ்பெண்டுன்னு ஒத்தைக்கால்லே நின்னான்.. ராஜா சார் நம்ம பக்கம் பேசின உடனே சொட்டைக்கு முகமே தொங்கிப்போச்சு."

செல்வின் ஓடிவந்தான்.

"ராஜா சார் சாயங்காலம் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாரு."

"சரி போயிடறேன்..ராத்திரி கச்சேரி எங்கே?"

"உமாஷங்கர் வீட்டுலே எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. சரக்கு என்னுது, சால்னா பழனி"

_____________________________________________________________

மாலை வீட்டில் ராஜா கோபமாக இருந்தான்.

'என்னடா.. வேற ஆளை விட்டு எழுத மாட்டியா? உன் கையெழுத்து அது-இதுன்றான் கணேஷ்"

"அவசரத்துக்கு வேற யாரும் கிடைக்கலே சார்"

"நேத்து பெரியப்பா வந்திருந்தார். நெல்லு மண்டியாருக்கு கரெஸ்பாண்டெண்ட் ஆவணுமாம். மில்லுக்காரர் அவருக்கு சப்போர்ட்டாம்"

"பத்திரிக்கையிலிருந்து வராங்கன்னு சொன்னீங்களே"

"நாளைக்கோ நாளை மறுநாளோதான் வருவாங்க. சீக்கிரமா இந்த பிரின்ஸிக்கும் கணேஷுக்கும் ஒரு வழி பண்ணியாவணும்"

"பத்திரிக்கைல வர்றத வச்சு என்ன சார் பண்ண முடியும்?"

"முட்டாள் மாதிரி பேசாதே - நம்ம வார்த்தைய வச்சு மட்டும் அவனுங்களை தூக்க முடியாது. நெல்லு மண்டியார் கேக்க மாட்டார். பத்திரிக்கையிலே ஸ்ட்ராங்கா வந்துச்சுன்னா அத்தனை பார்ட்னருங்களுக்கும் வேற வழி இருக்காது. இப்போ மட்டும் சும்மா விட்டா, பிரின்ஸியும் கணேஷும் சேர்ந்து நம்ம எல்லாரையும் காலி பண்ணிடுவானுங்க"

_____________________________________________________________

பஸ் நிறுத்தம் வரை சென்று திரும்புவதைவிட கொஞ்ச முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம். ராஜா வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தச் சொல்லலாம்.

"உனக்காக நிறுத்த எல்லாம் முடியாது. வேணுமுன்னா ஸ்லோவா ஓட்டச்சொல்லறேன்.. நீதான் ரன்னிங்லேயே இறங்குவியே.. பத்து வருஷத்துலே மறந்து போச்சா"

பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்ததில், இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது.

ராஜா வீட்டின் முன்புறம் மாறிவிட்டிருந்தது. தாழ்வாகப் போடப்பட்ட ஓலைக்கூரை உள்ளே இருந்த பகட்டை மறைத்து எளிமையாகக் காட்டிக்கொண்டிருந்தது. வாசலில் நாலைந்து கரை வேட்டிகள்.

"யாரு வேணும்"

"அவரோட பழைய ஸ்டூடண்ட், சரவணன்னு"

"நீதானா அது? கரஸ்பாண்டெண்ட் அய்யாகிட்டே சொல்லறேன்"

சரிதான், மறுபடியும் அதிகாரம் கைமாறிவிட்டதா.

ராஜா பெருத்துப் போயிருந்தான். முழு அரசியல்வாதியாக ஆகிவிட்டான் என்பது வெள்ளை சட்டையிலும், பகட்டுச் சங்கிலியிலும் தெரிந்தது. தூக்கக்குறைவும், நேற்றைய போதையின் மிச்சமும் கண்களில் சிவப்பாகத் தெரிந்தது,

"வாடா வா.. இவன் யாரு தெரியுதா அறிவழகன், சரவணன்! இவன் துணை மட்டும் இல்லாட்டா நான் வாத்தியாராவே ரிட்டயர் ஆயிருப்பேன்."

"பெரிய ஆளாயிட்டே ராஜா.. என்னை ஞாபகம் கூட வச்சிருக்கியே"

"அறிவழகன் கொஞ்சம் வெளியே இருங்க" என்றான் ராஜா நான் ஒருமைக்கு மாறிவிட்டதைக்கண்டு.

"கதவு திறந்தே இருக்கட்டும்" என்றேன் அறிவழகனிடம்.

"உன் கோபம் எனக்குப் புரியுது.. நான் ஒன்னும் பண்ண முடியாத நிலைமையிலே இருந்தேன் சரவணா.. நீ பண்ண வேலை அப்படி"

"யாருக்காக செஞ்சேன்?"

"எனக்காகதான் செஞ்சே, நான் இல்லேங்கலியே, ஆனா அன்னிக்கு நான் உனக்கு உதவி செய்ய வந்திருந்தேன்னா அன்னிக்கே என்னை கட்டம் கட்டியிருப்பாங்க. எழுந்திருச்சிருக்கவே முடியாது. எல்லார்கிட்டேயும் உனக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாதுன்னு சொல்லிகிட்டே வக்கீல் வைக்க முடியுமா நீயே சொல்லு!"

"அதுவும் இல்லாம என் உபயோகமும் முடிஞ்சு போச்சு - இல்லையா?"

"என்ன பேச்சு பேசறே நீ? நீ மட்டும் நான் சொன்னதையா செஞ்சே? யோசிச்சுப் பாரு?"

யோசித்துப் பார்த்தேன்..

_____________________________________________________________

"நீதி கேட்டுப் போராட்டம்" "உண்ணாவிரதம்" "மாணவரை மதியாத முதல்வர் ஒழிக" பலவிதமான தட்டிகள் நடுவே உட்கார்ந்திருந்தேன்.

"தலைவா.. போர்வாள் பத்திரிக்கையிலே உன் போட்டோ வந்திருக்கு பாத்தியா?"

"முதல்வர் ஊழல், தட்டிக்கேட்ட மாணவன் டிஸ்மிஸ்" என்று அட்டையிலேயே என் புகைப்படம் போட்டிருந்தார்கள்.

"செமெஸ்டர் எக்ஸாம் வேற வருது தலைவா..ஸ்டுடெண்டுங்கள ரொம்ப அடக்கி வைக்க முடியாது"

"இன்னும் ரெண்டு மூணு நாளில எல்லாம் மாறிடும், நிறுத்திடலாம், தலைவன்றீங்க.. நான் சொல்ற பேச்சை மீறி நடப்பீங்களா?" புகழ் போதை என் தலைக்கு ஏறிவிட்டிருந்தது.

எதிர்பார்த்ததற்கு நேர் எதிராக எல்லாம் நடந்து கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ராஜாவைச் சந்திக்கும்வரை.

"நூறு ஸீட்டுடா.. எல்லாம் போச்சு! அவனுங்க செய்யறதைத்தான் செய்துகிட்டிருக்காங்க. உன்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. ஆடறாங்கடா.. ஸ்டிரைக்கும் பிசுபிசுத்துப் போச்சு.. பத்திரிக்கையிலே வந்ததுக்கும் ஒரு எபெக்டும் இல்லே.." கோபமாகப் புலம்பினான் ராஜா.

"இப்போ என்னதான் சார் செய்ய?"

"போராட்டத்தை நிறுத்திடு. அடுத்த வாரம் எக்ஸாம் ஆரம்பிக்குது, நீ எழுதறதுக்குப்போ"

"என்னைத்தான் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே..எக்ஸாம் ஹாலுக்கு உள்ள விட மாட்டாங்களே"

"அதுதானேடா திட்டமே" விளக்கினான் ராஜா.

பரீட்சை அன்று காலையிலிருந்தே பதட்டம் அதிகமாக இருந்தது. ஏற்றிய சரக்கு உதவவில்லை. நாலைந்து பாக்கெட் தூளைக் கசக்கிப் புகைத்தும் பயனில்லை.

பரீட்சை அறைக்குள் கணேஷ் வினாத்தாள்களை வினியோகித்துக்கொண்டிருந்தான்.

"டேய் கணேஷ் பாடு, என் சீட்டு எங்கேடா"

"சரவணன் - கெட் அவுட் ஆப் ஹியர்.. பரீட்சை நடக்கிறது..கலாட்டா பண்ணாதே"

"எனக்குக் கொடுடா கொஸ்டின் பேப்பர்" என்று அவன் கையிலிருந்து பேப்பர்களைப் பிடுங்கினேன். அவன் கையை உதறிய வேகத்திலும் ஏறியிருந்த போதையிலும் சடாலென கீழே விழுந்தேன்.

பாக்கெட்டிலிருந்த புட்டியும் விழுந்ததில் உடைந்து நாற்றமெடுக்க, அமைதியாக இருந்த மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, தேர்வுக் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

வெறியும் கோபமும் தலைக்கேற, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன்..

_____________________________________________________________

"கணேஷ் வாத்தியாரின் வீடு இந்தச் சந்துதானே" வேகமாக வந்ததில் மூச்சு இறைக்கக் கேட்டேன்.

"அவர் போயி பத்து வருசமாச்சேப்பா - அவங்க சம்சாரமும் குழந்தையும் அந்த மூணாவது வீட்டுலே இருக்காங்க"

மூன்றாவது வீட்டு வாசலில் கில்லி ஆடிக்கொண்டிருந்தான் அவர் மகன்..பெரியவனாகிவிட்டிருந்தான். எத்தனை முறை இவனை கணேஷின் டிவிஎஸ் 50ன் முன்னால் நிற்கப் பார்த்திருப்பேன். சட்டை இல்லை, கிழிந்த டிரௌசர்..என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கதவைத் தட்ட வெளியே வந்த கணேஷின் மனைவி ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.. நான் இங்கேயே வருவேன் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சி.. "இன்னும் யாரைக்கொல்ல இங்கே வந்திருக்கே? உனக்கு வெறி இன்னுமா அடங்கலே" ஆத்திரமும் அழுகையும் சேர்ந்திருந்தது ..

"நான் செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்புத்தான்.. பத்து வருஷம் இல்லே.. நூறு வருஷம் ஜெயில்லே இருந்தாலும் அது பத்தாத தண்டனைதான்."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தெருவில் சுமோவின் பிரேக் கிறீச்சிட்டது. தபதபவென்று ஆட்கள் இறங்கி ஓடிவரும் சப்தம்..

"பிடிடா அவனை..எவ்வளவு கொழுப்பிருந்தா வீடு புகுந்து ராஜா சாரைக் கொன்னுட்டு தப்பிச்சு ஓடப் பார்ப்பே?" அவர்கள்தான்.. என்னைத் துரத்தி வந்தவர்கள்தான்..

சரமாரியான அடிகள் என்மேல் விழ..

வலிக்கவில்லை

_____________________________________________________________

 

blogger templates | Make Money Online