Jun 30, 2007

கொஞ்சம் சீரியஸாய் ஒரு எட்டு!

சர்வேசன் கூப்பிட்டிருந்தார், அப்புறம் தேவ் அண்ணா, உஷா அக்கா எல்லாம் கூப்பிட்டாங்க. யாராச்சும் கூப்பிட மாட்டாங்களா, ஜூஸ் குடிச்சு உண்ணாவிரதத்தை (பதிவு போடா விரதத்தை) முடிச்சுக்க மாட்டோமா என்று காத்துக்கொண்டிருந்த நான், இதாண்டா சமயம்னு உள்ளே நுழைஞ்சுட்டேன்.
 
 
எட்டு சாதனைகளைப் போடணுமாமே..எதையெல்லாம் சாதனைன்னு சொல்லி அடிவாங்கறதுன்னு யோசிக்கும்போதுதான் கொத்ஸ் தெளிவுபடுத்தினார். சாதனையே வேண்டாமாம், ரேண்டம் ஃபேக்ட்ஸ் போதும் என்று.
 
எனவே, என் வாழ்வில், படிக்கச் சுவையான சில நிகழ்வுகளைச் சொல்கிறேன்.
 
1. ரயில் பயணங்களில் - வாழ்க்கையின் ஒரு வருடத்துக்கும் மேலாக (ஏறத்தாழ 500 இரவுகள்) ரயிலில் செலவழித்த பாக்கியவான் நான். டிக்கட் ரிஸர்வ் செய்வதற்கு எப்போதுமே அவகாசம் இல்லாமல், டி டி ஆரின் வால்பிடித்தே சென்று, ஹிந்தி தெலுங்கு கொஞ்சம் ஒரியா, பெங்காலி போஜ்புரி எல்லாம் கலந்து கெஞ்சிய அனுபவங்கள் ஏராளம்.
 
குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ஒரு முறை கோரக்பூர் கொச்சின் எக்ஸ்பிரஸில் நாக்பூரிலிருந்து சென்னை திரும்புகையில் ராமகுண்டத்தில் வண்டி நிற்க, அடுத்த ட்ரேக்கில் ஜி டி எக்ஸ்பிரஸ்ஸைப் பார்த்தேன்.
 
கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு பல வீடு! இதிலும் பெர்த் இல்லை, அதிலும் பெர்த் இல்லை! ஆனால் ஜிடி சென்னையை விரைவாய் அடைந்து 2 மணிநேரம் மிச்சமாகும் என்று அவசர அவசரமாக மூடைகட்டி, ட்ரேக்கில் குதித்து ஓடி அசையத் தொடங்கிவிட்ட ஜிடியைப் பிடித்தபிறகுதான் தெரிந்தது, அது எதிர்த்திசையில் அசைவது :-)
 
15 மணிநேரம் வீணானதைவிடவும் நான் இன்றும் வருந்துவது அவசரத்தில் பழைய ரயிலில் விட்டுவிட்ட பெரல்மானின் பொழுதுபோக்குப் பௌதிகம் புத்தகம் பற்றித்தான்!
 
2. இன்னொரு ரயில்பயணத்தின் போது, வண்டி கிளம்பியவுடன் 5 சிறுவர்கள் முகமூடி அணிந்து, வரிசையாக கம்பார்ட்மெண்டில் இருந்த அனைவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டி, ஆளுக்கு ஒரு அடிபோட்டு, இருப்பதையெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு சென்றது!
 
கையில் 5000 ரூபாய் இருந்தது - ஆனால், இப்படிப்பட்ட கொள்ளைகளை எதிர்பார்த்ததால் கால் சாக்ஸுக்கு அடியில் வைத்திருந்ததால், 100 ரூபாயும், கட்டியிருந்த வாட்சும் மட்டுமே பறிபோனது.
 
கொள்ளைக்காரர்களின் உளவியல் அணுகுமுறை என்னை ஆச்சர்யப்படவைத்த ஒன்று. வண்டிகிளம்பியவுடன் செயலில் இறங்கியது (பயணிகளுக்கிடையே நட்பு துளிர்க்க ஆரம்பிக்கும் முன்பே!), முதலில் அடி, பின்பு கொள்ளை என எதிர்ப்பை முளையிலேயே கிள்ளியது, சரியான இடம் வந்ததும் செயினைப்பிடித்து இழுத்து இறங்கி ஓடியது, ஓடும்முன் ஒரு ஒரு நாட்டு வெடிகுண்டை இருப்புப்பாதைக்கு அருகில் சிதறவிட்டு துரத்தாமல் செய்தது -- நல்ல ப்ளானிங் :-)
 
பிறகு ரயிலில் புலம்பத்தொடங்கியவர்கள் "நாம் ஒன்று சேர்ந்திருந்தால் அவர்களை கிழித்திருக்கலாம்" என்றது வெத்துக் கோஷமாகத்தான் பட்டது!
 
3. இது ஒரு மரணம் தொட்ட கணம்! இன்றளவும் இந்தக் கோ-இன்ஸிடன்ஸை என்னால் நம்பமுடியவில்லை! நல்ல மழைக்காலத்தில், தனியாக எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத லாரியைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தேன்.
 
கேபினில் வயர்களை எல்லாம் பிரித்துப்போட்டுவிட்டு, எஞ்சினின் பேனைத் தொட்டு, சுழற்றிப் பார்த்து, வேறு இடங்களையெல்லாம் செக் செய்துகொண்டிருந்தால் திடீரென எஞ்சின் ஸ்டார்ட் ஆனது. யாருமில்லாமல் எப்படி ஸ்டார்ட் ஆனது என்பது புரியாமல் வெளியே குதித்தேன். ஒரு மில்லி செகண்ட் முன்பாக ஸ்டார்ட் ஆகியிருந்தால் பேன் சுழற்சியோடு நானும் சுழன்றிருப்பேன்! (1000 HP எஞ்சின்!)
 
பிறகுதான் தெரிந்தது ஸ்டார்ட் ஆன ரகசியம் - மழைத்தண்ணீர் சொட்டி, வயர்களிடையே தொடர்பை ஏற்படுத்தி இருந்திருக்கிறது!
 
4. கலவரங்களைக் கண்முன்னே பார்த்ததும் என் மனதில் நீங்காத அனுபவம். கதையாக எழுதியதும் நான் நேரில் பார்த்ததுதான் என்றாலும், நினைத்தால் இன்றும் குலைசிலிர்க்கும் அனுபவம் இன்னொரு ரயில் பயணம்தான்.
 
கம்பெனியின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு சில உபகரணங்களை அவசரமாக எடுத்துச் செல்லவேண்டியிருந்தது. ரயில் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. முழு கம்பார்ட்மெண்டில், நானும் டிடிஆரும் மட்டும்தான். டிடிஆரிடம் பேச்சுக்கொடுக்கும் அளவுக்கு இந்தி அப்போது கைவந்திருக்கவில்லை.
 
எதுவும் ஆகாமல் இறங்கி, அடுத்த கிளையின் நண்பர்களைச் சந்தித்ததும்தான் தெரிந்தது, எதுவும் ஆகாதது வெறும் அதிர்ஷ்டம் மட்டும்தான் என்பது.
 
ஏனென்றால், அன்றைய தேதி - டிசம்பர் 7! பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறுதினம். ரயில் சென்ற பாதை - ராஞ்சி - வாரணாசி - கலவரங்கள் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருந்த இடங்கள்! இப்போதுதான் ரயிலின் அசாதாரண அமைதிக்கும், அங்கங்கே எரிந்துகொண்டு இருந்த குடிசைகளுக்கும், இரவில் ரயில் ஓட்டத்திலும் கேட்ட கூக்குரல்களுக்கும் அர்த்தம்!
 
5. இது இன்னொரு அனுபவம்! கடுமையாக வேலை செய்துவிட்டு, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, பணியிடத்திலிருந்து இருப்பிடத்துக்கு நடந்து கொண்டிருக்கையில், ஆற்றில் தண்ணீர் ஓடுவதைப்பார்த்தேன்.
 
நான் ஒரு தண்ணீர்ப்பைத்தியம். தாமோதர் ஆறு என்னை வாவா என்று அழைத்தது. உடனே உடைகளைக்களைந்து ஆசை தீரக் குளித்தேன். ஆசியாவிலேயே மிக அசுத்தமான ஆறு தாமோதர் என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
 
சாப்பிட்டது முழுக்க வாந்தியெடுத்தேன், களைப்பின் உச்சத்தில் ரோட்டில் நிற்கையில் யார் லிப்ட் கொடுத்தார் என்பதுகூடத் தெரியாமல் இருப்பிடத்துக்குத் தனியாக வந்து விழுந்தேன்.. கண்கள் பஞ்சடைந்து, குரல்கொடுக்கக்கூட தெம்பில்லாமல் போனபிறகும் வாந்திவரும் அறிகுறி! யாரோ வந்தார், எப்படியோ தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரி சென்றவுடன் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது - நம்பினால் நம்புங்கள்! ரத்த அழுத்தம் 60/20!
 
தூக்கிக் கொண்டு சென்ற புண்ணியவான் அரை மணிநேரம் தாமதித்திருந்தால் - இதை எழுதியிருக்கமாட்டேன்!
 
ரொம்ப கிலி கிளப்பிவிட்டேன், இல்லையா? எனவே மிச்சம் மூன்றும் கொஞ்சம் சுயபிரதாபம்.
 
6. படிப்பில் கொஞ்சம் சுட்டியாகத்தான் இருந்தேன். மற்ற பெயர்பெற்ற பள்ளிக்கூடங்களில் இடம் கிடைக்காத ரிஜக்ட் கும்பலில்தான் நானும் இருந்தேன் என்றாலும், இந்தக்கும்பலிடையே அடுத்தவன் நெருங்கமுடியாத முதலிடத்தில் இருந்தேன். பொதுத் தேர்வில், என் போட்டி என் பள்ளியில் உள்ளவர்களிடையே இல்லாமல் என்னைச் சேர்க்கமறுத்த மற்ற பள்ளிகளின் முதலிடத்தோடுதான் இருந்தது, அதில் வெற்றியும் பெற்றது மனதுக்கு நிறைவாய் இருந்தது!
 
7. கணினி சம்மந்தமாய் எதுவுமே படித்திருக்கவில்லை, கல்லூரியி பேசிக் போர்ட்ரான், சார்லஸ் பேபேஜ் கதைகளைத் தவிர. இருந்தாலும், கணினி கையில் கிடைத்தவுடன் கேம்ஸ் ஆடித் தீர்த்தேன். கேம்ஸை ஐடியாவின் ஆரம்பப்புள்ளியாக வைத்து சில மென்பொருள்கள் (ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்தே!) உருவாக்கி அவை பெற்ற ஆதரவும் அதனால் பெற்ற உற்சாகமும் அளவிடமுடியாதவை.
 
8. ட்ரெயினிங் வேலையில் பெற்ற அனுபவங்கள் சில சுலபமாய் யாருக்கும் வாய்க்காதவை.
 
நடுக்கடலில் ஹெலிகாப்டரில் சென்று, ஆயில் ரிக்கின் ஹெலிபேட்டில் இறங்க, ஒருகையில் லேப்டாப், மறுகையில் என் பை.. பிடிக்க எதுவும் இல்லாமல், வேகமாக அடிக்கும் காற்று இருபுறமும் தள்ள, விழுந்தால் 200 அடிக்குக்கீழ் கடல்! 20 அடிதான் நடக்கவேண்டியிருந்தது. ஆனால் அந்த 20 அடிதான் என்வாழ்க்கையின் மிக நீண்ட பயணம்! 
 
நடுக்கடல்  மட்டுமின்றி, பாலைவனத்தின் Sand Dunes நடுவில், பனிப்பாறை  சூழ்ந்த இடத்துக்கு நடுவில், மற்றும் சாதாரணமான இடங்களில் என்று, போனவாரம்தான் 1000 நாட்கள் ட்ரெயினிங்கில் முடித்தேன்! 
 
இப்போதைக்கு இவை போதும், பிற்கு 108, 1008 என்று வரும்போது மிச்சத்தை எழுதுகிறேன்.
 
இவர்களை அழைக்கிறேன் - இவர்கள் எட்டை இன்னும் பார்க்கவில்லை என்பதால்!
 
1. இராமநாதன்
2. குழலி
3. கைப்புள்ள
4. கானாபிரபா
5. ஆசீப் அண்ணாச்சி
6. குமரன்
7. மஞ்சூர் ராசா
8. யோசிப்பவர்
 
விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Jun 6, 2007

BOSS ஆவது எப்படி?

உப்புமா எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்தபின் எழுதியது இப்பதிவு.

BOSS என்றால் பேச்சிலர் ஆப் சோஷியல் சர்வீஸ் ஆம்!

சோஷியல் சர்வீஸ் என்றால் என்ன என்பதைச் சற்று அறிந்து கொள்வோமா?

உச்ச நட்சத்திரத்தைப் பிடித்து, செலவுக்குப் பெயர்போன இயக்குநரைப்பிடித்து, தமிழ்த்திரையுலகம் இதுவரை கண்டும்கேட்டுமிராத பொருட்செலவில் பிரம்மாண்டமாக ஒரு படத்தைத் தயாரிக்கவேண்டும். (அந்தச் செலவின் பெரும்பங்கு நடிகர் & இயக்குநர் இருவருக்கு மட்டுமே போவதையோ, அந்தச் செலவினால் திரைப்படத்தொழிலுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பற்றியோ யாரும் கேள்வி கேட்கக்கூடாது)

மிக ரகசியமாகப் படம் எடுக்கப்படவேண்டும். திருடப்பட்ட ஒலி/ஒளித்துண்டுகள் கிரிமினல் குற்றத்துக்கு நிகராக மதிக்கப்படவேண்டும்.

படம் தயாரானவுடன் தொலைக்காட்சி உரிமைக்குப் பேரம் பேசவேண்டும்.

மத்திய மாநில ஆளும் கட்சிகளின் செல்லப்பிள்ளையான சேனல் அடிமாட்டு விலைக்குக் கேட்க, துணுக்குற்றுவிடக்கூடாது! ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருந்தால்தானே கொக்கு!

படம் கேட்டு, கிடைக்காவிட்டால் சேனல் சும்மா இருக்குமா? தயாரிப்பாளரின் அடிமடியில் கைவைக்கும்! அரசாணை பிறக்கும்! படம் மூன்று வருடம் ஓடினால்தான் காசு பார்க்கமுடியும் என்ற நிலையை உருவாக்கும்!

இப்படிப்பட்ட அரசாணை ஏன் பிறப்பிக்கப்பட்டது? படத்தின் செலவுக்கேற்ப டிக்கட்டை வைப்பதில் என்ன தவறு கண்டார்கள் ஆட்சியாளர்கள்? எப்படியும் டிக்கட் விலை ஒன்றிரு வாரங்களில் இறங்கிவிடப்போகிறது! அதுவரை ஏழைபாழைகள் பார்க்காமல் இருப்பது தெய்வகுற்றமா?அப்படி அவசரப்பட்டு, பார்த்தே தீரவேண்டும் என நினைப்பவன் நிச்சயமாக டிக்கட் விலை பற்றி கவலைப்படப்போவதில்லை!

மனம் கலங்கிவிடாதீர்கள் சோஷியல் சர்வீஸ்காரரே, காலம் ஒருநாள் மாறும்! ஆட்சிக்கும் சேனலுக்குமே சண்டை வரும்.

அந்தத் திருநாள் வந்தால், காத்திருந்ததற்கு கைமேல் பலன் வரும்.

அரசியல் நடத்த சேனல் இல்லாமல் முடியாதே! நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இப்போது நேரமில்லை. ஒரு சேனல் புகழ்பாடியே பழகிவிட்ட.ஆட்சியாளர்கள் சேனல் தொடங்குவார்கள்!

அவர்களுக்கும் பரபரப்பான படங்கள் தேவைப்படும். அப்போது விற்றுக் கொள்ளலாம்.

அப்போது விற்பதால் ஏற்படக்கூடிய கூடுதல் நன்மைகளாவன : மராத்திய ராஜா தமிழனாவான்!

கேனத்தனத்தின் உச்சம்! இந்த வரிவிலக்கு (முழுமையான வரிவிலக்காமே!) சட்டம் அமலுக்கு வந்தபோது நான் எழுதிய வரி - மாமனாரின் இன்பவெறிக்கு வரிவிலக்கு உண்டா -- எழுதும்போது கிண்டலாகத்தான் எழுதினேன். ஆனால் எந்த உச்சபட்ச அசிங்கமும் நடந்தே விடக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது! தமிழில் பெயர் இருந்தால் ஏன் வரிவிலக்கு?

எனக்குத் தெரிந்த அளவில், கல்லூரி மாணவர்களிடையே சிவாஜியைவிட அதிகம் புழங்கக்கூடிய பெயர்ச்சொல் BF! ஞாபகம் இருக்கிறதா? அந்தப்பெயரை வைத்ததற்காகத்தான் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் போராட்டமே அறிவித்தது!

மும்பை எக்ஸ்பிரஸ் என்ன பாடுபட்டது! எம்டன் என்ற புழங்கக்கூடிய பெயர்ச்சொல் ஏன் எம் மகன் ஆனது? சம்திங் புழங்காத தமிழகமா? அத்தனை பெயரையும் மாற்றவைத்து, இன்று அவர்களையும் தமிழக வரிவழங்குவோரையும் ஏமாற்றுகிறது அரசு!

அந்தச் சட்டத்தில் இன்னொரு திருத்தமே செய்துவிடலாம் பேசாமல்! கலைஞர் டிவிக்கு விற்கப்படும் படங்களுக்கு பெயரின் நதிமூலம் ஆராயப்படாது என்று!

மேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் மனம் கோணாமல் சோஷியல் சர்வீஸ் செய்வதால், டிக்கட் விலைகள் கண்டுகொள்ளப்படாது!

அப்போது ஏன் அந்த அரசாணை? வேண்டாதவர்களைப் பழிதீர்க்க மட்டும்தானா? ஹெல்மட் முதல் இந்த அரசாணை வரை காரியம் ஆகும்வரை மட்டும்தான் சட்டமா? இவ்வளவு வெளிப்படையாக திமுக அரசு இதுவரை ஊழல் செய்ததில்லையே!

இப்படி வெளியாகும் படத்தின் மூலம் சோஷியல் சர்வீஸ் செய்யலாம்! நாடு எச்சில் துப்புபவர்களாலும், இட ஒதுக்கீட்டாலும், லஞ்ச லாவண்யத்தாலும் கேடு அடைந்திருக்கிறது என்பதை பிரம்மாண்டமாகச் சொன்ன இயக்குநரும், தேர்தலுக்குத் தேர்தல் வாய்ஸ் கொடுத்து வொர்க் அவுட் ஆகாமல் நல்லவர்களுக்குக்காகத் திரையில் 150 முறை பாடுபட்ட கதாநாயகனும் Why richer is getting richer and poorer is getting poorer என்பதையும் விவாதித்து இனிப்பு மிட்டாய் தடவி அவர்களின் கனவுகளுக்கு வண்ணமேற்றலாம்!

இந்த விதிமீறல்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். எதிர்க்கட்சி ஊடகங்கள் பேசுவதைப்பற்றிய கவலை எப்போதும் நாம் பட்டதில்லை. தற்போது எதிரணியில் உள்ள முன்னணி
சேனல் சமாதான முயற்சிகளுக்காக அடக்கி வாசிக்கிறது. எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அச்சு ஊடகங்களும் அடக்கி வாசிக்கின்றன. கூட்டணிக்கட்சிகளுக்கு தமிழ்ப்பாதுகாப்பைவிடவும் எத்தனையோ பிரச்சினைகள்.


இதுதான் சோஷியல் சர்வீஸ். உங்களுக்கு BOSS பட்டமெல்லாம் கிடைக்காது. அதற்குச் செய்யவேண்டிய மேற்கண்ட குறிப்புகள் எதையும் செய்ய உங்களுக்குத் தகுதி கிடையாது! வேறு படிப்பைத் தேர்ந்தெடுங்கள்!

--------------------------------
திமுகவின் ஆட்சி பற்றிய விரிவான திறந்த கடிதம் "ஒரு சொல்" நாராயணன் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ எல்லா விஷயங்களிலும் அவருடன் ஒத்துப்போகிறேன். தேர்தல் காலத்தில் ஓட்டுப்போட முடிந்திருந்தால் திமுகவுக்குத்தான் போட்டிருப்பேன் என்பதையும் என் நதிமூலம் ஆராயவிரும்பும் அன்பு அனானி ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

என் எதிர்ப்பைக் காட்டும் ஒரே வழி என இந்தப்படத்தை குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு முன் திரையரங்குகளில் பார்க்கமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

பதிவுகளுக்குக் கொஞ்ச நாள் விடுமுறை இப்போதுதான் ஆரம்பிக்கிறேன் :-)

Jun 3, 2007

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஜூன்15!

யாரு படம்! எங்க தங்கத்தலைவர் நடிச்ச படம்!
 
யாரு படம்! பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுக்குப் பெயர் வாங்கிய இயக்குநர், தயாரிப்பாளர் கிட்டே இருந்து வர்ற படம்!
 
யாரு இசை! நாவில் ஒட்டிக்கொள்ளும் பல பாடல்களை ஏற்கனவே போட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்ட இசை அமைப்பாளர்!
 
பின்ன? எங்க தங்கத்தலைவர் ஏற்கனவே நடிச்ச ரெண்டு படத்திலும் காமெடி என்ன, செண்டிமெண்ட் என்னன்னு கலக்கினவராச்சே! ஒவ்வொரு காட்சியிலயும் மாறும் முகபாவத்துக்காக எத்தனை கலைஞர்கள் வேலை செஞ்சிருக்காங்க! அனிமேஷன்னா என்ன சும்மாவா?
 
இன்னுமா புரியல? ஜூன் 15 ஆம் தேதிதான் ஷ்ரெக் -3 ரிலீஸ் ஆகப்போகுது.
 
தலைவர் ஷ்ரெக், கனவுக்கன்னி பியோனா, நகைச்சுவைப்புயல் டான்க்கி, வில்லன்கள் தவளைராஜா, ப்ரின்ஸ் சார்மிங், புஸ் ஆன் பூட்ஸ் எல்லாரும் இந்தப்படத்திலயும் இருக்காங்களாம்.
 
லிவிடா விடா லோக்காவை மறக்கமுடியுமா? எவ்வளவு அற்புதமான இசை!
 
இந்தப்படத்தின் கதை என்னன்னு சினாப்ஸிஸ் போட்டிருக்காங்க - இங்கே!
 
Far Far Away வின் ராஜா ஆகிவிட்ட ஷ்ரெக்குக்கு தன் ஸ்வாம்புக்குச் செல்லதான் ஆசை. வேறொரு ராஜாவை அம்ர்த்திவிட்டுப்போகலாம் என்றால் ப்ரின்ஸ் சார்மிங் தொந்தரவு. பிரச்சினைகளைத் தீர்க்கக் கிளம்பிவிட்டார் தலைவர் - தன் ஆஸ்தான டாங்கி மற்றும் புஸ் இன் பூட்ஸுடன். இரண்டு மணிநேரக் குதூகலம் உத்தரவாதம்!
 
அவசியம் பார்த்தே ஆகவேண்டிய படம்.
 

 

blogger templates | Make Money Online