Nov 30, 2006

பிரம்மாண்ட பினாத்தல் கருத்து கணிப்பு

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறேன் என நினைத்தாலும் சரி, ரொம்பநாளா நினைப்பில் இருந்த ஒரு கருத்துக் கணிப்பை இப்போது நடத்திவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். இப்போது போடுவதால் அதிகப் பேரால் கவனிக்கப்படலாம் என ஒரு நப்பாசைதான்!

பொதுவாக கருத்துக் கணிப்புகள் எப்படிப்பட்ட முடிவைத்தரவேண்டும் என நடத்துபவர் எதிர்பார்க்கிறார் என்பதை தெரிவுகளின் மூலமே கண்டுகொள்ளலாம். நான் அடிக்கடி நடத்தும் ஸ்டண்ட்தான் இது:-)

உதாரணம் - என் வகுப்பு எப்படி இருந்தது?

அ - நன்றாக ஆ - மிக நன்றாக இ - அற்புதம்!

இப்போது, கணிப்புக்கு போகலாமா?














பினாத்தல் கருத்துக் கணிப்பு



பினாத்தலார் கருத்துக் கணிப்பு நடத்தலாமா?






காசா பணமா - நடத்தேன்!
உனக்கு என்ன தகுதி?
இதெல்லாம் ஒரு கேள்வி!
யாருடா இதை ஆரம்பிச்சது?

Current Results







எப்படி பதிவுகளின் போதே வேறு அவ்சர வேலைகளால் உள்ளே நுழைய முடியவில்லை! இப்ப மாட்டினீங்களா?

Nov 28, 2006

விழித்தெழுந்தது தூங்கிய சிங்கம் (28 Nov 06)

போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு பாட்டுப் பாடின சிங்கம், கொஞ்ச நாளா தூங்கப் போயிடிச்சு. அதுக்காக போட்டியில கலந்துக்கலையான்னு கேக்காதீங்க! ஒரு முறை தவிர, எல்லா தேன்கூடு போட்டியிலையும் கலந்துகிட்டது என்னமோ உண்மைதான். அது தவிரவும் தடாலடி அது இதுன்னு எங்கே போட்டி நடந்தாலும் தன் மூக்கை நுழைச்சதும் உண்மைதான், அந்த மூக்கு (கொஞ்சம் நீளம் அதிகமான மூக்கு) பலமுறை உடைபட்டதும் உண்மைதான். சிங்கம் கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிச்சுப் பாத்துது.

"உனக்கு ஒரு மூணு போட்டியில முதல் பரிசு கிடைச்சுதுன்னா அதுக்கு என்ன காரணம்?

போட்டியெல்லாம் புதுசா இருந்த காலம், நெறையபேர் கலந்துக்கலைன்றது முக்கிய காரணம்.
யதேச்சையா உனக்குத் தோணின விஷயங்கள் போட்டி கருத்துக்கு ஒத்துப்போன அதிர்ஷ்டம் ஒரு காரணம்.
போட்டிகளோட ரீச் பெரிசா வராத நேரம், பெரிய பெரிய பார்ட்டிங்க எல்லாம் அப்பால பாத்துக்கலாம்னு வழிவிட்டுட்டது ஒரு காரணம்.

இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ, தெளிஞ்சுக்கோ (விக்கிப் பசங்க டேக்லைன் - இதைத்தான் இன்லைன் அட்வர்டைஸ்மெண்டுன்னு சொல்வாங்களோ?). அடங்கி வாழு!"

இப்படி அந்த சிங்கம் அடங்கி வாழ முயற்சி பண்ணாலும், போட்டியில கலந்துக்கறதை மட்டும் கைவிடல! மறுபடி அந்தப் பொற்காலம் (ரசிகர்களுக்கு போதாத காலம்) வாராதான்னு எல்லா முடிவுகளையும் பார்த்துப் பெருமூச்சு விடறதோட சரின்னு இருந்துது.

விடாமுயற்சியைப் பாராட்டி ஒரு பரிசு கொடுக்கவே கொடுத்துட்டாங்க.

தேர்ந்தெடுத்த வலைப்பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சிறப்பு நடுவர்களுக்கு என் நன்றி.


--
With Best Regards,

R Suresh Babu

Nov 25, 2006

ஷார்ஜாவில் வலைப்பதிவர் சந்திப்பு (24 Nov 06)

பெரிய ஏற்பாடுகள் ஏதுமின்றி, சிற்சில செல்பேசி அழைப்புகள் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சிறு வலைப்பதிவர் சந்திப்பு ஷார்ஜாவில் நேற்று (21 நவம்பர்) அரங்கேறியது.

நாகை சிவா துபாய்க்கு வந்திருப்பதால் அவரைச் சந்திக்க என்று தொடங்கி, கீழ்க்காணும் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி அரட்டை அடித்தோம்.

1. லியோ சுரேஷ்
2. நண்பன்
3. நாகை சிவா
4. தம்பி
5. முத்துக்குமரன்
6. இசாக்
7.கவிமதி
8.பினாத்தல் சுரேஷ்

பெரிய ஏற்பாடுகள் ஏதும் இல்லாததால், அருகே உள்ள ஒரு ஈரப்புல்தரையிலேயே கூட்டம் துவங்கியது. எட்டே பேர் இருந்தாலும், பலவகையான குழுக்களிலும் அடுக்குகளிலும் இயங்குபவர்கள் என்பதால் முதலில் ஒரு சிறு சுய அறிமுகத்துடன் பேச்சுகளைத் துவங்கினோம். சிறிது நேரத்திலேயே எங்கெங்கோ சென்று, இன்னதுதான் பேசினோம் என்பதைப் பதிவதை இயலாததாக்கி விட்டது. ஒரு சிறு சாம்பிள்:

1. இணையத்தில் ஜாதி, மதவாதம்
2. கருத்துக்களை கருத்துகளால் எதிர்கொள்வது
3. ஓரிரு பதிவுகளை வைத்து ஒரு பதிவருக்கு குத்தப்படும் முத்திரைகள்
4. உன் வழி உனக்கு, என் வழி எனக்கு
5. இளையராஜா - குஷ்பூ சர்ச்சைகளில் காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகள்
6. வல்லவன், தர்மபுரி படம் பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
7. அடுத்த சந்திப்பின் இடம், பொருள்

7 மணிக்குத் தொடங்கி, 10.30 மணி வரை இன்னதுதான் என்றில்லாமல் கலந்துகட்டிய அரட்டை, மறுநாள் காலை பற்றிய சிந்தனை வந்ததும் வேண்டாவெறுப்பாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இட்லிவடைக்கு கூட்டம் பற்றிய முன்னறிவிப்பு ஏதும் தரப்படாததால் நாங்களே புகைப்படம் எடுக்க வேண்டியதாகிவிட்டது;-) முத்துக்குமரன் / நாகை சிவாவிடம் இருந்து அவற்றைப்பெற்று வலையேற்றுகிறேன்.

ஒரு இனிய மாலைப்பொழுதாக இருந்ததும், புது நண்பர்களைப் பெற்றதும், பழைய நண்பர்களின் சில புதிய பரிமாணங்களை அறிந்ததும் எல்லாருக்கும் ஏற்பட்ட அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

Nov 21, 2006

போற்றிப் பாடடி பெண்ணே? (21 Nov 06)

இது இளையராஜா பற்றிய இன்னொரு பதிவல்ல. தேவர் மகன் படத்தின் தாக்கம், தூண்டிய கலவரங்கள் குறித்த எண்ணங்களே.

தேவர் மகன் படம் வெளியான முதல் நாளே பார்த்துவிட்டு ராஞ்சிக்கு ரயிலேறிவிட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழகச் செய்திகளை அறிய வாய்ப்பு கிடைத்தபோது, இந்தப்படத்தின் வெற்றியும் படத்தால் ஏற்பட்ட கலவரங்களும் ஆறிய கஞ்சியாகிவிட்டிருந்தது. ஆனால், பின்னர் வந்த சண்டியர் சர்ச்சையின்போது இந்தப்படம் தேவர் ஜாதியினருக்கு கொடி பிடிப்பதாய்க் கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக போற்றிப்பாடடி பெண்ணே பாடல் அவர்கள் வீட்டு ரோட்டு விசேஷங்களில் முக்கிய அம்சம் கொண்டதாகவும் அறிந்தேன், ஆச்சரியப்பட்டேன். ஆச்சரியம் ஏனென்றால், நான் பார்த்த அளவில் (பிறகு பலமுறை பார்த்துவிட்டேன்) இந்தப்படத்தின் மூலம் அவர்கள் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை.

"நீ ஒரு விதை போடு, அது உன் பேரனுக்கு மரமாகும்" என்று பரந்த மனத்தைக் கொண்ட கிராமத்துப் பெரிய மனிதர் தேவர் என்று பெருமைப்பட்டாலும், தன் சொந்தப்பகைக்காக கிராமத்தையே வெள்ளக்காடாக்கத் துணிந்தவனும் அதே ஜாதி எனக் காட்டியிருந்த படம். வெளிநாட்டில் படித்துத் திரும்பிவரும் இளைஞன் இவர்களைத் திருத்த எவ்வளவு முயற்சித்தும், தனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருக்கும் அதே மிருகம் எழும்பி, வன்முறைக்கே வடிகாலாகிறான், எவ்வளவு படித்திருந்தாலும் அந்த மிருகம்தான் வெல்கிறது என்று செல்லும் திரைக்கதையால் அவர்கள் பெருமைப்பட என்ன இருக்கும் எனப் புரியவே இல்லை. கதையில் வரும் எல்லா மாந்தரும் ஒரே ஜாதியினர் என்பதால், ஊரைக் கெடுப்பவன், சாலை அமைப்பவன், குடித்துச் சீரழிபவன், தேருக்கு வெடிகுண்டு வைப்பவன், நல்வழிப்படுத்த நினைப்பவன் எல்லாரும் அந்த ஜாதிக்குள் உண்டு என்றுதான் படம் சொல்கிறது என நான் நினைத்தேன். கெட்ட கும்பலின் வழக்குகளைப் பார்த்துக்கொள்ளும் பிராமண வழக்கறிஞர், "திங்கிற கையாலே கழுவணும்" என்பதற்கு மேல் தன் கை போனதைப்பற்றிக்கூட கவலைப்படாத வேலைக்காரன் - போன்ற மிகச்சில பாத்திரங்களை விடுத்து வேற்று ஜாதி பாத்திரங்களே இல்லை எனலாம்.

ஆனால், திரைக்கதை எந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும் நடந்த விஷயங்கள் ரசிகர்கள் திரைக்கதையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே நிறுவுகின்றன. நம் பெரும்பாலான மக்கள் பாடல்கள் சண்டைகளைத் தாண்டி திரைப்படங்களைப்பற்றி யோசிப்பதில்லை என்பதுதான் தெளிவாகிறது. "தேவர் காலடி மண்ணைப் போற்றிப்" பாடும் பாடலும், "ஒரு ஆத்திரம் பொறந்தா அப்ப இவன் யாருன்னு தெரியும்" எனச் சூளுறைத்துச் சண்டை போடும் "தமிழச்சி பால் குடிச்சவன்" கொடுத்த தாக்கத்தை கிளைமாக்ஸோ, கதையின் ஆதார ஸ்ருதியோ கொடுக்காததுதான் உண்மை.

படத்திலோ, தொலைத் தொடர்களிலோ, முக்காலே மூணுவீசம் கெட்டவர்களின் வளர்ச்சியைக் காட்டி, அவற்றைப் புகழ்ந்து ப்ளோ-அப் செய்துவிட்டு, கடைசி நிமிடங்களில் நீதிபோதனை செய்தால், எது அதிகத் தாக்கம் கொடுக்கும்?

இது எனக்கே புரிந்திருக்கும்போது, கமலஹாசனுக்குப் புரியாமல் இருக்கும் என நினைக்க நான் தயாரில்லை.

இருப்பினும், இதே தவறை அவர் "ஹே ராம்"இலும் செய்திருக்கிறார். காதல் மனைவி கண்ணுக்கெதிரே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, கோபத்தில் கண்மண் தெரியாமல் சுட்டுக்கொண்டு கிளம்பும் சாகேத் ராமனை தீவிரவாத இந்து இயக்கங்கள் மூளைச் சலவை செய்வதையும், காந்தியைக் கொல்லவேண்டியதன் நியாயங்களை அவன் தீவிரமாக நம்புவதையும் விஸ்தாரமாகக் காண்பித்த திரைக்கதை, தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் ஷா ருக் கானின் மழலைத் தமிழில் ஓடிக்கொண்டே பேசுவதாக அமைத்திருந்ததால் சுத்தமாக கவனிக்கப்படாமல் போனது.

இது கமல்ஹாசன் வேண்டுமென்றே செய்யும் தவறா? விவாதிக்கலாமா?

Nov 18, 2006

வல்லவன் -- விமர்சனம் (18 Nov 06)

இந்த விமர்சனம் பார்க்கச் சாதாரணமான விமர்சனம் போலத் தோன்றினாலும், வலைப்பதிவுலக வரலாற்றில் ஒரு மைல்கல்.


அம்பானி பொண்ணைக் கல்யாணம் செய்வது பெரியதா, அம்பானியாக ஆவது பெரியதா என்ற கேள்விக்கு விடை ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. L-I-T-T-L-E- S-U-P-E-R-S-T-A-R என்று எழுத்துக்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. டி ராஜேந்தர் படத்தில் டி ராஜேந்தர் கொடுத்த பட்டம்! பட்டங்களுக்குத் தமிழ்நாடு கொடுக்கும் மரியாதை இவ்வளவு குறைவா?

பழைய படங்களைக் கொஞ்சம் கூட கூசாமல் காப்பி அடித்திருக்கிறார் சிம்பு. கல்யாணராமன் கமல் மேக்கப் மட்டுமன்றி பாடலும், இவருடைய மானசீகக் குரு எஸ் ஜே சூர்யாவின் படத்திலிருந்து காட்சிகள் (தெரியாமல் போய்விடக்கூடாது எனப் பெயர் சொல்லியே), பார்த்தேன் ரசித்தேன் சிம்ரன் போல ரீமா சென், படையப்பா போல கிளைமாக்ஸ்! அடுத்த கமல் நான் தான், அடுத்த ஷங்கர் நான் தான் என்பதைவிட அடுத்த லொள்ளு சபா ஹீரோ நான் தான் என்றால் அது நடக்கக்கூடிய நம்பக்கூடிய விஷயம்.பஞ்ச் டயலாக்குகளுக்குக் குறைவே இல்லை. ஆக்ஷன் ஹீரோக்களைவிட, பஞ்ச் டயலாக்களை காமடியன்கள்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதுவும் இன்னொரு சான்று.

அஜித் போல பேட்டிகள் மூலமும், ஹீரோ ஹீரோயின் காதல் வதந்திகள் மூலம், தயாரிப்பாளருடன் சண்டை என்று பரபரப்பு கிளப்பி படத்தைப் பேசவைக்கத் தெரிந்த அளவிற்கு படத்தை நன்றாக எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. விகடன் கொடுத்த 37 மார்க்கே அதிகம்.

யுவன் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

இந்த விமர்சனம் பார்க்கச் சாதாரணமான விமர்சனம் போலத் தோன்றினாலும், வலைப்பதிவுலக வரலாற்றில் ஒரு மைல்கல்.

காரணம்..

ஊகிப்பவர் பின்னூட்டுங்கள் பார்க்கலாம்?

Nov 16, 2006

96, 8, 2, 0.2857 அவியல்.

1.இளையராஜாவின் மறுப்பு பெரியார் பட இசையமைப்பு சர்ச்சைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கூட்டியிருக்கிறது. இந்தியா க்ளிட்ஸில் வந்த செய்திக்கும் இப்போது அவர் கூறுவதற்கும் சம்மந்தத்தையே காணோம். எது தவறு, எது சரி? ஜூவி பேட்டியில் ஞான ராஜசேகரனின் மறுப்பு இன்னும் குட்டையைக் குழப்புகிறது.

தவறான செய்தியின் அடிப்படையில் எழுதியதால் ரோஸா பின் வாங்கவேண்டும் எனக்கூறும் அன்பர்கள், எந்தச் செய்தியை நம்பவேண்டும், உறுதியாக நம்பிக் கருத்து சொல்ல முடியும் என்பதையும் விளக்க வேண்டும். மேலும் ரோஸாவின் பதிவு இளையராஜாவின் "பெரியார் பட இசையமைக்க மறுப்பு" என்பதை ஒரு தூண்டுகோளாய்க் கொண்டு இளையராஜா பற்றிய அவருடைய கருத்துக்களைச் சொல்கிறது. (அது இளையராஜா மீதான விமர்சனம் என எனக்குத் தோன்றவில்லை) அக்கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், இப்போது வந்த ஜூவி செய்தியால் அவர் எதையும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

அதேபோல, என் பதிவின் ஆதார தொனியான - "முழு ஈடுபாடில்லாததால் இசையமைக்க மறுப்பது" தவறென எனக்குத் தோன்றவில்லை. அவ்வப்போது வரும் செய்திகளின் அடிப்படையில் எழுதுகிறோம். அவை பின்னால் மறுக்கப்படக்கூடும் என்று ஒரு மாற்று நிலையும் கையில் வைத்திருப்பதுதான் போலித்தனம்.

2. "தொலைக்காட்சித் தொடர்களில் பிரபல திரைப்படங்களின் தாக்கம்" என்ற தீஸிஸ் தலைப்பை முனைவர்-ஆக-துடிக்கிறவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். கோலங்கள் என்னும் டப்பா தொடரில் மகாநதியின் காட்சிகள் கேவலமாக உல்டா செய்யப்பட்டதைப் பார்த்திருந்தால் கமலஹாசனுக்கு ரத்தக்கண்ணீர் வந்திருக்கும்! கோபுரங்கள் சாய்வதில்லையை விஸ்தாரமாக ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்கள் இன்னொரு தொடரில்.

3. சன் டிவியில் வெளிவரும் ஏராளமான தாராளமான அரசு விளம்பரங்களின் தரம் யாரையாவது உடனே அடிக்கவேண்டும் எனுமளவிற்கு கோபத்தைத் தூண்டுகின்றன. இந்தியிலேயே கேவலமாக எடுக்கப்பட்டு, அதை இன்னும் கேவலமாக (Completely lost in translation) மொழிபெயர்க்கப்பட்டு, கேப் கிடைக்கும்போதெல்லாம் ஒரு முறைக்கு இரண்டு முறையாக ஒளிபரப்பப்பட்டு "இதற்கு எவ்வளவு செலவு செய்தார்களோ, எவ்வளவு செலவு செய்ததாய் கணக்கு காட்டினார்களோ, சன் டிவிக்கு இதனால் எவ்வளவு வருமானமோ" என்ற கேள்விகளையெல்லாம் தூண்டிவிடும் நெகட்டிவ் விளம்பரங்கள்.

4. ஜெயாவையும் சன்னையும் விட்டால் வேறு போக்கிடம் இல்லாத கேபிள் நெட்வொர்க் எங்களூரில். விஜயின் லொள்ளு சபாவும், கலக்கப் போவது யாருவும் நல்ல நகைச்சுவை என்று கேள்விப்பட்டிருந்ததோடு சரி. ஆனால், இதற்கு ஒரு விடிவு வந்திருக்கிறது. லொள்ளு சபாவின் எபிசோடுகளை கணினியில் பார்க்க ஒரு பிளாக்ஸ்பாட் திறந்திருக்கிறார்கள் சில புண்ணியவான்கள். அவசியம் போயிப்பாருங்க, சிரிங்க!

5. இன்னொரு சுனாமி எச்சரிக்கை வந்தது, வாபஸ் வாங்கப்பட்டது (ஜப்பானுக்கு). இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் எத்தனை முறை வந்தாலும் புலி வருது போல நினைக்காமல் எல்லா முறையும் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை அந்த ஊர் கடலோர மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆமாம், நம்ம ஊருக்கு சுனாமி எச்சரிக்கைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்களே, என்ன ஆச்சு?

6. இந்த வாரப்பதிவுகளில் யோசிக்க வைத்த பதிவுகள்:

கடல்கணேசனின் நேர்மையே கஷ்டப்பட்டு வெல்லும் - கவரக்காரணம் அதில் இருந்த பாஸிட்டிவ் அப்ரோச், தாமதமானாலும் கிடைத்த நீதி மனதுக்குத் தரும் அமைதி.

இரண்டாவது - அசுரனுடைய "உங்கள் இரக்கம் உண்மையானதா?" நியாயமான கேள்வி. பதிவைப் படித்தபின் எனக்குள்ளும் எழுந்த கேள்வி. 50 அடி குழாய்க்கிணற்றில் விழுந்த சிறுவனுக்குக் கிடைத்த ஊடகக்கவனம் இது போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் விழாதது ஏன்?

அண்டர்கிரவுண்டு சுரங்கங்களுக்குள் பலமுறை போயிருக்கிறேன். மீத்தேனை சுவாசித்து ஒருமுறை அபாயமணி ஒலிக்க வெளியே ஓடி வந்திருக்கிறேன். இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்.. இன்னொரு நாள்!

இப்பதிவுகளில் பின்னூட்ட முடியாமை இணையத் தொடர்பு காரணங்களால் என் கைகள் கட்டப்பட்டு இருப்பதாலே மட்டும்தான். பதிவர்கள் மன்னிக்க.

பினாத்தல்கள், உங்கள் அபிமானத்தாலும் தொடர்ந்த ஆதரவாலும் இன்று 200ஆவது பதிவைச் சமர்ப்பிக்கிறது. 25 மாதங்கள் என்பதை வருடத்துக்கு, மாதத்துக்கு, வாரத்துக்கு, நாளுக்கு என வெட்டியாகப் போட்ட கணக்குதான் தலைப்பு!(அக்டோபர் 15, 2004 அன்று தமிழுக்குக் கிடைத்த சாபம் இன்னும் தொடர்கிறது:-))

பின்னூட்டத்துக்கான கேள்வி: பினாத்தலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது? (ஒன்றை மட்டும் குறிப்பிடுங்கள் - ஜனநாயக முறைப்படி கிடைக்கும் பதிலை இடதுபுறம் வைக்க உத்தேசம்)

Nov 13, 2006

வலைப்பதிவுகளில் Multiple Personality Disorder - என் இரண்டணா

So what! இதுதான் எனக்கு பெரும்பாலான "இவர்தான் அவர்" வகைப்பதிவுகளைப் படித்தவுடன் என் மனதில் எழும் எண்ணம்.

எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் சீஸனல் பதிவுகள் மட்டும் வந்தாலும், இப்படிப்பட்ட பதிவுகளுக்கு மட்டும் என்றுமே குறைச்சலே இருந்ததில்லை. சாம்பு ஆப்பு பார்டெண்டரில் தொடங்கி, சர்வ சமாதான வலைப்பதிவர்கள் (முத்து (தமிழினி)க்கு இப்பதத்துக்காக நன்றி) வரை இப்படிப்பட்ட பதிவுகளைப் போடுவதும், பின்னூட்டங்களில் ஆதாரங்கள் கேட்கப்படுவது, ஆதாரங்கள் அள்ளி வீசப்படுவது, மறுத்தல் பதிவுகள் என்று சம்மந்தப்பட்டவர்கள் பதிவிடுவது என்று ஜகஜோதியாக நடக்கும் இண்டஸ்ட்ரி இது!

முதலில் ஆதாரங்கள் - எனக்குத் தெரிந்த வரையில் ஐபி என்பது கம்ப்யூட்டரின் தனிப்பட்ட முகவரி என்கிறார்கள், பதிவுகளைப் பார்வையிடும் ஐபிகளைக் காட்டும் தளங்களும் நிரல்துண்டுகளும் ஏராளமாக உள்ளன, பின்னூட்டமிடுகையில் ஐபி காண்பிக்கும் வகையில் அடைப்பலகையை மாற்றவும் முடியும், சில வகை மின்னஞ்சல்களில் எங்கிருந்து வந்தது என்பதைக் காண்பித்து விடும் என்றெல்லாம் கூறப்பட்டாலும், இதை ஒரு முழுமையான ஆதாரமாகக் கொள்ள இயலாது என்பதும், இவை சம்மந்தமான பதிவுகளைப்படித்தே எனக்கு ஏற்பட்ட புரிதல்.

1. நண்பர்கள் மூலமாக வேறு ஐபியைக் காட்டவைக்க முடியும்.
2. பிராக்ஸி சர்வர்கள் மூலமாக ஐபியை மறைக்க முடியும்,
3. பயண நேரங்களில், வை-ஃபி ஹாட்ஸ்பாட்டுகளில் ஐபி மாறிக்கொண்டே இருக்கும்.
4. சில நிறுவனங்களில், தொழில் சார்ந்த காரணங்களுக்காக, வேறு நாட்டின் ஐபி கொண்ட இணையத் தொடர்பு இருக்கும். (நான் ஒருமுறை நடுக்கடல் எண்ணெய்க்கிணற்றுக்குச் சென்றபோது, நியூஸிலாந்து நாட்டு ஐபியில் இருந்தேன் - கிணறு கத்தாருக்கு அருகில் இருந்தது)
5. அமீரகம் போன்ற தேசங்களில் ஐபி நிரந்தரமாக மாறிக்கொண்டே இருக்கும்..

இப்படிப்பல காரணங்களால் ஐபி என்பதை சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவை எனக்கே (கம்ப்யூட்டர் கைநாட்டு (ட்ரேட்மார்க் துளசி அக்கா)) தெரிந்திருக்கையில், ஆதாரங்களை நோண்டித் தேடி எடுப்போருக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், ஐபியை வைத்து "இவர்தான் அவர்" என்று சொல்ல அவர்களுடைய உறுதியான நம்பிக்கைகளும், "இந்தக் கருத்தை இவர்தான் கூறுவார்" என்ற முன்முடிவுகளும், பாதிக்கப்பட்டதற்கு பழிவாங்குதலும் காரணங்களாக இருக்கலாம்.

இதைத் தவறு என்று சொல்லவரவில்லை நான். இதன் மூலம் சாதிப்பது ஏதுமில்லை என்பதே நான் சொல்லவருவது. "இவர்தான் அவர்" என்ற சந்தேகம் உள்ளவர்கள் ஒத்துப்பாடலாம். சந்தேகம் இல்லாதவர் கூறியவர் மேல் கோபம் கொள்ளலாம். இரண்டுக்கும் இடையில் உள்ளோர் முதல்பக்கமோ இரண்டாம் பக்கமோ சாயலாம். ஆனால் மொத்தத்தில் வம்பு பேசியதைத் தவிர வேறெதுவும் சாதிக்கப்படவில்லை.

கீழ்த்தரமான தனிநபர் தாக்கு விமர்சனங்கள், ஆபாசப் புகைப்படங்கள்-விவரணங்கள் இருந்தாலே ஒழிய சைபர்கிரைம் இதில் தலையிடப்போவதில்லை. சட்டங்கள் இணையம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் பல நாடுகளில் இன்னும் உருவாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன,முழுமை அடையவில்லை. அடையாளத்திருட்டும் ஆபாசமும் சம்மந்தப்பட்ட இடங்களிலேயே பலநாடுகள் சம்மந்தப்பட்டதாய் இருப்பதால் சட்டம் பெரிதாக எதையும் செய்யமுடியவில்லை என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மற்றபடி "இவர்தான் அவர்" என்று சொன்னவரும் சரி "இப்படிச்சொன்னதால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று சொன்னவரும் சரி, அந்தச் சவடால்களைத் தாண்டிப்பயணித்ததாக எனக்குத் தெரியவில்லை. (இன்றைய நிகழ்ச்சியைப்பற்றி மட்டும் கூறவில்லை, பழையவற்றையும் சேர்த்தே சொல்கிறேன்)

இரு பெயர்களில் பதியவேண்டிய அவசியம்?

பல காரணங்கள் இருக்கலாம். முதல் பெயரின் புனித பிம்பத்துவத்தைக் காப்பாற்ற இருக்கலாம். தன் கருத்து தாக்கப்படுவதைப் பொறுக்காமல் அதே நேரத்தில் பெயரையும் கெடுத்துக்கொள்ள விரும்பாததால் இருக்கலாம், உள்மன விகாரங்களை வெளிப்படுத்த இருக்கலாம், பழிவாங்க இருக்கலாம் - எதுவாக இருந்தாலும், அது அந்தத் தனிநபரின் பொறுப்பு. இரண்டு புனைபெயர்களை வைத்துக்கொண்டு இரு வேறு தொனிகளிலும் மொழிநடைகளிலும் பேசிக்கொண்டிருப்பவர்கள் புதிய விஷயமல்ல - கல்கி-கர்நாடகம்-எமன், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்-சுஜாதா, புஷ்பா தங்கதுரை-ஸ்ரீவேணுகோபாலன் என்று தமிழ் வெகுஜன எழுத்திலேயே உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. என்னைப்பொறுத்தவரை, தனிநபர் தாக்குதல், ஆபாசம் போன்ற எல்லைகள் மீறப்படாதவரையில் இதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு பெயர்களை வெளிப்படுத்துவதும் வெளிப்படுத்தாததும் அவரவர் சொந்த முடிவுக்கு விட்டுவிடப்படுதலே நன்று.

ஆனால், ஆதாரங்களுடன் இவற்றை வெளிப்படுத்துவோர் பலர் முன்முடிவுகளோடே இருப்பதைப் பார்க்க முடிகிறது.

(ஒரு உதாரணத்துக்குச் சில பெயர்களைப் பயன்படுத்துகிறேன் - அவர்கள் கோபிக்கவேண்டாம்)

எங்கே பிராம்மணீய ஆதரவுக்கருத்து இருந்தாலும் திருமலை,(இவரை சில பின்னூட்டங்கள் தவிர வேறெங்கேயும் நான் படித்ததில்லை!) மாயவரத்தான் உள்ளிட்ட சில பெயர்களே முன்வைக்கப்படுகின்றன. அதேபோல எங்கே பார்ப்பன எதிர்ப்புக் கருத்து இருந்தாலும் போலி டோண்டு உள்ளிட்ட சில பெயர்களே.

இவர்களைத் தவிர அந்தந்தக் கருத்து கொண்டவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது என்பது எவ்வளவு அபத்தம்? அதுவும் முழுக்க நம்ப முடியாத ஐபி, வார்த்தைக்கோர்வைகள் போன்ற ஆதாரங்களை முன்வைத்து எனும்போது?

மற்றபடி இவற்றை விவாதிப்பதால் நமது வம்பு பேசும் மனப்பான்மைக்கு பொழுதுபோகிறதே ஒழிய வேறு பிரயோஜனம் இல்லை.

வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா?

Nov 12, 2006

கலைஞருக்கு ஓய்வு தேவையா? (12 Nov 06)

இளம் வயதில் அரசியலில் அவர் எடுத்த பல முடிவுகள் அவரைப் புடம் போட்டு பல சாதனைகள் செய்யவைத்தன - பெரிய பதவிகளைப் பார்த்தாகிவிட்டது, சிறை சென்று மீண்டாகிவிட்டது. இலக்கியத்தில், அதுவும் அவர் தேர்ந்தெடுத்த இலக்கியப்பிரிவில் அவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற அளவிற்கு பல சாதனைகள் செய்துவிட்டார்.

இருந்தாலும் ஓய்வு தேவையே என்பது என் கருத்து. இனியும் அவர் அரசியல் - இலக்கியம் என்ற இரட்டைக்குதிரைச் சவாரி செய்வது இரண்டு குதிரைகளுக்குமே கஷ்டமாகத்தான் அமையும் என்பதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

முக்கியமாக, அவர் இலக்கியத்திலிருந்து ஓய்வு பெறுதல் அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

எந்தக்கலைஞரைப்பற்றிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? பிரிட்டன் பாராளுமன்றத்தில் மிக இளையவராக உள்ளே நுழைந்து, கன்ஸர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அரை சென்று, பாலியல் வழக்கில் சிறை சென்று மீண்டு வந்திருக்கும், பல பெஸ்ட்ஸெல்லர்களை எழுதி இலக்கியத்திலும் வலுவான இடத்தைப் பிடித்திருக்கும் ஜெஃப்ரி ஆர்ச்சர் என்னும் கலைஞரைப்ப்பற்றிதான் பேசுகிறேன் என்பதில் சந்தேகம் இல்லையே?

ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகம் - False Impression - ஐப் படிக்கும் துர்ப்பாக்கியத்துக்கு சமீபத்தில் தள்ளப்பட்டேன்.

அமெரிக்க கந்துவட்டி வங்கியில் பணிபுரியும் நாயகி, செப்டம்பர் 11 விபத்தில் மயிரிழையில் தப்பிப்பிழைக்கிறாள் - ஆனால் அவள் பிழைத்தது யாருக்கும் தெரியாது. இந்த நிலையை கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு, விலைமதிப்பற்ற கலைப்பொருளை இழக்கவிருக்கும் ஒரு வாடிக்கையாளரைத் தப்புவிக்க முயற்சிக்கிறாள். இவளுக்கு மட்டும் எல்லா விமானங்களும் காத்திருக்கின்றன. மன்னிக்கவும் - இவளுக்கு மட்டுமல்ல, இவளைத் துரத்தும் ஒரு FBI அதிகாரி, கொலை செய்யத் துரத்தும் (பல் நாட்டு போலீசால் தேடப்படும்) ஒரு தொழில்முறைக் கொலைகாரிக்கும், எல்லா விமானங்களும், பாஸ்போர்ட் விசா எந்தத் தொந்தரவும் இன்றி திறந்து காத்திருக்கின்றன. 300 கொடுமையான பக்கங்களுக்குப் பிறகு சுபம்!

ஆக்ஷன் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதென்னவோ சரிதான். அதற்காக இப்படியா? கதை வேகமாகப்போகிறது என்பதற்கு ஆரம்ப கால எழுத்தாளர்கள் பயன்படுத்தும் பயணம்.. பயணம் மேலும் பயணம் உத்தி, எந்தக் கதாபாத்திரமும் எப்போதும் எங்கேயும் இருக்கலாம் என்னும் ஆம்னிப்ரஸன்ஸ் லாஜிக் மீறல்... Matter of Honor, Shall we tell the President போன்ற நிஜமான ஆக்ஷன் கதைகளைக் கொடுத்த ஆர்ச்சரா இப்படி?

ஓய்வு தேவைதானே? நீங்களே சொல்லுங்கள்!

Nov 11, 2006

இளைய ராஜா? (11Nov 06)

சர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:


ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:

"இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" அல்லது "வாடி என் கப்பக்கிழங்கே".

(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)

1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -"என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா" (இதுவும் நினைவிலிருந்துதான்).

திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, "சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது" என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். "ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா" என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.

இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.


இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை - இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.

பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் - அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் - இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.

தற்போதைய சர்ச்சை - பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -

"I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job' என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.

இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் - "நான் பொல்லாதவன்" எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், "நாடு பார்த்ததுண்டா" என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து - அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.

அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.

நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

Nov 5, 2006

இலவசம்? (தேன்கூடு போட்டிக்காக- 05 Nov 06)

வெண்ணெய் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடியது கார். ஆறு சாரிகள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை நேரான சாலை, கண்ணுக்கழகாய் இரண்டு பக்கமும் மஞ்சள் பூப்பூத்த மரங்கள். இந்தியாவைவிட்டு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஒப்பிடுதலை இன்னும்கூட தவிர்க்க முடிவதில்லை.

எக்ஸிட் 164தானே சொன்னான்? 164 கண்ணில் பட்டதும் படிப்படியாக வல்து எல்லைக்கு வந்து குறுஞ்சாலைக்குள் புகுந்ததில் "Geoffrey Smith" பலகை கண்ணில் பட, வீட்டுச்சாலைக்குள் திருப்பினேன்.

ஜெஃப்பின் வீட்டுக்கு முதல் முறையாகப் போகிறேன். வாழ்கிறான் மனுஷன்! நகரத்தில் இருந்து இருபதே நிமிட ட்ரைவில் விஸ்தாரமான பெண்ட் ஹவுஸ். ஆள் படை அம்பு! காரை பார்க் செய்து உள்ளே நுழைந்தவுடன் பட்லர் வந்து வரவேற்பரைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான். "நீங்கள் எதிர்பார்க்கப் படுகிறீர்கள். இன்னும் சில நிமிடங்களில் திரு ஜெப்ரி ஸ்மித் உங்களுடன் பேசுவார்". அதெப்படி ரெகார்டட் செய்தி போலவே நேரில் உள்ளவரிடமும் இவனால் பேச முடிகிறது?

விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. ஜோக்குகளில் வருவது போல நல்ல செய்தி கெட்ட செய்தி எது வேண்டும் என ஆரம்பிக்கலாமா? எனக்கு விஷயத்தைச் சொன்ன ஃப்ரான்ஸிஸ் அப்படித்தானே ஆரம்பித்தான்..

"பாஸ் ஒரு செய்தி.. நல்லதா கெட்டதா எது முதலில் வேண்டும்?"

"கெட்டதையே சொல்லு" அப்போதுதான் நல்லது வரும்போது மனசுக்கு ஆறுதலாய் இருக்கும்.

"போர்ட்டிலிருந்து மேக் போன் செய்தான். எப்படியும் நம்ம கன்ஸைன்மெண்ட் கிளியர் ஆக ஒரு வாரம் ஆகிவிடுமாம்."

"என்ன விளையாடுகிறார்களா? ஒரு வாரம்! போர்ட் அதிகாரிகளுக்குத் தெரியாதா நம்ம கன்ஸைன்மெண்ட் பெரிஷபிள் கூட்ஸ் என்று. ஒரு வாரத்துக்குள் எல்லாம் நாசமாப் போயிடுமே.. என்ன பண்றான் மேக்? இதைக் கூட கன்வின்ஸ் பண்ண முடியாதாமா அவனால்?"

"மேக் எவ்வளவோ ட்ரை பண்ணான். போர்ட் ஸ்ட்ரைக்லே மாட்டியிருக்கு. கஸ்டம்ஸ் ஆளுங்க ஹெல்ப் பண்ணலாம். ஆனா அவங்க நாம போன முறை பண்ண அண்டர் வேல்யூ தில்லுமுல்லுலே ரொம்பக் கடுப்பா இருக்கானுங்களாம்."

20 மில்லியன் டாலர் சரக்கு! எக்ஸ்பயரி தேதி தாண்டிவிட்டால் ஒன்றுமே செய்ய இயலாது. கடலில் கரைக்கலாம்.

"ப்ராடக்ட் டீடெயில்ஸ் இருக்கா?" எதையாவது விற்க முடியுமா பார்க்கலாம்.

"எல்லாமே சீஸ் மட்டும்தான்."

"சரியாப்போச்சு! ஒண்ணுமே பண்ண முடியாது! இன்ஷ்யூரன்ஸ்?"

"வழக்கம்போல அண்டர் வேல்யூதான். 20% கூட கிடைக்காது"

"பெண்டிங் ஆர்டர் எதாவது இருக்கா?"

"அங்கேதான் நான் சொன்ன குட் நியூஸ் வருது. வால்மார்ட்டிலே இருந்து மார்மலேடுக்கு ஒரு பெரிய ஆர்டர் இருக்கு. டெலிவரி இன்னும் ஒரு வாரம் கழிச்சு. ஒரு அவசர் பேக்கேஜிங் பண்ணி, மார்மலேடோட இந்த சீஸையும் இலவச இணைப்பா பண்ணிட்டா என்ன? FDA ரூல்ஸ்படி மெயின் ஐட்டத்துக்கு மட்டும்தான் எக்ஸ்பயரி பாப்பாங்க. இதைப் பிரமோஷனா ஆக்கிட்டோமுன்னா டேக்ஸ் ரிபேட்லே ஒரு 50%கிட்டே சால்வேஜ் பண்ணிடலாம் இல்லையா?"

"நாட் அ பேட் ஐடியா! பிகர்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் பண்ணிட்டயா?"

"இதோ இங்கே இருக்கு. ஆனா ஒரு சிக்கல்!"

"என்ன?"

"அக்கவுண்ட்ஸ்லே சொல்றாங்க, பெரியவர் அப்ரூவல் இல்லாம இதைச் செய்ய முடியாதாம். வேல்யூ 5M க்கு மேலே போகுதே."

"பெரியவர் எங்கே இருக்கார்? இப்பல்லாம் ஆபீஸுக்கு வர்றதே இல்லையே"

"அவர் பெண்ட் ஹவுஸிலேதான் இருப்பார். நீங்க நேரிலே போனா கன்வின்ஸ் பண்ணிடலாம்."

எனவே, நான் இங்கே இருக்கிறேன்.

ஸ்மித் வந்துகொண்டிருந்தார்.

"ஹாய் ப்ரேஸத்! ஹவ் டூ யூ டூ?" மரபை மீறாத பிரிட்டிஷ் வரவேற்பு.

"உங்களுடன் 20 வருடமாக இருக்கிறேன். என் பெயர் பிரஸாத் என்று உங்களால் இன்னும் சொல்ல முடியவில்லை" என்றேன் சிரித்துக்கொண்டே.

"உன் பெயரை உச்சரிக்கத் தெரிந்துவிட்டால் உன்னை வேலையிலிருந்து நீக்கி விடுவேன்"

"உடம்பு எப்படி இருக்கிறது? என்ன ஆயிற்று?"

"என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. அம்மாவுக்குத் தான் ரொம்ப மோசமாகிவிட்டது. கடைசி நாட்கள் நெருங்கிவிட்டது. இப்போது கூட இருந்தால்தான் உண்டு."

"என்ன அம்மாவுக்கு?"

"வா, நீயே பாரேன்"

படுக்கையறை ஒரு ஆஸ்பத்திரியின் சுத்தத்தோடும் நாற்றத்தோடும் இருந்தது. மலர்க்கொத்துகள், ராஜாராணி படுக்கை, பளிச்சிடும் வெள்ளைச் சுவர்கள் - இந்த அலங்காரங்களுக்குச் சம்மந்தமில்லாமல் வீல்சேரில் குப்பைபோல அமர்ந்திருந்த ஸ்மித்தின் அம்மா.

"ஹலோ" என்றேன் தயக்கத்தோடு.

குரல் வந்த திசையை நோக்கி கண்கள் மட்டும் திரும்பின. ஸ்மித் சொன்னது சரிதான். உயிர் வெளியேறிவிட்ட வெளிறிய கண்கள். திரும்பியதோடு சரி. ஒரு புது ஜீவன் வந்திருப்பதை வேறெந்த விதத்திலும் அங்கீகரிக்கவில்லை.

"கேட்கிறதா?" ஸ்மித்தைப் பார்த்துக் கேட்டேன்.

"கேட்கிறது என்றுதான் டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால்தான் உன்னைத் தைரியமாக உள்ளே அழைத்துவந்தேன்."

குழப்பமாகப் பார்த்தேன்.

"இரண்டு வாரங்களுக்கு முன்புகூட உணர்வு இருந்தது. அப்போது நீ உள்ளே வந்திருந்தாயானால், கையில் கிடைப்பதை உன்மேல் தூக்கி வீசி எறிந்திருப்பாள். ரொம்ப வயலெண்டாக நடந்துகொண்டிருப்பாள். காயங்களுடன் தான் நீ திரும்பியிருப்பாய்"

"ஏன்? ...." கேள்வியை வடிவமைக்க முடியாமல் திணறினேன்.

"ஆம். அவளுக்கு ஷிசோப்ரினியா... என்னுடைய காயங்களுக்கு இப்போது அர்த்தம் புரிந்ததா?"

அலுவலகத்தில் ஸ்மித்தின் காயங்கள் ஒரு தொடர் வதந்தி. குடித்துவிட்டு ரோடில் கவிழ்ந்திருப்பார், எந்தப் பெண்ணையாவது வம்பிழுத்திருப்பார் எனப் பல ஹேஷ்யங்கள் உலாவின.

"எவ்வளவு நாளாக இப்படி?"

"1960இலிருந்து"

"அப்படியென்றால்!"

"எனக்கு ஐந்து வயதிலிருந்து. இவளைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் நான் பேச்சிலராகவே தொடர்கிறேன்." தொண்டை கரகரக்கிறது. மனிதர் உள்ளே உடைந்து போயிருக்கிறார். துக்கத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாள் ரகசியங்கள் வெளியேறுவதைப்பற்றிய கவலைகளைத் துரத்தி விட்டிருக்கிறது.

"எப்படி ஆயிற்று?"

"என் தந்தை! காதல் மனைவி மார்னிங் சிக்னஸில் தவிப்பதைப் பொறுக்க முடியாத தந்தை!" வார்த்தைகள் உடைந்து உடைந்துதான் வெளியேறுகிறது.

"அவர் ஒரு மெடிகல் சேல்ஸ்மேன். புது மருந்துக்குக் கிடைத்த இலவச சாம்பிள்களை மனைவி மீதே பிரயோகித்தார். "முழுக்கப் பரிசோதனை செய்யப்பட்டது" என்ற கம்பெனியின் வார்த்தைகளை நம்பினார்."

"அம்மாவுக்கு பெண் குழந்தை ஆசை. பிறந்தது! ஒரு வெஜிடபிளாக."

"தாலிடோமைட்?*"

"ஆம்! அம்மா அப்பாவை மன்னிக்கவேயில்லை. அந்தக் குழந்தையையும் காப்பாற்றப் போராடினாள். ஒரு வருடம் உயிரோடு .. வெறும் உயிரோடு மட்டும் இருந்து இறந்தாள் என் தங்கை. அப்பா தற்கொலை செய்து கொண்டார். அம்மா இப்படி ஆகிவிட்டாள்" இப்போது குரலில் அழுகை தெளிவாகவே தெரிந்தது.

டாக்டர் உள்ளே நுழைவதைக் கவனித்தவுடன் சுதாரித்துக் கொண்டார்.

குறிப்பறிந்து "நான் வரவேற்பரையில் இருக்கிறேன்" என்றேன்.

ஐந்து நிமிடங்களில் டாக்டரும் அவரும் ஒன்றாக வெளியே வந்தபோது இயல்பு நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.

"ப்ரேஸத்.. நீ வந்த விஷயம் என்ன?"

"அது வந்து... நம்முடைய சீஸ் கன்ஸைன்மெண்ட் ஒன்று போர்ட்டிலிருந்து கிளியர் ஆகவில்லை. ஸ்ட்ரைக்கில் மாட்டிக்கொண்டுவிட்டது. எக்ஸ்பயரி டேட் தாண்டிவிடும்போல் தோன்றுகிறது."

"என்ன செய்வதாக உத்தேசம்?"

ஒரு முடிவுக்கு வந்தேன். தொடர்ந்தேன்.

"அண்டர் வேல்யூக்குதான் இன்ஷ்யூர் பண்ணியிருக்கோம். அதனால, நஷ்டத்தை ஏற்க வேண்டியதுதான்"

_______________________
குறிப்பு * :மசக்கைத் தொல்லை (Morning Sickness) ஐ குறைக்க என்று விளம்பரப்படுத்தப்பட்ட Thalidomide 1950 - 60 களில் ஏராளமான அமெரிக்கப்பெண்களால் உபயோகப்படுத்தப்பட்ட மருந்து.
FDA - (Foods & Drugs Agency) வாலும் மருந்துக்கம்பெனியாலும் முழுமையாகச் சோதிக்கப்படாமலேயே அறிமுகமான இம்மருந்து கொடிய பல பக்கவிளைவுகளை - குறிப்பாக கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படுத்தி மருந்து வரலாற்றில் ஒரு கரும்பக்கமாகவே விளங்குகிறது.
கருச்சிதைவு, உணர்வற்ற குழந்தைகள், இந்தக்கதையில் வருவது போல் பைத்தியம் பிடித்த தாய்மார்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என ஒரு கோரத்தாண்டவம் ஆடிய மருந்து இது. கர்ப்பிணிப்பெண்களுக்கு எந்த மருந்துமே தரக்கூடாது என்ற கொள்கைக்கும் சில டாக்டர்கள் வந்ததற்கான காரணம் இது.

 

blogger templates | Make Money Online