Showing posts with label விளம்பரம். Show all posts
Showing posts with label விளம்பரம். Show all posts

Jan 8, 2014

கரியும் கசடுகளும் கொஞ்சம் கண்ணீரும் - கரும்புனலின் கதை

May you live in interesting times என்று ஒரு சீனத்துச் சாபம் ஒன்று உண்டாம். சிலபல வருடங்களுக்குப் பிறகு கதையாகச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் பல விஷயங்கள் வாழும்போது கொடுமையாகத்தான் இருக்கின்றன. 

ராஜீவ் காந்தி கொலையானபொழுது பீஹாரின் ஒரு மூலையில் இருந்தேன். என் தலைவர் தமிழர்களால் கொல்லப்பட்டார், எனவே நாம் தமிழர்களைக் கொல்வோம் என்பதற்கு மேல் வேலை செய்யாத மூளைக்காரர்களால் நிரம்பிய ஊர். இத்தனை வருடம் கழித்து பூட்டிய அறைக்குள் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டு பயந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக மிச்சமிருந்தாலும்,  உண்மையா பொய்யா என்று தெரியாத வதந்திகளால் வெளியே நடந்த கலவரத்தைவிட உள்ளுக்குள் நடந்த கலவரத்தை வாழும்போது interesting ஆகத்தெரியவில்லை. 

ரயிலி ஏறி, ஜன்னலோர சீட் பார்த்து அமர்ந்தவனை எழுப்பி பளாரெனக் கன்னத்தில் அறைந்து பர்ஸைப்பிடுங்கிக்கொண்டு சென்ற கதை, இப்போது மட்டும்தான் Interesting.

டிசம்பர் ஆறாம்தேதி எதோ எங்கேயோ கலவரம் என்று அரைகுறைத் தகவல்களோடு அயோத்திக்கு மிகப்பக்கமாக ரயிலில் செல்லும்போது எரியும் குடிசைகளைப்பார்த்தது, சுரங்கச் சாலையைக் கடக்கும்போது காரணம் சொல்லாமல் போலீஸால் கைது செய்யப்பட்டது, ஆற்றில் குளிக்கும்போது சாம்பல் உள்ளே சென்று வாந்தியாக வெளியே வந்து 3 நாட்கள் சலைன் உதவியோடு மட்டுமே வாழ நேர்ந்தது,  பீஹாரைப் பிரிக்க ஜார்க்கண்ட்காரர்கள் கலவரம் செய்ய நடுத்தெருவில் ராத்திரியில் நின்றது, ஓட்டிச்சென்ற ஜீப் ஆளரவமில்லாத அதலபாதாளத்தில் உயிரைவிட்டது..

அமோகமாகவே சபிக்கப்பட்டிருக்கிறேன், Interesting காலங்களில் வாழ.

கரும்புனல் அட்டை
வீடு, குறுகிய நட்புவட்டம், கல்லூரி என்று “பழம்” வாழ்க்கை வாழ்ந்துவந்த எனக்கு, நிலக்கரிச் சுரங்க நகரியங்களில் தனியாக வாழ நேர்ந்தபோது ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி கொஞ்சநஞ்சமானது இல்லை. ஊழலை எப்படியெல்லாம் விஞ்ஞானமாக்கலாம் என்றே ஏகதேசம் சிந்திக்கும் மேலதிகாரிகள்;  நுனிநாக்கு ஆங்கிலம் நாகரிகமான தோற்றம் உள்ளே சாக்கடையான மனது கொண்ட எஞ்சினியர்கள்; கழட்டும் எஞ்சினை ஒருவேளை கீழ்ஜாதிக்காரன் தொட்டிருப்பானோ என்றெல்லாம் யோசிக்கும் சுரங்க ஊழியர்கள்; விவசாயம் செய்வதையும் கலவரத்தில் எதிர்மதக்காரனைப் போட்டுத்தள்ளுவதையும் ஒன்றேபோல நினைக்கக்கூடிய மக்கள்... எந்தக்கல்லூரியும் சொல்லித்தராத வாழும் கலையை எனக்குச் சொல்லித்தந்தது பீஹார்.

ஆனால், அந்தக்காலம் மட்டும் அல்ல.. எழுதிப்பழக்கமில்லா என்னை ஒவ்வொரு எழுத்தாக அன்பாகவும் அடித்தும் திருத்திவரும் நண்பர் குழாம் அமைந்திருக்கும் இந்தக்காலமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. நாம ஒண்ணை எழுதினா அது ஒழுங்காத்தான் இருக்கணும் - என்று குழுவாகச் செயல்பட்டு ஊக்குவிக்கும் உடன்பிறவா சகோதரர்கள் இலவசக்கொத்தனார், டைனோபாய்; நீளமாக எழுதவே சோம்பேறித்தனப்பட்ட என்னை விர்ச்சுவல் பிரம்பால் அடித்து முதல் நாவல் எழுத வைத்த பா.ராகவன்; எவ்வளவு வேலை இருந்தாலும் நான் அனுப்பியதைப்படித்து உடன் திருத்தம் சொல்லும் சொக்கன்; தன்னைத் திட்டியே எழுதினாலும் புன்சிரிப்போடு கடக்கும் என் இல்லாள்..இதுவும் சுவாரஸ்யமான காலம்தான். ஆனால் கொடுமைகள் இல்லாத, சுகமான சுவாரஸ்யம்.

இந்த நாவலை எழுத எந்தப் பிரயத்தனமும் தேவைப்படவில்லை. பெரும்பாலும் நடந்த சம்பவங்களை ஒரு கதைச் சரட்டில் கோப்பதைத் தவிர.  

--கரும்புனல் நாவலில் பதிந்திருக்கும் என்னுரை.
--சில பழங்கதைகளுக்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.
--வம்சி பதிப்பக ஸ்டாலில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் 

Dec 17, 2012

இலக்கணம் படிச்சதில்ல தலைக்கனமும் எனக்கு இல்ல

சொல்லிக்கொடுப்பது என் வேலை. எனவே, எப்படி ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் கற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் என் வேலையின் முக்கியமான ஒரு பகுதி.

ஒரு ஆசிரியராக நான் உன்னைவிடப் பெரியவன், விஷயம் அறிந்தவன், நான் கடவுள் என்ற பிரமையை ஏற்படுத்திச் சொல்லிக் கொடுப்பது ப்ரைமரி ஸ்கூலுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம், வயது முதிர்ந்த மாணவர்களுக்கு அந்த முறை வேலைக்காகாது.

பள்ளியில் நான் கற்ற விஷயங்கள் எவை இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று ஆழமாக யோசித்துப் பார்த்தால்,  எனக்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை விட, சக மாணவர்கள் சொல்லிக்கொடுத்தவையே அதிகம் நினைவில் நிற்கின்றன. இவனுக்கே புரிஞ்சிடுச்சே, எனக்குப் புரியாம போயிடுமா என்ற எண்ணம், புரிதலை வேகப்படுத்துகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதே உணர்வைத் தந்த கற்றல் அனுபவம், கொத்தனார் மூலம். கொத்தனாரின் தமிழ் ஆரம்ப காலத்தில் ஒன்றும் அவ்வளவு அபாரமான தமிழ் எல்லாம் இல்லை. சந்திப்பிழை, எழுத்துப்பிழை எல்லாம் இருந்ததுதான். ஆனால் தவறு என்று சுட்டிக்காட்டினால், அது ஏன் தவறு என்று ஆராய்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து, ரெஃபெரன்ஸ்களை அடுக்கி - அந்தத் தவறைச் சரி செய்வதற்குள் அவன் நிறையக் கற்றிருப்பான்.

அப்படிக் கற்ற விஷயங்களை, சக மாணவன் போல சொல்லித்தந்ததில்தான் என் பிழைகளும் பெருமளவுக்குக் குறைந்திருக்கின்றன.

தமிழ் பேப்பரில் இலக்கணம் பற்றி ஒரு தொடர் எழுதச்சொல்லி பாரா சொன்னதும்  நாம் வழக்கமாகத் தமிழில் செய்யும் தவறுகளை, ஏன் தவறு, எப்படித் தவறு என்பதற்கு உதாரணங்களுடன் எழுத ஆரம்பித்தான் -  எனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே, எளிமையாக -சக மாணவன் தொனியுடன். அது ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 

சினிமாப்பாட்டு உதாரணங்கள், குமுதம் ஸ்டைல் கவர்ச்சிப் படங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும் அது வரவேற்பைப் பெற்றிருக்கும். ஏனெனில் - கற்றல் என்பது வேகம் பெறுவது சக மாணவர்களால்தான், ஆசிரியர்களால் அல்ல.

இப்போது புத்தகமாக வந்திருக்கிறது; இது பண்டிதர்களுக்கான புத்தகம் அல்ல. அவர்களுக்குப் புத்தகம் தேவையில்லை. இது நமக்கான புத்தகம். 

தமிழ் எழுத ஆர்வம் கொண்டுதான் அனைவரும் ஆல்ட்+2 அடிக்கிறோம். தப்பும் தவறுமாக எழுதவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் தமிழ் எழுத அதிகம் தேவையில்லாத சூழலில் வேலைபார்க்கும் நமக்குப் படித்த இலக்கணம் மறந்து போனதில் ஆச்சரியம் இல்லை. இந்தப்புத்தகம் பழைய நினைவுகளைக் கிளறும். குட்டிச் சொல்லாமல், தட்டிச் சொல்லும் நம் வழக்கத் தவறுகளை. 

உங்கள் கையில் இருக்கவேண்டிய புத்தகம் - சந்தேகமே இல்லை.

ஆன்லைனில் வாங்க, இங்கே சொடுக்கவும்.

பிகு: அட்டையில் ஓர் ஒற்றுப்பிழை இருக்கிறது - அது என்ன என்று கண்டுபிடித்துவிட்டால், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேறிவிடும்.

Jul 31, 2012

நாளை முதல் உங்கள் அபிமான புத்தகக் கடைகளில்..



சாஃப்ட்வேர் ஆசாமி குலசேகரனுக்குத் தெரியாது - சாதாரணமாகத் தொடங்கிய நாளின் முடிவில் பிரம்மாண்டமான சதிப்பின்னலில் தானும் ஒரு அங்கமாகப் போவது.

மும்பை நடிகை மஞ்சுவுக்குத் தெரியாது - தான் சந்திக்கப் போகும் அரபியின் கையில்தான் தனது முடிவு என்பது.

அரபிப் பணக்காரன் கம்ரானுக்குத் தெரியாது - தன் சக்திக்கும் மீறிய எதிரிகளின் கையில் சிக்கி இருப்பது.

கூலிக் கொலைகாரன் மார்க்குக்குத் தெரியாது - இது தன்னுடைய கடைசி அசைன்மெண்ட் என்று.

சிறப்புக் காவல்படை துரைராஜுக்குத் தெரியாது - தன் முதல் வேலையில் இருக்கும் பிரம்மாண்டமான ரிஸ்க்!

எல்லாத் தெரியாதவர்களும் ஆடும் சம்பவங்களின் சதிராட்டம்....

________________


ஆக்கும் சக்தி எல்லாமே அழிக்கவும் வல்லவைதான். கண்டுபிடித்த விஞ்ஞானியைவிட உபயோகிக்கும் தீவிரவாதிக்கு அழிக்கும் திறன் அதிகமாகத் தெரியும். தீவிரவாதிக்குத் தெரியாத விஷயங்களும் தெரிந்திருந்தால்தான் காவல்படைகள் தன் வேலையைச் செய்ய முடியும்.

அமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்குக் கடத்த வேண்டும்?  இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும்? வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபீஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃப் பி ஐ உயிரை விட வேண்டும்? 

சர்வதேசத் தீவிரவாதம்.. 
சர்வதேசக் காவல்படை.. 
சர்வதேசமும் சுற்றும் கதை...

_____________________________________________________________________

ஆகஸ்ட் மூன்று - ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியீடு.

உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.

Oct 25, 2010

அல்வா!

தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை எழுதி வருகிறேன். திரில்லர் என்பது மட்டும்தான் ஆரம்பிக்கும்போது போட்டுக்கொண்ட விதிமுறை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கேன்வாஸை விரிவுபடுத்தி ஃப்யூயல் செல் ஆராய்ச்சி, தொழில் ஒற்றறிதல் (industrial espionage-ங்க :-)) என்று எகிறி, இந்தியா, மத்தியகிழக்கு, கோஸ்டா டி ஸொல், பென்சில்வேனியா, நடுக்கடலில் ஆயில்ரிக் என்று எல்லா இடங்களுக்கும் பறக்கிறது கதை.



ஓரளவுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியவுடன் போஸ்டர் ஒட்டலாம் என்று காத்திருந்தேன். இப்போது கதை கியர் ஷிஃப்ட் ஆகிவிட்டது, ரன்னிங்கில் ஏறுகிறவர்கள் வசதிக்காக:

1

2

3

4

கருத்துகளைச் சொன்னால் தன்யனாவேன்.

Jul 4, 2006

அவியல் - ஒரு கூட்டுத் தகவலுடன்

1. இணையத்தில் இருந்து முதல் முறையாக முழுத் திரைப்படத்தையும் இறக்கிப்பார்த்தேன் - படம் மீண்டும் கோகிலா. நீண்ட இடைவேளைக்குப்பிறகு பார்த்தாலும் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பின் அருமையையும், இயல்பான அளவான வசனங்களையும், தெளிவான திரைக்கதையையும் பொருத்தமான பின்னணி இசையையும் பொதுவாகத் தெரிந்த ஒரு நாடகபாணியை மீறி ரசிக்க முடிந்தது. மிகவும் பிடித்தது க்ளைமாக்ஸ் வசனங்கள். சபல புத்திக் கணவனை வைத்துக்கொண்டே சினிமா நடிகையை "அடிக்கடி ஆத்துக்கு வந்து போங்கோ" என்று "அவ மேல இருக்க நம்பிக்கை"யால் சொல்வது வசனங்களால் நிரப்பப்பட்ட அப்போதைய படங்களிடையே நிச்சயம் புதுமை. இப்படம் வெற்றி பெற்றதா?

2. ஷா ருக் கானின் ரசிகனாக கொஞ்ச நாள் இருந்திருக்கிறேன், இருந்தாலும் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்தே பஹேலி பார்த்தேன். டுபாக்கூர். ராஜஸ்தானி கிராமத்துக் கர்ணபரம்பரைக் கதையை படமாக்கும்போது உடைகளுக்கும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தே ஆகவேண்டிய ரிச் லுக்குக்கும் செலவழித்ததில் கொஞ்சமாவது திரைக்கதை அமைப்பதில் காட்டியிருக்கலாம். ஷா ருக் ஏற்ற ஆவி கதாபாத்திரத்தால் எப்படிப்பட்ட மாயாஜாலங்கள் முடியும், எது முடியாது என்பதையே தெளிவாகச் சொல்லாமல் மூன்று மணிநேர இழுவை. இந்திப்படம் பார்க்கும் முன் ரொம்ப யோசிக்க வேண்டும். பனா வெற்றியாமே? என்னதான் இருக்கிறது வெற்றிக்கு?

3. என்ன ஆச்சு சன் டிவிக்கு? திருந்திவிட்டதா? ராடானின் தங்கவேட்டை புதுப்பொலிவுடன், செல்வி முடியும் கதையாகக் காணோம், போதாக்குறைக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் போட்டாலும், ஹீரோ விக்ரமைவிட கெஸ்ட் ரோல் சரத்குமாருக்கு விளம்பரத்தில் அதிக நேரம், அதே நேரத்தில் மற்ற விஷயங்களில் அப்படியேதான் இருக்கிறது - துள்ளித்திரிந்த காலம் விளம்ப்ரத்தில் நாயகி குஷ்பூவிற்கு கெஸ்ட் ரோல் ரோஷ்ணிக்கு அடுத்த இடம்தான்.. என்னமோ குக்கிங்.

4. கால்பந்தில் பிரேசில் தோற்றதற்கு ஒரே காரணம் - எனக்கு கால்பந்தில் ஆர்வம் இல்லை என்பதால்தானோ?

5. தமிழில் வரும் விளம்பரங்களின் தர வளர்ச்சி அதிசயமாக இருக்கிறது. லேட்டஸ்ட் பேவரைட் - ப்ரூ காபியில் சின்னக்கப்பில் காபி கொடுத்து தகவல் சொல்லும் இளம் மனைவி - ஒளிப்பதிவு, கான்சப்ட், ஆக்கம் - எல்லாம் அபாரம்.

6. நிறைய பேர் இப்படி அவியல் போடுகிறார்களே என்று பினாத்தலும் போட்டுவிட்டான். மேட்டர் ஒண்ணும் பெரிசா சிக்கலை. யாரும் மறந்துரக்கூடாது பாருங்க!


7. சொல்ல மறந்த கதை: அமெரிக்க சுதந்திர தினத்துக்கு அதே தினத்தில் அடிமையானவனின் வாழ்த்துக்கள். (அடிமைக்காலம்: 7 வருடம்)

அவியல்

1. இணையத்தில் இருந்து முதல் முறையாக முழுத் திரைப்படத்தையும் இறக்கிப்பார்த்தேன் - படம் மீண்டும் கோகிலா. நீண்ட இடைவேளைக்குப்பிறகு பார்த்தாலும் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பின் அருமையையும், இயல்பான அளவான வசனங்களையும், தெளிவான திரைக்கதையையும் பொருத்தமான பின்னணி இசையையும் பொதுவாகத் தெரிந்த ஒரு நாடகபாணியை மீறி ரசிக்க முடிந்தது. மிகவும் பிடித்தது க்ளைமாக்ஸ் வசனங்கள். சபல புத்திக் கணவனை வைத்துக்கொண்டே சினிமா நடிகையை "அடிக்கடி ஆத்துக்கு வந்து போங்கோ" என்று "அவ மேல இருக்க நம்பிக்கை"யால் சொல்வது வசனங்களால் நிரப்பப்பட்ட அப்போதைய படங்களிடையே நிச்சயம் புதுமை. இப்படம் வெற்றி பெற்றதா?

2. ஷா ருக் கானின் ரசிகனாக கொஞ்ச நாள் இருந்திருக்கிறேன், இருந்தாலும் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்தே பஹேலி பார்த்தேன். டுபாக்கூர். ராஜஸ்தானி கிராமத்துக் கர்ணபரம்பரைக் கதையை படமாக்கும்போது உடைகளுக்கும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தே ஆகவேண்டிய ரிச் லுக்குக்கும் செலவழித்ததில் கொஞ்சமாவது திரைக்கதை அமைப்பதில் காட்டியிருக்கலாம். ஷா ருக் ஏற்ற ஆவி கதாபாத்திரத்தால் எப்படிப்பட்ட மாயாஜாலங்கள் முடியும், எது முடியாது என்பதையே தெளிவாகச் சொல்லாமல் மூன்று மணிநேர இழுவை. இந்திப்படம் பார்க்கும் முன் ரொம்ப யோசிக்க வேண்டும். பனா வெற்றியாமே? என்னதான் இருக்கிறது வெற்றிக்கு?

3. என்ன ஆச்சு சன் டிவிக்கு? திருந்திவிட்டதா? ராடானின் தங்கவேட்டை புதுப்பொலிவுடன், செல்வி முடியும் கதையாகக் காணோம், போதாக்குறைக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் போட்டாலும், ஹீரோ விக்ரமைவிட கெஸ்ட் ரோல் சரத்குமாருக்கு விளம்பரத்தில் அதிக நேரம், அதே நேரத்தில் மற்ற விஷயங்களில் அப்படியேதான் இருக்கிறது - துள்ளித்திரிந்த காலம் விளம்ப்ரத்தில் நாயகி குஷ்பூவிற்கு கெஸ்ட் ரோல் ரோஷ்ணிக்கு அடுத்த இடம்தான்.. என்னமோ குக்கிங்.

4. கால்பந்தில் பிரேசில் தோற்றதற்கு ஒரே காரணம் - எனக்கு கால்பந்தில் ஆர்வம் இல்லை என்பதால்தானோ?

5. தமிழில் வரும் விளம்பரங்களின் தர வளர்ச்சி அதிசயமாக இருக்கிறது. லேட்டஸ்ட் பேவரைட் - ப்ரூ காபியில் சின்னக்கப்பில் காபி கொடுத்து தகவல் சொல்லும் இளம் மனைவி - ஒளிப்பதிவு, கான்சப்ட், ஆக்கம் - எல்லாம் அபாரம்.

6. நிறைய பேர் இப்படி அவியல் போடுகிறார்களே என்று பினாத்தலும் போட்டுவிட்டான். மேட்டர் ஒண்ணும் பெரிசா சிக்கலை. யாரும் மறந்துரக்கூடாது பாருங்க!

 

blogger templates | Make Money Online