Dec 31, 2007

தரைவாழ் விண்மீன்கள் - விமர்சனம் - கடைசிப்பகுதி

படம் பார்த்த சூட்டோடு மூன்று பகுதிகள் எழுதிவிட்டு, வேண்டுமென்றேதான் ஒரு வாரம் இடைவெளி விட்டேன். சில படங்களின் தாக்கம் ஒன்றிரண்டு நிமிடங்களிலும் சில படங்களுக்கு நாட்கணக்கிலும் நீடிக்கும். இந்தப்படத்தின் தாக்கம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம் என்றே ஒரு வாரம் காத்திருந்தேன்.

கொஞ்சம் கூடக்குறையாமல் மனதெங்கும் வியாபித்திருக்கிறான் இஷான். இஷானாக நடித்திருக்கும் டர்ஷீல் சபாரிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று யாரேனும் முன்மொழிந்தால் - பிச்சுப்போடுவேன் பிச்சு!

ஸ்கூல் பங்க் அடித்தேன் என்ற ஒரே வசனத்தை அண்ணனிடமும் அப்பாவிடமும் இருமுறை சொல்கிறான். அந்த இரண்டுமுறைகளிலும் எந்த அளவுக்கு வித்தியாசத்தைக் காட்டுகிறான்? அண்ணனிடம் சொல்லும்போது "பிந்தாஸ்" (கவலையற்ற), அப்பாவிடம் சொல்லும்போது உடல் முழுக்கக் குறுகி வார்த்தைகள் வெளியே வருவதே தெரியாத பயத்துடன்.. ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு காட்சியே பதம்! வகுப்பை விட்டு வெளியே போ என்று ஆசிரியை சொன்னதும் கலக்கத்துடன் வெளியே வருவதும் வந்த இரண்டாம் நொடி கவலை பறந்து நடனமாட ஆரம்பிப்பதும்; ஆமீர்கான் வந்ததும் பொதுவாக வகுப்பே மகிழ்ச்சியில் இருக்க, இவன் மட்டும் சோகமாக இருப்பதும், ஆட்டம்பாட்டத்தில் கலந்துகொள்ள மனது துடித்தாலும் அதையும் மீறிக் காயப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தி இருப்பதும் -- எந்த வளர்ந்த நட்சத்திரத்தினுடனும் போட்டி போடும் இயல்பான நடிப்பு.

ஆமிர்கான் சிறந்த நடிகர்தான், ஆனால் இந்தப்படத்தில் அவருக்கு வேலைவாய்ப்பு குறைவு. இரண்டாம் பாதியில் அறிமுகமாவது மட்டுமல்ல, வரும் காட்சிகளிலும் உரை நிகழ்த்துகிறாரே அன்றி பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பில்லை - அந்த இறுதிக்காட்சி தவிர. பிரின்ஸிபல் முடிவுகளை அறிவிக்கையில், "இந்தமுறை குருவை ஒதுக்கி சிஷ்யனுக்கு முதல் பரிசு கொடுக்கப்போகிறோம்" என்றதுமே முதலில் ஊகித்து கைதட்டத் தொடங்குவதும் கண்ணோரம் துளிர்க்கும் அரைச் சொட்டு நீரும் - அவர் திறமைக்கு ட்ரெயிலர் காட்டிவிடுகிறது. ஆனால் இயக்குநராக அவர் அடைந்திருக்கும் உயரங்கள் அபாரம்!

நடிப்பில் யாருமே குறை வைக்கவில்லை - குறிப்பிட்டுச் சொல்ல கடைசிக் காட்சியில் தன் இறுக்கங்களைத் தளர்த்தி அழும் தந்தை, "நான் என்னதான் இன்னும் செய்யவேண்டும்" எனக்கலங்கும் தாய், பாசம் காட்டுவதா, கண்டிப்பு காட்டுவதா எனத் தெரியாமல் கலங்கும் அண்ணன், முதல் மாணவனாக இருந்தாலும் முழு மக்குடன் நட்பு பாராட்டும் ராஜன், ஆசிரியர்கள், கூட இருக்கும் மாணவர்கள் -- எல்லாரும் கலக்கி இருக்கிறார்கள்.

படத்தில் எனக்குத் தோன்றிய ஒரே குறை - இஷான் ஒரு பரிசுப்போட்டியில் வெல்வதாக அமைக்கப்பட்டிருந்த க்ளைமாக்ஸ். ஏன் மறுபடி பரிசு, போட்டியில் தள்ளவேண்டும்?அந்த வயதிலியே எதேனும் - படிப்பு இல்லாவிட்டாலும் வேறு விஷயத்திலாவது - சாதித்துக் காட்டவேண்டும் என்ற தகவலைத்தான் முன்னிறுத்துவதாகத் தோன்றியது. ஆனால், படம் பார்க்கவரும் சாதாரணப் பெற்றோர்க்கு, இப்படி ஒரு பேண்டஸி முடிவைக் கொடுத்தால்தான் முழுத்தாக்கமும் அவர்களுக்குச் செல்லும் என்பதற்காகவே இப்படி ஒரு முடிவு என்று ஆசிப் சொன்னதும் நியாயமாகத்தான் படுகிறது.

மேலும் இந்த ஒரு குறையை (என் மனதளவில்) பிடித்துத் தொங்கி, இயக்குநருக்கே தெரியாத கோணங்களை விமர்சிக்கும் கும்பலில் நானும் போய்ச் சேர விரும்பாததாலும், எழுதிய அமோல் குப்தே, இயக்கிய ஆமிர்கானின் நேர்மை படம் நெடுகிலும் தெரிவதாலும், அதற்கு ஒரு முக்கியத்துவமும் கொடுக்க மறுக்கிறேன்.

மொத்தத்தில், 2007 இல் பார்த்த ஒரே, முழு நிறைவான படம் என்று தாரே ஜமீன் பர்-ஐச் சொல்வதற்கும், 7 வயதுக்கு மேல் வளர்ந்துவிட்ட அத்தனை பேரையும் பார்க்கப் பரிந்துரைப்பதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Dec 26, 2007

தரைவாழ் விண்மீன்கள் - 3

சாதாரணப்படம் இல்லை என்பதை முதல் காட்சியிலேயே (இந்தப்பதிவில் சொல்லியிருக்கிறேன்) நிறுவிவிடுகிறார் ஆமிர்.
 
பார்வை - Perspective -  என்ற கவிதையின் அர்த்தத்தை தன் மனம் போன போக்கிலே தெரிவிக்கும் இஷானுக்கு, "நீ சொன்னது சரிதான், ஆனால் நம் ஆசிரியருக்கு அவர் சொன்ன வார்த்தைகளில் சொன்னால் மட்டும்தான் சரி" என்று ஆறுதல் சொல்லும், உயரமான இடத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இஷானைக்கண்டு பயந்து அவசர அவசரமாக ஓடிக் காப்பாற்றச்செல்லும், இஷானின் படத்துக்குப் பரிசு கிடைத்த உடன், எல்லோரையும் விட அதிகமாக, உணர்ச்சி வெறியோடு கைதட்டும் -- ராஜன் தாமோதரன் என்ற சிறுவனின் பாத்திரப்படைப்பு,
 
எதோ கூப்பிட்டுவிட்டார்களே என்று உள்ளே நுழைந்து, தன்னைப்பற்றிய கிண்டலைப்பார்த்து கடுப்பேறி, மற்றவனையும் விடவில்லை என சமாதானமாகி, கார்ட்டூனில் வலதுபக்கம் மாறி இருக்கும் மருவைத் திருத்தி வரையும் இந்தி ஆசிரியர் கதாபாத்திரம்,
 
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பட்டியல் போடும் காட்சியில், மூன்றுமுறை இஷானைப்பற்றித்தான் சொல்லப்போகிறார் ராம்ஷங்கர் என இஷானையும், நம்மையும் எதிர்பார்க்கவைத்து, வேறு ஆட்களை (ஐன்ஸ்டீன், டாவின்ஸி கடைசியாக ராம்ஷங்கர்) சொன்ன சாமர்த்தியமான வசனங்கள்,
 
இஷானின் தலையைச்சுற்றிப் பறக்கும் ரயில்வண்டி, அதைத் துரத்தும் ட்ராகன் என்று பாடல்காட்சிகளில் மட்டுமின்றி, ப்ளூட்டோவை "இன் டு" செய்யும் பூமி, பறக்கும் எழுத்துக்கள், வண்ணங்கள் ஓடி உருப்பெறும் ஓவியம் என கதைக்குத் தேவையான அளவுக்கு இயல்பாகவும் நேர்த்தியாகவும் படம் நெடுக இடம்பெற்றிருக்கும் வரைகலை,
 
"டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை என் மனைவி இணையத்தில் பார்க்கிறாள்" என்று அமர்த்தலாகச் சொல்லும் தந்தையிடம், "நல்லது, Care எடுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களே, அதற்கு" என்று சாலமன் தீவுகளின் மரம்வெட்டும் முறையை உதாரணமாகக் கூறி உணரவைக்கும் காட்சி அமைப்பு,
 
இஷான் அவஸ்தியின் உலகம் தனியானது, மற்றவர்போல அடித்துப் பிடித்து அவசரமாக அலுவலகமோ பள்ளியோ செல்ல விரைவதில்லை என்பதை மென்மையாக மாற்றித் தெரிவிக்கும் பின்னணி இசை,
 
டாகுமெண்டரி போல் எடுக்கப்பட்ட "கோ ந ஜாயியே - தாரே ஜமீன் பர்" (தொலைத்துவிடாதீர்கள் தரைவாழ் நட்சத்திரங்களை) என்ற பாடல் - இசை - ஆக்கம்,
 
"எண்ணமெல்லாம் வண்ணமம்மா!" முதல் பாடல் படமாக்கிய விதம்!
 
ஆமீர்கானுக்கு முதல் படமாமே இயக்குநராக? டுமீல் விடுகிறார். இல்லை கமல்ஹாசன் போல பெயரைப் போட்டுக்கொண்ட முதல் படமாக இருக்கலாம்!

Dec 25, 2007

தரைவாழ் விண்மீன்கள் - 1 & 2

Taare Zamin Par

பாத்திரங்கள்:

"ஹலோ, என் பெயர் யோஹன். வீட்டில் என்னை தாதா என்று கூப்பிடுவார்கள். எல்லாப் பாடங்களிலும் நான் தான் முதல் மார்க் வாங்குவேன். என்ன, போன முறை ஹிந்தியில் மட்டும் 2 மார்க்கில் முதலிடத்தைத் தவறவிட்டேன். என் தம்பி (சேம்ப் என்று அழைப்போம்) என்னவோ தெரியவில்லை, அவ்வளவு நன்றாகப் படிப்பதில்லை. எந்நேரமும் யார்கூடவாவது சண்டை இழுத்துக்கொண்டே இருப்பான். டீச்சர்களுக்கு, ஏன் அப்பா அம்மாவுக்கும்கூட என்னளவு அவன் படிப்பதில்லையே என்று வருத்தம். ஆனால் பிந்தாஸ் பையன். படம் நன்றாக வரைவான். I miss him. என்னுடைய டென்னிஸ் அரையிறுதியின்போது அவனும் கூட இருந்திருக்கலாம்.. என்ன செய்ய? அவன் தான் போர்டிங் ஸ்கூல் போய்விட்டானே?"

"ஹலோ, நான் மாயா. என் மூத்த மகன் யோஹன் எனக்குத் தொந்தரவே வைத்ததில்லை. நன்றாகப் படிப்பான், டென்னிஸ் க்ரிக்கெட் என்று எல்லாருடனும் சேர்ந்து விளையாடுவான். அவன் பிறந்தும்கூட நான் வேலைக்கு தொடர்ந்து போய்க்கொண்டுதான் இருந்தேன். ஆனால், என்னை நெளிவெடுப்பதற்கென்றே பிறந்தவன் இரண்டாமவன். காலையில் எழுப்புவதே ஒரு அவஸ்தை. நேரம் தெரியாமல் ஷவரில் வரும் தண்ணீருடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பான். எந்நேரமும் யார்கூடவாவது சண்டை. ஹோம்வர்க் - அது ஒரு மெகா யுத்தம். Table என்று எழுதச்சொன்னால் tabl, tabel என்று ஸ்பெல்லிங்குகளை உற்பத்தி செய்துகொண்டிருப்பான். என்ன ஒரு கண்றாவி கையெழுத்து? மூன்றாம் வகுப்பில் - நம்புங்கள், மூன்றாம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டான். பிரின்ஸிபல் கூப்பிட்டுச் சொன்னபோது எனக்கும் கோபம்தான் வந்தது. ஆனால், அதற்காக குழந்தையை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புவதா? "

" நீ சொல்வது சரியில்லை மாயா. ஹலோ, நான் நந்தகிஷோர் - நந்தகிஷோர் அவஸ்தி. எனக்கென்ன என் மகன் மீது பாசம் இல்லையா? என் இளைய மகனுக்காக நான் என்னதான் செய்யவில்லை? அவன் உடைத்துவிட்டு வரும் செடிகளுக்கு மன்னிப்புக்கேட்கிறேன், அவன் அடித்துவிட்டு வரும் பையன்களுக்கு நான் மருந்துக்குச் செலவழிக்கிறேன். பெரியவனை வளர்த்ததுபோலவேதானே இவனையும் வளர்க்கிறேன்? இவன் புத்தி படிப்பில் செல்லவில்லை என்றால் அதற்குக் காரணம் கொழுப்புதான். ஒழுக்கம் இல்லை. சொல்பேச்சு கேட்பதில்லை. எத்தனை அடித்தாலும் பிறகு அரவணைக்கிறேனே, அதுதான் நான் செய்யும் தப்பு. இவனை போர்டிங் ஸ்கூலில் போட்டால் அங்கே அவர்கள் இவனைத் திருத்துவார்கள். செலவு அதிகம்தான் - இருந்தாலும் என் பையனுக்காக செலவழிக்காமல் என்ன பயன்? அப்படியாவது அவன் திருந்துவான் என்றால் செலவுக்கு, செண்டிமெண்டுக்கு கவலைப்படக்கூடாது"

"என்னைப்பற்றிதான் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் இஷான் அவஸ்தி. என் உலகம் சாக்கடையில் ஓடும் மீன்களுடனும், தெருநாய்களுடனும் நட்பானது. வெளியுலகத்தின் காணும் வண்ணங்கள் மட்டுமே என்னை ஈர்க்கின்றது. 38ஆம் பக்கத்தில் நாலாம் பத்தியின் முதல்வரியைப்படி என்று டீச்சர் சொல்லும்போது வரியைப்படிக்கிறேன், பக்கத்தை விடுகிறேன். படிக்க ஆரம்பிக்கும்போது எழுத்துக்கள் நடனமாட ஆரம்பிக்கின்றன. 3 x 9 என்பதற்கு, 3ஆம் கிரகமான பூமி, 9ஆம் கிரகமான ப்ளூட்டோவுடன் மோதுவதையும், ப்ளூட்டோ காணாமல் போவதையும் மனக்கண்ணால் பார்த்துத்தான் 3 என்று விடை எழுதினேன். அது தப்பா?

தப்பே இருந்தாலும்...

இருட்டைக்கண்டால் பயப்படும் எனக்கு..

கும்பலைக்கண்டால் மிரளும் எனக்கு..

எழுத்தைக்கண்டால் ஓடும் எனக்கு..

இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?

நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?

நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?"



"நான் ராம்ஷங்கர் நிகும்ப். நியூ எரா பள்ளிக்கு தற்காலிக ஓவிய ஆசிரியனாக வந்திருக்கிறேன். ட்யூலிப் எனும் சிறப்புச் சேவை சிறார் பள்ளியிலும் பணிபுரிகிறேன். 3ஆம் வகுப்புக்கு உள்ளே நுழைந்ததும் அத்தனை சிறுவர்களும் என்னை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள், என்னுடன் ஆடினார்கள், பாடினார்கள், வரைந்தார்கள் - ஒருவனைத் தவிர. இஷான் அவஸ்தி. எல்லா ஆசிரியர்களிடமும் கெட்டபெயர் மட்டுமே வாங்கியிருக்கும் இஷானின் பிரச்சனை அவனுடைய நோட்டுப்புத்தகங்களிலேயே தெரிந்தது. இஷான், ஒரு கவனம் தேவைப்படும் சிறுவன், அவனுக்கு அது கிடைக்கவில்லை. என்னையே கண்ணாடியில் பார்ப்பதுபோல் இருந்தது அவனைப்பார்க்கையில்.. ஏதேனும் செய்யவேண்டும் இந்தச் சிறுவனுக்கு"

இவ்வளவுதான் முக்கியமான கதாபாத்திரங்கள். இவற்றை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தமான பாடத்தைத் தந்திருக்கிறார் ஆமிர்கான்.

படம் தொடங்குகையில் SAW -- WAS-- WATCH--CAR எனப்படிப்படியாக உருவாகிறது ஒரு குறுக்கெழுத்து. பின்னணி இசை ஏதுமற்ற சூழலில், அருகில் உள்ல குழந்தைகள் முதல் வார்த்தைகளைச் சத்தம் போட்டுப் படிக்க, பெரியவர்கள் மனதுக்குள் படிக்க.. அடுத்தடுத்த வார்த்தைகள் வருகையில் வேகம் ஏறுகிறது.. அதே நேரத்தில் பின்னணி இசையும் படிப்படியாக அதிகரித்து.. குழந்தைகள் பெரியவர் யாரும் படிக்கமுடியாத எழுத்துக்களின் குழப்ப சங்கமமாகத் திரை நிறைய.. அங்கிருந்தே ஆரம்பிக்கிறது நான் குழந்தை வளர்க்கும் லட்சணத்துக்கு சாட்டையடி. (நான் என்பது என்னை மட்டும் குறிக்கவில்லை என்பதை அக்கம்பக்கம் உள்ள ரசிகர்களைப்பார்த்து அல்பசந்தோஷம் கொண்டேன்)

எந்த அளவுக்கு நம் உலகை நாம் எழுத்துக்களால் நிரப்பிவைத்திருக்கிறோம்! எண்கள் எழுத்துக்கள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனையாகவேணும் பார்க்கமுடியுமா?

விருப்பமில்லாத புத்தகத்தை இப்போது படிக்கும்போதும்கூட எழுத்துக்கள் நடனமாடுவதைப் பார்க்கமுடிகிறது. அப்படி இருக்கையில், எட்டு வயது குழந்தைக்கு பாடப்புத்தகத்தின் எழுத்துக்கள் நடனமாடுவதை எப்படி நம்மால் கூச்சமில்லாமல் கிண்டல் செய்யமுடிகிறது? ஏன் நாம் கொஞ்சம் கூட ஈவிரக்கமின்றி அத்தனை எழுத்துக்களையும் 5 வயது மூளைக்குள் திணித்து மூட்டை கட்ட முனைகிறோம்? BIRTHDAYவின் ஸ்பெல்லிங்கை என் 5 வயது மகள் தவறாகச் சொன்னாலோ எழுதினாலோ திட்ட எப்படி மனது வருகிறது? அபாகஸ்ஸின் மணிச்சட்டங்கள் வேறு தாளகதிக்கு ஆடுகிறது என்று சொல்லும்போது அதைக் கவனிக்காதே, கணக்கைப் போடு என்று கற்பனைக்குச் சாவுமணி அடிக்க ஏன் முனைகிறோம்? g ஐப் பார்க்கையில் அது தாடி வைத்த தாத்தாவை நினைவுபடுத்துவதாகக் கூறினால் அதை விட்டு ஏன் கையெழுத்தைச் சரிசெய்யத் துடிக்கிறோம்? ஏன் A1 வாங்காவிட்டால் கோபம் அடைகிறோம்? இடமிருந்து வலம் எழுத்துக்களில் பழகிய குழந்தை வலமிருந்து இடம் மாறும்போது தவறும் செய்யலாம் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்? "அவையத்து முந்தி இருக்கச் செயல்" மட்டும்தானே நம் கடமை? அதை மீறி ஏன் முதலிலேயே இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறோம்?

ஏன் அந்த பாழாப்போன ஐஐடி டாக்டர் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்கிறோம்? அதை விடுத்தவர்கள் முன்னுக்கு வந்ததில்லையா? படிப்பில் குறைவான குழந்தைகள் அனைவரும் ஒழுக்கம் குறைந்தவர்களா? ஏன் ஷூலேஸ் கட்டுவதையும் டை நாட் போடுவதையும் 10 வய்துக்குள்ளேயே கற்றுக்கொள்ளவேண்டும்? சேறு சகதியில் குதிக்கும்போது ஷூ அழுக்கானால் பள்ளி ஏன் விடமறுக்கிறது?

இத்தனை கேள்விகளும் இஷான் அவஸ்தி மூலமாகக் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி. டிஸ்லெக்சியா பற்றியே கதை பேசினாலும், அந்தக்குறை இல்லாத குழந்தைகளுக்கும் நாம் எவ்வளவு peer pressure தருகிறோம் என்பதை யோசிக்கவைக்கிறது.

நம்முடைய எத்தனையோ அழுத்தங்களுக்குக் குழந்தைகள் ஈடுகொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஈடுகொடுக்கமுடியாத குழந்தைகள்?

அப்படித்தான் நம் இஷானும் - முயற்சித்தான், முடியாதபோது கோபப்பட்டான், அந்தக்கோபத்தை பக்கத்து வீட்டு பூந்தொட்டி மேலும், 0 மதிப்பெண் காட்டும் தேர்வுத்தாள் மேலும் காட்டினான். டெஸ்ட் பேப்பர் கையெழுத்து வாங்காமல் ஆசிரியரைச் சந்திக்க முடியாத பயத்தில் பள்ளியைவிட்டு வெளியேறி வேடிக்கை பார்க்கச் சென்றான், அந்தத் தவறை மறைக்க அண்ணனை வைத்து பொய்க்கையெழுத்து போட்டான் -- அத்தனை வண்டவாளங்களும் வெளிவரும் நேரத்தில் அவனுக்கு குற்ற உணர்ச்சி என்பது மறைந்திருந்தது.

இஷானுடைய "குற்றங்களுக்கு" யார் காரணம்? இந்தக்கேள்விக்கு சரியான விடைதெரியாத - விடை அறிய முயலாத - இப்படி ஒரு கேள்வி இருப்பதையே அறியாத - தந்தை அவனை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புகிறார். இஷானுக்கு இருந்த ஒரே பற்றும் அறுந்து விழுகிறது. அவன் கண்களில் கண்ணீர் வற்றுகிறது.. வெறுமையின் உச்சத்துக்குச் செல்கிறான். உலகத்தின் வரையறைகளை முற்றாக நிராகரித்து தனக்குள் சுருள்கிறான். தன்னம்பிக்கையை முழுமையாக இழக்கிறான்.

ராம்ஷங்கர் வருகை இஷானுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ராம்ஷங்கருக்கு இஷானின் நிலை தெளிவாகத் தெரிகிறது. அன்பு, அரவணைப்பு, பொறுமை - மூலமாக இஷானுக்குள் தூங்கிக்கிடக்கும் தன்னம்பிக்கையை மீட்கிறான்..

கதை என்பது இவ்வளவுதான். ஆனால் படத்தைப் பற்றிய விமர்சனம் இன்னும் இருக்கிறது.

****

முதல் பதிவு தன்னளவில் முழுமை பெறாததால் அதையும் இங்கேயே இணைத்திருக்கிறேன். நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும்.

தரைவாழ் விண்மீன்கள் - 1

"ஹலோ, என் பெயர் யோஹன். வீட்டில் என்னை தாதா என்று கூப்பிடுவார்கள். எல்லாப் பாடங்களிலும் நான் தான் முதல் மார்க் வாங்குவேன். என்ன, போன முறை ஹிந்தியில் மட்டும் 2 மார்க்கில் முதலிடத்தைத் தவறவிட்டேன். என் தம்பி (சேம்ப் என்று அழைப்போம்) என்னவோ தெரியவில்லை, அவ்வளவு நன்றாகப் படிப்பதில்லை. எந்நேரமும் யார்கூடவாவது சண்டை இழுத்துக்கொண்டே இருப்பான். டீச்சர்களுக்கு, ஏன் அப்பா அம்மாவுக்கும்கூட என்னளவு அவன் படிப்பதில்லையே என்று வருத்தம். ஆனால் பிந்தாஸ் பையன். படம் நன்றாக வரைவான். I miss him.  என்னுடைய டென்னிஸ் அரையிறுதியின்போது அவனும் கூட இருந்திருக்கலாம்.. என்ன செய்ய? அவன் தான் போர்டிங் ஸ்கூல் போய்விட்டானே?"
 
"ஹலோ, நான் மாயா. என் மூத்த மகன் யோஹன் எனக்குத் தொந்தரவே வைத்ததில்லை.  நன்றாகப் படிப்பான், டென்னிஸ் க்ரிக்கெட் என்று எல்லாருடனும் சேர்ந்து விளையாடுவான். அவன் பிறந்தும்கூட நான் வேலைக்கு தொடர்ந்து  போய்க்கொண்டுதான் இருந்தேன். ஆனால், என்னை நெளிவெடுப்பதற்கென்றே பிறந்தவன் இரண்டாமவன். காலையில் எழுப்புவதே ஒரு அவஸ்தை. நேரம் தெரியாமல் ஷவரில் வரும் தண்ணீருடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பான். எந்நேரமும் யார்கூடவாவது சண்டை.  ஹோம்வர்க் - அது ஒரு மெகா யுத்தம். Table என்று எழுதச்சொன்னால் tabl, tabel என்று ஸ்பெல்லிங்குகளை உற்பத்தி செய்துகொண்டிருப்பான். என்ன ஒரு கண்றாவி கையெழுத்து? மூன்றாம் வகுப்பில் - நம்புங்கள், மூன்றாம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டான். பிரின்ஸிபல் கூப்பிட்டுச் சொன்னபோது எனக்கும் கோபம்தான் வந்தது. ஆனால், அதற்காக குழந்தையை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புவதா? "
 
" நீ சொல்வது சரியில்லை மாயா. ஹலோ, நான் நந்தகிஷோர் - நந்தகிஷோர் அவஸ்தி. எனக்கென்ன என் மகன் மீது பாசம் இல்லையா? என் இளைய மகனுக்காக நான் என்னதான் செய்யவில்லை? அவன் உடைத்துவிட்டு வரும் செடிகளுக்கு மன்னிப்புக்கேட்கிறேன், அவன் அடித்துவிட்டு வரும் பையன்களுக்கு நான் மருந்துக்குச் செலவழிக்கிறேன். பெரியவனை வளர்த்ததுபோலவேதானே இவனையும் வளர்க்கிறேன்? இவன் புத்தி படிப்பில் செல்லவில்லை என்றால் அதற்குக் காரணம் கொழுப்புதான். ஒழுக்கம் இல்லை. சொல்பேச்சு கேட்பதில்லை. எத்தனை அடித்தாலும் பிறகு அரவணைக்கிறேனே, அதுதான் நான் செய்யும் தப்பு. இவனை போர்டிங் ஸ்கூலில் போட்டால் அங்கே அவர்கள் இவனைத் திருத்துவார்கள். செலவு அதிகம்தான் - இருந்தாலும் என் பையனுக்காக செலவழிக்காமல் என்ன பயன்? அப்படியாவது அவன் திருந்துவான் என்றால் செலவுக்கு, செண்டிமெண்டுக்கு கவலைப்படக்கூடாது"
 
"என்னைப்பற்றிதான் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் இஷான் அவஸ்தி. என் உலகம் சாக்கடையில் ஓடும் மீன்களுடனும், தெருநாய்களுடனும் நட்பானது. வெளியுலகத்தின் காணும் வண்ணங்கள் மட்டுமே என்னை ஈர்க்கின்றது. 38ஆம் பக்கத்தில் நாலாம் பத்தியின் முதல்வரியைப்படி என்று டீச்சர் சொல்லும்போது வரியைப்படிக்கிறேன், பக்கத்தை விடுகிறேன். படிக்க ஆரம்பிக்கும்போது எழுத்துக்கள் நடனமாட ஆரம்பிக்கின்றன. 3 x 9 என்பதற்கு, 3ஆம் கிரகமான பூமி, 9ஆம் கிரகமான ப்ளூட்டோவுடன் மோதுவதையும், ப்ளூட்டோ காணாமல் போவதையும் மனக்கண்ணால் பார்த்துத்தான் 3 என்று விடை எழுதினேன். அது தப்பா?
 
தப்பே இருந்தாலும்...
 
இருட்டைக்கண்டால் பயப்படும் எனக்கு..
 
கும்பலைக்கண்டால் மிரளும் எனக்கு..
 
எழுத்தைக்கண்டால் ஓடும் எனக்கு..
 
இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?
 
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?"
 
**********************
 
சிவாஜிக்கெல்லாமே நாலு பதிவில் விமர்சனம் போடுகிறார்கள் :-)
 
Taare Zameen Par may prove to be the best movie of 2007. It has received an overwhelming critical response. Initial box office reports are low, but popularity rapidly spreading through word-of-mouth. என்று விக்கிபீடியாவில் சொல்வதை முழுமனதுடன் நானும் ஒத்துக்கொள்ளுன் படத்துக்கு, காசுகொடுத்துப் போய் (இரு குழந்தைகளின் அப்பா என்பதால்) அடிவாங்கிய இந்தப்படத்துக்கு,  படம் முடிவடைகையில் எல்லார் கண்களிலும் நீர்த்துளி காணும் இப்படத்துக்கு..
 
ஒரு பதிவில் விமர்சனம் எழுதி முடிக்கமாட்டேன். இன்னும் ஒன்றிரண்டு வரும்.
 
பி கு: குசும்பனுக்கும் அய்யனார்க்கும் சிறப்பு நன்றி. எப்படியும் பார்த்திருப்பேன் என்றாலும் அவர்கள் விமர்சனம் அவசரப்படுத்தியது.

Dec 19, 2007

Wifeology - பைனல் எக்ஸாம்!

இவ்வளவு நாள் இல்லறத்தியலைப் படித்து மகிழ்ந்த இனிய மாணாக்க்ர்களே, நம் இல்லறத்தியல் பாடத்தை "பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடி மூட்டை கட்டுவதற்கு முன்* தேர்வு ஒன்று வைக்கவேண்டாமா?

மாதிரி வினாத்தாள், விடைகளுடன் உங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கேள்விகளையும் விடைகளையும் பார்த்து, இல்லறத்தியல் பட்டம் வாங்க நிர்வாகம் வாழ்த்துகின்றது.


மாதிரி வினாத்தாள்
பாடம்: இல்லறத்தியல்


நேரம்: 3 மணி மொத்த மதிப்பெண் - 100


I. கோடிட்ட இடங்களை நிரப்புக: (5x1 = 5)

1. எல்லா வாக்குவாதங்களிலும் சரியான கட்சி _______________ உடையதே. (மனைவி)

2. தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கக் கூடாதவை ___________ (விளையாட்டு நிகழ்ச்சிகள்)

3. இல்லற வாழ்க்கை இனிதே அமைய, தவறென்றால் ஒத்துக்கொள், சரி என்றால்? _________________________ (பொத்திக்கொள்)

4. ______________ வந்திட _______ பறந்து போம். (இல்லாள், இன்பம்)

5. சம்பளம் வரும் பின்னே, __________ வரும் முன்னே (ஷாப்பிங்)



II. ஒரு வரியில் விடையளி: (5 x 2 = 10)

1. வெற்றி பெற்ற எல்லா ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். எப்படி?

பதில்: ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு

2. ஏன்?

பதில்: நம்மை மீறி எப்படி?

3. அபாய நண்பர்கள் யார் யார்?

பதில்: சந்தர்ப்பம் தெரியாத அரிச்சந்திரர்கள்

4. குடும்பத்தில் குண்டு வைப்பவர்கள் யார்?

பதில்: திட்டம் தீட்டியே உண்மை பேசும் தீவிரவாதிகள்.

5. தனிமையிலும் உஷாராக இருக்கவேண்டிய இடங்கள் யாவை?

பதில்: மனைவியின் நண்பர்கள் உலாவும் இடங்கள் அனைத்தும்.

III. சரியா தவறா கூறுக: 5 x 3 = 15

1. தாய்க்கும் தங்கமணிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். தவறு. உண்மையா? அப்படி என்றால் என்ன?

2. உலகத்திலேயே மிகக்கஷ்டமான கேள்வி - "இந்த ட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?" என்பதுதான். சரி. சாதா சரி இல்லை, 150% சரி.

3. நண்பர்களுடன் பார்ட்டி - மனைவியின் முழுச் சம்மதத்துடன் மட்டுமே செல்லவேண்டும். தவறு.. அய்யோடா - உங்களுக்கு என்ன வயசு? குட்டீஸ் எல்லாம் இல்லறத்தியல் படிக்க வரக்கூடாது..

4. 10 பந்தில் 10 ரன் அடித்தார்களா என்பதைவிட, அபிக்கு ஆதியால் இன்று என்ன தொந்தரவு வந்தது என்பதே முக்கியம். சரி. வேற வழி?

5. ஐந்து நிமிட ரங்கமணி மின்னரட்டை, 3 மணிநேர தங்கமணி போன் அரட்டையை விட அதிக நேர விரயம். சரி. பண்ணிப்பாருங்க சார் தெரியும்.


IV. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும். 5 x 4 = 20

தங்கமணி, ரங்கமணிக்கு குட்டி, கெட்டி என்று இரு குழந்தைகள். ஒரு திங்கட்கிழமை மாலை, குட்டியின் பள்ளியிலிருந்து ஆசிரியை அழைத்து, குட்டி ரொம்ப சுட்டித்தனம் செய்வதாகவும், கூட இருக்கும் பிள்ளைகளை வம்புக்கு இழுப்பதாகவும் புகார் கூறினார். அதே நாளில், கெட்டியின் ஆசிரியை, கெட்டி பாடத்தில் முதலாவதாக வந்ததாகக்கூறினார். அலுவலகத்தில் இருந்து திரும்பிய ரங்கமணியிடம் தங்கமணி இவற்றை விளக்கினார்.

அவ்வாறு விளக்குகையில்,

1. உங்கள் பிள்ளை என்று கூறப்படுபவர் யார்? (குட்டி)

2. என்னோட தங்கம் என்று அழைக்கப்படுவது யார்? (கெட்டி)

3. யாருக்கு ரங்கமணியின் குடும்ப குணங்கள் வம்சாவழியில் கலந்திருக்கின்றன? (குட்டி)

4. குட்டி செய்த குறும்புகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? (ரங்கமணி)

5. கெட்டி நன்றாகப் படிப்பதற்கு யார் காரணம்? (தங்கமணி)

V விரிவான விடையளி - 5 x 10 = 50

1. ராஜ்கிரண் தங்கமணிகளைப் பற்றி விவரித்தது எங்ஙனம்?

"எல்லா மனுசனும் சந்தோசமா மட்டும் இருந்திரக்கூடாதுன்னுதான் ஆண்டவன் ஆபீஸைப் படைச்சான். ஆபீஸ் பாஸ் பண்ற தொல்லைலே அவன் சந்தோசத்தை மறப்பான்.. ஆனா எல்லா நேரமும் ஆபீஸ்லேயே இருந்திற முடியாதுன்னுதான் தங்கமணியப் படைச்சான்..

பாடல் தொடர்கிறது.. தெய்வம் அது தாய்க்கும் கீழேதான் ரேஞ்சில் ..


"கொடுமை அது ஆபீஸு வேலைதான்..

என், தங்கமணியும் பாஸுக்கு மேலதான்.."

2. இடம் சுட்டி பொருள் விளக்குக : "நீங்க சொல்றதுதாங்க சரி"

இடம்: மனைவி, கணவனிடம் சொல்கிறாள்.

பொருள்: கணவன், மனைவியின் ஆசையை பூடகமாக (நூறு முறை சொன்னதன் பின்) அறிந்து, அவள் ஆசையைத் தன் ஆசை போல வெளியிட்டதால், மனைவி, பெருந்தன்மையுடன் கணவன் முடிவுக்குக் கட்டுப்படுகிறாள்.

3. தங்கமணிக்கள் எப்போது குறை சொல்லாமல் இருப்பார்கள்?

தங்கமணிக்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பது ஒரு தவறான பொதுமைப்படுத்தலே ஆம். ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணி நேரம் தூங்கும் போதும், 8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை. மீதி உள்ள சிறிது நேரத்தில் பேசுவது, காலத்தால் சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிதாகத் தோற்றமளிக்கிறது அவ்வளவே.

4. குறள் விளக்கம் கூறுக:

செல்லாவிடத்துச் சினம் தீது, செல்லிடத்தும் இல்லை அதனின் தீய பிற.

வள்ளுவர் கூறுகிறார், நம் கோபம் செல்லுபடியாகாத மனைவிகள் இடத்தில் கோபப்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக வீக்கமாக தீப்புண்ணாக முடியும் அபாயம் இருக்கிறது, எனவே அங்கே கோபப்படக்கூடாது. அதே நேரத்தில், அக்கோபத்தை "செல்" இடத்தில் காட்டினால், செல்போன் உடைந்து தூள்தூளாகி பெரும் பணச்செலவு வைக்கும், எனவே "செல்" இடத்தும், இல்லை அதனின் தீய பிற.

5. பழமொழி விளக்குக: மனைவி சொல்லே மந்திரம்.

கோவிலில், பூஜைகளின் போது சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. யாரைத் திட்டுகிறார்கள் யாரை வாழ்த்துகிறார்கள் என்பனவெல்லாம், பின்னாள் விளைவுகள் அல்லது விளக்கங்கள் படித்தபின்னே ஓரளவு புரிந்ததுபோல தோற்றமளிக்கும். அதேபோல், மனைவி பேசும்போதும், முதலில் நமக்கு எதுவும் புரியாது. ஆனால், அந்தச் சொல்பேச்சு கேளாமல் விட்டால் முதலில் விளக்கங்களும், அதையும் மீறினால் விளைவுகளும் வரும். இந்த ஒற்றுமையினாலேயே மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
*************************************************************

விடைகளைக் கொடுக்காமல் தனியாகத் தரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனா இது என்ன தங்கமலை ரகசியமா? எல்லாருக்கும்ம் தெரிஞ்சதுதானே அப்படின்னு போட்டே விட்டேன்.

* குறிப்பு = யாரு கண் பட்டுதோ, எங்கே இருந்து போன் கால் வந்ததோ தெரியல.. தங்கமணி இதைப் படிக்க ஆரம்பிச்சு, அன்பான கட்டளையில் ஆரம்பித்து, மென்மையான மிரட்டல், விபரீதமான வேண்டுகோள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கும் முன், நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செய்தல் என்ற வாக்கின்படி, இந்தத் தொடர் முடிக்கப்படுகிறது.


Dec 12, 2007

எழுத்தறிவித்தல் - உதவுங்களேன்!!!

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்!

எழுத்தறிவித்தல் அப்படின்னா எழுத்தைப் பத்தின அறிவிப்பு எனத்தானே பொருள்? இந்தப் பதிவும் அதுதான்:-)

மேட்டர் ஒண்ணும் பெரிசா இல்லைங்க, சர்வேசன் ஒரு சிறுகதைப் போட்டி அறிவிச்சாலும் அறிவிச்சார், நீண்டநாளா எழுதாத சிறுகதைகள் எல்லாம் முட்டிக்கிட்டு வந்து ஒண்ணுக்கு மூணா எழுதித் தள்ளிட்டேன். ஆனா சர்வேசன் ஒண்ணுதான் ஏத்துப்பாராமே..

எழுதினவன்ற முறையில எனக்குப் பிடிக்காத கதையை பதிந்திருக்கவே மாட்டேன் - எனவே மூணுமே எனக்குப் பிடிச்ச கதைகள்தான். ஹிட்ஸ், பின்னூட்டம் -- இது எல்லாமே மூணு கதைக்கும் ஏறத்தாழ சமமாவே இருக்கு.

அதனால, சர்வேசன் பாணியிலேயே ஒரு சர்வே வச்சுடலாம்னு..

படித்த பிறகே வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

கதை ஒன்று: காமத்திற்கும் கண் உண்டு

கதை இரண்டு : கடன் அட்டை

கதை மூன்று: காட்டு வழி போற தேவ் நீ கவலப்படாதே

படிச்சுப் பாத்து, வாக்களியுங்கள் என கரம் சிரம் தாழ்த்தி வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்.


பாடம் 7: மனைவியின் எதிரில் போன் பேசுவது எப்படி? Wifeology

"ஹலோ! ராக்கி பேசறேன்"

"சொல்லுடா நான் தான் விக்கி. மிஸ்டு கால் கொடுத்திருந்தியே?"

"அப்புறம் என்னடா திடீர்னு போன் எல்லாம்? பண்ணவே மாட்டியே?"

"நீதானடா மிஸ்டு கால் கொடுத்து என்னைப் பேச வச்சே?"

"என்னவோ போப்பா, பெரிய மனுசன் ஆயிட்டாலும் ஞாபகம் வச்சுருந்தா சரி"

"என்னடா பேசறே? நேத்துதானே பேசினோம்? குழப்பறயே"

"அவளா, நல்லா இருக்கா. இங்கதான் இருக்கா.. பேசறியா?"

"ஓ.. தங்கமணி பக்கத்துல இருக்காங்களா, அதான் பம்முறியோ?"

"அப்புறம் பேசறியா.. சரி என்ன மேட்டர்?"

"ஆனாலும் ரொம்பத்தாண்டா பயப்படறே"

"வீட்டுக்கு வீடு வாசப்படி! இங்கேயும் அப்படியேதான் ஓடுது."

"சரி. என்ன மேட்டர் சொல்லு?"

"போன வாரம் போன் பண்ணேனே எடுக்கவே இல்ல?"

"எங்க எடுக்கறது? சத்தம் கூட கேக்காம எல்லாரும் மேட்ச் பாத்துகிட்டு இருந்தோம்"

"என்ன ஆச்சு?"

"காலைல மூணு மணிவரைக்கும் ஓடிச்சு! கடைசிலே பனாதைப் பசங்க 10 ரன்லே விட்டானுங்க!"

"இந்த மேட்ச் எல்லாம் பாக்கறதே வேஸ்ட்டு! என்னை மாதிரி நிறுத்தித் தொலைங்கடா!"

"சரி அண்ணே உங்க அட்வைஸுக்கு ரொம்ப தாங்க்ஸ்"

"அடுத்த சனிக்கிழமையா? நான் வரமாட்டேன்பா"

"யாரு? எங்க கூப்பிட்டாங்க?"

"நீ என்னதான் சொன்னாலும், சனிக்கிழமை என்னால வரமுடியாது"

"எங்கடா?"

"கோபியப் பாரு! திருந்திட்டான். அவனாட்டம் ஆவணும்னு எனக்கு ஆசை இருக்காதா?"

"கோபியும்தானட அன்னிக்கு மேட்ச் பாத்து கூத்தடிச்சுகிட்டிருந்தான்?"

"அதைத்தாண்டா நானும் சொல்றேன். சனிக்கிழமை என்னால வரமுடியாது!"

"ஓஹோ அப்படிப்போவுதா மேட்டரு.. ஆனா சனிக்கிழமை மேட்சே கிடையாதேடா! திங்கள், புதன், வெள்ளிதான் 3 ஒன் டே ..என்னிக்கு வரே?"

"என்ன லோகுவுக்கா?"

"லோகுவுக்கு என்ன?"

"என்ன ஆச்சாம்?"

"என்ன என்ன ஆச்சாம்?"

"எந்த ஹாஸ்பிடல்?"

"ஹாஸ்பிடல் வரைக்குமே போயிட்டயா?"

"ஆமாம். நாம போயி பாத்துட்டுதான் வரணும்"

"எங்க?"

"சனிக்கிழமை வேணாம். என் வைஃப்பை கூட்டிகிட்டு ஷாப்பிங் போறதா ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்"

"மறுபடி வந்தாண்டா சனிக்கிழமைக்கு"

"வீக் டேஸ்லே போயிட்டு வந்துடலாம்"

"வீக் டேஸ்லேயேவா? சொல்லு.. திங்களா, புதனா வெள்ளியா? எதுவாயிருந்தாலும் ஓக்கே.. தங்கமணி வர இன்னும் ரெண்டு வாரம் இருக்கு"

"நீ சொல்றதும் சரிதான். அவ்வளவு தூரம் நைட்லே பைக் ஓட்ட முடியாது"

"ஓ, சரி அப்ப என் வீட்டிலேயே தூங்கிடு"

"அப்ப நாளைக்கு கடைக்குப்போயி தேவையானது எல்லாம் வாங்கிடறயா?"

"என்ன தேவையானது?"

"என்ன முட்டாள்தனமா கேக்கற.. நாம போற இடத்துக்கு என்ன தேவை? இப்ப ஹாஸ்பிடல் போறதுன்னா ரெண்டு பழம், ஜூஸ் வாங்கமாட்டியா?"

"சரக்கைச் சொல்றியா?"

"அப்பாடா புரிஞ்சிகிட்டயே"

"எனக்காடா மவனே அல்வா கொடுக்கற?"

"சரி அப்ப புதன்கிழமை போயிட்டு வந்துடலாமா?"

"புதன்கிழமையா? ஓக்கே"

"அப்பதான் வியாழக்கிழமை சாயங்காலம் என் வைப்பை ராகவேந்திரர் கோயிலுக்குக் கூட்டிப்போக முடியும்"

"ஜித்தன் டா நீ! இதுல ஆன்மீகம் வேறயா?"

"சரிடா. ரொம்ப நேரம் போன்ல பேசினா என் வைஃப்புக்கு பிடிக்காது. வச்சுடட்டுமா?"

******

சிவப்பு கருப்பின் தாத்பர்யத்தையெல்லாம் உணர்த்த வேண்டிய அளவுக்கு வாசகர்களைக் குறைவாக மதிப்பிட மாட்டேன்.

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நாம் என்ன பேசறோம்ன்றது நமக்குத் தெளிவாத் தெரியணும். கோட்டை விட்டுடக்கூடாது.

வீட்டுப்பாடம்:

ஒருவேளை மனைவியும் வலைப்பதிவுகள் படிப்பவர்களாக இருந்துவிட்டால், எப்படிப்பதிவு எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப்பதிவு. அனுபவிங்க, ரொம்ப ஆராயாதீங்க!

Dec 10, 2007

காட்டுவழி போற தேவ் நீ கவலைப்படாதே!

பசுமை! பசுமை! பார்க்கும் இடமெல்லாம் பசுமை!
 
நகர வாழ்க்கையிலேயே பழக்கப்பட்டிருந்த தேவுக்கு காட்டின் பசுமை புது உற்சாகம் அளித்தது. தனியாக காட்டுவழியில் செல்வதில் பயம் இருந்தாலும் இயற்கை அவன் மனதைக் குளிர்வித்தது. தன்னைத் தேடித் துரத்துபவர்கள் இங்கேயும் தொடர மாட்டார்கள் என்பதால் இலகுவாக உணர்ந்தான்.
 
பிரச்சினைகள் துரத்துவதால் எந்த வாகனமும் கிடைக்காமல் நடந்தே ஆகவேண்டும். இன்று இரவுவரை நடக்கவேண்டுமா? ஏன் மேலேகூட ஆகலாம். அதிலும் இந்தக் காட்டுப்பாதையில் யானைகள் திரியுமாம். "என்ன ஆனாலும் பாத்துக்கலாம்" என்ற முரட்டுத் தைரியத்துடன் தேவ் நடந்தான். 
 
பாதை ஊகிக்க முடியாததாக இருந்தது. சரேலேன ஏற்றம் குபீரென இறக்கம்!
 
"அம்மா.. ம்மா.." ஈனஸ்வரமாகக் குரல் கேட்டதும் தேவ் அதிர்ந்தான். நல்லவேளை..மனிதக் குரல்தான்!
 
4 அடிதான் குழி.. குழிக்குள் ஒரு இளைஞன். எப்படி விழுந்தானோ!
 
"இங்கே பாருங்க, கை கொடுங்க.."
 
வெளியே வந்ததும் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக்கொண்டான் அந்த இளைஞன். "மிக்க நன்றி ...."
 
"என் பெயர் தேவ்.. அதனாலென்ன பரவாயில்லை"
 
"நான் அருண். இங்கே காட்டுக்குள் மாட்டினால், சில நாட்கள்கூட ஆகலாம் உதவி வர.. என் அதிர்ஷ்டம்தான் நீங்கள் உடனே வந்தது."
 
"என்ன செய்றீங்க அருண்?"
 
"இங்கதான் கிராமத்தில் ஒரு வேலையா வந்தேன்.. திரும்பிப் போகணும், இன்னும் உத்தரவு வரலை. சரி வெட்டியா இருக்கறதுக்கு ஊராச்சும் சுத்தலாமே ன்னு வந்தேன், விழுந்தேன்" வசீகரமான சிரிப்பு.
 
"நானும் ஏறத்தாழ அப்படித்தான்.. கிராமத்துல பெரிய்வர் இருக்காரில்ல, அவர்கிட்ட ஒரு தகவல் சொல்லணும், அதுக்குதான் வந்தேன்"
 
"இந்தக் காலத்தில, ஆள் மூலம் தகவலா? புறா அனுப்ப வேண்டியதுதானே!"
 
"எந்தக் காலமா இருந்தாலென்ன? சில முக்கியமான விஷயம் நம்பகமான ஆள் மூலம் அனுப்பறதுதான் இன்னிக்கும் பாதுகாப்பு"
 
"யாருக்கு? என்ன தகவல்?"
 
"அதை உன்கிட்ட சொன்னா நானென்ன நம்பகமான ஆள்?"
 
"அது சரி.. " மறுபடி அதே சிரிப்பு.
 
பாதையின் கடுமையும் பயமும் காணாமல் போய்விட்டது - கூட ஒரு ஆள் இருந்ததால். அவ்வப்போது தூரத்தில் கேட்ட சில மிருக ஒலிகள் முன்போல பயமுறுத்தவில்லை.
 
"இங்கேயெல்லாம் தனியாக வந்தா மகிழ்ச்சி இல்ல! காதலியோட வரணும்"
 
"ஓ, தேவ் காதல் வேற பண்றாரா?"
 
"ஆம்.. இப்போதுதான் கொஞ்ச நாளா! கண்டதும் காதல்!"
 
"சரி தகவலைத்தான் சொல்ல மாட்டே, காதலையாச்சும் சொல்லலாமில்ல?"
 
"அதுல ஒரு பிரச்சினையும் இல்ல.. சொல்றேன்..
 
"எனக்கு காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு கிராமம். பெரும்பாலும் காஞ்சிபுரத்துலதான் இருப்பேன். அங்கே நாங்க நண்பர்கள் நாலஞ்சு பேரு வேலை வெட்டியில்லாம ராஜவாழ்க்கை வாழ்ந்துகிட்டிருந்தோம். அப்பதான் என் நண்பன் ஆதி ஒரு வேலை சொன்னான்"
 
"காஞ்சிபுரம், ஆதியா?"
 
"தெரியுமா? பிரபலமான ஆளுதான்"
 
"இல்ல தெரியாது.. நீங்க மேல சொல்லுங்க"
 
"அவங்க அப்பாகிட்ட ஒரு தகவல் சொல்லணுமாம்.. என்னை அனுப்பினான்.. அவங்க அப்பா ஊருக்கு வந்து பாத்தா ஒரே களேபரம்! அவரு தஞ்சாவூர்லே பெரிய பசையுள்ள புள்ளி..பெரிய புள்ளின்னாலே நாலு எதிரிங்க, நாலு நண்பர்ங்க இருப்பாங்க இல்லியா? அவரைப் பாக்கவே விடல"
 
"அப்புறம்?"
 
"வேறென்ன, எப்படியாவது விஷயத்தை ஆதி அப்பாகிட்ட சொல்லிடணும்னு ஒரு தப்பு பண்ணிட்டேன்"
 
"என்ன தப்பு?"
 
"பொய் சொல்லி உள்ளே நுழைஞ்சுட்டேன்.. விஷயத்தை என்னவோ ஆதிஅப்பாகிட்டே சேத்துட்டேன்.. அவரோட நண்பர்கள், நான் என்னவோ அவரைக் கொலை செய்யத்தான் பொய் சொன்னதா நினைச்சுகிட்டுத் துரத்தறாங்க. அவரோட எதிரிங்களுக்கு, நான் அந்த ஆளை சந்திச்சதுல கடுப்பு.. என்னைப் போட்டுத் தள்ளிடணும்னு துரத்தறாங்க!"
 
"காதல்னு சொன்னீங்களே!"
 
"வரேன், வரேன்.. கிரமப்படிதானே வரமுடியும்? துரத்துனாங்களா? ஒளியறதுக்கு இடம் தேவைப்பட்டுச்சு. அப்பதான் ஆதியோட தங்கையைப் பாத்தேன்.
 
"பாத்ததுதான்.. முதல் பார்வையிலேயே காதல்னு முன்னாடி சொல்லியிருந்தா நம்பியிருக்கமாட்டேன்.. அருண் நீ என்ன நினைக்கிறே?"
 
"காதலுக்குக் கண் இல்லைன்னு"
 
"கிண்டலா? நீ யாரையும் காதலிக்கலையா?"
 
"இல்லைப்பா.. நிறைய வேலைகள்.. கடமைகள்.. அதெல்லாம் முடிஞ்சபிறகுதான் யோசிக்கமுடியும்! சரி அப்புறம்?"
 
"அவங்ககிட்டே எல்லாத்தையும் விலாவாரியாச் சொன்னேன்.. அவங்க என்ன சொன்னாங்க, சரி நீங்க கொஞ்சநாள் தலைமறைவா இருங்க, கிராமத்துக்குப் போயிருங்க..
 
"எனக்குத் தெரிஞ்சவர்தான் கிராமத்துப் பெரியவரு, அவருக்கு ஒரு கடுதாசி கொடுத்தா அவர் உங்களை இப்ப உள்ள பிரச்சினைலே இருந்து காப்பாத்துவார்"னு.. அதான் இங்க வந்திருக்கேன்..
 
பேசாமல் கொஞ்ச தூரம் சென்றார்கள்.. அப்புறம்தான் உறைத்தது தேவுக்கு..
 
"கில்லாடி அருண் நீ.. கொஞ்சம் கொஞ்சமா பேசி என்கிட்டே இருந்தே விஷயத்தையெல்லாம் கறந்துட்டியே!"
 
"சேசே.. கவலைப்படாதே.. நானும் நம்பகமான ஆள்தான்.. அதிலும் என்னை நீ காப்பாத்தி வேற இருக்கே"
 
"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்?"
 
"வந்துட்டோம் ஏறத்தாழ!.. அதோ புகை தெரியுதா?"
 
புகை தெரிந்தது, ஆனாலும் புகையின் ஆதாரத்தை நெருங்குவதற்குள் மாலை மங்கத் தொடங்கிவிட்டது.
 
"இதான் கிராமத்துப் பெரியவர் வீடு. நீ போய் உன்னை அறிமுகப்படுத்திக்கோ.. நான் துணியெல்லாம் மாத்திகிட்டு வரேன். எதாச்சும் பிரச்சினைன்னா தாராளமா நான் அருணோட நண்பன்னு சொல்லிக்க"
 
பெரியவர் என்ன காரணமோ தெரியவில்லை, கோபமாக இருந்தார்.
 
"அய்யா வணக்கம்.. என் பெயர் தேவ், காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்கேன்"
 
"இவந்தானா தேவ்.. இவனை உடனே பிடிச்சு சிறைலே போடுங்கடா. தஞ்சாவூர்லே என்ன பண்ண நீ? கொலை பண்ண முயற்சி பண்ணிட்டு ஓடிவந்துட்டியா? எங்களுக்கு வேற வழியிலே விஷயம் வராதுன்னு நினைச்சயா?"
 
நான்கு பேர் உடனே தேவைச் சூழ்ந்து அவனைப் பிடிக்க முற்பட, உடை மாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்த அருண் சொன்னான்..
 
"கொடும்பாளூர் பெரிய வேளாரே! அருண்மொழி வர்மன் ஆணையிடுகிறேன். வந்தியத் தேவர் நம் நண்பர். அவரைப் பிடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர் என் தமக்கை குந்தவை பிராட்டியாரிடம் இருந்து எனக்கு முக்கியமான தகவல் கொண்டு வந்திருக்கிறார்"
 
************************

Dec 8, 2007

கடன் அட்டை

மணிக்கு அந்தக் கடிதம் வந்ததிலிருந்துதான் தொடங்கியது சனி.

"திரு சுப்பிரமணியம் கோவிந்தராஜன், தங்கள் கடன் அட்டையில் இரண்டு மாதங்களாக ரூ 150000/- (ரூ ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மட்டும்) கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது. தாங்கள் உடனே ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம், ஒ-ம், ---வங்கி"

எப்படி இது சாத்தியம்? வீட்டின் கடைசிச் செலவுகளுக்காக கடன் வாங்கியது உண்மை. ஆனால் அடுத்த மாதம் அலுவலகத்தில் எல்லாக்கடன்களையும் எடுத்து வங்கிக்குக் காசோலை அனுப்பியாகிவிட்டதே. இரண்டு மாதங்களாக நிலுவையா? வங்கிக்கே பேசிவிடலாமா?

"உங்கள் சேமிப்பு கணக்கு பற்றிய தகவல்களுக்கு 1 ஐ அழுத்தவும்.."

ஏழெட்டு எண்களை அழுத்தி "உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது, தயவு செய்து காத்திருக்கவும்" 20 நிமிடம் கேட்டுக்கொண்டிருந்தபின்

"வணக்கம் என் பெயர் ஜான். உங்களுக்கு என்ன சேவை வேண்டும்" அப்பாடா மனிதக் குரல்!

"என் பெயர் சுப்பிரமணியம் கோவிந்தராஜன். என் அட்டை எண்----------------"

"ஒரு நிமிடம் திரு கோவிந்தராஜன்.."

"உங்கள் கணக்கில் இன்னும் 1.5 லட்சம் கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது"

"நான் சென்ற 3ஆம் தேதி அதற்குக் காசோலை அனுப்பிவிட்டேனே"

"இன்று தேதி 5 தான் ஆகிறது, ஒருவேளை கணக்கு இற்றைப்படுத்தப்படாமல் இருக்கலாம்."

"நான் சொல்வது போனமாதம் 3ஆம் தேதி"

"மன்னிக்கவும் திரு கோவிந்தராஜன், இன்னும் எங்களுக்கு அந்தக் காசோலை வந்து சேரவில்லை"

"ஆனால் வங்கிக்கணக்கில் அந்தப் பணம் குறைந்துவிட்டிருக்கிறதே"

"இன்னும் இந்தக் கணக்குக்கு வரவில்லை திரு கோவிந்தராஜன். நீங்கள் உடனே அந்தப் பணத்தைக் கட்டவேண்டும். எங்கள் கடன்மீட்புத் துறைக்கு உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை அறிவித்து விட்டோம்"

"ஆனால் நான் அனுப்பிவிட்டேனே"

"உங்கள் காசோலை எண்ணைச் சொல்கிறீர்களா? சரி பார்க்கிறேன்"

சொன்னான்.

"ஆம், இந்தக் காசோலை எங்கள் வங்கிக்கு வந்திருக்கிறது, ஆனால் வேறு ஒரு எண்ணுக்கு. உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் அட்டைகள் இருக்கின்றனவா?"

"இல்லையே. உங்கள் வங்கியிலிருந்து ஒரே ஒரு அட்டைதான். எந்த எண்ணுக்குச் சென்றுள்ளது?"

"மன்னிக்கவும். வேறு ஒருவர் பெயரில் உள்ள அட்டை எண்ணை நாங்கள் தெரிவிக்கக்கூடாது"

"காசோலையில் எண் தவறுதலாகப் போடப்பட்டிருக்கலாம்"

"மன்னிக்கவும், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை"

"அந்த அட்டைக்குரியவரிடம் பேசி, தவற்றைச் சரி செய்யலாம் அல்லவா?"

"அதை இந்த வங்கி செய்யாது. நீங்களே செய்துகொள்ளத் தடை இல்லை."

"எனக்கு யாருடைய கணக்கு என்பது எப்படித் தெரியும்?"

"மன்னிக்கவும், நான் தகவல்கள் தர இயலாது"

"உங்கள் மேலாளரிடம் பேசிப்பார்க்கலாமா?"

"தாராளமாக. ஆனால் அவரும் இத்தகவல்களைத் தரமாட்டார்"

"அப்போது என்னதான் வழி?"

"தாங்கள் ரூ 1.5 லட்சத்தை உடனடியாகக் கட்டவேண்டும்"

"எப்படிக் கட்டுவது?"

"மன்னிக்கவும், வேறு எதேனும் கேள்வி இருக்கிறதா? நல்ல நாளுக்கு வாழ்த்துகள்" வைத்துவிட்டான்.

நல்ல நாள்? இதைவிட மோசமான நாள் இருக்க முடியுமா?

என்ன செய்வது? எப்படி இந்தப் பிரச்சினையிலிருந்து மீள்வது? யாரை ஆலோசிப்பது..ஒன்றும் புரியாமல் அடிவயிறு கனக்க வீட்டிற்குச் சென்றால் வாசலிலேயே மடக்கினார் செயலர் ராமாராவ்.

"என்ன மணி, உங்கள் வீட்டுக்கு இப்படிப்பட்ட விருந்தாளிங்க எல்லாம் வருவாங்களா?"

யார் அது விருந்தாளி?

"இது மரியாதைப்பட்டவங்க இருக்கற இடம். இந்த மாதிரி ரவுடிங்க எல்லாம் வராம பாத்துக்கங்க"

ராமாராவுடன் சண்டை பிடிக்க நேரம் இல்லாமல் வீட்டிற்கு விரைந்தான். 3 தடி ஆட்கள் அழைப்பு மணியைப் புறக்கணித்து கதவை ஓங்கித் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

"யாருங்க நீங்க"

"நாங்க வங்கியிலிருந்து வரோம். கடன் வாங்கினியே.. திரும்பிக் கொடுக்கவாணாம்?"

அந்த முகங்கள், அவர்கள் உடைகள் எதுவும் பன்னாட்டு வங்கியின் பெயருடன் ஒத்துவரவில்லை. ஆரம்பிக்கும்போதே ஒருமையில் ஆரம்பிக்கிறானே..

"வாங்க உக்காந்து பேசலாம்"

உட்கார்வதற்குள் "வாளைமீனுக்கும் விலாங்குமீனுக்கும்" சத்தம்.

"அந்த கஸ்மாலத்தை அணைச்சு வையின்னு சொன்னேனில்ல?.. எடுறா!" என்றான் அவர்களுள் தலைவன் போலத் தோற்றமளித்தவன்.

"என்னாது .. கொடுக்க முடியாதாமா? கைகால் போனா பரவாயில்லையான்னு கேளு! கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்கமுடியாத நாய்க்கு வாய் மட்டும் வண்டலூர் வரைக்கும்!"

அணைத்துவிட்டு மணியைப் பார்த்தான்.

"என்னாய்யா? எப்ப தருவே?"

"நான் பணத்தை அனுப்பிட்டேனுங்க. ஆனா ஒரு தப்பு நடந்துபோச்சு"

"எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க"

"இல்லீங்க, நிஜமாவே, வேர ஒரு கணக்குக்கு பணம் போயிருச்சு"

"அதுக்கு, என்னை என்னா பண்ணச் சொல்றே? டேய் மொட்டைக்கு போட்டுப் பேசுறா! அந்த நங்கநல்லூர்காரன் விஷயம் ஒரு வாரத்துக்கு மேல இழுத்துகிட்டிருக்கு"

"நான் மேலதிகாரிங்ககிட்ட பேசி சரி பண்ணிருவேங்க"

"மொட்டை.. அவன் என்னதான் சொல்றான்? குடும்பத்தோட மரியாதையா வாழணுமாவா? வேணாமாவா? ஒரு காட்டு காட்டிட்டு வா! அப்பதான் தெரியும் இவனுங்களுக்கு" மணி பேசியதை காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

"தோ பாரு மணி.. ஒரு வாரம் உனக்குத் தர்றேன். அதுக்குள்ள பைசல் பண்ணாச் சரி. இல்லாட்டி என்ன வேணும்னாலும் நடக்கும்"

வெளியேறிவிட்டார்கள். இரண்டு நிமிடம்தான் உள்ளே இருந்தார்கள், ஆனால் ஒரு தேர்ந்த நாடகம் போல, மேலே கை வைக்காமல், நேரடியாகத் திட்டாமல் செய்தியை மணிக்குச் சொல்லிவிட்டார்கள் - நாங்கள் எந்த அளவுக்கும் இறங்குவோம்!

அடுத்து வந்த நாட்கள் அன்றைவிட மோசமாகவே இருந்தன.

"அட்டைக்கு அனுப்பப்படும் காசோலை யாருடைய கணக்கில் இருந்து வந்தது என்பது எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். உங்களுக்கும் அந்த அட்டைதாரருக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ? அவராக முன்வந்து சரிசெய்தால் மட்டுமே முடியும்"

"சரி அவர் பெயர் முகவரி சொன்னீங்கன்னா கேட்டுப்பாக்கிறேனே"

"மன்னிக்கவும். நாங்கள் அந்த எண்ணைத் தரமுடியாது. நீங்கள் இப்போது உடனடியாக 175000த்தை கட்டுவது தவிர வேறு வழி கிடையாது"

வங்கி மேலதிகாரிகள் கைகழுவிவிட்டார்கள்.

வாரம் கழிந்தவுடன் சரியாக வந்துவிட்டார்கள் தாதாக்கள்.

"என்னா மணி, இன்னும் கட்டலியாமே? என்னா தெனாவட்டுடா உன்க்கு?"

"இல்லைங்க, எதாவது பண்ணி சரி பண்ணிடுவேன்."

"த்தா.. உனக்கெல்லாம் ஒரு வீடு.. சோறுதானே திங்கறே? கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கணும்ன்ற ஒணக்கை வேணாம்?"

"எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்லே..."

"கடைசியா இன்னும் ரெண்டு நாள் கொடுக்கறேன். மவனே அதுக்குள்ள கணக்குத் தீர்க்கலே..."

யாரைக் கேட்பது? .

"உங்க அப்பாகிட்ட இருந்து எதாச்சும்?"

"அவரு கடைசிக் காசையும் சுரண்டிதானே 3 லட்சம் கொடுத்தாரு? உங்களுக்குத் தெரியாததா?"

எந்த வழியும் இல்லை. அலுவலகத்தில், வங்கிகளில் தெரிந்தவர்களிடம் எல்லாம் எல்லை வரைக் கடன் வாங்கித்தான் வீடே முழுமை ஆகி இருக்கிறது. நண்பர்கள் எல்லாரும் முடியாது என்றே சொல்லிவிட்டார்கள்.

நடைப்பிணமாகத்தான் அலைந்தான் மணி. "அஞ்சு வட்டிக்குத் தர்றேன். ஆனா ரெண்டு மாசத்துக்குள்ள திருப்பணும்" ரெண்டு மாசத்துக்குள்? வேறு குண்டர்களை அழைப்பதில்தான் இது முடியும். "வேணாங்க"

வீட்டை அடகு வைக்கலாமா? "இதை எப்படிங்க அடகு வைக்க முடியும்? ஏற்கனவே அடகுக்குதானே வீட்டுக்கடன் வாங்கியிருக்கோம்?"

ஒன்றும் புரியவில்லை. தற்கொலையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஒருநாள் அம்சா பதட்டமாக அழைக்க, வீட்டிற்கு வேகமாக ஓடினான்.

வீட்டு வாசலில் ஒரு வண்டியில் அவன் தொலைக்காட்சியும் குளிர்பதனப் பெட்டியும்.

அதே தாதாதான் நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்."மணி.. வண்ட்டியா? காசைத் திருப்பிக் கொடுக்காத டோமரு உனக்கு படம் பாக்கணுமா?"

ராமாராவும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். "மணி, இதெல்லாம் சரியில்லை. நான் முதல்லேயே சொன்னேன், இது மரியாதைப் பட்டவங்க இருக்கற இடம்னு. நீங்க கூடிய சீக்கிரம் வீட்டைக் காலி பண்ணிடுங்க. குழந்தைங்க எல்லாம் பயப்படுது பாருங்க!"

வீட்டில் தொலைக்காட்சி போனதில் நிசப்தம் பெரும் சப்தமாகக் கேட்டது. சமையலறையில் கேவல்.

அடுத்த முறை தாதா வந்தபோது, மணியும் வீட்டில் இருந்தான் நல்ல வேளையாக..

"மணி.. உன் மூஞ்சுக்குதான் இவ்ளோ நாள் மேல கைவைக்காம விட்டு வச்சிருக்கேன்.."

"இதோ பாருங்க.. நீங்க பண்றது சட்டப்படி தப்பு.. தீர்ப்பு கூட வந்திருக்கு தெரியுமா?"

"நீ சரிப்படமாட்டே.. சட்டம் பேசறியா.. தயிர்சோத்துக்கு இவ்ளோ காண்டு கூடாது..தோ கூப்பிடறேன் நம்ம பசங்கள.."

"அய்யோ.. அவங்ககிட்டே ஏன் வம்பு.. எதாச்சும் கொடுத்து அனுப்புங்க!" கண்ணில் கலவரத்தோடு அம்சா..

"என்ன இருக்கிறது கொடுக்க?"

"ஏன் உன் பொண்டாட்டிய அனுப்பேன்! அம்சாவா பேரு? அம்சமாத்தானே இருக்கா?"

கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்..

"இந்தத் தாலி ஒண்ணுதான் இருக்கு.. சாமி படத்துக்குக் கீழே மஞ்சள் கயிறு இருக்கு அதை எடுத்துகிட்டு வாங்க.."

சமையல் அறையைத் தாண்டும்போதுதான் அதைப் பார்த்தான்.

மாட்சிமை தாங்கிய நீதிபதி அவர்களே.. என் கட்சிக்காரர் மணி, உணர்ச்சியின் தூண்டுதலால்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார் என்பதால், குறைந்தபட்சத் தண்டனை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

************************************
ஆங்கிலக் கலப்பை என் குறையாகக் கூறிய நண்பர் சாத்தான்குளத்தாருக்கு, துளி ஆங்கிலமும் கலக்காமல் எழுதிய இக்கதையை காணிக்கையாக்குகிறேன்.

Dec 6, 2007

காமத்திற்கும் கண் உண்டு - சிறுகதை

என் கற்பை இன்று இழக்கத் தீர்மானித்துவிட்டேன்.

28 வருடங்களாகப் பெயர் தெரியாத ஒருத்திக்காக பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்ததை கைவிட முடிவெடுத்ததில் வருத்தம் இல்லாதது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

வாய்ப்புக் கிடைக்காத வரைதான் நீ யோக்கியன் என்று குரு சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

இந்த நகரம் அப்படிப்பட்டது. இந்த விஷயத்தில் யோக்கியனாக இருப்பது ரொம்பவே கஷ்டம். அமெரிக்காவை டாலர் தேசம் என்றால் பாரீஸை காதல் தேசம் என்று சொல்லலாம்.. இல்லை இல்லை காம தேசம். க்யூவில் நிற்கும் நேரத்தைக்கூட வீணடிக்காமல் முத்தமிட்டுக்கொண்டிருப்பவர்கள் நிறந்த தேசம். தன்னூரில் எப்படியோ தெரியாது, இந்த ஊர்க்காற்றுக்கே உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய சக்தி அதிகமாகவே இருக்கிறது.சிக்னலில் நிற்கும் நேரத்தில் அப்படி என்னதான் அவசரமோ..தடவிக்கொண்டிருக்கிறான்.. இந்தக் கண்றாவியெல்லாவற்றையும் சூடேறிப் பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. காலார நடந்தாலும் தெருவோரக்கடைகளில் தூண்டிவிடும் விதவிதமான பொம்மைகள், உண்மைகள், லேப் டான்ஸுகள், க்ளப்புகள்!.. நடப்பதைக் கூட விட்டுவிடவா முடியும்? இந்த ஊரில் இவ்வளவு நாள் காப்பாற்றி வந்ததே பெரிய விஷயம்.

வாய்ப்பு கிடைக்காமல் இல்லை. பயம். புன்னைநல்லூர் நடராஜனுக்கு மேட்டர் தெரிந்து மறுபடி பெல்டைக் கழற்றுவாரோ என்ற தேவையில்லாத பயம் தொடங்கி எங்கேயாவது போட்டுக்கொடுக்கப்படுவோமே என்ற பயம். எதாவது வியாதி வெக்கை வந்து அசிங்கமாகிவிடுமோ என்ற பயம்.

இருந்தும், இன்று அந்த பயங்களைத் துறந்துவிட்டேன்.

காலையில் போர்டன் சொன்னபோதுகூட ஒன்றும் தோன்றவில்லை. "ராவி, நைட் கொஞ்சம் CDG போய் எலிஸாவைப் பிக் செய்து ஹோட்டலில் ட்ராப் செய்து விடுகிறாயா?"

இதுபோன்ற வேலைகள் எல்லாம் என் தலைமீது விழுவது வழக்கம்தான். நீதானே தனியாக இருக்கிறாய்.. நாங்கள் எல்லாம் குடும்பத்துக்குத் திரும்பவேண்டும். வீட்டில் தனியாக என்னதான் செய்வாய், உனக்கு பொழுதுபோக்குக்கு இன்று நான் பிச்சை போட்டேன்.. என்பது உள்ளே ஒலிக்கும்.

40 கிலோமீட்டர்.. சாயங்கால பாரீஸ் ட்ராபிக்கில் தள்ளாடிக்கொண்டு செல்லவேண்டும். இன்னும் 10 கிலோமீட்டர் ஊர்ந்துவிட்டால் பிறகு கொஞ்சம் ஆக்சிலரேட்டரை அழுத்தலாம். அறைக்குப் போனாலும் போர்தானே அடித்திருக்கும்..ரேடியோவைப் போட்டால் ஆப்பிரிக்க ஜாஸ் காட்டுக்கத்தலாகக் கத்தி காதைப் பதம் பார்த்தது.. எப்படித்தான் கேட்கிறார்களோ இந்த சத்தத்தை.. ஆட்டத்தை பார்க்க வேறு கூட்டிப்போயிருந்தான் ஒரு நண்பன். அருவருப்பு தாங்காமல் பாதியில் திரும்பி வந்துவிட்டேன். சிடியைத் தட்ட "தனிமை கொடுமையோ" என்று ஏ ஆர் ரஹ்மான் MP3யாக ஒலித்துக்கொண்டிருந்தார்.

உண்மை.. தனிமை, செய்ய வேலை ஏதும் இல்லாத, விலை உயர்ந்த பொழுதுபோக்குகள் மட்டுமே உள்ள இந்த நகரத்தில் தனிமை கொடுமைதான்.

பாடல் மாறியது.. "தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்".. என்ன இன்று இந்த மாதிரிப் பாட்டுகளாகவே வந்துகொண்டிருக்கின்றன?  என் மனசு தெரிந்து நடந்துகொள்கிறதா சிடி?

எப்படி இருப்பாள் அந்த எலிஸா? யான் என்ன சொன்னான்? "பிக் அப் பண்ணி ட்ராப் செய்துவிட்டு வந்துவிடாதே.. அமெரிக்க ஆபீஸில் அவளுக்கு ரொம்ப நல்ல பெயர். நிம்ஃப்!"

"யோவ்.. என்னய்யா சொல்றே?"

"அட கேள்விப்பட்டதைத் தான்பா சொல்றேன். ஒருத்தரை விட்டதில்லையாம் அவ!"

ஜேசுதாஸ் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.."விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்"

இதைவிட நல்ல சந்தர்ப்பம் எனக்கு வாய்க்காது என்று அப்போதே புரிந்துவிட்டது. ஒருநாள் ட்ரிப்பாக வரப்போகிறாள், இங்கே யாரையும் அவளுக்குத் தெரியாது. எதாவது ஏடாகூடம் ஆகிவிட்டாலும் போட்டுக்கொடுக்கமுடியாது.. யான் சொன்னது உண்மையாக இருந்தால் ஏடாகூடம் ஆக வாய்ப்பும் கிடையாது..

எனவேதான், என் கற்பை இன்று இழக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

டெர்மினலின் பார்க்கிங்கில் ஜகஜ்ஜோதியாக நின்றுகொண்டிருந்தது கூட்டம். ஏர்போர்ட் பார்க்கிங் ஒரு காட்டெருமை. எப்போது பாயும் எப்போது மேயும் என்று யாருக்கும் தெரியாது. மெஷின் க்யூவில் முன்னாள் ஒரு கறுப்பன்.. விரோதமாகப் பார்க்கிறானா, சிரிக்கிறானா என்று வித்தியாசம் தெரியவில்லை. நான் என் பங்குக்கு காசைப் போடும் முன் ஒருமுறை ஆசைதீர முறைத்தேன்.டெர்மினலை நோக்கி நடக்கையில் வயிற்றுக்குள் எதோ பந்து மாதிரி உருண்டது.

உள்ளே நுழைவதற்குமுன் ஆசுவாசத்திற்கு ஒரு சிகரெட் கொளுத்தினேன். இன்று மூன்று ஆகிவிட்டது. ஒரே நாளில் முழுசாகக் கெட்டுப்போய்விடப்பொகிறேனா?

சிகரெட்டை அணைப்பதற்குள்ளாகவே செல் மணியடித்தது. "ராவி?"

"யா"

"நான் எலிஸா.. போர்டன் சொன்னார், நீ என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக."

"ஆம், டெர்மினல் வாசலில் இருக்கிறேன்"

"ஓ, த கய் வித் ப்ளாக் ஓவர்கோட்? ஸ்பாட்டட்!"

டெலிபோனிலும் நேரிலும் ஒரே நேரத்தில் குரல் கேட்க, ஆரவாரமாகக் கையசைத்துக்கொண்டு நின்றாள் எலிஸா.

திரும்பும்போது நான் அதிகம் பேசவில்லை.. என் நிலைமை பேச அனுமதிக்கவில்லை.. அவள் வளவள என்று பேசிக்கொண்டே வந்தாள்..

"யூ ப்ரம் இண்டியா? த லேண்ட் ஆப் காம்சூத்ரா?"

"யூ லிவ் நியர் தாஜ்மகால்?" தாஸ்மால் என்று உச்சரித்தாள்.

"மெட்ராஸ்! ஓ கேள்விப்பட்டிருக்கிறேன்!"

"உன் மொழிப் பாட்டா? நன்றாக இருக்கிறது! யூ ஹாவ் ஜாஸ், ராக்?" ரேடியோவுக்கு வேண்டாவெறுப்பாக மாற்றினேன்.

ஹோட்டலில் செக் இன்னை முடித்து சாவி வாங்கிக்கொண்டே "உனக்குத் தெரியுமா ராவி? ஜஸ்ட் 50 வருஷம் முன்னால்கூட என்னை ஹோட்டலுக்குள் அனுமதிக்க யோசித்திருப்பார்கள்!"

என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. "இப்போது டிஸ்கிரிமினேஷன் குறைந்துவிட்டிருக்குமே"

"ஆமாம், வெளிப்பக்கம்! உள்ளே எல்லாரும் அப்படியேதான் இருக்கிறார்கள்" புன்னகை என்னவோ வசீகரமாகத்தான் இருந்தது.

"ரூமுக்கு வாயேன், கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம்.. ஹவ் அபவுட் எ ட்ரிங்க்? என் பாடி க்ளாக்குக்கு இப்போதுதான் மதிய நேரம்" கண்ணில் அழைப்பு. யான் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

"இல்லை எலிஸா.. எனக்குக் கொஞ்சம் சில்லறை வேலைகள் இருக்கின்றன. நாளைக்காலை எட்டு மணிக்கு வந்து பிக் செய்துகொள்கிறேன்..குட்நைட்"

திரும்ப வரும்போது மனதில் வெறுமை.. எல்லாமே எதிர்பார்த்ததுபோல்தானே நடந்தது? ஏன் தவறவிட்டேன் இப்படி ஒரு வாய்ப்பை? இதை நிறவெறி என்று சொல்ல முடியுமா? பேசும்போது பழகும்போது எல்லாம் நிறவெறியா காட்டுகிறேன்.. இருந்தாலும் இந்த அளவுக்கு..மனசு இன்னும் பக்குவப்படவில்லை! அட இந்த அசிங்கம் செய்வது பக்குவமா?  பயமோ? தயக்கமோ? என்ன எழவோ!  
 
சே! வேறு வழியில்லை.. நடராஜனே கதி!

************************

பின்குறிப்பு: கதை என்று எழுதி ரொம்பநாள் ஆகிவிட்டது.. தேன்கூடு சாகரனை ரொம்ப மிஸ் செய்கிறேன்! தேன்கூடு போட்டிகள் இருந்தவரை மாதம் ஒன்றாவது எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் போட்டி என்று அறிவித்த சர்வேசனுக்கும், ஊக்கப்படுத்திய பாஸ்டன் பாலாவுக்கும் நன்றி



Dec 3, 2007

6. How to say NO! (Wifeology)

இன்னிக்கு நாம பாக்கப்போறது, மனைவி கேக்கறதை மறுக்கறது எப்படின்றது..
இல்லைன்னு சொல்றது சுலபமான வேலைன்னு சிலரும் முடியவே முடியாத மேட்டர்னு சிலரும் நினைச்சிருப்பாங்க.. அவங்கவங்க அனுபவம் அப்படி. விஞ்ஞானத்தை உபயோகப்படுத்தாம அஞ்ஞானமா அலையறவங்க மறுத்தா மரண அடிதான்.
தங்கமணிங்களை இன்னொசெண்ட்னு மட்டும் நினைச்சுறாதீங்க.. உங்க ஆபீஸ்லே எப்ப போனஸ், எப்ப எதிர்பாராத (அதாவது நீங்க எதிர்பாராதம் அவங்க எதிர்பார்க்கிற) பணம் எல்லாம் வரும்னு கரெக்டா தெரிஞ்சு வச்சுகிட்டு அதுக்கும் ஒரு பட்ஜெட் போட்டு வைக்கறதுல கில்லாடிங்க. என்ன, அந்த பட்ஜெட் எல்லாம் அவங்களோட புடைவை நகைன்னு அப்போர்ஷன் ஆகும்.. நம்ம அல்ப ஆசைகளுக்கு சங்கூதிட்டு அவங்க தன்னுதை நடத்திக்கற ஸ்டைலே தனி..
இப்ப நாம பாக்கப்போற உதாரணத்துல, தலைவருக்கு எதிர்பாராத பணம் வருது, அதிலே தங்கமணி நகை கேக்கறாங்க.
சூழல் 1 : இதுவா வெற்றி?
"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வருதே, அதை பெரிய ஸ்கிரீன் LCD TV லே பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான் வாங்கப்போறேன்"
"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"
"ஆமா, அங்கதான் போகணும்.. எதிர்த்தாப்பலதான் வஸந்த & கோ?"
முறைப்பையும் மீறி வாங்கியே விட்டான் LCD..
சில நாட்களுக்குப் பிறகு..
"யெப்பா இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச்! எங்கேயும் போகப் போறதில்லை! அய்யா ஹவுஸ் அரெஸ்ட்"
"தாராளமா பாருங்களேன். குழந்தைக்கு சாதம் ஊட்டிட்டு அப்புறமா!"
"சரி ஹாலுக்கு போயிடறோம்"
"அய்யோ.. அவன் ஹாலெல்லாம் இரைப்பான். அப்புறம் யாரு க்ளீன் பண்றது? இங்கேயே.. என்ன ஒரு பத்து நிமிஷம்"
முதல் பத்து ஓவர் காலி.
"ஒரு நிமிஷம்.. துவரம்பருப்பு சுத்தமா தீந்து போச்சு.. கடைக்கு போயிட்டு வந்துடறீங்களா?"
"மேட்ச் போகுதே!"
"ஆமாம்.. பொல்லாத மேட்சு.. நீங்க பிடிவாதம் பிடிச்சு வாங்கினீங்களே அப்ப நான் எதாச்சும் சொன்னேனா? ஒரு நிமிஷம் கடைக்குப் போக
இவ்ளோ யோசிக்கிறீங்களே!"
அடுத்த 10 ஓவர் காலி.. முதல் இன்னிங்ஸ் முடிஞ்சுது.
திரும்பி வந்து அமர்ந்தால் டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
"அய்யோ அத மாத்தாதீங்க.. கல்பனாவும் அவ புருஷனும் பேசறதை நாத்தனார் ஒட்டுக்கேட்டுட்டா கடன்காரி.. மாமியார்கிட்ட போயி வத்தி வைக்கப்போறா.. முக்கியமான சீன். இது முடிஞ்சதும் நியூஸ்தானே அப்ப மாத்திக்கங்க"
அண்ணன் ப்ரெசண்டேஷன் செரிமனி மட்டும்தான் பார்த்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
***************
சூழல் 2 - விளைவுகள் அறிந்தவன்!
"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வருதே, அதை பெரிய ஸ்கிரீன் LCD TV லே பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான் வாங்கப்போறேன்"
"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"
"சரி டிவி அடுத்த போனஸ்லே வாங்கிக்கலாம்.நீ கேட்டா நியாயம் இருக்கும்! "
நகைதான் வாங்கினாங்க.
சில நாட்களுக்குப் பிறகு..
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வந்திருக்கு. இந்த டொக்கு டிவியிலே பாக்கணும்னு நெனச்சாலே எரியுது"
"வாங்கிக்க வேண்டியதுதானே.. நானா வேண்டாம்னு சொன்னேன்?"
பதில் பேசுவதாவது.. நம்மாளுதான் அறிவாளியாச்சே..
******************
சூழல் 3: இவன்தாண்டா பிஎச்டி!

"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"

"என்ன பண்ணலாம் நீயே சொல்லு!"

"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"

"நகையா, வாங்கிட்டா போச்சு.. நான்கூட சொல்லணும்னு இருந்தேன். அன்னிக்கு ஜுவல்லரி ஷோகேஸ்லே பாத்து நல்லா இருக்குன்னு சொன்னியே, அந்த பேட்டர்ன்லேயே வாங்கிடலாமா?."

நகைக்கடையில்..

"ஆமாங்க.. அப்படி ஒரு பேட்டர்ன் தான் வேணும்.. மேலே மயில் மாதிரி டிஸைன், கீழே ஒரு கல்லு - சிகப்புமில்லாம, மஞ்சளும் இல்லாத ஒரு
கலர்"

"கிடைக்கறதை வாங்கிக்கலாமேங்க"

"நீ சும்மா இரு. அந்தக் கல்லு கலர்தான் என் கண்ணுமுன்னாலேயே நிக்குது. உனக்கு என்ன கல்லு ராசின்னும் பாத்துட்டேன், அதுல
காம்ப்ரமைஸே கிடையாது!"

"அப்ப்டி ஒரு கல்லு இங்கே இல்லைங்க"

"ஆர்டர் கொடுத்தா கிடைக்குமா?"

"கிடைக்கிறது கஷ்டம்ங்க"

"எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை! அந்தக் கல்லு கிடைச்ச உடனே இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க!"

"ரெண்டு மாசமாவது ஆகும்"

"அதனால என்ன? இவ்ளோ நாள் பொறுத்தாச்சு.. இன்னும் ஒரு ரெண்டு மாசம் பொறுக்க முடியாதா? ராசி மேட்டர்! கண்ட கல்லைப்போட்டா ரிஸ்கு? கல்லு விஷயத்துல நோ காம்ப்ரமைஸ்!"

"சரி நீ ஆசைப்பட்ட நகைதான் இல்லைன்னு ஆகிப் போச்சு. வேற என்ன செய்யலாம்? எதுத்தாப்புலதானே வசந்த அண்ட் கோ இருக்கு
ஒரு நுழை நுழைஞ்சு பார்ப்போம் அங்க உனக்கு எதாவது பிடிச்சு இருக்கான்னு பாரேன்"

நேராக டீவி செக்ஷன் போய்விடக்கூடாது.., தங்கமணிக்கு இண்டரெஸ்ட் இல்லாத பொருட்கள் இருக்குமிடயாய் நடந்து சென்று கொஞ்சம் கேப் விட்டு டிவி ஏரியாவுக்குள் நுழைய வேண்டும்.

"யேய், இங்க பாரேன், இந்த டீவி சேல் போட்டு இருக்கான்.என் கஸின் அருண் வீட்டில் வாங்கி இருக்கிறதாச் சொன்னேனே. உன் தங்கை லதா கூட சூப்பரா இருக்கிறதா சொன்னாளே! அருண் கூட சொல்லிக்கிட்டு இருந்தான், அவன் வீட்டுக்கு நம்மளை கூப்பிடச் சொல்லி அவன் மனைவி சொல்லிக்கிட்டு இருந்தாளாம்.. வேறெதுக்கு.. எல்லாம் இந்த டீவி பெருமை அடிச்சுக்கத்தான்"

"அவங்க நம்மளைக் கேட்கறதுக்கு முன்னாடி நாமளும் ஒண்ணு வாங்க வேண்டியதுதான்"

"ஆமாம்.. அவங்ககிட்ட 42" தான் இருக்கு.. நாம 50" ஆ வாங்கிடுவோம்.. அடுத்தவாரம் 20-20 சீரிஸ் இருக்கு.. அன்னிக்கு அவனை பேமிலியோட கூப்பிட்டாதான் எனக்கு ஆறும்!"

பத்து நாளைக்கொருமுறை ஜுவல்லரிக்கு (தங்கமணி பாக்கும்போது மட்டும்) போன் செய்து "என்னாய்யா இன்னுமா வரலை அந்த டிஸைன்" என்று கேட்டவண்ணம் டிவி பார்த்துகிட்டு எஞ்சமாய் பண்ணிகிட்டு இருக்காரு தலைவர்!

இந்த நுணுக்கத்தை கொஞ்சம் நுணுக்கமாப் பாத்தீங்கன்னா, முதல் ரெண்டு பேரோட ஆசையும் இவர் ஆசையும் ஒண்ணுதான். ஆனா, அதை எப்படி செயல்படுத்தறார் என்பதில்தான் வித்தியாசம் காட்டி ஸ்கோர் பண்றாரு. முதல்ல மறுப்பு சொல்லாம ஆரம்பிச்சு, வாங்கித் தராததுக்கான காரணத்தை நாசூக்கா வேறே ஒருத்தன் மேலே போட்டு (இந்த இடத்துல முக்கியமான மேட்டர் ஸ்பெசிபிகேஷன். இதை வச்சுகிட்டு - 3 டோர், 3 பகுதியிலும் டிப்ராஸ்ட் இருக்கிற ரெப்ரிஜரேட்டர்தான் வேணும்.. ஆட்டோமேட்டிக் அவன் வேண்டாம் ஆனால் ஆட்டோமாட்டிக் க்ரில் மட்டும் வேணும், இப்படி ரெண்டு மூணு மேட்டரைத் தெரிஞ்சிகிட்டு, கிடைக்கறதுக்குக் கஷ்டமான ஸ்பெசிபிகேஷனை வெளிய விடணும்), அப்பால அவங்களுடைய நுண்ணிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு அப்புறமாத்தான் காரியத்தை சாதிச்சுக்கணும். டிவிதான் வாங்கிட்டமேன்னு சும்மா இருந்தாரா? பாலோ அப் பண்றாராம்.. அதுலதான் இவர் அடிவாங்காம தப்பிக்கறார்.

நானே இந்த நுணுக்கம் இன்னும் கைவராம இருந்தப்ப கைகொடுக்கும் கையா, கை கொடுத்த தெய்வமா வந்தவர் நம்ம கொத்தனார். பின்னிப் பெடலெடுத்துட்டார் இந்த ஐடியாவுல!

இன்றைய வீட்டுப்பாடம்:

ஆத்திச்சூடி தயாரிக்கும் சீஸன் இது. நாம, நம்ம வைபாலஜிக்கு ஒரு ஆத்திச்சூடி தயாரிச்சு பின்னூட்டமா போடுவோமா? சாம்பிள்:

அடங்குவது ஆண்.
ஆணீயம் பேசேல்.
இல்லாளே தெய்வம்
ஈ எம் ஐ உன் கடமை
உண்மை மாதிரி பேசு
ஊர்சுற்றும் உரிமைமற.
எந்நாளும் நீ அடிமை
ஏச்சுக்கு பழகு
ஐயம் வரவிடாதே
ஒப்புக்கு நீ தலைவன்
ஓடாமல் அடிவாங்கு
ஔஷதம் தேடு (அடிவாங்கிய பின்)


 

blogger templates | Make Money Online