Jun 23, 2013

இந்தக்கால எஞ்சினியர்கள்

ஒத்திசைவு எழுதிய பதிவாகட்டும், ஜெமோ எழுதிய பதிவாகட்டும், பேசுபொருள் வேறாக இருந்தாலும் தொனி என்னவோ ஒன்றேதான். நம்ம ஊர் எஞ்சினியர்கள் எல்லாம் சும்மா வெத்துவேட்டு, அந்தக்காலம் போல வருமா..

ஏனோ தெரியவில்லை, இந்தத் தொனியை மட்டும் நான் அந்தக்காலம் முதலே வெறுத்து வருகிறேன். இந்தக்கூற்றில் சிலவேளைகளில் உண்மை இருக்கலாம் என்றாலும் பலவேளைகளில் உண்மை இருப்பதில்லை என்பதே என் அனுபவம்.

25 வருடங்களுக்கு முன்பாக நான் சென்ற இண்டர்வியூக்களில் "ஓம்ஸ் லா கூடத் தெரியாதா? என்னதான் படிச்சிட்டு வரீங்களோ" என்ற கேள்வி இன்றுவரை மாறவில்லை.அப்புறம் என்ன அந்தக்காலம் இந்தக்காலம்?

பாடத்துக்கும் வாழ்க்கைக்குமான வேறுபாடுகள் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கும் - எவ்வளவுதான் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்தாலும். ஏன் அப்படி?

ஃபேஸ்புக்கில் இன்றும் போட்டால் 100 லைக் வாங்கக்கூடிய கேள்வி - "(a+b)2 இன்றுவரை நான் உபயோகிக்கவில்லை, ஏன் படிக்கவேண்டும்?" அதேபோலத்தான் சிந்துசமவெளி நாகரிகத்தையும் யாப்பிலக்கணத்தையும் ஏன் படிக்கவேண்டும்..  இந்தப்பாடத்திட்டம் பைத்தியக்காரத் திட்டமா? இல்லை.

பள்ளிக்கல்வி என்பது பெரும்பாலும் இருக்கக்கூடிய பல தெரிவுகளையும் காட்டி அதில் உனக்கு எது வேண்டுமோ - நீ யாப்பிலக்கணத்தை கூறுகட்டி மேயப்போகிறாயா? சிந்து சமவெளியை மேலும் தோண்டவேண்டுமா, அல்ஜீப்ராவை ஆராய வேண்டுமா - எது வேண்டுமோ எடுத்துக்கொள் என்று தெரிவுகளை முன்வைப்பதற்கான ஒரு களம் மட்டுமே. கல்லூரிக்குச் செல்லும்போது தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் கல்லூரியிலும் இதே நிலை தொடரத்தான் செய்கிறது, தொடரத்தான் செய்யும். மெக்கானிகல் எஞ்சினியரிங் என்று எடுத்துக்கொண்டால் அதை உபயோகப்படுத்தும் துறைகள் ஒன்றா இரண்டா? மேனுஃபாக்சரிங் என்றாலே ராக்கெட் தயாரிப்பில் இருந்து ஸ்க்ரூ தயாரிப்பு வரை அந்தத் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படும் எந்திரங்கள், பராமரித்தல் பழுதுபார்த்தல் தரச்சான்று வழங்கல் - சொல்லி மாளுமா? 

கல்லூரியில் இதில் எதை என்று தேர்ந்தெடுத்துப் பாடத்திட்டம் அமைப்பார்கள்? கொஞ்சம் பொத்தாம்பொதுவாகத்தான் இருக்கும். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் கலந்த பாடத்திட்டமாகத்தான் இருக்கமுடியும். பள்ளிக்கல்வி போலவே, வேலைக்குத் தேவையான சிலதும் தேவையற்ற பலதும் படித்துத்தான் ஒரு பொறியாளன் வெளியே வருகிறான் - அப்படித்தான் இருக்கமுடியும். 

நான் என் நிறுவனத்துக்கு ஆள் எடுக்கும்போது மறுநாள் காலையில் நேரடியாகப் போய் வேலை செய்யவேண்டும் - ஏனென்றால் இவன் ஒரு எஞ்சினியர் - என்று எதிர்பார்த்தால் நான் தான் கேனை. அப்படி 25 ஆண்டுகளுக்கு முன்பும் கிடையாது, இன்றும் கிடையாது, என்றும் இருக்கப்போவதும் கிடையாது. என் நிறுவனத்துக்குத் தேவையான தொழில்நுட்பத்தை முறையான ட்ரெய்னிங் மூலமோ, மூத்த மெக்கானிக்குகள் மூலமோதான் அவனுக்குப் பயிற்றுவிக்கவேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் - சிறிதோ பெரிதோ - இப்படிப்பட்ட முறையான ட்ரெய்னிங்குக்காக நிறையப்பணம் செலவிடத்தான் செய்கின்றன.

இந்தக்காலத்துக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறேனே, முழுமையான மனதுடன் இதைச் செய்கிறேனா? இல்லைதான். இந்தக்காலக் கல்வி தரமானதாக இருக்கிறது என்று உரக்கச் சொல்லமுடியுமா? இல்லைதான். ஆனால் இதற்கு மாணவர்களைக் காரணமாகச் சொல்வேனா? மாட்டேன்.

கோர் எஞ்சினியரிங் என்று மெக்கானிகல் எலக்ட்ரிகல் சிவில் படித்துவிட்டு கேம்பஸில் செலக்ட் ஆகி என்ன படித்தோம் என்பதையே மறந்துபோய் பொட்டிதட்டிக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம். கேம்பஸில் செலக்ட் ஆகாதவர்களுக்கும் வாழ்க்கை லட்சியம் பொட்டி தட்டுவதே என்று  கோர் - ஐடி சம்பள வித்தியாசங்கள் நினைக்கவைக்கின்றன. இவ்வளவையும் மீறி கோர் எஞ்சினியரிங் பக்கம் வருபவன் பெரும்பாலும் ஐடி செக்டாரால் கழித்துக்கட்டப்பட்டவனாகவே இருக்கிறான். 

இந்த நிலை நிரந்தரமல்ல என்பதே என் நம்பிக்கை. ஐடி அடங்கத் தொடங்கிவிட்டது, இன்னும் ஓரிரு வருடங்களில் இதன் தாக்கம் கல்வியில் தெரிய ஆரம்பிக்கும்.  பயோடேட்டாவில் பொய்சொன்னால்தான் வேலை என்று இருந்தால் பொய் சொல்லும் ஆசாமி, ஓம்ஸ் லாவைத் தெரிந்தால்தான் வேலை என்றாகிவிட்டால் நிச்சயம் கற்றுக்கொள்வான். பிரச்சினை ஜாப் மார்க்கெட்டில், படிக்கும் மாணவர்கள் மீது அல்ல என்பதே என் உறுதியான அபிப்பிராயம்.

நாம் நமது அடுத்த தலைமுறையைப்பற்றிப் பேசுகையில் - நம் ஒருவயதுக்குழந்தை மொபைலில் கேம் ஆடும் அழகைப் பெருமையாகப் பேசுகிறோம் - ஆனால் வளர்ந்த அடுத்த தலைமுறை எதற்கும் உதவாது என்று சொல்லத் தயங்குவதில்லை!

ஜெயமோகன் எழுதிய கட்டுரை படித்து, சிரிப்புதான் வந்தது - அதாவது, இன்றுவரை இந்தியாவில் எந்த நவீனத் தொழில்நுட்பமும் பழுதானதே இல்லை, பழுதானால் அது சரியானதே இல்லை - இதுதான் அவர் சொல்ல வருவது. இப்படி ஒரு நிலை இருந்தால் எவனுமே நவீனத் தொழில்நுட்பம் பக்கமே போகமாட்டான். காரைச் சரிசெய்ய சரியான ஆட்களே இல்லை என்கிறார். எங்கே தேடிவிட்டுச் சொல்கிறார்? தெருவோர பஞ்சர் ஒட்டும் கடைகளிலா? அவர்களுக்கு எந்தவிதமான கமிட்மெண்ட் இருக்கிறது? அதிகாரபூர்வத் தொழிற்சாலையில் காரைவிட்டுவிட்டு, எடுக்கும்போது பழுது சரியாகவில்லை என்றால் காசு கொடுப்பார்களா? சினிமாத்தயாரிப்பாளர் ஒருவர் சொன்னாராம்.. சினிமாவிலேயே இன்று எத்தனை நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன? அவையெல்லாம் ஒரு முறை பழுதானால் தூக்கித்தான் வீசிவிடுகிறார்களா? 

இன்றல்ல, நேற்றல்ல - 20 வருடங்களுக்கு முன்னால் பிஹாரின் ஒரு மூலையில் கனரக வாகனங்களைப் பழுதுபார்க்கும் வேலையில் இருந்தபோதே, ஒரு பிரச்சினை என்று வந்தால் அதைத் தீர்க்கவேண்டிய கடமை - எனக்கு, அடுத்து ராஞ்சி ஆபீஸ்க்கு, அவர்களாலும் முடியாதபோது சென்னை தலைமையகத்துக்கு, தீரவே இல்லையென்றால் அமெரிக்கத் தயாரிப்பாளருக்கு என்று இருந்த சங்கிலியில் - என்னைத் தாண்டி ராஞ்சிக்குப் போவதே அவமானம் என்று நினைத்துக்கொண்டிருந்தவன் நான் - நான் மட்டுமல்ல - என் சக தொழிலாளர்கள் பலரும் - அன்றும் அப்படித்தான், இன்றும் அப்படித்தான். இது ஒரு தேவையான ஈகோ, இருக்கிறது, இருக்கும்.

களப்பணியாளராக இருந்தாலும் எழுத்தாளராக இருந்தாலும் நம்முடைய ஒரே பொதுக்குணம் - பொதுமைப்படுத்தத் தயங்காமல் இருப்பது - மட்டும்தான்!

 

blogger templates | Make Money Online