Jan 19, 2009

திருமங்கலம் Millionaire!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ. அவன் அறிவாளி
ஆ. அவன் புத்திசாலி
இ. அவன் ஏமாற்றினான்
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

போலீஸ் ஸ்டேஷன். லாடம் கட்டப்பட்ட நிலையில் சுடலைமுத்து..

"உனக்கு எப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரியும்?"

"எனக்குத் தெரியும்"

"பெரிய பெரிய ப்ரொபஸர்ங்க, ஐ ஏ எஸ் ஆபீஸருங்க எல்லாம் 4 கேள்வி தாண்டறதில்லை.. உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"

"தெரியும்"

"நீ யாரு? எந்த ஊர்லே இருந்து வந்தே?"

"மதுரைக்குப் பக்கத்துல திருமங்கலம்னு ஒரு கிராமம்.. அங்கேதான் நான் வளர்ந்தது.. டீக்கடை வச்சு பொழைச்சுக்கிட்டிருந்தேன்"

காட்சி மில்லியனேர் செட்டுக்கு மாறுகிறது.. நிகழ்ச்சி நடத்துபவர் ஆரம்பிக்கிறார்:

"வாருங்கள் நாம் மில்லியனர் நிகழ்ச்சி விளையாடலாம்... நம் எதிரே இருப்பது திருமங்கலத்தில் இருந்து வந்திருக்கும் சுடலைமுத்து.. சுடலைமுத்து என்ன செய்றீங்க?"

"டீக்கடை வச்சிருக்கேன்"............(தேவையான அளவு அவரைக் கிண்டல் செய்ததன் பின்)..

"இதோ உங்களுக்கான முதல் கேள்வி.. ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் போட்டிருக்கும்?

அ. இந்திரா காந்தி
ஆ. நேரு
இ. ரஜினிகாந்த்
ஈ.காந்தி

ப்ளாஷ் பேக்:

நானும் எல்லா எலக்‌ஷனிலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் தான் ஓட்டுப்போட்டு கிட்டிருந்தேன்.. திடீர்னு ஒரு நாள் டிவியில மட்டும் பாத்த பெரிய மனுஷங்க எல்லாம் ஊருக்கு வந்தாங்க..

வீட்டுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த ரேஷன் கார்டு .. வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துகிட்டு ஓடிப்போனேன்.. கும்பலையெல்லாம் விலக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன்.. அப்ப அதைப்பாத்துட்ட்உ ஒரு பெரிய மனுசன் எனக்கு ரூபாய் நோட்டு ஒண்ணு தந்தாரு.. அதில..

போலீஸ் ஸ்டேஷன்..

கான்ஸ்டபிள் சொல்கிறார்: ஆமாம் சார்.. எனக்கு கூட அப்பதான் 1000 ரூபாய்க்கு நோட்டு இருக்குனே தெரியும்..

மில்லியனர் செட்..

"வாழ்த்துக்கள்.. திருமங்கலம் டீக்கடைக்காரருக்கு 1000 ரூபாய் பரிசு.."

"3000 ரூபாய்க்கான இரண்டாம் கேள்வி.. தயாரா?"

"தயார்"

"மின்சார விளக்கு எரிய முக்கியமான தேவை எது?

அ. நெருப்பு பெட்டி
ஆ. தீப்பந்தம்
இ. மேண்டில்
ஈ.மின்சாரம் "

ப்ளாஷ்பேக்:

"என்னாய்யா டீ போட்டிருக்கே.. ஒரே உப்பா கரிக்குது"

"மன்னிச்சுக்கங்க.. சக்கரையும் உப்பும் பக்கத்துல இருந்துச்சு.. உப்பைப் போட்டுட்டேன் போல.."

"ஒரு மெழுகுவத்தி கொளுத்திக்க வேண்டியதுதானே.."

"எல்லாம் தீந்து போச்சுங்க.. நேத்து வரிக்கும் கரண்டே கட் ஆவலையா? அதனால தேவைப்படல. எலக்‌ஷன் தான் முடிஞ்சு போச்சே.. இதோ போய் வாங்கி வரேன்"

கரவொலி சத்தம் மில்லியனர் அரங்கை நிறைக்கிறது.

"20000 ரூபாய்க்கான பரிசை வாங்கிச் செல்கிறார் திருமங்கலம் சுடலைமுத்து"

"இவ்வளவு பெரிய அமவுண்டை பார்த்திருக்கிறீர்களா சுடலைமுத்து?"

"எங்கேங்க? எங்க வீட்லே மொத்தம் 2 வோட்டுதான். பக்கத்து வீட்டு பரமர் 10 வோட்டு மொத்தமா வச்சிருந்தான்.. அள்ளிட்டான்"

"கவலைப்படாதீங்க.. நீங்க இங்கேயும் அள்ளலாம்"

"ஆறாவது கேள்வி.. தயாரா?"

"கேளுங்க"

"உளியின் ஓசை படத்தின் கதை வசனகர்த்தா யார்?

அ.கலைஞர்
ஆ.ராம நாராயணன்
இ. அகிரா குரசோவா
ஈ.மணிரத்னம்"

ப்ளாஷ்பேக்:

"மச்சான் என்னை சினிமாக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி ஏமாத்திகிட்டே இருக்கே"

"இதோ.. இன்னிக்கு கூட்டிட்டு போறேன்.. வார்டு கவுன்சிலர் வந்தாரு.. எல்லாருக்கும் டிக்கட் தந்தாரு.."

"ப்ரீயாவா?"

"ஆமாம்.. எனக்கு மட்டுமே 10 டிக்கட் தந்தாரு.. முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"

படம் பார்க்கிறார்கள்.

"தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"

மில்லியனேர் செட்

"சரியான விடை சுடலை.. நீங்கள் 40000 ரூபாய் ஜெயித்துவிட்டீர்கள்"..

போலீஸ் ஸ்டேஷன்:

"தில்லானா மோகனாம்பாள் யார் வசனம் சொல்லு பாக்கலாம்?"

"எனக்குத் தெரியாது"

"அதுவே தெரியாது.. இது எப்படி தெரியும்?'

"அவங்க அந்தக் கேள்வி கேக்கலையே!"

மில்லியனர் செட்

"1,60,000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி:

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

அ.பாம்பே
ஆ.ஹாங்காங்
இ.டெல்லி
ஈ.சென்னை"

"இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது.. ஆடியன்ஸ் போல்"

போலீஸ் ஸ்டேஷன்..

"இந்தக் கேள்விக்கு உனக்கு விடை தெரியாதா? குழந்தை கூட சரியாகச் சொல்லுமே?"

"படித்த குழந்தை சரியாக்ச் சொல்லும்.. எனக்குத் தெரியாது"

மில்லியனர் செட்டில்
கரவொலி.

"ஆஹா.. நம்ம டீக்கடைக்காரர் எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி கலக்கிகிட்டிருக்கார்.. இன்னும் இரண்டு லைப் லைன் வேற வச்சிருக்கார். 320000 ரூபாய்க்கான ஒன்பதாவது கேள்வி.. தயாரா?"

"தயார்.."

"மதுரையில் டிவி பார்க்க எந்த கேபிள் கனெக்‌ஷன் வேண்டும்?

அ. அரசு கேபிள்
ஆ.சுமங்கலி கேபிள்
இ. ராயல்
ஈ. ஹாத்வே"

ப்ளாஷ்பேக்
விரிகிறது..

"வெட்றா அந்தக் கம்பத்தை.."

"அண்ணே பாத்து வெட்டுங்கன்னே.. டீக்கடை ஓலைச் சாரம் அதோட ஒட்டி இருக்கு"

"இவன் எவண்டா.. அண்ணன் கேபிள்லே தெரியாத சானல் எங்கயும் தெரியக்கூடாதுன்னு பாடுபட்டுகிட்டிருக்கோம்.."

வெட்டிய கம்பம் கீழே விழுகிறது..டீ பாய்லரும் சேர்த்து.

போலீஸ் ஸ்டேஷன்.

"பத்து நாள் ஆச்சு எனக்கு சூடுபட்ட கொப்பளம் ஆற"

மில்லியனர் செட்

"சரியான விடை.. கலக்கறீங்க சுடலை.."

"10 ஆவது கேள்வி..

"லட்டு தயாரிக்க என்ன தேவை?

அ. கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய்
ஆ.மைதாமாவு சர்க்கரை எண்ணெய்
இ. அரிசிமாவு, சர்க்கரை, எண்ணெய்
ஈ. இவற்றில் எதுவும் இல்லை"

"விடை தெரியுமா தெரியாதா?"

"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"

"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"

ப்ளாஷ்பேக்:

"சுடலை.. லட்டு கொடுக்கறாங்களாம்.. போய் வாங்கல?"

"அடப்போடா.. அவன் அவன் வாஷிங் மெஷினும் டிவியும் கொடுக்கறான்.. இவங்க போயும் போயும் லட்டுதான் தராங்களா?"

"அட.. இது சாதா லட்டு இல்லைடா..வாங்கிப் பிரிச்சுப் பாரு"

மில்லியனர் செட்

"விடை ஈ..இவற்றில் எதுவும் இல்லை"

"ஷ்யூர்? கான்பிடண்ட்?"

"ஆமாம்"

"எப்படி சொல்றீங்க?"

"தங்கத்தைப் பத்தி வேறெந்த விடையிலேயும் இல்லியே?"

"வாவ்.. சரியான விடை"

"13 ஆவது கேள்விக்கு வந்துட்டீங்க.. 50,00.000 ரூபாய் இந்தக்கேள்விக்கு சரியான விடை சொன்னா கிடைக்கும்"

"இவற்றுள் எது கலவரத்தை உடனடியாக உண்டாக்கும்?

அ. பங்காளிச் சண்டை
ஆ. கடன் பாக்கி
இ. ஆபாசமாகத் திட்டுதல்
ஈ. கருத்துக் கணிப்பு"

ப்ளாஷ் பேக்..

"எல்லாக் கடையையும் மூடச்சொல்லுங்கடா.. மேயர் அம்மா வராங்க.. "
"இவன் கடையை உடைச்சு போடுங்கடா"
"டே இருடா.. பத்திரிக்கை ஆபீஸுக்குதான் மொதல்ல போகணும்.. சூடா ஒரு டீ குடிச்சுட்டு போலாம்.. எங்களுக்கெலாம் டீ போடுறா சுடல.. க்ரிஷ்ணாயில் வச்சிருப்பியே? அந்த டின்னை எடுத்துக்கங்கடா கிளம்பலாம்"

போலீஸ் ஸ்டேஷன்..

"ஆச்சரியமா இருக்கு உன்னைப்பாத்தா.. கேள்விக்கு எப்படி பதில் சொல்லி ஏமாத்தினேன்ன்னு கேட்டா அதுல இருந்து தப்பிக்கறதுக்கு கலவரத்துக்கு க்ரிஷ்ணாயில் சப்ளை பண்ணேன்னு ஒத்துக்கற.. இதுக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?"

"என்ன ஒரு இருபதாயிரம் கிடைக்குமா?"

"ஷார்ப்பா இருக்காண்டா"

மில்லியனேர் செட்

"சுடலைமுத்து, நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஒரு கோடிக்கான கேள்வி இது. தயாரா?"

"தயார் சார்"

"இதோ உங்கள் கேள்வி"

"இவற்றுள் எது இலவசமாகக் கிடைக்காது?

அ. டிவி
ஆ. கேஸ் ஸ்டவ்
இ. மில்லி
ஈ. மல்லி"

"குழப்பமா இருக்கே சார்.. டிவி எங்க ஊருக்கு கிடைச்சிருச்சு.. மத்ததுல.."

"மில்லியா.. மல்லியா கேஸா?"

"குழப்பமா இருக்கு சார்.. 50/50 ஆப்ஷன் உபயோகப்படுத்தறேன்"

"சரி.. கம்ப்யூட்டர், ரெண்டு தவறான விடையை அழிச்சுடுங்க"

"இ. மில்லி, ஈ. மல்லி.. எது சரியான விடை?"

"இப்பவும் சரியாத் தெரியலையே சார்.. எலக்‌ஷன் டைம்ல மட்டுமா எல்லா டைம்லேயுமா சார்?"

"அது எனக்குத் தெரியாது.. விடை இ. மில்லியா ஈ. மல்லியா?"

"தெரியலையே சார்"

"அப்ப விடை இ. மில்லியாவும் இருக்கலாம், ஈ.மல்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"ஓக்கே சார்.. சரியான விடை ஈ. மல்லி"

"ஷ்யூர்? இ.மில்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"இருக்கலாம் சார். ஆனா என் விடை ஈ.மல்லிதான்"

"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"

"ஆ! ஈ மல்லி சரியான விடை.. நீங்கள் இப்ப ஒரு கோடீஸ்வரர்.. அடுத்த கேள்வி,.."

பாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

"ஆ! அடுத்த கேள்வி நாளை இதே நேர நிகழ்ச்சியில கேட்கப்படும்.. நன்றி"

செட்டை விட்டு வெளியே வந்த நடத்துநர் "போலீஸ் ஸ்டேஷன், சுடலை ஏமாத்துறான்.. அவனை அடிச்சு உண்மையைக் கண்டுபிடிங்க"

போலீஸ் ஸ்டேஷன்..
"எப்படிடா ஈ மல்லின்னு சரியா சொன்னே?"

"எலக்‌ஷன் டைம்லே நெறய மில்லி ப்ரீயா கிடைச்சுது சார்.. மல்லி எப்பவுமே கிடைச்சதில்ல.. அதான் சொன்னேன்.."

"சரி.. திருமங்கலத்துக்காரன் எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேள்விய செட் பண்ணி இருக்கானுங்க கேனப்பயலுங்க.. அவனுங்க கிட்ட பிரச்சினைய வச்சுகிட்டு உன்னை அடிக்கச் சொன்னான் பாரு.. அவனைத்தான் உதைக்கணும்.."

மறுநாள் செட்டில்:

"வாங்க சுடலைமுத்து.. உங்ககிட்ட கடைசிக் கேள்வி கேட்கணும்.. இதுக்கு சரியான விடை சொன்னா உங்களுக்கு ரெண்டு கோடி.. தப்பான விடை சொன்னா, அய்யா ஜாலி.. நாங்க எதுவுமே கொடுக்க வேணாம்"

"கேளுங்க சார் கேள்வி"

"இந்தியாவின் பிரதம மந்திரி யார்?

அ. கலைஞர் மு கருணாநிதி
ஆ.முலாயம் சிங் யாதவ்
இ. மன்மோகன் சிங்
ஈ.லாலு பிரசாத் யாதவ்."

"சுலபமான கேள்விதான்.... இல்ல?"

"எனக்கு இதுக்கு விடை தெரியாதே?"

"ஏமாத்தாதீங்க.. இதுக்கா விடை தெரியாது?"

"நெஜமாதான் சொல்றேன் சார்..போன் அ பிரண்ட் போடலாமா?"

"யாருக்கு?"

"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."

"யாரது?"

"சோனியா காந்தி!"

***************************************************************************

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?

அ.
ஆ.
இ.
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

இல்லை.. எல்லாம் நம் தலைவிதி!

Jan 11, 2009

Slumdog Millionaire விமர்சனம்

ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாத சேரிச்சிறுவனுக்கு 100 டாலர் நோட்டின் பெஞ்சமின் ப்ராங்க்ளின் எப்படித் தெரியும்? தர்ஷன் தோ கன்ஷ்யாம் என்ற பஜனை எழுதிய சூர்தாஸுக்கும் இந்தச் சேரிச்சிறுவனுக்கும் என்ன உறவு? துப்பாக்கியைக் கண்டுபிடித்த கோல்ட் இவன் சித்தப்பாவா? ராமனின் கையில் இருக்கும் வில்லைப்பற்றி சேரியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சிறுவனுக்கு எப்படித் தெரியும்?



இப்படி சம்மந்தமே இல்லாத, தெரிய வாய்ப்பே இல்லாத கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லி கோடீஸ்வரனாகும் ஜமால் மேல் மில்லியனர் நிகழ்ச்சி நடத்துபவருக்கு சந்தேகம் வருவது நியாயம்தானே? சேரிச்சிறுவன் தானே - கேட்க ஆளில்லை - கூப்பிடு போலீஸை - ரெண்டு அடி அடிச்சா எப்படி இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியும் -எப்படி ஏமாத்தினான்னு சொல்லிடுவான்..



சொல்கிறான். ஒவ்வொரு கேள்விக்கும் விடை தெரிந்த தன் வாழ்க்கைச் சரித்திரத்தை. மலத்தில் குதித்து ஆதர்ச நடிகனிடம் பெற்ற ஆட்டோகிராப்பை சில்லறைக்கு விற்கும் அண்ணன் துரோகத்தை. ராமன் குறுக்கே வந்து அம்மாவைத் தூக்கிச் சென்றதை. குழந்தைப் பிச்சைக்கும் கைக்குழந்தைப் பிச்சைக்கும் கண்ணில்லாப்பிச்சைக்கும் உண்டான பொருளாதார வித்தியாசங்களை. ரயிலின் மேலிருந்து கயிறுகட்டி உணவு திருடும் வித்தையை. இளவயதுக்காதலியை கொலை செய்து மீட்டு அண்ணன் அபகரித்த துரோகத்தை. கடைசி நிமிடத்திலும்கூட ஏமாற்றப்பார்க்கும் பெரிய மனிதர்களின் காருண்யத்தை.

இவ்வளவு வித்தியாசமான திரைக்கதைப் பின்னலை சமீபத்தில் பார்த்ததில்லை. சுவாரஸ்யம் துளிக்கூட குன்றாமல் அதே நேரத்தில் அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் குறையாமல் பேண்டஸித் தன்மையோடு நகரும் காட்சிகள். எழுதும்போதே தெரிகிறது யதார்த்தத்தோடு பேண்டஸி எப்படி ஒட்டும்? சேரியின் அப்பட்டமான நிஜமும் அறைகிற அதே வேகத்தோடு மாய யதார்த்தமாக கோடிகளை வென்று ரயிலடியில் சேரும் நிஜத்துக்கு ஒட்டாத காட்சிகளும் ஓடிவிடுகின்றன.

இயக்கம் கலை இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு எல்லாமாய்ச் சேர்ந்து படம் பார்க்கும் உணர்வை முதலில் நம்மிடமிருந்து அகற்றிவிடுகின்றன. ஜமாலுக்கு விழும் அடிகளை நாம் வாங்குகிறோம். டாய்லெட்டில் குதிக்கும்போது மூக்கை மூடுகிறோம். கலவரத்தில் எழுந்து ஓடும் எரிபிணத்தைப்பார்த்துப் பதைக்கிறோம். சூடாக்கப்படும் ஸ்பூனைப்பார்த்து வியர்க்கிறோம். ரயிலில் இருந்து மணலில் விழுந்து உருள்கிறோம். திருடுகிறோம், மாட்டுகிறோம்..

தனித்தனியாக பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒரே விஷயத்தை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன்:

ராமர் கிளப்பிய கலவரத்தில் தாயை இழந்து பிச்சையெடுக்கும்போது கன்ஷ்யாமைப் பாடிவிட்டு மற்றபடி கடவுளைப்பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கை ஓட, தாதா வாழ்க்கை வந்தவுடன் தொழுகை செய்யும் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்கும் ஜமாலின் பார்வை -- ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத நுட்பம்!

குறைகள் இல்லாமல் இல்லை - வழக்கம்போல நம் குறைகளை ஏற்றுமதி செய்யும் மனோபாவம், ஹிந்தியில் எழுதி இலக்கணம் மாறா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் - சேரிச்சிறுவர்கள் பேசும் ஒட்டாத மொழி, படம் முடிகையில் பாட்டு நடனம், வலிந்து திணிக்கப்பட்டதாய்த் தோன்றும் சில விடைகள்..

2008ல் பார்த்த சில ஹிந்திப்படங்கள் (ஆம் இது ஹிந்திப்படம்தான்! என்ன, எழுதப்பட்ட பேசப்பட்ட சப்டைட்டில்!) மிகுந்த நம்பிக்கையை வரவழைக்கின்றன. (தேர்ந்தெடுத்துப் பார்ப்பதால் இருக்கலாம்) - வெட்னஸ்டே, ஆமீர், மும்பை மேரி ஜான் - இப்போது இது.
.
நிச்சயம் பாருங்கள்!

Jan 8, 2009

சிறுகதை: ஓர் இரவு

ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட அருவருக்க வைக்கவில்லை. அனாதரவாக விட்டுவிட்டு வந்திருக்கும் லாப்டாப் நினைவும் பயமுறுத்தவில்லை.


இவ்வளவு மகிழ்ச்சியாய் எல்லா செல்களிலும் புத்துணர்வோடு எப்போது இருந்தேன் கடைசியாக? ம்ஹூம் – ஞாபகமே இல்லை.


திரும்பி இருக்கையில் அமரும்போதும் எதிர் சீட்டில் இன்னும்"என்னைக்-கற்பழிக்க-வந்த-காமாந்தகாரா" பார்வையுடன் முறைத்துக்கொண்டிருந்தாள் மூதாட்டி. சீட்டுக்கடியில் பெட்டி நுழைத்தபோது லேசாக இடித்த கோபம் இன்னும் குறையாமல் டெக்கான் ஹெரால்டுக்குள் மூழ்கி இருந்தார் அவள் மூக்குக்கண்ணாடிக் கணவர்.


ரயில் சினேகத்தின் பேட்டர்ன் தொடர்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் கோபம் மறையும், "நீங்கள் மேல்பர்த்துக்கு" வேண்டுகோள், புளிசாதப் பகிர்வு, நாட்டைக் கெடுக்கும் சக்திகள் பற்றிய கருத்துரையாடல், இறங்குகையில் தொலைபேசி எண் பரிமாற்றம், பின் அவரவர் வழி என்றும் மாறாத வரிசை.


இன்று அதைப் பற்றியெல்லாம் என் கவலை செல்லவில்லை. யாரிடமாவது என் சாதனையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன். இன்னும் கருணை காட்டவில்லை. ஊருக்குச் சென்றதும் முதல்வேலையாக இதை ரோமிங்காக மாற்றவேண்டும். லாப்டாப்பிலும் சக்தி இல்லை


ஏன் இப்படி ஊர்கிறது இந்த ரயில்? இந்த நேரத்தில் வாரங்கல் வந்திருக்கவேண்டாமா?


"நீங்களும் சென்னைக்கா?" டெக்கான் ஹெரால்ட் முடிந்துவிட்டது போல.


இதென்ன கேனத்தனமான கேள்வி. இந்த ரயில் என்ன ஆம்ஸ்டர்டாமா போகிறது?


நக்கலைத் தவிர்த்து சினேகமாகத் தலையாட்டினேன்.


வாய்யா வா! அடுத்த கேள்வி மேல் பர்த்தானே?


"ஹைதராபாத்தில் வேலையா?"


"இல்லை. சென்னைதான். ஹைதராபாத்தில் ஒரு சின்ன ட்ரபுள்ஷூட்டிங் வேலை"


"ஓ சாப்ட்வேரா?" இவர்களுக்கு என்ன புரியும்? டாடா எண்ட்ரியிலிருந்து ராக்கெட் நுட்பம் வரையில் எல்லாவற்றையும் ஒரே கோணிக்குள் அடக்கிய சாப்ட்வேர் தவிர்த்து.


"இப்ப சாப்ட்வேர் மார்க்கெட் டல் போலிருக்கே" டெக்கான் ஹெரால்டில் பிசினஸ் பக்கங்களும் உண்டு போல.


"கொஞ்சம் டல்தான். ஆனால் எங்கள் கம்பெனியில் பிரச்சினை இல்லை. இப்போதுகூட ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட் நடக்குது, இது மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா இந்தியாவோட எகானமியே மாறிடும்"


"ஓ! முடிஞ்சுடுச்சா?"


"ஏறத்தாழ! அதுல ஒரு சின்ன ப்ராப்ளம். அதைச் சரிசெய்யத்தான் நான் வந்தேன். ரெண்டு நாள் முன்னாடிதான் கிளம்பினேன்"


"சரி ஆயிடுச்சா?"


"ஆச்சு! ரெண்டு நாள்லே முடியும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! என் பாஸ்க்கு கூட இன்னும் தகவல் தெரியாது.. அவனுக்கு நிச்சயம் ஏமாத்தம்தான்" இதையெல்லாம் நான் ஏன் இவரிடம் சொல்கிறேன்? யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்துதல் என்னைப்போட்டு படுத்திக் கொண்டிருந்தது..


"பாஸை அவன் இவன்னு சொல்றீங்க?"


"அவன் என் வயசுதான் சார். ஒரு கிரேட் மேலே அவ்ளோதான்.. என்னைப் பழிவாங்கணும்னே ஹைதராபாத் அனுப்பினான்"


"ஒரு களிமண்ணைப் பிடிச்சு பாஸ்னு பேர்வச்சாலும் அப்படித்தான்.. என் மேலதிகாரி என் கல்யாணத்துக்குக் கூட அரைநாள்தான் லீவ் கொடுத்தான். வருவேனோ மாட்டேனோன்னு இவ கண்ணுல தாரைதாரையாக் கண்ணீர்.. மையெல்லாம் அழிஞ்சு பாக்கவே கோரமா இருந்தா.. ஞாபகம் இருக்காடி?"


'டி' இந்த சம்பாஷணையில் மகிழ்ச்சியுறவில்லை. குமுதத்தில் நிலைத்த பார்வையை மாற்ற் யத்தனிக்கவில்லை.


"எனக்கும் ஏறத்தாழ அதே நிலைமைதான். இன்னும் மூணுநாள்லே கல்யாணம். இந்த வேலை ஒரு வாரம் பிடிக்கும்னு எஸ்டிமேட். அப்பவும் என்னை அனுப்பினான்"


"ஓ.. வாழ்த்துக்கள்! நல்லா இருங்க.. இவ்ளோ டைட்டா ஏன் போகணும்?"


"வேலையில இருந்த ஒரு கவர்ச்சிதான் சார்! யாராலயும் முடியலைன்னு கைதூக்கிட்ட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணா வர சாடிஸ்பேக்‌ஷன் வேற எங்கேயுமே கிடையாது சார். அந்த ரிஸ்க் எனக்குப் பிடிக்கும்.."


"ஆமாம். வொர்க்லே டெடிகேஷன் இருக்கறத் இப்பல்லாம் பாக்கவே முடியறதில்லை!"


"அப்படி பொதுவா சொல்லிட முடியாது சார். எங்க டீம்லே உள்ள எல்லா மெம்பருங்களுமே ரொம்ப டெடிகேட்டட் தான் இன்னும் சொல்லப்போனா இந்தக் காலத்துலதான் டெடிகேஷன் அதிகமா இருக்கு"


"நான் பொதுவா பாக்கறதை சொன்னேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. இந்தக்காலத்துப் பசங்களுக்கு பொதுவாவே தகுதிக்கு மீறிய வருமானம். பொறுப்பில்லாம வர பணத்தையெல்லாம் தண்ணியடிச்சு கூத்தடிச்சு கரைக்கறது. இதையெல்லாம்தானே பாக்கறோம்.. அதை வச்சி சொன்னேன்"


"சில பேர் அப்படியும் இருக்கலாம்.. ஆனா என்னைப்போல ஆளுங்க எல்லாம் சம்பளத்தை புத்திசாலித்தனமா இன்வெஸ்ட் செய்யறோம்.. என் பணமெல்லாம் என் கம்பெனியிலேயே இருக்கு மொத்தம் ஷேரா"


"ஓஹோ.. நல்ல விஷயம்தான்" பெரிசு அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டதை உணர்ந்து அமைதியானார்.


மறுபடியும் போனை எடுத்துப் பார்த்தேன். ம்ஹூம்..


"சார் உங்ககிட்ட போன் இருக்கா? ஒரு மிஸ்டு கால் கொடுத்து விடறேன். அவங்க கால் பண்ணுவாங்க"


"அவங்க ன்னா? அவங்களோ?" பெரியவர் கண்ணடிப்பது போல முயற்சித்தார். நானும் அவர் ஆசைப்படி அசடு வழிந்தேன்.


செல்போனை இவ்வளவு பத்திரப்படுத்திப் பார்த்ததில்லை நான். கட்டைப்பைக்குள் ஒரு கஷ்கப்பை அதற்குள் பாலிதீன் உறையில் பவுச். அதற்குள் இருந்த அரதப் பழைய மாடல்.


இரண்டே நிமிடத்தில் போன் வந்துவிட்டது. காத்திருந்திருப்பாள்.


"தூங்கிட்ருப்பேன் தெரியுமா?"


"நீ தூங்கியிருக்கமாட்டே.. அதுதான் எனக்குத் தெரியும்"


"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது. ஒரு டுபாக்கூர் போனை எடுத்துகிட்டு ஹைதராபாத் போகலைன்னு யாரு அழுதா?"


"போன்லே என்ன பிரச்சினை? சர்வீஸ்தானே?"


"நேரு சொன்ன மாதிரி ஐ ஆம் நாட் இண்ட்ரஸ்டட் இன் எக்ஸ்க்யூஸஸ்"


"துரைசாணி இங்கிலீச் எல்லாம் பேசுது"


"போடா இடியட்.. யாரு உன்னை இந்த வேளையில ஊரைவிட்டு போகச்சொன்னது?"


"கடமைம்மா.. கடமை! சோறு போடற கம்பெனிக்கு விசுவாசம்!"


"ஓவர் சீன் ஒடம்புக்கு ஆவாது கண்ணா! என்ன ஆச்சு? வேலை முடிஞ்சுதா?"


"யாரைப்பாத்து என்ன கேள்வி? ராஜா கைய வச்சா.. அது ராங்கா போயிருக்கா?"


"சரி சரி! அளப்பறை தாங்கல! சிவாக்கு தெரியுமா?"


"எங்கே..கடைசி நேரத்துல ப்ளைட் டிக்கட் கிடைக்காம ட்ரெயின்ல வரேன்..

சிக்னலே கிடைக்கலை.. உனக்கே இவ்ளோ லேட்டா பண்றேன்"


"அவனை இந்த நம்பருக்கு கால் பண்ணச் சொல்லட்டுமா?"


"வேணாம் வேணாம்.. ஒரு பெரிசு கிட்ட வாங்கி போன் பண்றேன்..புதையல் காத்த பூதம் போல கற்பு கழியாம வச்சிருக்காரு போனை!"


"அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர்.. என் தம்பிக்கு 10 லட்சம் பேங்க் பேலன்ஸ் காட்டணுமாம். அப்பா வேறெங்கேயோ ட்ரை பண்ணாரு.. நான் தான் சொன்னேன்.. வேணாம்.. ஒரு இளிச்சவாயன் பணத்தை என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுகிட்டிருக்கான்னு"


"அட.. என் பணமெல்லாம் ஷேர்லே முடங்கி இருக்கே அதை மறந்துட்டியா?"


"முட்டாளே.. நீதான் ஒரு பேங்கர் கிட்டே பேசறோம்ன்றதை மறந்துட்டு பேசறே.. அதை ப்லெட்ஜ் பண்ணி ஷார்ட் டெர்ம் லோனா வாங்கித்தர கூட என்னால முடியாதா?"


"ஓக்கே.. அதை நீயே பாத்துக்க.. அப்புறம்?"


"அப்புறம் என்ன? எனக்காக என்ன வாங்கி வரே?"


"என்னையே வாங்கிவரேன்.."


"அதை வச்சு என்ன பண்றது? கால் காசுக்கு பிரயோஜனமா?"


"லைப் டைம் இன்வெஸ்ட்மெண்டும்மா!"


"இப்படியெல்லாம் பயமுறுத்தாதே.. ரீ கன்ஸிடர் பண்ணவேண்டி இருக்கும்"


"அவசர அவசரமா வந்து ட்ரெயின் ஏறறேன்.. கடைக்கெல்லாம் போகநேரமே இல்லடி கண்ணு!"


"கொஞ்ச ஆரம்பிச்சுடுவியே உங்கிட்ட ப்ராப்ளம் இருந்தா"


"அப்புறம்"


பெரிசு தூரமாக இருந்தாலும் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார்.. சில்மிஷ்மான சிரிப்போடு "ஸ்வீட் நத்திங்ஸா" என்றார்.


"ஆமாம்.. கொஞ்ச நாள் போனாதான் நத்திங் இஸ் ஸ்வீட்னு தெரிய வரும்"


புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பேன் வேகமாக சத்தம் மட்டும் போட்டது. ஒருவழியாக தூக்கம் வந்து கலைந்தபோது ரயில் நின்றுகொண்டிருந்தது.


"சென்னை வரலை?"


"சரியாப்போச்சு.. மூணு மணி நேரம் லேட்.. இப்போதான் நெல்லூர் உள்ளே எண்டர் ஆகுது"


பெரியவர் நெல்லூரிலும் இறங்கி எப்படியோ நியூஸ்பேப்பரை மட்டும் வாங்கி வந்துவிட்டார்.


அவர் மூன்றாம் பக்கம் படிக்கத் திருப்பும்போதுதான் பார்த்தேன் முதல்பக்கத்தில் நான் ஓட்டாண்டியான கதையை.

 

blogger templates | Make Money Online