Jul 25, 2006

மீண்டும் அவியல் (25 Jul 2006)

தமிழ் வலைப்பதிவுகளின் குணம், தலைப்புச் செய்திகள், ஊடகங்களின்
முக்கியத்துவங்களை மறுதலிப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். இப்போதும் நமக்கு லெபனானோ, 50 அடி கிணற்றில் விழுந்த சிறுவனோ,
தமிழக பட்ஜெட்டோ, இரட்டைப்பதவி மசோதாவோ முக்கியமான பேசுபொருளாய் இல்லை. சிதம்பரத்திலேயே நொண்டியடிக்கிறது வலைப்பதிவுகள்.

நான் இவை எதையுமே பற்றி எழுதவில்லை, விஷயங்கள் தெளிவாகத் தெரிய இன்னும் கொஞ்சம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உந்துவதால், செய்திகளைப்பற்றி பெரும்பாலும் எழுதுபவனும் இல்லை. இருந்தாலும்..

1. அலுவலகத்தில் புதியதாகச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வாயாடி என்ற பெயர் பெற்றவன். எந்தப்பிரச்சினையையும் சிரிப்போடும் எள்ளலோடும்
அணுகி கிண்டலாகவே பேசுபவன், நேற்று அமைதியாக இருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. விசாரித்தேன்.

"அடுத்த வாரம் ஊருக்கு வெகேஷனில் போகிறேன்"

"மகிழ்ச்சியான விஷயம்தானே, அதற்கு ஏன் சோகமாக இருக்கிறாய்?"

"ஊர்! நான் பார்த்து, பழகி, புழங்கிய இடங்கள் அனைத்தையும் கடந்த வாரம்
டிவியில் பார்த்துவிட்டேன். இப்போது எதுவும் இல்லை. என் வீடு இருக்கிறதா எனத் தெரியவில்லை! 12 நாள் குண்டுவீச்சில் 25 வருடங்கள்
பின்னோக்கிச் சென்றுவிட்டது என் நாடு" அழவே தொடங்கிவிட்டான் அந்த
லெபனான் பட்டதாரி.

யார் முதல், யார் பின்னால், எவன் தவறிழைத்தவன், எவன் வெறியன் என்ற கேள்விகளுக்கு அவன் அழுகைக்கு முன் எந்த அர்த்தமும் இல்லை. சம்மந்தப்பட்ட விஷயங்களைத் தேடி, படித்து, தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆவல் வெறும் Academic ஆகத்தான் இருக்கப்போகிறது. என்ன பிரயோஜனம்?

2. நம்பிக்கையை அளித்ததாம் 60 அடிக்கிணற்றுச் சிறுவன் மீட்பு. குண்டுவெடிப்பு, போர், அரசியலாரின் அக்கப்போர் ஆகிய நம்பிக்கை இழக்க வைக்கும் தினசரி நிகழ்வுகளுக்கிடையே, ஊடகத்துக்கு சமீபகாலத்தில்
கிடைத்த மனித ஆர்வக் கதை (Human Interest Story என்பதை இப்படி மொழி
பெயர்க்கலாமா?)- விடுவார்களா? கிணற்றுக்குள் கவரேஜ், பிரார்த்தனைகளுக்கான வழிமுறைகள், சுற்றி இருந்தவர்கள்
இல்லாதவர்களிடம் பேட்டிகள் என்று அமர்க்களப்படுத்தி
விட்டார்கள். நிகழ்வு முடிந்ததும் எனக்குத் தோன்றிய ஆறுதல் ராணுவம்
மற்றும் தீயணைப்பு வீரர்கள் பற்றியது! ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால்
கிழிகிழியெனக் கிழித்திருப்பார்கள். The press giveth and the press taketh away!

3. தமிழில் படத்துக்குப் பெயர் வைத்தால் வரிவிலக்காம். "மாமனாரின் இன்ப வெறி"க்கும் வரிவிலக்கு உண்டா?

4. இந்த இரட்டைப்பதவி விவகாரத்தில் காட்டுகின்ற ஒற்றுமையை நம் கட்சிகள் மற்ற விஷயங்களிலும் காட்டியிருந்தால்!

முக்கியத்தகவல்

எனக்கு ஒரு மாதம் விடுமுறை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தாய்த் தமிழ் நாட்டு மண்ணை மிதிக்கப்போகிறேன். வரவேற்பு வளையங்கள் எல்லாம் வேண்டாம். சென்னையில் இருந்து 1 ரூபாய் தொலைபேசியில் அழைக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் (காஷ்மீர் வரைக்கும் தானே?)
அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தங்கள் தொடர்பு
எண்ணை sudamini AT gmail DOT com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால்
நிச்சயம் தொடர்பு கொள்வேன். முடிந்தால் நேரிலும் சந்திப்பேன்.

பினாத்தலுக்கு முழு விடுமுறை என்று சொல்லிவிட முடியாது. ஆயிரம் ப்ரௌஸிங் மையங்கள்! எல்லாவற்றிலும் கலப்பை இல்லாவிட்டாலும்
சுரதா உதவ முடிந்தவரை தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டேதான் இருப்பேன்!

Jul 22, 2006

ஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி (22 Jul 2006)

பாபாவின் இந்தப்பதிவும் , விக்னேஷின் இந்தப்பதிவும், பி கே சிவகுமாரின் இந்தப்பதிவும், ஆறு வார்த்தைக் கதைகளை அறிமுகப்படுத்தி, பின்னூட்டங்களாக பல ஆறு வார்த்தைக் கதைகளும் இருப்பதைப் படித்திருப்பீர்கள்.

வார்த்தைச் சிக்கனத்தில் ஆசை கொண்டவன் நான். (ஆசைன்னுதான் சொன்னேன் - செய்வேன்னு சொன்னேனா?); இந்த புது விதி என்னைக்கவர்ந்தது.

புதிதாக ஆறுவார்த்தைக் கதை எழுதுவதை விட, என்னுடைய பழைய, புதிய சிறுகதைகளில் சிலவற்றை ஆறு வார்த்தைகளுக்குள் சுருக்க முடியுமா என முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்.


என் முதல் சிறுகதை : கடன்வாங்கிக் கல்யாணம், வட்டிகட்ட அருளுவேன், வாருங்கள் திருப்பதி

இரு சம்பவங்கள்: தொழிலில் அடிபட்டால் உயிர்கொடுப்பேன், மதமென்று சண்டைவந்தால் உயிரெடுப்பேன்


திறமைக்குப் பல முகம்: கடற்கரைக் காலையில் ஆயிரம் திறமைகள் - சுனாமிக்குத் தெரியுமா?

மகளிர் தினச் சிறப்புச் சிறுகதை: பெண்ணிடம் தோற்றால் ஜெயிப்பது சுலபம் - பரப்பிடு வதந்தி.

தேர்தல் 2060: கணினி யுகத்திலும் தேர்ந்தெடுக்கக் குழப்பம் - எடுத்தான் நாணயத்தை

சீட்டு மாளிகை: விபத்தின் கவலை இருப்பவன் படுவான் - இறந்தவன் இருந்தால்?

அசைவு: மாளிகை வாழ்வு ராஜபோகம் - ஆட்சிமாறினால் அடிமையாகவும் வாய்ப்பு.

எப்படி இருக்கு?

Jul 20, 2006

பயோரியா பல்பொடியும் தமிழின் எதிர்காலமும்(20 Jul 06)

சிதம்பரம் சர்ச்சை, பிளாக்ஸ்பாட் தடை, 23ம் புலிகேசி போன்ற பெருஞ்சுழல்களுக்குள் ஒரு சின்னக்குழந்தை தவழ்ந்து வருவது யாருக்கும் தெரியவில்லையா?

ஆம், 2006 ஆம் வருடத்தின் ஜூலை மாதம் 20 தேதிகளைக் கடந்துவிட்டது.

ஆச்சரியம் ஆனால் உண்மை!

நாளைக்காலை.. ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..

எதிர்பார்த்திருப்பீர்களா என்று தெரியாது.

குறைந்தபட்சம் 76 பேரின் எதிர்காலம் நாளை முதல் நிச்சயிக்கப்படும் என்பதை பலர் மறந்திருக்கலாம்; பினாத்தலாரும் மறக்க முடியுமா?

ஆம் தோழர்களே.. நாளைக்காலை ஜூலை 21 தேதி ஆகிவிடும்.

தேன்கூடு - தமிழோவியம் போட்டியின் வாக்கெடுப்பு நாளை ஆரம்பிக்கிறது. (இதுக்குதான் இவ்ளோ பில்ட்-அப்பா?)

போனமுறை மூன்றாவது கண் போட்டிக்கு வந்த படைப்புகளை அழகாக விமர்சித்திருந்தார்கள். இந்த முறை ஜகா வாங்கிவிட்டார்கள்.

எனக்கு நேரமும் பொறுமையும் (வெட்டிதானே!) இருந்ததாலும், 36 படைப்புகள் மட்டும்தான் என்பதாலும் அறிமுகம் கொடுக்க முடிந்தது.

இளவஞ்சிக்கு நிச்சயம் கஷ்டமாகத்தான் இருக்கும் - தற்போதுவரை 76 படைப்புக்கள்! இன்னும் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, என் படைப்புகளுக்கு மட்டும் நானே அறிமுகம் கொடுக்க முடிவெடுத்துவிட்டேன். இதர படைப்பாளிகளும் இதைத் தொடரலாம்.

14. சீட்டு மாளிகை - நண்பன் மரணச்செய்தி கிடைத்தும் அதை வேறெங்கும் அறிவிக்க முடியாதவனின் மன ஓட்டம்.

42. அசைவு - என் முதல் சரித்திரக்கதை. மெழுகு பொம்மைகளில் பிரபலமான மேடம் துஸ்ஸாட் (தூஸே என்பதுதான் உச்சரிப்பாம்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில ரத்தப்பக்கங்கள்.

படித்துப்பார்த்து ஓட்டளிக்க மறவாதீர்கள். (லிங்க் தவறாக இருந்தால், பின்னர் சரி செய்துவிடுகிறேன்)

பிகு 14 -31 தான் பயோரியா பல்பொடி.. நமக்கு ரொம்பக்கிட்ட 14-42 வந்துட்டதாலே அதைப்போட்டேன். இங்கே எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆரம்ப எழுத்தாளர்கள்தானே, அவர்களை ஊக்குவித்தால் தமிழின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமில்லையா? (டேய் பினாத்தல் - கைக்கு வந்ததை எழுதிட்டு அதை நியாயம் வேறு படுத்தறயா?)

Jul 18, 2006

ப்ளாக்ஸ்பாட் தடை - தாண்டுவது எப்படி? அனுபவஸ்தனின் Tips

ஒண்ணும் பெரிய பிரச்சினையில்லை, நான் ரொம்ப நாளாவே இந்தப்பிரச்சினையில அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதுனால எல்லாம் பதிவுதான் போடாம விட்டுட்டேனா, இல்லை உங்களை கஷ்டப்படுத்தாமதான் சும்மா இருக்கேனா?

பதிவுகளைப் படிக்க:

1.எனக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பிச்ச உடனே நான் முதல்லெ பார்க்க ஆரம்பித்தது, தமிழ்மணம் PDF சேவையைத்தான். இடுகைகள் பிரிவுக்குப் போய், சென்ற நாட்கள் என்று தெரிவுசெய்து, தேவையான பதிவுகளைப் பிடித்து, மென் நூலாக்குக என்று கட்டளையிட்டால் PDF கோப்பு கிடைக்கும்.

இதில ரெண்டு பிரச்சினை - பின்னூட்டங்கள் PDFஇல் வராது. (பெரும்பாலான பதிவுகளை விட, பின்னூட்டம்தானே சுவாரஸ்யம்!), ரெண்டாவது, பல பதிவுகளில் PDF Creation Not enabled னு வரும். அவர்கள் அடைப்பலகையை மாற்ற மாட்டேன்னு ஒரே அடம்!

2. அடுத்து எனக்கு பேருதவியாக இருப்பது தேன்கூட்டின் டைனமிக் பாண்ட் சேவை. ஒவ்வொரு இடுகைக்கு பக்கத்திலேயும் A+ என்று ஒரு Zoom படத்துடன் ஒரு குறியீடு தெரியும். அதைக்கிளிக்கினால் எல்லாப் பதிவுகளையும், பின்னூட்டங்களோடு பார்த்துவிடலாம். அருமையான சேவை, பெரும்பாலான தமிழ்ப்பதிவுகள் தேன்கூட்டில் திரட்டப்படுவதால் எல்லாவற்றையும் படித்துவிட முடிகிறது.

3. அன்னியலோகம் அளிக்கும் freedom காலத்தின் தேவைக்காக உடனடியாகச் செய்த சேவை. சில பதிவுகள் தெரிவதில்லை என்பது குறைதான் என்றாலும், ரமணி அதையும் சரி செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுலேயும் பின்னூட்டம் தெரியறதில்லை:-(

4. Google Translate பக்கத்தை Favoutites-இல் சேமித்துக்கொள்ளுங்கள், அங்கே german to English என்று Translate செய்தால், தமிழ் தமிழாகவே தெரிகிறது. ஆனால், formatting ஒரு கடி. நீளமான வாக்கியங்களை எலிக்குட்டியால் தொடர்ந்து ஓடுவதற்குள் மூச்சிறத்துவிடுகிறது. இளவஞ்சி எதாவது பதிவு போட்டால் ஒரு வரி ஐந்து ஸ்க்ரோல் (Horizontal) வரும்:-))

எனவே படிப்பதில் பிரச்சினை கிடையாது.

பதிவுகளை இட:

ஒரே வழிதான். உங்கள் பிளாக்கர் செட்டிங்கில் மெயில் என்ற தெரிவில், உங்கள் யூஸர்னேமுடன், ஒரு குறியீட்டைச் சேர்த்து ஒரு மெயில் ID உருவாக்கலாம்.(உதாரணம்: penathal.suresh@blogger.com ) எந்த மெயில் சேவை மூலமும், அந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் பதிவாகிவிடும். கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. மெயில் ஐடி உருவாக்கும் இடத்தில் Publish என்ரு ஒரு Check Box இருக்கும். அது செக் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அனுப்பும் பதிவு Drafts-இல் போய் அமர்ந்துகொள்ளும்.
2. FW, Re போன்ற பதங்கள் உங்கள் Subject Line-ல் இருந்தாலும் பதிவாகாது.
3.படங்கள், பிளாஷ் போன்றவை இட முடியாது.

பின்னூட்டமிட:

Blogger.com தடை செய்யபடாவிட்டால், பின்னூட்டத்தின் லின்க்கை தேன்கூடு / Translate சேவை மூலம் பெற்று, அதை தனி ஜன்னலில் திறந்து செய்யலாம். இந்த லின்க், தமிழ்மணத்தில் இன்றிலிருந்து வந்துள்ள புதிய 'அ' - அன்னியலோகம் லின்க்கிலும் கிடைக்கிறது, Blogger.com தடுக்கப்பட்டிருந்தால் வேறு வழியில்லை, மெயில் மூலம் அனுப்பலாம், நம்பகமான நண்பர்களுக்கு மட்டும்.

பின்னூட்ட மட்டுறுத்தல்

அன்னியலோகம் சேவையை Blogger.com தடை செய்யப்பட்டிருக்காவிடில் உப்யோகப்படுத்தலாம். Blogger.com தடுக்கப்பட்டிருந்தால் வேறு வழியில்லை. இதனால் நான் படும் பாடு கொஞ்சமா நஞ்சமா!

எல்லாமே கஷ்டமாக இருந்தால், படிக்காமல் விட்ட புத்தகங்களையும், குழந்தைகளின் வீட்டுப்பாடங்களையும் கவனிக்கலாம். வெளிநாட்டுத்தமிழர்கள் போடும் சண்டைகளை கொஞ்ச நாள் கழித்து, பிரச்சினைகள் தீர்ந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம்.

பி கு: நான் கூட தொழில்நுட்பப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை:-))

Jul 17, 2006

அரசன் 23ம் புலிகேசி - இம்சை

தமிழன் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டான் என்ற வசனத்தை இந்தியாவில் பலமுறை பிரயோகித்திருக்கிறேன். திரைப்படம் பார்க்கவென்று கிளம்பிய பிறகு கேவலம் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணங்களுக்காக திரும்புவதா? எப்படியும் டிக்கெட் - அல்லது ஏதேனும் வேறு படமாவது!
 
துபாயில் இம்சை அரசன் வெளிவந்துவிட்டான் என்ற செய்தி கேட்டவுடன் தொலைபேசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய அழைத்தால், ஆச்சரியம்! மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்கிறார்கள்.(இம்சை எண் 1) "கிட்டாதாயின் வெட்டென மற" என்பதெல்லாம் நமக்குத் தெரியாத மேட்டர். தியேட்டருக்குப் போய் பார்த்துக்கொள்ளலாம் - ஆமாம், துபாயில் பிளாக்கில் டிக்கட் கிடைக்குமா?
 
தியேட்டர் வாசலில் 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின், எதிர்பார்த்தவர்(ள்?) வராத சோகத்தில் டிக்கட்டை கவுண்டரில் திருப்பிக் கொடுக்கப்போனவர்களை மடக்கிப் பிடித்து வெற்றிவாகை சூடினேன். தியேட்டருக்குள் நுழைந்ததும்தான் தெரிந்தது, ஹவுஸ்புல்லான ரகசியம்.. தியேட்டர் ரொம்பச் சின்னது! 9 வரிசை மட்டுமே.. முதல் வரிசையின் ஒரு ஓரத்திலிருந்து பார்க்கும்போது வடிவேலு தெரிகிறார், தூரத்தில் இருக்கும் நாசர் தெரியவில்லை.. (இம்சை எண் 2).
 
படம் ஆரம்பித்து விட்டிருந்தது. பக்கத்தில் ஒரு குண்டான மீசைக்காரர் அமர்ந்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். முன்கதை கேட்கும் உத்தேசத்தை உதறினேன். (இம்சை எண் 3)
 
இப்படிப்பட்ட இம்சைகளை மீறி, முதல் பாதியின் நகைச்சுவையை ஓரளவு ரசிக்க முடிந்தது. இரண்டாவது பாதி, தாங்கவே முடியவில்லை. ஏன்?
 
1. டிஸ்கிளெய்மரில் "ப்ளுட்டோ, நெப்டியூனில் உள்ளவர்கள்", அந்தப்புரம் "24 மணிநேர சேவை", "உன் சிரிப்பில் நாங்கள் ஏழைகளையே பார்க்கிறோம்" போன்ற வரவேற்புத்தட்டிகள் போன்றவை சிம்புதேவனின் எழுத்து நகைச்சுவையை வெளிப்படுத்தினாலும், வசன நகைச்சுவை போதாது. செந்தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் கையைப்பிடித்திருக்கலாம். "ஆக்சுவலா", "இன் பேக்ட்" போன்ற வழக்கமான சொல்லாடல்களைத் தவிர்த்த கிரேசி மோகன் நிச்சயமாக இந்த ஆள்மாறாட்டக் கதைக்கு அருமையாக வசனம் எழுதியிருப்பார். வசன நகைச்சுவை என்பது காவலாளிகளுக்கும், வேலைக்காரர்களுக்கும் அளிக்கும் தண்டனைகளோடு நின்று விடுகிறது.
 
2. வீரபாண்டிய கட்டபொம்மன், எட்டையன், நிக்ஸன் என்று பிரபலப் பெயர்களை வைத்து கதைக்கு ஒரு காலம் கொடுத்திருக்கும் இயக்குநர், நாட்டைத் திருத்தும் மன்னன், அக்காமாலா கப்ஸி உற்சாக பானங்கள், குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி போன்ற சிந்தனைகளில் எல்லாம் கால தேச வர்த்தமானங்கள் பற்றிய லாஜிக்கைப் பற்றி சற்றும் கவலைப்படாதது ஏன்? காமெடிக்கதையில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான், ஆனால் இவர் சீர்திருத்த சிந்தனைகள்(?!) எதுவும் காமெடி இல்லையே.
 
3. இசையமைப்பாளர்கள் சரியான தேர்வுதான். "1960ல வந்தா மாதிரி ஒரு பாட்டு வேணும்" என்று சொன்னால், "அதுக்கென்ன, அதையே போட்டுடுவோம்" என்று சொல்லும் தேவ வாரிசுகள்! ஆனால், அதிகமான பாடல்கள், அத்தனையும் காப்பி, அதிக வித்தியாசமில்லாத படமாக்கம் என்று படத்தின் வேகத்தை நாசம் செய்கின்றன. பின்னணி இசை இன்னொரு இம்சை!
 
4. கதை உத்தமபுத்திரனின் ரீபிரிண்ட் என்றால் வடிவேலு (உக்கிரபுத்தன்) நாடோடி மன்னனின் ரீபிரிண்டாக சாகடிக்கிறார். நகைச்சுவை இருந்தால் இதை Spoof எனச்சொல்லலாம், இல்லாததால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது. புலிகேசியாக வடிவேலு நன்றாகவே செய்திருந்தாலும், வடிவேலுவின் பிராண்ட் நகைச்சுவை (அடுத்தவரிடம் அடிவாங்கி அவ்வ்வ்வ்வ்வ் என்று அழுதல்)க்கு ஸ்கோப் இல்லாததால் க்ளிக் ஆகவில்லை.
 
5. முக்கியமான பாத்திரங்களுக்கு நகைச்சுவை நடிகர்களைப் போட்டுவிட்டால் மட்டுமே நகைச்சுவைப் படம் ஆகிவிடாது. இளவரசு தவிர வேறு யாருக்குமே நகைச்சுவை வசனங்களோ காட்சிகளோ இல்லை. இரண்டு காட்சிகளில் ஒரு வசனமும் பேசாமல் மூன்று முறை அழுவதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தியா தேவை?
 
6. புலிகேசியின் பாத்திரமே, நாயகன் தாத்தாவைப்போல "நல்லவனா, கெட்டவனா" என்று தெரிவதில்லை. மாமா வளர்ப்பில் நாசமான நல்லவனா திருடர்களிடம் பங்கு கேட்கத் தனியாகச் செல்கிறான்? சாதிச்சண்டை மைதானத்தை தன்னிச்சையாக அறிவிக்கிறான்? இந்தக்காட்சிகளில் நாசரின் பங்கை அதிகரித்திருக்க வேண்டும்.
 
7. அரங்க அமைப்புகளிலும் காட்சிகளிலும் சுத்த நாடகத் தனம். வெளிப்புறக்காட்சிகளில் ஏன் அந்த செம்மண் எபக்ட்? ரேவா கலரை ஞாபகப் - படுத்தவா? கரடி ரொம்ப அமெச்சூர்தனமாக இருந்தது.
 
இருந்தாலும், சிற்சில காட்சிகளை ரசிக்க முடிந்தது.
 
பல லேயர்களில் கிண்டல் அமைந்திருக்கும் ஜாதிச்சண்டைக் காட்சி -  ஜாதிக்கலவரங்களைக்கிண்டல், சமத்துவபுரங்களைக் கிண்டல், கோக் பெப்ஸி ஸ்பான்சர்ஷிப்களைக் கிண்டல், கிரிக்கெட் விளையாட்டைக்கிண்டல், அங்கே தெரியும் பேனர்களில் "டங்குவாரை அத்துரு" போன்ற கிண்டல் - எல்லாவற்றையும் தொட்டுச்செல்வதில், இயக்குநர் திறமையுள்ளவர் என்பதை நிரூபிக்கிறார், எதிர்பார்ப்புக்களையும் ஏற்றிவிடுகிறார்.
 
மாமா மன்னா, புண்ணாக்கு மன்னா, மூடா போன்ற கவிதை வரிகள், விளக்கத்தை முன்கூட்டியே கணித்துவிட முடிந்தாலும், சிரிக்க வைத்தன.
 
ஆனால், இந்தச்சில காட்சிகளுக்காக இதை நகைச்சுவைப்படம் என்று விளம்பரம் செய்திருப்பது ரொம்பவே ஓவர்.
 
கூட்டிக்கழித்துப் பார்த்தால் இம்சை மட்டுமே மிஞ்சுகிறது.

Jul 15, 2006

சினிமா ரசிகர்களில் ஒரு கோயிஞ்சாமி

இப்பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ரொம்பவே யோசித்தேன். யோசனையில் கிடைத்த முத்துக்கள்:

1. அன்புள்ள தமிழ்ப்பட தயாரிப்பாளர்களுக்கு

2. திரை ஊடகத்தில் உள்குத்து?

3. விக்கிரமன் பார்வைக்கு

4. பாசிஸப் படத்தயாரிப்பாளர்களின் பகல்வேஷம்

ஆனால், சூட்டைத் தணிக்க வேண்டும் என்பதால் இந்தத் தலைப்பே போதும் என்று முடிவெடுத்துவிட்டேன்!
________________________________

ஏவிஎம்மின் பிரியமான தோழி படம் பார்த்தேன். ரசித்தேன் என்று சொன்னால் ஆமாய்யா - அது நிச்சயமா மிகைதான் ஆகும். பார்க்க வந்திருக்கும் அப்பாவியின் மீது அளவு கடந்த வெறுப்பும், அவன் அறிவின் மீது தீவிர அவநம்பிக்கையும் கொண்ட இயக்குநர்களில் முதலிடம் விக்கிரமனுக்கு கேள்வி ஏதும் கேட்காமல் அளித்துவிடலாம். நடிப்பில் வராத ரியாக்ஷனை இசை மூலம் சவட்டி எடுத்து சோகத்துக்கு லாலாலா, பெருஞ்சோகத்துக்கு ல லாலா, நகைச்சுவைக்கு டுர்ர்ரொய்ங் என்று ஸ்வர சேமிப்பு செய்யும் எஸ் ஏ ராஜ்குமார், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், நிரோஷா, மதன்பாப் குழுவினரின் தரமான (அசிங்கம் சிரிப்பு எந்த எழவும் இல்லாத என்று படிக்கவும்) நகைச்சுவை. ஜோதிகா, ஸ்ரீதேவி மாதவன் வினீத் ஆகியோரின் வாழ்நாள்-கீழ் நடிப்பையும் ஒன்றே சேர்த்து, இந்திய கிரிக்கெட் சங்கத்தின் மானத்தைக் கப்பலேற்றி ஏவிஎம் தயாரித்த காவியம்.. இந்தப்படம் ஓடியிருந்தால் தமிழ் ரசிகனைக் காப்பாற்ற யாராலும் முடியாது!

தமிழ் ரசிகனின் ரசனையைப்போல சந்தேகோபஸ்தமான வஸ்து வேறெதுவும் இல்லை என்பது என் திண்ணமான நம்பிக்கை. சமீப கால்ங்களில் வெளிவந்து, வந்த வேகத்தில் உள்ளே சென்ற சில படங்கள், பெரும்பாலோரின் கண்பார்வையில் படாவிட்டாலும், ஓடியிருக்கக்கூடிய, ஓடியிருக்கவேண்டிய படங்கள். வியாழக்கிழமை சாயங்காலம் திரைப்படம் பார்க்காவிட்டால் கை நடுங்கும் என்பதால், எல்லாப்படங்களையும் (துளசி அக்கா அளவுக்கு இல்லாவிட்டாலும்) பார்த்துவிடுவேன் என்பதால் என் கண்பார்வைக்கு பொதுவாக விடியோ ரைட்ஸ் வந்துவிட்ட எந்தப்படமும் தப்ப முடியாது.

1. உள்ளம் கேட்குமே - ஷாம், ஆர்யா, லைலா, அஸின், பூஜா கல்லூரித்தோழர்கள் சில ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் வழக்கமான கதை என்றாலும், அனைவரின் நடிப்பும், ஒளிப்பதிவும், தெளிவான திரைக்கதையும், அழகான பாடல்களும், ஜீவாவின் தேர்ந்த இயக்கமும்...படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்பதைத் தவிர எந்தக்குறையும் எனக்குத் தெரியவில்லை! நான் அஸின் ரசிகனானது இந்தப்படத்திற்குப்பின் தான் என்பது கூடுதல் தகவல்.

2. கண்ட நாள் முதல் - ப்ரியா Vயின் படம். பிரசன்னா, லைலா,கார்த்திக் - மூன்றே கேரக்டர்கள் - 20 வருடப்பகை பாராட்டும் (கன்னத்தில் கடித்துவிட்டாளாம்) பிரசன்னாவும் லைலாவும், லைலாவிற்கு கார்த்திக்கை நிச்சயம் செய்யும் நேரத்தில் மீண்டும் சந்தித்து, மேலும் சண்டை போட்டு எப்போது காதலாகிக் கசிந்துருகப்போகிறார்கள் என எதிர்பார்க்க வைக்கும் சாதாரணக்கதை என்றாலும், மெல்லிய நகைச்சுவை இழையோடும் இயல்பான திரைக்கதை, முக்கியமாக பிரசன்னாவின் நடிப்பு (ஏனோ இந்தப்பையன் பேசப்படுவதில்லை!), யுவன் இசை, பாடல் வரிகள், கிளைமாக்ஸிலும் சொதப்பாத முடிச்சு.. ஏன் ஓடவில்லை?

3. அழகாய் இருக்கிறாய் - பயமாய் இருக்கிறது - விஜய் மில்டனின் முதல் படம். பார்த்திபன் பிராண்டு கிண்டலுடன் ஆரம்பித்து - தமிழ் சினிமால காதலியத் தேடி சென்னை கிளம்பறவங்க கொஞ்சம் கொறைஞ்சிருந்தாங்களேப்பா - போன்ற டயலாக்குகள், காட்சிக்கு காட்சி கிராபிக்ஸை நகைச்சுவைக்காகவே அழகாக உபயோகப்படுத்தி, காதலைப்பிரிப்பதற்கு ஆயிரம் சதி செய்யும் முதல் பாதி வேகமாகவே ஓடுகிறது.. முரளியின் காபிரைட் சொல்லாத காதலை இரண்டாம் பாதில் உபயோகப்படுத்தி சொதப்பாமல் இருந்திருந்தால் மிக நல்ல நகைச்சுவைப்படமாக வந்திருக்க வேண்டியது.

சித்திரம் பேசுதடி போன்ற படங்கள் ஒரே பாடலுக்காகவும், வரிசையாக நார்த் மெட்ராஸ் படங்களுக்கிடையில் வந்த குடும்பப்படம் என்பதால் பாரிஜாதமும் ஹிட் ஆகும்போது, இப்படங்கள் வெற்றி பெறாததற்கு எந்தக்காரணமுமே எனக்குத் தெரியவில்லை.

சூடு தணிக்க (15 Jul 06)

பாலச்சந்தர் கணேசன் சொன்னது போல, தமிழ் வலைப்பதிவுகள் சூடாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அவர் யோசனையான சில பதிவுகள் அவற்றை ஆற்றிவிட முடியாது. காரணங்களாக நான் கருதுவது:
 
1. என் கருத்துதான் சரி, எதிரில் இருப்பவன் கருத்து கேட்கக்கூட லாயக்கற்றது. ஏனெனில் அவன் மேற்படி இனத்தான், மொழியான், கி முவில் ஒரு குறிப்பிட்ட செயல் செய்தான் என்ற எண்ணம் பெரும்பாலோனோர்க்கு இருக்கிறது.
 
2. இணையம், சுதந்திரம் தருகிறது, அதே நேரத்தில் அவசரத்தையும் தருகிறது. பதிவிட்ட அடுத்த நொடி பின்னூட்டம், பின்னூட்டமிட்ட அடுத்த நொடி பதில் எதிர்பார்த்தல், பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படல் ஒரு பெரிய குற்றமாக எண்ணுதல்..
 
3.வாய்ச்சொல் வீரத்தை சில நேரம் நிஜ வீரமாக, மற்றவர்கள் அல்ல, சம்மந்தப்பட்டவர்களே நினைத்துக் கொள்ளுதல்.
 
4. அவன் சொன்னது எனக்கு வலித்தது, நான் சொல்லப்போவது அவனைப் புரட்டிப்போட்டால்தான் ஆத்திரம் தீரும்.
 
5. Everything is fair in love and war - இதைச் சொன்னவனையே தேடிக்கொண்டிருக்கிறேன், இடைவேளையில் இந்தச்சித்தாந்தத்தை பதிவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் வேறு யாரோ நீட்டிவிட்டார்கள்!
 
6. எழுத்தாளன் (இலக்கியவாதி?) எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட் நிலையில், தன் நிலையைக் கேள்வி கேட்பவரை எதிர்த்து கோபப்பட்ட நிலையில் மட்டுமே இருக்கவேண்டும் என்று யார் சொன்னது?
 
மேற்படி வியாதிகளை அண்ட விடாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டால் சூடு தானாகவே தணிந்துவிடும். இதுவும் கடந்து போம்!
 
அதற்கான தடுப்பூசியாக, நான் ரசித்த சில நகைச்சுவை வசனங்கள்:
 
1. ஓ நிக்ஸன் துரையே, ஒரு கரடியே காரி உமிழ்ந்த எங்கள் மன்னன் உன்மீது காரி உமிழ்ந்ததால் உன் நிலை இன்னும் கேவலமாகிவிட்டது (இம்சை அரசன் 23ம் புலிகேசி)
 
2. யாராச்சும் மீன் பிடிக்கிற கரண்டி வச்சுருக்கேளா?
 மெதுவாப் பேசுடா, சம்மந்தியாத்துகாரா காதுல விழுந்திடப்போகுது..
 சாம்பார்லேயே விழுந்துடுத்து, காதுல விழுந்தா என்ன? (மைக்கேல் மதன காம ராஜன்)
 
3. டேய், என் பையன் ஒரு டாக்டரா, எஞ்சினியரா, வக்கீலா வருவான்னு எதிர்பாத்தேன் டா
ஆனாலும் உனக்கு பேராசை, அதெப்படி ஒரே மகன் டாக்டர், எஞ்சினியர் வக்கீல் எல்லாமா வர முடியும்? (ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி)
 
4. செத்தவனக்கொன்னது அம்பு.. அம்பு எங்கிருந்து வரும்? வில்லு, லாரியில பின்னாலேயிருந்து பாடினது பாட்டு. வில்லு - பாட்டு - வில்லுப்பாட்டு,  பாடினவன் யாரு - ராஜா! பிடிச்சுட்டேன் - எல்லாத்தையும் பிடிச்சுட்டேன்!
சார் - நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார் (அபூர்வ சகோதரர்கள்)
 
5. அடே கோமுட்டித் தலையா, கோழி குருடா செவிடான்றதாடா முக்கியம்? குழம்பு ருசியா இருக்குதான்னு பாருடா! (வைதேகி காத்திருந்தாள்)
 
6. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித் தானடா உடம்பு ரணகளமா இருக்கு (வின்னர்)
 
7. மல்லாக்க படுத்தா பசுமாடு, மவுண்ட் ரோட்லே மழை பெஞ்சா சுடுகாடு ன்னு அன்னிக்கே காக்கைச் சித்தர் சொன்னதத்தான் நான் சொல்றேன் (பாளையத்தம்மன்)
 
சீனை நல்லா யோசிச்சுப்பாத்து சிரிங்க!
 
 

Jul 13, 2006

உமர்

மதி கந்தசாமியின் பதிவிலும், ஈ- வீதியில் பதிவில் இருந்தும் தான்  உமர் என்ற ஒருவர் இருந்தார், அவர் மறைந்தார் என்பதை அறிய முடிந்தது.
 
இன்று சுலபமாக கலப்பை கொண்டு தமிழ் உழ முடிகிறது, கவிதை எழுத முடிகிறது, ஆபாசம் பேச முடிகிறது, தனிநபரைத் தாக்க முடிகிறது, பதிவிட்ட சில மணிநேரங்களுக்குள் நூறும் ஆயிரமும் ஹிட் பார்க்க முடிகிறது என்ற சௌகர்யம், கணினியில் தமிழ் என்பது ஒரு கனவாக இருந்த அண்மை இறந்த காலத்தை மறக்க வைத்து விடுகிறது.
 
கையால் எழுதி ஸ்கேன் செய்த தமிழ் எழுத்துக்களில் இருந்து,
என் கணினியில் தெரிவதை ஸ்கிரீன்ஷாட்டாக இன்னொரு கணினிக்கு மாற்றிப் படித்து,
டிஸ்கி புஸ்கி என்ற தரங்களில் கஷ்டப்பட்டு
இன்று யூனிகோட் என்ற சுலபத்துக்கு அடிமையாகி இருக்கிற வேளையில்
 
எத்தனையோ இளைஞர்கள் இந்த ஒவ்வொரு படிக்கல்லுக்காகவும் சொந்த நேரத்தைச் செலவு செய்திருக்கிறார்கள், பிரதிபலன் பாராமல் தமிழுக்காய் உழைத்திருக்கிறார்கள் என்பதும் நமக்கு மறந்து விடுகிறது.
 
நூறு கவிதை எழுதிய கவிஞனைவிட, ஆயிரம் கதை எழுதிய எழுத்தாளனைவிட, எல்லாவற்றையும் தமிழில் அலசும் ஆராய்ச்சியாளர்களைவிட, திரை மறைவிலே பெரும் வேலை செய்திருக்கும் இளைஞர்கள் தமிழுக்கு அதிகம் சேவை செய்தவர்கள், மெல்லத் தமிழினிச் சாகும் என்ற வசை எய்தாமல் காத்தவர்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
 
அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக.

Jul 12, 2006

வீரம்! (12 Jul 06)

வரிசைக்காய் காத்திருந்து
காலைக்கடன் கழித்து
சைக்கிள் சங்கிலியின்
எண்ணெய்க்கு ஏங்கும்
நாதம் கேட்டு
இரு இஞ்ச் இடைவெளியில்
உள்ளே புகுத்தி
என்னொத்தோர்
உடனுழைக்க
மின்வண்டியில் புகுந்து
ஒரு புள்ளி காலுக்கு,
ஒரு புள்ளி கம்பியில்
தொங்கும் வாருக்கு ஈந்து
பயணச் சர்ச்சையில்
உலகம் அறிந்து
நிறுத்தம் வந்ததும்
சுவாசத்தைத் தொடர்ந்து
எனக்கான கோப்புகளில்
உலகம் மறந்து
மதியப்பசியில்
அவசர ரொட்டி உண்டு
கடிகாரம் பார்த்திருந்து
மீண்டும் ரயிலேறும்
 
என்னைக்கொல்வதா
உந்தன் வீரம்?

Jul 11, 2006

அசைவு (தேன்கூடு போட்டிக்கு) (11 Jul 06)

முன்குறிப்பு: இந்தக்கதையில் கொஞ்சம் ரத்தம் அதிகம். கண்டிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட, இருதய பலவீனம் இல்லாதவர்களுக்கு மட்டும். மென்மையான உணர்வுள்ளவர்கள் தவிர்த்துவிடுங்கள்
_________________________________________________________________________________________
 
எவ்வளவு துடைத்தாலும் இந்தச் சிவப்புக்கறை போவதில்லை. ரத்தமா சாயமா என்றும் தெரியவில்லை.இருந்த கொஞ்சம் வினிகரைப் போட்டுப் பார்த்தாகிவிட்டது. சிறையில் அரிதாகவே கிடைக்கும் ரை சோப்பையும் போட்டுத் தேய்த்தாகிவிட்டது. கொஞ்சம் எலுமிச்சை கிடைத்தால் நிச்சயம் போய்விடும். காவலாளிகளிடம் கேட்க வேண்டும்.
 
நேற்று செய்திருந்த வடிவங்களைத் தொட்டுப்பார்த்தேன். இன்னும் முழுதாகக் காயவில்லை. வானம் மூடியே இருக்கிறது. வெயில் வந்தால்தானே.
 
நேரம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. காவல்காரர்கள் வரும் நேரம் ஆகிவிட்டிருக்கும். இன்றாவது இந்த அறையைச் சுத்தம் செய்ய கெஞ்சிப்பார்க்கலாம். நாற்றம் பழகிவிட்டதுதான். இருந்தாலும் ரத்தக்கறை உடையிலும் உடலிலும் பட்டால் தங்கிவிடுகிறது.
 
சிறை என்றாலும் பெரிய அறைதான். இருந்தாலும் பாதிக்கு மேல் தலைகள் அடைத்துக்கொண்டு, மீதி இடத்தில் சாயங்களும் பாரிஸ் களிமண்ணும் அரைகுறையாக முடிக்கப்பட்ட சிலைகளும் கழிவறையும்- படுக்கக்கூட இடமில்லை. அரச குடும்பத்தினர் ராஜபோகமாய் வலம் வந்த அரண்மனையின் ஒரு பகுதியா இது? இத்தனைக்கும் லிஸ்ஸுக்கு இதே அறையில் நான் படம்வரையக் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
 
"எப்படி மேரி இவ்வளவு அழகாகச் செய்ய வருகிறது உனக்கு?" லிஸ் நான் மூன்று நிமிடங்களில் செய்த மெழுகு யானையைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
 
"இதற்கே ஆச்சரியப்படுகிறாயே. எனக்காவது மூன்று நிமிடம் ஆனது. டாக்டர் கர்டியஸ் ஒரு நிமிடத்துக்குள் முடித்துவிடுவார் தெரியுமா?
 
"அப்படியே நிஜ யானை போலவே இருக்கிறது"
 
"சரியாகப் பார்க்கவில்லை நீ. இந்தத் தந்தத்தைப் பார். என் கைவிரலின் ரேகையும் கோடுகளும் தெரிகின்றன. இன்னும் கொஞ்சம் பொறுமையாகச் செய்தால் நிஜத்துக்கு மிக அருகில் வந்துவிடலாம்"
 
"இதுவே நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் தத்ரூபத்துக்கு ஏன் மெனக்கெட வேண்டும்?"
 
"டாக்டர் எனக்குச் சொல்லிக்கொடுத்ததில் முக்கியமானதே முழுமைக்கான தீவிரத் தேடல்தான். அசைவை வைத்து மட்டும்தான் உயிர் இருக்கிறதா இல்லை பொம்மையா என்று கண்டுபிடிக்க முடியவேண்டும்!"
 
"சரிதான் - என்போன்ற பொறுமையில்லா ஜீவனுக்கு இதைக் கற்றுக் கொடுக்கப்போகிறாயா?"
 
திரைச்சீலைக்குப் பின் நின்றுகொண்டிருந்த பணிப்பெண் வெளிவந்து, "அரசிக்கு வணக்கம். பாராளுமன்றத் துணைத்தலைவர் டி கெர்செயண்ட் வந்துகொண்டிருக்கிறார்"
 
முழு அரச உடையில், கப்பல்படையில் பணியாற்றிப் பெற்ற வண்ணவண்ண மெடல்களுடன் விசித்திரமான தொப்பியுடன் வந்தாலும், எப்போதும் போல என் கண்ணுக்கு அழகனாகவே தெரிந்தான்.
 
"லிஸ் - எப்படி இருக்கிறாய்! நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டிருக்கிறாய்! எப்படி சொல்லிக்கொடுக்கிறாள் மேரி?" ராஜகுடும்பம் இல்லாவிட்டாலும், முக்கியமான குடும்பத்தில் பிறந்ததால் அர்மாண்ட் டி கெர்செயண்ட் இளவரசியின் சின்னவயது நண்பன்.
 
"அர்மாண்ட், புதிய பதவி வந்ததைச் சொல்லக்கூட மாட்டாயா?"
 
"அதைச்சொல்லத்தான் வந்தேன். துணை நீதிபதியாம்.. இன்னும் இரண்டு ஓட்டு கிடைத்திருந்தாலும் நீதிபதி ஆகியிருப்பேன்! அவர்களுக்கு நரைத்த தலை தேவைப்படுகிறது!"
 
"போகட்டும். இன்னும் உனக்கு வயது இருக்கிறது."
 
"ஆனால் மக்கள் முன்னைப்போல் இல்லை. அங்கங்கே பிரச்சினை வெடிக்கத் தொடங்கிவிட்டது. கட்டுக்குள் வைப்பது கடினமாகிக் கொண்டு வருகிறது."
 
"இந்தப்பிரச்சினைகளையெல்லாம் நீங்கள் ஆண்களே பார்த்துக்கொள்ளுங்கள்"
 
"மேரி! எப்படி இருக்கிறாய்.. பார்த்து வாரத்துக்குமேல் ஆகியிருக்கும்.. இல்லையா?"
 
இதுவரை என்னைக் கண்டுகொள்ளாமல் இருந்ததில் வந்த கோபம், அர்மாண்டின் குரல் இனிமைக்கு முன் காணாமல் போனது.
 
"என் நினைவு கூட உங்களுக்கு இருக்கிறதா?"
 
மரியாதையாக லிஸ் அறைக்கு வெளியே போய்விட்டாள்.
 
"என்ன வார்த்தை பேசுகிறாய் மேரி? உன்னை விட்டு என் நினைவு அலை பாயுமா?"
 
"ஏதோ பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னீர்களே?"
 
"உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம். பிரெஞ்சு அரசாங்கம் எல்லாப்பிரச்சினைகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கும். எதற்கும், நீ அரண்மனையில் இல்லாமல் இருப்பது நல்லது, டாக்டர் பாரிஸில் சிலைக்கண்காட்சி நடத்துகிறாரே, அங்கே சென்றுவிடு. அவ்வப்போது நான் வந்து பார்க்கிறேன்."
"வெளிய வாம்மா.. உனக்கு வேலை வந்திருக்கு!" என்றான் காவல்காரன்.
 
கிழிந்திருந்த உடைகளைச் சரிசெய்து மறைத்துக்கொண்டேன். குளிர் அதிகமாகி விட்டதா அல்லது என் உடை சாதாரணக்குளிரையும் தாங்காமல் போய்விட்டதா? அவசரமாக வெளியே வந்தேன். நேரம் அதிகமாக்கினால் புதுமையாக யோசித்து தண்டனை கொடுப்பான். தண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவனுக்கு காரணங்கள் தேவையில்லை. ஜன்னல்களைத் திறந்துவைத்துக் குளிரில் வாட்டுவதிலிருந்து, உணவு தண்ணீரை மறுப்பது வரை எது வேண்டுமானாலும் செய்வான். அடிக்கக்கூடாது, கொல்லக்கூடாது என்ற அரச கட்டளைகள் அவன் கையைக்கட்டினாலும்,  முடிந்தவரை எதுவும் செய்வான்.
 
திறந்த குதிரைவண்டி. பாரீஸின் தெருக்களில் ஓடியது. இன்னொரு அரண்மனையில் தீ எரிகின்றது. இதையும் பார்த்திருக்கிறேனே.. ஆம், இங்கேதானே டாக்டர் முதலில் கண்காட்சி வைத்தார்?
"டாக்டர், கதவை அடைத்துவிடலாமா?"
 
"ஆமாம். நேரமாகிவிட்டது. இனி யாரும் வரமாட்டார்கள். தெருக்களில் சத்தம் அதிகமாகிவிட்டது. நல்லவேளையாக நீ அரண்மனையில் இல்லை."
 
"கும்பல் அரண்மனைக்கா போயிருக்கிறது?"
 
"பின்னே? இன்று அரச குடும்பத்தில் ஒரு உயிர் மிஞ்சாது.. அவ்வளவு கோபத்தில் சென்றிருக்கிறார்கள்"
 
ஒரு நொடி ராஜாவின் முகம் என்கண் முன் வந்து சென்றது. அவரை மோசமானவர் என்று எல்லோரும் நினைத்திருந்தாலும் என்னிடம் மிகவும் அன்பாகவும் கனிவாகவுமே நடந்துகொண்டவர். வேலைக்காரி மகள் நான் என்று தெரிந்திருந்தாலும், பெருங்குலத்து மக்களிடம் போலவே என்னிடமும் மரியாதை காட்டியவர்.
 
"எவ்வளவுதான் ஓவியங்கள் இருந்தாலும், நீ செய்வது போல தத்ரூபமான சிலைகள்தான் எனக்குப் பிடித்திருக்கிறது."
 
"ஆணையிடுங்கள் ராஜா, உங்கள் சிலையை வடித்துவிடுகிறேன்"
 
"எங்கே நேரம் இருக்கிறது! ஓய்வு கிடைத்தால் சொல்கிறேன்.. "
 
கலைக்கு மரியாதை கொடுத்தவர். என் கண்களில் இருந்து ஒரு சொட்டுக்கண்ணீர் வெளியேறியது.
 
கதவை அடைத்துவிட்டுத் திரும்பினேன்.
 
"டாக்டர், விளக்குகளையும் அணைத்துவிடட்டுமா?" கேட்பதற்குள் கதவு இடிபடும் சத்தம்.. இரைச்சல். ஒரு நிமிடம் முன்பு அமைதியாகத்தானே இருந்தது?
 
கதவைத் திறப்பதா வேண்டாமா.. என் கையில் எதுவும் இல்லை என்பது மட்டும் புரிந்தது. திறக்காவிட்டால் உடைபடும். முடிவு ஒன்றுதான்.
 
கதவு உடைந்தது. கூட்டம் உள்ளே நுழைந்தது. தலைவன் போல் இருந்தவன் கத்தியை நீட்டினான். நுனியில் ரத்தம்.
 
"நீதான மேரி? ராஜகுடும்பத்துக்கு நீ ரொம்பப் பழக்கமாமே!"
 
"இவளை அடிக்கடி வெர்ஸே லே பாத்திருக்கேன். இளவரசி எலிஸபெத்துக்கு ஓவியம் கத்துக்கொடுக்கறவ"
 
"ராஜாதான் பாதிக்குடும்பத்தோட தப்பி ஓடிட்டான்! அவனோட சம்மந்தப்பட்ட யாரையும் உயிரோட விடக்கூடாது!"
 
"விடுடா! இவளை வச்சு வேற ஒரு வேலை இருக்குது! நீதானே இந்த மெழுகு பொம்மையெல்லாம் செய்யறவ? எனக்கு ஒண்ணு செஞ்சு கொடு!"
 
"என்ன தலைவா இந்த நேரத்துல பொம்மை?"
 
"டேய் - அந்த ராணி தலையைக் கொண்டு வாங்கடா! மிஞ்சிப்போனா இது ரெண்டு நாளைக்கு இருக்கும்.. அப்புறம் அழுகிடாது? மெழுகுலே பொம்மையா செஞ்சு வெச்சுகிட்டா எப்பவும் ஞாபகமா வெச்சுக்கலாமில்ல?"
 
ராணியின் கண்கள் மேல்நோக்கிச் செருகியிருந்தன. மூடவில்லை. கழுத்து நரம்பிலிருந்து இன்னும் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. எனக்கு கண் இருட்டியது மயங்கி விழுந்தேன்..
 
சில்லென்ற தண்ணீர் மேலே பட்டதும் விழித்தேன். கண்ணெதிரே அதே தலை. வாந்தி வந்தது.
 
"நீ வாந்தி எடு, மயங்கிவிழு என்ன வேணும்னாலும் பண்ணு.. ஆனா இன்னுமொரு மணிநேரத்துக்குள்ள பொம்மை தயாராகணும்"
எப்போது செய்ய ஆரம்பித்தேன், எப்படி முடித்தேன் - இன்னும் தெரியவில்லை. பிறகு சிறையில் அடைக்கப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கில்லட்டினின் தீராத பசிக்கு தினம் உணவாகும் அரச குடும்பத்தினர் அனைவரின் தலைகளும் மெழுகு பொம்மைகளாக்க வெட்டப்பட்ட சில நிமிடங்களில் கொண்டுவர ஆரம்பித்தனர். வாந்தியும், ரத்தமும் பழகிவிட்டது.
 
சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது.
 
ஒரு நாள் எலிஸபெத்தின் தலை வந்தது - அழுகை வரவில்லை.
 
இன்னொருநாள் லூயிஸ் ராஜாவின் தலை வந்தபோதும் அழுகை வரவில்லை.
 
ஒரு வேளை இந்தச்சிறையிலிருந்து தப்பித்தாலும் என் வாழ்நாளில் எனக்கு அழுகை வரப்போவதில்லை. உணர்ச்சிகளற்ற ஜடமாகிவிட்டேன்.
 
இப்போது நான் செய்யும் பொம்மைகளுக்கும் அவற்றின் மூலங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டிலும் அசைவு இல்லை.
 
குதிரை வண்டி வேகம் குறைய ஆரம்பித்தது. இடத்தைப்பார்த்தேன். மயானபூமி. புதிதாகச் செய்யப்பட்ட 17ஆவது கில்லட்டின்னை இங்கேதான் வைத்திருக்கிறார்கள். என் கதையும் முடியப்போகிறது.
 
"இதோ பாரு இன்னிக்கு மட்டும் 43 பேரைக் கணக்கு தீர்த்திருக்காங்க. இதுலே யார் அரச குடும்பம், யாரு சாதாரண ஆளுங்கன்னு தெரியல. நீதான் அரச குடும்பத்துக்கு வேண்டப்பட்டவளாச்சே! பாத்து எந்த எந்தத் தலை வேணுமோ எடுத்துக்க!  ஒரு மணிநேரத்துக்குள்ள எல்லாத்தையும் பாத்துடு"
 
காலியான வயிற்றில் குளிர்காற்றும் ரத்தவாடையும் குமட்ட தலைகளையும் உடல்களையும் பார்த்தேன்.
 
இது தோட்டக்காரன் பியரி.. இவன் எப்படி.. காரணங்கள் தேவைப்படாத கொலைக்கூட்டத்திடம் இவன் ஏன் மாட்டினான்?
 
இது என்னை ஒருமுறை குதிரை வண்டியில் ஏற்றிவந்த ஜீன் - பால்..
 
இந்த முகம் பார்த்தது போலத்தான் இருக்கிறது.. ஆனால் கில்லட்டினுக்கு முன்னாலேயே சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறான். அடையாளம் தெரியவில்லை.
 
இன்னும் இரண்டு தலைகளைப் பார்த்த பிறகு திடீரெனப் பொறிதட்ட திரும்பி வந்து அதே முகத்தைப் பார்த்தேன்..
 
இனிமேல் வராது என்று நினைத்திருந்த அழுகை கண்களில் அருவியாய்க் கொட்ட ஆரம்பித்தது..
_________________________________________
 
பின் குறிப்பு: மேடம் தூஸேவின் மெழுகுப்பொம்மைகள் பிரபலம். லண்டனின் முக்கியமான சுற்றுலாத்தளம். "If it doesn't move, it is wax" என்ற பிரபல வரிகளுக்குச் சொந்தக்காரரின் வாழ்க்கையில் நடந்த சூறாவளியை பயோகிராபி சேனலில் மேம்போக்காக பார்க்க நேர்ந்தது. ஆடிப்போய்விட்டேன். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கூகிளையும் விக்கிபீடியாவையும் துணைக்கழைத்து ஆராய்ச்சி செய்து எழுதிய என் முதல் சரித்திரக்கதை இது. ரத்தம் அதிகம்தான் என்றாலும், எல்லாச் சம்பவங்களும் உண்மையே. உரையாடல்கள் மட்டுமே என்னுடையது. கதையில் வரும் காதலுக்கு சரித்திர ஆதாரம் இல்லையென்றாலும், RPH  வழங்கிய தூஸே - இசைநாடகத்தின் கற்பனையை, நானும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
தேன்கூடு போட்டிக்கான என் இரண்டாவது படைப்பு.

Jul 5, 2006

சீட்டு மாளிகை- (தேன்கூடு ஜூலை போட்டிக்கதை) -05 July 06

சீட்டு மாளிகை

பரபரப்பான நாளாக இருக்கப்போவதற்கான எந்த அறிகுறியும் பொழுது விடியும்போது தெரியவில்லை. அதே அலாரம் சத்தம். அதே ஐந்து நிமிட வாய்தா. காபியின் முகத்தில் விடிந்த பொழுது. "இந்த பெட் காபி வழக்கத்தை என்னிக்குத்தான் விட்டொழிக்கப்போறீங்களோ" அவள் அடுக்களைக்குள் சென்றுவிட்டாள், குரல் மட்டும் இன்னும் இங்கேயே ரீங்காரம் அடிக்கிறது.

காபி குடித்துக்கொண்டே எழுந்து ஜன்னல் வழியாக நோட்டம் விட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்களின் அணிவகுப்பு. சொல்லி வைத்தாற்போல எல்லாரும் ஒரே நேரத்தில் கார் எடுப்பார்களா? ராத்திரி ரவியை விமானத்தில் ஏற்றிவிட்டுத் திரும்ப 2 மணி நேரம் ஆனது. அவனே ஊர் போய்ச் சேர்ந்திருப்பான். எனக்கு இன்னும் தூக்கம்கூட கலையவில்லை.

டிவியைப்போட்டேன். தமிழ் மாலை உருண்டுவந்து நான் ஷேவ் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டதை அறிவித்தது.

"எழுந்தவுடனே ஏன் இப்படி டிவிய அலறவிடறீங்க?"

"அது இருந்தாத்தாண்டி டைம் தெரியுது"

"ஆமா.. நேத்து டைம் பாத்து வாட்சை அட்ஜஸ்ட் பண்ணினேன். இன்னிக்கு அஞ்சு நிமிஷம் ஃபாஸ்டா இருக்கு. அந்த டைமே பொய்யின்னு நீங்களே சொன்னதில்ல?"

"இருந்தாலும் ஒரு ரெபர்ன்ஸுக்கு உழ்ஹஹ்ழஜ்ஹ்9அ" பல்குச்சி வாயுள்ளே குழப்பி நல்லவேளையாக விவாதத்தை ஆரம்பிக்கும் முன்பே நிறுத்தியது.

தலைப்புச் செய்திகள்.. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில்முனைவர்கள் ஆர்வம்.. "ஆமாண்டா.. ஒரு மாசத்துல சொர்க்கமாக்கீட்டீங்க"
துபாயிலிருந்து மும்பைக்கு வந்த விமானம் நொறுங்கி 200 பேர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.. ரேஸர் நழுவி கன்னத்தில் கீறல் விழுந்தது.

அவசரமாக ஹாலுக்குள் ஓடிவந்தேன்.
செய்தி ஒன்றும் தெளிவாக இல்லை. "இன்றுகாலை ஐந்து மணியளவில் மும்பை வந்து சேரவேண்டிய ஓமன் ஏர் விமானம், நடுக்கடலில் விழுந்துவிட்டது. அதில் பயணம் செய்த 200 இந்தியர்களும் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது." ரவி இதில்தான் பயணம் செய்தான்.

அதற்குள் அவளும் வந்தாள். "ரவி ஓமன் ஏர்லே போனாரா, எமிரேட்ஸிலே போனாரா?"

"ஓமன் ஏர்தான். நான் தானே நேத்து ஏத்திவிட்டேன்" என் குரல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

"அப்போ அவரு" அவள் கண்ணில் அதற்குள் நீர்.

"தெரியலே. அவனுக்கு ஒரு போன் பண்ணிப்பாக்கிறேன்"

"இனாரா கமல் விபாக் அல்லதி.."என்றது ரெக்கார்டட் குரல். தொடர்பு எல்லையில் இல்லையாம். எனக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

"ஊருக்கு போன் செஞ்சு பாக்கறீங்களா?"

"பைத்தியமா உனக்கு? அவன் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு வீட்டுக்குக் கூட சொல்லாம கிளம்பியிருக்கான். அவன் வைஃபுக்கு அவன் வர்றதே தெரியாது. அவளுக்கு இன்னும் ரெண்டு நாள்லே டேட்டு. முழுசா விவரம் தெரியாம குழப்பவேணாம்" என்ன செய்யலாம்?

எக்ஸ்சேஞ்சை அழைத்து ஓமன் ஏர் நம்பர் வாங்கி போன் செய்தால் எங்கேஜ்டாகவே தொடர்ந்தது. பத்து இருபது முயற்சிகளுக்குப் பிறகு,

"ஓமன் ஏர் ரிஸர்வேஷன்ஸ்"

"ஹல்லோ, இன்றைய விபத்து உண்மையான செய்திதானா?"

"ஆம், செய்தி உண்மைதான். ஆனால் ஓரிருவர் பிழைத்திருக்கிறார்கள்"

"என் நண்பன் ஒருவன் பயணம் செய்தான், ரவி என்று பெயர்"

"மன்னிக்கவும். பிழைத்த இருவருமே கேபின் ஸ்டாஃப்"

"இப்போது என்ன நிலவரம்?"

"இது ரிஸர்வேஷன் அலுவலகம் மட்டும்தான். நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு.."

"அந்த எண் கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது.. உங்களுக்குத் தெரிந்ததைக்கூறுங்களேன்.."

"ஸ்கேவஞ்சிங் குழு தயாராகிவிட்டது. அருகாமையிலிருந்த ஒரு கப்பலும் விபத்து ஸ்தலத்துக்குத் திருப்பப்பட்டுவிட்டது. அங்கிருந்து தகவல் வந்ததும் உறவினர்களுக்குத் தெரியப்படுத்துவோம்"

"என் பெயரை அவன் கொடுத்திருக்க மாட்டான். என் எண்ணுக்குத் தொடர்புகொண்டு சொல்ல முடியுமா?"

"நீங்கள் வாடிக்கையாளர் சேவைக்குத் தொடர்பு கொள்ளுங்களேன்"

"இப்போதே இன்னொரு இணைப்பில் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன், இதுவரை கிடைக்கவில்லை"

"அப்படியானால் நீங்கள் டெய்ராவில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு நேராகவாருங்கள்"

போனை வைத்துவிட்டுப்பார்த்தால் இவள் அழுது கொண்டு நிற்கிறாள். "பாஆவங்க.. இப்படி ஆயிருக்கவேணாம்"

எனக்கும் ரவிக்கும் துபாய் ஒரேநாளில்தான் அறிமுகமானது. எங்கள் இருவரின் பணியும் தொடர்புடையது என்பதால் அதற்கும் முன்னரே கூட அறிமுகம் இருந்தது. இங்கும் வெவ்வேறு அலுவலகங்கள் என்றாலும், வீடு அருகருகே என்பதாலும், மனைவிகள் நண்பிகள் ஆகிவிட்டதாலும், ஒரே வயதுக்குழந்தைகள் என்பதாலும் குடும்ப நட்பாக வலுப்பெற்றிருந்தது. இரண்டாவது குழந்தை பெற மனைவியும் முதல் குழந்தையுடன் முன்பே இந்தியா சென்றுவிட, இவன் வரமாட்டேன் என்று சொல்லி இருந்தவன் அலுவலகத்தில் யாருக்கோ சோப்புப்போட்டு லீவு பெற்றுக்கிளம்பினான். ஏன் கிளம்பினான்?

"துர்காவுக்கு சொல்லிடலாமா?"

"என்னன்னு சொல்லுவே? அவள் இருக்கிற நிலைமையிலே இப்போ எதுவும் சொல்ல வேணாம்"

"அவங்க அம்மா அப்பாகிட்டேயாவது?"

"அவங்க பால்பாயசம் வச்சுக்குடிப்பாங்க. என் சாபம் பலிச்சிடுச்சின்னு கும்மி அடிப்பாங்க"

ரவியுடையது காதல் திருமணம். பெரும் எதிர்ப்பில் நடந்தது. மூன்று ஆண்டுகள் ஆகியும் இரண்டாவது குழந்தை வரை வந்தும் கோபம் கொஞ்சமும் தணியாத கோபக்காரர்கள். இப்போதும் அவன் மனைவி பிரசவத்துக்காக நண்பர்கள் வீட்டில்தான் இருக்கிறாள்.

"நான் துர்காவோட அம்மா அப்பாவைச் சொல்லலீங்க. ரவியோட அம்மா அப்பாகிட்டே"

"அவங்க நம்பர் கூட என்கிட்டே கிடையாது."

"என்னதான் பண்றது?"

"ஓமன் ஏர் ஆபீஸுக்குப் போயிடலாம். விவரம் தெரிஞ்சவுடனே யோசிக்கலாம்"

யோசிப்பதைத் தள்ளிப்போட விரும்பினேன். தொண்டை அடைக்கும் துக்கத்தோடு, பழக்கமில்லாத சூழல், பொறுப்புக்குப் பழக்கப்படாமல் வளர்ந்துவிட்டிருந்தேன். கிளம்பும்போது தானும் வருவதாகச் சொன்னாள்.

"நீ வேற அங்கே எதுக்கு?"

"என் ஆபீஸிலெ லீவு சொல்லிக்கலாம். நீங்க டென்ஷன் பார்ட்டி, உங்களை இப்படி தனியா விடமாட்டேன்."

காரைக்கிளப்பி துபாய் செல்லும் ஜோதியில் ஐக்கியமாக்கினேன், என் அவசரம் தெரியாமல் ஊர்கிறது வண்டிகள்.

"துர்காவோட அப்பா அம்மாகிட்டே சொல்லியே ஆகணுங்க"

"..."

"என்னதான் கோபம் இருந்தாலும் இப்படிப்பட்ட சோகம் அதை இளக்கிடும். துர்காகிட்டே நீங்களோ நானோ நேரடியா சொல்ல முடியுமா? அவங்க கிட்டே சொன்னா பதமா சொல்லிடுவாங்க"

"..."

"அதுவும் தவிர குழந்தைகளை யார் பாத்துக்குவாங்க?"

"..."

"என்ன அமைதியா வரீங்க?"

"என்ன சொல்லச் சொல்றே? நீ அவங்களைப் பாத்தது இல்ல. என்னவோ ஊர் உலகத்தில இல்லாத பணம் அவங்ககிட்டதான் இருக்குன்ற நினப்பு அவங்களுக்கு. ரவி என்னவோ அவங்களைக்கொள்ளை அடிக்க வந்தவன்ற மாதிரிதான் பார்த்தாங்க."

"என்னதான் பண்னப்போறீங்க?"

"அப்பாவுக்கு போன் போடு" செல்லை எடுத்து அவள்கையில் திணித்தேன்.

"அப்பா, நான் தான்"

"சொல்லுப்பா"

"ஒரு முக்கியமான விஷயம்பா. அம்மாவும் நீயும் மெட்ராஸ் போகணும். முடியுமா?"

"நேத்துதானப்பா திரும்பி வந்தேன்.. என்ன விஷயம் சொல்லு"

"எங்க பக்கத்து பிளாட் துர்கா மெட்ராஸ்லேதான் இருக்கா. அவளுக்கு நாளைக்கு டெலிவரி ட்யூ. கொஞ்சம் அவ கூட அம்மா இருந்தா தேவலைன்னு பட்டுது"

"என்ன திடீர்னு? அவங்க பிரெண்ட்ஸ் இருக்காங்கன்னு சொன்னியே"

"இது வேற ஒரு மேட்டர்பா. எதாவது எதிர்பாராத நியூஸ் வந்துதுன்னா கொஞ்சம் தெரிஞ்சவங்க பக்கத்திலே இருக்கறது நல்லதுன்னு நெனைக்கிறேன்"

"என்ன நீ பேசறது புரியலியே"

"விவரமா மத்தியானம் பேசறேன். செல்லை எடுத்துகிட்டு போ."
கட் செய்து அவளிடம் கொடுத்தேன்.

"வயசான காலத்துலே அவங்களை ஏன் அலைக்கழிக்கறீங்க"

"எனக்கு வேற வழி தெரியல. அப்பா அம்மா அவ பக்கத்துலே இருந்தா கொஞ்சம் கம்பர்டபிளா நான் இருப்பேன்"

சாலை துளியும் கருணை காண்பிக்காமல் பிடிவாதமாக ஊர்ந்தது.

என் போன் மணியடித்தது, "யாருன்னு பாரு"

"அய்யோ.. துர்காதான்! தெரிஞ்சிட்டிருக்குமா?"

"தெரியலையே. இப்போ வேணா பேசாம கட் செஞ்சிடலாமா?"

"இல்லைங்க, பேசிடுங்க"

"ஏன் நீ பேசேன்"

"நான் அழுது காட்டிக்கொடுத்துடுவேன்.. வேணாம். நீங்களே பேசுங்க"

"சொல்லும்மா"

"அண்ணா எப்படி இருக்கீங்க? மஞ்சு நல்லா இருக்காளா?" இன்னும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

"நீ சொல்லு. என்ன திடீர்னு போன்? எல்லாம் நல்லபடியாத்தானே இருக்கு?"

"எல்லாம் நல்லாத்தான் இருக்கு. டாக்டர் இன்னிக்கு அட்மிட் ஆகச்சொல்லிட்டா. அவருக்கு போன் பண்ணா அவுட் ஆப் கவரேஜ் ஏரியான்னே வருது, எங்கே போயிட்டார்?" சொல்லிவிடலாமா? என்னால் இந்த உரையாடலைத் தொடர முடியாது.

"குழந்தை எப்படி இருக்கா?"பேச்சை மாற்றினேன்.

"அவளுக்கு என்ன குறைச்சல், எந்நேரமும் எஞ்சாய்தான்"

"சரிம்மா. எங்க அப்பா அம்மாவ அங்கே வரச்சொல்லியிருக்கேன்"

"எதுக்குண்ணா அவங்களுக்கு வீண் அலைச்சல். குழந்தை புறந்தவுடனே போன் செஞ்சு வந்தா போதாதா?"

"இதுலே என்ன அலைச்சல்? சரி நான் அப்புறம் போன் செய்றேன். ட்ரைவ் பண்ணிகிட்டிருக்கேன்"

"அவர்கிட்டே சொல்லிடுங்க"என்று அவள் சொன்னதை கேட்காதவன் போல கட் செய்தேன்.

"போறவன் போயிட்டான். இருக்கறவன் பாடுதான் கஷ்டம். இப்போ பாரு அவகிட்டே எதையும் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம!"

"ரவி ஆபீஸுக்கு போட்டுப் பாக்கட்டுமா?"

"என்ன பிரயோஜனம், அவன் ஆபீஸ் அட்ரஸ் போன் நம்பர் எதையும் டிக்கட் புக் பண்ரப்ப கொடுத்திருக்கமாட்டான்."

ஓமன் ஏர் அலுவலகம் மக்களால் மொய்க்கப்பட்டிருந்தது. கார் பார்க்கிங்கிற்கு இடம் அப்புறம் தேடிக்கொள்ளலாம். "நீ வண்டியிலேயே இரு." என்று டபுள் பார்க் செய்துவிட்டு உள்ளே ஓடினேன்.கவலை தோய்ந்த முகங்கள். 200 பயணிகளின் விதி அறிய 500 பேராவது கூடியிருந்தார்கள். அழுகைச்சத்தம் இடக்கரடக்கி விசும்பல்களாய். ஒரு பிணம்கூட இல்லாத இந்தச்சூழலில் இழவு வீட்டைவிட அதிக மரணவாடை அடித்தது. யாரை என்ன கேட்பது என்றே புரியவில்லை.

நான்கைந்து பேர் கூடியிருந்த இடத்தில் மையமாக "எதாவது தெரிஞ்சதா?" என்றேன்.

"நாளைக்குள்ள மும்பைக்கு கப்பலை அனுப்பிடுவாங்களாம். அதுவரைக்கும் கிடைக்கிற பாடிங்களையும் சேத்து"

"பேர் எல்லாம் சொல்லிட்டாங்களா?"

"அதை ஸ்கேவஞ்சிங் டீம் சொல்ல முடியாதே.. யாரும் பொழைக்கல.. அவ்வளவுதான்"

"என் பிரண்டு சென்னைக்கு போகணும்னு இந்த பிளைட்ட பிடிச்சான், என்ன பண்ரதுன்னே புரியலே."

"யாராவது தெரிஞ்சவங்களை மும்பைக்கு வந்து அடையாளம் காட்டச்சொல்லுவாங்க"

என் மனைவியிடம் திரும்பி வந்தேன்.

"அக்கவுண்ட்லே எவ்வளோ காசு இருக்கும்?"

"ஒண்ணும் பெரிசா இருக்காது.. முந்தாநாள்தானே ரவிக்கு டிக்கட் வாங்க துடைச்சு எடுத்தீங்க?"

"சரி அப்போ க்ரெடிட் கார்டுதான் தேய்க்கணும். இன்னிக்கு நைட் நான் மும்பை போறேன்."

"எதுக்கு?"

"அங்க போயி பாடிய அடையாளம் காட்ட யாராவது வரணுமாம். யாரு வருவாங்க? நானே போறேன். இன்னிக்கு ஈவனிங் ஓமன் ஏர்லே"

"ஓமன் ஏர்லயா? வேணாங்க"

"இதுவரைக்கும் எந்த ப்ளைட்டுமே ரெண்டு நாள் அடுத்தடுத்து ஆக்ஸிடெண்ட் ஆனதில்ல. வேற வழி இல்ல"

வழக்கமான நேரத்தில் இதற்கு அரை மணி சண்டை பிடித்திருப்பாள். இப்போது அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.

டிக்கெட்டை சண்டை பிடித்து வாங்கி வந்தேன். பலருக்கு இதே காரணத்தால் மும்பை செல்ல வேண்டி இருந்தது.

"நீங்க போன பிறகு இன்னும் ஒரு நாளஞ்சு முறை அவர் நம்பர் ட்ரை பண்ணேன். அதே அவுட் ஆப் ரீச்தான். சரி மும்பை போயிட்டு சென்னையும் போவீங்களா?"

"பின்னே?"

தொடர்ந்த அலைச்சல்களில் துக்கம் சற்றுத்தணிந்திருந்தது, சாயங்காலம் வரை நேரம் இருப்பதில் அதிகமாகி விட்டது. காலையில் இருந்து சாப்பிடாமல் இருப்பதும் நினைவுக்கு வந்தது. அலுவலகத்துக்குச் சென்று கொஞ்சம் பணம் கடன் வாங்க வேண்டும். எவன் தருவான்? சரி அது அடுத்த கவலை.

திரும்ப அதே ஊர்வலத்தில் கிளம்பி வீட்டுக்கு. பாதி தூரம் கடந்ததும் செல் மணியடித்தது. தெரியாத நம்பர்.

"யாரு?"

"மாப்பு, நான் தான் ரவி பேசறேன்"

அதிர்ச்சியில் அடித்த பிரேக்கிற்கு பின்னால் இருந்தவன் ஹாஆஆஆரன் அடித்தான்.

"என்னடா ஆச்சு?....."எனக்கு வார்த்தை வரவில்லை.

"நேத்து ஓமன் ஏர்லே டிக்கட் புக் பண்ணியிருந்தேனா, போயி போர்டிங் பாஸ் எடுக்கறப்போ டிக்கட் இன்வாலிட்னு வந்தது. புளுத்திங்க - அவசரமா டிக்கட் கேட்டதிலே நாளை மாத்தி புக் பண்ணியிருக்கானுங்க. செவெண்டீந்த் நைட்னு சொன்னேன். அவ எர்லி மார்னிங் பிளைட், எயிட்டீண்த்தானேன்னு கன்ப்யூஸ் பண்ணதிலே, இன்னிக்கு நைட்டுக்கு புக் பண்ணியிருக்கா! வீட்டுக்கு திரும்பி வர வழியிலே செல்போனை எவனோ லவட்டிட்டான்.. போலீஸ்கிட்டே கம்பிளெயின் பண்ணிட்டு ரூமுக்கு வந்து படுக்கவே நாலு மணி ஆயிடிச்சி. இப்பதான் எழுந்தேன். நேரமே சரியில்லடா"

"நாயே! எனக்கு வர வெறியிலே இப்போ நேரா வந்து உன்னைக் கொல்லப்போறேன்"

"ஏண்டா? எனக்குதானே பேட் டே?"

எனக்கு இப்போது உள்ள உணர்ச்சி நிம்மதியா, கலக்கமா, இல்லை அவன் பிழைத்ததில் ஏமாற்றமா எனச் சரியாகத் தெரியவில்லை.
_______________________________________
தேன்கூடு தமிழோவியம் ஜூலை மாதப்போட்டிக்கென எழுதியது.

Jul 4, 2006

அவியல் - ஒரு கூட்டுத் தகவலுடன்

1. இணையத்தில் இருந்து முதல் முறையாக முழுத் திரைப்படத்தையும் இறக்கிப்பார்த்தேன் - படம் மீண்டும் கோகிலா. நீண்ட இடைவேளைக்குப்பிறகு பார்த்தாலும் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பின் அருமையையும், இயல்பான அளவான வசனங்களையும், தெளிவான திரைக்கதையையும் பொருத்தமான பின்னணி இசையையும் பொதுவாகத் தெரிந்த ஒரு நாடகபாணியை மீறி ரசிக்க முடிந்தது. மிகவும் பிடித்தது க்ளைமாக்ஸ் வசனங்கள். சபல புத்திக் கணவனை வைத்துக்கொண்டே சினிமா நடிகையை "அடிக்கடி ஆத்துக்கு வந்து போங்கோ" என்று "அவ மேல இருக்க நம்பிக்கை"யால் சொல்வது வசனங்களால் நிரப்பப்பட்ட அப்போதைய படங்களிடையே நிச்சயம் புதுமை. இப்படம் வெற்றி பெற்றதா?

2. ஷா ருக் கானின் ரசிகனாக கொஞ்ச நாள் இருந்திருக்கிறேன், இருந்தாலும் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்தே பஹேலி பார்த்தேன். டுபாக்கூர். ராஜஸ்தானி கிராமத்துக் கர்ணபரம்பரைக் கதையை படமாக்கும்போது உடைகளுக்கும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தே ஆகவேண்டிய ரிச் லுக்குக்கும் செலவழித்ததில் கொஞ்சமாவது திரைக்கதை அமைப்பதில் காட்டியிருக்கலாம். ஷா ருக் ஏற்ற ஆவி கதாபாத்திரத்தால் எப்படிப்பட்ட மாயாஜாலங்கள் முடியும், எது முடியாது என்பதையே தெளிவாகச் சொல்லாமல் மூன்று மணிநேர இழுவை. இந்திப்படம் பார்க்கும் முன் ரொம்ப யோசிக்க வேண்டும். பனா வெற்றியாமே? என்னதான் இருக்கிறது வெற்றிக்கு?

3. என்ன ஆச்சு சன் டிவிக்கு? திருந்திவிட்டதா? ராடானின் தங்கவேட்டை புதுப்பொலிவுடன், செல்வி முடியும் கதையாகக் காணோம், போதாக்குறைக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் போட்டாலும், ஹீரோ விக்ரமைவிட கெஸ்ட் ரோல் சரத்குமாருக்கு விளம்பரத்தில் அதிக நேரம், அதே நேரத்தில் மற்ற விஷயங்களில் அப்படியேதான் இருக்கிறது - துள்ளித்திரிந்த காலம் விளம்ப்ரத்தில் நாயகி குஷ்பூவிற்கு கெஸ்ட் ரோல் ரோஷ்ணிக்கு அடுத்த இடம்தான்.. என்னமோ குக்கிங்.

4. கால்பந்தில் பிரேசில் தோற்றதற்கு ஒரே காரணம் - எனக்கு கால்பந்தில் ஆர்வம் இல்லை என்பதால்தானோ?

5. தமிழில் வரும் விளம்பரங்களின் தர வளர்ச்சி அதிசயமாக இருக்கிறது. லேட்டஸ்ட் பேவரைட் - ப்ரூ காபியில் சின்னக்கப்பில் காபி கொடுத்து தகவல் சொல்லும் இளம் மனைவி - ஒளிப்பதிவு, கான்சப்ட், ஆக்கம் - எல்லாம் அபாரம்.

6. நிறைய பேர் இப்படி அவியல் போடுகிறார்களே என்று பினாத்தலும் போட்டுவிட்டான். மேட்டர் ஒண்ணும் பெரிசா சிக்கலை. யாரும் மறந்துரக்கூடாது பாருங்க!


7. சொல்ல மறந்த கதை: அமெரிக்க சுதந்திர தினத்துக்கு அதே தினத்தில் அடிமையானவனின் வாழ்த்துக்கள். (அடிமைக்காலம்: 7 வருடம்)

அவியல்

1. இணையத்தில் இருந்து முதல் முறையாக முழுத் திரைப்படத்தையும் இறக்கிப்பார்த்தேன் - படம் மீண்டும் கோகிலா. நீண்ட இடைவேளைக்குப்பிறகு பார்த்தாலும் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பின் அருமையையும், இயல்பான அளவான வசனங்களையும், தெளிவான திரைக்கதையையும் பொருத்தமான பின்னணி இசையையும் பொதுவாகத் தெரிந்த ஒரு நாடகபாணியை மீறி ரசிக்க முடிந்தது. மிகவும் பிடித்தது க்ளைமாக்ஸ் வசனங்கள். சபல புத்திக் கணவனை வைத்துக்கொண்டே சினிமா நடிகையை "அடிக்கடி ஆத்துக்கு வந்து போங்கோ" என்று "அவ மேல இருக்க நம்பிக்கை"யால் சொல்வது வசனங்களால் நிரப்பப்பட்ட அப்போதைய படங்களிடையே நிச்சயம் புதுமை. இப்படம் வெற்றி பெற்றதா?

2. ஷா ருக் கானின் ரசிகனாக கொஞ்ச நாள் இருந்திருக்கிறேன், இருந்தாலும் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்தே பஹேலி பார்த்தேன். டுபாக்கூர். ராஜஸ்தானி கிராமத்துக் கர்ணபரம்பரைக் கதையை படமாக்கும்போது உடைகளுக்கும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தே ஆகவேண்டிய ரிச் லுக்குக்கும் செலவழித்ததில் கொஞ்சமாவது திரைக்கதை அமைப்பதில் காட்டியிருக்கலாம். ஷா ருக் ஏற்ற ஆவி கதாபாத்திரத்தால் எப்படிப்பட்ட மாயாஜாலங்கள் முடியும், எது முடியாது என்பதையே தெளிவாகச் சொல்லாமல் மூன்று மணிநேர இழுவை. இந்திப்படம் பார்க்கும் முன் ரொம்ப யோசிக்க வேண்டும். பனா வெற்றியாமே? என்னதான் இருக்கிறது வெற்றிக்கு?

3. என்ன ஆச்சு சன் டிவிக்கு? திருந்திவிட்டதா? ராடானின் தங்கவேட்டை புதுப்பொலிவுடன், செல்வி முடியும் கதையாகக் காணோம், போதாக்குறைக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் போட்டாலும், ஹீரோ விக்ரமைவிட கெஸ்ட் ரோல் சரத்குமாருக்கு விளம்பரத்தில் அதிக நேரம், அதே நேரத்தில் மற்ற விஷயங்களில் அப்படியேதான் இருக்கிறது - துள்ளித்திரிந்த காலம் விளம்ப்ரத்தில் நாயகி குஷ்பூவிற்கு கெஸ்ட் ரோல் ரோஷ்ணிக்கு அடுத்த இடம்தான்.. என்னமோ குக்கிங்.

4. கால்பந்தில் பிரேசில் தோற்றதற்கு ஒரே காரணம் - எனக்கு கால்பந்தில் ஆர்வம் இல்லை என்பதால்தானோ?

5. தமிழில் வரும் விளம்பரங்களின் தர வளர்ச்சி அதிசயமாக இருக்கிறது. லேட்டஸ்ட் பேவரைட் - ப்ரூ காபியில் சின்னக்கப்பில் காபி கொடுத்து தகவல் சொல்லும் இளம் மனைவி - ஒளிப்பதிவு, கான்சப்ட், ஆக்கம் - எல்லாம் அபாரம்.

6. நிறைய பேர் இப்படி அவியல் போடுகிறார்களே என்று பினாத்தலும் போட்டுவிட்டான். மேட்டர் ஒண்ணும் பெரிசா சிக்கலை. யாரும் மறந்துரக்கூடாது பாருங்க!

Jul 3, 2006

திறமைக்குப் பல முகம்

நல்ல ஸ்பீடு போடறே - நம்மகிட்டே மீட்டர் இல்லை - எப்படியும் 90 மைலுக்கு குறையாது"

"நாளைக்கு பிராக்டிஸ் போது பழைய பால்லே ரிவர்ஸ் ஸ்விங் பிராக்டிஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்."

"சார் நாளைக்கும் மேட்லேதான் பிராக்டிஸா? மேட்லேயிருந்து பிட்ச்க்கு மாறும்போது லெங்த் சரியா வர மாட்டேங்குது!"

"அது சரி! ச்ரீனாத்தும் பாலாஜியும் எந்நேரமும் ஸ்டேடியத்துலேதான் பிராக்டிஸ் பண்ணாங்களா என்ன? எதுக்கும் தயாரா இருக்கறவனுக்குத்தான் சான்ஸு!"

'திங்கக்கிழமை காலையிலேயே எனக்கு சான்ஸ் கிடச்சா நல்ல இருக்கும் சார்"

"அது நம்ம கையிலேயா இருக்கு? நாளைக்கு ஃபுல் டே நீ நல்லா பிராக்டிஸ் பண்ணு. ஆஃப் அன்ட் மிடில்லேயே கன்ஸிச்டண்டா போடு.. கன்ட்ரோல் யுவர் நெர்வ்ஸ். நீ நிச்சயமா செலக்ட் ஆயிடுவே. நாளன்னிக்கு செலக்ஷ்ன் மேட்ச் நிச்சயமா உன் வாழ்க்கையிலே மறக்க மாட்டே பாரு!"

" சரி சார் நாளைக்கு காலையிலே கரெக்டா எட்டு மணிக்கு வந்துடறேன். வண்டிய எங்கே பார்க் பண்ணட்டும்?"

"கண்ணகி சிலை எதிருலே பண்ணிடு. என் வண்டி இல்லைன்னா ஒரு மிஸ்டு கால் கொடு"
____________________________________________________________
"எதுக்காக கூப்பிட்டு அனுப்பிச்சாராம்?"

"நானே மறந்து போன விஷயம். ஆபரேஷன் லிட்டில் ட்ராப்னு ஒரு ப்ராஜெக்ட் செஞ்சேனே ஞாபகம் இருக்கா?"

"வாட்டர் மேனேஜ்மென்ட் பத்தித்தானே?"

"ஆமாம். அப்பவே செக்ரடரிக்கு ரொம்ப பிடிச்சிருந்துது. இவ்வளோ சிம்பிளான சொல்யூஷனா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டார். நான் சொன்னேன், சிம்பிளா இருக்கற பிளான் தான் சார் ஃபீஸிபிளா இருக்கும்னு சிரிச்சார்"

"ஆமாம் - அது நடந்து ஆச்சு அஞ்சு வருஷம்"

"எங்கே இருக்கே நீ? நான் ரிட்டயர் ஆயே ஆறு வருஷம் ஆச்சு! சரி -இப்போ அதுக்கு மறுபடியும் உயிர் வந்திருக்கு!"

"நாளைக்கு வாக்கிங் போய் திரும்பி வந்த வுடனே அந்த பேப்பரையெல்லாம் எடுத்து தூசி தட்டணும்"

"ஒம்பதரைக்குள்ளே வந்துருவேளோல்லியோ?"
_________________________________________________________________
"என்னடா சூசை - மறுபடியும் வலை அறுந்தா போச்சு?"

"அதை ஏன் கேக்குறே.. எனக்கு நேரமே சரியில்லை.. தொடர்ந்து மூணு முறை மகசூல் ஒன்னும் சரியில்லேன்னு இன்னும் கொஞ்சம் கடலுக்கு உள்ளாற போயி வலை அடிச்சோம்.. ரெண்டு நாள் கழிச்சுப்பாத்தா வலையிலே ஓட்டை.. சுறா ஏரியா பக்கம் அடிக்கடி போனதில்லையா.. வகையா மாட்டிகிட்டோம்."

"கிட்டானுக்கு நேத்து சரியான அறுவடையாமே.."

"அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு துரை. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை கூட அவனுக்கு வலை அறுந்ததே இல்லை."

"அது மச்சம் இல்லடா மாக்கான் -- அவன் கடல்ல இறங்கறதுக்கு முன்னாடி ஆபீஸரைப்பாத்து பேசாம போறதில்லே. எங்கே என்ன மீன் கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டு வலை வீசுறான், குத்து மதிப்பா வீசுற உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லையா?"

"நீ சொல்றதும் சரிதான். அடுத்த முறை நானும் அவனைக்கேட்டுகிட்டே நானும் போறேன். எங்க இருப்பான் இப்போ?"

"இப்போ தெரியாது.. நாளைக்கு காலையிலே படகுத்துறை பக்கமாத்தான் இருப்பான்."
________________________________________________________________
"வீரமணி நம்ம சுதந்திர தினம் என்ன கிழமைடா?"

"வெள்ளிக்கிழமை சார்"

"சரி 2010 ஆம் வருஷம் சுதந்திர தினம் என்ன கிழமையிலே வரும்டா?"

"ஞாயித்துக்கிழமை சார்"

"சரி பொலிவியா நாட்டுத் தலைனகரம் என்ன சொல்லு பாக்கலாம்?"

"லா பாஸ் சார்"

"வீட்டுலே கம்ப்யூட்டர் இருக்காடா?"

"இல்ல சார் இவன் மண்டையிலேதான் இருக்கு"

"சும்மா இருங்கடா..வீரமணி, உங்க அப்பாவை நாளைக்குஎன் வீட்டுக்கு வரச்சொல்லு"

"எனக்கு அப்பா இல்லை சார்"

"அடடா! சரி நாளைக்கு காலையிலே என் வீட்டுக்கு வறயா? நான் புது கம்ப்யூட்டர் வாங்கப்போறேன். பழைசு சும்மாத்தான் கிடக்கும், நீ எடுத்து உபயோகப்படுத்து."

"காலையிலே அம்மா கூட மீன் இறக்கப் போவோணும் சார். பத்து பத்தரைக்கு மேலே வரட்டா?"
_______________________________________________________________

அலைகள் அறிந்திருக்குமா அன்று இன்னும் எத்தனை திறமைகள் கடற்கரைக்கு வந்திருக்குமென?


இந்தக்கதையை டிசம்பர் 26, 2005 அன்று எழுதினேன். தேன்கூட்டின் இந்தமாதப்போட்டிக்கு சரியான கதை என்று கருதினாலும், போட்டி விதிமுறைகளின் படி போட்டிக்காக சமர்ப்பிக்க முடியாது என்றாலும், பல புதிய பதிவர்கள் மேற்படி நாளுக்குப்பிறகு வந்துள்ளதால் அவர்கள் படிக்கவும், கருத்துக்கூறவும் மீள்பதிகிறேன், நன்றி.

 

blogger templates | Make Money Online