Apr 13, 2012

நாஞ்சில் நாடன் - ஜெயமோகன் - துபாய்

பிரபலங்களைச் சந்திப்பது என்பது எனக்கு எப்போதுமே சங்கடத்தைத் தரக்கூடிய விஷயம். “நீங்க நல்லா எழுதறீங்க” என்பதா? இதை அவர்கள் பலநூறு முறை கேட்டிருக்கமாட்டார்களா? “ ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று பொய் சொல்வதா? “உங்கள் எழுத்துகள் நான் படித்ததில்லை. கொஞ்சம் படித்ததில் எதுவும் பிடிக்கவில்லை” என்று சண்டை மூடோடு செல்வதா? அதற்கும் ஒரு கன்விக்‌ஷன் வேண்டாமா? மையமாகப் பார்த்து “எப்படி இருக்கீங்க” என்று எந்தத்தாக்கத்தையும் உண்டாக்காமல் கைகுலுக்கிவிட்டு வருவதா? என்னது? நான் சாதா ஆசாமி போல நடந்துகொள்வதா?


ஆனால், ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வருகிறார்கள் என்று தெரிந்ததும், இந்தத் தயக்கங்கள் எதுவும் என் மனதில் இல்லை. ஜெயமோகனிடம் கூச்சமே இல்லாமல் சொல்லலாம் “நான் படித்தவரை உங்கள் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது என்று. நாஞ்சில் நாடனிடம் தாராளமாகச் சொல்லலாம் “ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று.

இரண்டு தினங்கள் இருவரையும் சந்தித்தேன். முதல் தினம் இயல்பான நண்பர்கள் சந்திப்பு, இரண்டாம் தினம் இலக்கியக் கூடல் - மேடை நிகழ்ச்சி.

இயல்பான சந்திப்பின்போது நாஞ்சில் நாடன் சுவாதீனமாக பேச ஆரம்பித்தார். நாவல்களில் ஆரம்பித்த பேச்சு வெகுவிரைவாக சலாட் செய்வது எப்படி என்று மாறி, புடலங்காய் சலாடைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தவர், கொஞ்ச நேரம் கழித்த பிறகு “ம்ம், ஓக்கே” என்பதற்கு மேல் அதிகம் பேச முடியவில்லை. ஏன், நிமிடத்துக்கு 300 வார்த்தை பினாத்தும் நானோ, சமயம் பார்த்து கவுண்டர் கொடுக்கும் குசும்பனோ கூட எதுவும் பேசமுடியவில்லை. ஜெயமோகன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். எந்த டாபிக் எடுத்தாலும் ஆழமாகப் பேசுகிறார். காட்டைப் பற்றிப் பேசினால் எது போன்ற மரங்களைத் தவிர்க்கவேண்டும், ஏன் இன்றைய ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் அதிக தொழில்காதலுடன் இருக்கின்றார்கள், தமிழ்நாட்டில் எங்கே காடுகள் இருக்கின்றன, எங்கே என்ன மிருகங்கள் பார்க்கலாம், எப்படி புக் செய்யலாம், எங்கே குழந்தைகளுடன் செல்லலாம்...

ஒரு தலைப்பில் இருந்து அடுத்த தலைப்புக்கு எப்போது செல்கிறார் என்பதைக் கொஞ்சம்கூட ஊகிக்க முடிவதில்லை. சந்திரசேகரேந்திர சரஸ்வதி காந்திக்குக் கூட்டிச் சென்றார், காந்தியில் இருந்து பாரதி.. பாரதி எப்போது வள்ளலார் ஆனார் என்பது இன்னும் எனக்கு விளங்கவே இல்லை.

மூன்று மணிநேரங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகைய ஆனால் இன்ஃபார்மல் பேச்சின் விஸ்தீரணத்தை இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன்,

அமீரகத் தமிழர் மன்றம் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே வித்தியாசமான நிகழ்ச்சியாக இலக்கியக் கூடல் அமைந்திருக்கும். சினிமாப் புகழ்கள் இல்லாமல் சம்பிரதாய குழந்தை நடனங்கள் மிமிக்ரிகள் இல்லாமல், நேரடியாக அறிமுகம், நாஞ்சில் நாடன் ஜெயமோகன் பேச்சு, கேள்வி நேரம் என்று ஜிகினாவே இல்லாத எளிய விழா.

நாஞ்சில் நாடன் பேசுகையில் சொற்கணக்கை வைத்து ஆரம்பித்தார். 1330 குரலில் குறள்களில், குறைந்த பட்சம் 4000 யுனிக் சொற்கள் உபயோகமாகி இருக்கும், கம்பராமாயணத்தில் 12500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான யுனிக் சொற்கள் பிரயோகிக்கப் பட்டிருக்கலாம். கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம் - ஆனால் எவ்வளவு பயன்படுகிறது? படைப்பாளி எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சொற்களின் மரணத்தைத் தள்ளிப் போடும்.. அநியாயச் சுருக்கம்தான் என்னுடைய வெர்ஷன்.. சுவாதீனமாக கம்பனையும் திருக்குறளையும் வாழ்க்கையையும் மேற்கோள் காட்டி தடங்கல் இன்றி மிக அருமையாக அமைந்த பேச்சு.

ஜெயமோகன் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார். மணிமேகலை சென்றடைந்த பளிங்கு மண்டபமும் கையில் இருந்த மாலையில் கண்ணீரும் பெண் நிலைமையை அன்றில் இருந்து ஏன், சிவனும் உமையும் ஆடிய ஆடு புலி ஆட்டத்தில் இருந்தே லா ச ராவின் ஆடு புலி ஆட்டம் வரை தொடர்கிறது என்றார். வண்ணதாசன் கதையும் இடையில் உவமைக்கு வந்தது.

மேடைப்பேச்சுகளைக் கேட்டால் பத்து நிமிடத்துக்கு மேல் அமராத எனக்கு, முழு நேரமும் ஒரே இடத்தில் அமர வைத்த பேச்சுகளுக்கும், பேச்சாளிகளுக்கும், அமீரகத் தமிழர் மன்றத்துக்கும் நன்றி..

 

blogger templates | Make Money Online