Mar 15, 2013

பரதேசி - விமர்சனம்

பாலா படங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சேது கடைசி 20 நிமிடத்தில் மனசைப் பிழிந்ததாலும், ராஜாவாலும் மட்டும்தான் ஒரு சப்பைப்படம் தேறியது என்று தீர்மானமாக நம்புபவன் நான். பிதாமகனிலும் நடிப்பு எல்லாம் நன்றாகவே இருந்தாலும் சினிகலாக எடுக்கப்பட்ட கதையில்லாத படம்தான் அது. நான் கடவுள் - ஏழாம் உலகத்தையும் சிதைத்து, அகோரிகளையும் ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மாஸ் ஹீரோ படம். அவன் இவன் பார்க்கவே இல்லை..

இந்நிலையில், காரணமே இல்லாமல் பரதேசி முதல்நாளே பார்க்க முடிவெடுத்தேன் - இந்த முடிவுக்காக வருந்துவேன் என்ற திண்ணமான எண்ணம் பின்புலத்தில் இருந்தாலும்.

ஆனால் - என் முதல் பாரா எண்ணங்கள் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டது பரதேசி.

1939களில் நடந்த மிகப்பெரிய மனிதவளச் சுரண்டலின் ஆவணமாக்கல்தான் கதை. பஞ்சம் தீண்டிய கிராமத்தில் இருந்து இனிக்க இனிக்கப் பேசும் கங்காணிகளால் மூட்டை மூட்டையாக ஆட்கள் தேயிலைத் தோட்டத்துக்குக் கடத்தப்பட்டு அங்கே கொத்தடிமைகளாக வாழ்ந்தவர்களின் கதை. நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது, மிகை உணர்ச்சிகளுக்கான பல வாய்ப்புகள் இருந்தும், தேவதைக்கதை முடிவெல்லாம் இல்லாமல்.

ஏறத்தாழ முதல் பாதி முழுவதுமே அமைதியான பஞ்சத்தில் அடிபட்ட கிராமம்தான். நாஞ்சில் நாடனின் அழகான வட்டார மொழி வசனங்களோடு - நாஞ்சில் நாடன் என்றதும் நினைவுக்கு வரும் காட்சி “ராசா வண்டிய நேரா விட்டுருவேன்” என்று பந்தியில் அவமானப்படுத்தப்படும் விடலைப் பிச்சைக்காரன் - சிறுகதையாகப் படித்திருக்கிறேன், அந்தச் சிறுகதையின் தாக்கத்தை அப்படியே சினிமாக் காட்சி தரும் என்று நம்பி இருக்கவில்லை.

தெளிவான திரைக்கதையுடன்தான் பாலா இறங்கி இருக்கிறார். தேவையற்ற காட்சிகள் பெரும்பாலும் (பாடல்கள் தவிர) இல்லை. கங்காணியும் முழுக்க வில்லனில்லை - அவனும் அடிவாங்குபவன்; மருந்து கலந்து தரும் ‘டாக்டர்’ கூட கால் நரம்பை வெட்டுமுன் பழிபாவத்துக்கு அஞ்சுகிறான், எதோ கொத்தடிமைகள் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்கள் போல வரும் டாக்டருக்கும் முதல் குறி தன் மிஷனரி வேலைதான். பாலாவின் பழைய படங்கள் போல கிளைமாக்ஸில் வில்லன்களைப் பந்தாடி வெல்லும் கதாநாயகன் எல்லாம் இல்லை - ஆனால் மொத்தமாக படம் தரும் அழுத்தம் மிக மிக அதிகம். ஏறத்தாழ என்னைப்போன்ற ஒரு கல்நெஞ்சனின் கண்ணிலேயே ஈரம் வரவழைத்தது.

குறைகளைத் தோண்டித் தோண்டிச் சொல்லலாம், இனிவரும் பல விமர்சனங்கள் சொல்லும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை - Except - THIS FILM NEEDED ILAIYARAJA - more than any other Bala film.

நிச்சயம் பாருங்கள். குழந்தைகள் வேண்டாம், இதயம் ரொம்ப பலஹீனமானவர்கள் தவிர்த்து/

 

blogger templates | Make Money Online