Oct 7, 2013

இடைவேளை - புத்தக விமர்சனம்

மதிப்பீடுகள் எல்லாக்காலத்திலும் மாறிக்கொண்டுதான் வந்திருக்கின்றன. பாட்டனார் காலத்து குடுமி தந்தை காலத்து கிராப்பாக மாறியது, பவுடர் போடுவது ரவிக்கை அணிவது.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிய மதிப்பீடுகள்தான். தெளிவாக ஓடும் ஓடை போன்று.

ஆனால் 90களின் இறுதியில் தகவல் தொழில்நுட்பம் தாராளமயத்துடன் திருமணம் செய்துகொண்டபின் ஏற்பட்ட மாற்றங்கள் ஆயிரம் அடி மேலிருந்து விழுந்த அருவிபோன்ற மாற்றம். மாற்றங்களின் வேகம் பிரமிப்பூட்டுவதாக இருக்கும் என்று ஆல்வின் டாஃப்ளர் Third Waveல் எச்சரித்திருந்தாலும் வாழும்போதுதான் தாக்கம் பளீரென்று அறைகிறது.

மத்தியவர்க்கத்துக்கு வாழ்நாள் ஆதர்சமே ஒரு வெஸ்பாவும் தர்ட்டிஃபார்ட்டியுமாக இருந்த நாட்கள் சட்டென்று மாறி கனவுகளாக இருந்த வசதிகள் கையருகே வந்து விழுந்தது ஐடி காசால். கால்காசானாலும் கவர்மெண்ட் காசு என்றிருந்த வர்க்கம் எதற்கெடுத்தாலும் கவர்மெண்டைத் திட்ட ஆரம்பித்தது "சான்ஹோசேலே ரோடெல்லாம் பார்க்கணும் நீங்க"

மாற்றங்கள் சீராக இருந்தபோது அந்த மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவமும் இருந்தது. எது நிரந்தரம் எது தற்காலிகம் என்ற புரிந்துணர்வும் இருந்தது. அடுத்த தலைமுறையில் புதிய மாற்றங்கள் பழக்கப்பட்டும் போகலாம்.ஆனால் மாறுதல் நடக்கும் இன்றைய காலகட்டத்தில் வேகமாக மாறும் கியருக்குல் சிக்கிய ஈசல்களாகத்தான் நாம் இருக்கிறோம் - பழைய வேகத்தில் தாக்குப்பிடித்திருக்கக்கூடிய ஈசல்கள், புதுவேகத்தில் அடிபடும் ஈசல்கள் - அப்படிப்பட்ட ஈசல்களைத்தான் இந்தக் கதை பேசுகிறது.

பொருளாதாரத் தேக்கம் (இந்த வார்த்தை அந்த நிகழ்வு தந்த (தரும், தரப்போகும்) வலிக்கான நியாயத்தைத் தராமல் மென்மையாகவே இருக்கிறது) - ஏற்படும்போதுதான் முந்தைய வேலைமுறையில் இருந்த நிரந்தரத்தன்மை, தாய்போல் பரிந்தூட்டும் நிர்வாகத்தின் பழைமையான மனிதாபிமானமும் புரிபடுகிறது. இன்றைய கார்ப்பரேட்டுகள் கூலிகளைத் தங்கள் தேவைக்கேற்ப மட்டுமே சமைக்கின்றன - கருவேப்பிலையாகத் தூக்கிப்போடப்படும்போதுதான் இந்த உண்மையே உரைக்கிறது.

கல்யாணராமன் நல்ல நிர்வாகிதான். ஆனால் அந்த நிறுவனத்துக்காகச்  சமைக்கப்பட்டவன். ஆண்டிவைரஸில் பக் இருக்கிறதா என்று பார்ப்பது அவன் வேலையும் இல்லை, இருந்தால் பதில் சொல்ல பெரிய கார்ப்பொரேட்டில் பல துறைகள் இருக்கின்றன. ஆனால் ஸ்டார்ட்டப்பில் எல்லாப்பணமும் முதலாளிக்கு, எல்லாப் பொறுப்பும் அவனுக்கு என்ற நிலைமைக்குத் தயாரிக்கப்பட்டவன் இல்லை.

ரஞ்சன் நல்ல ப்ளானர்தான். ஆனால் அவனுடைய திட்டங்களைச் செயல்படுத்த குறைந்தபட்ச நேர்மை உள்ள ஆட்கள் தேவை. அறம் பாடிக் காசு பிடுங்கும் நிலைமையில் நூறாண்டுகள் கடந்தும் இருக்கும் துறைகளில் அவன் புத்திசாலித்தனத்துக்குப் பிரயோஜனம் கிடையாது.

ஆர்த்தி நல்ல விற்பனையாளர்தான் - எம் எல் எம்முக்கு அல்ல.

வேலை போனால் என்ன - சமாளித்துக்கொள்ளலாம் - என்ற நிலையில்தான் கதை ஆரம்பிக்கிறது - அதில் beginners luck வெற்றிகளும் தெரியத்தான் செய்கின்றன. ஆனால் ஈமெயிலில் வேலை நடக்காது, சம்பளத்தை அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் டெபிட் செய்யாது, தேவையான ஆட்களை எச் ஆர் தராது - போர்வையைக் கழட்டிவிட்ட நிஜ உலகம் கதாபாத்திரங்களுக்குத் தன் தரிசனத்தைக் காட்டுகிறது.

அன்றைய நாளும் அன்றைய டார்கெட்டும் அன்றைய ப்ரசண்டேஷனுமே புரிந்த கார்ப்போரேட் வாழ்க்கை வேறு. 16 மணிநேரம் வேலையே கதியாக இருந்தாலும் நேற்று நினைவில் இல்லை, நாளை பற்றி நினைக்க நேரமில்லை. ப்ரசண்டேஷன் முடிவிலான கைதட்டல்களும், இன்க்ரிமெண்ட்களும் நம் திறமையைப்பற்றிய லார்ஜர் தன் லைஃப் பிம்பம் நமக்குள் ஏற்பட்டுவிடுகிறது. எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் சமாளித்துவிடமுடியும் என்ற நிஜத்தை மீறிய எண்ணங்கள் நிஜத்தைச் சந்திக்கும்போது சுக்குநூறாகிறது.  நம் திறமைகள் குறிப்பிட்ட கூலித்திறனுக்காக உருவாக்கப்பட்டவை என்ற உண்மை  நம்மைப்பார்த்துச் சிரிக்கும்போது காலம் கடந்துவிட்டிருக்கிறது.


மொத்தமாக நாவலைப் படிக்கவே 1 மணிநேரம்தான் தேவைப்பட்டது என்னும் அளவுக்கு வேகம் இருந்தாலும்.. படித்து முடித்துவிட்டு நீண்டநேரம் யோசிக்க வைத்த கதை. 

புதிய களம்தான் - ஆனால் இன்றைய கார்ப்போரெட் கூலிகள் சுலபமாக அடையாளம் காணக்கூடிய களம் - அவர்கள் வாழ்க்கையைப்பற்றிய புதிய கோணத்தைக் காட்டக்கூடியது என்பதால், சிந்திக்கவைக்கும் என்பதால் - நிச்சயம் படித்தே ஆகவேண்டிய நாவல்.

நன்றி வெங்கடேஷ்.




 

blogger templates | Make Money Online