Dec 29, 2005

அவள் விகடனுக்கு நன்றி (29 dec 05)

தன் மீதான கிண்டலையும் நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதை தன் பத்திரிக்கையிலேயே பிரசுரமும் செய்ததன் மூலம் ஒரு நல்ல முன் உதாரண்த்தைக்காட்டி இருக்கிறது அவள் விகடன்.

படங்களோடும், தேவைப்பட்ட இடங்களில் குறிப்புகளோடும் சிறந்த முறையில் பிரசுரம் ஆகி இருக்கிறது.

நான் இன்னும் அச்சுப்பிரதியைப் பார்க்கவில்லை. இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று தோன்றுகிறது. முதல் முறையாக என் எழுத்து அச்சில் என்பது உறசாகத்தை அதிகப்படுத்துகிறது.

அவள் விகடன் மூலமாக இங்கே வந்த வாசகர்களையும் வரவேற்கிறேன். நீங்கள் தேடும் அந்தப்பதிவுக்குச் செல்ல
இங்கே சுட்டுங்கள். மற்ற பதிவுகளையும் படிக்கலாம், தப்பில்லை:-)

உங்கள் கருத்துக்களை sudamini at gmail dot com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Dec 25, 2005

திறமைக்கு பல முகம் (26 Dec)

நல்ல ஸ்பீடு போடறே - நம்மகிட்டே மீட்டர் இல்லை - எப்படியும் 90 மைலுக்கு குறையாது"

"நாளைக்கு பிராக்டிஸ் போது பழைய பால்லே ரிவர்ஸ் ஸ்விங் பிராக்டிஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்."

"சார் நாளைக்கும் மேட்லேதான் பிராக்டிஸா? மேட்லேயிருந்து பிட்ச்க்கு மாறும்போது லெங்த் சரியா வர மாட்டேங்குது!"

"அது சரி! ச்ரீனாத்தும் பாலாஜியும் எந்நேரமும் ஸ்டேடியத்துலேதான் பிராக்டிஸ் பண்ணாங்களா என்ன? எதுக்கும் தயாரா இருக்கறவனுக்குத்தான் சான்ஸு!"

'திங்கக்கிழமை காலையிலேயே எனக்கு சான்ஸ் கிடச்சா நல்ல இருக்கும் சார்"

"அது நம்ம கையிலேயா இருக்கு? நாளைக்கு ஃபுல் டே நீ நல்லா பிராக்டிஸ் பண்ணு. ஆஃப் அன்ட் மிடில்லேயே கன்ஸிச்டண்டா போடு.. கன்ட்ரோல் யுவர் நெர்வ்ஸ். நீ நிச்சயமா செலக்ட் ஆயிடுவே. நாளன்னிக்கு செலக்ஷ்ன் மேட்ச் நிச்சயமா உன் வாழ்க்கையிலே மறக்க மாட்டே பாரு!"

" சரி சார் நாளைக்கு காலையிலே கரெக்டா எட்டு மணிக்கு வந்துடறேன். வண்டிய எங்கே பார்க் பண்ணட்டும்?"

"கண்ணகி சிலை எதிருலே பண்ணிடு. என் வண்டி இல்லைன்னா ஒரு மிஸ்டு கால் கொடு"
____________________________________________________________
"எதுக்காக கூப்பிட்டு அனுப்பிச்சாராம்?"

"நானே மறந்து போன விஷயம். ஆபரேஷன் லிட்டில் ட்ராப்னு ஒரு ப்ராஜெக்ட் செஞ்சேனே ஞாபகம் இருக்கா?"

"வாட்டர் மேனேஜ்மென்ட் பத்தித்தானே?"

"ஆமாம். அப்பவே செக்ரடரிக்கு ரொம்ப பிடிச்சிருந்துது. இவ்வளோ சிம்பிளான சொல்யூஷனா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டார். நான் சொன்னேன், சிம்பிளா இருக்கற பிளான் தான் சார் ஃபீஸிபிளா இருக்கும்னு சிரிச்சார்"

"ஆமாம் - அது நடந்து ஆச்சு அஞ்சு வருஷம்"

"எங்கே இருக்கே நீ? நான் ரிட்டயர் ஆயே ஆறு வருஷம் ஆச்சு! சரி -இப்போ அதுக்கு மறுபடியும் உயிர் வந்திருக்கு!"

"நாளைக்கு வாக்கிங் போய் திரும்பி வந்த வுடனே அந்த பேப்பரையெல்லாம் எடுத்து தூசி தட்டணும்"

"ஒம்பதரைக்குள்ளே வந்துருவேளோல்லியோ?"
_________________________________________________________________
"என்னடா சூசை - மறுபடியும் வலை அறுந்தா போச்சு?"

"அதை ஏன் கேக்குறே.. எனக்கு நேரமே சரியில்லை.. தொடர்ந்து மூணு முறை மகசூல் ஒன்னும் சரியில்லேன்னு இன்னும் கொஞ்சம் கடலுக்கு உள்ளாற போயி வலை அடிச்சோம்.. ரெண்டு நாள் கழிச்சுப்பாத்தா வலையிலே ஓட்டை.. சுறா ஏரியா பக்கம் அடிக்கடி போனதில்லையா.. வகையா மாட்டிகிட்டோம்."

"கிட்டானுக்கு நேத்து சரியான அறுவடையாமே.."

"அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு துரை. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை கூட அவனுக்கு வலை அறுந்ததே இல்லை."

"அது மச்சம் இல்லடா மாக்கான் -- அவன் கடல்ல இறங்கறதுக்கு முன்னாடி ஆபீஸரைப்பாத்து பேசாம போறதில்லே. எங்கே என்ன மீன் கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டு வலை வீசுறான், குத்து மதிப்பா வீசுற உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லையா?"

"நீ சொல்றதும் சரிதான். அடுத்த முறை நானும் அவனைக்கேட்டுகிட்டே நானும் போறேன். எங்க இருப்பான் இப்போ?"

"இப்போ தெரியாது.. நாளைக்கு காலையிலே படகுத்துறை பக்கமாத்தான் இருப்பான்."
________________________________________________________________
"வீரமணி நம்ம சுதந்திர தினம் என்ன கிழமைடா?"

"வெள்ளிக்கிழமை சார்"

"சரி 2010 ஆம் வருஷம் சுதந்திர தினம் என்ன கிழமையிலே வரும்டா?"

"ஞாயித்துக்கிழமை சார்"

"சரி பொலிவியா நாட்டுத் தலைனகரம் என்ன சொல்லு பாக்கலாம்?"

"லா பாஸ் சார்"

"வீட்டுலே கம்ப்யூட்டர் இருக்காடா?"

"இல்ல சார் இவன் மண்டையிலேதான் இருக்கு"

"சும்மா இருங்கடா..வீரமணி, உங்க அப்பாவை நாளைக்குஎன் வீட்டுக்கு வரச்சொல்லு"

"எனக்கு அப்பா இல்லை சார்"

"அடடா! சரி நாளைக்கு காலையிலே என் வீட்டுக்கு வறயா? நான் புது கம்ப்யூட்டர் வாங்கப்போறேன். பழைசு சும்மாத்தான் கிடக்கும், நீ எடுத்து உபயோகப்படுத்து."

"காலையிலே அம்மா கூட மீன் இறக்கப் போவோணும் சார். பத்து பத்தரைக்கு மேலே வரட்டா?"
_______________________________________________________________

அலைகள் அறிந்திருக்குமா அன்று இன்னும் எத்தனை திறமைகள் கடற்கரைக்கு வந்திருக்குமென?

Dec 21, 2005

klueless!!

மோகன் தாஸ் முதல்லே சொன்னாரு; ஜெயிச்சுட்டேன்னு.. அப்போ நான் ட்ரை பண்ணா ஏதோ தப்பா ஆச்சு, அதனால அவர் மேலேயே கோபிச்சுக்கிட்டேன் (அப்புறம் மன்னிப்பு கேட்டுட்டேன்னு வையுங்க!)

அப்பாலே தேசிகனும் ஜெயிச்சுட்டேன்னு சொன்னாரு, எனக்கு 12 ஆவது லெவல்லேயே இருக்கிறதாலே ஒரே தாழ்வு மனப்பான்மை ஆகிப்போச்சு.
சரி ரொம்ப கூச்சம் பாக்கக்கூடாதுன்னு கொஞ்சம் திருட்டு வழியிலே இறங்கினேன் (படுபாவிங்க - ஸ்பாயிலர் கூட ஒழுங்கா புரியற மாதிரி போட மாட்டென்றாங்க) கொஞ்சம் திருட்டு வேலை, கொஞ்சம் சொந்த மூளைன்னு ஒரு வழியா முடிச்சுட்டேன். (என் மூளைய மட்டும் வச்சு நிச்சயமா முடிக்க முடிஞ்சிருக்காது)

என்ன மேட்டர்னு தெரியாம கேக்கரவங்களுக்கு: இது iimi - iris க்ளுலெஸ்னு ஒரு கேம், மூளைக்கு வேலை (ரொம்பவே) - 30 லெவல் முடிச்சாக்க, இதோ கீழே தெரியுதே அப்படி ஒரு கோட்வார்டும், ஈ-மெயில் முகவரியும் கொடுப்பாங்க. மூணு நாள் ஆச்சு எனக்கு!

கூகுளாண்டவருக்கு கூழ் ஊத்தறதா வேண்டுதலை!

Image hosted by TinyPic.com

Dec 15, 2005

தேர்தல் -உள்குத்து

தேர்தல் என்னும் முறையில் குறைகளுக்கான வாய்ப்புகள் இருக்கலாம்; மக்களின் உண்மையான எண்ணங்கள் பல நேரங்களில் வாக்கு எண்ணிக்கையில் பிரதிபலிக்கப்படாமல் போகலாம். இதைத்தான் நான் நேற்றைய கதையில் கூறி இருந்தேன்.

உடைக்கப்படலாம் என்பதாலேயே தேர்தல் என்பது ஒரு ஒவ்வாத வழிமுறை ஆகிவிடாது - வேறு சிறந்த வழி கண்டுபிடிக்கப்படும்வரை, தேர்தல்கள் இருந்துதான் ஆகவேண்டும், குறுக்கு வழிகள் பயன்படுத்துபவர்களை (பிடிக்க முடிந்தால், சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்டால்) தண்டிக்க வேண்டும்.

இது ஒரு உள்குத்து உள்ள பதிவு. இதன் இரண்டாவது, மூன்றாவது அர்த்தங்களை கண்டுபிடிப்போருக்கு 20 பின்னூட்டங்கள் இலவசம்.

Dec 14, 2005

மக்களால், மக்களுக்காக (14 Dec 05)

என் பீஹார் வாழ்க்கையில் சந்தித்த இன்னொரு சம்பவம் இது. பெரும்பாலும் உண்மைச்சம்பவத்துடன், கொஞ்சம் கற்பனையும் சேர்க்க வேண்டிவந்ததால் சிறுகதையாக எழுதிவிட்டேன்.

இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் முறைகேடுகள் குறைவு என்றே செய்திகள் வருகின்றன. உண்மையாக இருந்தால், பீஹார் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான முதல் அடி இங்குதான் ஆரம்பிக்கிறது என்பது என் அபிப்பிராயம்.

____________________________________________________________________

மக்களால்..மக்களுக்காக...


பீஹார் ஏழைகளின் ஊர் என்று இந்தக்கட்டடத்தைப் பார்த்தபின்
யாராலும் சொல்ல முடியாது.


நீண்ட தூரம் உயர்ந்திருந்த மதில் சுவரிற்கு நடுவில் இரண்டு
ஆள் உயர கிரில் கேட் ஷர்மாவைப்பார்த்து முறைத்தது.


பளபளக்கும் பித்தளையில்"பரத் யாதவ்" பெயர்ப்பலகை எளிமையாக
அவரின் பண படைபலத்துக்கும் அரசியல் ஆள்பலத்துக்கும் தொடர்பில்லாமல்
இருந்தது.


தலைவரை எத்தனையோ முறை வேறு இடங்களில் பார்த்து இருந்தாலும்
வீட்டில் இதுதான் முதல் முறை. எப்படி அவரை சந்திக்கப்போகிறோம் என்ற
அடிவயிற்றுக்கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.


நிச்சயம் கோபமாகத்தான் இருப்பார்.


உள்ளே செல்லும் வழியைத் தேடிக்கொண்டிருக்கும்போதே
வாட்ச்மேன் சின்ன வாசல் வழியாக வெளியே வந்து "யாரு" என்றான்.


"சாஹப் வரச்சொல்லியிருந்தாரு. ஷர்மா, சிமெண்ட்டு ஃபேக்டரி
யூனியன் லீடர்"


"உள்ளே போங்க, நேராப்போயி வலதுகைப்பக்கம்"


பங்களாவுக்குள்ளே கார் செல்ல தார் சாலை - நம்
ஊரின் சாதாரணச் சாலை எதுவுமே இந்த அளவு பளபளப்பாய் பார்த்ததில்லை. புங்கமர
நிழலும், பசேலென புல்தரையும் இந்த வெப்ப பூமியை மலை வாசஸ்தலம் போல
ஆக்கிக்கொண்டிருந்தன. ஐந்தே நிமிடங்களில் வெள்ளைச்சட்டை கறுப்பாகிவிடும் தொழிற்சாலை
மாசிலிருந்து இவ்வளவு அருகில் இப்படி ஒரு ரம்யமான சூழல். பணம் இருந்தால் எதையும்
அமைத்துக்கொள்ளலாம்.

மர நிழலில் ஊஞ்சலில் அமர்ந்து
கட்சிக்காரர்களுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த தலைவரைப்பார்த்ததும் பயம்
அதிகமாகிவிட்டது.


"53 ஆம் வார்டு நிலவரம் என்ன?"


"அதைப்பத்தி கவலைப்படாதீங்க அண்ணே. அதெல்லாம் எப்பவும் நம்
கையிலேதான். மேம்பாலம் வருதுன்னு சொன்னதிலேயே அவங்க குஷி ஆயிட்டாங்க. 9 ஆம் தேதி
ராத்திரி கொஞ்சம் செலவு செஞ்சுட்டா அத்தனை ஓட்டையும் அள்ளிடலாம். இந்த ஃபேக்டரி
பிரச்சினைய மட்டும் கொஞ்சம் சரி பண்ணிட்டா.."


"இதோ ஷர்மாவே வந்துட்டான் - சாவே இல்லைடா உனக்கு." அவர்
வரவேற்பில் கோபம் தெரியவில்லை.


"உக்காரு. என்ன சாப்பிடறே? துக்காராம், இன்னோரு க்ளாஸ்
கொண்டா" - இது கிண்டலா நிஜமா - தெரியவில்லை. பலவருட அரசியல் நடிப்பு அனுபவத்தில்
ஊறிப்போன அவர் முகபாவத்தில் இருந்து என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது
முடியாத காரியம்.


'டேய் ராஜு, ஷர்மாவுக்கு நிலவரத்தை சொல்லுடா."


"ரொம்ப டைட்டாத்தான் இருக்குது பொஸிஷன். போன முறை
ஜெயிச்சப்பவே வித்தியாசம் கம்மிதான். அப்ப ஃபேக்டரி ஓட்டு மொத்தமா நமக்கு
விழுந்துச்சு. மேல் ஓட்டுக்கு அவங்களும் ரெண்டு லாரியிலே ஆள் கொண்டு
வந்திருக்காங்க. என்ன செய்தாலும் ஃபேக்டரி ஓட்டு யாருக்கு விழுதோ அவங்கதான் ஜெயிக்க
முடியும்." ராஜு தலைவரிடம் ரொம்ப நாளாக இருக்கிறான். வேறு யாரும் இவரிடம் இவ்வளவு
நேராக உண்மை பேச முடியாது.


"என்னப்பா சொல்லறாங்க உன் ஃபேக்டரியிலே?" ஷர்மாவிற்கும்
உண்மை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.


"இந்த முறை ரொம்பக் கஷ்டம்தான் தலைவா. யூனியன்
எலெக்ஷன்லையே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் நான் ஜெயிக்க முடிஞ்சது.அதுவும் தவிர போன
வருஷம் நடந்த ஆக்ஸிடென்டுலே செத்தவங்களுக்கு நிதி வாங்கிக் கொடுக்கறதுலே
எதிர்க்கட்சிக்காரங்க முந்திகிட்டாங்க."


"போன வாரம் நீங்க வந்து போன பிறகு சிந்தாமணி வந்து
ஓட்டுக்கேட்டாரில்ல, அப்போ அவர் தொழிலாளர் நலனுக்குன்னு வாக்குறுதி நெறய சொல்லி ஆசை
காமிச்சுட்டு போயிட்டார்."


"மிஷ்ரா தீவிரமா கேட் மீட்டிங் போட்டு பிரசாரம்
செஞ்சுகிட்டு இருக்கான். வொர்க்கருங்க அந்தப்பக்கம்தான் சாயறாங்க."


"இதெல்லாமா ஒரு பிரச்சினை? ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கணும்
சொல்லு."


"அது இந்தமுறை வேலைக்கு ஆகாது சார். அவனுங்களும் பணத்தை
தண்ணியா செலவு செய்யறாங்க."


"சரிதான் - அப்ப உன்னை நம்பி பிரயோஜனம் இல்லே?"


"மிஷ்ரா கேட் மீட்டிங் போடறான் - நீ என்ன புடுங்கறே? உன்
எலெக்ஷனுக்கு தண்ணியா பணத்தை அள்ளி விட்டேனே? நன்றி விசுவாசம் இருக்கா
உனக்கு?"


"உன் சோம்பேறித்தனத்தாலே நான் தோத்துப் போகப் போறேன்.
அப்படி மட்டும் ஆச்சுன்னா உன்னை சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதே" கோபம்
உச்சிக்குப் போய்விட்டது.


"அந்த பூத்துங்கள்லே நம்ம ஆளுங்களை நுழைக்க முடியுமாடா?
என்றார் ராஜுவைப் பார்த்து.


"கஷ்டம் தலைவா. வொர்க்கருங்க எல்லாம் காலையிலேயே க்யூவிலே
நின்னுடுவானுங்க. நாம நம்ம வேலைய 10 மணிக்கு மேலதான் ஆரம்பிக்கவே
முடியும்"


"அப்ப ஒரே ஒரு வழிதான் இருக்கு. நீ என்ன பண்ணுவியோ
எனக்குத் தெரியாது. எலெக்ஷன் அன்னிக்கு உன் ஃபேக்டரியிலிருந்து ஒரு பய ஓட்டுப் போட
வரக்கூடாது. நான் நம்ம ஆளுங்களை உட்டு கவனிச்சுக்கறேன்."


"ஒரு திட்டம் இருக்கு தலைவரே" ஏற்கனவே மனதுக்குள்
ஒத்திகை செய்திருந்த திட்டத்தை விவரித்தான் ஷர்மா.


பொறுமையாக முழுதும் கேட்ட தலைவர் "சிந்தாமணி சும்மா
விடுவானா?" என்றார்.


"முன்னே நிக்கப் போறது நான் இல்லையே, மிஷ்ராதானே - அவராலே
ஒன்னும் பண்ண முடியாது"


"சரி, இத்தனை பேர் ஓட்டுப்போடவரலைன்னா அது எல்லாருக்கும்
தெரிஞ்சுடாதா?"


"அதுதான் பதினோரு மணிக்கு எல்லாரையும்
விட்டுடறோமே"


"வொர்க்கருங்க ஓட்டு எல்லாம் ஏற்கனவே போட்டிருந்தா
பிரச்சினை பண்ண மாட்டாங்களா?"


"எல்லாரும் பிரச்சினை பண்ண மாட்டாங்க.. மிஷ்ராவோட ஆளுங்க
ஒரு நூறு பேர்தான் தொந்தரவு பண்ணுவாங்க.. அவங்க லிஸ்ட் நான் தர்றேன்.. அதை மட்டும்
விட்டுவைச்சிடச் சொல்லுங்க 10000 ஓட்டுலே ஒரு நூறு ஓட்டு போனாத்தான்
என்ன?"


கொஞ்சம் யோசித்துவிட்டு போனை எடுத்த தலைவர் "டி எஸ் பி எச்
கே சிங் இருக்கானா" என்றார்.


திரும்பி நடக்கும்போது துக்காராம் ஷர்மாவுக்காக க்ளாஸ்
கொண்டுவந்துகொண்டிருந்தான்.


**********************************************************************************************************************************


இன்று தேர்தல். திட்டம் மட்டும் பலன் அளிக்கவில்லை என்றால்
என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. யாதவுக்கு தோற்றால் பதவி
மட்டும்தான் போகும்.


போலீஸ் ஜீப் ஃபேக்டரி வளாகத்துக்குள்ளே நுழைந்ததைப்
பார்த்தான். இப்போது நான் இங்கே இருக்கக்கூடாது. கேண்டீனுக்குள்
சென்றுவிடலாம்.


டீ சாப்பிட்டு முடிப்பதற்குள் வாசலில் ஆரவாரம் தொடங்கி
விட்டது.


"ஷர்மாஜி இங்கே இருக்கார்.. சாஹப், அசெம்பிளி லைன் ஜாவை
போலீஸ் போட்டு அடிக்கரானுங்க"


"இங்கேயா? ஃபேக்டரி காம்பவுண்டுக்குள்ளே போலீஸுக்கு என்ன
வேலை? எவ்வளவு திமிர் இருந்தா நம்ம வொர்க்கரு மேல ஒருத்தன் கை வைப்பான்?" என்று
ஆக்ரோஷத்துடன் நடந்து செல்லும் வழியில் போலீஸ் ஜீப் வேகமாகச்
செல்வதைப்பார்த்தான்.


"எல்லாரும் வேலைய நிறுத்துங்க - ஒரு தொழிலாளியை போலீஸ்
பிடிச்சிகிட்டு போறானுங்க. எல்லாரும் கேட் வாசல்லே கூடணும்"


"என்னய்யா நடந்தது? யாரு பார்த்தவன்?"


"நான் பார்த்தேனுங்க அய்யா." என்று முன்வந்தான் குப்தா.
நல்லதுதான் - இவன் மிஷ்ரா விசுவாசி.


"போலீஸ் அவங்க ஜீப்புக்கு ஜாவை பெட்ரோல் போடச்சொன்னாங்க.
இவன் எஸ்.ஈ சாஹப் கையெழுத்து இல்லாம போட மாட்டேன்னு சொன்னான். அதுக்குள்ளே அவங்க
நாயே உனக்கு இவ்வளவு திமிராடான்னு கேட்டு ஜாதிய கேவலமாப் பேசி திட்டினாங்க,
அப்புறம் அடிச்சு ஜீப்புலே ஏத்துனாங்க"


"நான் போயி ஏன் இவரை பிடிச்சுகிட்டுப் போறீங்கன்னு
கேட்டதுக்கு இவன் கையிலே ஐ டீ கார்டு இல்லே, சேஃப்டி ஷூ போடலே, அதனாலதான் அரெஸ்ட்
செய்யறோம்"னு சொல்லிட்டு வண்டியக் கெளப்பிகிட்டு போயிட்டாங்க."


கூட்டம் கூடிவிட்டது.


"தோழர்களே. போலீஸின் அதிகார வெறி வரம்பில்லாமல்
ஆடத்தொடங்கிவிட்டது. இன்று நம் சக தொழிலாளியை உப்புப்பெறாத, அவர்களுக்கு துளியும்
சம்பந்தமில்லாத காரணங்களைக் காட்டி அடித்து உதைத்து இழுத்துப் போயிருக்கிறது
போலீஸ். இதை நாம் பொறுத்துக்கொண்டு இருக்கத்தான் வேண்டுமா? அவர்களுக்கு அதிகாரம்
பலம் என்றால் நமக்கு ஒற்றுமைதான் பலம். சீருவோம், காவல் நிலையத்தை நோக்கி,
விடுவிப்போம் நம் தொழரை." என்று ஷர்மா முழங்கும்போது அவசரமாக மிஷ்ரா வருவதைப்
பார்த்தான்.


"கொண்ட கொள்கையில் வேறுபாடுகள் இருப்பினும், தொழிலாளர்
நலன் காப்பதில் நானும், தோழர் மிஷ்ராவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல என்பதை
அனைவரும் அறிவீர். போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தலைமை தாங்க
என் சகோதரன் மிஷ்ராவை அழைக்கிறேன்."


ஷர்மாவின் பேச்சு மிஷ்ராவை ஒரு கட்டத்தில் சிக்க
வைத்துவிட்டது. இந்தக்கூட்டத்தின் மனோநிலையில் அவன் வேறு என்ன சொன்னாலும்
எடுபடப்போவதில்லை.


"வாங்க மிஷ்ரா, தொழிலாளர் ஒற்றுமையா, போலீஸ்
அடக்குமுறையான்னு ஒரு கை பார்த்துறலாம்"


"எஸ்.ஈ சாஹப் என்ன சொல்லறாருன்னா" இழுத்தான்
மிஷ்ரா..


"அவருக்குத் தொழிலாளர் வலி எங்கே தெரியப்போகிறது? இப்போது
நீங்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வெறும் சட்ட வழிமுறைகள்
அடிக்கப்பட்ட, ஜாதி பெயர் சொல்லித் திட்டப்பட்ட நம் தோழனுக்கு உதவுமா?
அவர்களுக்கு புரிந்த மொழியில்தான் நாம் பதில் சொல்ல வேண்டும்" ஷர்மாவின் செயற்கையான
மேடைப்பேச்சு மொழி மிஷ்ராவுக்கு நிலவரத்தைப் புரியவைத்துவிட்டது. எந்த
எதிர்ப்பேச்சும் இப்போது செல்லுபடியாகாது.


மிஷ்ரா," தோழர்களே, அமைதியான முறையில் போராடுவோம், நீதி
கேட்போம்" என்று முழங்க "அதுதான் சரி. ஆனால் நம் தோழர் ஜா அங்கு காவல் நிலையத்தில்
என்ன பாடுபடுகின்றாரோ! அதைப் பார்த்தும் உணர்ச்சிவசப்படாமல், கல்நெஞ்சோடா இருக்க
முடியும்" என்றான் ஷர்மா. கூட்டத்தில் இருந்த அவன் ஆட்களுக்கு செய்தி
சென்றடைந்துவிட்டது.


கால்பந்து மைதானத்துக்கு உள்ளே அடங்கி இருந்தது காவல்
நிலையம். கூட்டம் மைதானத்தை அடைந்தபோது வழக்கமான காவலர்கள் தவிரவும் தேர்தலுக்காக
வந்திருந்த சிறப்புக் காவல் படையும் தயார் நிலையில் இருந்தது.


"உங்களில் யாராவது ஐந்து பேர் மட்டும் காவல் நிலையத்தின்
உள்ளே வாருங்கள்" என்று போலீஸ் மெகா ஃபோனை வைத்துக் கூவிக்கொண்டிருக்கும்போதே,
தொழிலாளர் பக்கத்திலிருந்து கற்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன..


போலீஸார் கேடயங்களுடனும் லத்தியுடனும் உள்ளே புகுந்து
தாக்க, தொழிலாளர்களும் தங்கள் கையில் இருந்த ஆயுதங்களால் திருப்பித்தாக்க
ஆரம்பித்தனர்.


பொதுவாகவே நிலக்கரியும் சிமெண்ட்டுமாக தூசு பறக்கும்
தொழிற்சாலைப்பகுதியில் அப்போது கலவரத்தின் புழுதியும் சேர்ந்து கண்கள் மறைத்தன.
எப்படி, எப்போது, யாரால் என்று தெரியாத வேளையில் காவல் நிலையத்தின் முன் முகப்பு
தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.


அதுவரை கூட்டத்தை அடக்க மட்டும் ஆயுதங்களைப் பிரயோகித்த
போலீஸார் கோபம் கொண்டு தாக்க, தொழிலாளர் பக்கம் வலுவிழக்கத் தொடங்கியது.
ஆத்திரத்துடன் கத்தும் குரல்கள், அடிவாங்கித் துடிக்கும் குரல்கள், அடுத்தவனை
ஆணையிடும் குரல்கள் - எந்தக்குரலும் தனிப்பட்டுத்தெரியாமல் ஒரே கலவர்க்குரலாக
ஒலித்தது.


ஒரு மணி நேரம் கழித்து கலவரம் அடங்கியது. இப்போது
மைதானத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார்.


"நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிடும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்படுவார்கள்" என்றார் டி.எஸ்.பி.


அடிபட்டிருந்த மிஷ்ரா, "இன்று தேர்தல் அல்லவா? நாங்கள்
எப்படி வாக்களிப்பது?"


ஷர்மாவும்,"வாக்களிக்கும் புனிதக் கடமையைத் தடை செய்ய
யாருக்கும் உரிமை இல்லை."


உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வந்த டி.எஸ்.பி,
"உங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 50,
50 பேராகச் சென்று வாக்களித்துவிட்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்"
என்றார்.ஷர்மாவைப்பார்த்துப் புன்னகைத்தாரா என்ன?


ரத்தம் வழிய அவசரமாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்
செல்லப்படும் ஸ்ட்ரெட்சர்களைப்பார்த்து ஷர்மா மிஷ்ராவிடம்,"த்சொ.. த்சொ.எவ்வளவு
ரத்தம்.. இந்தப் போலீஸ்காரனுங்களுக்கெல்லாம் இரக்கமே
கிடையாதா?"என்றான்.

Dec 5, 2005

சுந்தர ராமசாமி - சில கேள்விகள் (வி ப) - 05 Dec 05

சுந்தர ராமசாமி மறைந்து ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே, இப்போது இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களில் பலருக்கும் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரையின் சுவாரஸ்யமே, எனக்கு சு.ரா வைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது என்பது தான். சு.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுந்தர ராமசாமியை எனக்கு மிகக் கொஞ்சமே தெரியும். அவரின் எந்தப் படைப்புகளையும் நான் இதுவரை முழுமையாக வாசித்திருக்கவில்லை.

எண்பதுகளில் அவருடைய "ஜே.ஜே சில குறிப்புகள்" உச்சத்தில் பேசப்பட்டபோது நான் ப்ளஸ் டூ மாணவன். ஆனாலும், அப்போது அந்த நாவலின் தலைப்பும், அதை எழுதியவரின் பெயரும், அது புதுமையான நாவல் (அப்போதெல்லாம் நவீனத்துவம் என்ற வார்த்தை அவ்வளவு பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன்) என்று நான் அந்தக் காலத்தில் மதித்த பல பெரிய எழுத்தாளர்கள் கொண்டாடியதும் மனதில் பதிந்து விட்டது. புதுமைகளோடு பரிச்சயம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேனும், சில ஒத்த சிந்தனை உடைய நண்பர்களுடன் அந்த நாவலை படிக்கத் தலைப்பட்டேன். எதுவும் புரியவில்லை. எனவே, அங்கங்கே சில பத்திகளைப் படித்ததோடு அந்த முயற்சி நின்று போய்விட்டது. எனினும், சுந்தர ராமசாமி என்ற பெயரும் அதனுடன் ஸ்லாகிக்கப்பட்ட புதுமையும் மனதில் தங்கிவிட்டன. அதன் விளைவாலேயே "ஒரு புளியமரத்தின் கதை"யும், பசுவய்யா என்பது அவர் தான் என்பதும் கூடத் தெரிந்து இருந்தது.

சு.ரா இறந்து போய்விட்டார் என்ற செய்தியும் அதைத் தொடர்ந்து பல கட்டுரைகளும், அஞ்சலிக் குறிப்புகளும் வந்த நேரத்தில் திடுமென சு.ரா வைப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. நவீனத்துவம் என்ற சொற்பிரயோகமும், "தமிழ் நவீனத்துவத்தின் லட்சிய உருவகம்" அவர் என்றும், அவருடையது " நவீனத்துவ சிந்தனைகளின் இறுக்கங்களில் கட்டுண்டு அலைக்கழிந்த ஆன்மா" என்றும் படிக்கப் படிக்க ஒரு ஆசை என்னை உந்தியது. இந்தத் தருணத்தில் அவரின் நாவல்களைப் படித்து அவரை உள்வாங்கிக் கொள்வதை விட, அவரின் கட்டுரைகளைப் படித்தால் அவரை இன்னும் தெளிவாகவும் விரைவாகவும் இனம் கண்டு கொள்ளலாம் என்று பட்டது. அதற்கு வாகாய், மதுரையில், தீபாவளி ரம்ஜான் விடுமுறைகள் மற்றும் மழை போன்ற தடைகளையும் மீறி, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திறந்திருந்த ஒரே புத்தகக் கடையில் அவரின் "ஆளுமைகள் மதிப்பீடுகள்" என்னும் முழுக் கட்டுரைத் தொகுப்பு 'சட்'டெனக் கிடைத்தது. எனக்கு மிகுந்த சந்தோஷம். கிட்டத்தட்ட எழு நூறு பக்கங்கள் கொண்ட முழுத் தொகுப்பு. எல்லாம் படிக்க முடியவில்லை ( நமக்கு அலுவலகம் என்று ஒன்று உள்ளதே??). பின்னர், நவம்பர் மாத உயிர்மை இதழின் அட்டையில் சு.ரா வின் புகைப்படத்தைப் பார்த்ததும் அதையும் வாங்கிப் படித்தேன். 'குமுதம் தீரா நதி'யில் அஞ்சலிக் கட்டுரைகள் வந்திருந்தன. இவற்றைப் படிக்கப் படிக்க சு.ரா என்றொரு பிம்பம் மனதில் துலங்கியது. இப்படிப்பட்ட கட்டுரைகளின், அஞ்சலிக் குறிப்புகளின் நோக்கமே அதுதான், இல்லையா??

அதிலும், உயிர்மையில் ஜெயமோகன் எழுதி இருக்கும் கட்டுரை நாற்பது பக்கத்திற்கும் மேலே (சு.ரா ஜீவாவைப் பற்றி எழுதிய கட்டுரை சுமார் பத்துப் பக்கம் தான்). ஒரு படைப்பாளியின் ஆளுமையை நிச்சயம் பக்கக் கணக்கை வைத்து எடை போட முடியாது தானே? ஜெயமோகனின் அந்தக் கட்டுரை சு.ரா வின் பல முகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருந்தது என்னவோ மிக மிக உண்மை. ஜெயமோகன் தவிர, மனுஷ்ய புத்திரன், சுகுமாரன், கோகுலக் கண்ணன், சி.மோகன், பெருமாள் முருகன், சங்கர ராமசுப்ரமணியன் என்று பலரின் அஞ்சலிகளைப் படித்ததும் சு.ரா பற்றி தோன்றிய சித்திரம் மிக விசித்திரமானது. புதிரானதும் கூட. மனுஷ்ய புத்திரன் குறிப்பிடுவது போல, அது ஒரு புனிதரின், ஒரு பிசாசின், பேரன்பு கொண்ட ஒரு தந்தையின் மற்றும் ஒரு சதிகாரனின் குணங்கள் கொண்ட ஒரு கலவையான சித்திரம். இவை எதுவும் சு.ரா உருவாக்கிய சித்திரங்கள் அல்ல என்று மனுஷ்ய புத்திரன் தெளிவாகச் சொன்னாலும், இந்த மொத்தக் கட்டுரைகளையும் படித்த பின்னர் ஏனோ அது மரியாதையின் பாற்பட்ட ஒரு அனுசரணை வாக்கியம் மட்டுமே என்றே தோன்றுகிறது.

சு.ரா வின் பல கருத்துக்கள் மற்றும் செய்திகள் படிக்கவும் கேட்கவும் மிக உவப்பாக இருக்கின்றன. அவர் எவ்வளவு பெரிய படைப்பாளி என்பதை அனுமானிக்க அவரின் படைப்புகளை படித்திருக்காவிட்டாலும், இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் இருந்து அவர் பெரிய படிப்பாளி என்பதை மிக எளிதாக்வும் விரைவாகவும் புரிந்து கொண்டு விட முடிகிறது. எமர்சன், ரஸ்ஸல், எலியட், தல்ஸ்தோய் (டால்ஸ்டாயைதான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்), தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ் மன், கசந்த் ஸக்கீஸ், செகாவ், துர்கனேவ், ரோமெய்ன் ரோலந்த், நிகொலாய் கோகல் என்று இன்னும் பலர். இந்தக் கட்டுரைகள் எதிலும் சு.ரா படித்த அல்லது அவரைப் பாதித்த தமிழ்ப் படைப்பாளிகள் பற்றி பெரிதாய் குறிப்புகள் இல்லை (மேல் நாட்டவர்களுக்கு இருப்பது போல). வியாசர் பற்றி பேசியதாய், மலையாள எழுத்தாளர்கள் பற்றி விவாதித்ததாய் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். மற்றபடி, சு.ரா வின் காலத்திற்கு முந்தைய படைப்பாளிகள் பற்றி இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால், சு.ரா, தன் ஆளுமைகள் பற்றி எழுதும் போது சிலரைக் குறிப்பிட்டிருக்கிறார். திருவள்ளுவர், பாரதி, டி.கே.சி, புதுமைப்பித்தன், ரகுநாதன் என்று சிலரை. சம கால எழுத்தாளர்கள் பற்றி பெரிய பாராட்டு எதுவும் இல்லாதபோதும் விமர்சனங்களுக்குக் குறைவில்லை.

பாரதியைக் கூட மற்றவர்களைப் போல 'ஆகா'வென்றெல்லாம் கொண்டாடுவதில்லை. கலை வடிவில் பாரதி தோற்றுவிட்டதாகவும் ஆனால் அவரின் கருத்து தன்னை கவர்ந்திருப்பதாகவும், இருபது கதைகளும் ஐந்து கவிதைகளும் எழுதி இருந்த காலக்கட்டத்தில் சு.ரா விமர்சிக்கிறார். பின்னர், பெரிய படைப்புகளை செய்து முடித்திருந்தபோது பாரதியை பற்றி அவரின் எண்ணத்தில் ஏதேனும் மாற்றம் உண்டானதா என்பது தெரியவில்லை. பாரதி தன்னிடமிருந்த கவிதா சக்தியை முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்திற்கு பயன்படுத்தியிருக்கக்கூடாதா என்ற விசனம் சு.ரா விற்கு இருந்திருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே பாரதியின் வசன நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தபோதும், தமிழில் வசனத்தின் முதல் கலைப் படைப்புகள் காலமும் இயக்கமும் கூடித் தோன்றியது 1930 க்குப் பிறகே என்று தீர்மானமாகச் சொல்கிறார் சு.ரா. அப்படிச் சொல்வதோடு மட்டுமின்றி, இந்த வகை இலக்கியப் பிரக்ஞை கொண்ட முதல் கோஷ்டியில் கூட முக்கியமானவராக புதுமைப்பித்தனையே சுட்டுகிறார் (பாரதி இல்லை). புதுமைப்பித்தனை பல காரணங்களுக்காக அவருக்குப் பிடித்திருந்தாலும், அவரிடமும் 'மிதமிஞ்சியிருந்த சுதந்திரம்' ஒரு குறையே என்று விமர்சிக்கிறார்.

ஒரு புனிதர் என்ற நோக்கில், மனிதனை மனிதனாய் மட்டுமே, எந்தவிதப் புனிதப் பூச்சும் இன்றிப் பார்ப்பது என்ற வகையில் புதுமைப்பித்தன் பற்றிய அவரின் கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடிந்தாலும், தமிழின் இலக்கியப் பிரக்ஞை உள்ள முன்னோடிகளின் பட்டியலில் பாரதியை அவர் மறந்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சு.ரா வின் மாணவர்கள் இதை 'சத்தியத்தின் வாள் வீச்சு' என்று கொண்டாடினாலும் கூட.

சம காலத்தில், அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததை விமர்சித்திருக்கிறார். சுகுமாரனுக்கு தி.ஜா.ரா மீது இருந்த ஒரு பரவச மனோபாவத்தை அசைத்திருக்கிறார். ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று வாதிட்டிருக்கிறார், பிரமிளின் கவிதை அறிவுப்பூர்வமாய் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ந. பிச்சமூர்த்தியும், கு.ப.ரா வும் 'சிந்திக்கப் பயப்பட்டவங்க' என்று சொல்லியிருக்கிறார். வெங்கட் சாமி நாதனின் 'யாத்ரா' இதழை 'அட்டை டு அட்டை அவரே எழுதும் இதழ்' என்று கிண்டலடித்திருக்கிறார். தேவதேவனை ஏற்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு தீவிரமானவை இல்லை என்றாலும், சினிமா பற்றிய அவரது கருத்துக்களும் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை. மலையாளத்தின் ஜான் ஆபிரகாம் படங்களில் சு.ரா வை எதுவுமே கவரவில்லை. தமிழில் மகேந்திரனின் உதிரிப்பூக்களில் "லைப் இல்லை". சினிமா நடிப்பை சிவாஜி கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. எம்.எஸ்.வி யின் இசையில் ஒரு அக ஒழுங்கே இல்லை.

"உன் படைப்புகள் மீதான விமர்சனத்திற்கு எதிர்வினை செய்ய மெனக்கெடாதே" என்று சுகுமாரனுக்கு கற்றுக் கொடுத்த சு.ரா எப்படி அடுத்தவர் மீதான படைப்புகளை இவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழில் சுத்தமான படைப்புகளே இல்லையா? நல்ல சினிமா வந்ததே இல்லையா? அனைவரையும் விமர்சித்த சு.ரா வின் சுய விமர்சனம் யாது? அது பற்றி எங்கேயும் குறிப்புகள் இருக்கின்றனவா? ஜே.ஜே சில குறிப்புகள் அது வெளி வந்த காலக்கட்டத்தில் இதைத் தானே செய்திருக்கிறது? அனைத்தின் மீதும் ஒரு எதிர்வினையையும் விழிப்புணர்வையும்??

ஒரு பெரிய சீடர் குழாமை அரவனைத்துக் கொள்பவராகவும் ஆனால் விலகியே இருப்பவராகவும் கடைசி வரை சு.ரா வாழ்ந்து முடிந்ததைப் படிக்கும் போது அவரின் எதிர்வினை சுட்டுகிற இயல்பு தான் இதன் காரணமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அவரின் இறுதிக் காலம் வருத்தம் தருவதாக இருந்ததற்கும், பெரும்பாலான நண்பர்களிடமிருந்து அவருக்கு ஒரு தெளிவான தூரம் உண்டாகி இருந்ததற்கும் வேரு விஷேசக் காரணங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

சு.ரா வின் கருத்துக்கள் ஆனால் உவப்பானவை. தெளிவானவையும் கூட. ''நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய நடுத்தரமான படைப்புகளின் ஆயுளைக்க் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துக்களை என் வாசகன் சரி வரப் புரிந்து கொள்கிறபோது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துக்களை அறியாத நிலையில் மிகச் சிறப்பான நாவல்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துக்களை தெரிந்து கொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ, சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை உங்களால் ஏன் படைக்க இயலவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து, நான் எழுதவிருக்கும் படைப்புகள் மூலம் அவனால் என்னை நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால்" என்று சு.ரா ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். என்னுடைய முந்தைய கேள்விகளுக்கெல்லாம் கூட சு.ரா வின் பதில் இது தானோ? இந்த சவால் தான் அவரை மூன்று நாவல்கள் மட்டுமே எழுத வைத்ததா? இந்த ஆரோக்கியமான ஒரு போட்டியை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் சு.ரா ஏற்படுத்திவிட்டாரா? அதை அவரின் சீடர்கள் பின்பற்றுகிறார்களா? என்னுள் நிறையக் கேள்விகள்!!

"எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்கு புரியறதில்லை. அந்தத் தத்தளிப்பு தான் துக்கமே. அப்பதான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு...ஏன் ஏன்னு தானே நம்ம மனசு தவிக்குது. எழுத்திலே அதெல்லாம் வரும் போது நமக்கு ஏன்னு தெரியறது..அதான்" என்று எழுதுவதன் பயனை அவர் சொல்கிறபோது என்னால் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது நல்ல சிந்தனை என்று நிச்சயமாய் படுகிறது.

புனிதம், மாறா நெறி என்றெல்லாம் சு.ரா குழப்பிக் கொள்ளவில்லை என்று படிக்கும் போது அவரின் மீதான மதிப்பு கூடுகிறது. "எந்த அறிவையும் புனிதப் படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும், நடை முறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றினால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்". ஒரு வேளை, இது தான் அவர் பாரதியையோ அல்லது புதுமைப்பித்தனையோ கூடத் தலையில் வைத்துக் கொண்டாடாததன் காரணம் என்று படுகிறது. ஆனால், இந்த நெறிகளை, இந்தக் கொள்கைகளை சு.ரா எந்த அளவிற்கு கடைப் பிடித்திருக்கிறார்? பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் தராத இந்த புனிதப் பூச்சு தல்ஸ்தோய்க்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும் கிடைக்கிறதே அது ஏன்? அவர்களுக்குப் பின் தமிழ் கண்ட ஒரே நவீனத்துவப் படைப்பாளி சு.ரா தான் என்ற பெருங்கூச்சலை அவரே ஏற்றுக்கொள்வாரா?

ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் எழுத்தாளர்கள் தம் கருத்தை தெரிவிக்க வேன்டும் என்று சு.ரா வலியுறுத்தி வந்திருக்கிறார். ஜெயேந்திரர் கைது தொடர்பான கட்டுரையில் "எழுத்தாளர்கள் செயல்படத் தடையாக இருப்பது சமூகம் சார்ந்த முட்டுக்கட்டை மட்டுமல்ல; சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து ஒதுங்கிப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும் மனோபாவம் தான் முக்கியமான தடை" என்றும் தீர்மானமாய் சொல்லியிருக்கிறார். தமிழக அரசியலில் சு.ரா மனமாற வெறுத்த கருனாநிதியும், ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி ஆட்சி செய்த காலங்களில் அவர் விமர்சிக்கத் தகுந்த அளவு எந்த முக்கிய நிகழ்வுகளும் நடக்க வில்லையா என்று கேள்வி வருகிறது? ஒரு படைப்பாளி சமூகத்தில் நடக்கும் எந்த நிகழ்வை முக்கியம் என்று கொள்ள வேண்டும்? கேரளத்தில் எழுத்தாளர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுகிறர்கள், வங்காள எழுத்தாளர்கள் மலைவாசிப் பெண்களின் தற்கொலை பற்றிப் போராட்டம் நடத்துகிறார்கள், சுற்றுச் சூழல் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள். மடாதிபதியின் சிறை வாசம் விளைவிக்கும் சமூக மாற்றங்கள் பெரிதா அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்பே இல்லாத மாணவிகளை எரித்தது விளைவித்த சமூக மாற்றங்கள் பெரிதா என்று நான் என்னையே இப்போது கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய மரபு மீது சு.ரா விற்கு பெரிய அபிமானமோ மதிப்போ இல்லை என்றும் ஒரு வகையான உதாசீனமே இருந்தது என்றும், ஆனால் மேற்கத்திய நாடுகளின் நடைமுறைகள் மீது அவருக்கு ஒரு விதமான வழிபாடு இருந்தது என்றும் படிக்கும் போதும் அவரின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. இதுவே, இந்தியச் சூழலில் அமெரிக்கா மீதான கடும் கண்டனம் இருந்து வருவதாலேயே சு.ரா தன் மேலை வழிபாடு பற்றி எழுதுவதில்லை என்று படிக்கும் போது, அவரின் நெறிகள் பற்றிப் பெருத்த சந்தேகம் உருவாகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், "தர்க்கப்பூர்வமாய்ப் பார்த்தால் தேசப்பற்றும், மொழிப்பற்றும் அசட்டு உணர்ச்சிகள்" என்று சொல்லியபடி அமெரிக்கக் குடியுரிமைக்கு முயன்று அவர் அரைக் குடியுரிமை பெற்றார் என்று உணரும் போது அவரே சொல்லிய மாதிரி 'எல்லா லட்சியவாதங்களும் நாடகத்தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது'. கதர் ஆடை அணிந்து வந்த சு.ரா சட்டென்று ஒரு நாளிலிருந்து ஜீன்ஸும், டி ஷர்ட்டும் அணிந்ததோ, அல்லது இந்தியக் கோயில்களை முற்றாக விரும்பாத ஆனால் பாரீஸின் அருகே நாஸ்டர்டம் சர்ச்சில் கண்ணீர் விட்டு அழுததோ கூட வியப்பாகவோ அதிர்ச்சியாகவோ தோன்றவில்லை. ஆனால், இந்திய மரபு மீது அபிமானம் கூட இல்லாமல் ஆனால் இந்தியா தொடர்பான எல்லா விஷயங்களிலும் ஒரு எதிர்வினையாடிக்கொண்டிருப்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை. இது, பிடிவாதமாய் தன்னை சாதரணங்களிலிருந்து விலக்கிக் கொள்கிற முயற்சியா?

எந்த ஒரு விஷயத்தையும் முற்றிலும் அறிவுப்பூர்வமான ஆய்வு நோக்குடன் மட்டுமே அணுகுபவராகவே சு.ரா இருந்தார் என்று ஜெயமோகன் எழுதுகிறார். 'துயரங்களின், தேடலின், அலைதலின் உச்சியில் தர்க்க மனம் அறியாத வாயில்கள் திறக்கக் கூடுவதை', அத்தகைய அறிவுப்பூர்வ அய்வுக்கு உட்படாத உணர்வுகள் மனித வாழ்க்கையில் எஞ்சியிருப்பதை சு.ரா கடைசி வரை அறிந்து கொண்டாரா தெரியவில்லை. தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் ஒப்பிட்டுப் பேசும் போது சு.ரா இப்படிக் குறிப்பிடுகிறார்: "துன்பப்படுபவர்களின் மனம், அவமதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர்களின் துக்கம் தஸ்தயேவ்ஸ்கிக்குதான் நன்றாகத் தெரியும். ஏனென்றால் தல்ஸ்தோய் மேலிருந்து அவர்களை நோக்குகிறார். கிறிஸ்துவிற்கு இணையானதாக கருணை கொண்டதாக இருந்தாலும் அவருடையது மேலே இருக்கும் நோக்கு. துன்பப்படுபவன் தல்ஸ்தோய் தன் தோளில் விம்மியழுதபடி வைக்கும் கையைக் கசப்புடன் உதறி விடுவான். ஆனால், தஸ்தயேவ்ஸ்கி அவனிடம் வந்து சுருட்டுக்கு நெருப்புக் கேட்டால் தோழமையுடன் கொடுப்பான். ஏனென்றால் தஸ்தயேவ்ஸ்கி அவர்களுள் ஒருவன்"

நான் எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்: சு.ரா வந்து இன்று விம்மியபடி தோளில் கை வைத்தால் இலக்கியப் பரிச்சயமுள்ள தமிழ் வாசகர்களில் எத்தனை பேர் அவரின் சுருட்டுக்கு நெருப்புக் கொடுப்போம்?
_______________________________________________________________________________________

வி ப என்றால் விருந்தினர் பதிவு என்று அர்த்தம்.

என்னுடைய நீண்ட நாள் வாசகர்கள், மேலே உள்ளதை படித்ததுமே இதற்கும் பினாத்தலாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கண்டுபிடித்திருப்பார்கள்.

இதை எழுதியது லக்ஷ்மணன், குளம் வலைப்பதிவின் ஆறு எழுத்தாளர்களுள் ஒருவர்.

90களில் கையெழுத்துப்பத்திரிக்கையாக இருந்து, இயற்கை மரணம் எய்தி, பின்னாளில் விஞ்ஞான நீட்சியாக இன்று வலைப்பதிவுலகில் தடம் பதிக்க வருகிறது குளம்.

சாதாரண வலைப்பதிவைப்போல் அல்லாமல், யார் என்ன விஷயம் எழுத வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டு, நேரத்துக்குள் அதைப்பெற்று, சக உறுப்பினர்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பின்பே வலையேற்றுவது எனத் தெளிவான திட்டத்தோடு வெளிவர உள்ள குளம் வலைப்பதிவைப் படிக்க நானும் ஆவலாய் உள்ளேன்.

Dec 1, 2005

சிதம்பர ரகசியம் - தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் (01 Dec 05)

சஸ்பென்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? திகில், மர்மம், துப்பறிதல் போன்று பொதுவாகப் புழங்கும் வார்த்தைகள் பொருத்தமான மொழிபெயர்ப்பாக எனக்குத் தோன்றவில்லை. எனவே பரவாயில்லை, சஸ்பென்ஸ் என்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறேன்.

சஸ்பென்ஸ் இலக்கியம் (இதுக்கெல்லாம் திட்ட மாட்டிங்க இல்லை?) வாசகனின் ஈடுபாடு முழுமையாகத் தேவைப்படும் வடிவம். ஒரு சிறந்த சஸ்பென்ஸ் கதை, யோசித்து, துப்பறியத் தேவையான அத்தனை விவரங்களும் வாசகனுக்குத் தரப்பட்டு, அதே விவரங்களை வைத்து கதை நாயகன் எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறான் என்பதை ஒப்புநோக்கி "அடடா" போட வைக்க வேண்டும். அகதா க்றிஸ்டி தெளிவாகவே விவரங்களைச் சொல்லி "இடைவேளை" போட்டு, பின்னால் நாயகன் (நாயகி) துப்பறிதல் என்று பிரித்துக் காட்டி விடுவார். நம் அறிவை பரிசோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு என்பதாலும், வாசகனையும் மூளை உள்ள ஜந்துவாக எழுதுபவன் கருதுவதாலும், எனக்கு இந்த வடிவம் ரொம்பப் பிடிக்கும்.

சரியான வார்த்தை தெரியாதது மட்டுமல்ல, தமிழின் படைப்பாக்கங்களிலும் சஸ்பென்ஸ் பெரிய அளவில் பயன்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கதைகளில் வடுவூர் துரைசாமி ஐயங்காரிலிருந்து, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் வழியாக இந்திரா சவுந்தரராஜன் வரை பலர் முயற்சித்திருந்தாலும், நிர்வாண நகரம் போன்ற ஒன்றிரண்டு கதைகள் தவிர மற்றவை குப்பை என ஒதுக்கத்தக்கதே என்பது எ. தா அ. கதையில் வரும் எல்லா பாத்திரங்களையும் கொலை செய்துவிடும் தொடர்(கொலை)கதைகளையோ, கடைசி அத்தியாயத்தில் உள்ளே நுழையும் புதுக்கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளையோ (உ-ம்: ராமபத்ர வியாசன், கொலையுதிர்காலம், சுஜாதா) நல்ல சஸ்பென்ஸ் கதைகளாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆதித்த கரிகாலனைக்கொன்றது யார் என்பது ஒரு நல்ல சஸ்பென்ஸ்தான் என்றாலும், கதாசிரியருக்கே முடிவு தெரியாததால் அதுவும் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுகிறது.

திரைப்படங்களில் "அந்த நாள்" எனக்குத் தெரிந்த ஒரு நல்ல உதாரணம். "அதே கண்கள்", "யார்" போன்ற சொதப்பல்கள் ஓடினாலும் அவற்றுக்கும் சஸ்பென்ஸுக்கும் உள்ள தொடர்பு மைசூருக்கும் மைசூர் போண்டாவுகும் உள்ள தொடர்பே.

சின்னத்திரையிலும் கூட, மர்மம் என்றாலே அமானுஷ்யம், பேய், பிசாசு, தொடர்கொலைகள் என்று கிட்டே நெருங்க முடியாதவாறு செய்து விடுவார்கள்.

இந்நிலையில், (நிறைய சன் நியூஸ் பார்ப்பதால் வந்த பாதிப்பு)சந்திரமுகியிலும், அந்நியனிலும் பிற்காலத்தில் அடிபட்ட ஸ்பிளிட் பெர்சனாலிட்டி என்ற கதைக்கருவோடு, தொடர் கொலைக்குக் காரணம் யார் என்ற மர்மத்தோடும் எடுக்கப்பட்ட "மர்மதேசம்" ஒரு நல்ல மாறுதலாக இருந்தது - கதை முடிவை நெருங்கும் நேரத்தில், மற்ற அனைத்து பாத்திரங்களும் இறந்து போய்விட்டதால், முடிவு சுலபமாக ஊகிக்க முடியக்கூடியதாய் இருந்தாலும் சுவாரஸ்யமாயே இருந்தது.

இதே இயக்குநர் என்பதால் மட்டுமே, சிதம்பர ரகசியம் தொடரை ஆரம்பத்திலிருந்தே பார்க்க ஆரம்பித்தேன். 100 எபிஸோடுகளைத் தாண்டிவிட்டாலும், ஆர்வம் குறையாமலும், ஒரு பகுதியையும் விடாமலும் பார்த்தும் வரும் அளவிற்கு சிறந்த முறையில் வந்துகொண்டிருக்கிறது, இப்போது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஆரம்பக்காட்சிகளில், மெதுவாகச் சென்றாலும் என்னை ஈர்த்தது கதாபாத்திரங்களின் தொழில்கள் - வழக்கறிஞர், விளம்பரப்பாடகி, ஆரம்பநிலைப்பத்திரிக்கையாளன், கைரேகையை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரும் கணினி வல்லுனன், வானிலை ஆராய்ச்சியில் பணிபுரியும் பெண், எயிட்ஸுக்கு மருந்து தேடும் விஞ்ஞானி, மகப்பேறு மருத்துவர் எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள். இதுதவிர நாடி ஜோசியம், ஆரிகமி, மூலிகைச்செடி வளர்ப்பு போன்ற விஷயங்களைப்பற்றி தொட்டும் சென்றது.. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தப்போகிறார் திரைக்கதையாளர் என்பதிலேயே ஆர்வம் அதிகமாகிவிட்டது.

பிறகு ஆரம்பிக்கிறது ஒரு கடத்தல், ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாத பலர் கொலைகள் - ஒரே ஒரு ஒற்றுமை -அனைத்து கொலைகளின் போதும் அருகில் பத்திரிக்கையாள நாயகன் இருக்கிறான், அனைத்துப்பேருக்கும் விரல் ரேகை எடுக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மர்மம் விலக ஆரம்பிக்கிறது. கடத்தப்பட்ட பெண்ணுக்கு எயிட்ஸ் வரவழைத்து, கொல்லப்பட்டவர்களின் நாடியில் இருக்கும் மருந்துகளை வைத்து குணப்படுத்தி எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது வில்லன் கும்பல் என்று.
இன்னும் முழுதாக மர்மம் விலகவில்லை. கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ரேகை எடுக்கத் தூண்டிய மர்ம நபரே (இவனைப்பற்றி இப்போது இருக்கும் ஒரே க்ளூ - பின்னங்கழுத்தில் ஒரு தழும்பு. ஒரு காட்சி அமைப்பிலும் அவன் முகம் தெரியாதது மட்டுமல்ல, திரையில் எந்தப் பாத்திரம் தெரிந்தாலும் அவர்களின் பின்னங்கழுத்தை உற்றுப்பார்க்கிறேன் நான்!), "அய்யோ பாவம் - எல்லாரும் செத்துப் போயிட்டாங்களே" என்று அழுவதாக ஒரு காட்சி. அவன் பிடிபட்டாலும் கொலை செய்தவர் வேறு யாரோவாக இருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.

கதையில் வரும் எல்லா சம்பவங்களும் நாடி ஜோசியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதாக வருகிறது. ஆனால், என் ஊகப்படி, முடிவு நாடி ஜோசியத்தை ஆதரிப்பதாக இருக்காது - எதிர்ப்பதாகவும் இருக்காது. (a la கொலையுதிர் காலம் - பேய் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கான பதிலை அவரவர் நம்பிக்கைக்கு விட்டுவிட்ட சுஜாதாவின் சாமர்த்தியம்) எல்லாக் கேள்விகளுக்கும் லாஜிக்கான பதில் வைத்திருப்பார் என்றே நம்புகிறேன்.

எனக்குத் தெரிந்து முழு திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட ஒரே தொலைக்காட்சித் தொடர் இதுதான். தொலைக்காட்சித் தொடரில் ஃப்ளாஷ் பேக் காட்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா? ரொம்ப அபூர்வம். கதை எப்படி ஆரம்பித்தது, என்ன திசையில் பயணித்தது என்பதை இயக்குநர் உள்பட அனைவரும் மறந்துபோய்விட்டிருப்பர். "இவருக்கு பதிலாக இவர்" வேறு பழையதை திருப்பிக்காட்ட முடியாத சூழலை உருவாக்கிவிடும். சில நேரங்களில் இயக்குநரே மாறிவிட்டிருப்பார். இந்த விபத்துக்கள் எல்லாம் ஏற்படாமல், கதையின் ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியை இப்போது திருப்பிக்காட்டுவதால், அப்போதே முழுக்கதையும் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்த இரண்டு எபிசோடுகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தொடர்களின் நடுவே, இதுவே மிகப்பெரிய ஆச்சரியம்.

நான் இந்தத்தொடரை மிகவும் ரசிக்கிறேன் - நீங்களும் சஸ்பென்ஸ் விரும்பியாக இருந்தால் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

பி கு. தொலைக்காட்சித் தொடர்களை என்னைப்போலவே பலரும் பார்த்தாலும், விமர்சனம் செய்வதில்லை. சிவகாசிக்கும் மஜாவுக்கும் கூட விமர்சனம் எழுதுகிறோம் - இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

விமர்சனங்கள் என்று பார்த்தல் டிவிக்கு வரும் நேயர் கடிதங்கள் (அன்புள்ள -- டிவி உரிமையாளர் --- அவர்களே, நான் உங்கள் தொலைக்காட்சியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் விரும்பிப்பார்க்கிறேன், 6 மனிக்கு வரும் --- 6.30க்கு வரும் ____ ... தடங்கலுக்கு வருந்துகிறோம் எனப்போட்ட திரையிலும் கையெழுத்து மிக அருமை.. ப்ளா ப்ளா..) அல்லது பத்திரிக்கைகளில் வரும் ஸ்பான்ஸர்டு கடிதங்கள் (___ தொடரில் ___ நடிப்பு அருமை. இதுபோன்ற மாமியார்கள் திருந்தவே மாட்டார்களா?).

அப்ஜக்டிவ்வாக வரும் விமர்சனங்கள் இல்லாத காரணத்தாலேயே ரொம்ப ஆடுகிறார்கள் இவர்கள்.

தினமலரில் ஒரு கடிதம் படித்தேன் - சிதம்பர ரகசியம் பற்றி - கதையே இல்லாத தொடர் என்று "கிழி"த்திருந்தார் ஒரு வாசகர்!

இவருக்கு எந்த அளவுக்கு மட்டமான சாப்பாடு பழகியிருந்தால் நல்ல சாப்பாடு சாப்பிடும்போது அலர்ஜியாகி இருக்கும்?

Nov 29, 2005

கருத்து தேவை இல்லை!

இன்றைய சன் டிவி செய்திகளில் வழக்கம் போல கலைஞர் கருத்து. நான் எந்த வெட்டோ ஒட்டோ செய்யாமல் சாராம்சத்தை அப்படியே தருகிறேன்.


செய்தித் தலைப்பு:

சுனாமி நிதியில் சுருட்டல்.

ஆட்சியில் இருப்போர் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடி கோடியாக ஊழல் செய்துள்ளனர்.

வெள்ள நிவாரணத்துக்கும் நிதி சேர்ந்திருக்கிறது

இதிலும் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.

அரசாங்கம் மட்டும் இன்றி அனைத்துக்கட்சிகுழு ஒன்று வெள்ள நிவாரண நிதியை கையாள வேண்டும்.

வழக்கமாக படம் காட்டினால்தான் இந்தப்படத்துக்கு கருத்து தேவை இல்லை என்று போடுவோம்.

இங்கே இந்தக் கருத்துக்கு மேல் கருத்து எதுவும் தேவை இல்லை.

Nov 21, 2005

வந்தாச்சு அவன் விகடன் (21 Nov 05)

அவன் விகடன் வேண்டும் எனக்கேட்டிருக்கிறார் ராமச்சந்திரன் உஷா.

மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொண்ட பெனாத்தலார் அதற்கான ஆயத்தங்களில் உடனடியாக ஈடுபட்டுவிட்டார்.

இதில் எதுபோன்ற கட்டுரைகளும் தொடர்களும் ரெகுலர் துணுக்குகளும் வரவேண்டும் என்பதற்கு மகளிர் பத்திரிக்கைகளையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு தொழிலைத்தொடங்கிவிட்டார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் டைரி

என் பெயர் (வேண்டாமே) (Jean-Claude Van Damme இல்லை!), வயது 35. எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன.

திருமணமான புதிதில் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ, திடீரென்று என் வாழ்வில் புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

ஆம் - என் மனைவி குறட்டை விடத் தொடங்கிவிட்டாள்!

DTS எஃபெக்ட்டில் தினமும் ராத்திரி 10 மணிக்கு மேல் அருகில் உள்ளவர் குறட்டை விடும்போது தூங்க முயற்சி செய்திருக்கிறீகளா? செய்து பாருங்கள்.. இதனால் என் தூக்கம் தினமும் கெட்டுப்போய் அலுவலகத்திலும் தூங்கி வழிந்ததால் வேலை போய்விட்டது.

இப்போது என் மனைவி ஏறத்தாழ 80 டெஸிபெல்லுக்கு மேல் குறட்டை விடுகிறாள். பகல் முழுவதும் அரட்டை, இரவு முழுவதும் குறட்டை என்று என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது.

நேயர்கள் என் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடியுமா?

வாசகர்கள் பதில்

நெல்லையிலிருந்து பரசுராமன் எழுதுகிறார்: என் தோழா, உனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணிப்பார்க்கும்போது என் கண்கள் கலங்குகின்றன. கொடுமைக்கார மனைவியரிடம் மாட்டி சீரழிந்து போய் இருக்கும் லட்சக்கணக்கான உன் போன்ற ஆடவர்கள் அந்தச் சிறையை விட்டு வெளியே வர வேண்டும். உடனடியாக விவாகரத்துக்கு எழுது. நாங்கள் இருக்கிறோம்.. தைரியமாக இரு. (இவர் முழு முகவரி எழுதவில்லை என்பது குறிப்பிடத்தகாதது)

ஆம்பூரிலிருந்து அன்பழகன் எழுதுகிறார்: என் கண்மணி, உன்னைப்போல் நானும் மனைவியின் குறட்டையால் அவதிப்படுபவன் தான். என்ன செய்வது! பகலின் அரட்டையையாவது தவிர்க்கலாம், இரவில் நாம் எங்கே போவது? ஏழைகளுக்கு இதிலிருந்து என்ன விடிவு? என்று நம் காதுகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றுதான் முழுமையான விடுதலை நாடாகத் திகழ முடியும்.

ஆதம்பாக்கத்திலிருந்து கணபதி சுப்ரமணியம் (வயது 72) எழுதுகிறார். அந்தக்காலத்தில் எல்லாம், மனைவிகள் குறட்டை விடும்போது நாங்கள் காதில் துணியை அடைத்துக்கொள்வோம். சமீபத்தில் இல்லினாய்ஸில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை பார்க்கும் என் பேரன் இதற்கென்றே அழகாக வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் காது அடைப்பானைக் கொண்டு வந்திருந்தான். அதற்குப் பிறகு கேர்ஃப்ரீயாக வாழ்கிறேன்,

மொத்த வாசகர்களின் தீர்வு விவரம் --

கஷ்டப்பட்டு சகித்துக்கொள் - 3%
விவாகரத்து செய் - 78%
காதில் பஞ்சு அடைத்துக்கொள் - 19%

குறட்டையைப்பற்றி டாக்டர் பத்ரனிடம் ஆலோசித்தபோது அவர் கூறியது:

குறட்டை என்பது தூக்கத்தில் மட்டுமே வரக்கூடிய ஒரு சத்தம். இப்படிப்பட்ட நோயாளிகள் விழித்துக்கொண்டிருக்கும் போது நல்ல நலத்துடனே தெரிவார்கள். அவர்களை சுலபமாக பிரித்துப்பார்க்க முடியாது. இந்த நேயர் குறிப்பிடும் வியாதி மிகவும் முற்றிப்போன நிலையில் இருந்தாலும், என் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், இவர் மனைவிக்கு சிடி ஸ்கான், ரத்தப் பரிசோதனை, மரபணுப்பரிசோதனை அனைத்தும் நடத்தியபின், அவர்களிடம் பணம் மிச்சம் இருந்தால் இந்த வியாதியை குணப்படுத்திவிட முடியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேபிள் கலாட்டா

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எஃப் டிவியின் பல நிகழ்ச்சிகளைப்பற்றிய கேள்விகளை அள்ளித்தெளித்திருந்ததால், நம் நீலகண்ட மாமா கைனெட்டிக் ஹோன்டாவை விரட்டி, மிலனில் இருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜானைச் சந்தித்தார்.

"என்ன மாமா, ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்" உற்சாகமாக வரவேற்றார் ஜான்.

"என்ன இப்பெல்லாம் உங்களை எஃப் டிவியிலே பாக்கவே முடியறதில்லே? என்று போட்டு வாங்கினார் மாமா.

"என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? பாரீஸிலே ஃபேஷன் வீக், லாஸ் ஏஞல்ஸிலே ஃபெஷன் வீக் ரொம்ப பிஸியாயிட்டேனா - அதனாலேதான் உங்களைப் பார்க்க முடியலே" என்று சுகமாக அலுத்துக்கொண்டார்.

"இப்பெல்லாம் ஃபேஷன் டிசைனிங்க் ரொம்ப சுலபமாயிடிச்சு.. எல்லாரும் ஒரு கத்திரிக்கோலோட கிளம்பிட்டாங்க.. இருந்தாலும், எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது. நாகரீகத்தாய்க்கு செய்யற சேவையாவே இந்தத் தொழிலைக் கருதறேன்"னாரு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு.

வாசகர் கடிதம்

"மூன்டிவி"யிலே ராத்திரி 12 மணிக்கு வர மசாலா மிக்ஸ் லே வர பாட்டுக்களெல்லாம் சுத்த சைவமா மாறி விட்டன. ஏமாற்றமா இருந்தாலும், இளைய தலைமுறைக்கு நல்ல பாடல்களைக் காட்டற இவங்க சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்று புகழாரம் சூட்டுகிறார், அம்பத்தூரிலிருந்து அறிவுடை நம்பி.

கயா டிவியில் கடந்த 15ஆம் தேதி செய்தி வாசித்த சொக்கலிங்கம் தன் மூக்குக் கண்ணாடியை புதிய ஃப்ரேமில் மாற்றிவிட்டார், புதுக்கண்ணாடி அவர் முகத்துக்கு மேலும் மெருகு சேர்க்கிறது" உணர்ச்சிவசப்படுகிறார், கடலூரிலிருந்து கலியபெருமாள்.

"8 ஆம் தேதி நடந்த ஃபுட் பால் மேட்ச்சின் இடைவேளையில் காண்பித்த காக்காய்கள் இரண்டும் மிக அருமை. ஒளிப்பதிவாளருக்கு திருஷ்டி சுத்திப் போடவேண்டும்" நெகிழ்கிறார் தேனியிலிருந்து குணசேகரன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர் கோட்டா - அனுபவங்கள் பேசுகின்றன

காசியில் விஸ்வனாதர் ஆலயத்துக்கு சென்றிருந்தேன். அங்கே கோயில் வாசலில் செருப்பு விட்டுக் கொள்ளலாம் என்று சொல்லும் போது இடை மறித்த எங்கள் ஹோட்டல் மானேஜர், அங்கே அதிக செல்வாகும், 2 கிலோ மீட்டர் தூரம்தானே, இங்கேயே விட்டுச்செல்லுங்கள் என்று கூறினார்.

செருப்பில்லாமல் நடந்தது கஷ்டமாக இருந்தாலும், 25 பைசா சேமித்துவிட்டோம் என்ற திருப்தியில் வலி பறந்தே போய்விட்டது.

நம் ஊரில் உள்ள ஹோட்டல் மானேஜர்கள் இப்படி நடந்து கொள்வார்களா? சந்தேகம்தான்.

கிருஷ்ணன், கீழ்பாக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர் கோட்டா - வாண்டு லூட்டி

விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த என் பேரன் துஷ்யந்த் (வயது 4, UKG படிக்கிறான்), ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டார் ரைம் பாடச்சொன்னால், முதல் வரியைப் பாடிவிட்டு, இரண்டாவது வரியாக "ரஜினிதான் எப்பவும் சூப்பர் ஸ்டார்" என்று பாடுகிறான்.. இந்தக்கால பிள்ளைகளின் அறிவையும், விஷய ஞானத்தையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

தம்பித்துரை, தாம்பரம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுயமாய் தொழில் செய்வது எப்படி? (தொடர்)

இந்த வாரம் சுய தொழில் பகுதிக்க்காக, காலேஜ் வாசலில் டீக்கடை வைத்திருக்கும் மாதவன் நாயரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.

"முதலில் டீ மட்டும்தான் போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் முறுக்கு, புளி சாதம்னு பிசினெஸ் டெவெலப் ஆச்சு.

காலேஜ் பசங்க எல்லாம் டீ ஷர்ட் போடறாங்களேன்னு யோசிச்சு, நமிதா, அசின் படம் எல்லாம் பிரிண்ட் பண்ண பனியன்களையும் விற்க ஆரம்பிச்சேன்.

இப்போ நான் என்ன எல்லாம் பண்ணறேன்னு எனக்கே தெரியாது.

என்னை நம்பி இங்கே ஒரு குடும்பமும், கேரளாவிலே ஒரு குடும்பமும் பசியாற சாப்பிட முடியுது.

அதையும் தவிர, பசியோட வர தெரு நாய்ங்களுக்கு, பழைய பொறையை எல்லாம் போட்டு பசியாத்தறதுலே ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்குது என்றார் நாயர்.

டீ செய்வது எப்படி?

  • சுடுதண்ணீரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
  • டீ-பைகள் (மளிகைச் சாமான் கடைகளில் கிடைக்கும்) பக்கத்தில் வைத்து விடுங்கள்
  • சர்க்கரை ஒரு கிண்ணத்திலும், பால் ஒரு பாத்திரத்திலும் அருகே வைத்து விடுங்கள்
  • யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அதை அவர்கள் போட்டு சாப்பிடுவார்கள்.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதி பதில்கள்
(கோலங்கள் தொடரில் நடிக்கும் வில்லன் ஆதி, நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்)

கே: என் மேலதிகாரிக்கு என்னைக்கண்டாலே ஆவதில்லை. எதற்கெடுத்தாலும் சிடுசிடுத்து விழுகிறார். வேலையையே விட்டு விடலாம் போல இருக்கிறது. என்ன செய்வது ஆதி?

ஆதி பதில் : ஒரு குட்டிக்கதை கேள்விப்பட்டிருப்பீர்கள் - ஒரு ஊர்லே ஒரு காக்கா இருந்துதாம், அப்புறம் அது பறந்து போயிடுச்சாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாறுதல் மட்டும்தான் மாறாதது. இன்னிக்கு உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டலாம். நாளைக்கு நீங்க மேலதிகாரி ஆயிட்டீங்கன்னா, எப்படித் திட்டறதுன்றதுக்கு ஒரு பயிற்சியா இதை எடுத்துக்குங்க. ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கங்க - விழுந்தவனுக்கு கால்கள் எல்லாம் பூட்டு, எழுந்தவனுக்கு விரல்கள் எல்லாம் சாவி.

கே: என் மாமனார் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்.. என்ன செய்வது?

ஆதி பதில் : பிட்டு போட்டாதான் எக்ஸாம்லே பாஸ் பண்ண முடியும், விட்டுக் கொடுத்தால்தான் வாழ்க்கையிலே பாஸ் பண்ண முடியும். அவர் உங்களை மதிக்காவிட்டால்தான் என்ன, "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"னு கண்ணதாசன் சொன்னா மாதிரி நீங்க வாழ்ந்து காட்டுங்க, அவர் உங்களை மதிக்க ஆரம்பிப்பார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்னும் கொஞ்சம் ஃபேஷன் பக்கங்கள், டாக்டர் பதில்கள், வாசகர் அனுபவங்கள் எல்லாம் சேர்த்தால், சூடான, சுவையான, நச்சென்ற அவன் விகடன் தயார்.

வினியோகஸ்தர்களே, உங்கள் பகுதிக்கு உரிமம் எடுக்க முந்துங்கள்.

வாசகர்களே! இன்னும் சில நாட்களில் உங்கள் கையில் தவழும் "அவன் விகடன்" - உங்கள் பேராதரவை எதிர்பார்க்கும்

ஆசிரியர் குழு.

Nov 17, 2005

அலுவலகக்கூட்டத்தில் பேசப்போகிறீர்களா? Tips - 2 (16 Nov 05)

ஏகோபித்த ஆதரவு இருப்பதால் (?!) சரி சரி எதிர்ப்பு இல்லாததால்..தொடர்கிறேன்.

4.கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள் - கற்பிக்கக்கூடிய தருணங்கள் (Teachable Moments) எல்லா நேரங்களிலும் அமைந்து விடாது

புதிதாக செல் தொலைபேசி வாங்கியவருக்கு அதன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தல் சுலபம், அவர் கற்கத்தயாராக இருப்பார். மாறாக பால்-பாயிண்ட் பேனா உபயோகப்படுத்துபவரிடம் அதன் நுனி ஏன் வளைந்து இருக்கிறது, அதில் எத்தனை பாகைகள் இருக்கின்றன என்று விளக்க ஆரம்பித்தால் அவருக்கு ஆர்வம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. .

Teachable Moments-ஐ உருவாக்குவது எப்படி? உங்கள் விளக்கத்தால் எதிரில் இருப்போருக்கு ஏற்படக்கூடிய நேரடிப்பலன்களை முதலில் சொல்லுங்கள். விளம்பரங்கள் போல ஒரு பயமுறுத்தலைஅடிநாதமாகக் கொள்வது ஒரு உத்தி.(க்ளோஸ்-அப் பயன்படுத்தாவிட்டால் எந்தப்பெண்ணும் பேசமாட்டாள், அழகு க்ரீம் இல்லையென்றால் கல்யாணம் ஆகாது..இத்தியாதி..) . (முன்பெல்லாம் ஒரு பழுதைச் சரிபார்ப்பதற்கு மாதங்கள் கூட ஆகலாம் - இப்போது, நான் சொல்லப்போகும் தொழில்நுட்ப வளர்ச்சியால், நிமிடங்களில் பழுதை நீக்கிவிடலாம் - என்பது என் பழகிய ஆரம்ப வரிகள்.)

இந்த உரை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கானது - உங்கள் வளர்ச்சியும் அதன் பக்க விளைவாய் இருக்கலாம் - ஆனால் முதல் முன்னுரிமை அவர்கள் தெவையே என்பதை உணருங்கள் - மேலும் முக்கியமாக நீங்கள் உணர்ந்துள்ளீர் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.

5. நீங்கள் மட்டுமே பேசாதீர்கள் - பெரும்பாலானவர்களுக்கு, அதிலும் உயர்பதவிகளில் இருப்பவர்க்கு, கேட்டு பழக்கம் கிடையாது! சின்னச் சின்ன கேள்விகள் கேட்பதன் மூலம், அனைவரையும் ஒருமுறையாவது பேச வையுங்கள்.

பலவிதமான கேள்விகள் கேட்கலாம் - திறந்த கேள்விகள் (பல பதில்கள் இருக்கலாம்), மூடிய கேள்விகள் (ஒரே சரியான பதில்தான்), அடிநிலைக்கேள்விகள் (பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த பதில்கள்), உயர் நிலைக்கேள்விகள் (பயிற்சிக்குப்பின்னரே விடை அளிக்க முடியும்)..
உரையின் ஆரம்பத்தில், மூடிய, அடிநிலைக்கேள்விகளாகக் கேட்டு பங்குபெறும் உற்சாகத்தை அனைவருக்கும் ஏற்படுத்துங்கள். உரையில் தொய்வு விழுவது போலவோ, யாரும் தூங்குவது போலவோ (நிச்சயம் நடக்கும்!) உணர்ந்தால் திறந்த கேள்விகள் மூலம் அனைவரையும் அதிகம் பேசவைக்க முடியும். பொதுவான கேள்விகளாய் இருந்தாலும், சொல்லப்படும் விஷயத்துடன் தொடர்பு உள்ளதாகவே இருக்க வேண்டும். (இல்லாவிட்டால் கதை அடிப்பதாகத்தான் கொள்வார்கள்).

கேள்விக்கான பதிலைப் பெற்றதும் ஒருமுறை அந்தப்பதிலை அவர்கள் வார்த்தைகளிலேயே திருப்பிச்சொல்லுங்கள் - அவர்கள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டனர் என்பதை உணர்த்த.அதிகம் பேசாத, பங்கு பெறாதவர் கூட உற்சாகம் பெறுவர். அதற்குப்பின்னர் பொருத்தமான பதிலை உங்கள் வார்த்தையில் கூறுங்கள்.

6. செயற்கை வேண்டாம் - மாண்புமிகு பொது மேலாளரே, அவையில் அமர்ந்திருக்கும் சான்றோரே ஆன்றோரே.. இதெல்லாம் பொது மேடைப்பேச்சுக்கு உதவலாம் - இங்கு (பெரும்பாலும்) இல்லை. அதற்காக அனைவரையும் சிறுவர்களாக நினைத்து மரியாதை இன்றியும் நடத்த வேண்டாம் (பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - இங்கும் 100% பொருந்தும்) - எல்லோரின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள் - எங்கே இருந்து நீங்கள் ஒரு புது விஷயம் கற்க முடியும் என்பதை ஒரு போதும் சொல்ல முடியாது. இங்கே என் ஒரு அனுபவம், இன்றும் என் பெரும்பாலான வகுப்புகளில் நான் விவரிக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூருவது பொருத்தமாக இருக்கும்..

ஒரு பெரிய இயந்திரத்தின் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாமல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்க, நான் எல்லா சாத்தியங்களையும் பரிசொதித்து தோல்வி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், டீ கொண்டுவரச்சொல்லி ஒரு சிறு பையனை அனுப்பினேன். திரும்பி வரும்போது அவன் கோபமாக வந்தான் - "இனிமே நான் டீ வாங்கப் போக மாட்டேன் - அங்கே வழியிலே டீஸல் டேங்கிலிருந்து எண்ணெய் வழிகிறது - என் மேலெல்லாம் கொட்டிப்போச்சு" என்றான் - அடுத்த இரு நிமிடங்களில் லீக்கேஜை நிறுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்து விட்டோம்!

இன்னிக்கு அவ்வளவுதான் - இன்னும் ஒன்றிரண்டு பகுதிகளுடன் முடித்து விடுவேன்!

Nov 16, 2005

அலுவலகக்கூட்டத்தில் பேசப்போகிறீர்களா? Tips (15 Nov 05)

ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை - அட்வைஸ்! எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலோனாருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும், இப்படி ஒரு பதிவு எழுதத் துணிந்தேன்.

முக்கியமான பணியில் இருக்கும் அனைவருக்கும் குறைந்தது ஒருமுறையேனும் தங்கள் பணியைப்பற்றியோ, நிறுவனத்தயாரிப்புகளைப்பற்றியோ விளக்கம் அளிக்கும் சூழ்நிலை அமையக்கூடும். எனக்கு எல்லா நாளும் இதே தொழில் என்பதாலும், எந்த முன் அனுபவமோ, கற்றுக்கொடுப்பவர்களோ இல்லாததால் அடிபட்டு அடிபட்டுதான் ஓரளவாவது கற்றுக்கொள்ள முடிந்தது.

முறையான பள்ளி கல்லூரி வகுப்புக்களில், ஆசிரியர் என்பவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு உயர்ந்த ஸ்தானம் அளிக்கப்பட்டுவிடுகிறது. வயது, அனுபவம், அறிவு ஆகியவை சமமாகவே இருக்கக்கூடிய பயிற்சி வகுப்புகளிலும் விளக்க உரைகளிலும் அந்த ஸ்தானத்தையும், எதிரிலுப்போர் கவனத்தையும் ஈர்த்து, சொல்ல வந்த விஷயங்களை தெளிவாகச் சொல்வது, அதுவும் மிகக்குறைந்த நேரத்துக்குள் என்பது அவ்வளவு சுலபமில்லை.

எனவே, நான் கற்ற, கேட்ட, பார்த்த மற்றும் படித்த அனுபவங்களை பொதுவில் வைப்பதால் யாரேனும் பயன்பெறக்கூடும் என்ற எண்ணத்தினால் விளைந்ததே இந்தத் துணிச்சல்!
ஆலாபனை போதும், விஷயத்துக்கு வருகிறேன்.

1. தயார் செய்துகொள்ளுங்கள் - இரண்டு நிமிடமோ, இரண்டு மணிநேரமோ.. சொல்லப்போகும் விஷயத்தை மனதில் ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான குறிப்புகளை தனியாக எழுதிவைத்துக்கொள்வது உதவும். ஒத்திகை பார்க்க வேண்டாம். நடுவில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் பேச்சு திசை திரும்பிவிடும் சாத்தியம் உள்ளது. எதை முதலில், எதை நடுவில், எதைக் கடைசியில் சொல்ல வேண்டும் என்ற agenda மட்டும் போதும்.

2. எடுத்த எடுப்பில் திடுதிப்பென ஆரம்பிக்காதீர்கள். சுருக்கமாக ஒரு சுய அறிமுகத்துடன் ஆரம்பியுங்கள் - பிறப்பும் வளர்ப்பும், இளமையும் கல்வியும் போன்ற கட்டுரைகள் இல்லை - உங்கள் பெயர், பணி நிலை, சொல்லப்போகும் கருத்துடன் உங்கள் அனுபவம் - இது போதும்.

உங்கள் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என எதிர்பார்க்காதீர்கள் - ஒருமுறை ஒரு நபருடன் அரை மணி நிறுவனத்தின் நிலை பற்றி கதை அடித்து முடித்த பிறகு நான் "உங்கள் பெயர் என்ன" எனக்கேட்டேன் - அவர் புருவம் சுருங்கி, பெயர் கூறி, நான் இங்கே வைஸ் ப்ரெஸிடென்ட்டாக வேலை பார்க்கிறேன் என்றார்!

சொல்லப்போகும் கருத்துடன் உங்கள் அனுபவம் - இது மிகவும் அவசியம். சொல்பவரின் தகுதியே சொல்லப்படுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

3. எந்த நிமிடத்திலும் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். நீங்கள் உணர்ந்தால் மட்டும் போதாது, உங்கள் சபைக்கும் கதை அடிக்கிறான்(ள்) என்ற எண்ணம் தோன்றிவிடக்கூடாது.

கதை அடிப்பதில் தப்பு இல்லை - ஆனால், கதை உங்கள் பேசுபொருளுடன் சம்மந்தம் உள்ளதாக இருக்கட்டும். எப்படியாவது ஒரு ஜோக்கை ஒட்டவேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைத்தும் ஆண்களே உள்ள கூட்டமாக இருந்தாலும், அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்குகள் வேண்டவே வேண்டாம். அவற்றுக்குதான் சாயங்கால பார்ட்டிகள் இருக்கிறதே! சில குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் எல்லாக்கூட்டத்திலும் இருப்பார்கள். கதை அடித்து அவர்களின் வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீர்கள்.

இன்றைக்கு ரொம்ப நீளமாகப் போய்விட்டது, மீண்டும் தொடர்கிறேன் - உங்கள் விருப்பம் இருந்தால்.

பி கு: துறவறம் கொண்டு விட்டதாகக் கூறினேர்களே என்று புரட்சிப்பினாத்தலாரைக் கேட்டதற்கு - "அவங்களை நிறுத்தச் சொல் - நான் நிறுத்தறேன்"றாரு!

Nov 14, 2005

பொது வாழ்விலிருந்து விலகுகிறார் பினாத்தலார் 14 Nov 05

பொது வாழ்விலிருந்து விலகுகிறார் பினாத்தலார்.

புரட்சிப்பினாத்தலார் தன் தொழிலான பினாத்துவதை விட்டுத் துறவறம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். காரணம் கேட்டதற்கு, கீழ்க்கண்ட செய்திகளைக் காண்பித்தார்.

  • தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக நடிகை குஷ்புக்கு தமிழக முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்தன. பல்வேறு கோர்ட்டுகளில்வழக்கும் தொடரபட்டன.
  • குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது: பா.ம.க.
  • தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துகள் சரியே என
    அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகை சுஹாசினிக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.
  • "குஷ்பு-சுஹாசினி ஆகிய 2 பேர் வீட்டின் முன்பும் துடைப்பம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று தமிழர் பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கூறியிருக்கிறார்.
  • மனோரமா: முதல்வரும் ஒரு நடிகையாக இருந்தவர்தான். அவரே குஷ்பு கூறியது தவறு என்று கூறியிருக்கிறார். முடிந்த விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். நான் படித்தவள் இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.
  • தயாரிப்பாளர் கேயார்: குஷ்பு, சுஹாசினி ஆகியோரின் பேச்சு அவர்களுக்கு
    வேண்டுமானால் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை ஏற்கமுடியாது. இது கண்ணகி வாழ்ந்த நாடு. விளம்பரம் இல்லாமல் இருப்பதை விட இப்படித் தவறான விஷயங்களைப் பேசி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.
  • இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக சுஹாசினி மன்னிப்பு கேட்கவேண்டும்.
  • கவிஞர் மேத்தா: குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சமயத்தில் அதை அணைக்கப் பார்ப்பதுதான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது.
  • தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேச சிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு கொம்பு முளைத்திருப்பது உண்மைதான்.
  • இல.கணேசன்: தமிழர்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படும் தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்புவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சுஹாசினி பேசியுள்ளதாகவே கருதுகிறேன்.
  • வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பு, சுஹாசினி போன்றவர்கள் தயாராகிவிட்டனர். இவர்களைத் திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்கமுடியாது.
  • திருமாவளவன்: என்னைக் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்று
    குஷ்புவைக் கண்டித்தவர்களைத்தான் சுஹாசினி கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கேட்க இவர் யார்? தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டுமாம்.
  • "என் மீது நீங்கள் குற்றம் சாட்டினால் உங்களையும், உங்கள் தலைவரையும்
    கோர்ட்டில் சந்திப்பேன்'' - சுஹாசினி எஸ்.எம்.எஸ்.
  • எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் - நடிகை சுஹாசினிக்கு சரத்குமார் கண்டனம்
  • செயற்குழுவை கூட்டி குஷ்பு மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
மேலும் அவர் கூறியதாவது: என் கொள்கை, உயிர், மூச்சு அனைத்துமே பினாத்துவதுதான். இதை இவ்வளவு பேர் பங்கு போட்டுக்கொண்டால் நான் என்ன செய்வேன்?

இட்லி வடைக்கு (கருத்துக்களை சேகரித்து வைத்தமைக்காக) நன்றி.

Nov 8, 2005

திரைக்கு வந்த புத்தகங்கள் 08 Nov 05

என்னுடைய முந்தைய பதிவில், ராமச்சந்திரன் உஷாவின் பின்னூட்டத்தில் கூறியிருந்தார் - விரும்பி படிச்ச கதைய படமா பார்க்கிற தைரியம் எனக்கு எப்போதும் கிடையாது - என்று.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிந்தனைச் சிதறல்களில் இதுவரை படமாக்கப்பட்ட புத்தகங்களைப்பற்றி யோசித்தேன்.

எனக்கு புத்தகங்களில் இருந்து வந்த ஆங்கிலப்படங்கள் பற்றி அதிகம் பரிச்சயம் கிடையாது, எனவே தமிழ் பற்றி மட்டும்.

பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார் - "ஒரு பாட்டி வடை சுட்ட கதையைக்கூட படித்தவர்கள் பாராட்டும் விதமாக திரையில் கொடுக்க முடியாது. பாட்டி என்றால் சுமங்கலிப்பாட்டியா அல்லது விதவைப்பாட்டியா, வடை என்றால் மெதுவடையா அல்லது மசால்வடையா என்று படித்தவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிம்பத்தை மனதில் கொண்டிருப்பார்கள், அதை நான் எந்த வகையில் எடுத்தாலும், படித்தவர்களில் சிலரின் பிம்பத்தையாவது அது உடைத்துவிடும்" இதுதான் முக்கியக் காரணம் என்று நம்புகிறேன்.

"பார்த்திபன் கனவு" புத்தகத்தின் கடைசியில் அவிழும் மர்ம முடிச்சு, திரைப்படத்தின் மூன்றாவது காட்சியிலேயே எஸ்.வி.ரங்காராவ் வரும்போது தூள் தூளானதும் இதற்கு உதாரணமே

பத்திரிக்கைகளில் தொடராக வரும்போது, மணியம் செல்வனோ, மாருதியோ வரையும் கதாபாத்திரங்களின் ஓவியம், படிப்பவர்க்கு ஏறத்தாழவேனும் கொடுக்கும் ஒரு அடையாளத்தை, படத்தில் வரும் பாத்திரங்கள் உடைத்துவிடும் என்பது நிச்சயம். யாராவது, சுஜாதாவின் வஸந்தாக வெண்ணிற ஆடை மூர்த்தியையோ, ப்ரியாவில் வரும் பெயர் தெரியாத நடிகராகவோ கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? "குறிஞ்சி மலர்" அரவிந்தனாக மு க ஸ்டாலினைப் பார்த்த தீவிர தி மு க வினரே வெறுத்துப்போனது மறந்திருக்காது. அப்புசாமியாகவும் துப்பறியும் சாம்புவாகவும் காத்தாடி ராமமூர்த்தி நடித்தது பற்றி எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது.

வாசகர் பெரும்பாலானோர் மனதில், பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை ஏதெனும் ஒரு நடிகர் / நடிகையாக கற்பனை செய்து பார்த்திருப்பார்கள்.. டோண்டு, தருமி போன்றோர் (அவர்கள் மன்னிக்க) வைஜயந்தி மாலாவையும், ஜெமினி கணேசனையும் பாலையாவையும் நினைத்திருக்க, இடைப்பட்ட காலத்தோர் கமலஹாசனையும், குஷ்பூவையும் நினைத்திருக்கலாம். என்போன்ற சிறுவர்கள் அஸினையும் நினைக்கலாம்:-) எப்போது எடுக்கப்பட்டாலும், ஏதெனும் ஒரு சாராரிடம் இருந்தாவது திட்டு வாங்காமல் தப்பிக்கவே முடியாது. மாஜிக் லாண்டர்ன் குழுவினர் இதை நாடகமாக நடித்தபோது பசுபதி வந்தியத்தேவனாக நடித்ததாக அறிகிறேன் - பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு இத்தேர்வு சரிதான் எனப்பட்டாலும் எத்தனை பேர் என்னுடன் ஒத்துப்போவர் என்று நினைக்கிறீர்கள்?

இந்தப்பிரச்சினை வேன்டாம் என்று தியாக பூமி, விக்ரம் ஆகிய தொடர்கதைகள் வரும்போதே, நடிகர்களையே புத்தகத்திலும் போட்டு ஒருவாறு தயார் செய்து இருந்தார்கள். இது திரைப்படம் எடுக்கப்படும் எனும் முன்முடிவுடன் (ஸ்டோரி டிஸ்கஷன் குழு ஆசீர்வாதத்துடன்) எழுதப்படும் மிகச்சில கதைகளுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

விதிவிலக்குகளும் இருக்கலாம் - ஆனால் அவற்றை நான் பார்த்ததில்லை அல்லது படித்ததில்லை. மோகமுள் கதை படித்திருக்கிறேன், திரைப்படம் பார்க்கவில்லை. அழகி, சொல்ல மறந்த கதை திரைப்படங்களாக எனக்குப் பிடித்திருந்தன - ஆனால் கதைகளை படித்திருக்கவில்லை (படிக்கவில்லை என்பதுதான் படம் பிடித்ததுக்கு காரணமோ என்றும் சந்தேகிக்கிறேன்).

மணிரத்னம் படங்களில் சில காட்சிகள் அல்லது பாத்திரங்கள் கதைகளில் இருந்து தழுவப்பட்டபோதும், திரைக்கேற்றவண்ணம் செப்பனிட்டிருப்பார். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் இரு காட்சிகள் கதையாகவும், படமாகவும் நன்றே செய்யப்பட்டிருந்தன. "அஞ்சலி"யில் பிரபு பாத்திரம், Mockingbird பூ ராட்லீயைத் தழுவியது, நாயகன் - காட்ஃபாதர் திரைப்படத்தைவிட, புத்தகத்தையே அதிகம் தழுவியதாக நான் நினைக்கிறேன்.

மொத்தத்தில், படித்த புத்தகத்தை திரையில் பார்க்கும் தைரியம் எனக்கும் வராது, இதுவரை வந்த படங்கள் அந்த நம்பிக்கையை தூண்டும் விதமாகவும் இல்லை.

பி கு - புத்தகங்களில் இருந்து வந்த ஆங்கிலப்படங்கள் பற்றிப் பேச விரும்புவோர், இந்தப் பின்னூட்டப்பெட்டியிலேயே பேசலாம். (காத்துத்தான் வாங்குது:-))

Nov 7, 2005

To Kill a Mockingbird -புத்தகப்பார்வை

மு கு or Disclaimer : இது ஒரு வழக்கமான பினாத்தல் பதிவு அல்ல.

எப்போது நாம் ஒரு புத்தகத்தையோ அல்லது வேறெந்த புனைவையுமோ பாராட்டுகிறோம்?
கதையில் உள்ள மாந்தர்களுடன் நம்மை அடையாளம் காண முடியும்போது, அவர்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள முடியும்போது, அவர்களின் செயல்களின் நியாய அநியாயங்களைப் பற்றி தர்க்கிக்கும்போது தான் நம்முள் எந்த ஒரு புனைவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தன்னைக் காண்பது என்பது சில நேரங்களில் மிக எளிதாக அமைந்துவிடும். தமிழ்நாட்டின் தாய்க்குலம் கஷ்டம் மட்டுமே அனுபவிக்கும் மெகா சீரியல் நாயகிகளிடமும், தங்களைக் கொடுமைப்படுத்திய கணவர்களையும், மாமியார்களையும் தொடரிலும் பார்க்கும்போது மிக எளிதாக அதில் ஒன்றிவிடுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் கல்லூரி / காதல் திரைப்படங்களில் மாணவர்கள் எளிதாக ஒன்ற முடிவதால்தான் பல படங்கள் அப்போது வெளியிடப்படுகின்றன. வேலை நிமித்தமாக பல ஊர்கள் / நாடுகள் சுற்றியதால், இரா முருகனின் அதே போன்ற கதாபாத்திரங்களுடன் என்னால் முழுமையாக ஒன்ற முடிந்தது.

சில நேரங்களில், கதை மாந்தர்களுடன் முழுமையாக தம்மை அடையாளம் காண முடியாவிடினும், ஒரு பகுதியில் மட்டுமே ஒத்துப்போனாலும், நம் தொல்லைகளுக்கு எளிய/ வலிய தீர்வு சொல்லும் பாத்திரங்கள் வெல்கின்றன. தெருவில் தினம் சந்திக்கும் லஞ்சப்பேய்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பேராசிரியரும், சுதந்திரப் போராட்டத் தாத்தாவும் எம்.எல்.ஏவின் வீட்டில் மாடுகளைக்கட்டிய பால்காரனும் நம்மை ஈர்த்தது இதனால்தான்.

வெகு சில கதைகள் மட்டுமே, நம்முடைய தினக் குணாதிசயங்கள் எதுவுமே இல்லாத பாத்திரங்களுடன் இருக்கும்போதும், ஏதோ ஒருவகையில் நம்மை அப்பாத்திரங்களுக்காக சிரிக்க வைத்து, கண்ணீர் விட வைத்து கோபிக்கவைத்து -- எல்லாம் செய்யும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நான் பார்த்திராத ஊர்களில் பயனம் செய்து, கற்பனைக்கும் எட்டாத பாத்திரங்களுடன் பழகினாலும், வந்தியத்தேவன் கடலில் விழுந்து எழும்போது என் உடலிலும் உப்புத்தண்ணீர் பட்ட உணர்வு ஏற்படுவது எப்படி?

எங்கேயோ அமெரிக்காவில் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்த ஸிந்தியா, என் வேலையை ராஜினாமா செய்யும் எண்ணத்தை மாற்றியது எப்படி? (Strong Medicine - Arthur Hailey)

காட்டையே பார்த்திராத நான் அடர்காடுகளில், அதிரடிப்படைக்கு பயந்த சோளகனாகவும் கொஞ்சம் வாழ முடிந்தது எப்படி?

ஆபிரஹாம் லிங்கன் என்ன சொன்னால் என்ன? போர் வந்தால் என்ன? எனக்குத் தேவை என்னுடைய ரசிகர் கூட்டம், அதற்காக என்ன வேன்டுமென்றாலும் செய்வேன் என்னும் ஸ்கார்லெட் ஓ ஹாரா வாக எப்படி என்னை நினைத்துக்கொள்ள முடிந்தது? (Gone with the Wind - Margeret Mitchell)

யோசித்துப்பார்த்தால், இப்படி கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத கதாபத்திரங்கள் உள்ள புனைவுகள்தான் என்னை நீண்ட நாட்கள் பாதிக்கின்றன.

அப்படி ஒரு கதைதான் to Kill a Mockingbird (Harper Lee)

கதையை சுருக்கமாகக் கூறிவிடுகிடுகிறேன்.

1935 வாக்கில், அட்லாண்டாவிற்கு அருகில் இருந்த மேகோம்ப் கிராமத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். வழக்கறிஞர் அட்டிகஸுக்கு கோர்ட்டால் தரப்பட்ட ஒரு வழக்கில், வெள்ளை இனத்துப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு கறுப்பின இளைஞன் குற்றம் சாட்டப் படுகின்றான். ஊர் மக்கள் இதை ஒரு சாதாரண வழக்காகப் பார்க்காமல், வெள்ளையர் VS கறுப்பர் என்று பார்ப்பதால், நீதிக்கு வேலை இல்லாமல் உணர்வுகளுக்கே முதலிடம் தரப்படுகின்றது. வழக்கை நடத்தும் அட்டிகஸ்ஸை கறுப்பர் தோழர் என்று வீட்டுக்குள்ளே பேசிக்கொண்டாலும், வீட்டில் கவனிக்கும் ஊர்ச்சிறுவர்கள் அட்டிகஸ்ஸின் குழந்தைகளை கிண்டல் செய்யத் தலைப்படுகின்றனர். வாதங்களால் பலாத்காரம் நிகழவே இல்லை என்று அட்டிகஸ் நிரூபித்து விட்டாலும், வெள்ளையர் மட்டுமே அடங்கிய ஜூரி கறுப்பு இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. வழக்கில் வென்ற போதிலும், அவமானப்படுத்தப்பட்டதாய் உணரும் (பலாத்கரப் படுத்தப்பட்டதாய் கூறப்பட்ட)பெண்ணின் தந்தை, அட்டிகஸ்ஸின் குழந்தைகளை பயமுறுத்த முயலும்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்துவிடுகிறான். கதை என்று பார்த்தால் இவ்வளவுதான்.

ஆனால், கதை முழுக்க முழுக்க அட்டிகஸ்ஸின் ஆறு வயதுப் பெண் குழந்தை வாயிலாகவே கூறப்படுகிறது. ஆரம்பப் பக்கங்களிலேயே, நானும் ஜீன் லூயிஸ் ஃபிஞ்ச் (ஸ்கவுட்) ஆக மாறிவிடுகிறேன்.

  • பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கிறேன்.
  • அண்ணனுடன் சண்டை போடுகிறேன் - பெரியவர்கள் ஏன் அவன் பக்கமே இருக்கிறார்கள் என கோபிக்கிறேன்.
  • பக்கத்தில் இருக்கும் மர்ம வீட்டில் உள்ளேயே அடைந்து கிடக்கும் பூ ராட்லீ(Boo Radley) யை வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் அண்ணனுக்கும், தோழன் டில் (Dill)லிற்கும் துணை நிற்கிறேன்.
  • என் இயல்பை மாற்றி ஒரு சிறந்த பெண்மணியாக என்னை மாற்றிவிட முயற்சிக்கும் அத்தைமேல் வெறுப்பு கொள்கிறேன்.
  • வெள்ளையரின் சர்ச்சுக்கும், கறுப்பர்களின் சர்ச்சுக்கும் வழிமுறைகளில் உள்ள வித்தியாசங்களைக் கண்டு வியக்கிறேன்.
  • "Nigger Lover" என்று கத்தி என்னை வெறுப்பேற்றும் பள்ளி சகாக்களிடம் மல்லுக்கு நிற்கிறேன்.
  • அதிசயமாக வந்த பனிமழையில் நனைகிறேன்.
  • அப்பாவின் அலுவலகத்திற்கு அழையாமல் சென்று, அவரைக் கொல்ல வந்தவர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்றுகின்றேன்.
  • அப்பாவின் அசைக்க முடியாத வாதத்தைக் கேட்டும் அதற்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் ஜூரிகளைக்கண்டு குழம்புகிறேன்.
  • எப்போதும் வீட்டை விட்டு வெளிவராத பூ (Boo) என்னைக்காப்பாற்ற மட்டும் வெளியே வந்ததற்காக நன்றி செலுத்துகிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என் அறியாமையை இழக்கிறேன். "வயதான பிறகு கற்றுக்கொள்ள என்ன இருக்கப்போகிறது - அல்ஜீப்ராவைத்தவிர?"

கதையின் இடை இடையே வரும் தத்துவ விசாரங்கள் மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சிறுமியின் அறிவுக்கு ஏற்ப ஆராய்வது நிச்சயமாக பெரியவர்களை யோசிக்கச் செய்யும்.

உங்களை ஒருமுறை படிக்கப் பரிந்துரைக்கிறேன், நிச்சயமாக, நீங்கள் பலமுறை படிப்பீர்கள்.

Nov 5, 2005

மேலும் ஒரு கடற்கரை சந்திப்பு 03 Nov 05

அமீரக வரலாற்றில் முதல் முறையாக, புஜைராவை ஒட்டி உள்ள கல்பா கடற்கரையில் மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. சம்பிரதாய முறைப்படி, என்ன சாப்பிட்டோம் என்பதைக்கூறிவிட்டு, பிறகு என்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பதைக் கூறுகிறேன்.

காலையில் எடுத்துச் சென்ற உணவு வகைகள் மதியத்துக்குள்ளேயே தீர்ந்துவிட்டதால், கடற்கரையிலேயே இருந்த டுபாக்கூர் உணவகத்தில் இருந்து, சுடச்சுட சமோசாக்களையும் (சமைத்து ஐந்தே நாள் ஆனது), காப்பியையும் குடித்து வயிற்றுக்கு சிறிது ஈந்த பின்னர், செவிக்கும் ஈய ஆயத்தமானோம்.

சந்திப்பில் கலந்துகொண்ட ஒவ்வொரு பெயரையும் கூற முடியாது என்பதால், முக்கியமான சிலர் பற்றி மட்டும் (ம்ஹூம் நீ சரிப்பட மாட்டே!):

நுனிப்புல் (ஃபுஜைரா கடற்கரையில் இயற்கையான புல் கிடையாது என்பதால், இவர் வரவு கடற்கரைக்கு பசுமை சேர்த்தது) தன் கணவருடன்,

உங்கள் உண்மையுள்ள (yours truly) புரட்சிப்பினாத்தலார் தன் ரத கஜ துரக பதாதியுடன் (அப்படீன்னா என்னங்க?),

பதிவிட இன்னும் தொடங்காமல் அவ்வப்போது பின்னூட்டம் மட்டும் கொடுக்கும் தென்றல் தன் குடும்பத்துடன்,

90களில் கையெழுத்துப்பத்திரிக்கையாகத் தொடங்கி, அதன் விஞ்ஞான நீட்சியாக வலைப்பதிவுலகிலும் தடம் பதிக்க இருக்கும் குளம் வலைப்பூவின் ஆறு எழுத்தாளர்களில் இருவரும்

மற்றும் பலரும் (இப்படிப் போடறதும் சம்பிரதாயம்தான்) கலந்து கொண்டனர்.

என்ன விவாதித்தோம்?

1. வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது எப்படி?

2. தீபாவளி ஆரியர் பண்டிகையா?

3. குஷ்பூவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பெண்ணியவாதிகளா?

4. செம்மொழித் தமிழை எவ்வாறு மேம்படுத்தலாம்?

5. இலக்கியம் என்பதின் இலக்கு யாது?

என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல், பொதுவான விஷயங்களை மட்டும் பேசிவிட்டு, பேச்சில் கலந்து கொள்ளாதவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் ஆவதில் கோபம் காட்டக்கூடிய சாத்தியக்கூறு இருந்ததால் ஒன்றரை மணி நேரத்தில் ஜூட் விட்டு விட்டோம் - இனி அடிக்கடி சந்திக்க முயலுவோம் என்ற வாக்குறுதியுடன்.

Nov 1, 2005

தீபாவளி - ரமலான் நல்வாழ்த்துக்கள்

என் இனிய வலைப்பதிவாளர்களே..

பினாத்தல்களை மட்டுமே படைத்துக்கொண்டிருந்த சுரேஷ்,இன்று
என்னோடும், என் மண்ணோடும் உறவாடிய அன்பு நெஞ்சங்களுக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்ல வந்திருக்கிறான்.

தீக்குச்சியால் தீபம் மட்டும் ஏற்றுவோம்.

வெடிமருந்தை அளவாய்க்கட்டி பட்டாசாக மட்டும் ஆக்குவோம்.

நல்லுறவை விதைப்போம், நல்லுறவைப் பறிப்போம்.

இன்ஷா அல்லாஹ் நாளை மலரும் ரமலானைக்கொண்டாடும் உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துக்கள்.

Oct 27, 2005

என் பரிணாம வளர்ச்சியில் தீபாவளி

தீபாவளி- 1978

என்னப்பா பத்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்கே? கோபி வீட்டிலே நூறு ரூபாய்க்கு வாங்கி இருக்காங்களாம் தெரியுமா?ஒரு பாக்கெட் கூட ராக்கெட், ட்ரெயின் இல்லையே - எல்லாம் நமுத்துப்போன ஒத்த வெடியா இருக்கு?

அய்யோ தூறல் போடுது - காய வெச்ச பட்டாசெல்லாம் நனைஞ்சிடும் - ஒடு..

அவன் தான்மா நான் பாக்காத நேரத்திலே லக்ஷ்மி வெடி வெச்சுட்டான். புதுச்சட்டை வீணாப்போச்சு, விரலை மடக்கவே முடியலை அம்மாஆஆஆஅ!

தீபாவளி - 1986

ஏன்டா தீபாவளியும் அதுவுமா தியேட்டர் வாசல்லே தேவுடு காக்கறீங்க?

அதுசரி - நாளைக்குப் பார்த்தா உனக்கும் எனக்கும் (ரசிகனுக்கும்) என்ன வித்தியாசம்?

பட்டாசு வெடிக்கலையா?

அதெல்லாம் கார்த்திகை தீபத்துக்கு பார்த்துக்கலாம். தலைவர் படம் பேரெல்லாம் சேர்த்து ஒரு கவிதை(?!) எழுதித் தரச் சொன்னேனே - செஞ்சியா?

தீபாவளி - 1994

இங்க பாரு -When I say no, it is NO! சைட்லே இருக்கறதே நீ ஒரு ஆளு. உனக்கு 10 நாள் லீவு எல்லாம் கொடுக்க முடியாது.

நான் தீபாவளிக்கா சார் லீவு கேக்கறேன்? என் பாட்டி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க சார். அவங்களுக்கு என் மேலே உயிர்! நான் போகலேன்ன ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க சார்.

கஸ்டமர் கிட்டே எல்லாம் சொல்லிட்டேன் சார். எல்லா மெஷினும் இப்போ கண்டிஷன்லேதான் இருக்கு. எதாவது ப்ராப்ளம் ஆனாலும், மேட்டரை பெரிசா ஆக்க மாட்டாங்க சார். ப்ளீஈஈஈஈஈஸ் சார்!

தீபாவளி - 1999

ஏண்டி ஒரு மனுஷன் எவ்வளவுதான் ஸ்வீட் சாப்புடுவான்? ஒரு சோதனைச் சுண்டெலி மாட்டினா போதுமே? ஊர்லே எல்லார்கிட்டே இருந்து வந்த பட்சணத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணிடுவீங்களே!

இதப்பாரு, நான் சரம் மட்டும்தான் வெடிப்பேன் - இந்த புஸ்வாணம், சக்கரம் எல்லாம் லேடீஸ் மேட்டர்.

நிச்சயமா முடியாது. தீபாவளி அன்னிக்கு சினிமா போறதில்லைன்னு ஒரு பிரின்சிப்பிள்ளே வச்சிருக்கேன். அடுத்த வாரம் ட்ரை பன்னறேன் - உறுதியா சொல்ல முடியாது.

தீபாவளி - 2005

சரியாப்போச்சு போ! தீபாவளி அன்னிக்கு எனக்கு க்ளாஸ் இருக்கு. புது ட்ரெஸ் எல்லாம் போட முடியாது. யூனிஃபார்ம் நிச்சயம் போட்டே ஆகணும்.

பட்டாசா? எந்த ஊர்லே இருக்கே தெரியுமா? ஜெயில்லதான் தீபாவளி கொண்டாடறதுன்னு முடிவு பண்ணிட்டயா? நீயும் பொங்கல் ரிலீஸ்தான் ஞாபகம் வெச்சுக்க!

சாஸ்திரத்துக்கு ஒரு ஸ்வீட் பண்ணு போதும். சுகர் எற்கனவே கச்சா முச்சான்னு இருக்கு!

Oct 24, 2005

சோளகர் தொட்டி - ச பாலமுருகன் (24Oct05)

ஒரு புத்தகத்தின் கடைசிப்பக்கத்தைப் படித்து முடித்தவுடன் ஏற்படும் மனநிலை மாற்றமே என்னைப் பொறுத்தவரை அதன் தரத்தின் அளவுகோலாக இருந்தது - நேற்று வரை.

கடைசிப்பக்கத்துக்காக ஆவலுடன் காத்திருந்து, முடிந்தவுடன் "அப்பாடா" என்று விரல்களுக்கு விடுதலை கொடுக்க வைக்கும் சாதாரண நாவல்கள்..
பக்கங்கள் தீர்ந்தவுடன், முடிந்துவிட்டதே என வருந்தவைத்து, கடைசி சில பக்கங்களை திரும்பப் படிக்கத் தூண்டும் சில புத்தகங்கள்.

வெகு சில புத்தகங்கள் மனதிலிருந்து வெளியேறாமல் அழிச்சாட்டியம் செய்து முதலில் இருந்தே மீண்டும் படிக்க வைக்கும். இந்த லிஸ்ட் மிகவும் சிறியது..Gone with the wind, to kill a mocking bird, குருதிப்புனல், ஒரு புளியமரத்தின் கதை என ஒரு கைவிரல்களுக்குள் அடங்கிவிடக்கூடியனதான்.

சோளகர் தொட்டி இது எந்த வகையிலும் அடங்காத புது வகையாக இருந்தது. கடைசி வரியைப் படித்தவுடன் வேகமாக மூடினேன். புத்தகத்தை உடனே கைக்கெட்டாத தொலைவிலும் வைத்தேன்.

காரணம் நிச்சயமாக முதல் வகை சாதாரணப் புத்தகம் என்பதால் அல்ல. கடைசி சில பக்கங்களையோ, முதலில் இருந்தேவோ மீண்டும் படிக்க மனம் துணியாததுதான். -ஏன்? பிறகு கூறுகிறேன்.

கதையை எழுதியவர் மனித உரிமையாளர், வீரப்பனைப் பிடிக்க வந்த அதிரடிப்படையினால் ஒரு மலைக்கிராமத்துக்கு ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றியது என்பதெல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்னரே தெரிந்துவிட்டதால், கதை அதிரடிப்படையினருக்கு எதிராகவும், வீரப்பனுக்கு ஆதரவாகவும்தான் இருக்கும் என ஒரு முன்முடிவு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. படித்த பின்னரே தெரிகிறது, "Beware of Preconceived notions" என்று "Failure Analysis"-இல் கூறுவது எவ்வளவு சரியானது என்று.

சோளகர் என்னும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் (தொட்டி), சில தலைமுறைகளுக்கு முன்னரும் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இல்லை - மதம் பிடித்த ஒற்றை யானைகளையும், பெருநரி (புலி)களையும் எதிர்த்து, மழை பெய்தால் விதைத்து, பெருந்தனக்காரர்களின் ஏமாற்றுக்குப் பலியாகி பழக்கப்பட்டவர்கள்தாம்.

ஆனால், பிறகு இவர்கள் சந்தித்த எதிரிகள் வேறு வகையானவர்கள். எப்போதோ ஒருமுறை கண்ணில் பட்ட சந்தனக் கடத்தல் கும்பலைப்பற்றி தாழ்ந்த குரலில் பயந்தபடி கிசுகிசுத்துக்கொள்ளும் சோளகர்களை, வீரப்பனுக்கு உணவு கடத்தும் கும்பல் எனச் சந்தேகிக்கும் அதிரடிப்படையினரை சந்திக்க நேரும்போது, அதிகாரபலம், ஆயுதபலம், ஆள்பலம் ஆகியவற்றின் பொருந்தாச் சமன்பாட்டால் சிதறிப்போகிறார்கள்.

"வீரப்பன் கொடியவன், கொலைகாரன், அதிரடிப்படை அவனை சூரசம்ஹாரம் செய்தது சரியான ஒரு முடிவே" என்னும் என் முந்தைய கருத்தை இந்த நூல் மாற்றிவிட வில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயங்களில் ஆசிரியர் எந்தக் கருத்தையும் கூறவும் இல்லை.

நகர நாகரீகத்தையும், அது தரும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மட்டுமே அனுபவிக்கும் மக்களுக்கு அதிரடிப்படையைப் பற்றிய குறைகளும், குற்றச்சாட்டுகளும் Blasphemy ஆகத்தான் தோன்றும் - அப்படித்தான் எனக்கும் தோன்றியது.

ஆனால், இந்நூலில் இருக்கும் Authenticity நடந்தது இதுதான் என வெளிச்சம் போடும்போது, அதை மறுக்க முடிவதில்லை. என் மனத்தளவில் இந்த நடவடிக்கைக்கு நானும் அளித்த ஆதரவும், இந்தக்கொடுமைகளைத் தடுக்க இயலமையும் என் மனத்தில் ஏற்படுத்திய குற்ற உணர்வுதான் இன்னொரு முறை படிக்காமல் தடுத்திருக்கிறது.

நீங்களும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

Oct 20, 2005

பெட்டிக்கடை

"என்ன கடைக்காரரே, பாத்து ரொம்ப நாளாகுது?"

"அது ஒண்ணும் இல்லே சார், வீடு மாத்தினேனா அதுலே கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சி"

"புதுசு புதுசா நெறய புத்தகம் தொங்க விட்டிருக்கியே - முன்னே எல்லாம் ஒரு நாலோ அஞ்சோதான இருக்கும்?"

"அதை ஏன் கேக்குறீங்க சார், ஏஜென்ட்டுங்க வரானுங்க, புது பொஸ்தவத்த குடுத்து இங்கே தொங்கவிடு, நாலு பேரு பாக்கட்டும்னு சொல்லிட்டு போயிர்ரானுங்க! பொஸ்தவம் வித்தா காசு அவனுக்கு, விக்காட்டி ரிட்டன்! எனக்கு இதிலே லாபமும் இல்லே நஷ்டமும் இல்லே. அதான் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டிருக்கேன்."

"அது சரிதான்பா, இதெயெல்லாம் தொங்க விட்டா பழைய புத்தகம் எல்லாம் தெரியாம மறைக்குது பார்."

"அதுக்கென்ன பண்ணறது சார். ஒவ்வொரு வாரமும் ஒரு நாலஞ்சு புது பொஸ்தவம் வருது, பழசப் படிக்கரவன் தேடியாவது படிப்பான் இல்ல? புதுசத்தான் தெரியறாப்பல வைக்கணும்."

"நீ பாட்டுக்கு புதுசு புதுசா தொங்கவிடு. நேத்திக்கு நம்ம வாத்தியார் வந்திருந்தார் - அவர் என்னா சொல்றாரு தெரியுமா?"

"நம்ம வாத்தியாரா? நல்ல மனுசனாச்சே - என்ன ஆச்சு சார்?"

"இங்கே தொங்கற புத்தகத்திலே எதோ அசிங்க அசிங்கமா எழுதி இருக்காம் - படிக்கர சின்னப் பசங்க கெட்டுப் போயிடுவாங்களாம்."

"அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்? அவன் பொழப்புக்கு ஏதொ எழுதி காசு பாக்கறான்."

"இருந்தாலும் விக்கிறது நீதான? அதுனாலதான் வாத்தியாருக்கு உன்மேல கோவம்!"

"நாந்தான் சொல்லிட்டேனே சார், இதுனால எனக்கு காலணா வருமானம் கெடையாதுன்னு.."

"அப்படி சொல்லி நீ தப்பிக்க முடியுமா? உன்னாலேதான் ஊர் கெட்டுப்போச்சுன்றாங்க எல்லாரும்!"

"அய்யய்யோ எனக்கு எதுக்கு சார் ஊர் பொல்லாப்பு. அந்த ஏஜென்டு கிட்டெ சொல்லிடறேன் - எல்லா பொஸ்தவத்தையும் ரிட்டன் எடுத்துகிட்டு போன்னு.."

"அப்படி சொன்னா எப்படி? எல்லா புக்குமா மோசம்? சிலதுதான் மோசம்."

"சரி சார். இதுவரிக்கும் என்ன பொஸ்தவம்னே பாக்கலே. இப்போ பாக்கறேன், எது எனக்கு பிடிக்கலையோ அத ரிட்டன் பண்ணிடறேன். சரியா?"

"அந்த ஏஜெண்டு கோவிச்சுக்கிட்டான்னா?"

"கடை என்னுது சார். என் கடையிலே நான் எனக்கு பிடிச்சதுதான் வைப்பேன். வேணும்னா அவன் வேற கடை தொறக்கட்டுமே, யாரு வேணாமுன்னாங்க?"

"சரி, படிச்சு பழகிப்போன மக்கள், நீ வேணாம்னு சொன்ன புக்கே வேணும்னு கேட்டாங்கன்னா?"

"இல்லேன்னு சொல்ல வேண்டியதுதான் - இருக்கறதப் படிங்கன்னு சொல்ல வேண்டியதுதான்.."

" ஆக, ஊர் மக்கள் எதப் படிக்கலாம், எதப் படிக்கக் கூடாதுன்னு நீ மட்டும் முடிவெடுக்கப் போறே!"

"இதுக்கு நான் வேற யாரை சார் கேக்க முடியும்? யாரையும்தான் எதுக்கு கேக்கணும்?"

"சரியான அராஜகப் பேர்வழிப்பா நீ!"

"என்ன சார், நீங்களே பிரச்சினய ஆரம்பிச்சுட்டு நீங்களே எனக்கு பட்டம் கட்டறீங்க ! ஹூம், நான் வாங்கி வந்த வரம் அது!"

Oct 17, 2005

சந்திரமுகி - அதிர்ச்சி வெற்றி!

சந்திரமுகி - வெள்ளி விழா கொண்டாடி விட்டது. இனிமேல் என் விமர்சனத்தால் படத்தின் வெற்றி வாய்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. (டேய்! அடங்க மாட்டே?)

இருந்தாலும், படம் பார்த்த புதிதில் தமிழ்மணமே சந்திரமுகி விமர்சனங்களால் நிரப்பப் பட்டிருந்தது. "ஒரு ரஜினி படம் கூட பார்க்க முடியாத" வர்களைப்பற்றிய கருத்துகளும், படம் பார்த்த போது ரசிகர் அடித்த விசில்கள், அமெரிக்காவிலும் ஸ்டார் கட்டிய செய்திகள் - இவையே பிரதானமாக இருந்தன. சுரேஷ் கண்ணனின் "சந்திரமுகியும் சாகடிக்கப்பட்ட யதார்த்தங்களும்" பொறாமைப் பார்வையாகத் திரிக்கப்பட்டது. தீவிர ரசிகரே ரிஸ்க் அனாலிஸிஸ் செய்தாலும் "தமிழணங்கி"ல் மாட்டிக்கொண்டார்.

இப்படிப்பட்ட சூழலில் பினாத்தல்களின் கருத்துக்கா மதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என அமைதியாய் இருந்துவிட்டேன்.

இப்போதோ படம் வெள்ளிவிழா கொண்டாடிவிட்டது. உலக சினிமாத் தர வரிசையில் அழிக்க முடியாத 23 ஆம் இடம் பெற்றுவிட்டது (இல்லைன்னு சொன்னா என்ன ஆவீங்க தெரியுமா?)

படத்தைப் பார்த்து, புகழ்ந்து விமர்சித்த அனைவரையும், படத்தை மறுபடி பார்க்க வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் விமர்சனத்தையும் மறுபடி ஒருமுறை படியுங்கள்:-)

எனக்கு பல காட்சிகளில், ஏன் அந்தப் பெரியவரை இப்படி வீணாகக் கஷ்டப் படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. குறிப்பாக கொஞ்ச நேரம் பாடல்! நாயகியுடன் ரொமான்டிக்காக காட்சிகள் அமைக்க முடியாத (நல்ல வேளை!) தோஷத்தால் துர்காவை தர்கா என அழைக்கும் நகைச்சுவை! ஏன் தான் இப்படிப் பட்ட ஒரு இசை ஞானி (அத்திந்தோம் புகழ்) இசையை வெறுப்பவராக சித்தரிக்கப்படுகிறார்? அமெரிக்காவின் பிரபல நம்பர் ஒன் மனோதத்துவ நிபுணரின் குருவை மிஞ்சிய சீடன் ஏன் அவ்வளவு அவமானத்தையும் தாங்க வேண்டும்? சாதாரணமாகவே சிரிக்க வைக்கக்கூடிய வடிவேலுவும், பல படங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைத்த ரஜினியும் சேர்ந்து ஏன் இரட்டை அர்த்த நகைச்சுவையை நம்ப வேண்டும்?

படம் வந்த புதிதில், ப்லரும் வியந்த விஷயம் ரஜினி பாத்திரம் கதையைச் சுற்றி அமைக்கப் பட்டிருப்பது. எனக்கு கதையே எதைச் சுற்றி அமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை! கொக்கை பறக்க வைத்து, கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு, அண்ணனோட பாட்டையும் பாடி முடித்தபிந்தான் இயக்குநருக்கு ஐயையோ இன்னும் 15 நிமிடம் தான் இருக்கிறது என உறைத்து கதை பக்கம் பார்வையை செலுத்தியுள்ளார். அதற்கு முன், ஒவ்வொரு அஞ்சு நிமிஷத்துக்கும் ஒருமுறை அந்த அரண்மனையை ஐந்து ஆங்கிளில் பலத்த BGM உடன் காட்டுவதே கதைக்கு திரைக்கதாசிரியரின் கடமை!

ஜோதிகாவின் நடிப்பும் பெரிதாக சிலாகிக்கப் பட்டது! மறுக்கவில்லை. ஆனால், அதற்கு கொடுக்கப்பட்டதே 10 நிமிடங்கள்தானே!

எனக்குத் தெரிந்தவரை, சந்திரமுகியின் மாபெரும் வெற்றி, என்னைவிட, ரஜினிக்கும், வாசுவிற்கும், பிரபுவிற்கும் ஏன் ரஜினி ரசிகர்களுக்குமே பெருத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்!

Oct 15, 2005

பசுவய்யா என்னும் கவிஞன் 15 Oct 2005

சுந்தர ராமசாமி என்னும் கதை சொல்லியின் இழப்பு பெரியதுதான்.

அதைவிடப் பெரிய இழப்பாக பசுவய்யா என்னும் கவிஞனின் மறைவு எனக்குப் படுகிறது.

தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் ஆரம்ப காலத் தூண்களில் முக்கியமானவர்; தமிழின் மிகச் சிறந்த புதுக்கவிதைகளில் சிலவற்றை கொடுத்தவர்; பல நாட்டுக் கவிதைகளையும் மொழி பெயர்த்து கவிச்சுவை குறையாமல் கொடுத்தவர்;

அந்த மகா கவிஞனுக்கு நம் அஞ்சலி!

பசுவய்யாவின் "எனது தேவைகள்"

கொஞ்சம் முகம் பார்த்து தலை சீவ ஒரு சந்திரன்
லோஷன் மணக்கும் பாத்ரூம்
என் மனக்குதிரைகள் நின்று அசை போட ஒரு லாயம்
என் கையெழுத்துப்பிரதியில் கண்ணோட
முகங்கொள்ளும் ஆனந்தச் சலனங்கள்
நான் காண ஒரு பெண்
சிந்திக்கையில் கோத ஒரு வெண் தாடி
சாந்த சூரியன்
லேசான குளிர்
அடி மனத்தில் கவிதையின் நீரோடை.

ஞான ரதம் டிசம்பர் 1973

Oct 13, 2005

மழைக்காலம் 13 Oct 2005

கழுவப்பட்ட மரங்களில்
என் உலுக்கலுக்கான
செயற்கை மழை சேமிப்பு

முழுக்க நனைந்தபின்னே
நினைவு வரும் அம்மாவின் கண்டிப்பு

சேற்றின் ஊடே நான் மட்டும் அறிந்த விரைவுப்பாதை

தேங்கும் நீரின் அளவில்
விடுமுறை கணிக்கும் விஞ்ஞான நண்பன்

வீட்டுள் அடைக்கும்
மின் தடை பிறப்பிக்கும்
விநோத விளையாட்டுக்கள்

*****

நினைவெலாம் அழித்து
கார்மேகக் கூட்டத்தையும்
தூறலின் சுவட்டையும்
வியப்பாக்கிக் காட்டும்
பாலை வாழ்க்கை.

நுனிப்புல்லின்
இந்தப் பதிவு உருவாக்கிய நோஸ்டால்ஜியா!

புது விளையாட்டு 13 Oct 05

ஒரு திருத்தம் (ஃப்ளாஷில்) செய்துவிட்டு ப்ளாக்கருடன் நெடிய போருக்குப் பின் வெற்றி!

ஃப்ளாஷ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் முதல் அமைச்சர் ஆகிவிடலாம்னு நெறய பேர் நெனைக்கிறாங்க. ஆனா அது எவ்வளவு கஷ்டம், எத்தனை தடைக்கற்களை எடைக்கற்களாக (ஓ ..படிக்கற்களாகவா.. சரி சரி.)மாத்தணும், எப்படி படிப்படியா காய் நகத்தணும்-ங்கறது பல பேருக்குத் தெரியறதில்லை.

எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும் விளையாட்ட சொல்லிக் கொடுத்தா கஷ்டம் கஷ்டமாகவே இருக்காது என்பது பினாத்தலின் அனுபவப் பாடம்.

இந்தப் பரம பதம் ஒரிஜினல் பரமபதம் போல இல்லை பாம்பு, ஏணி எல்லாம் கிடையாது. கொஞ்சம் மாடிஃபைடு! எப்படின்னா, சொக்கட்டானை உருட்டி, நீங்களே கால்குலேட் பண்ணி, சரியான கட்டத்துக்கு மேலே போயி க்ளிக் செய்யனும். அங்கே அந்தக் கட்டத்துக்கான நிகழ்வும் பலனும் இருக்கும். அதுக்குத் தகுந்தாப்போல, காய மேலேயும் கீழேயும் நகத்தணும்.

ஆடிப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க. இதே ஃபார்மட்லே வேறே சில விஷயங்களும் போடலாம்.























புது விளையாட்டு 12 Oct 05

ஒரு சின்ன திருத்தத்துடன் மீண்டும்:

ஃப்ளாஷ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் முதல் அமைச்சர் ஆகிவிடலாம்னு நெறய பேர் நெனைக்கிறாங்க. ஆனா அது எவ்வளவு கஷ்டம், எத்தனை தடைக்கற்களை எடைக்கற்களாக (ஓ ..படிக்கற்களாகவா.. சரி சரி.)மாத்தணும், எப்படி படிப்படியா காய் நகத்தணும்-ங்கறது பல பேருக்குத் தெரியறதில்லை.

எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும் விளையாட்ட சொல்லிக் கொடுத்தா கஷ்டம் கஷ்டமாகவே இருக்காது என்பது பினாத்தலின் அனுபவப் பாடம்.

இந்தப் பரம பதம் ஒரிஜினல் பரமபதம் போல இல்லை பாம்பு, ஏணி எல்லாம் கிடையாது. கொஞ்சம் மாடிஃபைடு! எப்படின்னா, சொக்கட்டானை உருட்டி, நீங்களே கால்குலேட் பண்ணி, சரியான கட்டத்துக்கு மேலே போயி க்ளிக் செய்யனும். அங்கே அந்தக் கட்டத்துக்கான நிகழ்வும் பலனும் இருக்கும். அதுக்குத் தகுந்தாப்போல, காய மேலேயும் கீழேயும் நகத்தணும்.

ஆடிப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க. இதே ஃபார்மட்லே வேறே சில விஷயங்களும் போடலாம்
.























Oct 11, 2005

கருத்துக் கணிப்பு முடிவுகள் 11 Oct 05

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் "பயிற்சி வகுப்பு நடத்துவது எப்படி?" என்னும் விரிவுரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறேன். அதில் ஒரு முக்கியமான அம்சம் - "கேள்விகள் கேட்பது எப்படி?" அல்லது "கேள்விகளை எப்படி கேட்கக் கூடாது?".

தேர்ந்தெடுத்து பதில் சொல்ல வேண்டிய கேள்விகளில் முக்கியமான அம்சம், பதில்களில் கொடுக்கப் படும் விடைத்தெரிவுகள். சரியான பதில் என்பது இதற்குள்தான் இருக்கிறது என்று பதிலளிப்பவர்க்கு கேட்போர் விதிக்கின்ற கட்டுப்பாடு. பல சமயங்களில் இது சரியான முறையாக இருந்தாலும், சில நேரங்களில் பதிலளிப்போரின் சரியான எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியாமல் போகக் கூடிய சாத்தியக்கூறும் இதில் உண்டு.

ரொம்பக் குழப்பி விட்டேனா? சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பினாத்தல்களைப் பற்றிய தங்கள் மேலான கருத்து? இது கேள்வி.

இதற்கு விடைத் தெரிவுகளாக:
1. சுமார்
2. பரவாயில்லை
3. நன்றாக இருக்கிறது
4. சூப்பர்
5. அதி அற்புதம்

எனக் கொடுத்தால், பினாத்தல்களை முற்றும் வெறுக்கின்ற நபரும், "சுமார்" ஐத்தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.

இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதால், கருத்துக் கணிப்பு என்பது ஒரு வகை விளம்பர உத்தியாகவும் செயல்படும். நீங்களும் இப்படிப்பட்ட சில விளம்பரக் கணிப்புகளைச் சந்தித்திருக்கலாம்.

அல்லது,விடைத்தெரிவுகளை இப்படியும் அமைக்கலாம்.

1.சுமார்
2.குப்பை
3.தாங்க முடியவில்லை
4.திராபை
5.தேறாது

இப்படி அமைத்தால், விரும்புகிற நபரும் சுமார்-ஐத்தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். விளம்பரத்தில் போட்டி தயாரிப்பைப் பற்றிய கேள்விகள் இப்படி வடிவமைக்கப் படும்!

எனக்கு விளம்பரம் செய்யும் நோக்கம் இல்லாததால் இந்த இரு அதீதங்களும் இல்லாமல் என் கேள்விகளைத் தயாரிக்க முயற்சித்தேன்.

72 பேர் பங்கு பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

இப்போது கேள்வி வாரியான கருத்துகளைப் பார்ப்போம்.

1. பினாத்தல்களைப் பற்றிய தங்கள் மேலான கருத்து?

Image hosted by TinyPic.com
இதன் முடிவாக "போக வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப இருக்கு" என்பதைத்தான் எடுத்துக் கொள்கிறேன். அதற்காக உழைக்கிறேன்.

தேறாது எனத் தெரிவு செய்த 4% அன்பர்கள், காரண்த்தையும் எழுதி இருக்கலாம்.

2.பினாத்தல்களில் தங்களுக்குப் பிடித்த பதிவு வகை?

Image hosted by TinyPic.com

நான் நினைத்த படியே நையாண்டிக்குத் தான் மவுசு! இங்கேயும், எதுவுமே பிடிக்கலை என்ற 7% அன்பர்கள் ஏன் பிடிக்கவில்லை எனக் கூறி இருக்கலாம்.

3. பினாத்தல்களைப் பற்றித் தாங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள்?
Image hosted by TinyPic.com

அனாவசியமான கேள்வி. இருந்தாலும், எனது போன்ற வலைப்பதிவுகளுக்கு தமிழ்மணம் செய்யும் சேவை இதன் மூலம் தெளிவாக எல்லாருக்கும் தெரியட்டும்.

4. பினாத்தல்கள் எவ்வாறு தொடர வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?
Image hosted by TinyPic.com

என் அனுபவப் பதிவுகளுக்கும் வரவேற்பு இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கூடிய விரைவில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன். இதிலும், தொடரத்தான் வேண்டுமா என 2% வேறு காரணங்கள் கூறாமல் தெரிவு செய்திருக்கின்றனர்.

பங்கு கொண்ட 72 பேருக்கும், ஆரம்பித்து முடிக்காமல் போன 35 பேருக்கும் பார்க்க மட்டுமே செய்த 32 பேருக்கும் நன்றி!

Oct 9, 2005

பினாத்தல் - வருடம் ஒன்று

ஒரு வருடமாகிறது.. நான் எழுதியவையையும் பதிக்க ஒரு தளம், படிக்க சில மனிதர்கள், உதவிட, ஊக்கிட, வாழ்த்திட பல நெஞ்சங்களின் அறிமுகம், தொலை பேசி இலக்கியம் கதைக்கும் அளவிற்கு சில நண்பர்கள், என் வாழ்வின் முதல் முறையாக அடுத்தடுத்து இரு போட்டிகளில் முதல் பரிசுகள், நட்சத்திர அந்தஸ்து ஒரு வாரத்திற்கு, என் வாழ்வின் முதல் பல ஆண்டுகள் சாதிக்காதவற்றை இந்த ஒரு ஆண்டில் சாதித்ததாக ஒரு பிரமை!


என்னை மேம்படுத்த இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

சிலருக்கு( குழலி ஆனந்த் பின்னூட்டத்திலேயே கூறியபடி) காரணமாக இந்த கருத்துக் கணிப்பு சரிவரத் தெரியாததால், பதிவுக்குள்ளே இருந்த கருத்துக் கணிப்பை வெளியே தள்ளி விட்டேன்.

இப்போது, இங்கே க்ளிக்கினால், நீங்கள் கருத்துக் கணிப்பில் பங்கு பெற இயலும்.



Click Here to take the survey

 

blogger templates | Make Money Online