Dec 29, 2005

அவள் விகடனுக்கு நன்றி (29 dec 05)

தன் மீதான கிண்டலையும் நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதை தன் பத்திரிக்கையிலேயே பிரசுரமும் செய்ததன் மூலம் ஒரு நல்ல முன் உதாரண்த்தைக்காட்டி இருக்கிறது அவள் விகடன்.

படங்களோடும், தேவைப்பட்ட இடங்களில் குறிப்புகளோடும் சிறந்த முறையில் பிரசுரம் ஆகி இருக்கிறது.

நான் இன்னும் அச்சுப்பிரதியைப் பார்க்கவில்லை. இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று தோன்றுகிறது. முதல் முறையாக என் எழுத்து அச்சில் என்பது உறசாகத்தை அதிகப்படுத்துகிறது.

அவள் விகடன் மூலமாக இங்கே வந்த வாசகர்களையும் வரவேற்கிறேன். நீங்கள் தேடும் அந்தப்பதிவுக்குச் செல்ல
இங்கே சுட்டுங்கள். மற்ற பதிவுகளையும் படிக்கலாம், தப்பில்லை:-)

உங்கள் கருத்துக்களை sudamini at gmail dot com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Dec 25, 2005

திறமைக்கு பல முகம் (26 Dec)

நல்ல ஸ்பீடு போடறே - நம்மகிட்டே மீட்டர் இல்லை - எப்படியும் 90 மைலுக்கு குறையாது"

"நாளைக்கு பிராக்டிஸ் போது பழைய பால்லே ரிவர்ஸ் ஸ்விங் பிராக்டிஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்."

"சார் நாளைக்கும் மேட்லேதான் பிராக்டிஸா? மேட்லேயிருந்து பிட்ச்க்கு மாறும்போது லெங்த் சரியா வர மாட்டேங்குது!"

"அது சரி! ச்ரீனாத்தும் பாலாஜியும் எந்நேரமும் ஸ்டேடியத்துலேதான் பிராக்டிஸ் பண்ணாங்களா என்ன? எதுக்கும் தயாரா இருக்கறவனுக்குத்தான் சான்ஸு!"

'திங்கக்கிழமை காலையிலேயே எனக்கு சான்ஸ் கிடச்சா நல்ல இருக்கும் சார்"

"அது நம்ம கையிலேயா இருக்கு? நாளைக்கு ஃபுல் டே நீ நல்லா பிராக்டிஸ் பண்ணு. ஆஃப் அன்ட் மிடில்லேயே கன்ஸிச்டண்டா போடு.. கன்ட்ரோல் யுவர் நெர்வ்ஸ். நீ நிச்சயமா செலக்ட் ஆயிடுவே. நாளன்னிக்கு செலக்ஷ்ன் மேட்ச் நிச்சயமா உன் வாழ்க்கையிலே மறக்க மாட்டே பாரு!"

" சரி சார் நாளைக்கு காலையிலே கரெக்டா எட்டு மணிக்கு வந்துடறேன். வண்டிய எங்கே பார்க் பண்ணட்டும்?"

"கண்ணகி சிலை எதிருலே பண்ணிடு. என் வண்டி இல்லைன்னா ஒரு மிஸ்டு கால் கொடு"
____________________________________________________________
"எதுக்காக கூப்பிட்டு அனுப்பிச்சாராம்?"

"நானே மறந்து போன விஷயம். ஆபரேஷன் லிட்டில் ட்ராப்னு ஒரு ப்ராஜெக்ட் செஞ்சேனே ஞாபகம் இருக்கா?"

"வாட்டர் மேனேஜ்மென்ட் பத்தித்தானே?"

"ஆமாம். அப்பவே செக்ரடரிக்கு ரொம்ப பிடிச்சிருந்துது. இவ்வளோ சிம்பிளான சொல்யூஷனா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டார். நான் சொன்னேன், சிம்பிளா இருக்கற பிளான் தான் சார் ஃபீஸிபிளா இருக்கும்னு சிரிச்சார்"

"ஆமாம் - அது நடந்து ஆச்சு அஞ்சு வருஷம்"

"எங்கே இருக்கே நீ? நான் ரிட்டயர் ஆயே ஆறு வருஷம் ஆச்சு! சரி -இப்போ அதுக்கு மறுபடியும் உயிர் வந்திருக்கு!"

"நாளைக்கு வாக்கிங் போய் திரும்பி வந்த வுடனே அந்த பேப்பரையெல்லாம் எடுத்து தூசி தட்டணும்"

"ஒம்பதரைக்குள்ளே வந்துருவேளோல்லியோ?"
_________________________________________________________________
"என்னடா சூசை - மறுபடியும் வலை அறுந்தா போச்சு?"

"அதை ஏன் கேக்குறே.. எனக்கு நேரமே சரியில்லை.. தொடர்ந்து மூணு முறை மகசூல் ஒன்னும் சரியில்லேன்னு இன்னும் கொஞ்சம் கடலுக்கு உள்ளாற போயி வலை அடிச்சோம்.. ரெண்டு நாள் கழிச்சுப்பாத்தா வலையிலே ஓட்டை.. சுறா ஏரியா பக்கம் அடிக்கடி போனதில்லையா.. வகையா மாட்டிகிட்டோம்."

"கிட்டானுக்கு நேத்து சரியான அறுவடையாமே.."

"அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு துரை. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை கூட அவனுக்கு வலை அறுந்ததே இல்லை."

"அது மச்சம் இல்லடா மாக்கான் -- அவன் கடல்ல இறங்கறதுக்கு முன்னாடி ஆபீஸரைப்பாத்து பேசாம போறதில்லே. எங்கே என்ன மீன் கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டு வலை வீசுறான், குத்து மதிப்பா வீசுற உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லையா?"

"நீ சொல்றதும் சரிதான். அடுத்த முறை நானும் அவனைக்கேட்டுகிட்டே நானும் போறேன். எங்க இருப்பான் இப்போ?"

"இப்போ தெரியாது.. நாளைக்கு காலையிலே படகுத்துறை பக்கமாத்தான் இருப்பான்."
________________________________________________________________
"வீரமணி நம்ம சுதந்திர தினம் என்ன கிழமைடா?"

"வெள்ளிக்கிழமை சார்"

"சரி 2010 ஆம் வருஷம் சுதந்திர தினம் என்ன கிழமையிலே வரும்டா?"

"ஞாயித்துக்கிழமை சார்"

"சரி பொலிவியா நாட்டுத் தலைனகரம் என்ன சொல்லு பாக்கலாம்?"

"லா பாஸ் சார்"

"வீட்டுலே கம்ப்யூட்டர் இருக்காடா?"

"இல்ல சார் இவன் மண்டையிலேதான் இருக்கு"

"சும்மா இருங்கடா..வீரமணி, உங்க அப்பாவை நாளைக்குஎன் வீட்டுக்கு வரச்சொல்லு"

"எனக்கு அப்பா இல்லை சார்"

"அடடா! சரி நாளைக்கு காலையிலே என் வீட்டுக்கு வறயா? நான் புது கம்ப்யூட்டர் வாங்கப்போறேன். பழைசு சும்மாத்தான் கிடக்கும், நீ எடுத்து உபயோகப்படுத்து."

"காலையிலே அம்மா கூட மீன் இறக்கப் போவோணும் சார். பத்து பத்தரைக்கு மேலே வரட்டா?"
_______________________________________________________________

அலைகள் அறிந்திருக்குமா அன்று இன்னும் எத்தனை திறமைகள் கடற்கரைக்கு வந்திருக்குமென?

Dec 21, 2005

klueless!!

மோகன் தாஸ் முதல்லே சொன்னாரு; ஜெயிச்சுட்டேன்னு.. அப்போ நான் ட்ரை பண்ணா ஏதோ தப்பா ஆச்சு, அதனால அவர் மேலேயே கோபிச்சுக்கிட்டேன் (அப்புறம் மன்னிப்பு கேட்டுட்டேன்னு வையுங்க!)

அப்பாலே தேசிகனும் ஜெயிச்சுட்டேன்னு சொன்னாரு, எனக்கு 12 ஆவது லெவல்லேயே இருக்கிறதாலே ஒரே தாழ்வு மனப்பான்மை ஆகிப்போச்சு.
சரி ரொம்ப கூச்சம் பாக்கக்கூடாதுன்னு கொஞ்சம் திருட்டு வழியிலே இறங்கினேன் (படுபாவிங்க - ஸ்பாயிலர் கூட ஒழுங்கா புரியற மாதிரி போட மாட்டென்றாங்க) கொஞ்சம் திருட்டு வேலை, கொஞ்சம் சொந்த மூளைன்னு ஒரு வழியா முடிச்சுட்டேன். (என் மூளைய மட்டும் வச்சு நிச்சயமா முடிக்க முடிஞ்சிருக்காது)

என்ன மேட்டர்னு தெரியாம கேக்கரவங்களுக்கு: இது iimi - iris க்ளுலெஸ்னு ஒரு கேம், மூளைக்கு வேலை (ரொம்பவே) - 30 லெவல் முடிச்சாக்க, இதோ கீழே தெரியுதே அப்படி ஒரு கோட்வார்டும், ஈ-மெயில் முகவரியும் கொடுப்பாங்க. மூணு நாள் ஆச்சு எனக்கு!

கூகுளாண்டவருக்கு கூழ் ஊத்தறதா வேண்டுதலை!

Image hosted by TinyPic.com

Dec 15, 2005

தேர்தல் -உள்குத்து

தேர்தல் என்னும் முறையில் குறைகளுக்கான வாய்ப்புகள் இருக்கலாம்; மக்களின் உண்மையான எண்ணங்கள் பல நேரங்களில் வாக்கு எண்ணிக்கையில் பிரதிபலிக்கப்படாமல் போகலாம். இதைத்தான் நான் நேற்றைய கதையில் கூறி இருந்தேன்.

உடைக்கப்படலாம் என்பதாலேயே தேர்தல் என்பது ஒரு ஒவ்வாத வழிமுறை ஆகிவிடாது - வேறு சிறந்த வழி கண்டுபிடிக்கப்படும்வரை, தேர்தல்கள் இருந்துதான் ஆகவேண்டும், குறுக்கு வழிகள் பயன்படுத்துபவர்களை (பிடிக்க முடிந்தால், சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்டால்) தண்டிக்க வேண்டும்.

இது ஒரு உள்குத்து உள்ள பதிவு. இதன் இரண்டாவது, மூன்றாவது அர்த்தங்களை கண்டுபிடிப்போருக்கு 20 பின்னூட்டங்கள் இலவசம்.

Dec 14, 2005

மக்களால், மக்களுக்காக (14 Dec 05)

என் பீஹார் வாழ்க்கையில் சந்தித்த இன்னொரு சம்பவம் இது. பெரும்பாலும் உண்மைச்சம்பவத்துடன், கொஞ்சம் கற்பனையும் சேர்க்க வேண்டிவந்ததால் சிறுகதையாக எழுதிவிட்டேன்.

இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் முறைகேடுகள் குறைவு என்றே செய்திகள் வருகின்றன. உண்மையாக இருந்தால், பீஹார் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான முதல் அடி இங்குதான் ஆரம்பிக்கிறது என்பது என் அபிப்பிராயம்.

____________________________________________________________________

மக்களால்..மக்களுக்காக...


பீஹார் ஏழைகளின் ஊர் என்று இந்தக்கட்டடத்தைப் பார்த்தபின்
யாராலும் சொல்ல முடியாது.


நீண்ட தூரம் உயர்ந்திருந்த மதில் சுவரிற்கு நடுவில் இரண்டு
ஆள் உயர கிரில் கேட் ஷர்மாவைப்பார்த்து முறைத்தது.


பளபளக்கும் பித்தளையில்"பரத் யாதவ்" பெயர்ப்பலகை எளிமையாக
அவரின் பண படைபலத்துக்கும் அரசியல் ஆள்பலத்துக்கும் தொடர்பில்லாமல்
இருந்தது.


தலைவரை எத்தனையோ முறை வேறு இடங்களில் பார்த்து இருந்தாலும்
வீட்டில் இதுதான் முதல் முறை. எப்படி அவரை சந்திக்கப்போகிறோம் என்ற
அடிவயிற்றுக்கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.


நிச்சயம் கோபமாகத்தான் இருப்பார்.


உள்ளே செல்லும் வழியைத் தேடிக்கொண்டிருக்கும்போதே
வாட்ச்மேன் சின்ன வாசல் வழியாக வெளியே வந்து "யாரு" என்றான்.


"சாஹப் வரச்சொல்லியிருந்தாரு. ஷர்மா, சிமெண்ட்டு ஃபேக்டரி
யூனியன் லீடர்"


"உள்ளே போங்க, நேராப்போயி வலதுகைப்பக்கம்"


பங்களாவுக்குள்ளே கார் செல்ல தார் சாலை - நம்
ஊரின் சாதாரணச் சாலை எதுவுமே இந்த அளவு பளபளப்பாய் பார்த்ததில்லை. புங்கமர
நிழலும், பசேலென புல்தரையும் இந்த வெப்ப பூமியை மலை வாசஸ்தலம் போல
ஆக்கிக்கொண்டிருந்தன. ஐந்தே நிமிடங்களில் வெள்ளைச்சட்டை கறுப்பாகிவிடும் தொழிற்சாலை
மாசிலிருந்து இவ்வளவு அருகில் இப்படி ஒரு ரம்யமான சூழல். பணம் இருந்தால் எதையும்
அமைத்துக்கொள்ளலாம்.

மர நிழலில் ஊஞ்சலில் அமர்ந்து
கட்சிக்காரர்களுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த தலைவரைப்பார்த்ததும் பயம்
அதிகமாகிவிட்டது.


"53 ஆம் வார்டு நிலவரம் என்ன?"


"அதைப்பத்தி கவலைப்படாதீங்க அண்ணே. அதெல்லாம் எப்பவும் நம்
கையிலேதான். மேம்பாலம் வருதுன்னு சொன்னதிலேயே அவங்க குஷி ஆயிட்டாங்க. 9 ஆம் தேதி
ராத்திரி கொஞ்சம் செலவு செஞ்சுட்டா அத்தனை ஓட்டையும் அள்ளிடலாம். இந்த ஃபேக்டரி
பிரச்சினைய மட்டும் கொஞ்சம் சரி பண்ணிட்டா.."


"இதோ ஷர்மாவே வந்துட்டான் - சாவே இல்லைடா உனக்கு." அவர்
வரவேற்பில் கோபம் தெரியவில்லை.


"உக்காரு. என்ன சாப்பிடறே? துக்காராம், இன்னோரு க்ளாஸ்
கொண்டா" - இது கிண்டலா நிஜமா - தெரியவில்லை. பலவருட அரசியல் நடிப்பு அனுபவத்தில்
ஊறிப்போன அவர் முகபாவத்தில் இருந்து என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது
முடியாத காரியம்.


'டேய் ராஜு, ஷர்மாவுக்கு நிலவரத்தை சொல்லுடா."


"ரொம்ப டைட்டாத்தான் இருக்குது பொஸிஷன். போன முறை
ஜெயிச்சப்பவே வித்தியாசம் கம்மிதான். அப்ப ஃபேக்டரி ஓட்டு மொத்தமா நமக்கு
விழுந்துச்சு. மேல் ஓட்டுக்கு அவங்களும் ரெண்டு லாரியிலே ஆள் கொண்டு
வந்திருக்காங்க. என்ன செய்தாலும் ஃபேக்டரி ஓட்டு யாருக்கு விழுதோ அவங்கதான் ஜெயிக்க
முடியும்." ராஜு தலைவரிடம் ரொம்ப நாளாக இருக்கிறான். வேறு யாரும் இவரிடம் இவ்வளவு
நேராக உண்மை பேச முடியாது.


"என்னப்பா சொல்லறாங்க உன் ஃபேக்டரியிலே?" ஷர்மாவிற்கும்
உண்மை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.


"இந்த முறை ரொம்பக் கஷ்டம்தான் தலைவா. யூனியன்
எலெக்ஷன்லையே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் நான் ஜெயிக்க முடிஞ்சது.அதுவும் தவிர போன
வருஷம் நடந்த ஆக்ஸிடென்டுலே செத்தவங்களுக்கு நிதி வாங்கிக் கொடுக்கறதுலே
எதிர்க்கட்சிக்காரங்க முந்திகிட்டாங்க."


"போன வாரம் நீங்க வந்து போன பிறகு சிந்தாமணி வந்து
ஓட்டுக்கேட்டாரில்ல, அப்போ அவர் தொழிலாளர் நலனுக்குன்னு வாக்குறுதி நெறய சொல்லி ஆசை
காமிச்சுட்டு போயிட்டார்."


"மிஷ்ரா தீவிரமா கேட் மீட்டிங் போட்டு பிரசாரம்
செஞ்சுகிட்டு இருக்கான். வொர்க்கருங்க அந்தப்பக்கம்தான் சாயறாங்க."


"இதெல்லாமா ஒரு பிரச்சினை? ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கணும்
சொல்லு."


"அது இந்தமுறை வேலைக்கு ஆகாது சார். அவனுங்களும் பணத்தை
தண்ணியா செலவு செய்யறாங்க."


"சரிதான் - அப்ப உன்னை நம்பி பிரயோஜனம் இல்லே?"


"மிஷ்ரா கேட் மீட்டிங் போடறான் - நீ என்ன புடுங்கறே? உன்
எலெக்ஷனுக்கு தண்ணியா பணத்தை அள்ளி விட்டேனே? நன்றி விசுவாசம் இருக்கா
உனக்கு?"


"உன் சோம்பேறித்தனத்தாலே நான் தோத்துப் போகப் போறேன்.
அப்படி மட்டும் ஆச்சுன்னா உன்னை சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதே" கோபம்
உச்சிக்குப் போய்விட்டது.


"அந்த பூத்துங்கள்லே நம்ம ஆளுங்களை நுழைக்க முடியுமாடா?
என்றார் ராஜுவைப் பார்த்து.


"கஷ்டம் தலைவா. வொர்க்கருங்க எல்லாம் காலையிலேயே க்யூவிலே
நின்னுடுவானுங்க. நாம நம்ம வேலைய 10 மணிக்கு மேலதான் ஆரம்பிக்கவே
முடியும்"


"அப்ப ஒரே ஒரு வழிதான் இருக்கு. நீ என்ன பண்ணுவியோ
எனக்குத் தெரியாது. எலெக்ஷன் அன்னிக்கு உன் ஃபேக்டரியிலிருந்து ஒரு பய ஓட்டுப் போட
வரக்கூடாது. நான் நம்ம ஆளுங்களை உட்டு கவனிச்சுக்கறேன்."


"ஒரு திட்டம் இருக்கு தலைவரே" ஏற்கனவே மனதுக்குள்
ஒத்திகை செய்திருந்த திட்டத்தை விவரித்தான் ஷர்மா.


பொறுமையாக முழுதும் கேட்ட தலைவர் "சிந்தாமணி சும்மா
விடுவானா?" என்றார்.


"முன்னே நிக்கப் போறது நான் இல்லையே, மிஷ்ராதானே - அவராலே
ஒன்னும் பண்ண முடியாது"


"சரி, இத்தனை பேர் ஓட்டுப்போடவரலைன்னா அது எல்லாருக்கும்
தெரிஞ்சுடாதா?"


"அதுதான் பதினோரு மணிக்கு எல்லாரையும்
விட்டுடறோமே"


"வொர்க்கருங்க ஓட்டு எல்லாம் ஏற்கனவே போட்டிருந்தா
பிரச்சினை பண்ண மாட்டாங்களா?"


"எல்லாரும் பிரச்சினை பண்ண மாட்டாங்க.. மிஷ்ராவோட ஆளுங்க
ஒரு நூறு பேர்தான் தொந்தரவு பண்ணுவாங்க.. அவங்க லிஸ்ட் நான் தர்றேன்.. அதை மட்டும்
விட்டுவைச்சிடச் சொல்லுங்க 10000 ஓட்டுலே ஒரு நூறு ஓட்டு போனாத்தான்
என்ன?"


கொஞ்சம் யோசித்துவிட்டு போனை எடுத்த தலைவர் "டி எஸ் பி எச்
கே சிங் இருக்கானா" என்றார்.


திரும்பி நடக்கும்போது துக்காராம் ஷர்மாவுக்காக க்ளாஸ்
கொண்டுவந்துகொண்டிருந்தான்.


**********************************************************************************************************************************


இன்று தேர்தல். திட்டம் மட்டும் பலன் அளிக்கவில்லை என்றால்
என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. யாதவுக்கு தோற்றால் பதவி
மட்டும்தான் போகும்.


போலீஸ் ஜீப் ஃபேக்டரி வளாகத்துக்குள்ளே நுழைந்ததைப்
பார்த்தான். இப்போது நான் இங்கே இருக்கக்கூடாது. கேண்டீனுக்குள்
சென்றுவிடலாம்.


டீ சாப்பிட்டு முடிப்பதற்குள் வாசலில் ஆரவாரம் தொடங்கி
விட்டது.


"ஷர்மாஜி இங்கே இருக்கார்.. சாஹப், அசெம்பிளி லைன் ஜாவை
போலீஸ் போட்டு அடிக்கரானுங்க"


"இங்கேயா? ஃபேக்டரி காம்பவுண்டுக்குள்ளே போலீஸுக்கு என்ன
வேலை? எவ்வளவு திமிர் இருந்தா நம்ம வொர்க்கரு மேல ஒருத்தன் கை வைப்பான்?" என்று
ஆக்ரோஷத்துடன் நடந்து செல்லும் வழியில் போலீஸ் ஜீப் வேகமாகச்
செல்வதைப்பார்த்தான்.


"எல்லாரும் வேலைய நிறுத்துங்க - ஒரு தொழிலாளியை போலீஸ்
பிடிச்சிகிட்டு போறானுங்க. எல்லாரும் கேட் வாசல்லே கூடணும்"


"என்னய்யா நடந்தது? யாரு பார்த்தவன்?"


"நான் பார்த்தேனுங்க அய்யா." என்று முன்வந்தான் குப்தா.
நல்லதுதான் - இவன் மிஷ்ரா விசுவாசி.


"போலீஸ் அவங்க ஜீப்புக்கு ஜாவை பெட்ரோல் போடச்சொன்னாங்க.
இவன் எஸ்.ஈ சாஹப் கையெழுத்து இல்லாம போட மாட்டேன்னு சொன்னான். அதுக்குள்ளே அவங்க
நாயே உனக்கு இவ்வளவு திமிராடான்னு கேட்டு ஜாதிய கேவலமாப் பேசி திட்டினாங்க,
அப்புறம் அடிச்சு ஜீப்புலே ஏத்துனாங்க"


"நான் போயி ஏன் இவரை பிடிச்சுகிட்டுப் போறீங்கன்னு
கேட்டதுக்கு இவன் கையிலே ஐ டீ கார்டு இல்லே, சேஃப்டி ஷூ போடலே, அதனாலதான் அரெஸ்ட்
செய்யறோம்"னு சொல்லிட்டு வண்டியக் கெளப்பிகிட்டு போயிட்டாங்க."


கூட்டம் கூடிவிட்டது.


"தோழர்களே. போலீஸின் அதிகார வெறி வரம்பில்லாமல்
ஆடத்தொடங்கிவிட்டது. இன்று நம் சக தொழிலாளியை உப்புப்பெறாத, அவர்களுக்கு துளியும்
சம்பந்தமில்லாத காரணங்களைக் காட்டி அடித்து உதைத்து இழுத்துப் போயிருக்கிறது
போலீஸ். இதை நாம் பொறுத்துக்கொண்டு இருக்கத்தான் வேண்டுமா? அவர்களுக்கு அதிகாரம்
பலம் என்றால் நமக்கு ஒற்றுமைதான் பலம். சீருவோம், காவல் நிலையத்தை நோக்கி,
விடுவிப்போம் நம் தொழரை." என்று ஷர்மா முழங்கும்போது அவசரமாக மிஷ்ரா வருவதைப்
பார்த்தான்.


"கொண்ட கொள்கையில் வேறுபாடுகள் இருப்பினும், தொழிலாளர்
நலன் காப்பதில் நானும், தோழர் மிஷ்ராவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல என்பதை
அனைவரும் அறிவீர். போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தலைமை தாங்க
என் சகோதரன் மிஷ்ராவை அழைக்கிறேன்."


ஷர்மாவின் பேச்சு மிஷ்ராவை ஒரு கட்டத்தில் சிக்க
வைத்துவிட்டது. இந்தக்கூட்டத்தின் மனோநிலையில் அவன் வேறு என்ன சொன்னாலும்
எடுபடப்போவதில்லை.


"வாங்க மிஷ்ரா, தொழிலாளர் ஒற்றுமையா, போலீஸ்
அடக்குமுறையான்னு ஒரு கை பார்த்துறலாம்"


"எஸ்.ஈ சாஹப் என்ன சொல்லறாருன்னா" இழுத்தான்
மிஷ்ரா..


"அவருக்குத் தொழிலாளர் வலி எங்கே தெரியப்போகிறது? இப்போது
நீங்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வெறும் சட்ட வழிமுறைகள்
அடிக்கப்பட்ட, ஜாதி பெயர் சொல்லித் திட்டப்பட்ட நம் தோழனுக்கு உதவுமா?
அவர்களுக்கு புரிந்த மொழியில்தான் நாம் பதில் சொல்ல வேண்டும்" ஷர்மாவின் செயற்கையான
மேடைப்பேச்சு மொழி மிஷ்ராவுக்கு நிலவரத்தைப் புரியவைத்துவிட்டது. எந்த
எதிர்ப்பேச்சும் இப்போது செல்லுபடியாகாது.


மிஷ்ரா," தோழர்களே, அமைதியான முறையில் போராடுவோம், நீதி
கேட்போம்" என்று முழங்க "அதுதான் சரி. ஆனால் நம் தோழர் ஜா அங்கு காவல் நிலையத்தில்
என்ன பாடுபடுகின்றாரோ! அதைப் பார்த்தும் உணர்ச்சிவசப்படாமல், கல்நெஞ்சோடா இருக்க
முடியும்" என்றான் ஷர்மா. கூட்டத்தில் இருந்த அவன் ஆட்களுக்கு செய்தி
சென்றடைந்துவிட்டது.


கால்பந்து மைதானத்துக்கு உள்ளே அடங்கி இருந்தது காவல்
நிலையம். கூட்டம் மைதானத்தை அடைந்தபோது வழக்கமான காவலர்கள் தவிரவும் தேர்தலுக்காக
வந்திருந்த சிறப்புக் காவல் படையும் தயார் நிலையில் இருந்தது.


"உங்களில் யாராவது ஐந்து பேர் மட்டும் காவல் நிலையத்தின்
உள்ளே வாருங்கள்" என்று போலீஸ் மெகா ஃபோனை வைத்துக் கூவிக்கொண்டிருக்கும்போதே,
தொழிலாளர் பக்கத்திலிருந்து கற்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன..


போலீஸார் கேடயங்களுடனும் லத்தியுடனும் உள்ளே புகுந்து
தாக்க, தொழிலாளர்களும் தங்கள் கையில் இருந்த ஆயுதங்களால் திருப்பித்தாக்க
ஆரம்பித்தனர்.


பொதுவாகவே நிலக்கரியும் சிமெண்ட்டுமாக தூசு பறக்கும்
தொழிற்சாலைப்பகுதியில் அப்போது கலவரத்தின் புழுதியும் சேர்ந்து கண்கள் மறைத்தன.
எப்படி, எப்போது, யாரால் என்று தெரியாத வேளையில் காவல் நிலையத்தின் முன் முகப்பு
தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.


அதுவரை கூட்டத்தை அடக்க மட்டும் ஆயுதங்களைப் பிரயோகித்த
போலீஸார் கோபம் கொண்டு தாக்க, தொழிலாளர் பக்கம் வலுவிழக்கத் தொடங்கியது.
ஆத்திரத்துடன் கத்தும் குரல்கள், அடிவாங்கித் துடிக்கும் குரல்கள், அடுத்தவனை
ஆணையிடும் குரல்கள் - எந்தக்குரலும் தனிப்பட்டுத்தெரியாமல் ஒரே கலவர்க்குரலாக
ஒலித்தது.


ஒரு மணி நேரம் கழித்து கலவரம் அடங்கியது. இப்போது
மைதானத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார்.


"நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிடும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்படுவார்கள்" என்றார் டி.எஸ்.பி.


அடிபட்டிருந்த மிஷ்ரா, "இன்று தேர்தல் அல்லவா? நாங்கள்
எப்படி வாக்களிப்பது?"


ஷர்மாவும்,"வாக்களிக்கும் புனிதக் கடமையைத் தடை செய்ய
யாருக்கும் உரிமை இல்லை."


உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வந்த டி.எஸ்.பி,
"உங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 50,
50 பேராகச் சென்று வாக்களித்துவிட்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்"
என்றார்.ஷர்மாவைப்பார்த்துப் புன்னகைத்தாரா என்ன?


ரத்தம் வழிய அவசரமாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்
செல்லப்படும் ஸ்ட்ரெட்சர்களைப்பார்த்து ஷர்மா மிஷ்ராவிடம்,"த்சொ.. த்சொ.எவ்வளவு
ரத்தம்.. இந்தப் போலீஸ்காரனுங்களுக்கெல்லாம் இரக்கமே
கிடையாதா?"என்றான்.

Dec 5, 2005

சுந்தர ராமசாமி - சில கேள்விகள் (வி ப) - 05 Dec 05

சுந்தர ராமசாமி மறைந்து ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே, இப்போது இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களில் பலருக்கும் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரையின் சுவாரஸ்யமே, எனக்கு சு.ரா வைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது என்பது தான். சு.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுந்தர ராமசாமியை எனக்கு மிகக் கொஞ்சமே தெரியும். அவரின் எந்தப் படைப்புகளையும் நான் இதுவரை முழுமையாக வாசித்திருக்கவில்லை.

எண்பதுகளில் அவருடைய "ஜே.ஜே சில குறிப்புகள்" உச்சத்தில் பேசப்பட்டபோது நான் ப்ளஸ் டூ மாணவன். ஆனாலும், அப்போது அந்த நாவலின் தலைப்பும், அதை எழுதியவரின் பெயரும், அது புதுமையான நாவல் (அப்போதெல்லாம் நவீனத்துவம் என்ற வார்த்தை அவ்வளவு பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன்) என்று நான் அந்தக் காலத்தில் மதித்த பல பெரிய எழுத்தாளர்கள் கொண்டாடியதும் மனதில் பதிந்து விட்டது. புதுமைகளோடு பரிச்சயம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேனும், சில ஒத்த சிந்தனை உடைய நண்பர்களுடன் அந்த நாவலை படிக்கத் தலைப்பட்டேன். எதுவும் புரியவில்லை. எனவே, அங்கங்கே சில பத்திகளைப் படித்ததோடு அந்த முயற்சி நின்று போய்விட்டது. எனினும், சுந்தர ராமசாமி என்ற பெயரும் அதனுடன் ஸ்லாகிக்கப்பட்ட புதுமையும் மனதில் தங்கிவிட்டன. அதன் விளைவாலேயே "ஒரு புளியமரத்தின் கதை"யும், பசுவய்யா என்பது அவர் தான் என்பதும் கூடத் தெரிந்து இருந்தது.

சு.ரா இறந்து போய்விட்டார் என்ற செய்தியும் அதைத் தொடர்ந்து பல கட்டுரைகளும், அஞ்சலிக் குறிப்புகளும் வந்த நேரத்தில் திடுமென சு.ரா வைப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. நவீனத்துவம் என்ற சொற்பிரயோகமும், "தமிழ் நவீனத்துவத்தின் லட்சிய உருவகம்" அவர் என்றும், அவருடையது " நவீனத்துவ சிந்தனைகளின் இறுக்கங்களில் கட்டுண்டு அலைக்கழிந்த ஆன்மா" என்றும் படிக்கப் படிக்க ஒரு ஆசை என்னை உந்தியது. இந்தத் தருணத்தில் அவரின் நாவல்களைப் படித்து அவரை உள்வாங்கிக் கொள்வதை விட, அவரின் கட்டுரைகளைப் படித்தால் அவரை இன்னும் தெளிவாகவும் விரைவாகவும் இனம் கண்டு கொள்ளலாம் என்று பட்டது. அதற்கு வாகாய், மதுரையில், தீபாவளி ரம்ஜான் விடுமுறைகள் மற்றும் மழை போன்ற தடைகளையும் மீறி, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திறந்திருந்த ஒரே புத்தகக் கடையில் அவரின் "ஆளுமைகள் மதிப்பீடுகள்" என்னும் முழுக் கட்டுரைத் தொகுப்பு 'சட்'டெனக் கிடைத்தது. எனக்கு மிகுந்த சந்தோஷம். கிட்டத்தட்ட எழு நூறு பக்கங்கள் கொண்ட முழுத் தொகுப்பு. எல்லாம் படிக்க முடியவில்லை ( நமக்கு அலுவலகம் என்று ஒன்று உள்ளதே??). பின்னர், நவம்பர் மாத உயிர்மை இதழின் அட்டையில் சு.ரா வின் புகைப்படத்தைப் பார்த்ததும் அதையும் வாங்கிப் படித்தேன். 'குமுதம் தீரா நதி'யில் அஞ்சலிக் கட்டுரைகள் வந்திருந்தன. இவற்றைப் படிக்கப் படிக்க சு.ரா என்றொரு பிம்பம் மனதில் துலங்கியது. இப்படிப்பட்ட கட்டுரைகளின், அஞ்சலிக் குறிப்புகளின் நோக்கமே அதுதான், இல்லையா??

அதிலும், உயிர்மையில் ஜெயமோகன் எழுதி இருக்கும் கட்டுரை நாற்பது பக்கத்திற்கும் மேலே (சு.ரா ஜீவாவைப் பற்றி எழுதிய கட்டுரை சுமார் பத்துப் பக்கம் தான்). ஒரு படைப்பாளியின் ஆளுமையை நிச்சயம் பக்கக் கணக்கை வைத்து எடை போட முடியாது தானே? ஜெயமோகனின் அந்தக் கட்டுரை சு.ரா வின் பல முகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருந்தது என்னவோ மிக மிக உண்மை. ஜெயமோகன் தவிர, மனுஷ்ய புத்திரன், சுகுமாரன், கோகுலக் கண்ணன், சி.மோகன், பெருமாள் முருகன், சங்கர ராமசுப்ரமணியன் என்று பலரின் அஞ்சலிகளைப் படித்ததும் சு.ரா பற்றி தோன்றிய சித்திரம் மிக விசித்திரமானது. புதிரானதும் கூட. மனுஷ்ய புத்திரன் குறிப்பிடுவது போல, அது ஒரு புனிதரின், ஒரு பிசாசின், பேரன்பு கொண்ட ஒரு தந்தையின் மற்றும் ஒரு சதிகாரனின் குணங்கள் கொண்ட ஒரு கலவையான சித்திரம். இவை எதுவும் சு.ரா உருவாக்கிய சித்திரங்கள் அல்ல என்று மனுஷ்ய புத்திரன் தெளிவாகச் சொன்னாலும், இந்த மொத்தக் கட்டுரைகளையும் படித்த பின்னர் ஏனோ அது மரியாதையின் பாற்பட்ட ஒரு அனுசரணை வாக்கியம் மட்டுமே என்றே தோன்றுகிறது.

சு.ரா வின் பல கருத்துக்கள் மற்றும் செய்திகள் படிக்கவும் கேட்கவும் மிக உவப்பாக இருக்கின்றன. அவர் எவ்வளவு பெரிய படைப்பாளி என்பதை அனுமானிக்க அவரின் படைப்புகளை படித்திருக்காவிட்டாலும், இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் இருந்து அவர் பெரிய படிப்பாளி என்பதை மிக எளிதாக்வும் விரைவாகவும் புரிந்து கொண்டு விட முடிகிறது. எமர்சன், ரஸ்ஸல், எலியட், தல்ஸ்தோய் (டால்ஸ்டாயைதான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்), தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ் மன், கசந்த் ஸக்கீஸ், செகாவ், துர்கனேவ், ரோமெய்ன் ரோலந்த், நிகொலாய் கோகல் என்று இன்னும் பலர். இந்தக் கட்டுரைகள் எதிலும் சு.ரா படித்த அல்லது அவரைப் பாதித்த தமிழ்ப் படைப்பாளிகள் பற்றி பெரிதாய் குறிப்புகள் இல்லை (மேல் நாட்டவர்களுக்கு இருப்பது போல). வியாசர் பற்றி பேசியதாய், மலையாள எழுத்தாளர்கள் பற்றி விவாதித்ததாய் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். மற்றபடி, சு.ரா வின் காலத்திற்கு முந்தைய படைப்பாளிகள் பற்றி இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால், சு.ரா, தன் ஆளுமைகள் பற்றி எழுதும் போது சிலரைக் குறிப்பிட்டிருக்கிறார். திருவள்ளுவர், பாரதி, டி.கே.சி, புதுமைப்பித்தன், ரகுநாதன் என்று சிலரை. சம கால எழுத்தாளர்கள் பற்றி பெரிய பாராட்டு எதுவும் இல்லாதபோதும் விமர்சனங்களுக்குக் குறைவில்லை.

பாரதியைக் கூட மற்றவர்களைப் போல 'ஆகா'வென்றெல்லாம் கொண்டாடுவதில்லை. கலை வடிவில் பாரதி தோற்றுவிட்டதாகவும் ஆனால் அவரின் கருத்து தன்னை கவர்ந்திருப்பதாகவும், இருபது கதைகளும் ஐந்து கவிதைகளும் எழுதி இருந்த காலக்கட்டத்தில் சு.ரா விமர்சிக்கிறார். பின்னர், பெரிய படைப்புகளை செய்து முடித்திருந்தபோது பாரதியை பற்றி அவரின் எண்ணத்தில் ஏதேனும் மாற்றம் உண்டானதா என்பது தெரியவில்லை. பாரதி தன்னிடமிருந்த கவிதா சக்தியை முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்திற்கு பயன்படுத்தியிருக்கக்கூடாதா என்ற விசனம் சு.ரா விற்கு இருந்திருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே பாரதியின் வசன நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தபோதும், தமிழில் வசனத்தின் முதல் கலைப் படைப்புகள் காலமும் இயக்கமும் கூடித் தோன்றியது 1930 க்குப் பிறகே என்று தீர்மானமாகச் சொல்கிறார் சு.ரா. அப்படிச் சொல்வதோடு மட்டுமின்றி, இந்த வகை இலக்கியப் பிரக்ஞை கொண்ட முதல் கோஷ்டியில் கூட முக்கியமானவராக புதுமைப்பித்தனையே சுட்டுகிறார் (பாரதி இல்லை). புதுமைப்பித்தனை பல காரணங்களுக்காக அவருக்குப் பிடித்திருந்தாலும், அவரிடமும் 'மிதமிஞ்சியிருந்த சுதந்திரம்' ஒரு குறையே என்று விமர்சிக்கிறார்.

ஒரு புனிதர் என்ற நோக்கில், மனிதனை மனிதனாய் மட்டுமே, எந்தவிதப் புனிதப் பூச்சும் இன்றிப் பார்ப்பது என்ற வகையில் புதுமைப்பித்தன் பற்றிய அவரின் கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடிந்தாலும், தமிழின் இலக்கியப் பிரக்ஞை உள்ள முன்னோடிகளின் பட்டியலில் பாரதியை அவர் மறந்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சு.ரா வின் மாணவர்கள் இதை 'சத்தியத்தின் வாள் வீச்சு' என்று கொண்டாடினாலும் கூட.

சம காலத்தில், அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததை விமர்சித்திருக்கிறார். சுகுமாரனுக்கு தி.ஜா.ரா மீது இருந்த ஒரு பரவச மனோபாவத்தை அசைத்திருக்கிறார். ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று வாதிட்டிருக்கிறார், பிரமிளின் கவிதை அறிவுப்பூர்வமாய் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ந. பிச்சமூர்த்தியும், கு.ப.ரா வும் 'சிந்திக்கப் பயப்பட்டவங்க' என்று சொல்லியிருக்கிறார். வெங்கட் சாமி நாதனின் 'யாத்ரா' இதழை 'அட்டை டு அட்டை அவரே எழுதும் இதழ்' என்று கிண்டலடித்திருக்கிறார். தேவதேவனை ஏற்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு தீவிரமானவை இல்லை என்றாலும், சினிமா பற்றிய அவரது கருத்துக்களும் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை. மலையாளத்தின் ஜான் ஆபிரகாம் படங்களில் சு.ரா வை எதுவுமே கவரவில்லை. தமிழில் மகேந்திரனின் உதிரிப்பூக்களில் "லைப் இல்லை". சினிமா நடிப்பை சிவாஜி கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. எம்.எஸ்.வி யின் இசையில் ஒரு அக ஒழுங்கே இல்லை.

"உன் படைப்புகள் மீதான விமர்சனத்திற்கு எதிர்வினை செய்ய மெனக்கெடாதே" என்று சுகுமாரனுக்கு கற்றுக் கொடுத்த சு.ரா எப்படி அடுத்தவர் மீதான படைப்புகளை இவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழில் சுத்தமான படைப்புகளே இல்லையா? நல்ல சினிமா வந்ததே இல்லையா? அனைவரையும் விமர்சித்த சு.ரா வின் சுய விமர்சனம் யாது? அது பற்றி எங்கேயும் குறிப்புகள் இருக்கின்றனவா? ஜே.ஜே சில குறிப்புகள் அது வெளி வந்த காலக்கட்டத்தில் இதைத் தானே செய்திருக்கிறது? அனைத்தின் மீதும் ஒரு எதிர்வினையையும் விழிப்புணர்வையும்??

ஒரு பெரிய சீடர் குழாமை அரவனைத்துக் கொள்பவராகவும் ஆனால் விலகியே இருப்பவராகவும் கடைசி வரை சு.ரா வாழ்ந்து முடிந்ததைப் படிக்கும் போது அவரின் எதிர்வினை சுட்டுகிற இயல்பு தான் இதன் காரணமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அவரின் இறுதிக் காலம் வருத்தம் தருவதாக இருந்ததற்கும், பெரும்பாலான நண்பர்களிடமிருந்து அவருக்கு ஒரு தெளிவான தூரம் உண்டாகி இருந்ததற்கும் வேரு விஷேசக் காரணங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

சு.ரா வின் கருத்துக்கள் ஆனால் உவப்பானவை. தெளிவானவையும் கூட. ''நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய நடுத்தரமான படைப்புகளின் ஆயுளைக்க் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துக்களை என் வாசகன் சரி வரப் புரிந்து கொள்கிறபோது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துக்களை அறியாத நிலையில் மிகச் சிறப்பான நாவல்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துக்களை தெரிந்து கொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ, சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை உங்களால் ஏன் படைக்க இயலவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து, நான் எழுதவிருக்கும் படைப்புகள் மூலம் அவனால் என்னை நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால்" என்று சு.ரா ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். என்னுடைய முந்தைய கேள்விகளுக்கெல்லாம் கூட சு.ரா வின் பதில் இது தானோ? இந்த சவால் தான் அவரை மூன்று நாவல்கள் மட்டுமே எழுத வைத்ததா? இந்த ஆரோக்கியமான ஒரு போட்டியை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் சு.ரா ஏற்படுத்திவிட்டாரா? அதை அவரின் சீடர்கள் பின்பற்றுகிறார்களா? என்னுள் நிறையக் கேள்விகள்!!

"எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்கு புரியறதில்லை. அந்தத் தத்தளிப்பு தான் துக்கமே. அப்பதான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு...ஏன் ஏன்னு தானே நம்ம மனசு தவிக்குது. எழுத்திலே அதெல்லாம் வரும் போது நமக்கு ஏன்னு தெரியறது..அதான்" என்று எழுதுவதன் பயனை அவர் சொல்கிறபோது என்னால் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது நல்ல சிந்தனை என்று நிச்சயமாய் படுகிறது.

புனிதம், மாறா நெறி என்றெல்லாம் சு.ரா குழப்பிக் கொள்ளவில்லை என்று படிக்கும் போது அவரின் மீதான மதிப்பு கூடுகிறது. "எந்த அறிவையும் புனிதப் படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும், நடை முறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றினால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்". ஒரு வேளை, இது தான் அவர் பாரதியையோ அல்லது புதுமைப்பித்தனையோ கூடத் தலையில் வைத்துக் கொண்டாடாததன் காரணம் என்று படுகிறது. ஆனால், இந்த நெறிகளை, இந்தக் கொள்கைகளை சு.ரா எந்த அளவிற்கு கடைப் பிடித்திருக்கிறார்? பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் தராத இந்த புனிதப் பூச்சு தல்ஸ்தோய்க்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும் கிடைக்கிறதே அது ஏன்? அவர்களுக்குப் பின் தமிழ் கண்ட ஒரே நவீனத்துவப் படைப்பாளி சு.ரா தான் என்ற பெருங்கூச்சலை அவரே ஏற்றுக்கொள்வாரா?

ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் எழுத்தாளர்கள் தம் கருத்தை தெரிவிக்க வேன்டும் என்று சு.ரா வலியுறுத்தி வந்திருக்கிறார். ஜெயேந்திரர் கைது தொடர்பான கட்டுரையில் "எழுத்தாளர்கள் செயல்படத் தடையாக இருப்பது சமூகம் சார்ந்த முட்டுக்கட்டை மட்டுமல்ல; சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து ஒதுங்கிப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும் மனோபாவம் தான் முக்கியமான தடை" என்றும் தீர்மானமாய் சொல்லியிருக்கிறார். தமிழக அரசியலில் சு.ரா மனமாற வெறுத்த கருனாநிதியும், ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி ஆட்சி செய்த காலங்களில் அவர் விமர்சிக்கத் தகுந்த அளவு எந்த முக்கிய நிகழ்வுகளும் நடக்க வில்லையா என்று கேள்வி வருகிறது? ஒரு படைப்பாளி சமூகத்தில் நடக்கும் எந்த நிகழ்வை முக்கியம் என்று கொள்ள வேண்டும்? கேரளத்தில் எழுத்தாளர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுகிறர்கள், வங்காள எழுத்தாளர்கள் மலைவாசிப் பெண்களின் தற்கொலை பற்றிப் போராட்டம் நடத்துகிறார்கள், சுற்றுச் சூழல் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள். மடாதிபதியின் சிறை வாசம் விளைவிக்கும் சமூக மாற்றங்கள் பெரிதா அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்பே இல்லாத மாணவிகளை எரித்தது விளைவித்த சமூக மாற்றங்கள் பெரிதா என்று நான் என்னையே இப்போது கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய மரபு மீது சு.ரா விற்கு பெரிய அபிமானமோ மதிப்போ இல்லை என்றும் ஒரு வகையான உதாசீனமே இருந்தது என்றும், ஆனால் மேற்கத்திய நாடுகளின் நடைமுறைகள் மீது அவருக்கு ஒரு விதமான வழிபாடு இருந்தது என்றும் படிக்கும் போதும் அவரின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. இதுவே, இந்தியச் சூழலில் அமெரிக்கா மீதான கடும் கண்டனம் இருந்து வருவதாலேயே சு.ரா தன் மேலை வழிபாடு பற்றி எழுதுவதில்லை என்று படிக்கும் போது, அவரின் நெறிகள் பற்றிப் பெருத்த சந்தேகம் உருவாகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், "தர்க்கப்பூர்வமாய்ப் பார்த்தால் தேசப்பற்றும், மொழிப்பற்றும் அசட்டு உணர்ச்சிகள்" என்று சொல்லியபடி அமெரிக்கக் குடியுரிமைக்கு முயன்று அவர் அரைக் குடியுரிமை பெற்றார் என்று உணரும் போது அவரே சொல்லிய மாதிரி 'எல்லா லட்சியவாதங்களும் நாடகத்தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது'. கதர் ஆடை அணிந்து வந்த சு.ரா சட்டென்று ஒரு நாளிலிருந்து ஜீன்ஸும், டி ஷர்ட்டும் அணிந்ததோ, அல்லது இந்தியக் கோயில்களை முற்றாக விரும்பாத ஆனால் பாரீஸின் அருகே நாஸ்டர்டம் சர்ச்சில் கண்ணீர் விட்டு அழுததோ கூட வியப்பாகவோ அதிர்ச்சியாகவோ தோன்றவில்லை. ஆனால், இந்திய மரபு மீது அபிமானம் கூட இல்லாமல் ஆனால் இந்தியா தொடர்பான எல்லா விஷயங்களிலும் ஒரு எதிர்வினையாடிக்கொண்டிருப்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை. இது, பிடிவாதமாய் தன்னை சாதரணங்களிலிருந்து விலக்கிக் கொள்கிற முயற்சியா?

எந்த ஒரு விஷயத்தையும் முற்றிலும் அறிவுப்பூர்வமான ஆய்வு நோக்குடன் மட்டுமே அணுகுபவராகவே சு.ரா இருந்தார் என்று ஜெயமோகன் எழுதுகிறார். 'துயரங்களின், தேடலின், அலைதலின் உச்சியில் தர்க்க மனம் அறியாத வாயில்கள் திறக்கக் கூடுவதை', அத்தகைய அறிவுப்பூர்வ அய்வுக்கு உட்படாத உணர்வுகள் மனித வாழ்க்கையில் எஞ்சியிருப்பதை சு.ரா கடைசி வரை அறிந்து கொண்டாரா தெரியவில்லை. தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் ஒப்பிட்டுப் பேசும் போது சு.ரா இப்படிக் குறிப்பிடுகிறார்: "துன்பப்படுபவர்களின் மனம், அவமதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர்களின் துக்கம் தஸ்தயேவ்ஸ்கிக்குதான் நன்றாகத் தெரியும். ஏனென்றால் தல்ஸ்தோய் மேலிருந்து அவர்களை நோக்குகிறார். கிறிஸ்துவிற்கு இணையானதாக கருணை கொண்டதாக இருந்தாலும் அவருடையது மேலே இருக்கும் நோக்கு. துன்பப்படுபவன் தல்ஸ்தோய் தன் தோளில் விம்மியழுதபடி வைக்கும் கையைக் கசப்புடன் உதறி விடுவான். ஆனால், தஸ்தயேவ்ஸ்கி அவனிடம் வந்து சுருட்டுக்கு நெருப்புக் கேட்டால் தோழமையுடன் கொடுப்பான். ஏனென்றால் தஸ்தயேவ்ஸ்கி அவர்களுள் ஒருவன்"

நான் எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்: சு.ரா வந்து இன்று விம்மியபடி தோளில் கை வைத்தால் இலக்கியப் பரிச்சயமுள்ள தமிழ் வாசகர்களில் எத்தனை பேர் அவரின் சுருட்டுக்கு நெருப்புக் கொடுப்போம்?
_______________________________________________________________________________________

வி ப என்றால் விருந்தினர் பதிவு என்று அர்த்தம்.

என்னுடைய நீண்ட நாள் வாசகர்கள், மேலே உள்ளதை படித்ததுமே இதற்கும் பினாத்தலாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கண்டுபிடித்திருப்பார்கள்.

இதை எழுதியது லக்ஷ்மணன், குளம் வலைப்பதிவின் ஆறு எழுத்தாளர்களுள் ஒருவர்.

90களில் கையெழுத்துப்பத்திரிக்கையாக இருந்து, இயற்கை மரணம் எய்தி, பின்னாளில் விஞ்ஞான நீட்சியாக இன்று வலைப்பதிவுலகில் தடம் பதிக்க வருகிறது குளம்.

சாதாரண வலைப்பதிவைப்போல் அல்லாமல், யார் என்ன விஷயம் எழுத வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டு, நேரத்துக்குள் அதைப்பெற்று, சக உறுப்பினர்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பின்பே வலையேற்றுவது எனத் தெளிவான திட்டத்தோடு வெளிவர உள்ள குளம் வலைப்பதிவைப் படிக்க நானும் ஆவலாய் உள்ளேன்.

Dec 1, 2005

சிதம்பர ரகசியம் - தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் (01 Dec 05)

சஸ்பென்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? திகில், மர்மம், துப்பறிதல் போன்று பொதுவாகப் புழங்கும் வார்த்தைகள் பொருத்தமான மொழிபெயர்ப்பாக எனக்குத் தோன்றவில்லை. எனவே பரவாயில்லை, சஸ்பென்ஸ் என்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறேன்.

சஸ்பென்ஸ் இலக்கியம் (இதுக்கெல்லாம் திட்ட மாட்டிங்க இல்லை?) வாசகனின் ஈடுபாடு முழுமையாகத் தேவைப்படும் வடிவம். ஒரு சிறந்த சஸ்பென்ஸ் கதை, யோசித்து, துப்பறியத் தேவையான அத்தனை விவரங்களும் வாசகனுக்குத் தரப்பட்டு, அதே விவரங்களை வைத்து கதை நாயகன் எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறான் என்பதை ஒப்புநோக்கி "அடடா" போட வைக்க வேண்டும். அகதா க்றிஸ்டி தெளிவாகவே விவரங்களைச் சொல்லி "இடைவேளை" போட்டு, பின்னால் நாயகன் (நாயகி) துப்பறிதல் என்று பிரித்துக் காட்டி விடுவார். நம் அறிவை பரிசோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு என்பதாலும், வாசகனையும் மூளை உள்ள ஜந்துவாக எழுதுபவன் கருதுவதாலும், எனக்கு இந்த வடிவம் ரொம்பப் பிடிக்கும்.

சரியான வார்த்தை தெரியாதது மட்டுமல்ல, தமிழின் படைப்பாக்கங்களிலும் சஸ்பென்ஸ் பெரிய அளவில் பயன்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கதைகளில் வடுவூர் துரைசாமி ஐயங்காரிலிருந்து, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் வழியாக இந்திரா சவுந்தரராஜன் வரை பலர் முயற்சித்திருந்தாலும், நிர்வாண நகரம் போன்ற ஒன்றிரண்டு கதைகள் தவிர மற்றவை குப்பை என ஒதுக்கத்தக்கதே என்பது எ. தா அ. கதையில் வரும் எல்லா பாத்திரங்களையும் கொலை செய்துவிடும் தொடர்(கொலை)கதைகளையோ, கடைசி அத்தியாயத்தில் உள்ளே நுழையும் புதுக்கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளையோ (உ-ம்: ராமபத்ர வியாசன், கொலையுதிர்காலம், சுஜாதா) நல்ல சஸ்பென்ஸ் கதைகளாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆதித்த கரிகாலனைக்கொன்றது யார் என்பது ஒரு நல்ல சஸ்பென்ஸ்தான் என்றாலும், கதாசிரியருக்கே முடிவு தெரியாததால் அதுவும் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுகிறது.

திரைப்படங்களில் "அந்த நாள்" எனக்குத் தெரிந்த ஒரு நல்ல உதாரணம். "அதே கண்கள்", "யார்" போன்ற சொதப்பல்கள் ஓடினாலும் அவற்றுக்கும் சஸ்பென்ஸுக்கும் உள்ள தொடர்பு மைசூருக்கும் மைசூர் போண்டாவுகும் உள்ள தொடர்பே.

சின்னத்திரையிலும் கூட, மர்மம் என்றாலே அமானுஷ்யம், பேய், பிசாசு, தொடர்கொலைகள் என்று கிட்டே நெருங்க முடியாதவாறு செய்து விடுவார்கள்.

இந்நிலையில், (நிறைய சன் நியூஸ் பார்ப்பதால் வந்த பாதிப்பு)சந்திரமுகியிலும், அந்நியனிலும் பிற்காலத்தில் அடிபட்ட ஸ்பிளிட் பெர்சனாலிட்டி என்ற கதைக்கருவோடு, தொடர் கொலைக்குக் காரணம் யார் என்ற மர்மத்தோடும் எடுக்கப்பட்ட "மர்மதேசம்" ஒரு நல்ல மாறுதலாக இருந்தது - கதை முடிவை நெருங்கும் நேரத்தில், மற்ற அனைத்து பாத்திரங்களும் இறந்து போய்விட்டதால், முடிவு சுலபமாக ஊகிக்க முடியக்கூடியதாய் இருந்தாலும் சுவாரஸ்யமாயே இருந்தது.

இதே இயக்குநர் என்பதால் மட்டுமே, சிதம்பர ரகசியம் தொடரை ஆரம்பத்திலிருந்தே பார்க்க ஆரம்பித்தேன். 100 எபிஸோடுகளைத் தாண்டிவிட்டாலும், ஆர்வம் குறையாமலும், ஒரு பகுதியையும் விடாமலும் பார்த்தும் வரும் அளவிற்கு சிறந்த முறையில் வந்துகொண்டிருக்கிறது, இப்போது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஆரம்பக்காட்சிகளில், மெதுவாகச் சென்றாலும் என்னை ஈர்த்தது கதாபாத்திரங்களின் தொழில்கள் - வழக்கறிஞர், விளம்பரப்பாடகி, ஆரம்பநிலைப்பத்திரிக்கையாளன், கைரேகையை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரும் கணினி வல்லுனன், வானிலை ஆராய்ச்சியில் பணிபுரியும் பெண், எயிட்ஸுக்கு மருந்து தேடும் விஞ்ஞானி, மகப்பேறு மருத்துவர் எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள். இதுதவிர நாடி ஜோசியம், ஆரிகமி, மூலிகைச்செடி வளர்ப்பு போன்ற விஷயங்களைப்பற்றி தொட்டும் சென்றது.. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தப்போகிறார் திரைக்கதையாளர் என்பதிலேயே ஆர்வம் அதிகமாகிவிட்டது.

பிறகு ஆரம்பிக்கிறது ஒரு கடத்தல், ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாத பலர் கொலைகள் - ஒரே ஒரு ஒற்றுமை -அனைத்து கொலைகளின் போதும் அருகில் பத்திரிக்கையாள நாயகன் இருக்கிறான், அனைத்துப்பேருக்கும் விரல் ரேகை எடுக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மர்மம் விலக ஆரம்பிக்கிறது. கடத்தப்பட்ட பெண்ணுக்கு எயிட்ஸ் வரவழைத்து, கொல்லப்பட்டவர்களின் நாடியில் இருக்கும் மருந்துகளை வைத்து குணப்படுத்தி எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது வில்லன் கும்பல் என்று.
இன்னும் முழுதாக மர்மம் விலகவில்லை. கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ரேகை எடுக்கத் தூண்டிய மர்ம நபரே (இவனைப்பற்றி இப்போது இருக்கும் ஒரே க்ளூ - பின்னங்கழுத்தில் ஒரு தழும்பு. ஒரு காட்சி அமைப்பிலும் அவன் முகம் தெரியாதது மட்டுமல்ல, திரையில் எந்தப் பாத்திரம் தெரிந்தாலும் அவர்களின் பின்னங்கழுத்தை உற்றுப்பார்க்கிறேன் நான்!), "அய்யோ பாவம் - எல்லாரும் செத்துப் போயிட்டாங்களே" என்று அழுவதாக ஒரு காட்சி. அவன் பிடிபட்டாலும் கொலை செய்தவர் வேறு யாரோவாக இருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.

கதையில் வரும் எல்லா சம்பவங்களும் நாடி ஜோசியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதாக வருகிறது. ஆனால், என் ஊகப்படி, முடிவு நாடி ஜோசியத்தை ஆதரிப்பதாக இருக்காது - எதிர்ப்பதாகவும் இருக்காது. (a la கொலையுதிர் காலம் - பேய் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கான பதிலை அவரவர் நம்பிக்கைக்கு விட்டுவிட்ட சுஜாதாவின் சாமர்த்தியம்) எல்லாக் கேள்விகளுக்கும் லாஜிக்கான பதில் வைத்திருப்பார் என்றே நம்புகிறேன்.

எனக்குத் தெரிந்து முழு திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட ஒரே தொலைக்காட்சித் தொடர் இதுதான். தொலைக்காட்சித் தொடரில் ஃப்ளாஷ் பேக் காட்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா? ரொம்ப அபூர்வம். கதை எப்படி ஆரம்பித்தது, என்ன திசையில் பயணித்தது என்பதை இயக்குநர் உள்பட அனைவரும் மறந்துபோய்விட்டிருப்பர். "இவருக்கு பதிலாக இவர்" வேறு பழையதை திருப்பிக்காட்ட முடியாத சூழலை உருவாக்கிவிடும். சில நேரங்களில் இயக்குநரே மாறிவிட்டிருப்பார். இந்த விபத்துக்கள் எல்லாம் ஏற்படாமல், கதையின் ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியை இப்போது திருப்பிக்காட்டுவதால், அப்போதே முழுக்கதையும் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்த இரண்டு எபிசோடுகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தொடர்களின் நடுவே, இதுவே மிகப்பெரிய ஆச்சரியம்.

நான் இந்தத்தொடரை மிகவும் ரசிக்கிறேன் - நீங்களும் சஸ்பென்ஸ் விரும்பியாக இருந்தால் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

பி கு. தொலைக்காட்சித் தொடர்களை என்னைப்போலவே பலரும் பார்த்தாலும், விமர்சனம் செய்வதில்லை. சிவகாசிக்கும் மஜாவுக்கும் கூட விமர்சனம் எழுதுகிறோம் - இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

விமர்சனங்கள் என்று பார்த்தல் டிவிக்கு வரும் நேயர் கடிதங்கள் (அன்புள்ள -- டிவி உரிமையாளர் --- அவர்களே, நான் உங்கள் தொலைக்காட்சியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் விரும்பிப்பார்க்கிறேன், 6 மனிக்கு வரும் --- 6.30க்கு வரும் ____ ... தடங்கலுக்கு வருந்துகிறோம் எனப்போட்ட திரையிலும் கையெழுத்து மிக அருமை.. ப்ளா ப்ளா..) அல்லது பத்திரிக்கைகளில் வரும் ஸ்பான்ஸர்டு கடிதங்கள் (___ தொடரில் ___ நடிப்பு அருமை. இதுபோன்ற மாமியார்கள் திருந்தவே மாட்டார்களா?).

அப்ஜக்டிவ்வாக வரும் விமர்சனங்கள் இல்லாத காரணத்தாலேயே ரொம்ப ஆடுகிறார்கள் இவர்கள்.

தினமலரில் ஒரு கடிதம் படித்தேன் - சிதம்பர ரகசியம் பற்றி - கதையே இல்லாத தொடர் என்று "கிழி"த்திருந்தார் ஒரு வாசகர்!

இவருக்கு எந்த அளவுக்கு மட்டமான சாப்பாடு பழகியிருந்தால் நல்ல சாப்பாடு சாப்பிடும்போது அலர்ஜியாகி இருக்கும்?

 

blogger templates | Make Money Online