Oct 9, 2008

சிகரெட்டை சீக்ரட்டா புடிக்கணுமாமே!

பத்து நாளில் எல்லாரும் மறக்கப்போகிற விஷயத்துக்கு எவ்வளவுதான் கருத்து சொல்வார்கள் நம் வலைஞர்கள்? பொது இடப் புகைத் தடை என்பது தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 7 ஆண்டுகளாக அமலில் இருக்கும் ஒரு சட்டம். (யாரேனும் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தைத் தளர்த்தினார்களா என்ன?) முதல் மூன்று நாட்கள் பலத்த கெடுபிடியும், பிறகு ஒரு மாதத்துக்கு அளவான கெடுபிடியும், மேலும் சில மாதங்களுக்கு மாதக்கடைசி கெடுபிடியும் இருந்துவிட்டு அப்படியே மண்ணோடு மண்ணாய்ப் போகப்போகிற சட்டத்துக்கு எவ்வளவு வாதம், பிரதிவாதம்!

விவாதங்கள் பெருமளவு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. "இயற்கையாக வரும் பொருள் புகையிலை - அதனால் ஒரு கேடும் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் ஒரு சாரார். (அரளிவிதை, ஆமணக்கு எல்லாம் இயற்கையாக வரும் பொருட்கள்தானே?) வாகனப்புகையை விட இரண்டாம்கை புகையிலைப்புகை அதிக ஆபத்து என்கிறார்கள் இன்னொரு சாரார். (ஒரு 100 CC வாகனம், ஒரு நிமிடத்தில் சராசரியாக 2,00,000 CC அதாவது 200 லிட்டர் ஆபத்தே இல்லாத புகையை விட்டாலும் ஒரு மனிதன் விடும் 5-6 லிட்டர் புகையிலைப்புகையை விட அதிகக் கெடுதலையே விளைவிக்கும்- இது கெடுதல் பற்றிய கணக்கல்ல - அளவு பற்றிய கணக்கு).

புகைப்பழக்கத்தைக் குறைக்க முதலில் செய்ய வேண்டிய வழி விலையை அதிகப்படுத்த வேண்டியது. நான் முதல் சிகரெட் பிடித்தபோது வில்ஸ் பில்டர் 1.00 ரூ இன்று 3.50 - மூன்றரை மடங்கு மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தங்கம் ஏறத்தாழ 7 பங்கும், மான்யமில்லாத அரிசி 8 பங்கும் விலை ஏறி இருக்கிறது - ஒரு சிகரெட்டின் விலை, நியாயமாகப்பார்த்தால் இன்று 12 ரூபாய் ஆகியிருக்க வேண்டும். ஏன் ஏறவில்லை? இத்தனைக்கும் வருடா வருடம் புகையிலைப்பொருட்கள் மீது வரி ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இங்கே வைத்திருக்க வேண்டும் முதல் ஆப்பை.

அடுத்ததாக, தடை விதிக்கும் முன் பொது இடம் என்பதை நியாயமாக வரையறை செய்திருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாலே பொது இடம் என்பதில் நியாயம் இல்லை. தெருவில் நடந்துகொண்டு பிடித்தால் தப்பில்லை, வணிக வளாகத்தின் வாயில் முன் இல்லாத வரை என்கிறார்கள் - 7 அடி அகல டீக்கடை என்றொரு வணிக வளாகமும் 8 ஆம் அடியில் நகலகம் என்று அடுத்த வணிக வளாகமும் வாயில்கள் அகலத்துக்கே இருக்கும் நம் தெருக்களில் நடந்துகொந்தே இருக்கும்வரை சட்டப்படி இருப்பவன், செருப்பு கடித்தது என்று நின்றால் சட்டமீறல் செய்கிறான் என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

சிங்கப்பூரில் ஒரு நண்பர் சொன்னார்- வானத்தைப்பார் - கூரை இல்லை என்றால், புகை அனுமதிக்கப்படாத வளாகத்துக்குள் இல்லாத பட்சத்தில், (zoo, bird park, railway stations போன்ற இடங்கள்) தாராளமாகப் புகைக்கலாம். (இது 10 வருடத்துக்கு முந்திய கதை - இப்போது மாறுதல் இருந்தால் சொல்லுங்கள்) - இப்படி ஒரு தெளிவான வரையறை இல்லாத பட்சத்தில் - சிகரெட்டை விடமுடியாதவன் முதலில் குற்ற உணர்ச்சியுடனும், பிறகு பழக்கப்பட்ட விதிமீறல் மனப்பான்மையுடனும் பிறகு விதிமீறல் தன் பிறப்புரிமை என்ற உணர்ச்சியுடனும் புகைப்பான்.

கேஸ் போட்டால் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காவல்நிலையத்துக்கு வந்து 200 ரூபாய் கட்டு அல்லது இங்கே என்னிடம் 20 ரூபாய் அழுத்து என்று நோ எண்ட்ரியில் நுழைந்த விதிமீறல் செய்ய விரும்பாதவனையே சட்டப்படி நடப்பதன் சிக்கல்களை உணர்த்தி லஞ்சம் கொடுக்கவைக்கும் நமது சட்டக்காப்பாளர்களுக்குக் கிடைத்த மறைமுக ஊதிய உயர்வுதான் இந்தச் சட்டம்.

சட்டம் போடுவதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், அமலாக்க நடைமுறை சாத்தியமற்ற நேரத்தில் ஒரேயடியாக இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது எப்படிப்பட்ட விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை போன முறை இதே சட்டம் வந்தபோதே பார்த்தோம். மற்ற போதைகளை பொது இடங்களில் இருந்து எப்படிப் பாதுகாத்திருக்கிறோம்? மதுவுக்கு டாஸ்மாக் தவிர மற்ற எல்லா இடங்களிலும் விற்பனை தடை என்றவுடன் போதை என்பது டாஸ்மாக் மற்றும் சுற்றுப்புற குறைந்த பரப்பிலும் குன்றிவிடவில்லையா? பான்பராக் எல்லா பெட்டிக்கடைகளிலும் சகஜமாகவே கிடைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் அதை மறைத்தே கையாளுவதில்லையா? விற்பனையைத் தடை செய்தால் நிச்சயம் புகை குறையும் - அதே இடங்களில் மறைவாக விற்கப்பட்டாலுமே கூட.

விலையேற்றமும் இல்லை, விற்பனைத் தடையும் இல்லை என்பதால் தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய அளவு பாதிப்பு இல்லை. தெளிவற்ற அமலாக்கத் திட்டம் என்பதால் ரொம்ப நாள் ஓடப்போவதும் இல்லை. இந்த நிலையில் பொது இடப் புகைத் தடை என்பது இந்த அரசாங்கமும் எதோ செய்கிறது என்ற கண்துடைப்பன்றி வேறில்லை.

 

blogger templates | Make Money Online