Aug 14, 2012

மதிரில்லர் வரிசை நாவல்கள்

திரில்லர்  வரிசை நாவல்களாக என் இரு புத்தகங்கள் வெளியாகி விட்டன. உங்கள் அபிமானப் புத்தகக் கடைகளில் இப்போது!


அல்வா













பதறாதே படுக்காதே 

மதி நிலையம் வெளியீடு; ஈரோடு புத்தகக் காட்சியில் விற்பனைக்கு. 

Jul 31, 2012

நாளை முதல் உங்கள் அபிமான புத்தகக் கடைகளில்..



சாஃப்ட்வேர் ஆசாமி குலசேகரனுக்குத் தெரியாது - சாதாரணமாகத் தொடங்கிய நாளின் முடிவில் பிரம்மாண்டமான சதிப்பின்னலில் தானும் ஒரு அங்கமாகப் போவது.

மும்பை நடிகை மஞ்சுவுக்குத் தெரியாது - தான் சந்திக்கப் போகும் அரபியின் கையில்தான் தனது முடிவு என்பது.

அரபிப் பணக்காரன் கம்ரானுக்குத் தெரியாது - தன் சக்திக்கும் மீறிய எதிரிகளின் கையில் சிக்கி இருப்பது.

கூலிக் கொலைகாரன் மார்க்குக்குத் தெரியாது - இது தன்னுடைய கடைசி அசைன்மெண்ட் என்று.

சிறப்புக் காவல்படை துரைராஜுக்குத் தெரியாது - தன் முதல் வேலையில் இருக்கும் பிரம்மாண்டமான ரிஸ்க்!

எல்லாத் தெரியாதவர்களும் ஆடும் சம்பவங்களின் சதிராட்டம்....

________________


ஆக்கும் சக்தி எல்லாமே அழிக்கவும் வல்லவைதான். கண்டுபிடித்த விஞ்ஞானியைவிட உபயோகிக்கும் தீவிரவாதிக்கு அழிக்கும் திறன் அதிகமாகத் தெரியும். தீவிரவாதிக்குத் தெரியாத விஷயங்களும் தெரிந்திருந்தால்தான் காவல்படைகள் தன் வேலையைச் செய்ய முடியும்.

அமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்குக் கடத்த வேண்டும்?  இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும்? வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபீஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃப் பி ஐ உயிரை விட வேண்டும்? 

சர்வதேசத் தீவிரவாதம்.. 
சர்வதேசக் காவல்படை.. 
சர்வதேசமும் சுற்றும் கதை...

_____________________________________________________________________

ஆகஸ்ட் மூன்று - ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியீடு.

உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.

Jul 25, 2012

”அல்வா” - வளர்ந்த கதை.

தமிழ் பேப்பர் என்று ஆரம்பிக்கப் போகிறோம். நீ தொடர்கதை எழுது. கட்டளையிட்டார் பாரா.

தொடர்கதையா? காமெடி பண்ணாதீர்கள். ஏதோ சீவக சிந்தாமணியை உல்டா பண்ணச் சொன்னீர்கள், செய்தேன். தொடர்கதை ஃபார்மட்டுக்கு எல்லாம் என் எழுத்து சரிப்பட்டு வராது என்றேன்.

இப்படியே சொல்லிகிட்டிருந்தா எப்படி. தலைப்பு அல்வா.  இந்தா பிடி நாட். பினாத்தல் சுரேஷ் அரபு ஷேக்கோட பொண்டாட்டியோட ஜல்சா பண்றான். அது ஷேக்குக்குத் தெரிஞ்சு போயிடுது. பினாத்தல் ஓடறான். இதை டெவலப் பண்ணி எழுது.

சரிதான். இந்த ஆசாமி கதை எழுதச் சொல்லவில்லை, என்னை ஜெயிலுக்குப் போகவைக்கத் திட்டமிடுகிறார் என்று புரிந்தது.

ஆனாலும் முதல் வாரத்தில் ஆளை மற்றும் மாற்றி ஏறத்தாழ இதே நாட்டைத்தான் எழுதினேன். எழுதும்போதே இந்த மேட்டரைத் தொடரக்கூடாது, எதாவது உருப்படியா எழுதலாம். உடனே நினைவுக்கு வந்தது ஆயில் ரிக்குகள். வேலை விஷயமாக அடிக்கடி போயிருக்கிறேன். ஹெலிகாப்டரில் இருந்து பிடிமானம் இல்லாத இடத்தில் இறக்கி விடுவார்கள். சிறை மாதிரி வாழ்க்கை. பல அறைகளுக்கு உள்ளே போகக்கூடாது என்று கட்டுப்பாடு. உள்ளே தனி அரசாங்கம். க்ரைம் கதைக்கு ஏற்ற செட்டப். ஹீரோவை இங்கே கொண்டு வரலாம்.

ஏன் ஹீரோ இங்கே வருகிறான்? கிட்நாப் செய்யப்பட்டு வருகிறான்.. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிமானம் கிடைத்து கதை உருவாகத் தொடங்கியது. 

பர்ப்பெச்சுவல் எனர்ஜி என்பது எல்லா அறிவியல்வாதிகளுக்கும் என்றும் மாறாப் பேராசை. இதைக் கொண்டு வரலாமா? ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன்.  ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது? இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி.

பல்ப் ஃபிக்‌ஷன் வகைதான். படித்தவுடன் மறக்கும் கதைதான். ஆனால் அதற்காக எதோ ஒன்றை எழுதிவிடக்கூடாது. யாராவது ஒருவர் சீரியஸாக எடுத்துக்கொண்டு இதெல்லாம் ஒரு லாஜிக்கா? விமர்சனம் எழுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே? என்று கேட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

பார்த்த பழகிய இடங்களை மட்டும் எழுதலாம். தெரியாத இடங்களைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். 

யூபிஎஸ் பார்சல் சர்வீஸ் சீருடையில் நட்சத்திரங்கள் மின்னின என்று எழுதி, வெளியிடுவதற்கு முன்னால் நண்பர் டைனோபாய்க்கு அனுப்பினால் அடிக்கவே வந்துவிட்டார். யூபிஎஸ் ஆசாமிகள் எப்போதும் ஷார்ட்ஸ்தான். தெரிஞ்சுகிட்டு எழுது என்று சொல்ல, மாற்றினேன். 

தீவிரவாதப்பணம் எப்படியெல்லாம் கைமாறுகிறது என்று நாராயண் விளக்கமாகச் சொன்ன விஷயங்களைக் கதையில் தேவையான இடத்தில் புகுத்தினேன்.

கதையே படிக்காத கொத்தனாரைப் படுத்தி எடுத்தேன். உனக்காகப் படிக்கிறேன். இங்கே ச் வரணும் ப் வரணும் என்று சந்தி திருத்தினான்.

கதைக்கான விமர்சனமாக, என் சுதந்திரத்தைச் சில மணித்துளிகள் அதிகப்படுத்திய தங்கமணியை மறந்தால் மறுவேளை சோறு கிடைக்காது.

பல்ப் ஃபிக்‌ஷன்தான். ஆனால் நிறைய உழைப்பையும் நம்பகத் தன்மைக்கான தேடலையும் கொண்ட பல்ப் ஃபிக்‌ஷன்.

தமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே பலர், இது நாவல் ஃபார்மட். மொத்தமாகப் படித்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள். இப்போது மொத்தமாக.. இன்னும் சில நாட்களில்..

Jul 22, 2012

பதறாதே - படுக்காதே - ”சென்ஷி”

விரைவில் வெளியாகவுள்ள என் அடுத்த நாவல் - பதறாதே-படுக்காதே.. வளைகுடா நகரப் பின்னணியில் நடக்கும் அதிவேக த்ரில்லர்.


இந்த நாவலை எழுதியவுடன் நண்பர் சென்ஷியிடம் அனுப்பிவைத்தேன் - அவர் பார்வை:


நகரங்கள் ஒரு தனித்த உருவம் கொண்டவை. நகரங்கள் உருவாகிய பின் அதன் கரங்கள் மாயவலையை மக்களிடையே வீசி இழுத்துக் கொள்கின்றன. நகரத்தின் கவர்ச்சியில் மீளவியலாது மக்களின் மனம் நகரம் நாடியதாயமைகின்றது.. வெளிச்சம் காட்டும் நகரின் இருளுருவம் குறித்தும் அழுக்குகள் குறித்தும் மனதிலெழுகின்ற பிம்ப வடிகால்கள் தொலைக்கப்படுகின்ற தூரத்தின் அளவீட்டை கணக்கிலெடுத்துக் கொள்ளும்படியான சுவாரசிய அபத்தங்களின் மதிப்பின் மீது வைத்துப்பார்க்...... வெயிட் வெயிட்.. சத்தியமா இது ஒரு புத்தகத்துக்கான விமர்சனம்தான்..  இது ச்சும்மா ஒரு பந்தாவுக்கு எழுதிப் பார்த்தது.


இந்த புத்தகத்துல என்ன இருக்குன்னு சொல்லுறதை விட என்னென்ன இல்லைன்னு எளிமையா சொல்லிட முடியும். மன சஞ்சலங்கள், ஆழ்மன தத்துவங்கள், மனித வாழ்வின் மற்றும் உறவுகளின் சிக்கல்கள், பிரதி பிம்பம் படியெடுப்பு... இப்படி தீவிர இலக்கியத்திற்கு முன்னிறுத்தப்படும் எந்த விஷயமும் இதில் இல்லை. இந்த நாவலில் கிடைப்பது சூழல்  மாத்திரமே. ஒவ்வொருவரின் சூழலும் மற்றையோரை பாதிக்கும் என்பதை மிக எளிமையாக விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராம்சுரேஷ்.

ஒவ்வொருவரின் மனதிலும் ஏதேனுமொரு விஷயம் அழுக்காய் படர்ந்திருக்கும். ஒருவரின் நன்மையென்பது இன்னொருவருக்கான கெடுதலில் முடியுமென்பதைப் பற்றிய கவலையோ அச்சமோ இன்றளவில் காணக்கிடைப்பதில்லை. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியையோ, நன்மை செய்தால் நன்மையுண்டாகும் என்ற நியதியையோ யாரும் மனதில் கொள்ளுவதில்லை. நியாயம் என்பது தனக்கான அளவுகோலின்படி மாத்திரமே கணிக்கப் பழகிக் கொண்டதில் தொலைந்தது சக மனிதன் மீதான அக்கறை மாத்திரமே. இந்தக் கதையிலும் யாரும் யாருக்காகவும் அக்கறைப்படுவதில்லை. தனக்கான நியாயங்களின்படி தார்மீகமாக செயல்படுகிறார்கள். நல்லவன் கெட்டவன் என்ற பேதமறுந்து எல்லோரும் வாய்ப்பு கிடைக்காதவரை நல்லவர்கள் என்ற கட்டவிழ்ந்து நாவலில் வந்து செல்லும் எல்லோரையும் ஏதேனும் ஒரு இடத்தில் சகமனித அன்பெனும் பாசாங்கற்றவர்களாகவே நடந்து கொள்கின்றனர். ஆனால் எல்லாமே விறுவிறு சுறுசுறுவென்று கடந்துவிடுவதால் இந்த பாதிப்பு மனதில் அத்தனை அழுத்தமாக எல்லோருக்கும் படியுமா என்று தெரியவில்லை. ஓட்டம் ஓட்டம் ஓட்டம். மாரத்தான் ஓட்டத்திற்கான பந்தயத்தை நூறுமீட்டர் தொலைவுக்கான விநாடிகளில் கடந்துவிடும் அவசரமாய் தறிகெட்டு ஓடுகிறது கதை.


நாவலில் குறிப்பிடப்படும் நகரம் பற்றிய பெயர் இல்லை. எதுவாக இருக்கலாம் என்ற ஊகத்தை விட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அமைப்பை கதையோட்டம் தந்துவிடுகிறது. அரபி கம்ரான் வருகிற இடத்தில் நம்மூரில் நமக்குப் பிடிக்காத அரசியல்வாதியின் பெயரைப் போட்டுக்கொள்ளலாம். அன்வர், ரஷீத் மற்றும் மார்க்கிற்கு பதில் கோபாலையோ தண்டபாணியையோ அல்லது வேலுவையோ சேர்த்துக் கொள்ளலாம். மாறாமல் இருப்பது நாவலில் வரும் குலசேகரன்கள் மாத்திரமே. சூழலென்னவென்று புரியாமலே ஒரு மாயவலையில் தன்னையுமறியாமல் சபலத்திற்கு உட்பட்டு சிக்கிக் கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் அலைபாயும் மனம் கொண்ட குலசேகரன்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் ஆபத்துகளும் அவர்களைச் சுற்றியே இருந்தும், தனி மனித ஒழுக்கமெல்லாம் இருட்டில் தொலைந்து போகும், தன்னைச் சுற்றியுள்ள இருட்டைத்தவிர வேறு யாருக்கும் தெரியாதென்ற நினைவில் சபலத்திற்கு உட்பட்டு அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து சுவைத்துவிட்டு இருட்டுதான் அவர்களுக்கான எதிரியென்று தெரிந்தபின் தப்பிக்க ஓட முயற்சிப்பவர்கள்.


பல்ப் பிக்சன் எனப்படும் வகையில், கதைத்தன்மை சூழலை மாத்திரம் முக்கியமாய்க் கொண்டு அதில் பின்னலாய் உலவுகின்ற மனிதர்களை அதிலும் அதிகம் வெளிச்சம் பட்டிராத மனிதர்களின் அந்தரங்கங்களின் ஒரு சிறிய பார்வைதான் இந்த கதை. நல்லவன் வாழ்வான் கருதுகோள்களை தாண்டிவிடாமல் அந்த கோட்டிலேயே நடந்து போகிற நாவல். இவற்றை இலக்கியமாகக் கருதி கொண்டாடுதல் தேவையற்றது. காரணம் இவை விற்பனைக்கானவை. பெருவாரியான மக்களின் சாகசத்தன்மைக்கான மனநிலையை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று மாத்திரமே. வாசிப்பவர் எல்லோரும் எல்லா கதாபாத்திரங்களையும் தங்களுக்கான ஒன்றாக நினைக்கவியலாத வகையில் பார்வையாளர்களாக மாத்திரமே இருக்க வைக்குமளவு கவனமாய் கையாளப்பட்ட ஒன்று. இது போன்ற கதைகளை வாசிக்கையில் சுஜாதாவை தவிர்த்து யோசிக்கவியலாத வகைப்படுத்தப்பட்டுள்ளதால் சுஜாதாவின் வார்த்தை-கள் அளவுகோலை தாண்டிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதாபாத்திரங்கள் பேச்சுக்கூட அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்ப் பிக்சன் இலக்கியமாகக் கருதிவிடக்கூடாதென்ற மனநிலை வாய்த்தவர்கள் வெறும் வாசிப்பின்பத்திற்காக மாத்திரமே இதை வாசித்து மகிழலாம். அல்லது படித்துவிட்டு மொக்கையென்றும் தூக்கிப் போடலாம். முக்கியம் வாசித்தலும் கருத்துக்கூறலுமேயென்பதாய் இருப்பதால் என்னைப் போல இலவசமாய் வாங்கியாவது படித்து இன்புற்று மேன்மை பெறுக.


சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு சுரேஷ், வாசித்துக் கருத்து கூறு என்று இணைய இணைப்பில் தந்திருந்த இந்த நாவலை நான்குநாட்கள் வாசிக்க மனமின்றி என்ன இருந்திடப்போகுது என்ற மனநிலையில் தொலைபேசிய இரண்டு முறைகளில் நான்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அசுவாரசியமாய் முதல் பத்தியில் படிக்க ஆரம்பித்து கதையில் சுவாரசியத்தில் ஒரு மணிநேரத்தில் படித்து முடித்து அவசரமாய் சுரேஷிற்கு போன் செய்து இரண்டு நிமிடங்கள் பாராட்டிவிட்டு மீண்டும் இரவில் ஒரு முறை படித்து மெல்ல உள்வாங்கி மறுநாள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்தக் கதையைப் பற்றிய கருத்தை சுரேஷிடம் பதிவு செய்திருந்தேன். என்னையுமறியாமல் கதையைப் படித்த உற்சாகம் குரலில் தென்பட்டதை மறைக்க முடியவில்லை. முதல் வாசகன் என்ற பெருமிதமாயிருந்திருக்கலாம். கூறியவற்றை மின்மடலில் அனுப்பி வைக்கச் சொன்ன, ஒரு வருடம் கழித்து மீண்டும் கதையைப் படிக்க அமர்ந்து மீண்டும் அதே உற்சாகம் மனதில் தொற்றிக்கொள்ள அந்த உத்வேகத்திலேயே இதை தட்டச்சி அனுப்பி வைக்க முடிவு செய்தாயிற்று. புத்தகமாக வெளிவந்த பிறகு (ராம்சுரேஷின் இரண்டாம் புத்தகமாக இருக்குமென்று நினைக்கிறேன்) மறுபடி ஓசி பிரதி வாங்கி படித்துக் கொள்ள முடிவு.

கதையில் குறையெனப்பட்டவை. பதிவர் பெனாத்தலாராக அறிமுகமான ராம்சுரேஷின் கிரியேட்டிவிடி பிரமிக்க வைக்கும் ஒன்று. சாதாரண சினிமாவிற்கும் விதவிதமாக ஃபிளாஷ் டிசைன் செய்து அசத்துபவர் முடிவை சற்று அவசரமாய் முடித்துவிட்டார் அல்லது சாதாரணமாய் முடித்துவிட்டார் என்று எண்ணச் செய்தது. அருமையாய் போய்க் கொண்டிருந்த கதையின் முடிவை இன்னும் யோசித்திருக்கலாமே என்ற ஏமாற்றம் வந்தது. ஆனால் அது சற்று நேரம்தான். அடுத்த பல்ப் பிக்சனில் என்னுடைய இந்தக் குறை தவிர்க்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இன்னொரு பிடிக்காதது இந்தக் கதையின் தலைப்பு -  ’பதறாதே.. படுக்காதே..’ ’ஙே’ புகழ் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவல் தலைப்புகள் சாயலில் மனதிற்கு பட்டது. கதையின் தலைப்பையாவது என்னைப் போன்ற இலக்கிய நேசிப்பாளர்களுக்கு பிடிப்பது போல வைத்திருக்கலாம்.  இன்னமும் இந்த மாதிரி தலைப்புகள் உலவுவதால்தான் விஜய் டிவியில் மக்கள் புத்தகங்கள் வாசிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்னமோ.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

(அடுத்து ராஜேஷ்குமாரின் ”தப்பு தப்பாய் ஒரு தப்பு” நாவலுக்கு விமர்சனம் எழுதினால் என்னவென்ற ஒரு எண்ணம் உண்டாகிறது. (கைவசம் பிடிஎஃப் உள்ளது). கிரைம் நாவல் புத்தகத்தில் வாசகர் கடிதமளவில் மடக்கிய அஞ்சு வரி எழுத்துக்குவியலாக இல்லாது  நீண்ட விமர்சனமெழுதி அனுப்பி வைக்கலாமென்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. அப்படியே படிப்படியாய் சுபா, பிகேபி மற்றும் இந்திரா சௌந்தரராஜனிலிருந்து ரமணிச்சந்திரன் கதைகள் வரை விமர்சனம் எழுதவும் முடியுமென்ற நம்பிக்கைக் கீற்று மனதில் ஒளியுண்டாக்கியுள்ளது.) 
கூடிய விரைவில் இணையத்தில் வாங்கும் லிங்க்கை ஏற்றுகிறேன்.

வேணும் ஆசீர்வாதம்!

Apr 13, 2012

நாஞ்சில் நாடன் - ஜெயமோகன் - துபாய்

பிரபலங்களைச் சந்திப்பது என்பது எனக்கு எப்போதுமே சங்கடத்தைத் தரக்கூடிய விஷயம். “நீங்க நல்லா எழுதறீங்க” என்பதா? இதை அவர்கள் பலநூறு முறை கேட்டிருக்கமாட்டார்களா? “ ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று பொய் சொல்வதா? “உங்கள் எழுத்துகள் நான் படித்ததில்லை. கொஞ்சம் படித்ததில் எதுவும் பிடிக்கவில்லை” என்று சண்டை மூடோடு செல்வதா? அதற்கும் ஒரு கன்விக்‌ஷன் வேண்டாமா? மையமாகப் பார்த்து “எப்படி இருக்கீங்க” என்று எந்தத்தாக்கத்தையும் உண்டாக்காமல் கைகுலுக்கிவிட்டு வருவதா? என்னது? நான் சாதா ஆசாமி போல நடந்துகொள்வதா?


ஆனால், ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வருகிறார்கள் என்று தெரிந்ததும், இந்தத் தயக்கங்கள் எதுவும் என் மனதில் இல்லை. ஜெயமோகனிடம் கூச்சமே இல்லாமல் சொல்லலாம் “நான் படித்தவரை உங்கள் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது என்று. நாஞ்சில் நாடனிடம் தாராளமாகச் சொல்லலாம் “ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று.

இரண்டு தினங்கள் இருவரையும் சந்தித்தேன். முதல் தினம் இயல்பான நண்பர்கள் சந்திப்பு, இரண்டாம் தினம் இலக்கியக் கூடல் - மேடை நிகழ்ச்சி.

இயல்பான சந்திப்பின்போது நாஞ்சில் நாடன் சுவாதீனமாக பேச ஆரம்பித்தார். நாவல்களில் ஆரம்பித்த பேச்சு வெகுவிரைவாக சலாட் செய்வது எப்படி என்று மாறி, புடலங்காய் சலாடைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தவர், கொஞ்ச நேரம் கழித்த பிறகு “ம்ம், ஓக்கே” என்பதற்கு மேல் அதிகம் பேச முடியவில்லை. ஏன், நிமிடத்துக்கு 300 வார்த்தை பினாத்தும் நானோ, சமயம் பார்த்து கவுண்டர் கொடுக்கும் குசும்பனோ கூட எதுவும் பேசமுடியவில்லை. ஜெயமோகன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். எந்த டாபிக் எடுத்தாலும் ஆழமாகப் பேசுகிறார். காட்டைப் பற்றிப் பேசினால் எது போன்ற மரங்களைத் தவிர்க்கவேண்டும், ஏன் இன்றைய ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் அதிக தொழில்காதலுடன் இருக்கின்றார்கள், தமிழ்நாட்டில் எங்கே காடுகள் இருக்கின்றன, எங்கே என்ன மிருகங்கள் பார்க்கலாம், எப்படி புக் செய்யலாம், எங்கே குழந்தைகளுடன் செல்லலாம்...

ஒரு தலைப்பில் இருந்து அடுத்த தலைப்புக்கு எப்போது செல்கிறார் என்பதைக் கொஞ்சம்கூட ஊகிக்க முடிவதில்லை. சந்திரசேகரேந்திர சரஸ்வதி காந்திக்குக் கூட்டிச் சென்றார், காந்தியில் இருந்து பாரதி.. பாரதி எப்போது வள்ளலார் ஆனார் என்பது இன்னும் எனக்கு விளங்கவே இல்லை.

மூன்று மணிநேரங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகைய ஆனால் இன்ஃபார்மல் பேச்சின் விஸ்தீரணத்தை இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன்,

அமீரகத் தமிழர் மன்றம் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே வித்தியாசமான நிகழ்ச்சியாக இலக்கியக் கூடல் அமைந்திருக்கும். சினிமாப் புகழ்கள் இல்லாமல் சம்பிரதாய குழந்தை நடனங்கள் மிமிக்ரிகள் இல்லாமல், நேரடியாக அறிமுகம், நாஞ்சில் நாடன் ஜெயமோகன் பேச்சு, கேள்வி நேரம் என்று ஜிகினாவே இல்லாத எளிய விழா.

நாஞ்சில் நாடன் பேசுகையில் சொற்கணக்கை வைத்து ஆரம்பித்தார். 1330 குரலில் குறள்களில், குறைந்த பட்சம் 4000 யுனிக் சொற்கள் உபயோகமாகி இருக்கும், கம்பராமாயணத்தில் 12500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான யுனிக் சொற்கள் பிரயோகிக்கப் பட்டிருக்கலாம். கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம் - ஆனால் எவ்வளவு பயன்படுகிறது? படைப்பாளி எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சொற்களின் மரணத்தைத் தள்ளிப் போடும்.. அநியாயச் சுருக்கம்தான் என்னுடைய வெர்ஷன்.. சுவாதீனமாக கம்பனையும் திருக்குறளையும் வாழ்க்கையையும் மேற்கோள் காட்டி தடங்கல் இன்றி மிக அருமையாக அமைந்த பேச்சு.

ஜெயமோகன் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார். மணிமேகலை சென்றடைந்த பளிங்கு மண்டபமும் கையில் இருந்த மாலையில் கண்ணீரும் பெண் நிலைமையை அன்றில் இருந்து ஏன், சிவனும் உமையும் ஆடிய ஆடு புலி ஆட்டத்தில் இருந்தே லா ச ராவின் ஆடு புலி ஆட்டம் வரை தொடர்கிறது என்றார். வண்ணதாசன் கதையும் இடையில் உவமைக்கு வந்தது.

மேடைப்பேச்சுகளைக் கேட்டால் பத்து நிமிடத்துக்கு மேல் அமராத எனக்கு, முழு நேரமும் ஒரே இடத்தில் அமர வைத்த பேச்சுகளுக்கும், பேச்சாளிகளுக்கும், அமீரகத் தமிழர் மன்றத்துக்கும் நன்றி..

 

blogger templates | Make Money Online