Dec 26, 2009
நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 18 பின்னூட்டங்கள்
வகை சினிமா, திரைப்படம், விமர்சனம்
Dec 14, 2009
திருத்த வேண்டிய பதிவு
சரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது.
நம்பிக்கை
சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.
எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.
இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.
"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.
"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"
"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"
"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"
"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"
"சொல்லு. வேற என்ன விஷயம்?"
"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு"
"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே?"
"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"
"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"
ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.
"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"
"நான் தான் பேசறேன். கோபிதானே?"
"ஆமாம் சார்"
"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"
"ப்ராப்ளமா சார்?"
"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"
"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"
"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"
ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.
சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.
"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"
"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"
"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"
"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."
காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.
"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"
"என்ன சொல்றாங்களாம்?"
"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"
"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"
"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்!"
சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.
"சரி பாக்கறேன். வேற எதுவும்?"
"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"
"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"
"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"
சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.
ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.
"முத்து, கேண்டீன் வர்றயா?"
ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,
நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்
கேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம்.
”ஓக்கேதானே?” என்றேன்.
”பின்ன?”
பெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல்.
”நெருப்புப் பெட்டி இருக்கா?” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான்.
தீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி..
****
முன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள்