Jan 13, 2014

கரும்புனல் - விமர்சனம் - சித்தார்த்

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்த கட்டுரைக்கான குறிப்புகள் இவை. இனியும் இதை தள்ளிப்போட வேண்டாமென குறிப்புகளாகவே பகிர்கிறேன்… [சுரேஷ் மன்னிப்பாராக]


கங்குல் வெள்ளம் : கரும்புனல் குறித்து.

* இது மிக சம்பிரதாயமான, தேய்வழக்கான ஒரு வரியாக தோணலாம். ஆனால் உண்மையிலேயே, கரும்புனல் நாவலை வாசித்த இரவு சரியாக தூக்கம் பிடிக்கவில்லை. அப்படி ஒரு அலைகழிப்பு மனதில். மனித மனதின் ஆகக்கரிய பகுதி ஒன்றை சந்தித்துவிட்டு திரும்பிய அயற்சி. 

* நாவலில் அத்தனை களங்களுமே எனக்கு புதியது. ஆனால் மிக எளிமையாக, அதிக அந்நியத்தன்மை தோன்றாதவாறு அவற்றை அறிமுகம் செய்கிறார் சுரேஷ்.

* இந்நாவலின் அடிப்படை கட்டுமானத்தை coming of age வகையாக கொள்ளலாம். அனுகுண்டே வெடித்தாலும் அரை வரிக்கு மேல் உணர்ச்சிவசப்படாத (நன்றி : ஜெயமோகன்) இளைஞன் வெடித்தழும் இடத்தில் நாவல் முடிகிறது. இந்த பயணமே நாவல் என்று தோன்றியது. 

* நாவலை எழுதிய சுரேஷுக்குமே மேற்சொன்ன பயணத்தை போட்டு பார்க்கலாம். எழுத்தின் மீதான பிடியை தளர்த்தாமலேயே நாவலை நகர்த்துகிறார். எங்கும் ஒரு கச்சிதத்தன்மையும் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாதென்ற கட்டுப்பாடும் தெரிகிறது. காதல், சதியாலோசனை, சாதீய கீழ்மைகள், சுரண்டல்கள், அறச்சீற்றம், தற்காலிக வெற்றி, கலவர பதட்டம் என அனைத்தையும் மிகுந்த கட்டுபாடுடைய மொழியில் தான் சொல்கிறார். ஆனால் நாவலின் உச்சக்கட்டம் நெருங்க நெருங்க.. அந்த பிடி தளர்கிறது. அவரையும் மீறி நாவல் பயணிக்கும் இடம் அந்த முடிவு தான் என்று தோன்றியது. 

* சாதீயம் என்பதை சட்டென உணர்ச்சிவசப்படும் கிராமத்து மனிதர்களின் பின்னணியிலேயே பார்த்த எனக்கு இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் படித்தவர்களின் உயர்மட்ட அதிகாரிகளின் நுட்பமான, கோரமான சாதீயமுகம் அதிர்ச்சியளித்தது. 

* இந்நாவலில் சாதிமேன்மையை விட ஊழலே ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறதென்றாலும், இதன் சாதீய முகமே மீண்டும் மீண்டும் மனதை அலைகழித்தது. ஏன் என்று சரியாக சொல்லத்தெரியவில்லை. May be because while corruption merely shows indifference, casteism cares enough to kill. 

* ஒரு குறுந்தொகை வரி மீண்டும் மீண்டும் மனதில் வந்துகொண்டே இருந்தது. கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே…. இரவெனும் நீர்பரப்பு கடலை விட பெரியது… அந்த மக்கள் இரவினும் கரிய கடலைத்தான் நீந்திக்கடக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்… 

* நான் வாசிக்கும் பொழுது சுரேஷ் இந்த நாவலுக்கு பெயரிட்டிருக்கவில்லை. கங்குல் வெள்ளமே இந்நாவலுக்கான சரியான தலைப்பாக இருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் சுரேஷின் பெயர் தேர்வு இன்னும் கச்சிதம். சுரேஷுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்… 
சித்தார்த்

விரிவான விமர்சனத்துக்கு நன்றி சித்தார்த்.

1 பின்னூட்டங்கள்:

அ.பாண்டியன் said...

தங்களுக்கும்,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

 

blogger templates | Make Money Online