Jan 20, 2014

கரும்புனல் - Pre-Production விமர்சனங்கள்

இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்தபோதே பார்த்துக்கொண்டிருந்த இவர்கள் விமர்சிக்கிறார்கள். இவர்களால் நாவலில் சில மாறுதல்கள் நடந்தனதான். ஆனாலும் பல நல்லவிஷயங்களை இவர்கள் சொல்லியும் என் கனத்தமண்டை ஏற்கவில்லை :-)

இலவசக் கொத்தனார்:

இது பெனாத்தலின் முதல் நாவல் அல்ல. ஆனால் அவன் இது வரை எழுதியவைகளில் இந்தக் கதை கொஞ்சம் ஆத்மார்த்தமானது. ஏனென்றால் அவன் வாழ்க்கையின் பல சம்பவங்கள் இக்கதையிலும் வருவதுதான் காரணம். 

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும் இவன் சித்திரிக்கும் அதன் இந்த முகம் நான் அறியாத ஒன்று. சினிமா, மென்பொருள் எனத் தெரிந்த துறைகள் சார்ந்த புத்தகங்கள் சில தமிழில் வந்திருக்கின்றன. பெரும்பாலும் மேலோட்டமாக, பொதுவான கருத்துகளுக்கு பங்கம் வராதபடி எழுதப்பட்டவை என்றே தோன்றக் கூடிய புத்தகங்கள். ஆனால் நிலக்கரிச் சுரங்கங்களை பின்புலமாக வைத்துக் கொண்டு இவன் பின்னி இருக்கும் கதையும் சரி, அந்தக் களனும் சரி, தமிழுக்குப் புதிதே.

உபிச என்ற தகுதியால் எழுதிய உடனே, எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே என்று கூட சொல்லலாம், படித்துவிட்டேன். துறை சார்ந்த விஷயங்களை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்லி இருக்கலாம் என்ற ஒன்று மட்டுமே என் விமர்சனம். அது கதையின் போக்கை தேங்கச் செய்யும் என்பதுதான் பதில் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் விந்திய மலைப்பகுதியில் மருந்து விற்கும் நாஞ்சிலின் ஹீரோ திடீரென்று புறநானூற்று மேற்கோள் காட்டவில்லையா? அதைப் போல இன்னும் பல தகவல்கள் சேர்த்திருக்கலாம்.

கதைக்களனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விறுவிறுவெனப் படிக்கக்கூடிய நாவல். எழுதியவன் என்னவன் என்பதையும் தாண்டி வாங்கிப் படிக்க என் சிபாரிசு இந்தப் புத்தகம்.

Suresh Babu புத்தகக்கண்காட்சியில் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்டா!



என். சொக்கன்:

எஞ்சினியரிங்கில் நான் படித்ததும் (கிட்டத்தட்ட) மெக்கானிக்கல் நுட்பங்கள்தான். ஆனால் நான் சரியான மக்கானிக்கலாக இருந்தபடியால், வன்மையற்ற மென்பொருள் துறைக் கரையில் ஒதுங்கிவிட்டேன்.

(பெனாத்தல்) சுரேஷ் அப்படியில்லை. தைரியசாலி. வன்பொறுப்புகள் பலவற்றை ஏற்றுத் தாண்டி முன்னுக்கு வந்தவர்.

அவருடைய அனுபவங்களை அவ்வப்போது சொல்வார். சிலது காமெடியாக இருக்கும், பலது நம்பமுடியாமல் இருக்கும். ‘நல்லா ரீல் விடறார்’ என்று நினைத்தபடி, ‘சூப்பரா எழுதறீங்க’ என்போம்.

பின்னர் ஒருநாள், த்ரில்லர் நாவல்கள் இரண்டு எழுதினார். விறுவிறுப்புக்குக் குறைவில்லாத நல்ல பல்ப்புகளாக அவை இருந்தன. ரசித்துப் படித்தேன்.

அடுத்து, அதற்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு நாவல் எழுதினார். இதிலும் விறுவிறுப்பு இருந்தது. ஆனால் அவர் சொன்ன அந்த ‘வன்’ அனுபவங்கள் இதில் ஏராளமாக இடம் பெற்றிருந்தன. ஒரு புதிய களம், வித்தியாசமான மனிதர்கள், அவர்களுடைய உணர்வுகள் என்று கலவையாக இருந்தது. இவர் சொன்னதெல்லாம் நிஜம்தானோ என்று நினைக்கும்படி எழுத்து.

அப்போதுதான் அவரிடம் கேட்டேன், ‘என்னய்யா, இலக்கியவாதி ஆகற உத்தேசமா?’

‘ஏன்? அவ்ளோ மோசமாவா இருக்கு நாவல்?’ என்றார் சட்டென்று.

நல்லவேளை, அவர் ஒழுங்காகதான் இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். கொஞ்சம் அசந்தாலும் வறட்சி தாக்கிவிடக்கூடிய ஒரு சப்ஜெக்டை வாசிக்கும் சுவையோடு தருவது சாதாரண விஷயமில்லை. சுரேஷ் அதைச் சாதித்திருக்கிறார் இந்த நாவலில்.

இதற்குமேல் பேசினால் கதையைச் சொல்லிவிடுவேன், சொன்னாலும் பிரச்னையில்லை என்பது வேறு விஷயம், இந்த நாவலின் பலம் எழுத்தில்தான், முடிச்சில் அல்ல.

ஆகவே நண்பர்காள், பெனாத்தல் சுரேஷ் என்று நீங்கள் அறிந்த ராம்சுரேஷின் நாவல், ”வம்சி” பதிப்பக வெளியீடாக வந்துள்ள ’கரும்புன’லை நீங்கள் நம்பிக் குடிக்கலாம், ஐ மீன், படிக்கலாம். (மனப்) ப்ரீத்திக்கு நான் கேரண்டி.



டைனோபாய்:

கரும்புனல் (நாவல்):

ஒரு நாவல் எழுதும்போதே படித்து பார்ப்பது தனி சுவை! ஒரு எழுத்தாளர் அடுத்து தன் பாத்திரங்களை எங்கே செலுத்துகிறார், எப்படி காட்சிகள் மாற்றி சுவாரஸ்யங்களை கூட்டுவார் என்று ஒரு காத்திருப்பு நமக்குள் தொற்றிக்கொள்ளும். இதனாலேயே வார பத்திரிக்கைகளில் வந்த பல கதைகள் சென்ற தலைமுறையினரை தீவிர வாசகர்களாக மாற்றி இருந்தது என்றே எண்ணுகிறேன். தோசைக்கல்லில் அடுத்த தோசை வார்க்கும் போதே அவசரமாய் சாப்பிட்டுவிட்டு அடுப்பையும் அம்மா முகத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சுவாரஸ்யத்தை வழங்கிய (பெனாத்தல்) (ராம்)சுரேஷுக்கு நன்றி!

சுரேஷின் முந்தைய நாவல்களிலும் கதைகளிலும் இல்லாத முக்கியமான விஷயம் கதையின் டீட்டெயிலிங். புதிய களனில் பேருந்துகளில்புகைவண்டிகளில் புகை கக்கிக் கொண்டிருக்கும் ஆலைகளுக்குள் நம்மை அழைத்து செல்கிறார்! அங்கு ரத்தமும் சதையுமாய் வாழும் மனிதர்களையும் அவர்களின் இயந்திர அழுக்குப்படிந்த இதயங்களையும் அங்கங்கே பூதக்கண்ணாடியில் அருகில் காட்டி அச்சுறுத்துகிறார்! இது ஏதோ வட இந்தியாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நடைபெறுவது மட்டுமல்ல. நம் அலுவலகங்களில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அழுக்குகளைத்தான் பெரிதாக்கி நம் முன்னே கொண்டுவருகிறது கரும்புனல். களம் புதிது, பாத்திரங்கள் புதிது என்றெல்லாம் பல நற்குணாதியங்கள் இருந்தாலும் நம்முள் இருக்கும் மனச்சாய்வுகளை விளக்கும் போது முகத்தில் அறைந்தாற் போன்ற உணர்வே ஏற்படுகிறது!

இது சுரேஷின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களில் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார். அப்படியென்றால் அலுவலகத்தில் மறைந்திருந்தது அவர்தானா? அந்தத் தருணங்களை விளக்கும் போது நமக்கு வியர்க்கிறது! தப்பி ஓடும் இடங்களில் நம் இருதயமும் படபட்ப்புடன் பதைபதைக்கிறது. உயிர்கள் துண்டாடும் போது கண்ணெதிரே உதிரம் கொட்டுவதைப்போல முதுகுதண்டு சில்லிடுகிறது! இப்படி வாசகனையும் தன்னோடு சேர்த்து பயணிக்கவைப்பதுதான் எழுத்தாளரின் வெற்றி!

இந்த கதையை அவர் எழுதிய போதே இதை ஒரு திரைக்கதையாக எழுதச்சொன்னேன்! ஏனோ அது நடக்கவில்லை! ஒரு நல்ல திரைக்கதைக்குரிய அனைத்து மூலகங்களும் இந்த நாவலில் இருக்கிறது! சில பாத்திரங்களின் பின்கதையையும் ஆலையினைப்பற்றியும் சில கதாபாத்திரங்களின் விவரணைகளையும் இன்னும் செழுமை படுத்தி இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்! இந்த நாவலுக்காய் பல விஷயங்களை தேடி தன் எழுத்தை செழுமைப்படுத்தினார்! வெளிநாட்டில் இருந்து மண்ணின் மணம்கமழும் ஒரு நாவலை படைப்பது கடினமானதுதான்.

ஆனால் இந்த ஒரு நாவல் நமக்கு ஒரு புதிய சுரேஷை காட்டி இருக்கிறது! சுரேஷின் பலம் இத்தகைய கதைகளில்தான் இருக்கிறது! இது அவருக்கு ஒரு புதிய கதவுகளை திறக்கும் திறவுகோலாவே பார்க்கிறேன்! தன் அடுத்த நாவல்களிலும் படைப்புகளிலும் மேலும் செம்மையான படைப்புகளை வழங்கலாம்!

நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் கரும்புனல் எந்தவித பெரும் விளம்பரமும் இன்றி நல்ல விற்பனையை ஈட்டி இருக்கிறது! நாவலின் நம்பகத்தன்மையும் சுரேஷின் நடையுமே இதற்கு முக்கிய காரணம்.

***

படம் நன்றி டைனோ + - http://media2.artspace.com/media/sebastiao_salgado/coal_mining_dhanbad_bihar_india/sebastiao_salgado_coal_mining_dhanbad_bihar_india_1024x768.jpg

0 பின்னூட்டங்கள்:

 

blogger templates | Make Money Online