Jun 30, 2008

பொதுஜனத்தை மறந்த பொதுஜனம்!

நம்ம மக்களுக்கு, கமல்ஹாசனைத் தெரியுது, டாக்டர் விஜய் ஐத் தெரியுது ஏன் வாட்டாள் நாகராஜைக்கூடத் தெரியுது - ஆனா பொது ஜனத்தைத் தெரியலைங்க! என்னாதான் மாசத்துக்கு லட்சத்துக்கு நூறு இருநூறு கம்மியா வாங்கற பொட்டி தட்டற தொழில்லே இருந்தாலும் இப்படியா? மறுகாலனீய ஏகாதிபத்திய சிந்தனாமுறையின் இருத்தலியல் சாராக் கற்பனாவாதம் முத்திப்போச்சு போல!

சரி சரி எங்கேயும் போயிடாதீங்க.. மேட்டருக்கு வந்துடறேன்!

குவிஸ் வைச்சா ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கும்னு தெரிஞ்சதுதான்னாலும், இவ்வளவு சூப்பர் ரெஸ்பான்ஸை நானே எதிர்பார்க்கலை - அதுவும் அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் எல்லாப்பக்கமும் இருந்து கொட்டிக்கிட்டிருக்கும் வேளையில!

4000 ஹிட்டுக்களை விடுங்க! 130 பின்னூட்டங்களை விடுங்க! 118 முழுசா முடிச்சு அனுப்பிய விடைகளையும் விடுங்க! எனக்கு நிஜமான ஆச்சரியம் இத்தனை பேரும் இந்தப்போட்டிக்காக செலவழிச்சிருக்க நேரம்! 500லிருந்து 1000 நொடி!

கோட்னு ஒண்ணு கொடுத்ததால, சுலபமா காபி பேஸ்ட் பண்ணிட்டாங்கன்னாலும், யாருமே ரிப்பீட்டேய் போடலைன்றது ஒரு சந்தோஷம்தான்! உடனே கண்டுபிடிச்சுருவேனே :-)

இன்னொரு ஓ போடவேண்டிய சமாச்சாரம்! விடை அனுப்பியவங்களுக்கு சராசரியாக 72 சதவீதம் மதிப்பெண் கிடைச்சிருக்கு!

சரி..விடைகளைச் சொல்ல வேண்டிய நேரம்! பாஸ்டன் பாலா கேட்ட புள்ளிவிவரங்களுடன்!



வெற்றி பெற்றவர்களைப் பற்றிய அறிவிப்புலதான் ரொம்பவே குழம்பிட்டேன். நேரம் மற்றும் குறிப்புகளை வைத்து வரிசைப்படுத்தலாம் னு நெனச்சேன். ஆனால், அது நியாயமானதா இருக்காது - சிலர் திறந்துட்டு வேற ஜன்னலைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம். சிலர் இரண்டாவது மூன்றாவது முறையாக முயற்சித்ததில் குறைந்த நேரத்தில் குறைந்த குறிப்புகளுடன் முடித்திருக்கலாம் - என்பதால் அப்படி வரிசைப்படுத்தாமல், எனக்கு பின்னூட்டம் / மின்னஞ்சல் வந்த நேரப்படி வரிசைப்படுத்தி இருக்கிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஓ!



ஆனா மக்களே! கும்மிக்கும் மொக்கைக்கும் நடுவுல அப்பப்ப இந்த மாதிரி எதாவது செஞ்சே தீரணும்னு எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்துட்டீங்களே! எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் இப்படி ஒரு இம்சையைக் கொடுத்தே தீருவேனே! பாவம் நீங்க!

Jun 25, 2008

Quiz அவதாரம் - follow up

குவிஸ் போட்டிக்கு எல்லாரும் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி.

சிலர் இந்தப்பதிவு பளாஷின் அளவு காரணமாக, சரியாகத் தெரியவில்லை எனக்கூறி உள்ளீர்கள். இங்கே இருந்து, இந்த ப்ளாஷை நேரடியாக, முழு அளவில் உங்கள் உலாவியில் பார்க்க முடியும். பார்த்து பின்னூட்டங்களை இங்கே மட்டும் அளிக்கவும், இந்தப்பதிவில் வேண்டாம்.

பின்னூட்டங்களை உடனுக்குடன் பதிப்பிப்பதில் பிரச்சினை இருந்தாலும், நீங்கள் அனுப்பியவுடனே பார்த்துவிடமுடிவதால், உங்கள் விடை சரியா தவறா என அறிந்து, இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் இற்றைப்படுத்திவிடுகிறேன்.

மீண்டும் ஒரு நன்றியுடன் - பினாத்தல் சுரேஷ்.

Jun 24, 2008

கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!

அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.

உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.

கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.

அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.

படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.

ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..

மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)

கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..

இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.




தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

Jun 16, 2008

கேள்வி பதில் ச சங்கர் - கொத்தனார் வயா பினாத்தல்!

இந்தக் கேள்வி விளையாட்டு தேன்கூடு சுடர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது மாட்டவில்லை. என்னடா இது என்னை மட்டும் யாரும் கேள்வி கேக்க மாட்டேங்கறாங்களே? தானே கேள்வி தானே பதில் ஆரம்பிச்சுடவேண்டியதுதானா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவேளையில் ச சங்கர் அன்புடன் கேள்வி கேட்க, இதோ பதில்கள்.
 
1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது "சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக"!??? உங்கள் மனநிலை என்ன ?
 
வலிப்பதிவரா? இதென்ன வலிக்கும்படியான குத்து?
 
எழுதப்போவதில்லை என்று சொன்னது வாஸ்தவம்தான். ஆனால் அப்போதேகூட, நிரந்தரமான முடிவல்ல என்பதையும் சொல்லியே இருந்தேன். அப்படிச் சொன்னதற்கான முக்கியமான காரணம், வலைப்பதிவுகளைப்பற்றிய அறிதல் எனக்கு அப்போது இருந்திராததே என்பது இப்போது புரிகிறது. "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்பதாக அர்த்தம் எடுத்துக்கொண்டு, நான் எழுதுவது நன்றாக வருவதில்லையே என்ற எண்ணத்தில் விட்ட அறிவிப்பு அது. (வெகுண்டு எல்லாம் எழவில்லை :-)
 
ஆனால் வலைப்பதிவர்கள் உருப்படியாகத்தான் எழுதியாகவேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை எனப் பலர் வலியுறுத்தியதால் தொடர ஆரம்பித்தேன். காலமும் அதையே நிரூபித்து, உருப்படியாக எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் ஜாலியாகத் தொடர்கிறேன். காலம் உருண்டோடிய காரணத்தால் மட்டுமே சீனியராக இருக்கிறேன்! இன்றும் எழுதுவதை நிறுத்தத் தயாராகவே உள்ளேன் - ஆனால் - "அவனை நிறுத்த சொல்!"


2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?
 
பதில் 1: அந்த டீச்சருக்கும் எனக்கும் அதிக வயசு வித்தியாசம்னு சொல்லிட்டாங்க!
 
பதில் 2: தெரிஞ்சவங்க நாலுபேரு பக்கத்தில இருந்தாங்க.. கொஞ்சம் கிளம்பறீங்களா? என்று பார்வையாலேயே முறைத்ததில் அப்ஸ்காண்ட் ஆனார்கள். நானும் அவளும் தனியே.. தன்னந்தனியே!
 
உலகத்தில் யாரும் உபயோகப்படுத்தாத முதல் காதல் வார்த்தைகளை அள்ளி வீசவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கேட்டே விட்டேன்!
 
"ட்ரெயின்லயா ஆபீஸுக்குப் போயிட்டு வரீங்க?" 
 
அதிலும் மயங்கினாள் அவள்.
 
பிறகென்ன? கண்கள் கலந்தன, கருத்தொருமித்தோம்!
 
கடைசியில் என்ன ஆச்சா? அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க! மனசைத் திடப்படுத்திக்கங்க - கல்யாணம் ஆயிடுச்சி :-(

3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள்?

இரவு 11 மணிவரை மனைவியின் அருகில் இருந்தேன். வலி எடுக்கவில்லை. எப்போதும் எடுக்கலாம் என்ற நிலை. எனக்கு இருக்கும் குறைபாட்டினால் அங்கே பக்கத்தில் இருக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். காலல 8 :30க்குத்தான் மறுபடி மருத்துவமனைக்கு வந்தேன்.  வருவதற்கு இரண்டே நிமிடம் முன் குழந்தை பிறந்தது எனத் தெரிவித்தார்கள். வெயில் அதிகமாக இல்லாததால் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி உள்ளறையில் விளக்கொளியில் வைத்து கண்ணாடி ஜன்னலைத் திறந்து காட்டினார்கள் என் தேவதையை!

எண்ணங்களா? முதல் எண்ணம் மனைவி பெத்துப் பிழைச்சு வரணும்ங்கறதுதான். ரெண்டாவதா, ஒண்ணு ரெண்டு மைக்ரோ செகண்டுக்கு, "அப்பாவா ஆகப்போறே, இனியாவது குழந்தைத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கணும்" அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. இன்னி வரைக்கும் அந்த எண்ணத்தை ஜெயிக்க விடலையே! நாமல்லாம் யாரு!

4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் ?

ஹலோ பி ஏ.. இப்ப உடனடியா, அடுத்த மூணு நிமிஷத்துக்குள்ள எனக்கு இந்த உத்தரவெல்லாம் டைப் ஆகி வரணும்.
 
1. பிரதமர் பதவிக்கு இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் பெட்ரோல் கோட்டாவை கொஞ்சம் அதிகப்படுத்தணும்.. ரொம்பவெல்லாம் ஒண்ணுமில்ல.. ஒரு லட்சம் லிட்டர் போதும்.. ஊருக்குப் பக்கத்துல ஒரு பெட்ரோல் ரிசர்வாயர் இருக்கு.. அதை வாடகைக்கு எடுத்து ஊத்தி வச்சுருங்க!
 
2. சிபிஐயா ரா-வா? யாருய்யா இதுக்கு இன்சார்ஜு? நம்ம உறவுக்கார பசங்கள்லே யாரு யாரு விசுவாசமா இருப்பானுங்க, எவன் எவன் ஏமாத்திட்டு ஓடிப்போயிருவான்னு ஒரு ரிப்போர்ட்டு உடனடியா வேணும்.. எதுக்கா? வேற என்ன? ஒரு 10000 பேரை காப்பாத்த பெட்ரோல் கேஸ் ஏஜன்ஸி கொடுத்துரலாம்.. பின்னால கஷ்டப்படக்கூடாதில்லையா? நான் இல்லைய்யா.. அந்த மக்களைச் சொன்னேன்!
 
3. அப்புறம்.. ஒரே நாள் பிரதமரா இருந்தாலும் அவருக்கு பென்ஷன் எல்லாம் கரெக்டா வந்துரணும்.. அந்த பென்ஷன் அமவுண்டையும் மாசம் 99 லட்சம்னு ஜி ஓ போட்டு ஒரு லெட்டர் எழுதிக்கொண்டா!
 
4. ஆமாம், இந்த எம் எஸ் ஓ, கேபிள், டிடிஎச் எல்லாம் யாரு பாத்துக்கறது? அந்த மந்திரிய வரச்சொல்லுப்பா உடனே.. நம்ம பசங்களுக்கு ஒரு தொழில் ஆரம்பிச்சுக் கொடுத்துரலாம்!
 
5. எல்லாத்தையும் விட முக்கியமா இந்த லெட்டரை ஜனாதிபதிகிட்ட கொடுத்துடணும்! என்ன எழுதியிருக்கேனா? ஒரு நாள்லே என் கடமையெல்லாம் சரியாச் செய்ய முடியல.. இன்னும் 24 மணிநேரத்துக்கு எக்ஸ்டன்ஷன் கொடுங்கன்னு எழுதியிருக்கேன். இந்த லெட்டர்லே டேட் மாத்தி மாத்தி டெய்லி கொடுக்கவேண்டியது உன் கடமை!
 
என்ன அப்படிப்பாக்கறே? நாட்டுக்கு நல்லதா? அதெல்லாம் 5 வருஷம் மொத்தமா வந்தா யோசிக்கலாம்.. அப்படி வந்தவங்களே யோசிச்சதில்ல! ஒரு நாள்லே என்ன கிழிச்சிறப்போறேன்! வீட்டையாச்சும் கவனிக்கலாமில்ல?
~~~~~~~~~~~~~
அப்பாடா பதில் சொல்லியாச்சு.
 
இப்போ, இலவசக்கொத்தனாரை கொஞ்சம் நோண்டலாமா? (இதே கேள்விகளுக்கு பஞ்ச் பரமசிவத்திடமும் பதில் கேட்டு வாங்கிப் போடுங்கள் - அல்லது ர் மாற்றி எழுதுங்கள்)
 
1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?
 
2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?
 
3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?
 
4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?

Jun 13, 2008

தசாவதாரம் - முதல்கை (Warning - May contain Spoilers)

கண்டேன் சீதையை பாணியில் முதல்வரி சொல்லிவிடுகிறேன் : படம் பிரமாதம், அவசியம் தியேட்டரில் பார்க்கவேண்டும்.

முதலில் பாராட்ட வேண்டியது திரைக்கதையை. வாஷிங்டன் டோக்கியோ சிதம்பரம் பாண்டிச்சேரி வேளாங்கண்ணி சென்னை என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் பயணிக்கும் ஒரே மெகா துரத்தல்தான் கதை என்றாலும் அதை எந்த விலகலும் இல்லாமல் சுவாரஸ்யம் குறையாமல் எந்த லாஜிக் சம்மந்தப்பட்ட கேள்விகளும் இல்லாமல் ஓடும் திரைக்கதை.

இரண்டாவது ஒளிப்பதிவு. நடுக்கடலில் தொடங்கி நேரு ஸ்டேடியம் வரை மெரினா செண்ட்ரல் வழியாக வந்து கோயிலின் எல்லா நிலைகள் மேல் ஏறி கீழ் இறங்கி சோழன் மந்திரியின் தாடிவரை தடையில்லாமல் ஒரே ஷாட்! பாதி கிராபிக்ஸாக இருக்கலாம் - அது தெரியாமல் செய்திருக்கும் டெக்னாலஜி.

மூன்றாவது கமல்! ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் 3 கமலாவது இருக்கிறார்கள் - வழக்கமான டபுள் ஆக்ஷன் படங்கள் போல மரியாதையான தூரத்தில் அல்ல - ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, துவைத்துக்கொண்டு, துரத்திக்கொண்டு. எந்த நேரத்திலும் மெயின் கேரக்டர் தவிர வேறு யாரும் கமல்தான் என்ற எண்ணம் வராமல் இருப்பது பெரிய ஆச்சரியம். ஜார்ஜ் புஷ்ஷின் மரியாதைப்பட்ட ஆங்கிலம், ப்ளெட்சரின் அலட்சிய ஆங்கிலம், பல்ராம் நாயுடுவின் தெலுங்கு வாடை குப்பென்று அடிக்கும் தமிழ், மலையாளம் கலந்த பூவராகன் தமிழ், அக்ரஹாரத்து பாட்டி தமிழ், ஏன் ஜப்பானிஸ் கூட :-) ஒவ்வொரு வேடத்துக்கும் மேக்கப் மட்டுமின்றி உடல்மொழி, நுணுக்கமான விவரங்கள்.. முகத்தில் மாஸ்க் ஒட்டுவது மட்டும் வேடம் போடுவது அல்ல!

அடுத்து வசனங்கள்..
நண்பனின் மனைவி - life has to go on - நான் ஹிரோஷிமாவால் பாதிக்கப்பட்டவள் - வாழ்க்கையைத் தொடராமலா விட்டேன்?-
ஜார்ஜ் புஷ் கேட்கிறார் - நியூகிளியர் வெப்பன் போட்டால் பிரச்சினை தீருமா?
நான் கடவுள் இல்லைன்னா சொன்னேன்? இருந்திருக்கக்கூடாதான்னுதான் சொன்னேன்!
போடா.. கருத்துட்டான்றதுனால என் மகனா இல்லாம போயிடுவானா?

டெக்னாலஜியை முழுமையாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் - பலநேரங்களில் தமிழ்ப்படம் பார்க்கும் நினைப்பே இல்லை.

என் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லைதான். 10 வேடங்கள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. அதாவது, கமலே நடித்தாக வேண்டிய வேடங்கள் என்று இல்லாமல், முக்கியமான எல்லாப் பாத்திரங்களிலும் அவரே வியாபித்திருக்கிறார். ஜார்ஜ் புஷ் ஆகவும், சி ஐ ஏ முன்னாள் ஏஜண்ட் ஆகவும் ஜப்பானிய கராத்தே மாஸ்டர் ஆகவும் நடிக்கவேண்டிய எந்த அவசியமும் தெரியவில்லை. மேக்கப் சில வேடங்களுக்கு கடுப்பேற்றுகிறது. 7 அடி கைஃப் உல்லாவும் ஜார்ஜ் புஷ்ஷும் பொம்மை போலத்தான் நடமாடுகிறார்கள்!

பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது!

ரங்கராஜன் நம்பி காட்சிகள் மெகா மிரட்டலாக இருந்தாலும், அதற்கும் மற்ற காட்சிகளுக்கும் என்ன சம்மந்தம் என்றே தெரியவில்லை!

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஒரு தீவிர ரசிகர், கேஎஸ்ரவிகுமார் டச்சே இல்லியே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். தெரிந்த ஆளாயிருந்தால் சொல்லி இருப்பேன், நான் மகிழ்ச்சி அடையறதே அதுக்குதான் சார் என்று :-)

சுரேகா எழுதி இருந்தார் - எந்த முன்முடிவும் இல்லாமல் போனால், 3 மணிநேரம் மெகா எண்டர்டெயின்மெண்ட் என்று - அதை நிச்சயம் வழிமொழிகிறேன்.

Jun 11, 2008

ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும் இன்னபிற பிரபலங்களும் (11 Jun 2008)

அடர்கானகத்தில் திறந்திருக்கும் வாய்
 
மரத்தின் வெளியே
வெளிச்சம் மறைக்கும் தழைகள்.
சத்தம் உணர்த்தும் சருகுகள்.
எங்கோ ஓடிச்செல்லும் முயலின் ஈன ஒலி.
சிங்கங்கள் துரத்தலாம்
மான்கள் மருளலாம்
இக்காட்டின் ஏதோ ஓர் மூலையில்.
அலுத்துக் காத்திருக்கும்புலிக்கு
நேற்று அருந்திய பியர் போத்தல்
எட்டி உதைக்கும் பொம்மை ஆகலாம்.
பசித்திருக்கும் வயிறுகளும் உண்டு.
சிவாஜிக்கு மட்டும்தானா?
இவ்வாய்க்கும் ஜிலேபிகள் தரப்படலாம்.
அதை இலவசமென்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் நீங்கள்.
 
***********************

சிவாஜி வாயிலே ஜிலேபி..

"இதான் க்ளூவா?" இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் தன் சட்டைப்பையினின்றும் எடுத்த கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவண்ணம் கேட்டார்.

"ஆமாம் சார். அந்த யங் சாப் அப்படித்தான் தன் கையிலே பச்சை குத்தியிருந்தான்" சொன்னார் சிலம்பரசன் ஐ பி எஸ்.. சத்தியிலிருந்து மாற்றலாகி வந்திருந்தார். புது ரெக்ரூட்மெண்ட்.

"இறந்தவர் பேரு என்ன?"

"வாகீசன் சார். ஆர் எஸ் புரத்துல தங்கி இருக்கார். இண்டஸ்ட்ரிஸ்ட்"

"எப்படி இறந்தார்?"

"பாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் ரிசல்ட் இன்னும் வரலை.. ஆனா உடம்பெல்லாம் நீலம் பாரிச்சிருந்தது சார்"

"லாஸ்ட் வீக் இதே ஏரியாவுல ஒரு கொலை நடந்ததே.. அதுல இறந்தவர் பேர் என்ன?"

"ஜியா மொகித்தீன் சார்.. அவரும் புட் பாய்சனிங் தானாம் சார்"

".. ம்" கோகுல்நாத் இன்னும் விவேக்கைக் கூப்பிட முடிவெடுக்கவில்லை..

"ஸ்வீட் சாப்பிடறீங்களா சார்.. பக்கத்துக் கடையில ஆனிவர்ஸரியாம்.. அதுக்காகக் கொடுத்துட்டுப் போனாங்க.."

கோகுல்நாத் துல்லியமாக அதிர்ந்தார்..

"சிலம்பரசன்.. அந்த ஜிலேபியச் சாப்பிடாதீங்க..

இன்னுமா உங்களுக்கு க்ளூ புரியல?

சிலம்பரசன் - வாகீசன் - ஜியா மொகித்தீன் -மூணு பேரையும் ஜிலேபி கொடுத்து கொல்லறதா ப்ளான் போட்டிருக்கான் அந்த ப்ளாகாட்!"
 
*******************
ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும்
 
கவுஜயிலே இருக்கற வகைங்களே போதும்னு பொறவிக்கவிஞனான நானும் நினைச்சுப்புட்டா, அண்ணாச்சிக்கு சரக்கு தீந்து போச்சுன்னு அபுதாபிக் கடைங்கள்லே சரக்கை வாங்கி அனுப்புவான் வளர்ந்துவரும் இலக்கியவாதி.. இருக்கற சோகம் போதாதுன்னு இதையும் ஒரு சோகமாக்கி அய்யனார் சோக கீதம் பாடுவான். கோட்டிக்காரங்க அப்படித்தான் பண்ணுவாங்கன்னு விட்டுத் தொலைக்கலாம்  சவத்தைன்னு விட முடியுதா? நம்ம மனசாட்சி நம்மளைக் கேள்வி கேக்காது?  அப்புறம் ஜெமோவுக்கும் சாத்தான்குளத்தானுக்கும் என்ன வித்தியாசம்?
 
இந்தப் புது வகைக் கவுஜைக்கு சரி ரியலிஸம்னு பேரு..எதைச் சொன்னாலும் சரி இருக்கற ஆளுங்கதானே நம்ம ஊர்லே பெரும்பான்மை.. அந்த ஒடுக்கப்பட்ட இனத்துக்காக பாடுபடும் கவுஜை இது!
 
சிவா
ஜி
வாயி
லேஜி
லே
பி.
 
இந்தக் கவுஜைய எவனாச்சும் திறனாய்வு செஞ்சு பின்னூட்டம் போட்டா வெளியிடவே மாட்டேன்.. ஆமாம் சொல்லிபுட்டேன்.
 
************************
அவனுக்கென்று ஒரு ஜிலேபி
 
'மட சாம்பிராணி.. ஒரு பெண்ணை இந்த இடத்திலா நிற்க வைப்பது? ' போவோர் வருவோர் பார்வையெல்லாம் தன்னையே துளைப்பதாக எண்ணிக் குன்றிப்போனாள் ரம்யா. போர்ட்டர் ஒருவன் இடிக்க வந்தபோது இயலாமைச் சினத்தில் துடித்தாள்.

காலையில் அப்பா சொன்னாரே..'என் பெண் சமத்து. எந்த இடத்திலும் தன்னிலை உணர்ந்து நடந்து கொள்வாள்' இங்கே அதெல்லாம் முடியாது என பெருமூச்செறிந்தாள்.

வாயிலுக்குச் செல்லலாம். அங்கேயாவது இந்த அருண் ராஸ்கல் வந்திருக்கிறானா என்று பார்க்கலாம்.

டிக்கட் கேட்ட பரிசோதகரிடம் சீசன் டிக்கட்டைக் காட்டி வெளியே வந்தாள். சி எஸ் டி டெர்மினல் வாசல் ஆட்டோக்காரர்கள் 'வரீங்களா அம்மா' என்று கேட்டதற்கு தலையசைத்துவிட்டு முன்னேறினாள்.

அருண் வேகமாக வந்தான். "டார்லிங், நம் கஷ்டம் எல்லாம் தீந்துது.. இந்தா இனிப்பு சாப்பிடு" என்று வாயிலே ஒரு இனிப்பையும் திணித்தான்.

'என்னது இது.. நான்குபேர் போகிற வருகிற இடத்திலா சாப்பிடுவது?'

' அதனால் என்ன சிவாஜி (டெர்மினஸ்) வாயில்லே ஜிலேபி' என்று ஜோக்கடித்தான் அருண்.

 
***********************
பி கு 1: இந்த சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தொடர் விளையாட்டை ஆரம்பித்து வைத்த புண்ணியவானை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். இன்ஷ்யூர் செய்துகொண்டு வரவும்.
 
பி கு 2: இலவசக்கொத்தனாருக்கும் இன்ஷ்யூரன்ஸ் பரிந்துரைக்கிறேன்.
 
பி கு 3: ராஜேஷ்குமாரும் ரமணி சந்திரனும் கோவிச்சுக்க மாட்டாங்க.. மத்தவங்க கோவிச்சுக்கிட்டாலும் கவலையில்லை :-)
 
பி கு 4: இன்னும் மூணு பேரைக் கூப்பிடணுமாமே - சாத்தான்குளத்தான், அடர்கானகப் புலி, வளர்ந்துவரும் இலக்கியவாதின்னு எங்க லோக்கல் லேயே முடிச்சுக்கிறேன்.
 
பி கு 5: ஒரு மெகா ப்ராஜக்ட் தயாராகி வருகிறது. குவிஸ் மற்றும் பரிசுப்போட்டி. அடுத்த வாரம் ரிலீஸ்.
 
பி கு 6: தசாவதாரம் முதல்நாள் முதல் காட்சிக்கு புக் செய்தாகிவிட்டது. சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்)
 

Jun 3, 2008

கலைஞர்85-IPL-தசாவதாரம்-மக்கள்-ரோஸ்-300

கலைஞரை எந்த விஷயத்துக்காக பாராட்டுகிறோமோ இல்லையோ, ஒரு விஷயத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது - எப்படித்தான் இடைவிடாது 6 மணிநேரம் தொடரும் முகஸ்துதியை, முகஸ்துதி செய்பவர் நோக்கங்கள் அறிந்தும் (அறியாதவராகவா இருக்கமுடியும்?) கேட்டுக்கொள்ளும் தலையெழுத்தை விரும்புகிறார் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறாரே!

சரி போகட்டும்.. வாழ்த்த என்ன வயசு தேவைன்னு எங்கேயும் தெளிவாச் சொல்லி இருக்கறதா தெரியல.. எனவே என்னுடைய வாழ்த்துகளும் உரித்தாகுக!

இன்னொரு அதிசயிக்கத்தக்க குணம், மக்களின் மறதி மேல் வைத்துள்ள அசையாத நம்பிக்கை! ஹொகேனக்கல் விவகாரத்தில் ஏப்ரலில் (இதே வருடம்தான்) கொடுத்த அறிக்கைக்கும், இப்போது கொடுத்துள்ள அறிக்கைக்கும் அந்த நம்பிக்கையைத் தவிர வேறு காரணமே இருக்க முடியாது. அந்த நம்பிக்கையிலும் பெரிய தவறிருப்பதாகத் தெரியவில்லை - யாருமே கண்டுகொள்ளவில்லையே!

நான் இப்ப ஊகிக்கிறேன்.. அடுத்த பிறந்தநாளுக்குக் கூட ஆந்தைகளும் கழுகுகளும் சொல்ற ஸ்கூப் எதுவும் நடக்காது! எதிர்பார்ப்பும் ஊடகத்துக்குதான், ஏமாற்றமும் அவங்களுக்கு மட்டும்தான் போல :-)

***************
சென்னை என்ற பெயரைத் தவிர வேறெதும் சென்னையாக இல்லாவிட்டாலும், பெயருக்காகவே ஆதரிக்கத் தொடங்கின அணி, தொடர் தோல்வி கண்டதும் கட்சி மாறினதாக அறிவித்தேன். (உள்ளூற இன்னும் சென்னைதான்).. இறுதிப்போட்டியில் எப்படியும் எனக்குத் தோல்வி இல்லை என்ற நிலை :-)

செமிபைனல்கள் பட்சபாதமாக இருந்தாலும் பைனல் பயங்கரம்! கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை வந்த ஆட்டத்தில் யார் ஜெயித்தாலும் அதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். லீக் போட்டிகளில் முடிசூடாமன்னர்களாய் இருந்த ராஜஸ்தானுக்கு கோப்பையைக் கொடுத்தாலும் நல்லா பெண்டு கழட்டிதான் கொடுத்தாங்க!

மும்பை செமிபைனல் வருவதற்காக பட்டபாடுகளில் பிக்ஸிங் இருந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கிறேன். அதுவரை கொஞ்சம்கூட ஆடாத ஆட்கள், சச்சின் வந்தவுடன் கலக்குவார்களாம் - நம்பமுடியவில்லை!

*****************
தசாவதாரம் முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்று தினம் தினம் தியேட்டர்காரனுக்கு போன் செய்துகொண்டிருக்கிறேன்.. வெறி எல்லாம் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருப்பதும், அதை ட்ரெய்லரும் தினம் தினம் மாறும் ரிலீஸ் தேதியும் தூண்டிவிட்டிருப்பது உண்மை.

தசாவதாரத்தில் என்ன இருந்தால் ஏமாற்றம் அடைய மாட்டேன்?

1. பத்து வேடத்துக்கும் சொல்லிக்கொள்ளும்படியான முக்கியத்துவம்.

2. பத்து வேடங்களும் கமலே ஏற்கவேண்டிய வலுவான காரணம் (ரங்கராஜோட பாட்டி கிருஷ்ணவேணி என்பதுபோல)

3. கிரேஸி ப்ராண்ட் நகைச்சுவை

4. புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியாமல் என்னைப்போன்றவர்களுக்கும் புரியும் அளவுக்கு நுணுக்கமான காட்சி அமைப்பு

5. அப்பா போரடிக்குது என்று என் பெண்ணை எழுப்பவைக்காத திரைக்கதை

**************************
வீராச்சாமி, மன்னிக்கவும் விஜய டீ ராஜேந்தரின் வீராச்சாமியின் கடைசிக்காட்சி அலுவலகத்தில் இருந்து திரும்ப வந்து அகஸ்மாத்தாக தொலைக்காட்சியைப் போட்டதில் கண்டேன். ஒரு காட்சியிலேயே முழுப்படம் பார்த்த திருப்தியை அடைந்தேன். டீ ஆர் செத்ததும் மும்தாஜும் காலடியிலேயே விழுந்து சாகிறார்..

நிச்சயம் ஸ்பெஷல் எபக்ட்ஸ் உபயோகப்படுத்தியிருக்கவேண்டும்.. சாக்ஸ் நாற்றத்திலிருந்து தப்பமுடியாத தூரத்தில் மூக்கை வைத்துக்கொண்டு செத்தது போன்ற காட்சியில் நடிப்பது என்ன சும்மாவா?

பூவோடு சேர்ந்த நாரும் மணந்தது.. எல்லாப்படத்திலும் தன் வேடத்தைக் கலக்கலாக நடிக்கும் எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு!

*********************
மக்கள் தொலைக்காட்சியுடைய நோக்கம் சரியாகத் தெரியவில்லை. எந்த நேரம் போட்டாலும் எப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரஸ்யமே இல்லாமல் செய்ய வல்ல காம்பியர்கள், நாக்குடைக்கும் தமிழில் பேசி உடனே சேனலை மாற்றவைக்கிறார்கள். சினிமா நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், பொழுதுபோக்கு அம்சம் வேறெதுவும் இல்லாமல் நல்ல பெயரை மட்டும் வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறார்கள்?

*******************

இளாவின் பதிவில் இப்படிக்கு ரோஸ் பார்த்தேன். மூவிங்! வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

********************

இப்படியாக 300ஆம் பதிவு எழுதி முடிக்கப்பட்டது..

 

blogger templates | Make Money Online