வழங்குகிறோம்:  பினாத்தல்  டாப் டென்  மூவீஸ். 
 
இது  இந்த வருடம்  வெளியான சில  படங்களைப்  பற்றிய  எங்கள்  விமரிசனக்குழு கணிப்புகள்.  தமிழ்நாட்டில்  வெளியானவை  பற்றி  மட்டுமே இந்த  கணிப்புகள் வெளியிடப்படுகின்றன;  விமரிசனக்குழுவைப்  பாதித்த  எல்லா படங்களும்  இந்த  வரிசையில் இருக்கின்றன  - ஆனால்  எந்தப்படம்  சிறந்த படம்  என்று வரிசைப்படுத்தப்படவில்லை.
 
1.அபியும்  நானும்:
 
தாத்தா  பக்கமா பேரன்  பக்கமா என்று  திண்டாடும்  ஆவி, கோலங்கள்  அபியினால்  ஒரு பக்கம்  சாயும் கதை. லூஸ்  போன்ற  சிறுவர்களை  வைத்து  மதுரையைக் கிண்டல்  அடித்தாலும், தாத்தா  வேட்டியினால்  வந்த  பிரச்சினைக்கு  ஞானத்தை பலி  கொடுக்கும்  காட்சி  உருக்கம். க்ராபிக்ஸ்  மூலம் உயரமாக  ஒல்லியாக  மாறும் நாயகன், பழைய  க்ளிப்பிங்ஸை  வைத்தே பொக்கிஷமாக  மக்களைக் கவர  முயற்சிக்கிறார்  - ஆனால்  முடிந்ததா  எனத்  தெரியவில்லை. எதிர்பாராத  திருப்பமாக  தாத்தாவும்  பேரனும்  சேர்ந்துவிட, கழுகார்  கேட்கும்" நான் யார்  பக்கம் என்று  உங்களுக்காவது  தெரிகிறதா" என்ற  க்ளைமாக்ஸ்  காட்சி  செண்டிமெண்டாக எடுத்திருந்தாலும்  சிரிப்பலைதான்  பரவுகிறது! 
 
அபியும்  நானும் - அலங்கோலங்கள்!
 
2. சில  நேரங்களில்:
 
ஊர்ப்பெரியவர்  ஒருவர்  அடுத்த  ஊர்ப்பிரச்சினையில்  சில  நேரங்களில்  சில மாதிரி முடிவெடுக்கும்  உளவியல்  ரீதியான கதை. சில  நேரங்களில்  அவர்  உணர்ச்சிவசப்பட்டு உயிரையும்  கொடுப்பேன், பதவியைத்  துறப்பேன்  என்கிறார் - அடுத்த  காட்சிகளிலேயே  - கைகோத்தால்  போதும், ஏன்  உயிரை  விடவேண்டும்  என்கிறார். அடுத்த  ஊர்ப்  பிரச்சினையைப் பற்றிப்  பேசினால்  தண்டனை  கொடுப்பேன்  என்கிறார்  சில  நேரங்களில், உணர்ச்சி  வசப்பட்டு பேசுவது  கூடத் தவறா எனக்  குமுறுகிறார்  சில  நேரங்களில். அத்தனை  சில நேரத்து முடிவுகளுக்கும் காரணம்  மேலூரில்  இருக்கும்  பதினெட்டுப்  பட்டி  பஞ்சாயத்துதான்  எனத் தெரியும்  காட்சிதான்  க்ளைமாக்ஸ் - ஆனால்  அதையும்  ஊகித்துவிட  முடிவதால்  சுவாரஸ்யம் இல்லை.
 
சில  நேரங்களில் - சில  பேரங்களில்!
 
3. பிரிவோம்  சந்திப்போம்:
 
பச்சைத்  துரோகம்  செய்திருந்தாலும்  நாயகனோடு  வேறு  வழியில்லாமல்  நட்பாக இருக்கும்  நண்பனைப்  பற்றிய கதை. நாயகன்  வேறு  வழியின்றி  பிரிவதாக  அறிவிக்கும்  சோகமான காட்சி  - எதிர்பார்த்திருந்தாலும்  கண்ணீரை  வரவழைக்கிறது.  தன்னைத்  திட்டிய  நண்பனின் ஆள்  பேசிய சிடி  கிடைத்ததும்  கோபமாக  நண்பனின் குருவைச்  சிறையில்  அடைக்கிறார்  நாயகன். பட  முடிவில்  நாங்கள்  எப்போது  பிரிந்தோம், புதிதாகச்  சந்திக்க  என்று காமெடி செய்கிறார்.  நடுவில்  ஏற்பட்ட  மாற்றம் என்ன, குருவை  ஏன் சிறையில்  அடைத்தார், ஏன் விடுதலை  செய்தார், நண்பனின்  நிலை என்ன  என்பதெல்லாம்  தெரியாமலேயே  படம் முடிகிறது. 
 
பிரிவோம்  சந்திப்போம் - சந்திப்பார்களா? சந்தி சிரிப்பார்களா?
 
4.பிடிச்சிருக்கு:
 
வேறு  வழியில்லாமல்  நாயகியைப்  பிடிச்சிருக்கு  என்றே படம்  முழுக்கச்  சொல்லி வரும்  நாயகனின் கதை.  ஏன்  பிடிச்சிருக்கு, எப்படிப்  பிடிச்சிருக்கு  என்பதெல்லாம் யாருக்கும்  தெரிவதில்லை. இத்தனைக்கும்  நாயகி கொஞ்ச  நாள்  முன்னால் நாயகனைச்  சிறையில் அடைத்தவள்.  வெளியூருக்காக  பாடுபட்ட  நாயகன், நாயகிக்குப்  பிடிக்காது  என்பதால் அதையும்  அடக்கி  வாசிக்கிறான்.  விடியோ  கவரேஜ் இல்லை  என்பதால்  சண்டை போட்ட நாயகனுக்கு அபரிமிதமாக  விடியோ  கவரேஜ்  கிடைத்தாலும்  நாயகி "பிடிச்சிருக்கு"  என்பதால்  எதையுமே உபயோகப்  படுத்திக்  கொள்வதில்லை. குழப்பமான  கதை!
 
பிடிச்சிருக்கு  - என்ன  பிடிச்சிருக்கு?
 
5.ஆயுதம்  செய்வோம்:
 
வேறு  யாரும்  ஆயுதம்  செய்யக்கூடாது, தாங்கள்  மட்டும்தான்  செய்வோம்; நாங்கள் சொல்லும் ஆளோடுதான்  செய்யவேண்டும்  என்றெல்லாம்  நிபந்தனை  வைத்து  கூட்டாளிகளைக் கவிழ்க்க  நினைக்கும்  தோழர்களின்  முழக்கம். எதிராளிகளைக்  கவிழ்க்க  முடியாத  நிலையில் ஆயுதம்  செய்ய  கூட்டுக்கு  ஆள்  தேடுகிறார்கள்  - இதோ எங்கள்  அணித்தலைவன், இவர்தாண்டா மதச்  சார்பற்ற  தலைவி என்று  பண்ணும்  காமெடி  இரண்டாம் பாதியை  ரசிக்க  வைக்கிறது. 
 
ஆயுதம்  செய்வோம் - காமெடி  கீமடி  பண்ணலியே?
 
6.ஆனந்த  தாண்டவம்:
 
தோற்றாலும்  அதைப்பற்றிக்  கவலைப்படாமல், அடுத்த  முறைக்கு  வேறு  நாதியில்லை  என்று ஆனந்த  தாண்டவம்  ஆடும்  அம்மணியின்  கதை. மும்பையில்  குண்டு  வெடித்தாலும்  மூவரசம்பட்டு சாக்கடை  அடைத்தாலும்  மைனாரிட்டி பஞ்சாயத்து தலைவர் வெளியேறினால்  போதும் என்ற சர்வரோக  நிவாரணியே  துணை என்று  வாழ்கிறார் அம்மணி.  ஓய்விலேயே  செல்லும்  முதல்பாதி, ஓய்விலேயே  இருந்திருக்கலாம்  என நினைக்க வைக்கும்  இரண்டாம்  பாதி; படம்  முடிவு வரை க்ளைமாக்ஸ்  தேர்தல்கள்  வராததால்  சொதப்பல்.
 
ஆனந்த  தாண்டவம் - ஓவரா  ஆடாதீங்கம்மா!
 
7.சரோஜா:
 
படத்தின்  பெயருக்கு  வித்தியாசமான  விளக்கம்  கொடுத்திருக்கிறார்கள்  - சத்தியமூர்த்தி  பவன் எதிரே ரோட்டில்  நடக்கும் ஜாலியான  சண்டை என்று. இந்தப்படம்  வழக்கம்போலவே  பல  இயக்குநர்களால் குதறப்பட்டு  இருந்தாலும், எப்போது  படம்  சூடுபிடிக்கும், எப்போது  டல்லடிக்கும் என்பது  எதிர்பார்க்க  முடியாமல்  இருந்தது. அவ்வப்போது  ஊர்ப்பெரியவரோட  சண்டை பிடிப்பது  மாதிரி  தெரிந்தாலும்  அம்மா சொன்னவுடன்  அமைதியாகிறார்கள்  நாயகர்கள்; திடுதிப்பென்று  செத்துப்போன  அப்பா ஞாபகம்  வந்து போடு.. எல்லாரையும்  ஜெயில்ல போடு என்று  மிரட்டுகிறார்கள்  ஊர்ப்பெரியவரை.  எனக்கு  ஆறு மாசம், உணக்கு  மூணு வருஷம் என்பது  போல பஞ்ச்  டயலாக்குகளும்  உண்டு.
 
சரோஜா - சறுக்கும்  ரோஜா!
 
8.அஞ்சாதே:
 
26 நவம்பர்  வெளியீடு. நிறைய  காரக்டர்கள், எது  எங்கே  எப்போது  எப்படி  நடந்தாலும் அதை  வைத்து நம்  கொள்கையை  வலுப்படுத்திக்  கொள்ள  அஞ்சாதே  என்பதுதான்  கதையின் நாட்.  எதிரி  நம் மேல  குண்டு  போட்டாச்சு, எதிரி  மேலே ஏன்  இன்னும்  குண்டு  போடலைன்னு கேட்க அஞ்சாதே, 16 வருஷம்  முன்னாடி நீ  போட்ட  கடப்பாரைக்கு  இந்த குண்டு  சரியாப்போச்சு என்று  சொல்ல  அஞ்சாதே,  ஏன்  பணக்கார  செத்தவனை  மட்டும்  கவனிக்கிறே என்று  திசைதிருப்ப அஞ்சாதே, ஒருத்தனை  சாகடிக்கத்தான்  200 பேரைக்  கொன்னாங்க  என்று சொல்ல  அஞ்சாதே - எனப் பல  அஞ்சாதேக்கள்.  விறுவிறுப்பாக  போனாலும்  வெறுவெறுப்பாக  முடிகிறது - யாரும் எப்போதும்  மாற  மாட்டார்கள்  என்பதை  வலியுறுத்தும்  கதை!
 
அஞ்சாதே - அஞ்சாமல்  இருக்க  முடியாதே!
 
9.குசேலன்:
 
பங்கு  பிரித்த  பிறகு ஏழையாக  மாறிவிட்ட  குசேலன், குபேரன்  மீது  போர்தொடுத்து, அவனை  நல்வழிப்படுத்தும்  கதை. குபேரன்  வேறு வழியில்லாமல்  எதிர்க்கட்சியை ஆதரிப்பதும், அது  குசேலனுக்கு  இன்னும்  கோபத்தை  உண்டுபண்ணுவதும்  விறுவிறுப்பான காட்சிகள்.  க்ளைமாக்ஸில்  குபேரன்  குசேலனுக்கு  செட்டில்மெண்ட்  செய்து  கண்கள் பனிக்கின்றன; ஆண்டி  க்ளைமாக்ஸாக  போரில்  இருபுறமும்  உதவியவர்கள்  நடுங்கிக்கொண்டு இருக்கும்  காட்சி  நகைச்சுவையா  சீரியஸா எனத்  தெரியவில்லை.
 
குசேலன் - மாடி  வீட்டு ஏழை!
 
10. தசாவதாரம்:
 
எனக்கு  யார்  கூட்டும்  தேவையில்லை, நானே  எல்லா  அவதாரமும்  எடுப்பேன்  என்று சொல்லும்  அணித்தலைவன், இன்றாவது  நம்முடன்  கூட்டு என்று  வயிற்றில்  பால்வார்ப்பாரா எனக்  காத்துக்கிடக்கும்  மேலூர்ப்  பெரிசுகளை  அலட்சியப்படுத்துகிறார்.  தப்பு - இங்கே எல்லாரும்  தப்பு - நான்  மட்டும்தான்  சரி என்று  பஞ்ச் டயலாக்  விடுகிறார்; வாரம்  ஒரு ஊருக்குச்  சென்று  விளையாட்டு  காட்டுகிறார்.  வாரிசுகளை  ஒழிக்கணும்  என்று  மனைவியை வைத்தும்  பஞ்ச் டயலாக்  விடுகிறார். ஊரில்  உள்ள மற்ற  பெரிசுகள்  எல்லாம் இவரை  பாம்பு என்று  அஞ்சுவதா, பழுது  என்று  மிதிப்பதா  என்று  புரியாமல் டரியல்  ஆகிறார்கள். 
 
தசாவதாரம் -  பத்துக்கு  ரெண்டு  தேறும்!
