Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Jan 20, 2014

கரும்புனல் - Pre-Production விமர்சனங்கள்

இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்தபோதே பார்த்துக்கொண்டிருந்த இவர்கள் விமர்சிக்கிறார்கள். இவர்களால் நாவலில் சில மாறுதல்கள் நடந்தனதான். ஆனாலும் பல நல்லவிஷயங்களை இவர்கள் சொல்லியும் என் கனத்தமண்டை ஏற்கவில்லை :-)

இலவசக் கொத்தனார்:

இது பெனாத்தலின் முதல் நாவல் அல்ல. ஆனால் அவன் இது வரை எழுதியவைகளில் இந்தக் கதை கொஞ்சம் ஆத்மார்த்தமானது. ஏனென்றால் அவன் வாழ்க்கையின் பல சம்பவங்கள் இக்கதையிலும் வருவதுதான் காரணம். 

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும் இவன் சித்திரிக்கும் அதன் இந்த முகம் நான் அறியாத ஒன்று. சினிமா, மென்பொருள் எனத் தெரிந்த துறைகள் சார்ந்த புத்தகங்கள் சில தமிழில் வந்திருக்கின்றன. பெரும்பாலும் மேலோட்டமாக, பொதுவான கருத்துகளுக்கு பங்கம் வராதபடி எழுதப்பட்டவை என்றே தோன்றக் கூடிய புத்தகங்கள். ஆனால் நிலக்கரிச் சுரங்கங்களை பின்புலமாக வைத்துக் கொண்டு இவன் பின்னி இருக்கும் கதையும் சரி, அந்தக் களனும் சரி, தமிழுக்குப் புதிதே.

உபிச என்ற தகுதியால் எழுதிய உடனே, எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே என்று கூட சொல்லலாம், படித்துவிட்டேன். துறை சார்ந்த விஷயங்களை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்லி இருக்கலாம் என்ற ஒன்று மட்டுமே என் விமர்சனம். அது கதையின் போக்கை தேங்கச் செய்யும் என்பதுதான் பதில் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் விந்திய மலைப்பகுதியில் மருந்து விற்கும் நாஞ்சிலின் ஹீரோ திடீரென்று புறநானூற்று மேற்கோள் காட்டவில்லையா? அதைப் போல இன்னும் பல தகவல்கள் சேர்த்திருக்கலாம்.

கதைக்களனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விறுவிறுவெனப் படிக்கக்கூடிய நாவல். எழுதியவன் என்னவன் என்பதையும் தாண்டி வாங்கிப் படிக்க என் சிபாரிசு இந்தப் புத்தகம்.

Suresh Babu புத்தகக்கண்காட்சியில் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்டா!



என். சொக்கன்:

எஞ்சினியரிங்கில் நான் படித்ததும் (கிட்டத்தட்ட) மெக்கானிக்கல் நுட்பங்கள்தான். ஆனால் நான் சரியான மக்கானிக்கலாக இருந்தபடியால், வன்மையற்ற மென்பொருள் துறைக் கரையில் ஒதுங்கிவிட்டேன்.

(பெனாத்தல்) சுரேஷ் அப்படியில்லை. தைரியசாலி. வன்பொறுப்புகள் பலவற்றை ஏற்றுத் தாண்டி முன்னுக்கு வந்தவர்.

அவருடைய அனுபவங்களை அவ்வப்போது சொல்வார். சிலது காமெடியாக இருக்கும், பலது நம்பமுடியாமல் இருக்கும். ‘நல்லா ரீல் விடறார்’ என்று நினைத்தபடி, ‘சூப்பரா எழுதறீங்க’ என்போம்.

பின்னர் ஒருநாள், த்ரில்லர் நாவல்கள் இரண்டு எழுதினார். விறுவிறுப்புக்குக் குறைவில்லாத நல்ல பல்ப்புகளாக அவை இருந்தன. ரசித்துப் படித்தேன்.

அடுத்து, அதற்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு நாவல் எழுதினார். இதிலும் விறுவிறுப்பு இருந்தது. ஆனால் அவர் சொன்ன அந்த ‘வன்’ அனுபவங்கள் இதில் ஏராளமாக இடம் பெற்றிருந்தன. ஒரு புதிய களம், வித்தியாசமான மனிதர்கள், அவர்களுடைய உணர்வுகள் என்று கலவையாக இருந்தது. இவர் சொன்னதெல்லாம் நிஜம்தானோ என்று நினைக்கும்படி எழுத்து.

அப்போதுதான் அவரிடம் கேட்டேன், ‘என்னய்யா, இலக்கியவாதி ஆகற உத்தேசமா?’

‘ஏன்? அவ்ளோ மோசமாவா இருக்கு நாவல்?’ என்றார் சட்டென்று.

நல்லவேளை, அவர் ஒழுங்காகதான் இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். கொஞ்சம் அசந்தாலும் வறட்சி தாக்கிவிடக்கூடிய ஒரு சப்ஜெக்டை வாசிக்கும் சுவையோடு தருவது சாதாரண விஷயமில்லை. சுரேஷ் அதைச் சாதித்திருக்கிறார் இந்த நாவலில்.

இதற்குமேல் பேசினால் கதையைச் சொல்லிவிடுவேன், சொன்னாலும் பிரச்னையில்லை என்பது வேறு விஷயம், இந்த நாவலின் பலம் எழுத்தில்தான், முடிச்சில் அல்ல.

ஆகவே நண்பர்காள், பெனாத்தல் சுரேஷ் என்று நீங்கள் அறிந்த ராம்சுரேஷின் நாவல், ”வம்சி” பதிப்பக வெளியீடாக வந்துள்ள ’கரும்புன’லை நீங்கள் நம்பிக் குடிக்கலாம், ஐ மீன், படிக்கலாம். (மனப்) ப்ரீத்திக்கு நான் கேரண்டி.



டைனோபாய்:

கரும்புனல் (நாவல்):

ஒரு நாவல் எழுதும்போதே படித்து பார்ப்பது தனி சுவை! ஒரு எழுத்தாளர் அடுத்து தன் பாத்திரங்களை எங்கே செலுத்துகிறார், எப்படி காட்சிகள் மாற்றி சுவாரஸ்யங்களை கூட்டுவார் என்று ஒரு காத்திருப்பு நமக்குள் தொற்றிக்கொள்ளும். இதனாலேயே வார பத்திரிக்கைகளில் வந்த பல கதைகள் சென்ற தலைமுறையினரை தீவிர வாசகர்களாக மாற்றி இருந்தது என்றே எண்ணுகிறேன். தோசைக்கல்லில் அடுத்த தோசை வார்க்கும் போதே அவசரமாய் சாப்பிட்டுவிட்டு அடுப்பையும் அம்மா முகத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சுவாரஸ்யத்தை வழங்கிய (பெனாத்தல்) (ராம்)சுரேஷுக்கு நன்றி!

சுரேஷின் முந்தைய நாவல்களிலும் கதைகளிலும் இல்லாத முக்கியமான விஷயம் கதையின் டீட்டெயிலிங். புதிய களனில் பேருந்துகளில்புகைவண்டிகளில் புகை கக்கிக் கொண்டிருக்கும் ஆலைகளுக்குள் நம்மை அழைத்து செல்கிறார்! அங்கு ரத்தமும் சதையுமாய் வாழும் மனிதர்களையும் அவர்களின் இயந்திர அழுக்குப்படிந்த இதயங்களையும் அங்கங்கே பூதக்கண்ணாடியில் அருகில் காட்டி அச்சுறுத்துகிறார்! இது ஏதோ வட இந்தியாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நடைபெறுவது மட்டுமல்ல. நம் அலுவலகங்களில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அழுக்குகளைத்தான் பெரிதாக்கி நம் முன்னே கொண்டுவருகிறது கரும்புனல். களம் புதிது, பாத்திரங்கள் புதிது என்றெல்லாம் பல நற்குணாதியங்கள் இருந்தாலும் நம்முள் இருக்கும் மனச்சாய்வுகளை விளக்கும் போது முகத்தில் அறைந்தாற் போன்ற உணர்வே ஏற்படுகிறது!

இது சுரேஷின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களில் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார். அப்படியென்றால் அலுவலகத்தில் மறைந்திருந்தது அவர்தானா? அந்தத் தருணங்களை விளக்கும் போது நமக்கு வியர்க்கிறது! தப்பி ஓடும் இடங்களில் நம் இருதயமும் படபட்ப்புடன் பதைபதைக்கிறது. உயிர்கள் துண்டாடும் போது கண்ணெதிரே உதிரம் கொட்டுவதைப்போல முதுகுதண்டு சில்லிடுகிறது! இப்படி வாசகனையும் தன்னோடு சேர்த்து பயணிக்கவைப்பதுதான் எழுத்தாளரின் வெற்றி!

இந்த கதையை அவர் எழுதிய போதே இதை ஒரு திரைக்கதையாக எழுதச்சொன்னேன்! ஏனோ அது நடக்கவில்லை! ஒரு நல்ல திரைக்கதைக்குரிய அனைத்து மூலகங்களும் இந்த நாவலில் இருக்கிறது! சில பாத்திரங்களின் பின்கதையையும் ஆலையினைப்பற்றியும் சில கதாபாத்திரங்களின் விவரணைகளையும் இன்னும் செழுமை படுத்தி இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்! இந்த நாவலுக்காய் பல விஷயங்களை தேடி தன் எழுத்தை செழுமைப்படுத்தினார்! வெளிநாட்டில் இருந்து மண்ணின் மணம்கமழும் ஒரு நாவலை படைப்பது கடினமானதுதான்.

ஆனால் இந்த ஒரு நாவல் நமக்கு ஒரு புதிய சுரேஷை காட்டி இருக்கிறது! சுரேஷின் பலம் இத்தகைய கதைகளில்தான் இருக்கிறது! இது அவருக்கு ஒரு புதிய கதவுகளை திறக்கும் திறவுகோலாவே பார்க்கிறேன்! தன் அடுத்த நாவல்களிலும் படைப்புகளிலும் மேலும் செம்மையான படைப்புகளை வழங்கலாம்!

நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் கரும்புனல் எந்தவித பெரும் விளம்பரமும் இன்றி நல்ல விற்பனையை ஈட்டி இருக்கிறது! நாவலின் நம்பகத்தன்மையும் சுரேஷின் நடையுமே இதற்கு முக்கிய காரணம்.

***

படம் நன்றி டைனோ + - http://media2.artspace.com/media/sebastiao_salgado/coal_mining_dhanbad_bihar_india/sebastiao_salgado_coal_mining_dhanbad_bihar_india_1024x768.jpg

Jan 13, 2014

கரும்புனல் - விமர்சனம் - சித்தார்த்

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்த கட்டுரைக்கான குறிப்புகள் இவை. இனியும் இதை தள்ளிப்போட வேண்டாமென குறிப்புகளாகவே பகிர்கிறேன்… [சுரேஷ் மன்னிப்பாராக]


கங்குல் வெள்ளம் : கரும்புனல் குறித்து.

* இது மிக சம்பிரதாயமான, தேய்வழக்கான ஒரு வரியாக தோணலாம். ஆனால் உண்மையிலேயே, கரும்புனல் நாவலை வாசித்த இரவு சரியாக தூக்கம் பிடிக்கவில்லை. அப்படி ஒரு அலைகழிப்பு மனதில். மனித மனதின் ஆகக்கரிய பகுதி ஒன்றை சந்தித்துவிட்டு திரும்பிய அயற்சி. 

* நாவலில் அத்தனை களங்களுமே எனக்கு புதியது. ஆனால் மிக எளிமையாக, அதிக அந்நியத்தன்மை தோன்றாதவாறு அவற்றை அறிமுகம் செய்கிறார் சுரேஷ்.

* இந்நாவலின் அடிப்படை கட்டுமானத்தை coming of age வகையாக கொள்ளலாம். அனுகுண்டே வெடித்தாலும் அரை வரிக்கு மேல் உணர்ச்சிவசப்படாத (நன்றி : ஜெயமோகன்) இளைஞன் வெடித்தழும் இடத்தில் நாவல் முடிகிறது. இந்த பயணமே நாவல் என்று தோன்றியது. 

* நாவலை எழுதிய சுரேஷுக்குமே மேற்சொன்ன பயணத்தை போட்டு பார்க்கலாம். எழுத்தின் மீதான பிடியை தளர்த்தாமலேயே நாவலை நகர்த்துகிறார். எங்கும் ஒரு கச்சிதத்தன்மையும் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாதென்ற கட்டுப்பாடும் தெரிகிறது. காதல், சதியாலோசனை, சாதீய கீழ்மைகள், சுரண்டல்கள், அறச்சீற்றம், தற்காலிக வெற்றி, கலவர பதட்டம் என அனைத்தையும் மிகுந்த கட்டுபாடுடைய மொழியில் தான் சொல்கிறார். ஆனால் நாவலின் உச்சக்கட்டம் நெருங்க நெருங்க.. அந்த பிடி தளர்கிறது. அவரையும் மீறி நாவல் பயணிக்கும் இடம் அந்த முடிவு தான் என்று தோன்றியது. 

* சாதீயம் என்பதை சட்டென உணர்ச்சிவசப்படும் கிராமத்து மனிதர்களின் பின்னணியிலேயே பார்த்த எனக்கு இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் படித்தவர்களின் உயர்மட்ட அதிகாரிகளின் நுட்பமான, கோரமான சாதீயமுகம் அதிர்ச்சியளித்தது. 

* இந்நாவலில் சாதிமேன்மையை விட ஊழலே ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறதென்றாலும், இதன் சாதீய முகமே மீண்டும் மீண்டும் மனதை அலைகழித்தது. ஏன் என்று சரியாக சொல்லத்தெரியவில்லை. May be because while corruption merely shows indifference, casteism cares enough to kill. 

* ஒரு குறுந்தொகை வரி மீண்டும் மீண்டும் மனதில் வந்துகொண்டே இருந்தது. கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே…. இரவெனும் நீர்பரப்பு கடலை விட பெரியது… அந்த மக்கள் இரவினும் கரிய கடலைத்தான் நீந்திக்கடக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்… 

* நான் வாசிக்கும் பொழுது சுரேஷ் இந்த நாவலுக்கு பெயரிட்டிருக்கவில்லை. கங்குல் வெள்ளமே இந்நாவலுக்கான சரியான தலைப்பாக இருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் சுரேஷின் பெயர் தேர்வு இன்னும் கச்சிதம். சுரேஷுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்… 
சித்தார்த்

விரிவான விமர்சனத்துக்கு நன்றி சித்தார்த்.

Mar 15, 2013

பரதேசி - விமர்சனம்

பாலா படங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சேது கடைசி 20 நிமிடத்தில் மனசைப் பிழிந்ததாலும், ராஜாவாலும் மட்டும்தான் ஒரு சப்பைப்படம் தேறியது என்று தீர்மானமாக நம்புபவன் நான். பிதாமகனிலும் நடிப்பு எல்லாம் நன்றாகவே இருந்தாலும் சினிகலாக எடுக்கப்பட்ட கதையில்லாத படம்தான் அது. நான் கடவுள் - ஏழாம் உலகத்தையும் சிதைத்து, அகோரிகளையும் ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மாஸ் ஹீரோ படம். அவன் இவன் பார்க்கவே இல்லை..

இந்நிலையில், காரணமே இல்லாமல் பரதேசி முதல்நாளே பார்க்க முடிவெடுத்தேன் - இந்த முடிவுக்காக வருந்துவேன் என்ற திண்ணமான எண்ணம் பின்புலத்தில் இருந்தாலும்.

ஆனால் - என் முதல் பாரா எண்ணங்கள் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டது பரதேசி.

1939களில் நடந்த மிகப்பெரிய மனிதவளச் சுரண்டலின் ஆவணமாக்கல்தான் கதை. பஞ்சம் தீண்டிய கிராமத்தில் இருந்து இனிக்க இனிக்கப் பேசும் கங்காணிகளால் மூட்டை மூட்டையாக ஆட்கள் தேயிலைத் தோட்டத்துக்குக் கடத்தப்பட்டு அங்கே கொத்தடிமைகளாக வாழ்ந்தவர்களின் கதை. நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது, மிகை உணர்ச்சிகளுக்கான பல வாய்ப்புகள் இருந்தும், தேவதைக்கதை முடிவெல்லாம் இல்லாமல்.

ஏறத்தாழ முதல் பாதி முழுவதுமே அமைதியான பஞ்சத்தில் அடிபட்ட கிராமம்தான். நாஞ்சில் நாடனின் அழகான வட்டார மொழி வசனங்களோடு - நாஞ்சில் நாடன் என்றதும் நினைவுக்கு வரும் காட்சி “ராசா வண்டிய நேரா விட்டுருவேன்” என்று பந்தியில் அவமானப்படுத்தப்படும் விடலைப் பிச்சைக்காரன் - சிறுகதையாகப் படித்திருக்கிறேன், அந்தச் சிறுகதையின் தாக்கத்தை அப்படியே சினிமாக் காட்சி தரும் என்று நம்பி இருக்கவில்லை.

தெளிவான திரைக்கதையுடன்தான் பாலா இறங்கி இருக்கிறார். தேவையற்ற காட்சிகள் பெரும்பாலும் (பாடல்கள் தவிர) இல்லை. கங்காணியும் முழுக்க வில்லனில்லை - அவனும் அடிவாங்குபவன்; மருந்து கலந்து தரும் ‘டாக்டர்’ கூட கால் நரம்பை வெட்டுமுன் பழிபாவத்துக்கு அஞ்சுகிறான், எதோ கொத்தடிமைகள் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்கள் போல வரும் டாக்டருக்கும் முதல் குறி தன் மிஷனரி வேலைதான். பாலாவின் பழைய படங்கள் போல கிளைமாக்ஸில் வில்லன்களைப் பந்தாடி வெல்லும் கதாநாயகன் எல்லாம் இல்லை - ஆனால் மொத்தமாக படம் தரும் அழுத்தம் மிக மிக அதிகம். ஏறத்தாழ என்னைப்போன்ற ஒரு கல்நெஞ்சனின் கண்ணிலேயே ஈரம் வரவழைத்தது.

குறைகளைத் தோண்டித் தோண்டிச் சொல்லலாம், இனிவரும் பல விமர்சனங்கள் சொல்லும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை - Except - THIS FILM NEEDED ILAIYARAJA - more than any other Bala film.

நிச்சயம் பாருங்கள். குழந்தைகள் வேண்டாம், இதயம் ரொம்ப பலஹீனமானவர்கள் தவிர்த்து/

Dec 17, 2012

இலக்கணம் படிச்சதில்ல தலைக்கனமும் எனக்கு இல்ல

சொல்லிக்கொடுப்பது என் வேலை. எனவே, எப்படி ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் கற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் என் வேலையின் முக்கியமான ஒரு பகுதி.

ஒரு ஆசிரியராக நான் உன்னைவிடப் பெரியவன், விஷயம் அறிந்தவன், நான் கடவுள் என்ற பிரமையை ஏற்படுத்திச் சொல்லிக் கொடுப்பது ப்ரைமரி ஸ்கூலுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம், வயது முதிர்ந்த மாணவர்களுக்கு அந்த முறை வேலைக்காகாது.

பள்ளியில் நான் கற்ற விஷயங்கள் எவை இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று ஆழமாக யோசித்துப் பார்த்தால்,  எனக்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை விட, சக மாணவர்கள் சொல்லிக்கொடுத்தவையே அதிகம் நினைவில் நிற்கின்றன. இவனுக்கே புரிஞ்சிடுச்சே, எனக்குப் புரியாம போயிடுமா என்ற எண்ணம், புரிதலை வேகப்படுத்துகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதே உணர்வைத் தந்த கற்றல் அனுபவம், கொத்தனார் மூலம். கொத்தனாரின் தமிழ் ஆரம்ப காலத்தில் ஒன்றும் அவ்வளவு அபாரமான தமிழ் எல்லாம் இல்லை. சந்திப்பிழை, எழுத்துப்பிழை எல்லாம் இருந்ததுதான். ஆனால் தவறு என்று சுட்டிக்காட்டினால், அது ஏன் தவறு என்று ஆராய்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து, ரெஃபெரன்ஸ்களை அடுக்கி - அந்தத் தவறைச் சரி செய்வதற்குள் அவன் நிறையக் கற்றிருப்பான்.

அப்படிக் கற்ற விஷயங்களை, சக மாணவன் போல சொல்லித்தந்ததில்தான் என் பிழைகளும் பெருமளவுக்குக் குறைந்திருக்கின்றன.

தமிழ் பேப்பரில் இலக்கணம் பற்றி ஒரு தொடர் எழுதச்சொல்லி பாரா சொன்னதும்  நாம் வழக்கமாகத் தமிழில் செய்யும் தவறுகளை, ஏன் தவறு, எப்படித் தவறு என்பதற்கு உதாரணங்களுடன் எழுத ஆரம்பித்தான் -  எனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே, எளிமையாக -சக மாணவன் தொனியுடன். அது ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 

சினிமாப்பாட்டு உதாரணங்கள், குமுதம் ஸ்டைல் கவர்ச்சிப் படங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும் அது வரவேற்பைப் பெற்றிருக்கும். ஏனெனில் - கற்றல் என்பது வேகம் பெறுவது சக மாணவர்களால்தான், ஆசிரியர்களால் அல்ல.

இப்போது புத்தகமாக வந்திருக்கிறது; இது பண்டிதர்களுக்கான புத்தகம் அல்ல. அவர்களுக்குப் புத்தகம் தேவையில்லை. இது நமக்கான புத்தகம். 

தமிழ் எழுத ஆர்வம் கொண்டுதான் அனைவரும் ஆல்ட்+2 அடிக்கிறோம். தப்பும் தவறுமாக எழுதவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் தமிழ் எழுத அதிகம் தேவையில்லாத சூழலில் வேலைபார்க்கும் நமக்குப் படித்த இலக்கணம் மறந்து போனதில் ஆச்சரியம் இல்லை. இந்தப்புத்தகம் பழைய நினைவுகளைக் கிளறும். குட்டிச் சொல்லாமல், தட்டிச் சொல்லும் நம் வழக்கத் தவறுகளை. 

உங்கள் கையில் இருக்கவேண்டிய புத்தகம் - சந்தேகமே இல்லை.

ஆன்லைனில் வாங்க, இங்கே சொடுக்கவும்.

பிகு: அட்டையில் ஓர் ஒற்றுப்பிழை இருக்கிறது - அது என்ன என்று கண்டுபிடித்துவிட்டால், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேறிவிடும்.

Oct 8, 2012

இங்கிலீஷ் விங்கிலீஷ்

மாமி இங்கிலீஷ் கற்கிறாள். இதுதான் கதை என்பதை போஸ்டர் பார்த்த குழந்தைகூடச் சொல்லிவிடும். ஏன் கற்கிறாள்? இங்கேதான் ஆரம்பிக்கிறது இந்தப்படம் ஏன் நல்லபடம் ஆகிறது  என்பது.

அழகான வாழ்க்கை. கணவர் மனைவி மகள் எல்லாரும் இவள் சமையலைப் பாராட்டதான் செய்கிறார்கள். போதாக்குறைக்கு சிறுவாட்டுப் பணமாக லட்டு விற்ற 500ரூபாய்க் கட்டு வேறு சிரிக்கிறது. இங்கிலீஷ் தெரியாதுதான். அதனால் என்ன?

இங்கிலீஷ் பேசும் ரிசப்ஷனிஸ்டுடன் புருஷன் சோரம் போகிறானா? இல்லை.
மகள் மதிக்காமல் உனக்கும் எனக்கும் உறவோ ஒட்டோ இல்லை என்கிறாளா? இல்லை.
மகள் பள்ளி ஆசிரியர் இங்கிலீஷ் தெரியவில்லை என்று கேவலப்படுத்துகிறாரா? இல்லை.
அமெரிக்காவுக்குச் செல்லும்போது இங்கிலீஷ் தெரியவில்லை என்று விசாக்காரார்களோ இமிக்ரேஷன் காரர்களோ திருப்பி அனுப்புகிறார்களார்? இல்லை.
இங்கிலீஷ் தெரியாததால் அமெரிக்காவில் வழிதெரியாமல் வில்லன்களிடம் மாட்டி ஹீரோ பஞ்ச் டயலாக் பேசிக் காப்பாற்றுகிறாரா? இல்லவே இல்லை.

எந்த மிகைப்பட்ட காரணமும் இல்லை. ஒரு பெண்ணுக்கு இயல்பாக ஏற்படும் "தனக்கு மரியாதை இல்லை" என்ற மெல்லிய வருத்தம், அதுசார்ந்து எழும் ஈகோ.. இவர்களுக்குத் தெரியாமல் நானும் வென்று காட்டுவேன் என்று எழும் தன்னம்பிக்கை. என் உறவுப் பாட்டி ஒருவர், 88 வயதில் ஹிந்தி கற்று ப்ராத்மிக் பரீட்சைக்குக் கிளம்பியதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் மீண்டும் பார்த்தேன்.

இவ்வளவு மென்மையான உணர்வை பார்ப்பவர்களுக்குக் கடத்தவேண்டும் என்றால் அபாரமான நடிப்பும் உடல்மொழியும் காட்சியமைப்புகளும் ஒத்துப் போகவேண்டும். ஸ்ரீதேவியும் கௌரி ஷிண்டேவும் அதைச் சாதித்திருக்கிறார்கள்.

நியூயார்க் மெட்ரோ ரயிலில் பயணிக்க எங்கே கார்டைச் சொருகவேண்டும் என்பது தெரியாத, ஓரளவுக்குத் தெரிந்த, பழக்கமான - என்ற மூன்று நிலைகளையும் ஸ்ரீதேவி காட்டும் நடிப்பு ஒன்றே போதும். எல்லாக் காட்சிகளிலும் இருந்தாலும் அலுக்காத முகம், நடிப்பு என்று அசத்தியிருக்கிறார். 

ஸ்ரீதேவி மட்டுமல்ல, ஒரு காட்சிக்கு வரும் அமிதாப் (இமிக்ரேஷன் வாயிலில்: நானா? உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வந்திருக்கிறேன். வேண்டாமா? திரும்பப்போய்விடட்டுமா?), துள்ளிக்கொண்டே பாடம் எடுக்கும் டேவிட் (return back தேவையில்லை, return போதும்..) , பாகிஸ்தான் ட்ரைவர் (இந்தியன் சிஸ்டர், மெக்சிகன் சிஸ்டர், சீன...) , மெக்சிகன் ஆயா (I will teach all of america spanish) , சாஃப்ட்வேர் தமிழன் (I love Idly and my mother.. no My mother first and idly next), முடிவெட்டும் சீனாக்காரி (May I slap you?), கே ஆஃப்ரிகன் அமெரிக்கன் (I am here not to speak, but listen), ஃப்ரென்ச் ஹோட்டல் சமையல்காரன் (cooking is art, you are artist) - எல்லாருமே கச்சிதமான பாத்திரங்கள். கனகச்சிதமான நடிப்பு.

லட்டுத் தட்டோடு வரும்போது பயமுறுத்தி, லட்டுகள் கீழே விழுந்தவுடன் ஓடிப்போய் வெளிறிப்போன முகத்துடன் சாரி கேட்கும் சின்னப் பையனிடமே அற்புதமான நடிப்பை வாங்கத் தெரிந்திருக்கிறது இயக்குநருக்கு.

பின்னணி இசையையும் குறிப்பாகச் சொல்லவேண்டும். பலநேரங்களில் சின்னச் சின்ன ஒலித்துணுக்குகள் உணர்ச்சியை போல்ட் இடாலிக் அண்டர்லைன் எல்லாம் செய்து காட்சிக்குப் பலம் சேர்க்கிறது.

எந்த எதிர்பாராத திருப்பமுமே இல்லாத கதையை இரண்டரை மணிநேரம் சுவாரஸ்யமாகச் சொன்ன திரைக்கதை. 

குடும்பத்துடன் போயிருந்தேன். குழந்தைகளும் ரொம்பவே ரசித்தார்கள். 

இங்கிலீஷ் அல்ல கதையின் முக்கியமான விஷயம் - எவ்வளவு சாதாரணமாக இல்லத்தரசிகளை நினைக்கிறது இந்தக் குடும்ப அமைப்பு, அவள் உணர்ச்சிகளுக்கு குடும்ப அங்கத்தினர்கள் கொடுக்கும் மரியாதை என்ன - இவைதான் முக்கியமான விஷயம்; இதைச் சொல்ல இங்கிலீஷ் ஒரு கருவி. மனைவிகளிடம் நிச்சயம் ஹிட் அடிக்கக்கூடிய டாபிக்.

இந்தப்படம் ஓடும். ஆனால் வைஃபாலஜியால் பாதிக்கப்பட்ட கணவர்களின் நுண்ணுணர்வுக்கு, இதுவரை படமும் வரவில்லை, வந்தாலும் ஓடாது :-(( நம் சோகம் நம்மோடுதான்..

Highly recommended. See with your family.


Mar 2, 2012

அரவான்

வெயில் படத்துக்குதான் முதலில் இப்படி எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் போய் படம் நன்றாக இருந்ததில் ஆச்சரியத்துடன் மகிழ்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே இயக்குநர் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் எதிர்பார்ப்புகளே இல்லை என்று சொல்லமாட்டேன், எதிர்மறை எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ச வெங்கடேசனின் காவல் கோட்டத்துக்கு விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் - ஆயிரம் பக்கத்துக்கு எழுதியதால் இருக்கலாம். படித்த இரண்டு விமர்சனங்களும் இரண்டு துருவங்களில் நின்றன (எஸ் ரா, ஜெயமோகன்). கதை வரட்டு வரலாறாகத்தான் இருக்கும் என ஒரு பிம்பம் மனதில் ஏனோ விழுந்துவிட்டது. அந்தக் கதையின் ஒரு பகுதிதான் படமாக வருகிறது என்று கேள்விப்பட்டதும் இந்தப் படத்தைப் பற்றியும் அபிப்பிராயம் பெரிதாக வரவில்லை.


நாவல் எப்படியோ, இன்னும் தெரியவில்லை. படத்துக்கு கதை மிகவும் நேர்த்தியாக இருந்தது. களவே தொழிலான கிராமங்கள் பணக்கார வீடுகளைக் கொள்ளையடிக்க முயல, காவலே தொழிலான கிராமங்கள் அதே பணக்கார வீடுகளைக் காப்பாற்ற முயன்ற காட்டுமிராண்டித்தனங்கள் முற்றிலுமாக ஒழிந்திராத 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக் கதை. அரவான் என்றதும் முதலில் நமக்கு என்ன தோன்றுகிறது? அதுதான் கதை.





வேம்பூர் ஒரு களவு கிராமம். நான்கைந்து செட் திருடர்கள் போய்த் திருடிக் கொண்டுவரும் கேப்பையில்தான் ஊரே வயிறு கழுவுகிறது, ஒரு செட்டின் தலைவன் கொம்பூதி(பசுபதி) யின் தன் களவுத்திறனால் மயக்கி ரெக்ரூட் ஆகிறான் வரிப்புலி (ஆதி).ஊருக்கு அவமானம் ஏற்படும் நேரத்தில் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்ல வேண்டி வருகிறது. வரிப்புலி சாதா ஆசாமி அல்ல, இரண்டு கிராமங்களால் பலி போடத் தேடப்பட்டு வரும் அரவான் என்ற ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

இரண்டு தனித்தனிக் கதைகள் போல இருந்தன இரண்டு பாதிகளும். களவு இருட்டு கன்னம் வைத்தல் என்றே நகர்ந்த முதல் பாதி, சின்னான் (வரிப்புலி) ஏன் பலிகடா ஆனான் - ஏறத்தாழ துப்பறியும் கதை போல நகரும் இரண்டாம் பாதி.

விரிவான தகவல்களுடன் அடர்ந்த கதையை சோர்வடைய வைக்காமல் அலுக்காமல் கொண்டு சென்ற திரைக்கதை. பீரியட் படம் பார்க்கிறோம் என்ற எண்ணமே வராமல் இயல்பாக நம்மை அவர்கள் உலகத்தில் கொண்டு சென்ற வசனங்கள், காட்சி அமைப்புகள்.

எல்லா நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய வேலையைத் திறம்ப்டச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆதி - படம் முழுக்க ஒரு சுத்தமான காட்சி கிடையாது அவருக்கு. சேற்றில் குதித்து ஓடுவது கன்னம் வைத்து இறங்குவது அடிபட்டு ரத்தம் சிந்துவது.. இதேதான் படம் முழுக்க. எல்லாக் காட்சிகளிலுமே இயல்பான 18ஆம் நூற்றாண்டு இளைஞனாக வாழ்வது சுலபம் அல்ல. அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார். பசுபதியின் திறமையை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதிலும். ஓரிரு காட்சியில் வந்து போகும் பரத், அஞ்சலி உட்பட அனைத்து நடிகர்களுமே தங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

முதல் படமாமே இசையமைப்பாளார் கார்த்திக்குக்கு? ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு நன்றாகவே இருந்தது.

குறைகளே இல்லையா? இருந்தன. ஆனால் மிகைநாடி மிக்க கொளின் மறைந்து போய்விடும் குறைகள்தான். கிராஃபிக்ஸின் மிகக் குறைந்த தரம் இரண்டு காட்சிகளில் நம்மை காட்சியில் இருந்து விலக்கி விடுகிறது - இரண்டாம் பாதியில் தொய்வடைய வைக்கிறது பாடல்கள் போன்ற சில்லறைக் குறைகள்தான்.

சரி, நல்ல கதை. நல்ல திரைக்கதை, நடிப்பு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. இவ்வளவுதானே? இதற்கு ஏன் must see என்று கேப்ஷன் வைக்கிறேன்?

நம்முடைய இருண்ட பழங்காலத்தைப் பற்றிய ஒரு நேர்மையான பதிவு என்பதால். பீரியட் படம் என்றாலே செம்பு நகைகள் பளபளக்க செந்தமிழில் அரசர்கள் உணர்ச்சிவசப்படும் படங்களையே பார்த்த நமக்கு இது ஒரு ஆச்சரியப்படுத்தும் மாறுதல். அரசர் இல்லை, (பாளையத்துக் காரன் ஒரு ஆள் வந்தாலும் அரச மரியாதை எல்லாம் இல்லை) சாதாரண மக்கள் வாழ்க்கை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. கிராமங்களின் தொழில், அவர்களிடையே இருந்த போட்டி பொறாமை, ரத்த வெறி, காட்டுமிராண்டித் தனங்கள் எல்லாம் எந்த விதமான மழுப்பலும் இன்றி இயல்பாக படமாக்கப் பட்டிருக்கின்றன.

இறுதிக் காட்சி, அதற்குப் பின் போடப்படும் ஸ்லைடு - மிக வலுவான தாக்கத்தை உண்டுசெய்தது. மரண தண்டனை எதிர்ப்பை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது.

ஹேட்ரிக் அடித்திருக்கும் வசந்தபாலன் + டீமுக்கு வாழ்த்துகள்.

நிச்சயம் பாருங்கள்.



Aug 26, 2010

எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)

எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?

ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்‌ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.

ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!

ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!

Mar 30, 2010

அங்காடி தெரு- நான் கடவுள் - ஏழாம் உலகம்

"இதே கலர்ல டீ ஷர்ட் 42 இல்ல 44 சைஸ்லே இருக்குமாம்மா?" என்று கேட்டிருக்கிறேன் ரங்கநாதன் தெருக்கடையில்.

"இருக்காது சார்"

"பாத்துட்டு சொல்லலாமில்ல? ஒரு ஸ்மைலிங்கா சொல்லேம்மா" என்று சொல்லியிருக்கிறேன் கடையை விட்டுக் கிளம்பும் முன். அதோடு அதை மறந்தும் போயிருக்கிறேன்.

ஆனால் இப்போது தெரிகிறது, நான் பேசியது கனியுடன் என்று. செல்வராணியுடன் என்று. சோஃபியாவிடம் என்று.

ஆயிரம் முறையாவது போயிருப்பேன் ரங்கநாதன் தெருவிற்கு. ஆனால் இப்போதுதான் வசந்தபாலன் அந்தத் தெருவுக்கு முறையாக அழைத்துப் போயிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்காதே. எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் பார்.

எல்லாம் தென் தமிழ்நாட்டுத் தமிழ் பேசுகிறார்கள் என்பதை மட்டும் கவனித்தாயே, 13 வயதுப்பையன்கள் கேள்விகேட்டதும் 18 வயது (அப்படின்னா எனக்கு 90 இருக்கும்பா.. உண்மையச் சொல்லு) என்று கூசாமல் சொல்கிறார்கள் என்பதைக் கவனித்தாயே, அவர்கள் எங்கே தங்குகிறார்கள் என்று யோசித்தாயா என்று கேட்கிறார்.

பொதுக்கழிப்பிடத்துக்குக் காசு வாங்கும் அவலத்தை லெட்டர்ஸ் டு த எடிட்டருக்கு எழுதத் துடிக்கிறாயே, அது ஒரு பிச்சை எடுக்காதவனின் உழைப்பு என்பதை உணர்ந்தாயா?

"பத்து ரூபாய் ரிமோட் கவர்" விற்கும் பையன் ப்ளஸ்டூ படித்திருப்பானோ?

உதயம் தியேட்டர் ப்ளாட்பாரத்தில் 22 பேரைக் கொன்ற கொடூர விபத்தை மறுநாள் காலையில் பார்த்தேன். ஒரு மாதம் கழித்து "என்னையும் வந்து ஏற்று" என்று இன்னொரு 22 பேர் அதே இடத்தில் படுத்துக் கிடந்ததையும் பார்த்தேன். வேண்டுதலா அவர்களுக்கு லாரிகளுக்கு எலுமிச்சம்பழமாக?

திருட்டுப் பட்டம் கட்டுவதற்கும் ஸ்கிரீன் மறைவில் கசக்குவதற்கும் ஏற்ற முக்கால் அனாதைப் பிள்ளைகள், மாதம் முதல் செக்லிஸ்டின் பிள்ளையார் சுழியாய் ஏன் R-1? அண்ணாச்சிகளுக்கு ஆர் 1 துணை, ஆர்1களுக்கு அண்ணாச்சிகள் துணை - கைவிடப்பட்டவர்களுக்கு யார் துணை?

கேள்விகள்.. கேள்விகள். இப்படிக் கேள்விகள் இருப்பதையும் நான் அறிந்திராத ஆயிரம் கேள்விகள்.

ஏழாம் உலகம், என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல். நள்ளிரவில் படித்து முடித்துவிட்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்காக இரவெல்லாம் தூங்காமல் என்ன செய்வது, யாரை உதைத்து இவர்களின் இழிநிலைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருவது? உதைக்கப்படவேண்டியவர்கள் வரிசையின் நானும் நிற்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி கலங்கடிக்க நான் அனுபவித்த சுகங்கள் எல்லாம் சுமையாகத் தோன்றி மூன்று நாட்களுக்கு எதிலும் முனைப்பில்லாமல் செய்த நாவல்.

ஏழாம் உலகம் நான் கடவுளாகப் படமானது ஒரு விபத்து. அகோரிகளையும் ஏழாம் உலகமும் கொத்துக்கறியாக. திரைப்படம் என்பதற்கான இலக்கணத்துக்காக ருத்ரன் தாண்டவனைப் புரட்டி எடுத்தான் - அந்த புரட்டி எடுத்தலை மையப்படுத்தியே ஆரம்பத்தில் இருந்து கதை நகர்ந்தது - தாண்டவன் அனியாயத்துக்குக் கெட்டவன், அம்சா பாவம் அவளை குரூபிக்குக் கூட்டிக் கொடுக்கிறான், ருத்ரன் முக்கா கடவுள், இப்போது அவளை ரட்சிப்பான் - இந்தக் கூத்தில் ஒரு பேக்ட்ராப்பாக மட்டுமே வந்தது ஏழாம் உலகம். நாவல் தோற்றுவித்த எந்த உணர்வையுமே படம் தோற்றுவிக்கவில்லை. பஞ்ச் டயலாக் இல்லையே தவிர அது ஒரு மாஸ் ஹீரோ படம்தான்.

ஏழாம் உலகம் கேட்ட கேள்விகளில் முக்கியமானது - தினமும்தான் பார்க்கிறாய் இவர்களை. ஒரு நாளாவது கவனித்திருக்கிறாயா?

அதே கேள்வியை "இவர்களை" மட்டும் மாற்றிக் கேட்கிறது அங்காடி தெரு.

ஆனால் நான் கடவுள் செய்திருக்கவேண்டிய ஆனால் வழுக்கிய பல இடங்களைச் சரி செய்திருக்கிறார் வசந்தபாலன்.

நான் கடவுளில் தரைக்கு மேலே மிதந்த கதாபாத்திரங்களை தரைக்குக் கொண்டு வந்து Closer to life ஆக்கியதன் மூலம் அனாயாசமாகச் செய்திருக்கிறார். பாலாவை பாலன் ஜெயித்திருக்கிறார்.

ருத்ரன் போல யாரையும் உதைக்கும் எதற்கும் கவலைப்படாத டெர்மினேட்டர் பாடி இல்லை லிங்குவுக்கு. இயலாமையின் உச்சியில் காலைப்பிடித்து அழுபவன் தான். ஆனால் இவனும் ஹீரோ ஆகிறான் - திரைமறைவில் கசக்கிய சூப்பர்வைசரை விளைவுகளுக்கு அஞ்சாமல் புரட்டி எடுத்து - விளைவாக புரட்டி எடுக்கப்பட்டு; புத்தி சொல்லும் முடிவை உறுதியான இதயத்தால் மாற்றி.

அம்சவல்லிக்கு குரூபியுடன் திருமணம் ஆவதே முக்கியமான குறை. கனி கசக்கலைப் பற்றி வருந்தினாலும் அதை வாழ்க்கையாக நினைக்கவில்லை.

அண்ணாச்சிகளுக்கும் தாண்டவன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கைவிடப்பட்டவர்களைக் கறப்பவன் பணக்காரன் ஆனதும் புத்திசாலியும் ஆகிறான்.

இந்தப்பதிவு படத்தின் விமர்சனம் இல்லை. விமர்சனம் என்பது குறைநிறைகளைத் தொட்டுக்காட்டுவது. இப்போதைக்கு அதைச் செய்வதாக உத்தேசம் இல்லை. சிறு சிறுகுறைகளையும் மீறி என் தூக்கத்தைக் கெடுத்த கோர்வையற்ற எண்ணங்களை பதிந்தே ஆகவேண்டும் என்ற உந்துதல்தான் இந்தப்பதிவு.

அய்யனார் சொல்லிதான் தெரிந்தது துபாயில் படம் ஓடுகிறது என்று. தியேட்டரில் சொற்பக் கூட்டமே. இன்னும் இரண்டு நாளில் பையா விரட்டப் போகிறதாம்.

என்ன, எனக்குதான் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் - தரைக்கு வந்து, "அந்த ஷர்ட்டை எடுத்துப் போடுப்பா, சோம்பேறித்தனம் பாக்காம" என்று சொல்ல

Mar 2, 2010

வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!

பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி வருவாயா வரை.

பெரும்பாலான முதல்நாள் விமர்சகர்கள் வித்தியாசமான காதல் கதை என்று பாராட்டியதாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அற்புதம் என்று சிலாகித்ததாலும், மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கௌதம் படங்கள் பிடித்தே இருந்ததாலும் - கவிழ்ந்தேன் - படம் பார்த்ததும்தான் தெரிந்தது, நம் மக்கள் எவ்வளவு காய்ந்துபோயிருக்கிறார்கள், வித்தியாசத்தின் அளவுகோல் எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது!

"மச்சி காதல்ன்றது " என்று நண்பர்களிடம் பேசும் காட்சி ஆர்டினரி.. "எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது" என்று பேசுவது வித்தியாசம்

பாடல் காட்சிகளில் 40 ஆண் 40 பெண் ஆடுவது ஆர்டினரி, 10 ஆண்கள் மட்டும் அக்ரோபாடிக்காக ஆடுவது வித்தியாசம்.

பஸ் ஸ்டேண்டில் சைட்டடிப்பது ஆர்டினரி, கேஎஃப்சிக்கு துரத்திச் செல்வது வித்தியாசம்.

அண்ணன்கள் அரிவாளோடு காதலனைத் தேடுவது ஆர்டினரி, பாக்ஸிங் செய்வது வித்தியாசம்

காதலுக்குத் தடையாக மதம் இருப்பது ஆர்டினரி, காதலுக்குத் தடையாக மதம்+வயது இருப்பது வித்தியாசம்.

எல்லா கதாபாத்திரங்களும் தமிழில் பேசுவது ஆர்டினரி, தமிழில் பேச முயற்சித்து திக்குவது வித்தியாசம். (நல்ல தமிழ் பேசக்கூடிய உமா பத்மநாபன், கிட்டி ஆகியோரும்கூடத் திக்குவது ஸ்பெஷல் வித்தியாசம்)

தங்கை காதலுக்கு உதவுவது ஆர்டினரி, "அவளுக்கு ரூட் போடாதே" என்று சொல்லிவிட்டு பிற்கு போய் காதலியின் கல்யாண ஆல்பம் பார்த்துவிட்டு வருவது வித்தியாசம்.

"அவனைக் காதலிச்சா என் பொணத்துமேலதான் கல்யாணம்" என்பது ஆர்டினரி "Over my dead body" என்பது வித்தியாசம்.

சிம்பு விரலை ஆட்டிக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு பேசினால் ஆர்டினரி, விரலை ஆட்டாமல் பல்லைக்கடித்தால் வித்தியாசம்.

நாயகி முதல் சீனில் நாயகனிடம் திட்டுவாங்கி மூன்றாவது சீனில் காதலுக்கு ஓக்கே சொன்னால் ஆர்டினரி, இடைவேளை தாண்டியபின் சொன்னால் வித்தியாசம்.

கதாநாயகியைத் துரத்திக்கொண்டு கேரளா போய் "மனசுக்குள்ளே காதல் வந்துச்சா" - ஆர்டினரி, "மன்னிப்பாயா" வித்தியாசம்.

கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "என்ன சொல்லப்போகிறாய்" என்பது ஆர்டினரி. கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "ஆரோமலே" என்பது வித்தியாசம்.

நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு குடைக்குள் மழையாகக் கனவு கண்டால் ஆர்டினரி, நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு ஜெஸ்ஸி ரீலீஸாகக் கனவு கண்டால் வித்தியாசம்.

அமெரிக்க மாப்பிள்ளை (பாவம் இந்த ப்ரீட்!) உடனான திருமணம் க்ளைமாக்ஸில் நின்றால் ஆர்டினரி, இடைவேளையில் நின்றால் வித்தியாசம்!

இவை மட்டுமல்ல, நிறைய நிறைய வித்தியாசங்கள் கொட்டிக்கிடக்கின்றன படம் முழுவதும்.
ஸ்லோவாப் போனா க்ளாஸிக் மூவி என்ற அடூர் காலத்து எண்ணத்தில் இருந்து எப்பதான் வெளிய வரப்போறோமோ! நுணுக்கமான விவரணைக்காக திரைக்கதை நொண்டியடித்தால் ஓக்கே - இந்த சப்பை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரங்களுக்கா? அநியாயம்.

நல்ல விஷயமே இல்லையா படத்தில்? இருக்கிறது! அவையாவன: 1. ரஹ்மானின் பின்னணி இசை எனக்குபபிடித்த முதல் படம் இதுதான். 2. ஒளிப்பதிவு - தெள்ளத்தெளிவு. 3. காத்திருந்து வந்த இடைவேளை, 4. நொந்து முடிந்தபின் வந்த சுபம்.

இதிலே பெரிய காமெடி என்னவென்றால், இந்தப்படம் பிடிக்காதவர்கள் கிழவர்கள் என்று ட்விட்டரிலும் பஸ்ஸிலும் மக்கள் அடிக்கும் கூத்துதான். இதே அளவுகோலை வேட்டைக்காரனுக்கும் வைக்கப்போகிறேன். "என்னா ஃபைட்டு.. உங்களுக்கெல்லாம் படம் சுறுசுறுப்பா இருந்தா பிடிக்காதா? வயசாயிடுச்சுப்பா உங்களுக்கு!"

இதனால் அறிவிப்பது என்னவென்றால், நம் மக்கள் விமர்சனத்தின் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டேன்! (இது இந்த விமர்சனத்துக்கும் பொருந்தும்:-)

Jan 27, 2010

காபரே கருத்துகள்

தாய்லாந்து சென்றிருந்தேன் குடும்பத்தோடு. வேண்டாம், அந்தக்கேள்வியைக் கேட்காதீர்கள், ஆயிரம் முறை பதில் சொல்லியாகிவிட்டது.

புன்னகை தேசம் என்று விமானநிலைய வரவேற்புப்பலகை சொல்கிறது. உண்மை. இருபது ரூபாய்க்கு மாங்காய் வாங்கினாலும் விற்பவர் சொல்லும் கணக்கில்லாத கபுன்கா (நன்றி :-))வுடன் புன்னகைகள் இலவசம்; 1000 கிலோமீட்டருக்குள் கடல் மலை அருவி காடு என எல்லா இயற்கையையும் பார்க்க நீந்த குளிக்க களிக்க - பதப்படுத்தி வைத்திருக்கும் சுற்றுலாத்துறை -- மிக நிறைவான பயணம். விரிவாக எழுதினாலும் எழுதுவேன். 1000 ஃபோட்டோக்கள், 5 மணிநேர வீடியோ இருப்பதால் எதை எழுத எதை விட என்று தெரியாமல் இருக்கிறேன் இப்போதைக்கு.


ஆனாலும், இந்த விஷயத்தைப் பற்றி உடனடியாக எழுதியே ஆகவேண்டும். ஒரு காபரே ஷோ பார்த்தேன்.


காபரே என்றதும் எனக்கும் கச்சடாவான எண்ணங்கள்தான் வந்துகொண்டிருந்தன, ஸ்பெயினில் ஒரு வருட ஆரம்ப காபரேவைப் பார்க்கும்வரை - பத்தாண்டுகளுக்கு ஒரு பாடலை எடுத்துக்கொண்டு நூறாண்டுகளின் இசை ரசனை மாற்றத்தை நடனத்தோடு சொன்ன காபரேதான் கண்ணைத்திறந்தது - சிஐடி சகுந்தலா ஆடுவது காபரே அல்ல என்று.

தாய்லாந்து காபரேவும் ஏறத்தாழ இதேபோலத்தான். பல பாடல்களுக்கான நடனங்களை லூஸாக ஒரு கதையை வைத்துத் தொகுத்தது. கடவுள் நவரத்தினங்களை அறிமுகப்படுத்துகிறார் - ஒன்பது மிக அழகிய பெண்கள், அவர் ரத்தினத்துக்கான நிறத்தில் ஆடை அணிந்து, க்ரூப் டான்ஸர் புடைசூழ ஆடி அறிமுகமாகிறார்கள். உடனே சாத்தானின் வேலையால் நவரத்தினங்களும் உலகின் பல்வேறு திசைகளிலும் பந்தாடப்பட, அடுத்த காட்சியில் இருந்து ஒவ்வொரு ரத்தினமும் தான் சேர்ந்த நாட்டின் கலாச்சார நடனம் ஆட (ஒரு ரத்தினம் தாய்லாந்து, அமெரிக்கா, ப்ரான்ஸு, இந்தியா, சீனா, ஜப்பான் - எல்லா நாட்டு நடனங்களும்) பின் சேர்கிறார்கள். வைரம்தான் நவரத்தினத்துக்கும் தலை, டிஃபானிதான் வைரத்தின் அத்தாரிட்டி என்று முடிக்கும்போதுதான் ஒன்றரை மணிநேரமும் விளம்பரம் என்று உரைக்கிறது.


ஒவ்வொரு காட்சியிலும் விஸ்தாரமான ஒப்பனைகளுடனும் அழகோ அழகான உடை அலங்காரங்களோடு மிக மிக அழகான பெண்கள் அந்தந்த நாட்டிற்கேற்ப பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளில் ஆடுகிறார்கள். ஆட்டம் என்றால் என்ன ஆட்டம்! கலா மாஸ்டர் சொல்வதுபோல எல்லாம் ஹெவி ஸ்டெப்புகள் :-) பத்துபேருக்குக் குறையாத க்ரூப் டேன்ஸிலும் ஒரு ஸ்டெப் கூட தவறவிடாத துல்லியம்; சொன்னேனா? இந்தக் காட்சிகளுக்கு இடையே ஒரு நொடிகூட இடைவெளி இல்லை. அரங்கமாற்றம், ஒப்பனை, கேண்டீன் விற்பனை - எதற்கும் ஒருநொடியும் இடைவெளி இல்லை - அரங்கின் முன்பகுதியில் நகைச்சுவைக்காரர்கள் ஒரு பாட்டுக்கு ஆடி முடிக்கும்போது பின்பாதியின் அமைப்பு தயாராகிவிடுகிறது. ஆடிக்கொண்டே இடதுபக்கம் போகும் நடனக்காரி 20 நொடியில் வேறு ஒப்பனையில் வலதுபக்கம் தோன்றுகிறாள். மிக மிகத் துல்லியமான நேர ஒருங்கிசைவு.


அழகோ அழகான பெண்கள் என்றா சொன்னேன்? அழித்துவிடுங்கள். ஆடியது அத்தனை பேரும் ட்ரேன்ஸ் செக்ஸுவல்சாம். (திருநங்கை பொருந்திவருமா தெரியவில்லை) - சொல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று காட்சி ஓட்டுகிறார்கள், ஒரு நடுத்தர நகரத்திலேயே (பட்டாயா) இரண்டு ஷோக்கள் (அல் கஸார் ஷோ, டிஃபானி ஷோ) - அத்தனையும் அரங்கு நிறைகின்றன என்பதில், அதன் தரத்தைப் பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படவில்லை.

சொல்லவந்த முக்கியமான விஷயங்கள் இவைதான்:

இது போன்ற ஷோக்கள் மட்டுமின்றி நாட்டிலேயே பொதுவாக பல தொழில்களிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள், மிக சகஜமாக என்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். நம் ஊரில் மட்டும் இன்னும் இப்படிப் பிறப்பதையும் இருப்பதையும் குற்றமாக்கி, சக உயிரினமாகக் கூட மதிக்காமல் இருப்பதன் அசிங்கம் முழுமையாக உரைத்தது.

முதல் வரிசையில் அமர்ந்து பார்த்ததற்கு நான் செய்த செலவு சுமார் 800 இந்திய ரூபாய். காசைப்பற்றி சொல்வதற்கு காரணம், இதைப்போன்று இருமடங்கு செலவு செய்தாலும் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் நமக்குக் கிடைப்பது துணுக்குத் தோரணங்களே, இதுபோன்ற ஒரு பல்சுவை ஷோ இருக்கிறதா என்பதறியேன்.

பார்த்து பதினைந்து நாள் ஆனாலும் இன்னும் அந்த நிறைவான உணர்வை மனதில் உணர்கிறேன்.

Dec 26, 2009

நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!

அவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழுவதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-)

12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால் மற்றவர்களை அடிமையாகவும் தாழ்ந்தவர்களாக்கும் எண்ணங்களும் வரலாற்றுக்குப் புதிதல்ல.

நிறைந்த கோப்பை கொண்ட மனிதர்களின் மனத்தில் வேற்று மக்களின் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் புரியாமல் போவதும், அவற்றை காட்டுமிராண்டித்தனமாகப் பார்ப்பதும் நிச்சயமாகப் புதிய விஷயமல்ல. அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காலிக் கோப்பையாளர்களையும் கட்டம் கட்டி ஒழித்ததும் அதே நேரங்களில் நடந்தவைதான்.

இயற்கை கொடுத்த வளங்களைத் தங்கள் தனிப்பட்ட உரிமை என்று நம்பி,அதைப் பங்குபோட வரும் வேறெவரையும் எதிரியாக்கி, வில்-அம்புக்கு துப்பாக்கி, துப்பாக்கிக்கு வெடிகுண்டு என்று ஆயுதங்கள் வளர்த்த தொழில்நுட்பத்தால் எதிரிகளைப் பந்தாடி, இயற்கைக்கு நிரந்தர மாற்றங்களை - திரும்பமுடியாத மாற்றங்களை உண்டுசெய்து, வல்லான் வகுத்த வாய்க்காலில் யாரையுமே வாழவிடாமல் செய்வதும் மனிதர்களின் வழக்கம்தான்.

மனிதனின் இந்த இயற்கையான கேடுகெட்ட மனோபாவத்தை விண்வெளியில் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் கேமரூன்.

மனிதனுக்கும் நாவிகளுக்குமான போராட்டத்தில் ஆரம்பத்தில் மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம்.

பண்டோராவின் வினோத மிருகங்களையும் பூச்சிகளையும் தொங்கும் மலைகளையும் (அல்லேலூயா மவுண்டன் - ஆம். Chomolungma என்று Everest ஐ சொன்னால் நமக்குப் புரியாமல் போனதை குத்திக்காட்டிய ஜெஃப்ரீ ஆர்ச்சரின் Path of Glory நினைவுக்கு வந்தது) பறவைகள் தேர்ந்தெடுக்கும் நாவிக்களையும் தொட்டுவிடும் தூரத்தில் இயல்பாக உலவவிட்ட முப்பரிமாணத்தையும் மீறி..

மனிதர்களை ஒற்றுமையால் வென்று சிறைப்படுத்தி உங்கள் பச்சை இல்லாத கிரகத்துக்கே திருப்பிப் போங்கள் என்று அனுப்பும் இறுதிக்காட்சியையும் மீறி..

இன்னொரு பத்தாண்டுகளில் இன்னும் பெரிய ஆயுதங்களோடு மனிதர்கள் போகத்தான் போகிறார்கள் பண்டோராவுக்கு, ஜெயிக்கத்தான் போகிறார்கள் என்ற வரலாற்று யதார்த்தம் சக நாவியான எனக்குத் தோன்றி வருத்தம்தான் தந்தது.

படம் - நிச்சயம் பாருங்கள், எல்லாரும் பாருங்கள்!

Jan 11, 2009

Slumdog Millionaire விமர்சனம்

ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாத சேரிச்சிறுவனுக்கு 100 டாலர் நோட்டின் பெஞ்சமின் ப்ராங்க்ளின் எப்படித் தெரியும்? தர்ஷன் தோ கன்ஷ்யாம் என்ற பஜனை எழுதிய சூர்தாஸுக்கும் இந்தச் சேரிச்சிறுவனுக்கும் என்ன உறவு? துப்பாக்கியைக் கண்டுபிடித்த கோல்ட் இவன் சித்தப்பாவா? ராமனின் கையில் இருக்கும் வில்லைப்பற்றி சேரியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சிறுவனுக்கு எப்படித் தெரியும்?



இப்படி சம்மந்தமே இல்லாத, தெரிய வாய்ப்பே இல்லாத கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லி கோடீஸ்வரனாகும் ஜமால் மேல் மில்லியனர் நிகழ்ச்சி நடத்துபவருக்கு சந்தேகம் வருவது நியாயம்தானே? சேரிச்சிறுவன் தானே - கேட்க ஆளில்லை - கூப்பிடு போலீஸை - ரெண்டு அடி அடிச்சா எப்படி இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியும் -எப்படி ஏமாத்தினான்னு சொல்லிடுவான்..



சொல்கிறான். ஒவ்வொரு கேள்விக்கும் விடை தெரிந்த தன் வாழ்க்கைச் சரித்திரத்தை. மலத்தில் குதித்து ஆதர்ச நடிகனிடம் பெற்ற ஆட்டோகிராப்பை சில்லறைக்கு விற்கும் அண்ணன் துரோகத்தை. ராமன் குறுக்கே வந்து அம்மாவைத் தூக்கிச் சென்றதை. குழந்தைப் பிச்சைக்கும் கைக்குழந்தைப் பிச்சைக்கும் கண்ணில்லாப்பிச்சைக்கும் உண்டான பொருளாதார வித்தியாசங்களை. ரயிலின் மேலிருந்து கயிறுகட்டி உணவு திருடும் வித்தையை. இளவயதுக்காதலியை கொலை செய்து மீட்டு அண்ணன் அபகரித்த துரோகத்தை. கடைசி நிமிடத்திலும்கூட ஏமாற்றப்பார்க்கும் பெரிய மனிதர்களின் காருண்யத்தை.

இவ்வளவு வித்தியாசமான திரைக்கதைப் பின்னலை சமீபத்தில் பார்த்ததில்லை. சுவாரஸ்யம் துளிக்கூட குன்றாமல் அதே நேரத்தில் அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் குறையாமல் பேண்டஸித் தன்மையோடு நகரும் காட்சிகள். எழுதும்போதே தெரிகிறது யதார்த்தத்தோடு பேண்டஸி எப்படி ஒட்டும்? சேரியின் அப்பட்டமான நிஜமும் அறைகிற அதே வேகத்தோடு மாய யதார்த்தமாக கோடிகளை வென்று ரயிலடியில் சேரும் நிஜத்துக்கு ஒட்டாத காட்சிகளும் ஓடிவிடுகின்றன.

இயக்கம் கலை இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு எல்லாமாய்ச் சேர்ந்து படம் பார்க்கும் உணர்வை முதலில் நம்மிடமிருந்து அகற்றிவிடுகின்றன. ஜமாலுக்கு விழும் அடிகளை நாம் வாங்குகிறோம். டாய்லெட்டில் குதிக்கும்போது மூக்கை மூடுகிறோம். கலவரத்தில் எழுந்து ஓடும் எரிபிணத்தைப்பார்த்துப் பதைக்கிறோம். சூடாக்கப்படும் ஸ்பூனைப்பார்த்து வியர்க்கிறோம். ரயிலில் இருந்து மணலில் விழுந்து உருள்கிறோம். திருடுகிறோம், மாட்டுகிறோம்..

தனித்தனியாக பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒரே விஷயத்தை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன்:

ராமர் கிளப்பிய கலவரத்தில் தாயை இழந்து பிச்சையெடுக்கும்போது கன்ஷ்யாமைப் பாடிவிட்டு மற்றபடி கடவுளைப்பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கை ஓட, தாதா வாழ்க்கை வந்தவுடன் தொழுகை செய்யும் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்கும் ஜமாலின் பார்வை -- ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத நுட்பம்!

குறைகள் இல்லாமல் இல்லை - வழக்கம்போல நம் குறைகளை ஏற்றுமதி செய்யும் மனோபாவம், ஹிந்தியில் எழுதி இலக்கணம் மாறா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் - சேரிச்சிறுவர்கள் பேசும் ஒட்டாத மொழி, படம் முடிகையில் பாட்டு நடனம், வலிந்து திணிக்கப்பட்டதாய்த் தோன்றும் சில விடைகள்..

2008ல் பார்த்த சில ஹிந்திப்படங்கள் (ஆம் இது ஹிந்திப்படம்தான்! என்ன, எழுதப்பட்ட பேசப்பட்ட சப்டைட்டில்!) மிகுந்த நம்பிக்கையை வரவழைக்கின்றன. (தேர்ந்தெடுத்துப் பார்ப்பதால் இருக்கலாம்) - வெட்னஸ்டே, ஆமீர், மும்பை மேரி ஜான் - இப்போது இது.
.
நிச்சயம் பாருங்கள்!

Dec 30, 2008

பினாத்தல் டாப் டென் மூவீஸ் 2008!

வழங்குகிறோம்: பினாத்தல் டாப் டென் மூவீஸ்.

இது இந்த வருடம் வெளியான சில படங்களைப் பற்றிய எங்கள் விமரிசனக்குழு கணிப்புகள். தமிழ்நாட்டில் வெளியானவை பற்றி மட்டுமே இந்த கணிப்புகள் வெளியிடப்படுகின்றன; விமரிசனக்குழுவைப் பாதித்த எல்லா படங்களும் இந்த வரிசையில் இருக்கின்றன - ஆனால் எந்தப்படம் சிறந்த படம் என்று வரிசைப்படுத்தப்படவில்லை.

1.அபியும் நானும்:

தாத்தா பக்கமா பேரன் பக்கமா என்று திண்டாடும் ஆவி, கோலங்கள் அபியினால் ஒரு பக்கம் சாயும் கதை. லூஸ் போன்ற சிறுவர்களை வைத்து மதுரையைக் கிண்டல் அடித்தாலும், தாத்தா வேட்டியினால் வந்த பிரச்சினைக்கு ஞானத்தை பலி கொடுக்கும் காட்சி உருக்கம். க்ராபிக்ஸ் மூலம் உயரமாக ஒல்லியாக மாறும் நாயகன், பழைய க்ளிப்பிங்ஸை வைத்தே பொக்கிஷமாக மக்களைக் கவர முயற்சிக்கிறார் - ஆனால் முடிந்ததா எனத் தெரியவில்லை. எதிர்பாராத திருப்பமாக தாத்தாவும் பேரனும் சேர்ந்துவிட, கழுகார் கேட்கும்" நான் யார் பக்கம் என்று உங்களுக்காவது தெரிகிறதா" என்ற க்ளைமாக்ஸ் காட்சி செண்டிமெண்டாக எடுத்திருந்தாலும் சிரிப்பலைதான் பரவுகிறது!

அபியும் நானும் - அலங்கோலங்கள்!

2. சில நேரங்களில்:

ஊர்ப்பெரியவர் ஒருவர் அடுத்த ஊர்ப்பிரச்சினையில் சில நேரங்களில் சில மாதிரி முடிவெடுக்கும் உளவியல் ரீதியான கதை. சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு உயிரையும் கொடுப்பேன், பதவியைத் துறப்பேன் என்கிறார் - அடுத்த காட்சிகளிலேயே - கைகோத்தால் போதும், ஏன் உயிரை விடவேண்டும் என்கிறார். அடுத்த ஊர்ப் பிரச்சினையைப் பற்றிப் பேசினால் தண்டனை கொடுப்பேன் என்கிறார் சில நேரங்களில், உணர்ச்சி வசப்பட்டு பேசுவது கூடத் தவறா எனக் குமுறுகிறார் சில நேரங்களில். அத்தனை சில நேரத்து முடிவுகளுக்கும் காரணம் மேலூரில் இருக்கும் பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துதான் எனத் தெரியும் காட்சிதான் க்ளைமாக்ஸ் - ஆனால் அதையும் ஊகித்துவிட முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.

சில நேரங்களில் - சில பேரங்களில்!

3. பிரிவோம் சந்திப்போம்:

பச்சைத் துரோகம் செய்திருந்தாலும் நாயகனோடு வேறு வழியில்லாமல் நட்பாக இருக்கும் நண்பனைப் பற்றிய கதை. நாயகன் வேறு வழியின்றி பிரிவதாக அறிவிக்கும் சோகமான காட்சி - எதிர்பார்த்திருந்தாலும் கண்ணீரை வரவழைக்கிறது. தன்னைத் திட்டிய நண்பனின் ஆள் பேசிய சிடி கிடைத்ததும் கோபமாக நண்பனின் குருவைச் சிறையில் அடைக்கிறார் நாயகன். பட முடிவில் நாங்கள் எப்போது பிரிந்தோம், புதிதாகச் சந்திக்க என்று காமெடி செய்கிறார். நடுவில் ஏற்பட்ட மாற்றம் என்ன, குருவை ஏன் சிறையில் அடைத்தார், ஏன் விடுதலை செய்தார், நண்பனின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமலேயே படம் முடிகிறது.

பிரிவோம் சந்திப்போம் - சந்திப்பார்களா? சந்தி சிரிப்பார்களா?

4.பிடிச்சிருக்கு:

வேறு வழியில்லாமல் நாயகியைப் பிடிச்சிருக்கு என்றே படம் முழுக்கச் சொல்லி வரும் நாயகனின் கதை. ஏன் பிடிச்சிருக்கு, எப்படிப் பிடிச்சிருக்கு என்பதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. இத்தனைக்கும் நாயகி கொஞ்ச நாள் முன்னால் நாயகனைச் சிறையில் அடைத்தவள். வெளியூருக்காக பாடுபட்ட நாயகன், நாயகிக்குப் பிடிக்காது என்பதால் அதையும் அடக்கி வாசிக்கிறான். விடியோ கவரேஜ் இல்லை என்பதால் சண்டை போட்ட நாயகனுக்கு அபரிமிதமாக விடியோ கவரேஜ் கிடைத்தாலும் நாயகி "பிடிச்சிருக்கு" என்பதால் எதையுமே உபயோகப் படுத்திக் கொள்வதில்லை. குழப்பமான கதை!

பிடிச்சிருக்கு - என்ன பிடிச்சிருக்கு?

5.ஆயுதம் செய்வோம்:

வேறு யாரும் ஆயுதம் செய்யக்கூடாது, தாங்கள் மட்டும்தான் செய்வோம்; நாங்கள் சொல்லும் ஆளோடுதான் செய்யவேண்டும் என்றெல்லாம் நிபந்தனை வைத்து கூட்டாளிகளைக் கவிழ்க்க நினைக்கும் தோழர்களின் முழக்கம். எதிராளிகளைக் கவிழ்க்க முடியாத நிலையில் ஆயுதம் செய்ய கூட்டுக்கு ஆள் தேடுகிறார்கள் - இதோ எங்கள் அணித்தலைவன், இவர்தாண்டா மதச் சார்பற்ற தலைவி என்று பண்ணும் காமெடி இரண்டாம் பாதியை ரசிக்க வைக்கிறது.

ஆயுதம் செய்வோம் - காமெடி கீமடி பண்ணலியே?

6.ஆனந்த தாண்டவம்:

தோற்றாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அடுத்த முறைக்கு வேறு நாதியில்லை என்று ஆனந்த தாண்டவம் ஆடும் அம்மணியின் கதை. மும்பையில் குண்டு வெடித்தாலும் மூவரசம்பட்டு சாக்கடை அடைத்தாலும் மைனாரிட்டி பஞ்சாயத்து தலைவர் வெளியேறினால் போதும் என்ற சர்வரோக நிவாரணியே துணை என்று வாழ்கிறார் அம்மணி. ஓய்விலேயே செல்லும் முதல்பாதி, ஓய்விலேயே இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் இரண்டாம் பாதி; படம் முடிவு வரை க்ளைமாக்ஸ் தேர்தல்கள் வராததால் சொதப்பல்.

ஆனந்த தாண்டவம் - ஓவரா ஆடாதீங்கம்மா!

7.சரோஜா:

படத்தின் பெயருக்கு வித்தியாசமான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் - த்தியமூர்த்தி பவன் எதிரே ரோட்டில் நடக்கும் ஜாலியான சண்டை என்று. இந்தப்படம் வழக்கம்போலவே பல இயக்குநர்களால் குதறப்பட்டு இருந்தாலும், எப்போது படம் சூடுபிடிக்கும், எப்போது டல்லடிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. அவ்வப்போது ஊர்ப்பெரியவரோட சண்டை பிடிப்பது மாதிரி தெரிந்தாலும் அம்மா சொன்னவுடன் அமைதியாகிறார்கள் நாயகர்கள்; திடுதிப்பென்று செத்துப்போன அப்பா ஞாபகம் வந்து போடு.. எல்லாரையும் ஜெயில்ல போடு என்று மிரட்டுகிறார்கள் ஊர்ப்பெரியவரை. எனக்கு ஆறு மாசம், உணக்கு மூணு வருஷம் என்பது போல பஞ்ச் டயலாக்குகளும் உண்டு.

சரோஜா - சறுக்கும் ரோஜா!

8.அஞ்சாதே:

26 நவம்பர் வெளியீடு. நிறைய காரக்டர்கள், எது எங்கே எப்போது எப்படி நடந்தாலும் அதை வைத்து நம் கொள்கையை வலுப்படுத்திக் கொள்ள அஞ்சாதே என்பதுதான் கதையின் நாட். எதிரி நம் மேல குண்டு போட்டாச்சு, எதிரி மேலே ஏன் இன்னும் குண்டு போடலைன்னு கேட்க அஞ்சாதே, 16 வருஷம் முன்னாடி நீ போட்ட கடப்பாரைக்கு இந்த குண்டு சரியாப்போச்சு என்று சொல்ல அஞ்சாதே, ஏன் பணக்கார செத்தவனை மட்டும் கவனிக்கிறே என்று திசைதிருப்ப அஞ்சாதே, ஒருத்தனை சாகடிக்கத்தான் 200 பேரைக் கொன்னாங்க என்று சொல்ல அஞ்சாதே - எனப் பல அஞ்சாதேக்கள். விறுவிறுப்பாக போனாலும் வெறுவெறுப்பாக முடிகிறது - யாரும் எப்போதும் மாற மாட்டார்கள் என்பதை வலியுறுத்தும் கதை!

அஞ்சாதே - அஞ்சாமல் இருக்க முடியாதே!

9.குசேலன்:

பங்கு பிரித்த பிறகு ஏழையாக மாறிவிட்ட குசேலன், குபேரன் மீது போர்தொடுத்து, அவனை நல்வழிப்படுத்தும் கதை. குபேரன் வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சியை ஆதரிப்பதும், அது குசேலனுக்கு இன்னும் கோபத்தை உண்டுபண்ணுவதும் விறுவிறுப்பான காட்சிகள். க்ளைமாக்ஸில் குபேரன் குசேலனுக்கு செட்டில்மெண்ட் செய்து கண்கள் பனிக்கின்றன; ஆண்டி க்ளைமாக்ஸாக போரில் இருபுறமும் உதவியவர்கள் நடுங்கிக்கொண்டு இருக்கும் காட்சி நகைச்சுவையா சீரியஸா எனத் தெரியவில்லை.

குசேலன் - மாடி வீட்டு ஏழை!

10. தசாவதாரம்:

எனக்கு யார் கூட்டும் தேவையில்லை, நானே எல்லா அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் அணித்தலைவன், இன்றாவது நம்முடன் கூட்டு என்று வயிற்றில் பால்வார்ப்பாரா எனக் காத்துக்கிடக்கும் மேலூர்ப் பெரிசுகளை அலட்சியப்படுத்துகிறார். தப்பு - இங்கே எல்லாரும் தப்பு - நான் மட்டும்தான் சரி என்று பஞ்ச் டயலாக் விடுகிறார்; வாரம் ஒரு ஊருக்குச் சென்று விளையாட்டு காட்டுகிறார். வாரிசுகளை ஒழிக்கணும் என்று மனைவியை வைத்தும் பஞ்ச் டயலாக் விடுகிறார். ஊரில் உள்ள மற்ற பெரிசுகள் எல்லாம் இவரை பாம்பு என்று அஞ்சுவதா, பழுது என்று மிதிப்பதா என்று புரியாமல் டரியல் ஆகிறார்கள்.

தசாவதாரம் - பத்துக்கு ரெண்டு தேறும்!

 

blogger templates | Make Money Online