Showing posts with label சுயதம்பட்டம். Show all posts
Showing posts with label சுயதம்பட்டம். Show all posts

Jan 8, 2014

கரியும் கசடுகளும் கொஞ்சம் கண்ணீரும் - கரும்புனலின் கதை

May you live in interesting times என்று ஒரு சீனத்துச் சாபம் ஒன்று உண்டாம். சிலபல வருடங்களுக்குப் பிறகு கதையாகச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் பல விஷயங்கள் வாழும்போது கொடுமையாகத்தான் இருக்கின்றன. 

ராஜீவ் காந்தி கொலையானபொழுது பீஹாரின் ஒரு மூலையில் இருந்தேன். என் தலைவர் தமிழர்களால் கொல்லப்பட்டார், எனவே நாம் தமிழர்களைக் கொல்வோம் என்பதற்கு மேல் வேலை செய்யாத மூளைக்காரர்களால் நிரம்பிய ஊர். இத்தனை வருடம் கழித்து பூட்டிய அறைக்குள் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டு பயந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக மிச்சமிருந்தாலும்,  உண்மையா பொய்யா என்று தெரியாத வதந்திகளால் வெளியே நடந்த கலவரத்தைவிட உள்ளுக்குள் நடந்த கலவரத்தை வாழும்போது interesting ஆகத்தெரியவில்லை. 

ரயிலி ஏறி, ஜன்னலோர சீட் பார்த்து அமர்ந்தவனை எழுப்பி பளாரெனக் கன்னத்தில் அறைந்து பர்ஸைப்பிடுங்கிக்கொண்டு சென்ற கதை, இப்போது மட்டும்தான் Interesting.

டிசம்பர் ஆறாம்தேதி எதோ எங்கேயோ கலவரம் என்று அரைகுறைத் தகவல்களோடு அயோத்திக்கு மிகப்பக்கமாக ரயிலில் செல்லும்போது எரியும் குடிசைகளைப்பார்த்தது, சுரங்கச் சாலையைக் கடக்கும்போது காரணம் சொல்லாமல் போலீஸால் கைது செய்யப்பட்டது, ஆற்றில் குளிக்கும்போது சாம்பல் உள்ளே சென்று வாந்தியாக வெளியே வந்து 3 நாட்கள் சலைன் உதவியோடு மட்டுமே வாழ நேர்ந்தது,  பீஹாரைப் பிரிக்க ஜார்க்கண்ட்காரர்கள் கலவரம் செய்ய நடுத்தெருவில் ராத்திரியில் நின்றது, ஓட்டிச்சென்ற ஜீப் ஆளரவமில்லாத அதலபாதாளத்தில் உயிரைவிட்டது..

அமோகமாகவே சபிக்கப்பட்டிருக்கிறேன், Interesting காலங்களில் வாழ.

கரும்புனல் அட்டை
வீடு, குறுகிய நட்புவட்டம், கல்லூரி என்று “பழம்” வாழ்க்கை வாழ்ந்துவந்த எனக்கு, நிலக்கரிச் சுரங்க நகரியங்களில் தனியாக வாழ நேர்ந்தபோது ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி கொஞ்சநஞ்சமானது இல்லை. ஊழலை எப்படியெல்லாம் விஞ்ஞானமாக்கலாம் என்றே ஏகதேசம் சிந்திக்கும் மேலதிகாரிகள்;  நுனிநாக்கு ஆங்கிலம் நாகரிகமான தோற்றம் உள்ளே சாக்கடையான மனது கொண்ட எஞ்சினியர்கள்; கழட்டும் எஞ்சினை ஒருவேளை கீழ்ஜாதிக்காரன் தொட்டிருப்பானோ என்றெல்லாம் யோசிக்கும் சுரங்க ஊழியர்கள்; விவசாயம் செய்வதையும் கலவரத்தில் எதிர்மதக்காரனைப் போட்டுத்தள்ளுவதையும் ஒன்றேபோல நினைக்கக்கூடிய மக்கள்... எந்தக்கல்லூரியும் சொல்லித்தராத வாழும் கலையை எனக்குச் சொல்லித்தந்தது பீஹார்.

ஆனால், அந்தக்காலம் மட்டும் அல்ல.. எழுதிப்பழக்கமில்லா என்னை ஒவ்வொரு எழுத்தாக அன்பாகவும் அடித்தும் திருத்திவரும் நண்பர் குழாம் அமைந்திருக்கும் இந்தக்காலமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. நாம ஒண்ணை எழுதினா அது ஒழுங்காத்தான் இருக்கணும் - என்று குழுவாகச் செயல்பட்டு ஊக்குவிக்கும் உடன்பிறவா சகோதரர்கள் இலவசக்கொத்தனார், டைனோபாய்; நீளமாக எழுதவே சோம்பேறித்தனப்பட்ட என்னை விர்ச்சுவல் பிரம்பால் அடித்து முதல் நாவல் எழுத வைத்த பா.ராகவன்; எவ்வளவு வேலை இருந்தாலும் நான் அனுப்பியதைப்படித்து உடன் திருத்தம் சொல்லும் சொக்கன்; தன்னைத் திட்டியே எழுதினாலும் புன்சிரிப்போடு கடக்கும் என் இல்லாள்..இதுவும் சுவாரஸ்யமான காலம்தான். ஆனால் கொடுமைகள் இல்லாத, சுகமான சுவாரஸ்யம்.

இந்த நாவலை எழுத எந்தப் பிரயத்தனமும் தேவைப்படவில்லை. பெரும்பாலும் நடந்த சம்பவங்களை ஒரு கதைச் சரட்டில் கோப்பதைத் தவிர.  

--கரும்புனல் நாவலில் பதிந்திருக்கும் என்னுரை.
--சில பழங்கதைகளுக்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.
--வம்சி பதிப்பக ஸ்டாலில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் 

Jul 25, 2012

”அல்வா” - வளர்ந்த கதை.

தமிழ் பேப்பர் என்று ஆரம்பிக்கப் போகிறோம். நீ தொடர்கதை எழுது. கட்டளையிட்டார் பாரா.

தொடர்கதையா? காமெடி பண்ணாதீர்கள். ஏதோ சீவக சிந்தாமணியை உல்டா பண்ணச் சொன்னீர்கள், செய்தேன். தொடர்கதை ஃபார்மட்டுக்கு எல்லாம் என் எழுத்து சரிப்பட்டு வராது என்றேன்.

இப்படியே சொல்லிகிட்டிருந்தா எப்படி. தலைப்பு அல்வா.  இந்தா பிடி நாட். பினாத்தல் சுரேஷ் அரபு ஷேக்கோட பொண்டாட்டியோட ஜல்சா பண்றான். அது ஷேக்குக்குத் தெரிஞ்சு போயிடுது. பினாத்தல் ஓடறான். இதை டெவலப் பண்ணி எழுது.

சரிதான். இந்த ஆசாமி கதை எழுதச் சொல்லவில்லை, என்னை ஜெயிலுக்குப் போகவைக்கத் திட்டமிடுகிறார் என்று புரிந்தது.

ஆனாலும் முதல் வாரத்தில் ஆளை மற்றும் மாற்றி ஏறத்தாழ இதே நாட்டைத்தான் எழுதினேன். எழுதும்போதே இந்த மேட்டரைத் தொடரக்கூடாது, எதாவது உருப்படியா எழுதலாம். உடனே நினைவுக்கு வந்தது ஆயில் ரிக்குகள். வேலை விஷயமாக அடிக்கடி போயிருக்கிறேன். ஹெலிகாப்டரில் இருந்து பிடிமானம் இல்லாத இடத்தில் இறக்கி விடுவார்கள். சிறை மாதிரி வாழ்க்கை. பல அறைகளுக்கு உள்ளே போகக்கூடாது என்று கட்டுப்பாடு. உள்ளே தனி அரசாங்கம். க்ரைம் கதைக்கு ஏற்ற செட்டப். ஹீரோவை இங்கே கொண்டு வரலாம்.

ஏன் ஹீரோ இங்கே வருகிறான்? கிட்நாப் செய்யப்பட்டு வருகிறான்.. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிமானம் கிடைத்து கதை உருவாகத் தொடங்கியது. 

பர்ப்பெச்சுவல் எனர்ஜி என்பது எல்லா அறிவியல்வாதிகளுக்கும் என்றும் மாறாப் பேராசை. இதைக் கொண்டு வரலாமா? ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன்.  ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது? இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி.

பல்ப் ஃபிக்‌ஷன் வகைதான். படித்தவுடன் மறக்கும் கதைதான். ஆனால் அதற்காக எதோ ஒன்றை எழுதிவிடக்கூடாது. யாராவது ஒருவர் சீரியஸாக எடுத்துக்கொண்டு இதெல்லாம் ஒரு லாஜிக்கா? விமர்சனம் எழுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே? என்று கேட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

பார்த்த பழகிய இடங்களை மட்டும் எழுதலாம். தெரியாத இடங்களைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். 

யூபிஎஸ் பார்சல் சர்வீஸ் சீருடையில் நட்சத்திரங்கள் மின்னின என்று எழுதி, வெளியிடுவதற்கு முன்னால் நண்பர் டைனோபாய்க்கு அனுப்பினால் அடிக்கவே வந்துவிட்டார். யூபிஎஸ் ஆசாமிகள் எப்போதும் ஷார்ட்ஸ்தான். தெரிஞ்சுகிட்டு எழுது என்று சொல்ல, மாற்றினேன். 

தீவிரவாதப்பணம் எப்படியெல்லாம் கைமாறுகிறது என்று நாராயண் விளக்கமாகச் சொன்ன விஷயங்களைக் கதையில் தேவையான இடத்தில் புகுத்தினேன்.

கதையே படிக்காத கொத்தனாரைப் படுத்தி எடுத்தேன். உனக்காகப் படிக்கிறேன். இங்கே ச் வரணும் ப் வரணும் என்று சந்தி திருத்தினான்.

கதைக்கான விமர்சனமாக, என் சுதந்திரத்தைச் சில மணித்துளிகள் அதிகப்படுத்திய தங்கமணியை மறந்தால் மறுவேளை சோறு கிடைக்காது.

பல்ப் ஃபிக்‌ஷன்தான். ஆனால் நிறைய உழைப்பையும் நம்பகத் தன்மைக்கான தேடலையும் கொண்ட பல்ப் ஃபிக்‌ஷன்.

தமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே பலர், இது நாவல் ஃபார்மட். மொத்தமாகப் படித்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள். இப்போது மொத்தமாக.. இன்னும் சில நாட்களில்..

Aug 18, 2011

கல்யாணச்சாவு?

சந்தோஷம் என்பதை இருக்கும்போது உணர முடியாது என்று ஒரு வசனம்..

எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்..

வெளியூரில் இருக்கையில் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஃபோன் காலில் சக்கரை அளவு எண்களை மட்டும் கேட்டுக்கொண்டு " பார்த்துக்கோம்மா" வுடன் விட்ட நாட்கள்.

ஊரில் இருக்கையில், நண்பர்களைப் பார்க்க, அரட்டை அடிக்க, ஊர்சுற்ற என்ற நேரம் ஒதுக்கி சாய்வு நாற்காலியைப்பற்றிச் சிந்திக்காமல் விட்ட நாட்கள்..

7 மணிக்கு எழுந்தாலும் தூக்கம் வராமல் நாலரைக்கே எழுந்தாலும் சூடான காபிக்காக அவளை உருட்டிய நாட்கள்..

எனக்குப் பிடித்த கறிகாய் சமைத்து சாப்பிடும்போது முகத்தையே பார்க்கும்போது, எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்தும் "சச்சின் அந்த ஷாட் ஆடியிருக்கக்கூடாது" என்று அவள் anxiety ஐ அதிகப்படுத்திய நாட்கள்..

தொடர்களின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டவளைத் தொடரின் தரத்துக்காகக் கிண்டல் அடித்த நாட்கள்..

வெளியூரின் மழை குளிரிலும் மேடு பள்ளங்களிலும் எங்கள் மகிழ்ச்சிக்காக உடன் வந்தவளின் உபாதைகளைச் சிந்திக்காமல் கும்மாளம் போட்டு வேகமாக வரச் சொன்ன நாட்கள்..

சில்லறை ஆசைகளை அலட்சியப்படுத்தி உனக்கென்ன தெரியும் என் priorities என்று எடுத்தெரிந்து பேசிய நாட்கள்..

நினைவின் அடியாழத்து வறுமை நாட்களில் உணவுப்பங்கீட்டில் தன்னைத் துறந்தும் மற்றோர் சாப்பிடாததற்கு எரிந்து விழுந்த நாட்கள்..

எல்லா நாட்களும் மறந்து..

பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..

பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்?

Oct 25, 2010

அல்வா!

தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை எழுதி வருகிறேன். திரில்லர் என்பது மட்டும்தான் ஆரம்பிக்கும்போது போட்டுக்கொண்ட விதிமுறை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கேன்வாஸை விரிவுபடுத்தி ஃப்யூயல் செல் ஆராய்ச்சி, தொழில் ஒற்றறிதல் (industrial espionage-ங்க :-)) என்று எகிறி, இந்தியா, மத்தியகிழக்கு, கோஸ்டா டி ஸொல், பென்சில்வேனியா, நடுக்கடலில் ஆயில்ரிக் என்று எல்லா இடங்களுக்கும் பறக்கிறது கதை.



ஓரளவுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியவுடன் போஸ்டர் ஒட்டலாம் என்று காத்திருந்தேன். இப்போது கதை கியர் ஷிஃப்ட் ஆகிவிட்டது, ரன்னிங்கில் ஏறுகிறவர்கள் வசதிக்காக:

1

2

3

4

கருத்துகளைச் சொன்னால் தன்யனாவேன்.

Aug 1, 2010

அமெரிக்க பணயக் கட்டுரை - 2

கலாசாரத் தேடலின் நடுவே ஒரு சிறிய இடைவெளி விடவேண்டியதாகிவிட்டது. மாபெரும் ட்விட்டர், ப்ளாக்கர் மற்றும் ஆம் ஆத்மிகளின் சந்திப்பில் அவ்வப்போது சிற்றுரை பேருரை Bore உரை எல்லாம் ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தங்களினால்.

பத்துமணிக்கு அழைத்து போடப்பட்ட போஸ்டர்களின் விளைவால் பதினோரு மணிக்கு எழுந்து தயாராகச் சென்றேன். இலவசனார் காலை உண்டி கொடுத்தபின் தான் தயாராவேன் என்ற என் பிடிவாதத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டி இருந்தது.


நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது தீவிரமாக கமெண்ட் போட்டதை இன்றும் எண்ணி வருந்தும் மணியன் @rsmanyan, நீங்க எழுத ஆரம்பித்த காலத்திலெல்லாம் நான் சின்னப்பையன் என்று என் வயதைக் குறிவைத்துக் கொலைவெறி காட்டிய @forvino, எவ்ளோதூரம்தான் போறானுங்க பார்க்கலாம் என்று அமைதியாக இருந்த @the_tweedy, வைஃபாலஜி மேலுள்ள கோபத்தை கனல் அடங்காமல் காத்துவரும் பத்மா அரவிந்த் @padmaa ஆகியோருடன் மொக்கை போட ஆரம்பிக்க தீவிர இலக்கியமும் உலக சினிமா தாகமும் அடங்காத ஒருபக்கம் @orupakkam, (அடங்காத மட்டும்தான் உண்மை, மற்ற அட்ஜெக்டிவ் எல்லாம் சும்மா பில்ட் அப்புக்கு :-) வயதான, போலி டைனோபாய் @dynobuoy, சேவல்பண்ணைக்கு குடும்பத்துடன் வந்துவிட்டிருந்த இளா @vivaji (நோயாளிகள் நேரம்தப்பாமல் மாத்திரை சாப்பிடுவது போல் வெளியே தனியாகச் சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்பினார்), வண்ண உடைகளை கவனமாக்த் தவிர்த்த வெட்டிப்பயல் பாலாஜி @vettipaiyal, எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகுமார் @ivansivan, இன்னும் என்னவெல்லாம் எழுதி சமுதாயத்தைக் கொடுமைப்படுத்தலாம் என சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த திண்ணை துக்காராம் @thukaram என்று மொக்கை களைகட்டியது.

வந்திருந்தவர்களின் அன்பான கேள்விகளின் வீச்சு: “நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளராமே? ஆமாம், என்ன எழுதறீங்க?” “நீங்க எழுதின எல்லா புக்கும் படிச்சிருக்கேன், ஆமாம், ப்ரேசில் சமையல் குறிப்புகள் நீங்கள் எழுதினதுதானே?” “உங்க ட்விட்லே எல்லாம் ஒரு ஸ்பார்க் தெரியும். ஆமா, உங்க ஹாண்டில் என்ன?” “ஒரு சக எழுத்தாளராக டேன் ப்ரவுன் பற்றி உங்கள் கருத்தென்ன?” “அடுத்த புக் எப்போது? தற்காப்பா இருக்கவேணாமா?” போன்ற கேள்விகளுக்கு புன்னகையை பதிலாக்கினேன். இளிச்சவாயனாக ஆக்கிவிட்டார்கள் என்பதன் இடக்கரடக்கல் என்பதறிக. (ஃபோட்டோக்கள் வேறு காமராவில், தனியாகச் சேர்க்கப்படும்)

மதியம் என்று ஆரம்பித்த பயணத்திட்டம் மாலையாக மாறி அப்போதும் மொக்கை தொடர, முன்னிரவிலேயே கிளம்ப முடிந்தது. வழியில் பயணத்தில் சேர்ந்த கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோபாலன், பேசும்போது புஷ்பா தங்கதுரை.



அட்லாண்டிக் சிட்டிக்கு எங்களுக்கு முன்பே வந்து காத்துக்கொண்டிருந்தார் சத்யராஜ்குமார் @ksrk. இதற்காகவா காத்திருந்தாய் சத்யராஜ்குமாரா? என்னும் அளவுக்கு அவரைப் படுத்தினோம். ஆட்டம் கொண்டாட்டம் சூதாட்டம் நிரம்பிய ஊரிலும் இசை நீர்வீழ்ச்சி போன்ற உபத்திரவமில்லாத வஸ்துக்களைத் தேடிக் கண்டுபிடித்துக் காட்டினார்.



பாஸ்டன் பாலா @snapjudge வந்தார்.அவருடைய செறிவான டாட்நெட் கட்டுரைகளைப் பற்றிய விவாதங்களைத் தொடங்க அவர் ரசிகர் கூட்டம் தயாராக இருந்தும் மற்றவர்களின் கொலைவெறிப்பார்வையால் வழக்கமான மொக்கையே போட்டு காஸினோவுக்குச் சென்று காசு இனி நோ என்று பதம் பிரித்துக் காட்டச் சூளுரைத்தோம்.



கலாசார நுகர்வு பூர்த்தியாகும் முன்னரே நேரம் கடக்க ஆரம்பித்தது. “அப்போ இன்னிக்கும் மேற்படி டான்ஸ் இல்லியா?” சோகத்தோடு கிளம்பும் நேரத்தில் குற்றாடை நங்கையர் சிலர் சூதாட்ட விடுதியில் ஆட ஆரம்பித்தார்கள். கலைக்கண்ணோடுதான் பார்க்கிறேன் என்று கேட்பதற்குமுன் பதில் சொல்லத் தயாரானேன். ஆனால் என்னை யார் பார்த்தார்கள்?



ஆனால் முழுமையான கலாச்சார நுகர்வும் பகிர்வும் இனிமேல்தான் என்று சூளுரைக்கிறார் கொத்தனார். எனவே, சிறிய இடைவேளைக்குப் பிறகு, கலாசாரப் பகிர்வைப் பொதுவுடமைப்படுத்துகிறேன்.

அட்லாண்டிக் சிடிக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி:

Jul 31, 2010

அமெரிக்க பணயக் கட்டுரை - 1

விமானத்தை விட்டு வெளியே வந்ததுமே அமெரிக்கா தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. நீண்ட வரிசை. பிரிவினை பார்ப்பதில்லை எனத் தண்டோரா கொட்டும் ஏகாதிபத்தியவாதிகள் தன் குடிமையாளருக்குத் தனிவரிசை வைத்ததையும் சகித்துக் கொள்ளலாம், வந்தாரை வரவேற்க 33 சத ஒதுக்கீடு கூட இல்லாமல் 20க்கு மூன்றே வரிசைகளை வைத்திருந்தது துணுக்குறச் செய்தது. எதற்காக வந்தாய், என்ன காரியம், காரணம் என்று தேவையில்லாத ஆயிரம் கேள்விகளோடு அபசகுனத்தின் உச்சமாக எப்போது திரும்பப் போகிறாய் என்றும் கேள்விகள். அதைத் தாண்டி வந்தாலும் பெட்டியைக் குடையும் வகையில் கஷ்டம் கேள்விகள்.

அமெரிக்காவில் எல்லா மொழி இன மக்களும் இருக்கிறார்களாம். ஆனால் கலாச்சாரத்தைத் தெரிந்து கட்டுரைகள் எழுதிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு நண்பன் அழைத்துச் சென்ற அத்தனை கடைகளிலும் தமிழே வழக்குமொழியாக இருந்தன. பணம் கொடுக்கும்போது ஏன் ரூபாயாகக் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் மட்டும் இன்னும் அழியவில்லை.

விடாப்பிடியாக மைல்களிலும் பாரன்ஹீட்களிலும் மட்டுமே சம்பாஷிக்கிறார்கள். தெருவிலிருந்து ஸ்விட்ச் வரை எல்லாம் தலைகீழ். கீழே அழுத்தினால் லைட் எரிகிறது, மேலே இழுத்தால் தண்ணீர் கொட்டுகிறது, கதவைத் தள்ளி உள்ளே செல்கிறார்கள். இந்தியர்கள் பூமிப்பந்தின் மேல்பாகத்திலும் அமெரிக்கர்கள் கீழ்பாகத்திலும் இருப்பதால் எல்லாமே தலைகீழாக இருக்கலாமோ என்ற என் அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

தொலைக்காட்சியிலும் அமெரிக்கர்கள் வெள்ளி மதியம் சமையல்தான் செய்கிறார்கள், தாலி பாக்கியத்துக்காக பெண்கள் போராடுகிறார்கள், மிகச் சொற்ப விலைக்கு பிருஷ்டம் இளைக்கிறது, ப்ளாஸ்டிக் விந்தைகளை வாங்கினால் டார்ச்லைட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. உண்மையான கலாச்சாரத்தை அறிவதற்கு இன்னும் கொஞ்சநாள் பொறுத்திருக்கவேண்டும் போல இருக்கிறது.

அறிந்ததும் தொடர்கிறேன்.

Jun 3, 2010

என்னோட நண்பனுக்கு எட்டு பொண்டாட்டி

எழுதுவதற்கு ஆசை வந்தவுடன் முதலில் புனைபெயரைத்தான் தேட ஆரம்பித்தேன். சுரேஷ், சுரேபா, ராமசுப்பு, சுரேஷ்ராமமூர்த்தி என்று மனதுக்குப் பிடிக்காத பலவிதமான பெயர்கள் முதல் பரிசீலனையைத் தாண்டவில்லை. பதிவு எழுத ஆரம்பித்தபோதுகூட பதிவுக்குதான் பினாத்தல்கள் என்று பெயர் வைத்திருந்தேனே ஒழிய என் பெயர் சுரேஷ் என்றுதான் இருந்தது. பிறகு பல சுரேஷ்கள் குவிய ஆரம்பித்த பிறகுதான் பினாத்தல் சுரேஷ் என்று ப்ளாக்கர் ஹாண்டிலை மாற்றினேன். இந்தப் பெயர் கிண்டல் எழுத்துக்கு ஓக்கே, உருப்படியா எழுதினா? என்ற எண்ணத்தை, முதல்ல உருப்படியா எழுது, அப்புறம் புனைபெயர், பூனைபெயர் எல்லாம் பாத்துக்கலாம் என்று ஒத்திவைத்தேன்.


அந்த உருப்படியா எழுதுவது மட்டும் விலகிக்கொண்டே போனது. அவ்வப்போது ஒன்றிரண்டு தப்பிப்போனாலும்.

யாருடைய மூளைக்குழந்தையோ, இன்னும் எனக்குத் தெரியவில்லை, ஐம்பெருங்காப்பியங்களை எளிய நாவல்களாக்க உத்தேசம், உன்னால் முடியுமா என்று கேட்டபோது “என்னை வச்சு காமடி கீமடி பண்ணலியே” என்றுதான் கேட்கத் தோன்றியது. ஆனால் பயம் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குதானே வரும்? எனக்குதான் அந்தச் சுமையே கிடையாதே.

குருட்டுத் தைரியத்தில் ஒப்புக்கொண்டு சீவகசிந்தாமணியைப் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள்களில் ஆர்வம் என்று சொல்லிக்கொள்ள முடியாது, இருந்தாலும், நாமளும் இதையெல்லாம் படிக்கணும்டா என்பது மாதிரி ஆர்வம் எப்போதாவது வந்து போகும்.

நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான்

என்பதுபோல சந்தத்தோடு, கொஞ்சம் கஷ்டப்பட்டால் புரிந்துவிடக்கூடிய பாடல்கள் சில இருந்தாலும், பல பாடல்களில் இருக்கும் சொற்கள் பிரித்தாலும் புரியாமல், சேர்த்தாலும் புரியாமல் இலக்கியத்தரமாக இருந்தது. (இப்போ புரியுதா இலக்கியத்தரம்னா இன்னான்னு?)

சரி, உரையை எடுத்துப் படிக்கலாம் என்றால் பலநேரங்களில் செய்யுளே புரிந்துவிடுகிறது, உரை புரியவில்லை. வந்தான் என்று சொல்வதற்கு வந்தனன், நின்றனன், சென்றனன் னு உரையாசிரியர் வேற இலக்கியத்தரம் வளர்க்கிறார்.

எனக்கு வேலை சொன்ன பாராவை சாட்டில் பிடித்தேன்.

“படிக்கறதுக்கே கஷ்டமா இருக்கே, எதாவது படிக்கச் சுலபமான மொழியிலே உரை இருக்கா, கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்”

“அதானேய்யா உனக்குக் கொடுத்த வேலை! படிக்க சுலபமா உரை இருந்தா அதை ரெகமண்ட் பண்ணிட்டு போயிரமாட்டோமா?”

இப்போதுதான் புரிந்தது அந்த ஐடியாவின் அருமை. தமிழ் மீடியத்தில் படித்து, யாப்பு இலக்கணத்தில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு வெண்பா வெண்பாம் என்றெல்லாம் மற்றவர்களை இம்சிக்கும் எனக்கே புரிவதில் இவ்வளவு கஷ்டம் இருந்தால், தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்திருக்கும் ஆர்வத்தை மட்டுமே கொண்ட தலைமுறைக்கு எப்படி இருக்கும்?

விளையாட்டாக ஆரம்பித்ததைக் கொஞ்சம் தீவிரமாக்கினேன். சீவகன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்தான். “வா சுரேஷ், சும்மா மொக்கைப்பதிவே போட்டுகிட்டிருக்காம என்கிட்டே வா.. என் கதை என்ன தெரியுமா? நான் ஏன் எட்டு கல்யாணம் செஞ்சேன் தெரியுமா? எத்தனை திருப்பம் தெரியுமா என் வாழ்க்கையில்?”

சீவக சிந்தாமணி - தமிழ் அறிஞர்களுக்காக எழுதப்படவில்லை. நமக்காக. நான் எப்படி ஒரு நாவல் இருந்தால் படிப்பேனோ, அப்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். “நூலையும் உவமைகூற இயலாத மெல்லிய இடை ஒடிய விம்மி அடி பருத்த “ என்றெல்லாம் இருக்கும் அட்ஜெக்டிவ்களை கழட்டிவிட்டு நேரடியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முயற்சி. செய்யுளுக்குச் செய்யுள் அர்த்தம் சொல்லும் உரை அல்ல. “வா சீவகா, உட்கார்” என்று நெருங்க வைக்கும் முயற்சி. தேமா புளிமா கூவிளங்காய் தெரிந்து புணர்ச்சி இலக்கணம் தெரிந்த பண்டிதர்களுக்காக அல்ல - ”தமிழில் எதோ காப்பியம் எல்லாம் இருப்பதாகச் சொல்றாங்க, என்ன மேட்டர்னு புரியலை” என்பவர்களுக்காக.

தீக்குச்சி விழுந்து தெரிக்குதடி -கருந்தேக்குமரக் காடு வெடிக்குதடி” என்று எளிமையாக அக்கினிக்குஞ்சு பாட்டை ரீமேக் செய்திருக்கிறாரே வைரமுத்து, அதைப்போல ஒரு முயற்சி.

எழுதி முடித்தபின் புனைபெயர் இப்போது தேடலாம் என்ற எண்ணம் வந்தது.

ராம்சுரேஷ் என்ற பெயரில் இதோ, என் முதல் புத்தகம். உங்கள் ஆதரவை எதிர்பார்த்து:




இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கு படத்தின் மேல் க்ளிக்கவும். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

Jan 27, 2010

காபரே கருத்துகள்

தாய்லாந்து சென்றிருந்தேன் குடும்பத்தோடு. வேண்டாம், அந்தக்கேள்வியைக் கேட்காதீர்கள், ஆயிரம் முறை பதில் சொல்லியாகிவிட்டது.

புன்னகை தேசம் என்று விமானநிலைய வரவேற்புப்பலகை சொல்கிறது. உண்மை. இருபது ரூபாய்க்கு மாங்காய் வாங்கினாலும் விற்பவர் சொல்லும் கணக்கில்லாத கபுன்கா (நன்றி :-))வுடன் புன்னகைகள் இலவசம்; 1000 கிலோமீட்டருக்குள் கடல் மலை அருவி காடு என எல்லா இயற்கையையும் பார்க்க நீந்த குளிக்க களிக்க - பதப்படுத்தி வைத்திருக்கும் சுற்றுலாத்துறை -- மிக நிறைவான பயணம். விரிவாக எழுதினாலும் எழுதுவேன். 1000 ஃபோட்டோக்கள், 5 மணிநேர வீடியோ இருப்பதால் எதை எழுத எதை விட என்று தெரியாமல் இருக்கிறேன் இப்போதைக்கு.


ஆனாலும், இந்த விஷயத்தைப் பற்றி உடனடியாக எழுதியே ஆகவேண்டும். ஒரு காபரே ஷோ பார்த்தேன்.


காபரே என்றதும் எனக்கும் கச்சடாவான எண்ணங்கள்தான் வந்துகொண்டிருந்தன, ஸ்பெயினில் ஒரு வருட ஆரம்ப காபரேவைப் பார்க்கும்வரை - பத்தாண்டுகளுக்கு ஒரு பாடலை எடுத்துக்கொண்டு நூறாண்டுகளின் இசை ரசனை மாற்றத்தை நடனத்தோடு சொன்ன காபரேதான் கண்ணைத்திறந்தது - சிஐடி சகுந்தலா ஆடுவது காபரே அல்ல என்று.

தாய்லாந்து காபரேவும் ஏறத்தாழ இதேபோலத்தான். பல பாடல்களுக்கான நடனங்களை லூஸாக ஒரு கதையை வைத்துத் தொகுத்தது. கடவுள் நவரத்தினங்களை அறிமுகப்படுத்துகிறார் - ஒன்பது மிக அழகிய பெண்கள், அவர் ரத்தினத்துக்கான நிறத்தில் ஆடை அணிந்து, க்ரூப் டான்ஸர் புடைசூழ ஆடி அறிமுகமாகிறார்கள். உடனே சாத்தானின் வேலையால் நவரத்தினங்களும் உலகின் பல்வேறு திசைகளிலும் பந்தாடப்பட, அடுத்த காட்சியில் இருந்து ஒவ்வொரு ரத்தினமும் தான் சேர்ந்த நாட்டின் கலாச்சார நடனம் ஆட (ஒரு ரத்தினம் தாய்லாந்து, அமெரிக்கா, ப்ரான்ஸு, இந்தியா, சீனா, ஜப்பான் - எல்லா நாட்டு நடனங்களும்) பின் சேர்கிறார்கள். வைரம்தான் நவரத்தினத்துக்கும் தலை, டிஃபானிதான் வைரத்தின் அத்தாரிட்டி என்று முடிக்கும்போதுதான் ஒன்றரை மணிநேரமும் விளம்பரம் என்று உரைக்கிறது.


ஒவ்வொரு காட்சியிலும் விஸ்தாரமான ஒப்பனைகளுடனும் அழகோ அழகான உடை அலங்காரங்களோடு மிக மிக அழகான பெண்கள் அந்தந்த நாட்டிற்கேற்ப பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளில் ஆடுகிறார்கள். ஆட்டம் என்றால் என்ன ஆட்டம்! கலா மாஸ்டர் சொல்வதுபோல எல்லாம் ஹெவி ஸ்டெப்புகள் :-) பத்துபேருக்குக் குறையாத க்ரூப் டேன்ஸிலும் ஒரு ஸ்டெப் கூட தவறவிடாத துல்லியம்; சொன்னேனா? இந்தக் காட்சிகளுக்கு இடையே ஒரு நொடிகூட இடைவெளி இல்லை. அரங்கமாற்றம், ஒப்பனை, கேண்டீன் விற்பனை - எதற்கும் ஒருநொடியும் இடைவெளி இல்லை - அரங்கின் முன்பகுதியில் நகைச்சுவைக்காரர்கள் ஒரு பாட்டுக்கு ஆடி முடிக்கும்போது பின்பாதியின் அமைப்பு தயாராகிவிடுகிறது. ஆடிக்கொண்டே இடதுபக்கம் போகும் நடனக்காரி 20 நொடியில் வேறு ஒப்பனையில் வலதுபக்கம் தோன்றுகிறாள். மிக மிகத் துல்லியமான நேர ஒருங்கிசைவு.


அழகோ அழகான பெண்கள் என்றா சொன்னேன்? அழித்துவிடுங்கள். ஆடியது அத்தனை பேரும் ட்ரேன்ஸ் செக்ஸுவல்சாம். (திருநங்கை பொருந்திவருமா தெரியவில்லை) - சொல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று காட்சி ஓட்டுகிறார்கள், ஒரு நடுத்தர நகரத்திலேயே (பட்டாயா) இரண்டு ஷோக்கள் (அல் கஸார் ஷோ, டிஃபானி ஷோ) - அத்தனையும் அரங்கு நிறைகின்றன என்பதில், அதன் தரத்தைப் பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படவில்லை.

சொல்லவந்த முக்கியமான விஷயங்கள் இவைதான்:

இது போன்ற ஷோக்கள் மட்டுமின்றி நாட்டிலேயே பொதுவாக பல தொழில்களிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள், மிக சகஜமாக என்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். நம் ஊரில் மட்டும் இன்னும் இப்படிப் பிறப்பதையும் இருப்பதையும் குற்றமாக்கி, சக உயிரினமாகக் கூட மதிக்காமல் இருப்பதன் அசிங்கம் முழுமையாக உரைத்தது.

முதல் வரிசையில் அமர்ந்து பார்த்ததற்கு நான் செய்த செலவு சுமார் 800 இந்திய ரூபாய். காசைப்பற்றி சொல்வதற்கு காரணம், இதைப்போன்று இருமடங்கு செலவு செய்தாலும் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் நமக்குக் கிடைப்பது துணுக்குத் தோரணங்களே, இதுபோன்ற ஒரு பல்சுவை ஷோ இருக்கிறதா என்பதறியேன்.

பார்த்து பதினைந்து நாள் ஆனாலும் இன்னும் அந்த நிறைவான உணர்வை மனதில் உணர்கிறேன்.

Nov 2, 2009

பினாத்தல் வரலாற்றில் முதல் முறையாக!

முதல் முறையாக அச்சில் ஒரு சிறுகதை.



என் கதை அச்சாகவேண்டும் என்று வெறியாய் நான் என்றும் செயல்பட்டதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதி, பலமைல்தூர அஞ்சலில் போட்டு மறந்து, ஆரம்ப ஆர்வங்கள் எல்லாம் காணாமல் போய், வரவில்லையா சரி என்று சமாதானப்படுத்திக்கொண்டதும் பலமுறை அல்ல - இரண்டோ மூன்றோதான் எழுதினேன்.

பின் வலைப்பதிவுக்கு வந்தபின் பதிவின் உடனடிப் பதிப்பும் அதைவிட உடனடி விமர்சனமும் அச்சிற்கான காத்திருத்தலை தேவையற்றதாக்கியது.

இருந்தாலும் உள்ளுக்குள் அந்த ஏக்கம் ஒரு மூலையில் தொக்கிக் கொண்டே இருந்தது.

அச்சுக்கு கதை அனுப்புவது என்பது வேறு ஒரு வகை. அதற்காகச் செய்யப்படவேண்டிய ஜிகினாக்கள் வேறு என்று சொல்லிக் கொடுத்து அதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.

குங்குமம் 02-11-2009 தேதியிட்ட இதழில் “கைவண்ணம்” என்ற பெயரில் அச்சாகியுள்ளது. அதன் நகலை இங்கே குங்குமத்துக்கு நன்றியுடன் கொடுத்துள்ளேன்.

May 14, 2008

ஜெய்ப்பூரும் நானும்

வங்கதேசத்துப் புயல் லட்சம் பேரைக் காவுகொண்டது, சீனத்து நிலநடுக்கம் ஆயிரங்களைத் தாண்டுகிறது.. ஜெய்ப்பூரில் 60 -80 பேர்தான் பலி என்று நிம்மதியா அடைய முடிகிறது?
 
எண்ணிக்கையாகவே எல்லாச்சாவுச் செய்திகளையும் படித்துவிடமுடிகிறதா?
 
என்னால் முடிவதில்லை.
 
இயற்கைச் சீற்றங்களையும், சரக்கடித்த நேஷனல் பர்மிட் லாரி நெடுஞ்சாலையில் மல்லாந்து பலிகொள்வதும் விதி என்ற ஒற்றைச்சொல்லில் மறக்கடிக்கப்படலாம். ஆனால் மனிதன் உருவாக்கும் விபத்துகள்?
 
சைக்கிள்களில் அலாரம் கடிகாரங்களை டெட்டொனேட்டர்களாக வைத்து,  பயங்கொள்ள எந்தக் காரணமும் இல்லாத மக்கள் கூடும் இடங்களில் பொருத்தி, அதிகமாகக் கூடும் நேரம் பார்த்து, ஒரு வெடிப்பில் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு இடத்தில் என்று 20 நிமிடங்களில் 6 இடங்களில் வெடிக்கவைத்து, வெடிப்பின் விஸ்தீரணம் கூட தோட்டாக்களை வைத்து தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவன் என்ன கடவுளா? யார் விதியை யார் எழுதுவது? அவன் பக்கம் உள்ள நியாயம் (நியாயமாகவே இருந்தாலும்)கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப் படுகிறதா? மதம் கொடுத்த உரிமை, உரிமை மறுப்பு கொடுத்த கோபம் என்று இவற்றை நியாயப்படுத்த முடியுமா?
 
ஆலமரம் விழுந்ததால் கூட புற்களும் விழுந்தாகவேண்டும் என்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒரு இனத்தையே அழித்தொழிப்பு செய்தார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?
 
தலைவியே சிறைக்குச் செல்கிறாள், பேருந்தில் மாணவிகள் இருந்தாலென்ன, எரித்தே தீருவோம் என்றார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?
 
ரயிலை எரித்தார்கள் என்று எரித்த இனத்தையே சுத்திகரிக்க முனைந்தவர்களை நியாயப்படுத்த முடியுமா?
 
எங்கேயோ யாரோ யாரையோ அழிக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த 9 மணி பாஸ்ட் பாசஞ்சரைப் பிடித்தவர்களை வெடிக்கவைத்ததை?
 
அண்ணனுக்கு ஆதரவில்லை என்று சொன்னவனின் கீழ் வேலை பார்த்தவர்களை எரித்ததை?
 
யார் கொடுத்தார் உனக்கு இந்த உயிரெடுக்கும் உரிமை? மதம் கொடுத்ததா? வேறு வழியின்றி உனக்கு விழும் வாக்குகள் கொடுத்ததா? ஆட்சி உன் பக்கம் என்ற ஆணவம் கொடுத்ததா? கும்பலில் உன்னைத் தனித்து அடையாளம் காணமுடியாது என்ற பாதுகாப்பு கொடுத்ததா?
 
இந்தச் சாவுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்க என்னால் முடிவதில்லை.
 
சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வெளிவரும் ஒற்றைத் துளி ரத்தத்தையும் பார்க்கமுடியாமல் முகம் திருப்புகிறேனே, சாலையில் செத்துக்கிடக்கும் பூனையின் ரத்தம் பார்த்தும் வாந்தி கக்குகிறேனே, குழந்தைக்குச் சிறு கீறல் ஏற்பட்டு ரத்தம் சிந்தினால் மயக்கம் வருவதாக உணர்கிறேனே, நான் இப்படி பூஞ்சையாக இருந்ததில்லை - என் 22 வயதுவரை.
 
உத்தரப்பிரதேசத்தில் உள்ளமைந்த நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ரயில் பயணமாக பாபர் மசூதி இடித்த மறுதினம் சென்ற போதும் இப்படி ஆகவில்லை.
 
தமிழகத்தில் செத்தார் ராஜீவ் காந்தி என்ற ஒரே காரணத்தால் தமிழர்களைத் தேடித் தேடி பீகார் காங்கிரஸார் அடித்த போதும்கூட பூஞ்சையாய் மாறவில்லை.
 
உடன் வேலை செய்த மெக்கானிக் மதம் காரணமாக வெட்டிப்போடப்பட்ட போதும் கூட இந்த  ரத்த போபியா வரவில்லை.
 
இவை நடந்தபோதெல்லாம் கலவரத்தை வாய்மொழியாக மட்டுமே கேட்டிருந்தேன், விளைவுகளை மட்டுமே பார்த்திருந்தேன் - தாக்கத்தை உண்டுசெய்தனதாம், ஆனால் நிரந்தர மாற்றத்தை உண்டு செய்யவில்லை. நிரந்தர மாற்றத்தை உணர்ந்த நாள் தெளிவாகவே நினைவிருக்கிறது.
 
ஒரு இளங்காலை நேரம், பணியிடத்துக்கு நடந்து செல்லும்போது எதிர்ச்சாரியில் எந்த வண்டியும் செல்லாதது வியப்பாக இருந்தாலும் புதிதாக இல்லை - அடிக்கடி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவிக்கும்  "ஆர்த்திக் நாகாபந்தி" (சாலை மறியல்) பழகிவிட்டிருந்தது. ஆனால் பணியிடத்திலும் சலசலப்பு இல்லாதது, ஆட்கள் யாருமே கண்ணில் படாதது புதிதுதான்.
 
என் வேலையைப் பற்றி ஒரு வரி: நிலக்கரிச் சுரங்கம் நடத்துவது அரசாங்கம், அதற்கு இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்தில் என் பணி.  இயந்திரங்கள் பராமரிப்பையும், மராமத்தையும் மேற்பார்வை பார்த்து, உத்தரவாத நேரத்துக்குள் பழுதேற்பட்டால் அதைப் பரிசீலித்து என் நிறுவனத்துக்குத் தகவல் அளித்து சரிசெய்யும் செலவை ஏற்கவைக்கவேண்டியது என் பொறுப்பு.
 
யாரும்தான் இல்லையே, சரி இயந்திரங்களின் வேலைசெய்த நேரத்தைக் காட்டும் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று வண்டிகள் மேல் ஏறத் தொடங்கினேன்.  ஏறும்போது யாரும் கண்ணில் படவில்லை.. இறங்கும்போது ஒரு கும்பல் எனக்காகக் காத்திருந்தது. காட்டுவாசிகள்.
 
20 - 30 பேர் இருப்பார்கள். எதிரில் நான் தனியன். அவர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், வில் அம்பு - விஷம் தோய்த்த அம்பு. தலைவன் போலிருந்தவன் மிரட்டினான் - புரியாத பாஷை. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு. பதில் சொல்லக்கூட நா எழும்பவில்லை. அதிகமான பயத்தில் உடலில் பல மாற்றங்கள்,   வாந்தி வருவது போலிருந்தது. ஒருவன் வில்லை நாணேற்றத் தொடங்கினான்.
 
மூன்றாவது வரிசையில் இருந்த ஒரு ஆளுக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது. முன்வரிசைக்கு முந்தி வந்தான். பளாரென ஒரு அறை விட்டான். ஹிந்தியில் பேசினான். " இன்னிக்கு பந்த் னு தெரியாது? வீட்லேயே இருக்க வேண்டியதுதானே.. ஓடிப்போயிரு.." அவர்களிடம் திரும்பி.. "இவன் அரசாங்கம் இல்ல.. தனியார் கம்பேனி.. தெரியாம வந்துட்டான்.. ஓடச்சொல்லுங்க"  கண்ணில் குரோதத்துடன் கும்பல் வழிவிட மூன்று கிலோமீட்டர் எந்தப்பக்கமும் பார்க்காமல் ஓடியே வீடு வந்து சேர்ந்தேன்.
 
மரணம் தொட்ட அந்தக் கணத்தில் இருந்துதான் இப்படிப்பட்ட செய்திகளின் வீரியம் என்னைத் தாக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனால் உருவாக்கப்படும் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் எந்தச் செய்தியும் குறைந்தபட்சம் மூன்றுநாட்களாவது மனநிம்மதியைக் குலைக்கிறது.
 
இதை எழுத எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது - ஒருவேளை இப்படிப்பட்ட மரணங்களுக்குக் காரணமான யாராவது ரத்தம் சிந்தினால் அதைப்பார்த்து எனக்கு வாந்தி மயக்கம் வராமலும் இருக்கலாம்.
 
ஒவ்வொரு கலவரமும் குண்டுவெடிப்பும் கொண்டுசெல்லும் உயிர்களைத் தவிர்த்தும் இப்படி வாழ்நாள் முழுக்கப் பாதிப்புடன் வளைய வரும் என்னைப் போன்ற எத்தனை பேரை உருவாக்குகின்றதோ! இலங்கையில் ஈழத்தில் பாலஸ்தீனத்தில் ஈராக்கில் எத்தனை பேர் நாள்தோறும் இப்படிப் பாதிக்கப்படுகின்றார்களோ! ஜெய்ப்பூரில் இன்று எத்தனை என்போன்றோர் உருவானோர்களோ..
 
எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?
 
பி கு: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புச் செய்திகள் வெளிவந்த நேரத்தில் இலவசக்கொத்தனாருடன் மின்னரட்டையில் இருந்தேன், நாளை காலை ஒரு பதிவிடுவேன் என்று சொன்னேன். அவர் கேட்டார்.. எப்போ குண்டு வெடிச்சாலும் ஒரு கடமையாவே இதைச் செய்யறீங்களே..  எனவே காரணமான சொந்தக்கதையும் சொல்லியிருக்கிறேன்.

Jan 16, 2008

மொக்கை - பின்நவீனத்துவ பாட்காஸ்ட்!

முதல்லேயே சொல்லிடறேன் - இந்த மொக்கைக்கு க்ரெடிட் எனக்கு கிடையாது!

நான் எந்த வயசிலே தங்குதடையில்லாம படிக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகம் இல்லை.. எப்படியும் 12 - 13 வயசாவது இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆனா இன்னிக்கு பாடத்திட்டத்தில 5வயசில படிக்கச் சொல்றாங்க.. என் மகள்கள் ராத்திரியில் தூங்கறதுக்கு முன்னால என்கூடச் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 10-15 நிமிடமாவது படிக்காமல் தூங்குவதில்லை என்பது மகிழ்ச்சியைத் தந்தாலும்..

நிறைய ஃபேரி டேல்ஸை அடுத்தடுத்துப் படித்ததால் குழம்பியதாலோ, எழுத்தாளரின்(?!) மகளாக இருந்து கொண்டு பழைய கதையைச் சொல்வது தகுதிக் குறைவு என்று நினைத்ததாலோ..

இப்படி ஒரு கலந்துகட்டி கதையைச் சொல்லியிருக்கிறாள். இதில் கதாபாத்திரங்கள் யாவர், கதையின் நீதி ஆகியவற்றை பின் நவீனத்துவமாகவும் சொல்லி என் சிந்தனையைக் கிளறிவிட்டாள்!

கதையை இங்கே க்ளிக்கிக் கேளுங்கள்!

இந்தக்கதையின் நீதி புரிந்தவர்கள் எனக்குத் தனி அஞ்சலிலும், மற்ற சாதா மக்கள் பின்னூட்டத்திலும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Jan 15, 2008

எழுதியதில் பிடித்தது - பாஸ்டன் பாலா அழைப்பேற்று

ஒரு வருஷம் ஓடிப்போச்சே, இந்த ஒரு வருஷத்துல, எழுதிக் கிழிச்சதுல, எது ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லணும். அது ஏன்னும் சொல்லோணும். இதுதான் வெளையாட்டு.

- எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு


இப்படி சர்வேசன் ஆரம்பித்த விளையாட்டு, பாஸ்டனார் மூலமாக என்னிடம் வந்திருக்கிறது.

2007 ல் 76 பதிவுகள் போட்டிருக்கிறேன் - எனக்குப் பிடிக்காத பதிவுகளை நான் வெளியிடவே மாட்டேன்.

பினாத்தல்களை டயரிக்குறிப்புகளாக மட்டும் நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு பதிவு எழுதும்போதும், சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறேன்:

தப்பித் தவறி உள்ளே நுழையும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டும், அதற்கு பலரகமாகவும் பதிவுகள் போடவேண்டும், ஒரு கட்டுக்குள் நுழைந்துகொண்டு - இதுதாண்டா இருக்கும் பினாத்தல்லே - என்ற முன் தீர்மானத்துக்கு யாரும் வந்துவிடக்கூடாது - கரடுமுரடான சொற்களை உபயோகித்து யாருக்கும் அன்னியம் ஆகிவிடக்கூடாது, ஒரு பக்கச் சார்பு சிந்தனையின் வீச்சை குறைத்துவிடும், நண்பர்களைவிட எதிரிகளையே அதிகம் உற்பத்திக்கும் - என் ஈகோ எஞ்சினாய் இருப்பதை விட வாசகர்களின் ஆர்வத்தை அதிகம் மதிக்கவேண்டும்-- வலைப்பதிவுகளில் இல்லாதோர் படித்தாலும் புரியக்கூடியவையாய், படித்தோமே என்று வருந்தவைக்காமல் இருக்கவேண்டும் -- அதே நேரத்தில், என் கருத்துக்களை சமரசம் செய்துகொள்ளவும் கூடாது..

விஷன் ஸ்டேட்மெண்ட் படிக்கிற மாதிரி இருக்கா.. முழுமையாக இவற்றைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெருமளவு முயற்சிக்கிறேன். ஆனால் சிலசமயங்களில் அவசரத்தில் உப்புமா போட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால், இப்போதெல்லாம் எனக்கே பிடித்திருந்தாலும்கூட, சில நண்பர்களிடமாவது முன்கூட்டியே ஒரு சிறு குறிப்பாவது சொல்லாமல், அவர்கள் கருத்தறியாமல் வெளியிடுவதில்லை என்ற ஒரு சுயதீர்மானம் - மே மாதம் உப்புமாப்பதிவுகளால் நிரப்பிய நேரத்தில் ஒரு அனானி பின்னூட்டத்தால் தூண்டப்பட்டு எடுத்தேன். 7 மாசமா உப்புமா போடறதில்லை. (இதுக்கெல்லாம் யாரும் பாராட்டு விழா நடத்தமாட்டீங்களாப்பா?)
சரி முதுகு சொறிந்துகொண்டது போதும். நான் எழுதியதில் எனக்கே பிடித்த பதிவு என்று ஒரு வகையைத் தேர்ந்தெடுப்பது மற்ற வகைகளுக்குச் செய்யும் துரோகமாக நான் நினைக்கிறேன். எனவே, வகைக்கொன்றாக எனக்குப் பிடித்ததை தேர்வு செய்கிறேன், மொத்தத்தில் எது உங்களுக்குப் பிடித்தது என்பதை பின்னூட்டமாகப் போடுங்களேன்.
நகைச்சுவை வகையில் - டிவி நிகழ்ச்சிகளைக் கிண்டலடித்த பதிவு, Wifeology Series, சக பதிவர்களைக் கிண்டலடித்த தமிழ்மணம் முகப்பு எல்லாம் இருந்தாலும், என் முதல் தெரிவு கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம்தான்.
ப்ளாஷ் - எனக்கு செல்லம். கற்றுக்கொள்ளும் போதே, இதில் இப்படி ஒரு வசதி இருக்கிறதே, இதை வைத்து இப்படி நககச்சுவை செய்யலாமே, இண்டராக்டிவ் ஆக ஆக்கலாமே - என்ற சாத்தியக்கூறுகள் மனதில் வர வர உடனடியாகச் செய்துவிடுவதால் அதில் தொழில்நுட்பக்குறைகளும் நிறைய இருக்கும் - என்றாலும் தொழில் நேர்த்தி அதிகரிக்க பின்னூட்டங்கள் உதவி செய்வதால் எனக்கு ப்ளாஷ் செல்லம். ப்ளாஷ் செய்வது எப்படி என்று விக்கிப்பசங்களாய் வகுப்பெடுத்தது, பட்டறையில் தொடர்ந்த சோதனை இவற்றையெல்லாம் ப்ளாஷ் ஆக ஏற்க மாட்டேன்.
மற்றபடி இந்த ஆண்டில் நிறைய ப்ளாஷ் போடவே இல்லை. சற்றுபின் செய்திகள், இல்லறத்தியலில் வந்த சைட் அடிக்கும் விளையாட்டு இவற்றை விஞ்சி முதலிடம் பிடிப்பது சிவாஜிக்கு 1024 விமர்சனம் கொடுத்த ப்ளாஷ். பொதுவாக விமர்சனங்களையும், குறிப்பாக சிவாஜியையும், பத்திரிக்கை விமர்சனங்களின் க்ளிஷே வார்த்தைகள் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்திருந்தேன்.
அரசியல் பற்றி நான் எழுதுவதை விட மற்றவர்களைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் காட்டுகிறேன்.
அனுபவம் -இலும் பெரும்பாலும் சுயதம்பட்டங்களே இருப்பதால் அதிகம் கவரவில்லை.
சினிமா விமர்சனங்கள் - படங்களின் தரமே விமர்சனங்களின் தரத்தைத் தீர்மானிக்கின்றது - ஆண்டு இறுதியில் பார்த்து, மிக பாதிக்கப்பட்டு எழுதிய தாரே ஜமீன் பர் விமர்சனம் எனக்குப்பிடித்ததாக இருப்பதற்குக் காரணம் படத்தின் தரம்தான்!
புனைவு.. தேன்கூடு போட்டிகள் இருந்தவரை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த கதைகள் ஏறத்தாழ நின்றே போய்விட்டன - சர்வேசன் போட்டி வைக்கும்வரை. அந்தப்போட்டிக்காக எழுதிய மூன்று கதைகளுமே மூன்று வகையில் எனக்குப் பிடித்தவை - காமத்திற்கும் கண் உண்டு -- உரையாடல்களை ஒதுக்கி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் முயற்சித்த முதல் கதை என்பதால், கடன் அட்டை - சம்பவங்களை மையமாக வைத்து ஓட்டியதால் (ஆனால் சிறுகதை என்பதே ஒரு சம்பவத்துக்குமேல் போகக்கூடாது என்ற ஆதாரவிதியை மீறிய கதைதான் - ஒருவேளை அதனால்தான் தோற்றதோ?), காட்டுவழி போற... புத்திசாலித்தனமான கதை என்பதால்..
ஆனால் இவை எல்லாமே கலந்து 10 நிமிடத்தில் எழுதப்பட்ட நம்பிக்கை சிறுகதை - மதுரை தினகரன் எரிப்புச் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டது - என் கணிப்பில் சிறந்தது, ஆமாம் என்ன ஆச்சு CBI விசாரணை? அநியாயம்! மக்கள் ஞாபகம் எவ்வளவு தேசல்?
சுயதம்பட்டத்துக்கு வாய்ப்பளித்த பாபாவுக்கு நன்றி கூறி, தேவ், உஷா, இராமநாதன் (டாக்டர் - உமக்கு 2007 கட்டுப்பாடு கிடையாது.. 2006, 2005 லே பல சூப்பர் பதிவு போட்டிருக்கே!) ஆகியோரை வரவேற்கிறேன்.

Oct 17, 2007

பினாத்துறதும் ஒரு பொழப்பா - சாத்தான்குளத்தார் சாடல்! (17 Oct 07)

சாத்தான் குளத்தாரே தொடரட்டும்:

 
"கடை விரித்தேன் ..கொள்வாரில்லை என்று கூற முடியாது.
என் வலைப்பதிவையும் சிலரேனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் என்பதற்கு சில பின்னூட்டங்கள் சாட்சி. இருப்பினும், பதிவது அலுத்துப் போய் விட்டது.

எழுத வரவில்லை என்பது முக்கிய காரணம்.

தீவிர எழுத்து ஒரு தவம் போல. அப்படி எழுத ஒருமுகப்பட்ட சிந்தனை, இடைவிடாத படிப்பு, கொள்கை உறுதி போன்ற பல குணங்கள் தேவைப்படுகின்றன. என் நுனிப்புல் மேய்விற்கு இது சரிப்படாது" எழுத ஆரம்பித்த சில பதிவுகளிலேயே இப்படி அலுத்துக்கொண்ட பெனாத்தலாருக்கு,

எலே மக்கா,
என்னலே புதுக்கத சொல்லுதே? எழுதுதவன் எல்லாம் வெவரமாத்தான் எழுதணும்னு எவம்லே சொன்னது? அப்படில்லாம் பாத்தா நானெல்லாம் எழுதியிருப்பனாலே? பெனாத்துறதை நிறுத்துற மாதிரி ஒரு பெனாத்தல் உலகத்துலேயே கெடயாது மக்கா" அப்படின்னு ஆறுதல் சொல்லி அழைச்சுட்டு வந்த பாவம்தான் இன்னைக்கு பெருமரமாய் வளர்ந்து நிக்குது.:-)) என்னாலயும் சில நல்லதெல்லாம் நடந்திருக்குதுன்னு நான் அப்பப்ப நம்புறது இந்த மாதிரி விசயங்களை வச்சுத்தான்

கார் கதவை ஒரு மனுசன் மெதுவா தொறந்து விடுறான்னா ஒன்னு கார் புதுசா இருக்கணும் அல்லது காருக்குள்ல இருக்குற பொண்டாட்டியோ / சின்ன வீடோ/ காதலியோ புதுசா இருக்கணும்கறதுதான் நியதி. புதுசா இருக்குற வரைக்கும் எல்லாம் பிரம்மாதம்தான்.- சோடா பாட்டில் பொங்குற மாதிரி.ஆனா, தொடர்ந்து எழுதவும் எழுதுனதைப் படிக்க ஆட்களைத் தக்க வச்சுக்கறதும் பெரிய பாடு - அதுவும் நாளுக்கு நாலு பதிவுகள் வரத்துவங்கியிருக்கும் கால கட்டத்தில். பெனாத்தலைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்னைக்கு இடமில்லை. அவர் எழுதினால் வாசிப்பதற்கென்று மக்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏனென்றால் எழுதினால் வாசிக்கும்படியாக இருக்குமென்ற நம்பிக்கையை இந்த மூன்றாண்டுகளில் அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். இன்றைய சூழலில் இப்படி ஒரு நம்பிக்கையைப் பெறுவதென்பதே பெரிய விசயம்தானே?

கிரிக்கெட்டில் நன்றாக செட்டில் ஆகி விட்ட பேட்ஸ்மேனுக்கு கிரிகெட் பந்து ஃபுட்பால் அளவுக்குப் பெருசாகத் தெரியுமாம். பெனாத்தல் இப்போது அம்மாதிரி தமிழ்வலைப்பூவுலக வீச்சுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றே தோன்றுகிறது.

மோட்டுவளையை வெறித்துக் கொண்டு நவீனத்தை படுத்துபவ்ர்கள், கவிதையை வேட்டியை உருவி விடும்வரை விட்டுவிடக் கூடாது என்ற கொள்கை வைராக்கியத்தோடு வலம் வரும் கவிஞர்கள்,  கழுத்து வலிக்க வலிக்கத் திரும்பிப் பார்க்கும் மலரும் நினைவுகள், திரும்பத் திரும்ப மொக்கைகள் என்று ஒரே மாதிரியாகவே எழுதுபர்களுக்கு மத்தியில் சுரேஷின் எழுத்து எல்லாம் கலந்த கதம்பமாக இருக்கிறது

சிறுகதை, கவிதை, அரசியல், சமூக அக்கறை, திரைப் பார்வை, இலக்கியம் குறித்த அலசல்கள், ஃப்ளாஷ் தொழிநுட்ப உதவியுடன் கலாய்த்தல்கள் என்று பன்முகம் கொண்ட பதிவுகளாக அவை விரவிக் கிடக்கின்றன. எல்லாவற்றிலுமே வாசிப்பவர்களை ஈர்க்கும் விதம் மெல்லிய நகைச்சுவை பரவிக் கிடக்கிறது. அடிப்படையில் தனது எழுத்து எந்த சார்புநிலைக்குள்ளும் புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கை மனப்பான்மையோடு எழுதுவதே இதற்குக் காரணம்.

"பிம்பங்கள் இல்லாத நேரத்தில், பக்கச்சார்புகள் இல்லாமல் சிந்திக்கவும் அதீதக்கோபமோ, அதீதப்பாசமோ இல்லாமல் விமர்சிக்க முடிகிறது . எந்த அரசியல்வாதியினாலும் தனிப்பட்ட ஆதாயமோ, பாதிப்போ அடையாததால், பிம்பங்கள் ஏதும் இன்றி, நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்துக்களை அமைத்துக்கொள்ள முடிகிறது." என்று சுயவிமர்சனம் செய்து கொள்ள முடிவதுதான் சுரேஷின் இன்னொரு முக்கிய பலம் .

விக்கி பசங்களில் பங்களித்தாலும் சரி, வருத்தப்படாத வாலிபராக வலம் வந்தாலும் சரி; கில்லிக்கு வாசிப்புரை எழுதினாலும் சரி; இன்னமும் அவரை ஓரம்கட்டி முத்திரை குத்தி யாரும் சாத்திவிடாமல் தப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பதே கூட மூன்றாண்டு கால சாதனையை விட மிக உயர்ந்த சாதனைதான்.

பற்றியெரியும் சேது சமுத்திரத் திட்டமானாலும் சரி, உபி தேர்தலில் பாஜக வெளியிட்ட விசிடி பற்றிய பார்வையாக இருந்தாலும் சரி, அமீரகத்தில் இந்துக்களுக்கு எதிரான நிலை இருப்பதாகப் புரளி பரவியபோது அதனை மறுத்து எழுதிய போதும் சரி - தனது நிலையை மிகத் தெளிவாகச் சொல்லும் நேர்மை அவருக்கு வாய்த்திருப்பது பாராட்டுக்குரியது.

கவிமடத்தின் தலைமைச் சீடனாக இருந்தும் கூட கவுஜை எழுதி ஆட்களைத் தாளிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் எப்போதேனும் மட்டும் கவிதையை எழுதுவதும், அந்தக் கவிதை கவிதையாகவே இருப்பதும் அதனாலேயே அவர் அதிகம் கவிதை எழுதாமலிருப்பதும் அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. அதற்காகக் கவிமடத்தின் பெருமையைக் காப்பாற்றவும் அவர் தவறியதில்லை. அவர் எழுதிய காப்பி கசக்கும் கவிதை ஒரு உதாரணம்

தேன்கூடு சிறுகதைப் போட்டியில் வெற்றி, சிறந்த தமிழ் பதிவர் , அவள் விகடனே அங்கீகாரம் தந்த அவன் விகடன் எனப் பல சிறப்புகள் இருந்தபோதும் அது பற்றிய அலட்டல் அதிகம் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கண்டால் ஓடிச்சென்று வாழ்த்துவதும், குறையென்று கண்டால் விவாதிப்பதும் கூட சுரேஷின் சிறப்புகளில் முக்கியமானதெனக் கருதுகிறேன்

விக்கி பசங்களுக்காக தனது துறை சார்ந்த பதிவில் மிகச் சிறப்பான தமிழில் எளிய விளக்கங்கள் அளிக்க் முடிந்த அவரால் சில பதிவுகளில் தமிங்கலத்தைத் தவிர்க்க முடியாமல் இருப்பது என்னைப் பொறுத்தவரை குறைதான்.

வித்தியாசமாக யோசிப்பது, நக்கைச்சுவை மிளிர எழுதுவது இவை இரண்டும்தான் பெனாத்தலின் மிகப் பெரிய பலம். போக்கிரி படத்தில் விஜயின் முகபாவங்களை அவர் சொல்லியிருந்த விதம் நினைத்தாலே இன்னமும் சிரிப்பை வரவழைக்கிறது. 'அம்மு'வை எல்லாரும் 'ஆஹா ஓஹோ' என்று சொல்லும்போது கூட்டத்தில் கோவிந்தா போடாமல் 'அடப் போங்கய்யா! இதெல்லாம் ஒரு படமா?' என்று கேட்கும் துணிச்சலும் சுரேசுக்கு நிறையவே இருக்கிறது

நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவதும் அப்படி எழுத முடியுமளவுக்கு நிறைய கற்பனை வளம் இருப்பதும் டப்பாவில் இன்னமும் பெருங்காயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.
 
மணிரத்னம் இயக்கும் குருசாமி நாயகன் (பெரியார்) Full Screenplay

ஆனால் தீவிரமான கட்டுரைகளையும் கூட அவ்வப்போது எழுதித்தான் வந்திருக்கிறார். பிஹார் பற்றிய கட்டுரையும் ஆளாளுக்கு எட்டு போட்டு அலைக்கழித்த/கழிந்த நேரத்தில் சீரியஸாய் போட்ட எட்டும் முக்கியமானவை

ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -
நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -
தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

இந்தக் கவிதையைப் போலத்தான் தமிழ்மணத்தின் இன்றைய சூழலும். எப்போதும் இல்லாவிட்டாலும் அவ்வப்போதேனும் நல்ல பதிவுகள் வருமென்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை ஏற்படுவதற்கு சுரேஷ் போன்ற பதிவர்களும் ஒரு காரணமென்று உறுதியாகச் சொல்லலாம்.
---------------------
ஆசிப்புக்கு நன்றி. இந்த மூன்று ஆண்டுகளாய் என்னைப் பொறுத்துவந்தது மட்டுமின்றி அமோக ஆதரவும் அளித்துவரும் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி, நாலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
 
 

 

blogger templates | Make Money Online