Aug 26, 2010

எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)

எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?

ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்‌ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.

ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!

ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!

Aug 1, 2010

அமெரிக்க பணயக் கட்டுரை - 2

கலாசாரத் தேடலின் நடுவே ஒரு சிறிய இடைவெளி விடவேண்டியதாகிவிட்டது. மாபெரும் ட்விட்டர், ப்ளாக்கர் மற்றும் ஆம் ஆத்மிகளின் சந்திப்பில் அவ்வப்போது சிற்றுரை பேருரை Bore உரை எல்லாம் ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தங்களினால்.

பத்துமணிக்கு அழைத்து போடப்பட்ட போஸ்டர்களின் விளைவால் பதினோரு மணிக்கு எழுந்து தயாராகச் சென்றேன். இலவசனார் காலை உண்டி கொடுத்தபின் தான் தயாராவேன் என்ற என் பிடிவாதத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டி இருந்தது.


நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது தீவிரமாக கமெண்ட் போட்டதை இன்றும் எண்ணி வருந்தும் மணியன் @rsmanyan, நீங்க எழுத ஆரம்பித்த காலத்திலெல்லாம் நான் சின்னப்பையன் என்று என் வயதைக் குறிவைத்துக் கொலைவெறி காட்டிய @forvino, எவ்ளோதூரம்தான் போறானுங்க பார்க்கலாம் என்று அமைதியாக இருந்த @the_tweedy, வைஃபாலஜி மேலுள்ள கோபத்தை கனல் அடங்காமல் காத்துவரும் பத்மா அரவிந்த் @padmaa ஆகியோருடன் மொக்கை போட ஆரம்பிக்க தீவிர இலக்கியமும் உலக சினிமா தாகமும் அடங்காத ஒருபக்கம் @orupakkam, (அடங்காத மட்டும்தான் உண்மை, மற்ற அட்ஜெக்டிவ் எல்லாம் சும்மா பில்ட் அப்புக்கு :-) வயதான, போலி டைனோபாய் @dynobuoy, சேவல்பண்ணைக்கு குடும்பத்துடன் வந்துவிட்டிருந்த இளா @vivaji (நோயாளிகள் நேரம்தப்பாமல் மாத்திரை சாப்பிடுவது போல் வெளியே தனியாகச் சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்பினார்), வண்ண உடைகளை கவனமாக்த் தவிர்த்த வெட்டிப்பயல் பாலாஜி @vettipaiyal, எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகுமார் @ivansivan, இன்னும் என்னவெல்லாம் எழுதி சமுதாயத்தைக் கொடுமைப்படுத்தலாம் என சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த திண்ணை துக்காராம் @thukaram என்று மொக்கை களைகட்டியது.

வந்திருந்தவர்களின் அன்பான கேள்விகளின் வீச்சு: “நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளராமே? ஆமாம், என்ன எழுதறீங்க?” “நீங்க எழுதின எல்லா புக்கும் படிச்சிருக்கேன், ஆமாம், ப்ரேசில் சமையல் குறிப்புகள் நீங்கள் எழுதினதுதானே?” “உங்க ட்விட்லே எல்லாம் ஒரு ஸ்பார்க் தெரியும். ஆமா, உங்க ஹாண்டில் என்ன?” “ஒரு சக எழுத்தாளராக டேன் ப்ரவுன் பற்றி உங்கள் கருத்தென்ன?” “அடுத்த புக் எப்போது? தற்காப்பா இருக்கவேணாமா?” போன்ற கேள்விகளுக்கு புன்னகையை பதிலாக்கினேன். இளிச்சவாயனாக ஆக்கிவிட்டார்கள் என்பதன் இடக்கரடக்கல் என்பதறிக. (ஃபோட்டோக்கள் வேறு காமராவில், தனியாகச் சேர்க்கப்படும்)

மதியம் என்று ஆரம்பித்த பயணத்திட்டம் மாலையாக மாறி அப்போதும் மொக்கை தொடர, முன்னிரவிலேயே கிளம்ப முடிந்தது. வழியில் பயணத்தில் சேர்ந்த கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோபாலன், பேசும்போது புஷ்பா தங்கதுரை.



அட்லாண்டிக் சிட்டிக்கு எங்களுக்கு முன்பே வந்து காத்துக்கொண்டிருந்தார் சத்யராஜ்குமார் @ksrk. இதற்காகவா காத்திருந்தாய் சத்யராஜ்குமாரா? என்னும் அளவுக்கு அவரைப் படுத்தினோம். ஆட்டம் கொண்டாட்டம் சூதாட்டம் நிரம்பிய ஊரிலும் இசை நீர்வீழ்ச்சி போன்ற உபத்திரவமில்லாத வஸ்துக்களைத் தேடிக் கண்டுபிடித்துக் காட்டினார்.



பாஸ்டன் பாலா @snapjudge வந்தார்.அவருடைய செறிவான டாட்நெட் கட்டுரைகளைப் பற்றிய விவாதங்களைத் தொடங்க அவர் ரசிகர் கூட்டம் தயாராக இருந்தும் மற்றவர்களின் கொலைவெறிப்பார்வையால் வழக்கமான மொக்கையே போட்டு காஸினோவுக்குச் சென்று காசு இனி நோ என்று பதம் பிரித்துக் காட்டச் சூளுரைத்தோம்.



கலாசார நுகர்வு பூர்த்தியாகும் முன்னரே நேரம் கடக்க ஆரம்பித்தது. “அப்போ இன்னிக்கும் மேற்படி டான்ஸ் இல்லியா?” சோகத்தோடு கிளம்பும் நேரத்தில் குற்றாடை நங்கையர் சிலர் சூதாட்ட விடுதியில் ஆட ஆரம்பித்தார்கள். கலைக்கண்ணோடுதான் பார்க்கிறேன் என்று கேட்பதற்குமுன் பதில் சொல்லத் தயாரானேன். ஆனால் என்னை யார் பார்த்தார்கள்?



ஆனால் முழுமையான கலாச்சார நுகர்வும் பகிர்வும் இனிமேல்தான் என்று சூளுரைக்கிறார் கொத்தனார். எனவே, சிறிய இடைவேளைக்குப் பிறகு, கலாசாரப் பகிர்வைப் பொதுவுடமைப்படுத்துகிறேன்.

அட்லாண்டிக் சிடிக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி:

Jul 31, 2010

அமெரிக்க பணயக் கட்டுரை - 1

விமானத்தை விட்டு வெளியே வந்ததுமே அமெரிக்கா தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. நீண்ட வரிசை. பிரிவினை பார்ப்பதில்லை எனத் தண்டோரா கொட்டும் ஏகாதிபத்தியவாதிகள் தன் குடிமையாளருக்குத் தனிவரிசை வைத்ததையும் சகித்துக் கொள்ளலாம், வந்தாரை வரவேற்க 33 சத ஒதுக்கீடு கூட இல்லாமல் 20க்கு மூன்றே வரிசைகளை வைத்திருந்தது துணுக்குறச் செய்தது. எதற்காக வந்தாய், என்ன காரியம், காரணம் என்று தேவையில்லாத ஆயிரம் கேள்விகளோடு அபசகுனத்தின் உச்சமாக எப்போது திரும்பப் போகிறாய் என்றும் கேள்விகள். அதைத் தாண்டி வந்தாலும் பெட்டியைக் குடையும் வகையில் கஷ்டம் கேள்விகள்.

அமெரிக்காவில் எல்லா மொழி இன மக்களும் இருக்கிறார்களாம். ஆனால் கலாச்சாரத்தைத் தெரிந்து கட்டுரைகள் எழுதிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு நண்பன் அழைத்துச் சென்ற அத்தனை கடைகளிலும் தமிழே வழக்குமொழியாக இருந்தன. பணம் கொடுக்கும்போது ஏன் ரூபாயாகக் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் மட்டும் இன்னும் அழியவில்லை.

விடாப்பிடியாக மைல்களிலும் பாரன்ஹீட்களிலும் மட்டுமே சம்பாஷிக்கிறார்கள். தெருவிலிருந்து ஸ்விட்ச் வரை எல்லாம் தலைகீழ். கீழே அழுத்தினால் லைட் எரிகிறது, மேலே இழுத்தால் தண்ணீர் கொட்டுகிறது, கதவைத் தள்ளி உள்ளே செல்கிறார்கள். இந்தியர்கள் பூமிப்பந்தின் மேல்பாகத்திலும் அமெரிக்கர்கள் கீழ்பாகத்திலும் இருப்பதால் எல்லாமே தலைகீழாக இருக்கலாமோ என்ற என் அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

தொலைக்காட்சியிலும் அமெரிக்கர்கள் வெள்ளி மதியம் சமையல்தான் செய்கிறார்கள், தாலி பாக்கியத்துக்காக பெண்கள் போராடுகிறார்கள், மிகச் சொற்ப விலைக்கு பிருஷ்டம் இளைக்கிறது, ப்ளாஸ்டிக் விந்தைகளை வாங்கினால் டார்ச்லைட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. உண்மையான கலாச்சாரத்தை அறிவதற்கு இன்னும் கொஞ்சநாள் பொறுத்திருக்கவேண்டும் போல இருக்கிறது.

அறிந்ததும் தொடர்கிறேன்.

Jun 3, 2010

என்னோட நண்பனுக்கு எட்டு பொண்டாட்டி

எழுதுவதற்கு ஆசை வந்தவுடன் முதலில் புனைபெயரைத்தான் தேட ஆரம்பித்தேன். சுரேஷ், சுரேபா, ராமசுப்பு, சுரேஷ்ராமமூர்த்தி என்று மனதுக்குப் பிடிக்காத பலவிதமான பெயர்கள் முதல் பரிசீலனையைத் தாண்டவில்லை. பதிவு எழுத ஆரம்பித்தபோதுகூட பதிவுக்குதான் பினாத்தல்கள் என்று பெயர் வைத்திருந்தேனே ஒழிய என் பெயர் சுரேஷ் என்றுதான் இருந்தது. பிறகு பல சுரேஷ்கள் குவிய ஆரம்பித்த பிறகுதான் பினாத்தல் சுரேஷ் என்று ப்ளாக்கர் ஹாண்டிலை மாற்றினேன். இந்தப் பெயர் கிண்டல் எழுத்துக்கு ஓக்கே, உருப்படியா எழுதினா? என்ற எண்ணத்தை, முதல்ல உருப்படியா எழுது, அப்புறம் புனைபெயர், பூனைபெயர் எல்லாம் பாத்துக்கலாம் என்று ஒத்திவைத்தேன்.


அந்த உருப்படியா எழுதுவது மட்டும் விலகிக்கொண்டே போனது. அவ்வப்போது ஒன்றிரண்டு தப்பிப்போனாலும்.

யாருடைய மூளைக்குழந்தையோ, இன்னும் எனக்குத் தெரியவில்லை, ஐம்பெருங்காப்பியங்களை எளிய நாவல்களாக்க உத்தேசம், உன்னால் முடியுமா என்று கேட்டபோது “என்னை வச்சு காமடி கீமடி பண்ணலியே” என்றுதான் கேட்கத் தோன்றியது. ஆனால் பயம் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குதானே வரும்? எனக்குதான் அந்தச் சுமையே கிடையாதே.

குருட்டுத் தைரியத்தில் ஒப்புக்கொண்டு சீவகசிந்தாமணியைப் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள்களில் ஆர்வம் என்று சொல்லிக்கொள்ள முடியாது, இருந்தாலும், நாமளும் இதையெல்லாம் படிக்கணும்டா என்பது மாதிரி ஆர்வம் எப்போதாவது வந்து போகும்.

நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான்

என்பதுபோல சந்தத்தோடு, கொஞ்சம் கஷ்டப்பட்டால் புரிந்துவிடக்கூடிய பாடல்கள் சில இருந்தாலும், பல பாடல்களில் இருக்கும் சொற்கள் பிரித்தாலும் புரியாமல், சேர்த்தாலும் புரியாமல் இலக்கியத்தரமாக இருந்தது. (இப்போ புரியுதா இலக்கியத்தரம்னா இன்னான்னு?)

சரி, உரையை எடுத்துப் படிக்கலாம் என்றால் பலநேரங்களில் செய்யுளே புரிந்துவிடுகிறது, உரை புரியவில்லை. வந்தான் என்று சொல்வதற்கு வந்தனன், நின்றனன், சென்றனன் னு உரையாசிரியர் வேற இலக்கியத்தரம் வளர்க்கிறார்.

எனக்கு வேலை சொன்ன பாராவை சாட்டில் பிடித்தேன்.

“படிக்கறதுக்கே கஷ்டமா இருக்கே, எதாவது படிக்கச் சுலபமான மொழியிலே உரை இருக்கா, கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்”

“அதானேய்யா உனக்குக் கொடுத்த வேலை! படிக்க சுலபமா உரை இருந்தா அதை ரெகமண்ட் பண்ணிட்டு போயிரமாட்டோமா?”

இப்போதுதான் புரிந்தது அந்த ஐடியாவின் அருமை. தமிழ் மீடியத்தில் படித்து, யாப்பு இலக்கணத்தில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு வெண்பா வெண்பாம் என்றெல்லாம் மற்றவர்களை இம்சிக்கும் எனக்கே புரிவதில் இவ்வளவு கஷ்டம் இருந்தால், தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்திருக்கும் ஆர்வத்தை மட்டுமே கொண்ட தலைமுறைக்கு எப்படி இருக்கும்?

விளையாட்டாக ஆரம்பித்ததைக் கொஞ்சம் தீவிரமாக்கினேன். சீவகன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்தான். “வா சுரேஷ், சும்மா மொக்கைப்பதிவே போட்டுகிட்டிருக்காம என்கிட்டே வா.. என் கதை என்ன தெரியுமா? நான் ஏன் எட்டு கல்யாணம் செஞ்சேன் தெரியுமா? எத்தனை திருப்பம் தெரியுமா என் வாழ்க்கையில்?”

சீவக சிந்தாமணி - தமிழ் அறிஞர்களுக்காக எழுதப்படவில்லை. நமக்காக. நான் எப்படி ஒரு நாவல் இருந்தால் படிப்பேனோ, அப்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். “நூலையும் உவமைகூற இயலாத மெல்லிய இடை ஒடிய விம்மி அடி பருத்த “ என்றெல்லாம் இருக்கும் அட்ஜெக்டிவ்களை கழட்டிவிட்டு நேரடியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முயற்சி. செய்யுளுக்குச் செய்யுள் அர்த்தம் சொல்லும் உரை அல்ல. “வா சீவகா, உட்கார்” என்று நெருங்க வைக்கும் முயற்சி. தேமா புளிமா கூவிளங்காய் தெரிந்து புணர்ச்சி இலக்கணம் தெரிந்த பண்டிதர்களுக்காக அல்ல - ”தமிழில் எதோ காப்பியம் எல்லாம் இருப்பதாகச் சொல்றாங்க, என்ன மேட்டர்னு புரியலை” என்பவர்களுக்காக.

தீக்குச்சி விழுந்து தெரிக்குதடி -கருந்தேக்குமரக் காடு வெடிக்குதடி” என்று எளிமையாக அக்கினிக்குஞ்சு பாட்டை ரீமேக் செய்திருக்கிறாரே வைரமுத்து, அதைப்போல ஒரு முயற்சி.

எழுதி முடித்தபின் புனைபெயர் இப்போது தேடலாம் என்ற எண்ணம் வந்தது.

ராம்சுரேஷ் என்ற பெயரில் இதோ, என் முதல் புத்தகம். உங்கள் ஆதரவை எதிர்பார்த்து:




இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கு படத்தின் மேல் க்ளிக்கவும். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

Apr 1, 2010

பதிவர் சங்கம் - என் இரண்டணா

















































 

blogger templates | Make Money Online