Apr 13, 2012

நாஞ்சில் நாடன் - ஜெயமோகன் - துபாய்

பிரபலங்களைச் சந்திப்பது என்பது எனக்கு எப்போதுமே சங்கடத்தைத் தரக்கூடிய விஷயம். “நீங்க நல்லா எழுதறீங்க” என்பதா? இதை அவர்கள் பலநூறு முறை கேட்டிருக்கமாட்டார்களா? “ ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று பொய் சொல்வதா? “உங்கள் எழுத்துகள் நான் படித்ததில்லை. கொஞ்சம் படித்ததில் எதுவும் பிடிக்கவில்லை” என்று சண்டை மூடோடு செல்வதா? அதற்கும் ஒரு கன்விக்‌ஷன் வேண்டாமா? மையமாகப் பார்த்து “எப்படி இருக்கீங்க” என்று எந்தத்தாக்கத்தையும் உண்டாக்காமல் கைகுலுக்கிவிட்டு வருவதா? என்னது? நான் சாதா ஆசாமி போல நடந்துகொள்வதா?


ஆனால், ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வருகிறார்கள் என்று தெரிந்ததும், இந்தத் தயக்கங்கள் எதுவும் என் மனதில் இல்லை. ஜெயமோகனிடம் கூச்சமே இல்லாமல் சொல்லலாம் “நான் படித்தவரை உங்கள் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது என்று. நாஞ்சில் நாடனிடம் தாராளமாகச் சொல்லலாம் “ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று.

இரண்டு தினங்கள் இருவரையும் சந்தித்தேன். முதல் தினம் இயல்பான நண்பர்கள் சந்திப்பு, இரண்டாம் தினம் இலக்கியக் கூடல் - மேடை நிகழ்ச்சி.

இயல்பான சந்திப்பின்போது நாஞ்சில் நாடன் சுவாதீனமாக பேச ஆரம்பித்தார். நாவல்களில் ஆரம்பித்த பேச்சு வெகுவிரைவாக சலாட் செய்வது எப்படி என்று மாறி, புடலங்காய் சலாடைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தவர், கொஞ்ச நேரம் கழித்த பிறகு “ம்ம், ஓக்கே” என்பதற்கு மேல் அதிகம் பேச முடியவில்லை. ஏன், நிமிடத்துக்கு 300 வார்த்தை பினாத்தும் நானோ, சமயம் பார்த்து கவுண்டர் கொடுக்கும் குசும்பனோ கூட எதுவும் பேசமுடியவில்லை. ஜெயமோகன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். எந்த டாபிக் எடுத்தாலும் ஆழமாகப் பேசுகிறார். காட்டைப் பற்றிப் பேசினால் எது போன்ற மரங்களைத் தவிர்க்கவேண்டும், ஏன் இன்றைய ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் அதிக தொழில்காதலுடன் இருக்கின்றார்கள், தமிழ்நாட்டில் எங்கே காடுகள் இருக்கின்றன, எங்கே என்ன மிருகங்கள் பார்க்கலாம், எப்படி புக் செய்யலாம், எங்கே குழந்தைகளுடன் செல்லலாம்...

ஒரு தலைப்பில் இருந்து அடுத்த தலைப்புக்கு எப்போது செல்கிறார் என்பதைக் கொஞ்சம்கூட ஊகிக்க முடிவதில்லை. சந்திரசேகரேந்திர சரஸ்வதி காந்திக்குக் கூட்டிச் சென்றார், காந்தியில் இருந்து பாரதி.. பாரதி எப்போது வள்ளலார் ஆனார் என்பது இன்னும் எனக்கு விளங்கவே இல்லை.

மூன்று மணிநேரங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகைய ஆனால் இன்ஃபார்மல் பேச்சின் விஸ்தீரணத்தை இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன்,

அமீரகத் தமிழர் மன்றம் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே வித்தியாசமான நிகழ்ச்சியாக இலக்கியக் கூடல் அமைந்திருக்கும். சினிமாப் புகழ்கள் இல்லாமல் சம்பிரதாய குழந்தை நடனங்கள் மிமிக்ரிகள் இல்லாமல், நேரடியாக அறிமுகம், நாஞ்சில் நாடன் ஜெயமோகன் பேச்சு, கேள்வி நேரம் என்று ஜிகினாவே இல்லாத எளிய விழா.

நாஞ்சில் நாடன் பேசுகையில் சொற்கணக்கை வைத்து ஆரம்பித்தார். 1330 குரலில் குறள்களில், குறைந்த பட்சம் 4000 யுனிக் சொற்கள் உபயோகமாகி இருக்கும், கம்பராமாயணத்தில் 12500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான யுனிக் சொற்கள் பிரயோகிக்கப் பட்டிருக்கலாம். கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம் - ஆனால் எவ்வளவு பயன்படுகிறது? படைப்பாளி எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சொற்களின் மரணத்தைத் தள்ளிப் போடும்.. அநியாயச் சுருக்கம்தான் என்னுடைய வெர்ஷன்.. சுவாதீனமாக கம்பனையும் திருக்குறளையும் வாழ்க்கையையும் மேற்கோள் காட்டி தடங்கல் இன்றி மிக அருமையாக அமைந்த பேச்சு.

ஜெயமோகன் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார். மணிமேகலை சென்றடைந்த பளிங்கு மண்டபமும் கையில் இருந்த மாலையில் கண்ணீரும் பெண் நிலைமையை அன்றில் இருந்து ஏன், சிவனும் உமையும் ஆடிய ஆடு புலி ஆட்டத்தில் இருந்தே லா ச ராவின் ஆடு புலி ஆட்டம் வரை தொடர்கிறது என்றார். வண்ணதாசன் கதையும் இடையில் உவமைக்கு வந்தது.

மேடைப்பேச்சுகளைக் கேட்டால் பத்து நிமிடத்துக்கு மேல் அமராத எனக்கு, முழு நேரமும் ஒரே இடத்தில் அமர வைத்த பேச்சுகளுக்கும், பேச்சாளிகளுக்கும், அமீரகத் தமிழர் மன்றத்துக்கும் நன்றி..

Mar 13, 2012

+2 சாமியார்கள்

காலையில் ஏதோ ஒரு இடத்தில் +1  முடிவு பற்றிய ஒரு பதிவு பார்த்தேன். +1 முடிவுகள் வந்து +2 ஆரம்பிக்க உள்ள காலம் என்ன தெரியுமா? 2 நாட்கள். ஆண்டு விடுமுறை - 2 நாட்கள். என்னய்யா விளையாடுகிறீர்களா?

ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு இருந்துடு. டிவி பாக்காதே. விளையாட்டு பக்கம் போயிராதே. காலைலே மூணு மணிக்கு எழுந்திரு. பத்து வருஷக் கொஸ்டின் பேப்பரைத் திருப்பி திருப்பி எழுதி ப்ராக்டிஸ் பண்ணு. பதினோராவது கேள்வி எல்லாம் வராது. டெய்லி டெஸ்ட், வாரம் ஒரு முறை பரீட்சை, மாதம் ஒரு முறை மாடல் எக்ஸாம். ஐ ஐ டி கோச்சிங், மேத்ஸ் ட்யூஷன் ப்ளா ப்ளா என்று கர்ப்பஸ்திரீக்கு அறிவுரை போல ஒரு வருடத்தை (பல சமயங்களில் 2-3 வருடங்களிக் கூட) சாமியார் வாழ்க்கை வாழ வைக்கிறோம் மாணவர்களை.

ஒரு தலைமுறையையே நாசம் செய்து வைத்திருக்கிறோம். +2வில் வரும் மார்க்குகள்தான் வாழ்க்கை என்று ஒரு கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பேசும்போது என்ன பேசினாலும் நடைமுறையில் மார்க்குதான் தெய்வம். அதை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீருவோம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

யாரை இதற்குக் குறை சொல்வது? பெற்றோரையா? பள்ளியையா? கல்வி முறையையா?

மூன்றுமே இல்லை என்பதுதான் என் வாதம்.

பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வில் மூன்று மணி நேரத்தில் பதினாறு தாள்களில் என்ன எழுதுகிறானோ / ளோ அதுதான் முழு வாழ்க்கைக்கும் அஸ்திவாரம் என்று ஆன சமுதாயச் சூழல்தான் முக்கியக் காரணம். அந்தத் தேர்வின் மதிப்பெண்கள்தான் அவன் போகப் போகும் கல்லூரியைத் தீர்மானிக்கின்றது. அவன் / அவள் போகப்போகும் கல்லூரிதான் வேலையைத் தீர்மானிக்கப் போகிறது. வேலைதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது.. இந்த மாயச் சுழல்தான் அந்த மதிப்பெண்களுக்கு மரியாதையைக் கூட்டுகின்றது - இந்த விஷயத்தை சொல்லி வைத்தாற்போல எல்லாரும் கவனிக்கத் தவறுகின்றனர். 

அந்த மதிப்பெண்களுக்கு இருக்கும் அபரிமித மரியாதையே மார்க் எடுத்தே ஆகவேண்டும் - அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று பெற்றோர்களை இறங்க வைக்கிறது. இப்போது இருக்கும் தலைமுறையினர் - ஒன்று படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த தலைமுறை - அல்லது படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த மற்ற மத்திய வர்க்கத்தினரைப் பார்க்கும் தலைமுறை. பில் கேட்ஸ் காலேஜ் ட்ராப் அவுட் என்று ஃபேஸ்புக்கில் தினம் தினம் பார்த்தாலும் எல்லாரும் பில் கேட்ஸ் ஆவதில்லை என்ற உண்மை உரைப்பதால் படிப்பை மட்டுமே - அதுவும் உயர்கல்வியை மட்டுமே - குறிப்பாக எஞ்சினியரிங்கை மட்டுமே குறிவைத்து வாழ்க்கையை அமைக்க வைக்கிறது.
 
எஞ்சினியரிங்குக்கு தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் அமோக ஆதரவு ஆச்சரியம் அளிக்கிறது. எத்தனை காலேஜ்கள் - தமிழகத்துக்கு மட்டும் அல்லாது மொத்த இந்தியாவின் எஞ்சினியரிங் பட்டதாரிகளின் தேவையை தமிழ்நாடே தர இயலும் என்ற அளவுக்கு இங்கே காலேஜ்கள் இருக்கின்றனவாம். ஏன் இத்தனை? இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மற்ற அனைவருக்கும் வேலை இல்லாமல் போனால்தான் தமிழகத்து எஞ்சினியர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் - அப்படியென்றால் நிச்சயம் தமிழகத்து எஞ்சினியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல்தான் இருக்கப் போகிறார்கள். எந்தப் பாதிக்கு வேலை கிடைக்கும்? முக்கியக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு. யார் முக்கியக் கல்லூரிகளில் இடம் பிடிக்கப் போகிறார்கள்? நன்றாகப் படிக்கும் மாணவர்கள். நன்றாகப் படிப்பார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? +2 மதிப்பெண்களை வைத்து. ஆக, இந்த மதிப்பெண் மரியாதைக்கு இந்தச் சுழல் சூழல்தான் முக்கியக் காரணம்.

அப்படியென்ன எஞ்சினியரிங் மேல் மோகம்? டாக்டர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், எல்லாரும் ப்ரொஃபஷனல்கள் தானே? அந்தத் தொழில்களில் இல்லாத ஆசை ஏன் எஞ்சினியரிங் மேல் மட்டும்?

படிப்பு என்பதை கல்வி என்று சிந்தித்த காலம் மலையேறிப் போய், முதலீடு என்று சிந்திக்கிற காலம் வந்தே பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் இப்போது predominant ஆக இருக்கும் படிப்பால் மட்டுமே முன்னுக்கு வந்த தலைமுறை. முதலீடு என்று வந்தவுடன் ப்ரேக் - ஈவன் என்பதைப் பார்க்கவும் வேண்டும் அல்லவா? 

ஒரு மாணவன், 17 ஆம் வயதில் +2 முடித்தால் 21 ஆம் வயதில் எஞ்சினியர். அவன் முதல் வேலை படித்து முடிக்கும் முன்னரே கேம்பஸில் கிடைத்து விடுகிறது. (எலைட் மாணவர்களுக்கு). ஆனால் அவன் ஒரு டாக்டராக வேலை தொடங்க குறைந்தது 25 வயதாவது ஆக வேண்டும். பிறகும் எதேனும் ஒரு மருத்துவமனையின் அடி ஆழத்தில் ட்யூட்டி டாக்டராக ஆரம்பித்து கைராசி எனப் பெயர் வாங்கி சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நரைத்து விடுகிறது. வக்கீல்கள் பெயர் வாங்க இன்னுமே அதிகக் காலம் ஆகும். கேஸ் கிடைக்க வேண்டும். சீனியரிடம் இருந்து விடுபடவேண்டும்..ஆடிட்டர்கள் கதையோ அமோகம். சி ஏ பாஸ் செய்வதற்குள்ளேயே பாதி பேருக்கு நரைத்து விடுகிறது.

உடனடி காசு எஞ்சினியரிங்கில்தான். எனவே எஞ்சினியரிங். 

மார்க் வேண்டும். அதற்கு நல்ல பள்ளியாகப் பிடிக்க வேண்டும். நல்ல பள்ளி என்பது எது? ஆசிரியர்கள் அன்பாக நடந்துகொண்டு நல்லபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியா? அதற்கு என்ன அளவுகோள்?  போன முறை வரை அவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன? எத்தனை ஸ்டேட் ராங்க்.. இவைதானே?  

பள்ளிகளுக்கு யுனிக் செல்லிங் பாயிண்ட் அவர்கள் மாணவர்களிடம் இருந்து கறக்கும் மதிப்பெண்கள்தான் என்று ஆன பிறகு, ஒரு மாணவன் முடியவில்லை, படிக்கத் தெரியவில்லை என்று சொன்னால் அவர்களுடைய யூ எஸ் பிக்கு பாதிப்பு வராதா? அவர்கள் எப்படி அதை விடுவார்கள்? ஏதேனும் செய்து - அவனுக்கு அழுத்தம் கொடுத்து அல்லது பள்ளியில் இருந்தே விலக்கி அவர்களுடைய ஃபிகர்களுக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளத் தானே பாடுபடுவார்கள்? ஒரு மாணவன் தோற்றாலும் 100 சதம் இரட்டை இலக்கமாகி விடுகிறதே..

ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் மரியாதை பற்றி நிறைய பேசப்படுகிறது - குறிப்பாக சமீபத்தில் ஒரு பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட பிறகு. 'அந்தக் காலத்துல நாங்க எல்லாம்' ரேஞ்சில் கருத்துகளை உதிர்க்கும் அனைவரும் மறப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று அவர்கள் ஆசிரியர்கள் எத்தனை பேரை அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? ஒவ்வொரு மாணவனும், ஆறாம் வகுப்பில் இருந்து ஞாபகம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் - 12 ஆம் வகுப்பு வரை - 35- 40 ஆசிரியர்களைப் பார்க்கிறான். 40 வயதான அப்பாவிடம் அந்த 40 ஆசிரியர்களின் பெயரையும் கேட்டால் நினைவிருக்குமா?  அதே விகிதத்தில் இன்றும் நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இரண்டாவது கவனிக்க வேண்டிய விஷயம் -அவர்கள் படிப்பிற்காகக் கொடுத்த பணத்தை. பணத்தின் மதிப்பு டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதால் நேரடி மதிப்பைப் பார்க்காமல் இப்படிப் பார்க்கலாம் - அவர்கள் படித்தபோது பள்ளிகளின் ஃபீஸ் அவர்கள் அன்றைய குடும்ப வருமானத்தில் எவ்வளவு சதவீதம்?  இன்று எவ்வளவு? ஆராய்ச்சியே பண்ணத் தேவையில்லை. சதவீதமே மிக அதிகமாக ஆகியிருக்கிறது. அன்று பள்ளிக்குக் கொடுத்த சம்பளம் ஏறத்தாழ ஓசிதான். ஓசியிலே கற்பிக்கும்போது மரியாதை வரத்தான் செய்யும். இன்று வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதம் பள்ளிக்குப் போகும்போது எதிர்பார்ப்புகளும் அதிகம். அவர்கள் சும்மா சர்வீஸ் ப்ரொவைடர்கள்தானே என்ற எண்ணத்தில் மரியாதை குறையத்தான் செய்கிறது. அதை மாற்ற முடியாது. 

கல்விமுறையைப் பற்றிச் சொல்வதும் வீண். சமுதாயம் என்ன கேட்கிறதோ அதைத்தான் கல்விமுறை செய்கிறது. மெக்காலே கல்வித்திட்டத்தைத் திட்டுவது நம் எல்லாருக்கும் செல்லப் பொழுதுபோக்கு. 'யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சொல்லிக் கொடுங்கள்' வாதமாகப் பேசும்போது இனிமையாக ஒலிக்கிறதே, இதன் நடைமுறை சாத்தியக் கூற்றைப் பற்றி யோசித்திருப்போமா?  நாம் கல்வியை பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றிவைத்துவிட்டோம். விட்டில் பூச்சிகளைப் போல எல்லாரும் ஒரே இடத்தில் மொய்க்கும்போது பேகான் ஸ்ப்ரே அடிக்கத்தான் செய்வார்கள். எப்படி உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட படிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? நுழைவுத் தேர்வு போன்ற இரண்டாம் நிலை ஃபில்டர்களும் இல்லாத பட்சத்தில்?

எல்லாவித careerகளுக்கும் சம மதிப்பு இருந்தால்தான் இந்த மாயச் சுழலில் இருந்து விடுபட முடியும். அதற்கு என்ன செய்வது? விவாதிக்கலாமா?

Mar 2, 2012

அரவான்

வெயில் படத்துக்குதான் முதலில் இப்படி எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் போய் படம் நன்றாக இருந்ததில் ஆச்சரியத்துடன் மகிழ்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே இயக்குநர் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் எதிர்பார்ப்புகளே இல்லை என்று சொல்லமாட்டேன், எதிர்மறை எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ச வெங்கடேசனின் காவல் கோட்டத்துக்கு விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் - ஆயிரம் பக்கத்துக்கு எழுதியதால் இருக்கலாம். படித்த இரண்டு விமர்சனங்களும் இரண்டு துருவங்களில் நின்றன (எஸ் ரா, ஜெயமோகன்). கதை வரட்டு வரலாறாகத்தான் இருக்கும் என ஒரு பிம்பம் மனதில் ஏனோ விழுந்துவிட்டது. அந்தக் கதையின் ஒரு பகுதிதான் படமாக வருகிறது என்று கேள்விப்பட்டதும் இந்தப் படத்தைப் பற்றியும் அபிப்பிராயம் பெரிதாக வரவில்லை.


நாவல் எப்படியோ, இன்னும் தெரியவில்லை. படத்துக்கு கதை மிகவும் நேர்த்தியாக இருந்தது. களவே தொழிலான கிராமங்கள் பணக்கார வீடுகளைக் கொள்ளையடிக்க முயல, காவலே தொழிலான கிராமங்கள் அதே பணக்கார வீடுகளைக் காப்பாற்ற முயன்ற காட்டுமிராண்டித்தனங்கள் முற்றிலுமாக ஒழிந்திராத 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக் கதை. அரவான் என்றதும் முதலில் நமக்கு என்ன தோன்றுகிறது? அதுதான் கதை.





வேம்பூர் ஒரு களவு கிராமம். நான்கைந்து செட் திருடர்கள் போய்த் திருடிக் கொண்டுவரும் கேப்பையில்தான் ஊரே வயிறு கழுவுகிறது, ஒரு செட்டின் தலைவன் கொம்பூதி(பசுபதி) யின் தன் களவுத்திறனால் மயக்கி ரெக்ரூட் ஆகிறான் வரிப்புலி (ஆதி).ஊருக்கு அவமானம் ஏற்படும் நேரத்தில் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்ல வேண்டி வருகிறது. வரிப்புலி சாதா ஆசாமி அல்ல, இரண்டு கிராமங்களால் பலி போடத் தேடப்பட்டு வரும் அரவான் என்ற ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

இரண்டு தனித்தனிக் கதைகள் போல இருந்தன இரண்டு பாதிகளும். களவு இருட்டு கன்னம் வைத்தல் என்றே நகர்ந்த முதல் பாதி, சின்னான் (வரிப்புலி) ஏன் பலிகடா ஆனான் - ஏறத்தாழ துப்பறியும் கதை போல நகரும் இரண்டாம் பாதி.

விரிவான தகவல்களுடன் அடர்ந்த கதையை சோர்வடைய வைக்காமல் அலுக்காமல் கொண்டு சென்ற திரைக்கதை. பீரியட் படம் பார்க்கிறோம் என்ற எண்ணமே வராமல் இயல்பாக நம்மை அவர்கள் உலகத்தில் கொண்டு சென்ற வசனங்கள், காட்சி அமைப்புகள்.

எல்லா நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய வேலையைத் திறம்ப்டச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆதி - படம் முழுக்க ஒரு சுத்தமான காட்சி கிடையாது அவருக்கு. சேற்றில் குதித்து ஓடுவது கன்னம் வைத்து இறங்குவது அடிபட்டு ரத்தம் சிந்துவது.. இதேதான் படம் முழுக்க. எல்லாக் காட்சிகளிலுமே இயல்பான 18ஆம் நூற்றாண்டு இளைஞனாக வாழ்வது சுலபம் அல்ல. அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார். பசுபதியின் திறமையை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதிலும். ஓரிரு காட்சியில் வந்து போகும் பரத், அஞ்சலி உட்பட அனைத்து நடிகர்களுமே தங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

முதல் படமாமே இசையமைப்பாளார் கார்த்திக்குக்கு? ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு நன்றாகவே இருந்தது.

குறைகளே இல்லையா? இருந்தன. ஆனால் மிகைநாடி மிக்க கொளின் மறைந்து போய்விடும் குறைகள்தான். கிராஃபிக்ஸின் மிகக் குறைந்த தரம் இரண்டு காட்சிகளில் நம்மை காட்சியில் இருந்து விலக்கி விடுகிறது - இரண்டாம் பாதியில் தொய்வடைய வைக்கிறது பாடல்கள் போன்ற சில்லறைக் குறைகள்தான்.

சரி, நல்ல கதை. நல்ல திரைக்கதை, நடிப்பு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. இவ்வளவுதானே? இதற்கு ஏன் must see என்று கேப்ஷன் வைக்கிறேன்?

நம்முடைய இருண்ட பழங்காலத்தைப் பற்றிய ஒரு நேர்மையான பதிவு என்பதால். பீரியட் படம் என்றாலே செம்பு நகைகள் பளபளக்க செந்தமிழில் அரசர்கள் உணர்ச்சிவசப்படும் படங்களையே பார்த்த நமக்கு இது ஒரு ஆச்சரியப்படுத்தும் மாறுதல். அரசர் இல்லை, (பாளையத்துக் காரன் ஒரு ஆள் வந்தாலும் அரச மரியாதை எல்லாம் இல்லை) சாதாரண மக்கள் வாழ்க்கை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. கிராமங்களின் தொழில், அவர்களிடையே இருந்த போட்டி பொறாமை, ரத்த வெறி, காட்டுமிராண்டித் தனங்கள் எல்லாம் எந்த விதமான மழுப்பலும் இன்றி இயல்பாக படமாக்கப் பட்டிருக்கின்றன.

இறுதிக் காட்சி, அதற்குப் பின் போடப்படும் ஸ்லைடு - மிக வலுவான தாக்கத்தை உண்டுசெய்தது. மரண தண்டனை எதிர்ப்பை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது.

ஹேட்ரிக் அடித்திருக்கும் வசந்தபாலன் + டீமுக்கு வாழ்த்துகள்.

நிச்சயம் பாருங்கள்.



Dec 26, 2011

Flashஉடன் வரவேற்போம் புதுவருடம்

2012 புத்தாண்டை என் பாணியில் வரவேற்கிறேன்.




Oct 31, 2011

Vintage (சவால் சிறுகதை-2011)

அந்த அறை க்ளைமாக்ஸ் சண்டை போடும் இடம் போல கலந்து கட்டி இருந்தது. ஒட்டுப்போட்ட டேபிள் மேல் கம்ப்யூட்டர், காஃபி கப், பழையகாலத்து ஏர்கூலர் ஒன்று டிவியின் சத்தத்துக்கு மேல் இறைந்துகொண்டு, பெட் மேல் சார்ஜர்கள், செய்தித்தாள், ஒரு ஹேர் ஆயில் பாட்டில் திறந்து கொட்டிக்கொண்டு இருந்தது. சேரில் இருந்த வாழைப்பழத் தோலை நகர்த்திவிட்டு அமர்ந்தான் ராம். 

"எனக்கு எவ்ளோ கிடைக்கும்?" என்றான் ராம்.

"அதுக்குள்ள பங்கு பிரிக்க முடியுமா? முதல்ல எவ்வளவு தேறுதுன்னு பாக்கலாம்." விஷ்ணு சட்டைக்கு மேல் ஜாக்கட்டை அணிந்துகொண்டான். 

"சரி, அமவுண்ட் வேண்டாம், பர்சண்டேஜாவது சொல்லு"

"ரிஸ்க் மொத்தம் எனக்குதாண்டா. உனக்கு என்ன வாழுது.. எதாவது பாத்துப் போட்டுக் கொடுக்கறேன்"

"நான் என்ன ஆட்டோவா ஓட்டறேன்? பாத்துப் போட்டுக் கொடுக்க? உன் மொத்த ப்ளானுமே என் வேலைலேதான் இருக்கு."

"சரிடா. பாத்துக்கலாம். நான் கிளம்பறேன். அவனுங்களுக்குத் தெரிஞ்சா ப்ராப்ளம் ஆயிடும்"

"சார் ஆளுங்களுக்கா?"

"சாரோ, கோகுலோ.. எவன் ஆளுகிட்டயும் மாட்டக்கூடாது.. ப்ளான் சரியா முடியற வரைக்கும்.." விஷ்ணு சன்கிளாஸஸை அணிந்துகொண்டான். ஷூவ்வுக்கு உள்ளே காலை நுழைத்து, வெளியேறினான்.

ராம் கையில் இருந்த உறையைப் பிரித்தான். ஒரு செல்பொன் குதித்தது. அதைக் கீழே விழாமல் பிடித்து மேஜையில் வைத்தான். கதவு டமாரென்றது.

"சொல்ல மறந்துட்டேன். நான் ஈமெயில் அனுப்பிட்டு கால் பண்ணுவேன். பிரிண்ட் எடுத்துக்கோ. அடுத்த கால் வந்தவுடனே  மெசேஜை அனுப்பிடணும்" விஷ்ணு பாதிக்கதவைத் திறந்து சொன்னான். சொன்ன வேகத்தில் காணாமல் போனான்.

ராம் ஃபோனை எடுத்துப் பார்த்தான். ஸ்மார்ட் ஃபோன்! ஒண்ணும் இல்லாட்டியும் இதையாவது லவட்டிட வேண்டியதுதான்!

***
விஷ்ணு தெருவுக்கு வந்தான். மார்க்கெட் கூட்டம் அவனை வரவேற்றது. எப்படித்தான் இருக்கிறானோ ராம் இந்தத் தெருவில்.

ஃபோன் அடித்தது. இப்போது எடுக்கக்கூடாது. கூட்டசத்தம் காட்டிக்கொடுத்துவிடும். எடுத்துப்பார்த்தான். கோகுல். இரண்டு கடைகளுக்கு நடுவில் இருந்த ஒரு சந்தில் நுழைந்தான். 

"எஸ் பி சார்.. நானே கூப்பிடறதா இருந்தேன். இன்னும் தகவல் வரலை. வந்ததும் அனுப்பிடறேன்"

"டைம் ஆயிட்டிருக்கு விஷ்ணு.. இன்னிக்கு ஈவனிங்தானே கைமாத்தப்போறாங்க?"

"அப்படிதான் சார் கேள்விப்பட்டேன்..சரி சார்.. யாரோ வராங்க.. பேச நேரமில்லை.."

வியர்த்ததைத் துடைத்துக் கொண்டான். டூவீலர்களின் நீஈண்ண்ட வரிசையில் வண்டியைத் தேடிக்கண்டுபிடித்தான். சார் வீட்டுக்கு இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடவேண்டும்.

சார் வீட்டில் திருவிழா போல கார்கள் இருந்தன. அந்தக்காலத்து ஓட்டை மாடல்கள் பளபளப்பாக நின்று கொண்டிருந்தன. ஒரு ஆள் வேக்ஸைத் தேய்த்து பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தான்.

ஆள்படைகளைத் தாண்ட "சார்தான்பா வரச்சொன்னாரு" "தெரியுமாடா இவனை" அட விடுப்பா நம்மாளுதான்" எல்லாம் தேவைப்பட்டது. வராந்தாவில் பழங்காலத்து பெரிய ஈசிசேர் ஒன்றில் அதனோடேவே பிறந்தாரோ என்று யோசிக்க வைக்கும் ஆகிருதியில் இருந்தார் சார்.

"வாடா.. என்ன லேட்டு?"

"சாப்டுட்டு வந்தேன் சார்"

"இன்னிக்கு சாயங்காலம் வேலை ஆயிடணும் தெரியுமா?"

"ஆயிடும் சார்.."

"அந்த எஸ்பி?"

"அந்தக் கவலையை விடுங்க சார்..அந்தாளைக் கொழப்பி விட்டுடறேன்"

"போலீஸைக் குழப்பறவண்டா நீ.. நீயா இன்ஃபார்மர்?"

"அது ஒரு காலம் சார்.. இப்ப எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் இன்ஃபார்மர்"

"உன்கிட்ட இருந்து தகவல் வந்தவுடனே ஆள் அனுப்பிடுவேன்"

அதுக்குள்ள நான் எங்கேயோ பறந்துடுவேன். "சரி சார்.. கிளம்பறேன். ஆஃபீஸ்லே கொஞ்சம் வேலை இருக்கு"

***
தூங்கத் தொடங்கி விட்டிருந்த ராமை அடித்து எழுப்பியது மொபைல் சத்தம். விஷ்ணு இன்ஃபார்மர் என்றது திரை. "படிச்சு வாங்கின பட்டம் மாதிரி போட்டுகிட்டிருக்கான் பாரு."

"மெயில் வந்ததா?"

"இருடா பாக்கறேன்.."  கம்ப்யூட்டருக்கு எலியசைத்து உயிர் கொடுத்தான்.

"ரெண்டு மெசேஜ் அனுப்பி இருக்கியே"

"ஆமாம். முதல் மெசேஜ் எஸ் பி கோகுல்நாத்க்கு ரெண்டாவது சார்க்கு"

"அவங்க நம்பர்?"

"ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன்.. அதனாலதானே என் மொபைலை உன் கைலே கொடுத்தேன்"

"என்னடா கோட் இது? இப்படியே அடிக்கணுமா?"

"ஆமாம்.."என்ற விஷ்ணு ஒரு வினாடியில் சிரித்தான்.."அவசியமில்லை. ரெண்டு பேருக்கும் உண்மையான கோட் போகப்போறதில்லை!"

"அப்ப?"

"உண்மையான நம்பர் என்கிட்ட வந்துடுச்சு.. இன்னும் பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சுடும்"

"இதை நீயே அனுப்பி இருக்கலாமேடா.. எனக்கு ஏன் வேலை கொடுக்கறே?"

"நான் ஊரை விட்டு ஓடினப்புறம்தான் அவங்களுக்கு மெசேஜ் போகணும். அதனாலதான் உன்னைப் பிடிச்சேன்."

"எப்ப அனுப்பணும்?"

"ராத்திரி எட்டு மணிக்கு..எதுக்கும் நான் கால் பண்றேன்.. மெசேஜ் அனுப்பின உடனே ரெண்டு பேரும் கால் பண்ணுவாங்க.. சிம்மைத் தூக்கிடு"

***
ரெட்டி கடை வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

"வாடா விஷ்ணு.. நம்பர் கெடைச்சுதா?"

"நம்பர் இல்லை ரெட்டி.. கோட் வார்ட்."

"நாம என்ன தங்கமா கடத்தறோம்? கோட் வார்ட் எல்லாம் வச்சுக்க? ஏலத்துல பழைய கார் வாங்கப்போறோம், அவ்ளோதானே?"

"சாதாரணமா சொல்லாதீங்க ரெட்டி..இதுக்கு எவ்ளோ போட்டி தெரியுமா? வாங்க உள்ளே போய் ஏலம் கேக்கலாம்"

ஏலக்கடையில் ஐட்டம்களைக் கூவிக்கொண்டிருந்தார்கள். "லண்டன் கார்..ஆரம்ப விலை.."

"இப்ப கேளுங்க ரெட்டி" என்ற விஷ்ணு ஃபோனில் ராமை அழைத்தான்.
***

ராம் இரண்டு ப்ரிண்ட் அவுட்களையும் பார்த்துக்கொண்டிருந்தபோது ஃபோன் அடித்தது. விஷ்ணு இன்ஃபார்மர் என்றது ஃபோன்.

ஃபோனை எடுத்து "அனுப்பிச்சுடறேன்" வைத்துவிட்டான்.
***
ரெட்டி வாயெல்லாம் பல்லாக வெளியே வந்தார். "அப்பாடா.. அந்தக் காரை முடிச்சுட்டோம்.. இல்லாட்டி ப்ரச்னை ஆயிருக்கும்"

"என்ன ரெட்டி.. ஆசைக்குதானே கார் வாங்கறேன்னீங்க"

"அது உன்னை ஏமாத்த. போலீஸ் எஸ்பி கோகுல்க்குதான் ஆசை. அவர்தான் உன்னை காண்டாக்ட் பண்ணச் சொன்னாரு"

விஷ்ணு அதிர்ந்தான். காட்டிக்கொள்ளாமல் "அவருக்கு ஏனாம் இந்தக் காரு?"

"அவருக்கும் வேணாமாம். சார் தெரியுமில்ல? அவருக்காகத்தான் கோகுல் வாங்கறேன்னாரு"
 
விஷ்ணுவுக்கு எந்தப்பக்கம் ஓடுவது என்று தெரியவில்லை.
______________________________________________________



 

blogger templates | Make Money Online