Nov 25, 2007

5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? Wifeology Exclusive Flash

விளையாட்டா பாடம் கத்துக்கறது எப்பவுமே சுலபம்ன்றதால இந்தப் பாடத்துக்காகவே ஒரு ப்ளாஷ் கேம் தயாரிச்சிருக்கேன். Practice makes perfect னு சொல்வாங்க இல்லையா, அதனால ஒரு முறை தோத்தாலும் பலமுறை முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!

சைட் அடிக்கறது சரியா தப்பான்ற விவாதத்துக்குள்ள நான் போக விரும்பலை. நான் தப்புன்னு சொன்னா நிறுத்திரப்போறீங்களா என்ன? இது ஒரு தவிர்க்க முடியாத விஷயம் அப்படின்றத யாரும் மறுக்க மாட்டீங்க! டாக்டர்கள் என்ன சொல்றாங்கன்றத இங்க போய் பாத்துக்கங்க! தங்கமணிங்க ஒத்துக்கவா போறாங்க? ஹூம்!

சரி தங்கமணியோட வெளிய போறீங்க, சைட் அடிச்சு மாட்டிக்கறீங்க. இந்த சிச்சுவேஷன்லே இருந்து வெற்றிகரமாக (அடிவாங்காம -ன்றதத்தான் அப்படிச் சொல்றேன்) வெளியே வருவது எப்படின்றதத் தான் இந்த பாடத்துல பாக்கப் போறோம்.

வழக்கமான டிஸ்கி: இது சிலருக்கு வொர்க் அவுட் ஆவலாம், ஆகாமலும் போகலாம், அவரவருக்கு வாய்த்தது அவரவருக்கு!

இந்த சிச்சுவேஷனையும் மூணு விதமா டீல் பண்ணலாம்.

1. "என்ன லுக்கு?"

"என்ன, அதெல்லாம் ஒண்ணும் இல்லையே"

இத்தோடு மேட்டர் முடிந்துவிட்டது போலத் தோன்றும்.. ஆனால் டேக் இட் ஈஸி பாலிஸி தங்கமணிகளுக்குத் தெரியாத பாலிஸி. அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாலிஸி கிவ் அண்ட் டேக் பாலிஸி (போட்டு வாங்கறதுதான்)

எதிர்பாராத நேரத்தில் உங்களை இப்படி ஒரு கேள்வி தாக்கும் -

"அந்தப் பொண்ணு போட்டிருந்த மாதிரி ஒரு யெல்லோ ட்ரெஸ் எனக்கு வாங்கித் தரீங்களா?"

எதோ ஞாபகத்தில் "உங்கிட்டதான் அதே ட்ரெஸ் ஏற்கனவே இருக்கே" என்றோ, "அவ போட்டிருந்தது யெல்லோ இல்லையே ப்ளூ வாச்சே" என்று சொல்லியும் விடுவீர்கள்! பொய் சொல்வதற்கு நிறைய ஞாபகசக்தி வேண்டும். இல்லையென்றால் மாட்டுவது நிச்சயம். . அடி வாங்குவது சர்வ நிச்சயம்..

2. "என்ன லுக்கு?"

"ஆமா! லுக்குதான் விட்டேன்.. என்னான்ற இப்ப? நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சுக்க ஒரு லுக்கு விடக்கூட சுதந்திரம் கிடையாதா?"

இப்படிச் சொல்லும் ஆளின் கதி என்ன என்பதை அருகாமையில் உள்ள மருத்துவமனையின் ட்யூட்டி டாக்டரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். "ICU லே சேத்தாங்களே அந்த ஆளு" என்று சொன்னால் ரிசப்ஷனில் வழி காட்டுவார்கள்.

3. இவர்தான் நம்ம ஆளு. வைபாலஜியில டாக்டரேட் வாங்கினவரு.

"என்ன லுக்கு?"

"என்ன?"

"வச்ச கண் வாங்காம சைட் அடிச்சுகிட்டிருக்கீங்களே.. "

"சைட்டா? பாத்தேன் உண்மைதான்.. எதுக்காகப் பாத்தேன்ன்னு தெரியாம பேசாதே"

"எதுக்கு?"

1. "அவ போட்டிருந்தாளே ஒரு பின்க் ட்ரெஸ்.. அந்த அட்டு பிகருக்கே அது அவ்ளோ நல்லா இருக்கே, உனக்குப் போட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்.. நய்ஹாலே கிடைக்கும் இல்ல? உடனே போய் வாங்கிகிட்டு வந்திடலாமா?"

இதை செலவுன்னு நினைக்காதீங்க.. அடிவாங்காம இருக்கறதுக்குக் கொடுக்கற Protection Money!

2. "இந்த மாதிரி ரெண்டு பேரைப் பாத்தாதானே நான் எவ்வளவு பாக்கியசாலின்னு எனக்கே தெரியுது. .இதையெல்லாம் தடுக்காதே!"

3. "அவளைப் பாத்தா உன்னோட கஸின் மீனா மாதிரியே இல்லை?கல்யாணத்துல இண்ட்ரொட்யூஸ் செஞ்சியே? Remarkable Resemblance! உனக்கு அப்படி தோணலே?"

நேரடியாக இல்லைன்னு சொல்றதைவிட, ஆமாம்னு அடிவாங்கறதைவிட, இந்த மாதிரி சமாளிபிகேஷன் வொர்க் அவுட் ஆக வாய்ப்பு அதிகம்.

சரி.. கீழே இருக்கற கேமை விளையாடிப் பாருங்க! தங்கமணி பாக்காத நேரத்துல ரங்கமணி மேலே க்ளிக்கி சைட் அடிக்க வைங்க! பத்து பாயிண்ட் எடுத்தா வர ஸ்க்ரீனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க, ஒத்துக்கறேன் நீங்க வீரர்னு!


Nov 24, 2007

கற்றது தமிழ் - பார்த்தபிறகு எழுந்த எண்ணங்கள்

முன் குறிப்பு: தியேட்டர்லே வந்தபோது தவறவிட்டு, ஒரிஜினல் பிரிண்டுக்காக வெயிட்டி வெயிட்டி கிடைக்காமல் கடைசியா ஒரு திராபை பிரிண்டுல பார்க்கவேண்டி வந்தது. ஹீரோயின் அழுதுகிட்டே வசனம் பேசின காட்சிகள், ஹீரோ பேக்கிரவுண்ட் ம்யூசிக்கோட பேசற காட்சிகள் எல்லாத்துலயும் க்ரிப்டோகிராபி உபயோகப் படுத்தி அர்த்தம் புரிஞ்சிக்க வேண்டி வந்தது.
 
நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருக்கு: நல்ல ஆழமான வசனங்கள், காட்சிப்படுத்தல்கள், கவிதையான ஏழு வயதுச் சிறுவர்களின் நட்பு, தமிழய்யா வார்டன் (அழகம்பெருமாள்) பாத்திரப்படைப்பு, நாயகன் நாயகி நடிப்பு, நாயகன் வாயிலாகவே கதைசொல்வதால் அவன் கண்ணாகவே ஓடும் காமரா, வேல் மாதிரி mediocre படங்களுக்கு mediocre ஆகவும், இது போன்ற படங்களுக்கு வேறு அளவுகோலும் வைத்து இசையமைத்திருக்கும் யுவனின் அற்புதமான இசை, பாடல்கள், பின்னணி இசைக்கோர்ப்பு, தற்கொலைக்குப் பின் நண்பர்கள்(?) எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற முன்கூட்டிய கற்பனை, அங்கங்கே தெறிக்கும் தமிழ் ஆங்கில கவிதை எடுத்தாளல்கள் .. சொல்லிக்கொண்டே போகலாம்.
 
ஆனால், முழுமையாக நல்ல படம் என்று முத்திரைப்படுத்தவிடாமல் செய்யும் விஷயங்களையும் பட்டியலிடலாம்.
 
தமிழ் கற்றதால்தானா பிரபாகருக்கு இந்த நிலைமை? சந்தையில் அதிகவிலை பெறாத BA History போன்ற ஒரு பாடத்தை எடுத்திருந்தாலும் இந்த நிலைமை வந்திருக்கலாமே! பிரபாகர் ஒரு கிராமத்து ஆசாமி என்பதால் (கல்சர் சரியில்லை என்னும் நாமக்காரன்) ஒதுக்கப்படுகிறானா, பணம் இல்லை என்பதால் (200 ரூபாய் பைன் கட்ட கையில் இல்லை) ஒதுக்கப்படுகிறானா, உறவுகள் இறந்ததால் தனிமை வசப்படுகிறானா, 27 வயதிலும் பாலியல் தேவைகள் பூர்த்தி ஆகாததால் மனம் பிறழ்கிறானா -- என்று பல கோணங்களில் ஆராய வகை செய்யும் பாத்திரப் படைப்பு. தமிழ் என்பது வசனத்துக்காக மட்டும் (2000 வருஷத் தமிழுக்கு 2000, 25 வருஷ கம்ப்யூட்ட்டருக்கு 2 லட்சமா?) உபயோகப்படுகிறதே அன்றி, கதைக்கு எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை. தமிழய்யாவைப் பிடித்திருந்ததால் தமிழ் படித்ததாகச் சொல்கிறானே ஒழிய, தமிழ் பிடித்ததால் படித்ததாகச் சொல்லவில்லை. போலீஸ் பிடித்துக் கொண்டு செல்வதற்கும் சிகரெட்தான் காரணமே ஒழிய தமிழ் காரணமில்லை.. தமிழை உணர்ச்சிப் பொருளாக்குவது தவிர, தமிழுக்கும் இந்தப்படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. (பிரபாகரா.. விவகாரமான பேரு என்று வரும் வசனமும் இன்னும் ஒரு சாராரை மகிழ்ச்சிப்படுத்தச் சேர்த்ததே என்றும் நினைக்கிறேன்.)
 
Income Inequality,  Economic divide  என்பவை, தற்போது பேசியே ஆகவேண்டிய பிரச்சினைகள் என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. நாராயணன் 7 ட்ரெயிலர் ஓட்டிவிட்டார், எப்போது மெயின் ரீலுக்கு வரப்போகிறார் என்பது தெரியவில்லை, ஆனால் அவர் ட்ரெயிலர்களிலேயே யோசிக்கவேண்டிய பலவிஷயங்களை முன்வைத்திருக்கிறார். பெரிய பிரச்சினை ஆகும் முன் தவிர்க்க, இது ஒரு பிரச்சினை என்று அங்கீகரிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் தீர்வை நோக்கிச்செல்ல முடியும், அதைத்தான் நான் இங்கும் சொல்லி இருக்கிறேன்.
 
இந்தப்படத்தைப் பார்க்காமலே நான் சொன்ன கருத்து: "கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன். 
 
இந்தக் கருத்திலிருந்து, படம் பார்த்தபின்னும் மாற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு பிட்ஸாவுக்காகக் கூட நாளை கொலை நடக்கலாம் என்று கூறும் இயக்குநர், அந்தக் கொலைகளையும், மனப்பிறழ்வையும் நியாயப்படுத்தும் வசனங்களையும் வைத்து ஒருபக்கம் ஓடிவிட்டார். கருணாஸ் சொல்லும் "பக்கத்து வீட்டுக்காரன் அதிகமா சம்பாதிக்கிறான், அந்த வயித்தெரிச்சல்லே அவன் ஸ்கூட்டரைப் பஞ்சர் பண்ணுவேன், அதைவிட கொஞ்சம் அதிகமா நீங்க செஞ்சிருக்கீங்க" என்பதும், தொலைக்காட்சியில் பேட்டிக்குப் பின் வரும் வசனங்களும் (வாடகை எல்லாம் சாப்ட்வேர்காரங்களாலத்த்தான் அதிகமாச்சு, ஒரு இடத்துல மட்டும் வளந்தா அது வளர்ச்சியில்ல, வீக்கம்) கோபப்படுவது தார்மீக உரிமை, ஸ்கூட்டரைப் பஞ்சர் செய்வதும் கொலை செய்வதும் தவிர்க்க இயலாத வெளிப்பாடுகள் போன்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன.
 
மிதக்கும் வெளி சொல்வதுபோல மாற்றுக்கருத்துக்கும் இடம் ஒதுக்கினாலும், இயக்குநர் செய்யவிரும்பும் கட்டமைப்பு தெளிவாகத் தெரிகிறது. (ஷங்கர் படங்களில் மாற்றுக்கருத்து வருவதில்லையா? முதல்வன் படத்தில் எல்லாரும் அடுத்த முதல்வராக புகழேந்தியைச் சொல்ல, ஒரு குரல் எம்ஜியார் என்று சொல்லியதே? சிவாஜியை எல்லாரும் புகழ, ஹனிபா "அவன் ஜெயிலிலேயே இருக்கணும்" என்று சொல்லவில்லையா? -- ஆனால் ஷங்கர் சொல்லவிரும்புவது பெரும்பான்மை மூலம் தெரிகிறது, இங்கேயும் அப்படியே!)
 
இங்கே பயமுறுத்துவது, நாயகன் கொலை செய்யத் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் - செல்லாத ரூபாய் நோட்டை ஒத்துக்கொள்ளாத ரெயில்வே ஊழியன், பீச்சில் காதலிக்கும் ஜோடி, உதவ முயலும் சைக்கியாஸ்டிரிஸ்ட் என தங்கள் அளவில் தவறுசெய்யாத சாதாரணர்கள். வில்லன்களாகச் சித்தரிக்கப் படுபவர்கள் ராத்திரி முழுக்க வேலை செய்து வீடு திரும்பும் BPO ஊழியன், 2 லட்சம் சம்பளம் வாங்கியும், கல்சர் சரியில்லாத (என அவன் நினைக்கும்) நண்பனை அலுவலகத்துக்கு அழைத்து உபசரிக்கும் சாப்ட்வேர் ஊழியன், வசனம் எழுதப்பட்ட டி ஷர்ட் அணிந்த பெண் - அவர்கள் அளவில் எந்தத் தவறும் செய்யாதவர்கள்தான்.
 
எதற்கென்றே தெரியாமல் காழ்ப்புணர்ச்சி காட்டும் போலீஸ்காரனும், லஞ்சம் வாங்க முயலும் ரயில்வே போலீஸும் வில்லன்களாகச் சித்தரிக்கப் படுவதையாவது ஓரளவு ஏற்கலாம். இப்படிக் கொலைகள் செய்யும் ஒருவனை Income Inequality என்ற ஒரே காரணத்திற்காக நியாயப் படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
 
ஒரு சைக்கோ, கொலை செய்தான் செத்தான் என்ற அளவில் கதை நின்றிருந்தால் இதைப் பற்றிப் பேசவேண்டியிருக்காது. ஆனால், அவன் சைக்கோ ஆனதுக்குக் காரணம் இவை என நியாயப்படுத்த முயலும்போது - அதுவும் தமிழ் என்ற ever-boiling உணர்ச்சியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அதிக சம்பளம் வாங்கும், பணம் உள்ள, பெண்துணை கொண்ட அனைவரும் வில்லன்கள் என்று சொல்ல வருவது அநீதி.
 
யோசிக்க வைத்த படம் என்பது சரிதான், ஆனால் படத்தின் அடிநாதம் சரியில்லை. Dangerous Movie.

Nov 20, 2007

பாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் (Wifeology)

இன்னிக்கு வர பாடம், ரொம்ப முக்கியமான பாடம்.

கல்யாணம் ஆனவங்க யோசிச்சுப்பாருங்க, உங்கள் தங்கமணி எப்ப உங்களுக்கு வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்கன்னு?

ஞாபகம் வந்துருச்சா?

ஹனிமூன் போனீங்களே, அங்கே என்ன நடந்தது?

சே.. அதைச் சொல்ல வரலைப்பா! ஏ சர்டிபிகேட் மேட்டர் எல்லாம் கிடையாதுன்னுதான் முதல்லியே சொல்லிட்டேனே!

இப்ப ஞாபகம் வருதா?

"ஸாரிங்க, என் ஹேண்ட்பேக்கை ஹோட்டல்ரூமிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. கொஞ்சம் ப்ளீஸ் போயி எடுத்துகிட்டு வந்துடறீங்களா?"

ஆமாம். இப்படி சாதாரணமா, ஸாரி, ப்ளீஸ் எல்லாத்தோடயும் ஆரம்பிக்கற வேலை வாங்கற டெக்னிக்தான் பிற்காலத்துல "வெட்டியாத்தானே பொட்டி தட்டிகிட்டு இருக்கே, அந்தப் புடவைக்கெல்லாம் ரிவைவ் போட்டாதான் என்னவாம்?" என்று பரிணாம வளர்ச்சி அடையுது.

முளையிலேயே கிள்ளவேண்டிய விஷயத்தை வளரவிட்டுட்டு அப்பால குத்துதே குடையுதேன்னு சொல்றதில எந்த அர்த்தமும் இல்லை.

ரொம்ப கேர்புல்லா ஹேண்டில் பண்ணவேண்டிய ஏரியா இது. ரொம்ப அசட்டுத்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது, ரொம்ப புத்திசாலித்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது.

"ஆஹா, நீ சொல்லவே வேணாம்.. இதோ போய் செஞ்சுடறேன்"னு முதல்ல ஆரம்பிச்சீங்கன்னா, பிற்காலத்துல வலைப்பூ பாக்க முடியாது, சேலைப்பூ தான் பாக்க முடியும்.

ஓவர் புத்திசாலித்தனமா ஒருத்தர் நடந்துகிட்டாராம். அவர் தன் அனுபவத்தை நண்பர்கிட்ட பகிர்ந்துகிட்டார் இப்படி:

"என் மனைவி காலைலே ப்ரேக்பாஸ்ட் பண்றதை பார்த்தேன். தேவையில்லாத மூவ்மெண்ட் நிறைய, காய்கறிகள் எல்லாம் நறுக்கி வச்சுகிட்டு வேலைய ஆரம்பிக்கறதில்லை, நிறைய ஐடில் டைம் நடுவுல.. டைமை வேஸ்ட் பண்றா. டைம் மேனேஜ்மண்ட் படி, லெப்ட் ஹாண்ட் மூவ்மெண்ட், ரைட் ஹாண்ட் மூவ்மெண்ட், ப்ரெபரேஷன்ஸ் எல்லாத்தையும் ஒரு நாள் அனலைஸ் பண்ணி சார்ட் போட்டுக் கொடுத்தேன் அவளுக்கு"

"இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுதா?"

"நல்ல இம்ப்ரூவ்மெண்ட். முன்னெல்லாம் ப்ரேக்பாஸ்ட் பண்றதுக்கு அவளுக்கு 30 நிமிஷம் ஆகும். இப்பல்லாம் எனக்கு 10 நிமிஷம்தான் ஆகுது"

இல்லை, "செய்ய முடியவே முடியாது"ன்னு ஸ்ட்ராங்கா சொன்னீங்கன்னா, விளைவும் தவிட்டு ஒத்தடம் ரேஞ்சுக்கு ஸ்ட்ராங்காத்தான் இருக்கும்.

அதனால, இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுக்கும் நடுவுல ஏதோ ஒரு இடத்துல இருக்கு நமக்கான தீர்வு!

உப்புமா செய்வது எப்படின்னு செய்முறைக்குறிப்பு போட்டிருக்கேன், படிச்சுப் பாத்து அதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துகிட்டு, எல்லா வேலைக்கும் இதையே அப்ளை பண்ணலாம்.

உப்புமா செய்வது எப்படி

உப்புமா செய்ய ஆரம்பிக்கும் முன் சொல்ல வேண்டிய வசனங்கள் - "சமையல்லே இருந்து இன்னிக்கு உனக்கு ரெஸ்ட். அய்யா சமையலை சாப்பிட்டதில்லையே நீ? சாப்பிட்டவங்களைக் கேட்டுப்பாரு.. நளபாகம்னு சொல்வாங்களே அது என் கைவண்ணம்தான். இனிமே குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாச்சும் ப்ளீஸ் சமைங்கன்னு கெஞ்சப்போறே பாத்துக்க!"

1. அடுப்பை "ஹை"யில் ஏற்றி வைத்துக்கொள்ளவும். ஆண்கள் குறைந்த நெருப்பில் எப்போதும் சமைப்பதில்லை.

2. ரவையை அதன் பாத்திரத்திலிருந்து வேகமாக ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும். வேகம் மிகவும் அவசியம். அப்போதுதான் ரவை வீடு முழுவதும் தெறிக்கும்.

3. அடுப்பில் வாணலியை ஏற்றி, வாணலியில் ஒரு சொட்டு எண்ணெய் அல்லது நெய் விடவும். (அடுப்பு "ஹை"யில் எரியவேண்டும், மறக்காதீர்கள்)

4. ரவையை வாணலியில் கொட்டவும்.

5. டிவியில் என்ன ஓடுகிறது என்று பார்த்துவிட்டு வரவும்.

6. இப்போது வாணலியின் அடியில் உள்ள ரவை சற்றே கருத்தும் மேல்புறம் ஒரு மாற்றமும் இல்லாமலும் காணப்படும். ஒரே கிளறு. மேல்பாகம் கீழும், கீழ்பாகம் மேலும் செல்லும் வண்ணம் கிளறவும்.

7. ஈமெயில் எதாவது வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரவும்.

8. இப்போது ரவை சமச்சீராக கருத்து இருக்கும். அதை ஒரு தட்டில் கொட்டவும். அடுப்பை அணைக்கவும்.

9. டிவி பார்த்துக்கொண்டே வெங்காயத்தை உரித்து, அதன் தோலியை வரவேற்பரையில் கொஞ்சம், சமையலறையில் கொஞ்சம், மேலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் கொஞ்சம் என சமச்சீராக பரப்பவும். வெங்காயத்தை சமச்சீரற்ற துண்டுகளாக நறுக்கவும்.

10. மறுபடி அடுப்பை ஹையில் பற்றவைத்து, எண்ணெய் ஊற்றவும்.

11. எண்ணெய் கருகும் வாசனை வந்தவுடன் கடுகைப் போடவும். உடனே வெடிக்கவேண்டும். பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கடலைக்காய் - எது கிடைக்கிறதோ எல்லாவற்றையும் போட்டுவிட்டு, கிளறுவதற்கான கரண்டியைத் தேடவும்.

12. இப்போது போட்ட பருப்புகள் எல்லாம் "கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"ன்னு பாட ஆரம்பித்திருக்கும். அதன் தலையில் நறுக்கிய வெங்காயம், முழுத் தக்காளியை நேரடியாக எடுத்து ரெண்டே துண்டாக வெட்டி அதன்மேல் போடவும்.

13. வெங்காயம் தக்காளி கோபம் தணிந்து குழைய ஆரம்பிக்கும்வரை கிளறவும்.

14. இப்போது அதன்மேல் தண்ணீரை ஊற்றவும். அடுப்பின் தணலைச் சற்று குறைத்துக்கொண்டால்,மறுபடி மெயில் பார்க்க / மசாலா மிக்ஸ் பார்க்க நேரம் கிடைக்கும்.

15. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைக் கொட்டிக் கிளறவும். வெந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும் (உப்புமா இப்போது சிவாஜி ஆகியிருக்கும் - பாத்திரத்தோடு ஒன்றி இருக்கும்).

************"உப்பு போடவேண்டும் என்று சொல்லாதது தெரியாமல் செய்த பிழை அல்ல!"*************************

உப்புமா சாப்பிடும்போது சொல்லவேண்டிய வசனம் : "என்ன இருந்தாலும் நீ செய்யறது போல வரலை, இல்லையா? எந்த வேலையா இருந்தாலும் உனக்கு இருக்க இன்வால்வ்மெண்ட், கமிட்மெண்ட் எல்லாம் எனக்கு வர்றதில்லை. சும்மாவா சொன்னாங்க இதனை இதனான் இவள்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவள்கண் விடல்- னு?"

இதுவும் உறுதியான மெத்தட் கிடையாதுதான். இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம்.

இன்னிக்கு வீட்டுப்பாடம் உப்புமாதான்.

Nov 19, 2007

தேவையா தேவ் ஐயா?

தன்னிலை விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டாமென்றுதான் இருந்தேன். ஆனால், எதிரிகளின் புரளிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது ராஜதந்திரம் என்றால், தன் இனத்தவரின் சந்தேகங்களைத் தீர்க்காமல் இருப்பது பிரிவினைக்கே வழிவகுக்கும் என்பதும் அதுவேதானே!
 
அன்பு கச்சேரியார் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி இருக்கிறார். நம் ரகசியங்களை எதிரிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறேனாம், ஆயுதங்களைக் காட்டிக் கொடுக்கிறேனாம்!
 
உண்மை என்ன? நம் இல்லறத்தியல் வகுப்புகளால்,
 
அட போங்கய்ய உங்க அண்டப்புளுகுகளும் அதை கேக்ரவங்களும். என்று சொன்ன ஒரு தங்கமணியை
 
எல்லாத்தயும் விட படு ஜோக் என்னென்னா, பொம்பளங்க ஷ்ஆப்பிங்க் போகும்போது, பின்னாடி ஆம்பிளங்க ஒண்ணும் பண்ணமுடியாம வெட்டியா பையை தூக்கிட்டு நடப்பாங்க பாருங்க  என்று சொல்ல வைத்திருக்கின்றன நம் சோக கீதங்கள்!
 
பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க. இதுல அரத்தல் புரத்தலாய் பாடம் எடுக்கிறாராம். ஸ்டூபிட் என்று அளப்பறை விட்ட அதே பெண்ணீய அனானி,
 
எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்பர் 1 ஆனதும், அன்னிய தேதில எது பெஸ்ட் பிளேனோ அதை வாங்கி தருவதாய் சத்தியம் செஞ்ருக்கார். என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்.

இந்த அளவுக்கு மாற்றம் இருப்பதே இத்தொடருக்கு கிடைத்த வெற்றியா நான் பாக்கறேன். ஏனென்றால் நாம் எடுக்கும் வகுப்புகளால் உலகம் தலைகீழாகத் திரும்பிவிடும் என்று எதிர்பார்த்து இத்தொடர் தொடங்கப்படவில்லை. பாம்புன்னா படம் எடுக்கும், பாலைவனம்னா சுட்டெரிக்கும், டாஸ்மாக்னா தள்ளாடவைக்கும், தங்கமணின்னா டப்பா டான்ஸ் ஆடும் .. இதெல்லாம் உலக நியதி!
 
மேலும், இந்த வகுப்புகளால் மனைவிக்குப் பயப்படாமல் வாழும் நிலை உருவாகும் என்பதா நம் நோக்கம்? நடக்க இயலாதவற்றைச் சொல்ல நாம் என்ன விளம்பரத்துறையில் இருக்கிறோமா அல்லது ஹாரி பாட்டர் கதை எழுதுகிறோமா?
 
அறிவிப்பின்போது தங்கமணிகளையும் ஏன் இந்த வகுப்புக்கு அழைத்தேன் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
 
இங்கே பாருங்கள், அந்த ரகசியம் விளங்கும்!
 
ஆயுதங்களைக் காட்டிக்கொடுக்கிறேனா? அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் அய்யா! தங்கமணிகளுக்கு இந்த ரகசியங்கள் தெரிந்துவிடக் கூடுமே என்று எதையுமே சொல்லாமல் தவிர்த்தால் நம் இளைய ரங்கமணிகளுக்கு ஏது எதிர்காலம்?
 
கச்சேரியாருக்கு இன்னும் ஒரு சந்தேகம்:
 
நம சிங்கத் தலை கைப்புள்ள, சங்கத்தின் தங்க மகன் இளையதளபதி வெட்டிப் பயல ஆகியோர் இல்லறத்தில் இனிதே அடியெடுத்து வைத்த நேரம் பாசமிகு தம்பிகளாம் நீங்களும் மண வாழ்வில் நுழைய வரிசையில் காத்து நிற்க இப்படி ஒரு தொடர்...
 
வேறெந்த நேரத்திலய்யா இப்படி ஒரு தொடர் வெளிவரவேண்டும்? இதைவிடச் சிறந்த, பொருத்தமான நேரம் வாய்க்குமா?
 
கைப்புள்ளைக்கு ஆப்பு வாங்குவது என்ன புதிதா? அவருடைய "ஆப்பு" அனுபவத்துக்கு இந்தத் தொடர் மட்டுமல்ல வேறெந்தத் தொடருமே தேவையில்லையே!
 
வெட்டிப்பயலின் தற்போதைக்கு கடைசிப்பதிவைப் பார்த்து நானே புல்லரித்துப் போயிருக்கிறேன்! லகான் எங்கே என்று தெரிந்த குதிரையாக உலக இயல்புகளையும் நடப்புகளையும் புரிந்துகொண்டிருக்கும் அவருக்கு இத்தொடரால் நஷ்டமா?
 
ஆனால், இல்லற வாழ்வில் குதிக்கக் காத்திருக்கும் பலகோடி இளைஞர்கள், கல்வியறிவு பெற்றிடக்கூடாது, வாழ்க்கை சாகரத்தில் தொபுக்கடீர் எனக்குதித்து அடிபட்டுத்தான் முன்னேற வேண்டும் என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தங்கமணிகளின்  சூழ்ச்சிக்கு நீங்கள் பலியானது மட்டுமின்றி அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை புதிர்காலமாக  ஆக்கும் நோக்கமும்  அல்லவா தெரிகிறது? 
 
கம்ப்யூட்டரைத் திறந்தாலே  ஒரு எக்காளச் சிரிப்பு கேக்குது. "பாத்தியா, பிரிஞ்சுட்டாங்க, சண்டை போட்டுக்கறாங்க! இனிமே நமக்கு வெற்றிதான்"னு தங்கமணிங்க குரல்கள்! ரங்கமணிங்க ரெண்டுபட்டா தங்கமணிங்களுக்கு கொண்டாட்டமாம்!
 
தேவ் எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான், சூழ்ச்சிக்கு பலியாகி மட்டும்தான் இப்படி ஒரு போராட்டத்தைத் தொடங்கி இருப்பார் என்று உளமாறவே நான் நம்புவதால், அவரைக் குறை சொல்ல விரும்பவில்லை.
 
ஒரு ஆம்பளை மனசு இன்னொரு ஆம்பளைக்குத் தான் புரியும் என்பதால், தேவ் இந்த விஷயங்களைத் தெளிவா புரிஞ்சுப்பாருன்னு நம்பறேன்.
 
 எனவே, மீண்டும் நமது ஒற்றுமையை தங்கமணிகளின் உலகுக்குப் பறைசாற்றி, அவர்கள் ஆனந்தத்தில் அணுகுண்டு போடுவோம் வாருங்கள்! 
 
பி கு: இல்லறத்தியல் பாடம் இன்னும் ஓரிரு நாட்களில்.

Nov 17, 2007

எப்பவும் நீ ராஜா!

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு பெரும்பாலானவர்கள் உபயோகித்த உறிச்சொல், "இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு!" என்பதுதான். பத்திரிக்கை விமர்சனங்களில் இதே உறி, "ஹாலிவுட் தரத்துடன் இருக்கிறது" என்று ரிபைன் ஆகும். இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதை நிறுத்திவிட்டார்களா, நான் அப்படிச் சொல்பவர்களை விட்டு விலகிவிட்டேனா தெரியவில்லை, இந்த அடைமொழி காணாமல் போய்விட்டது.

தேடி ஓடிப் போய் பார்த்த "ஹாலிவுட் தர" படங்கள் இப்போது வீட்டு வரவேற்பரையில் இலவசமாக விழும்போது மனதுக்குள் ஒரு வெட்கம் சூழ்ந்து கொள்கிறது. இதைப்போயா அவ்வளவு பாராட்டினோம் என்று.

ஆனால், "உலகத்தரம்" என்று தெரிந்திராத, கொண்டாடப்பட்டிராத ஒரு சிறுவயது ஆதர்சத்துக்கு மட்டும் இன்னும் வெட்கம் வரவில்லை. ராஜா!

லைவ் ஷோக்கள் நிறைய பார்த்ததில்லை. ஒரு முறை, சொத்தில் பாதியை அடகுவைத்து நட்சத்திரக் கலைவிழா துபாயில் நடக்கிறது என்று போனால், கண்ணுக்கெட்டாத தூரத்தில் நடிகர்கள் சொதப்பலாக ஆடிக்கொண்டிருந்தார்கள். மும்தாஜே கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் சிம்ரன் எங்கே தெரிந்திருக்கப்போகிறார்! டிவி திரையில் வீட்டிலேயே பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு பார்த்திருக்கலாமே என்ற நினைப்பு வந்ததில் பிறகு எந்தக் கலை நிகழ்ச்சி என்றாலும் "ஆளை விடு" தான்.

ஆனால், இளையராஜா முதல்முறையாக அமீரகம் வருகிறார், அதுவும் வீட்டிலிருந்து கல்லெறி தூரத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு என்னும்போது மீண்டும் ஆசையும், மீண்டும் கலவரமும் ஒரே நேரத்தில் தோன்ற, ராஜா ரசிகன் வென்றான்.

ஆறரை என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ஐந்தரை மணிக்கு உள்ளே நுழைந்து இடம்பிடித்து அமர்ந்தால் (குசும்பனும் லொடுக்குவும் இன்னுமே பாஸ்ட். நாலரைக்கே உள்ளே இருந்திருக்கிறார்கள்!) பொறுமையைச் சோதித்து 7 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, ஏழேகாலுக்கு பேச ஆரம்பித்த உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர், தனக்குத் தெரிந்த மழலைத்தமிழில், மிக அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறிக்கொண்டே போக (மேடையில் அவர் சொல்கிறார்: 35000 ரசிகர்கள் கூடியிருக்கும் இந்த வேளையில், அருகே ஒரு கோபக்கார ரசிகர்: தெரியுதில்ல, 35000 பேரும் உம்மேல ஏறினா சட்னிதான் மாப்பு! இறங்குடா உடனே!), பொறுமை எல்லைக்கு வந்தது.

ஒரு வழியாக ஏழரைக்கு ஜெயராமும் குஷ்பூவும் மேடைக்கு வந்து, ஒரு அறிமுகப் பாடலோடு இளையராஜாவை வரவேற்க, அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் நேரடியாக "சிவஷக்தியாய.." என்று ஜனனி பாடலை ஆரம்பித்ததும் தொடங்கிய இசைமழை, இடைவெளியில்லாமல் 12:30 வரை புயலாய், தென்றலாய், தேனாய்க் காதில் ரீங்கரிக்க ஆரம்பித்தது!

41 பாடல்கள்! நிச்சயம் இளையராஜா ரசிகர்கள் யாரும் முழுத்திருப்தி அடைந்திருக்க முடியாது. வெளியே வரும்போது சங்கீத மேகம் என்னாச்சு, முத்துமணிமாலை இல்லையே, ரம்பம்பம் என்று ஆடவிடவில்லையே என்ற பல குரல்கள்! ஆனால்ம், இளையராஜாவின் ஆயிரக்கணக்கான சூப்பர்ஹிட் பாடல்களில் 41 ஐத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டமான காரியம், ஒரு வருடத்தில் வெளியான பாடல்கள், ஒரு நடிகருக்கு / இயக்குநருக்கு / தயாரிப்பாளருக்கு அளித்த பாடல்கள் என்று வைத்தாலே சுலபமாக 50ஐத் தாண்டும்.. பொதுவான தேர்ந்தெடுப்பில் சாத்தியமே இல்லை என்பதும் புரிந்திருந்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப்பாடலும் ஹிட் ஆகாத பாடல் இல்லை என்பதாலும் வருத்தமும் இல்லை!

எஸ் பி பி! எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை, 60ஐத் தாண்டியும் 20 போல குஷியும் குதூகலமுமாக, அந்திமழை மேகமாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், பாடலின் ஆதார சுருதி மாறாமல், குறையாமல் அதே நேரத்தில் மெருகும் ஏற்றி, கணீரெனப் பாடுகிறார்! கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது! நினைத்தாலே சிலிர்க்குது! என்ன ரேஞ்ச்.. வார்த்தை பிசகாமல் உணர்ச்சி மாறாமல் அவ்வளவு பெரிய பாடலில் ஒரு தடங்கலும் இல்லாமல் லைவ்-ஆக! சான்ஸே இல்லை!

சித்ரா, சாதனா சர்கம், ஷ்ரேயா கோஸல் - நேரடியாக வந்து ஒரு பிசிறில்லாமல் பாடிவிட்டு அடக்கமாகச் சென்றார்கள்! இவர்களில் டாப், என் பார்வையில் "காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஷ்ரேயா கோஸல். மூவருக்குமே ஒரு ஒற்றுமை, தமிழ் தாய்மொழி இல்லை, லிட்டில் லிட்டில் தமில்தான் தெரியும், ஆனாலும் லைவ் நிகழ்ச்சியில் உச்சரிப்புப் பிழையில்லாமல் பாடுவது என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

மீண்டும் இளையராஜா! எவ்வளவு கண்டிப்பான இசைக்காரர் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில், பாடல் முடிந்தவுடன் மட்டும் கைதட்டுங்கள், விசில் ஆட்டம் போன்றவை வேண்டாம், அளவாக அனுபவியுங்கள் என்று ரசிகர்களுக்கு அளித்த கட்டளைகளை காலப் போக்கில் தளர்த்திக் கொண்டாலும், ஒரு சிறு பிழையைக் கூட பொறுக்காமல் இசையை நிறுத்தி மறுபடி பாடுங்கள் என்று கேட்டுக்கொண்டதில் அவருடைய அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிந்தது. கடைக்கோடி ரசிகனுக்கு ஒரு வார்த்தை சரியாக எடுக்கவில்லை என்று தெரியப்போகிறதா, டெம்போ விலகியது புரியப்போகிறதா? இதுதான் பாட்டு, இவ்வளவுதான் முடியும் என்று விட்டுவிட்டால் கேள்வியா கேட்கப்போகிறான்? ம்ஹூம்.. இசை என்பது அவருக்கு ஒரு தவம். பிசகக்கூடாது, ரெக்கார்டிங் தியேட்டராக இருந்தால் என்ன, லைவ் நிகழ்ச்சியாக இருந்தால் என்ன?

குறைகளும் இருந்தன, இல்லாமல் இல்லை. அந்தக்குறைகளும் ராஜா குடும்பத்தில் இருந்தே வந்ததுதான் ஐரனி.. "இது சங்கீதத் திருநாளோ" என நன்றாகவே ஆரம்பித்த பவதாரிணி, "மயில் போல பொண்ணு ஒண்ணு"வில் தாளத்தை அடிக்கடி விட்டு சாரி கேட்டார். எதிர்பாராத(?) விருந்தினர்களான யுவன் ஷங்கர் ராஜாவும் கார்த்திக் ராஜாவும் "ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா"வை வார்த்தைகள் மாற்றிப்போட்டு பாட முயற்சித்து படு தோல்வி அடைந்தார்கள்! ஒத்திகை தேவைப்பா கண்ணுகளா! கட்டுத்தறியா இருந்தாலும் நேரடியா வந்து கவிபாட முடியாது.

வார்த்தைகள் மாற்றிப்பாடிய "சொர்க்கமே என்றாலும்"தான் சூப்பர்ஹிட்! சாதனா கூடப்பாடிய வரிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று திருப்பிப்பாடியதாகட்டும், "நம்ம ஊர்லே பண்ணமுடியற விஷயங்களை வெளிநாட்டுல பண்ண முடியாதுங்கறது ஒரிஜினல் பாட்டு, ஆனா நம்ம ஊர்லே இழக்கற விஷயங்களை ஞாபகப் படுத்தத்தான் வரிகளை மாற்றினேன்" என்று ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் சிறைக்குள் தள்ளினார் ராஜா!

ஆக, 5 மணிநேரம் ராயல் எண்டர்டெயின்மெண்ட்! மறக்கமுடியாத நிகழ்ச்சி!

 

blogger templates | Make Money Online