ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் புத்தாண்டு புதிய சமஸ்கிருத ஆண்டையே துவக்கி வைக்கிறது, அதற்கும் தமிழுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது என்பதால் தமிழ்ப் புத்தாண்டாக பொங்கல் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்ற கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
சொல்லப்போனால் எந்த நாளையுமே புத்தாண்டாகக் கொண்டாடலாமே.. எங்கோ படித்தேன், வருடத்தின் 365 நாளையுமே புத்தாண்டாக உலகின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு பிரிவினர் கொண்டாடி வருகின்றனர் - என்று!
புத்தாண்டு என்பதை ஒவ்வொரு மதமும் தனித்தனியாக வகுத்தாலும், புத்தாண்டுக்கொண்டாட்டங்களின் ஆரம்பம் எங்கே துவங்கி இருக்கும்? ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே.
எனவே, ஏப்ரல் 14 ஐத் தமிழ்ப் புத்தாண்டாக பல வருடங்களாகக் கொண்டாடி வரும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மீதும் எனக்குக் கேள்விகள் இல்லை.
ஏன், எனக்கு வேலை கிடைத்த நாளைக்கூட நான் வருடாவருடம் புத்தாண்டாகக் கொண்டாடலாம்!
ஆனால் பிரச்சினை அதுபற்றி அல்ல. கவர்னர் உரையில் பொங்கலைப் புத்தாண்டாக "அரசாங்கம்" அறிவித்திருப்பது பற்றியது.
இதில் கிளம்பும் கிளைக்கேள்விகள் ஆயிரம்.
1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?
2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?
3. தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?
4. மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?
5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?
7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?
8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
தமிழ் பேரைச் சொன்னால் மேல்கேள்வி கேட்கக்கூடாது, இந்துமத சடங்குகள் அசிங்கமானவை - அவற்றைக் கொண்டாடுவது தமிழனுக்கு இழுக்கு -- என்றெல்லாம் பலர் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன். உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதைக் கொண்டாடு இதைக் கொண்டாடக்கூடாது என்றெல்லாம் சொல்ல அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். திமுக கட்சி இப்படி ஒரு பிரசாரம் செய்து அதன்மூலம் மக்களே சித்திரை முதல் தேதிக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் விட்டாலோ, பொங்கலன்று புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டாலோ யாருக்கும் எந்த ஆட்சேபமும் இருக்கப்போவதில்லை. ஆனால் அதையே அரசாங்கம் வற்புறுத்தினால் அது சர்வாதிகாரம்தான் என்பதிலும் சந்தேகமில்லை.